Tuesday, May 28, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 11


உடல் கட்டமைவு

நமது தோல்பட்டையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரத்தை முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரத்தைக் கொண்டு  வகுக்கும் விகிதமும், இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தை முட்டியிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தைக் கொண்டு  வகுக்கும் விகிதமும், தலை உச்சியிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தை தொப்புளிலிருந்து பாதம் வரை உள்ள தூரத்தைக் கொண்டு  வகுக்கும் விகிதமும் ஒன்றாகவே இருக்கும். அது போல உடலின் இதர கட்டமைப்புகள் இதே விகிதத்தில் இருப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதை உறுதிப்படுத்துவதற்காக லியார்னடோ டா வின்சி அவர்கள் சுடுகாட்டிற்கே சென்று மனித எலும்புகளை ஆய்வு செய்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

உதாரணத்திற்கு முழங்கையிலிருந்து விரல் நுனி வரை உள்ள தூரம் 1 அடி நீளம் என்றால் தோல் பட்டையிலிருந்து விரல் நுனிவரை உள்ள தூரம் 1.618 அடி நீளம் இருக்குமாம். இந்த விகிதத்தை ஆங்கிலத்தில் கோல்டன் ரேஷியோ (golden ratio) என்கிறார்கள். கணிதத்திலும், தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட பலவற்றிலும் இந்த விகிதம் பொருந்துவதாகச் சொல்கிறார்கள். இந்த விகிதத்தில் இருந்தால்தான் அது சரியான கட்டமைப்பாகும். இதைத்தான் ‘பையன் நல்லா வாட்ட சாட்டமா இருக்கான்’ ‘பொண்ணுக்கு குறை ஏதும் இல்ல, லட்சணமா இருக்கா’ என்கிறார்களோ!

இடுப்பிலிருந்து தலை வரை உள்ள நீளம் அதிகமாவும் இடுப்பிலிருந்து பாதம் வரை உள்ள நீளம் குறைவாகவும் இருக்கும் நபர்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இவர்கள் 1:1.618 விகிதத்திலிருந்து மாறுபட்டவர்கள். இத்தகைய உடல் அமைப்பு உள்ளவர்களை மிக எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய உடல் கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையிலேயே அமைகிறது.

மொட்டை மூக்கு, சப்ப மூக்கு, கொக்கி மூக்கு, யானைக் காது, ஏறுன நெற்றி, முட்டைக் கண், பூனைக் கண், ஒண்ற கண், கோண வாய், கூன் முதுகு, கப்பக் கால், குட்டை – நெட்டை என உடல் கட்டமைப்பில் குறை காண்போரும் உண்டு.

‘கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு’ என ஒரு பெண்ணால்தான் பாட முடிகிறது. ஆனால் கனவுலகில் கருப்பழகி கிளியோபாட்ராவை காதலிப்பவன் நிஜ உலகில் கருப்பைக் கண்டு விலகுகிறான். தோலின் நிறத்திற்கு வந்த கேடு இது. தோலின் நிறம் பிறப்பால் தீர்மானிக்கப்பட்டாலும் சிவப்புத் தோலில் உயர் சாதி பெருமிதத்தைத் தேடுவதும், கருப்புத் தோலில் தீண்டாமையை பார்ப்பதும் இன்றும்கூட இருக்கத்தானே செய்கிறது.

மேற்கண்ட உடல் அமைப்பு உள்ளவர்கள் திருமணச் சந்தையில் விலை போவது மிக மிகக் கடினம். பெண்ணாய் இருந்தால் ‘ஒரே பொண்ணு, சொத்து வேற நிறைய இருக்கு, எல்லாம் நம்ம பையனுக்குத்தானே! பொண்ணு முன்ன பின்ன இருந்தா என்ன?’ என சமாதானமடைவதும், அதுவே ஆணாய் இருந்தால் ‘பரவாயில்ல, கை நிறை சம்பாதிக்கிறான், ஒரே பையன், சொத்து வேறு இருக்கு, கெட்ட பழக்கம் எதுவுமில்ல, நம்ம பொண்ணுக்கு இவன விட்டா வேற எவன் கெடைப்பான்’ என சமாதானமடைவதும் இன்றைய சந்தை நிலவரம்

அன்று சிவப்பாய் - மூக்கு கூராய் இருந்தால் ஒருவரை பார்ப்பனர் என எளிதில் அடையாளம் காண முடிந்தது. ஆனால் இன்று சிவப்பாய் உள்ள கூர் மூக்கு ‘திராவிடர்’களையும், கருப்பாய் உள்ள மொட்ட மூக்கு ‘ஆரியர்’களையும் பார்க்கிறோம். இது இரண்டாயிரம் ஆண்டு இனக்கலப்பின் விளைவு.

ஒரு குறிப்பிட்ட இனத்தினர் பிற இனத்தினரோடு இனக் கலப்புக்கு உட்படாதவரை அந்த இனத்தினரின் புறத்தோற்றம் ஒன்று போல தோன்றும். மேலும் ஒரு மனிதனின் புறத்தோற்றத்தை நுணுகிப் பார்க்கும் போது அவன் தன்னளவில் அதே இனத்தைச் சேர்ந்த மற்றவர்களிடமிருந்து வேறுபட்டிருப்பதையும் காண முடியும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தை அப்பாவைப் போலஅம்மாவைப் போல - தாத்தா / பாட்டியைப் போல அல்லது மூதாதையர்களின் அம்சங்களை உள்ளடக்கியது போல புறத்தோற்றத்தில் இருப்பதை பரம்பரைத் தன்மை என்கிறோம்.

அக்குழந்தை வளர வளர அதன் உயரம், பருமன், நடை, உடல் அசைவு (gesture) ஆகியவை மூதாதையர்களின் ஏதாவதொரு அம்சங்களைக் கொண்டிருப்பதையும் காண முடியும். ஆனால் இத்தகைய அம்சங்களும் உடல் உழைப்பின் தம்மைக்கேற்ப நாளடையில் மாற்றமடைகின்றன.

வெயிலிலேயே உழன்ற ஒரு பரம்பரை கருப்பாய்த் தோன்றுவதும், பிறகு வசதி வாய்ப்புகள் கிடைத்த பிறகு வெயில் படாமல் வாழும் இவர்களின். எதிர்காலத் தலைமுறையினரின் தோலின் நிறம் மாறுதலடைவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனக் கலப்பின் மூலமாகவும் புறத்தோற்றத்தின் சில அம்சங்கள் மாறுதலடைகின்றன.

உழைப்பின் தன்மையும் மனிதர்களின் புறத்தோற்றத்தை மாற்றி அமைக்கின்றன. கடுமையான உழைப்பில் ஈடுபடும் குழந்தையின் புறத்தோற்றமும், உழைப்பில் ஈடுபடாத குழந்தையின் புறத்தோற்றமும் அக்குழந்தைகளின் வளர்ச்சிப் போக்கில் ஒன்றுபோல இருப்பதில்லை. மேலும் குழந்தைகளின் உணவு முறையும் புறத்தோற்றத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன.

மேற்கூறப்பட்ட யாவும் ஒரு மனிதனின் உடற்கட்டமைவு (body constitution) சார்ந்த அம்சங்களாகும். இவை ஒரு மனிதனை மற்றவர்களிடமிருந்து அடையாளப்படுத்த உதவுகின்றன. இத்தகைய அம்சங்கள்கூட எப்பொழுதும் தொடர்ந்து ஒரே மாதிரி இருப்பதில்லை. இயக்கப் போக்கில் மாறுதலடைகின்றன.

தொடரும்.....

தொடர்புடைய பதிவுகள்:


Thursday, May 23, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 10


சுயசாதிப் பற்று

அரசின் உயர் பதவிகளில் பார்ப்பனர்கள் இருப்பதால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் தங்கள் சாதியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பதற்காகத்தான் பிற சாதியினர் பார்ப்பனர்களை எதிர்க்கிறார்களே ஒழிய பார்ப்பனியத்தை ஒழிப்பதற்காக அல்ல. பார்ப்பனர்களைப் போலவே பிற சாதியினரும் அத்தகைய உயர் பதவிகளுக்கு வந்த பிறகு தங்கள் சாதியினருக்கே முன்னுரிமை தருகின்றனர். பார்ப்பனரோ பிற சாதியினரோ, இவர்கள் தங்கள் சாதிக்காரர்களை மேலே கொண்டு வருவதற்காக சகல தில்லு முல்லுகளையும் கடைபிடிக்கின்றனர்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும், ஏன் தனியார் நிறுவனங்களிலும் கூட இதுதான் நடைமுறை.  ஓராண்டு ‘அப்ரண்டிஸ்’ பயிற்சியாளர்களைத் தேர்வு செய்வதில்கூட இதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. ஒரு பக்கம் நீதி – நியாயம் பேசிக் கொண்டே மற்றொரு புறம் அதற்குப் புறம்பாகத்தான் நடந்து கொள்கின்றனர். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால்தான் வேலை “வாய்ப்பில் ‘பேக்லாக்கை’ நிரப்பு, பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை அமுல் படுத்து” என தாழ்த்தப்பட்டோர் நலச்சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. நெறிமுறைகளுக்கு முரணாக பார்ப்பனர்கள் தங்களது சாதிக்காரர்களுக்கு சலுகை காட்டுவது மட்டும் பார்ப்பன புத்தி என்றால் பிறசாதிக்காரர்கள் தங்களது சாதிக்காரர்களுக்கு இதே போன்று நெறிமுறைகளுக்கு முரணாக சலுகை காட்டுவது பார்ப்பனிய புத்தியாகாதா? இல்லை என்றால் இந்த புத்திக்கு என்ன பெயர்?

ஒவ்வொரு சாதியினரும் பல விசயங்களில் தங்களின் சுயசாதிப் பற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுதான் பிற சாதியினரை வசைபாடி வருகின்றனர். இது பார்ப்பனியத்தின் மற்றொரு அம்சம். சமூகத்தின் மீது எவ்வித அக்கறையும் இல்லாதவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது ஆச்சரியத்துக்கு உரியதல்ல. ஆனால் பார்ப்பனியத்துக்கு எதிரானவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு சமூக நீதிக்காகப் போராடுவதாக சொல்லிக் கொள்ளும் தமிழினவாதிகள், 'தலித்'தியவாதிகள், பெண்ணியவாதிகள், திராவிடவாதிகள், போலிப் பொதுவுடமைவாதிகள் என பலரும் தங்களது சொந்த வாழ்க்கையில் பார்ப்பனியத்தின் அம்சங்களை கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இடதுசாரி அரசியலில் தீவிரத்தன்மையுடன் இருக்கும் ஒரு நண்பர், ‘செம்மலர்’ என தனது மகளுக்கு பெயர் சூட்டியவர் இன்று ‘திரயோதசி திதி, சுவாதி நட்சத்திரத்திம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில்’தான் தனது மகளுக்கு திருமணத்தை செய்து முடிக்கின்றார்.

சேரிகளை ஆக்கிரமிக்கும் பார்ப்பனியம்

முன்பெல்லாம் பார்ப்பனர்களை அழைக்காமல்தான் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களது குடும்ப நிகழ்சிகளை நடத்தி வந்தனர். ஆனால் இன்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவது முதல் இறப்பிற்குப் பிறகு செய்யப்படும் காரியம் வரை பார்ப்பனர்களை அழைத்து வந்து சடங்குகள் சம்பிரதாயங்களை நடத்துவது அதிகரித்து வருகிறது. இது கிராமங்களில் வேண்டுமானால் தற்போதைக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் நகர்புறங்களில் இன்று இது மிகச் சாதாரணமாகிவிட்டது. பார்ப்பனியம் மெல்ல மெல்ல சேரிகளையும் ஆக்கிரமித்து வருகிறது.

மொத்தத்தில் ஐயர் முதல் அருந்ததியர் வரை பகுதியாகவோ அல்லது முழமையாகவோ பார்ப்பனியம் வேர் பிடித்து நிலைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தத் தமிழனும் பார்ப்பனியத்தில் ஐய்க்கியமாகிவிட்ட பிறகு ‘தமிழன் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கொரு குணமுண்டு’ என்பது இன்றைக்குப் பொருந்துமா எனக் கேட்கத் தோன்றுகிறது. அதற்காக பார்ப்பனியம் தமிழனின் பிறவிக்குணம் என வரையறுத்துவிட முடியுமா என்ன?

தொடரும்.....




Monday, May 20, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 9


தொட்டால் தீட்டு

தீண்டாமைதான் பார்ப்பனியத்தின் மிக முக்கியமான கூறு. தீண்டாமையை ஆங்கிலத்தில் untouchable என்கிறார்கள். தீண்டுதல் என்றால் தொடுதல், மீறி தொட்டு விட்டால் தீட்டாகிவிடும் என்பதுதான் இதன் நேரடி பொருள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள் மேம்படாத காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடை காற்றில் அசைந்து தங்கள் மேல் பட்டுவிட்டாலே தாங்கள் தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதினார்கள் பிற மேல்சாதியினர். இப்படித் தீட்டுப்பட்டுவிட்ட மேல் சாதியினர் தீட்டோடு தங்கள் வீட்டிற்குள் நுழைய மாட்டார்கள். வீட்டை நெருங்கும் போது குழந்தைகள் பாசத்தோடு ஓடிவந்து அணைக்க முயலும் போது “தொடாதே!” என ஒதுங்கிக் கொள்வார்கள். தன்னைத் தொட்டு விட்டால் குழந்தையும் தீட்டுப்பட்டு விடுமாம். அதனால்தான் இத்தனை எச்சரிக்கை.

பிறகு பின்வாசல் வழியாகச் சென்று உடுத்தியிருக்கும் ஆடைகளைக் களையாமல் குடம் குடமாய் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்ட பிறகுதான் வீட்டிற்குள் நுழைவார்கள். உடுத்தியிருந்த ஆடைகளை நனைக்காமல் கழற்றி போட்டுவிட்டு குளித்தால் நனைக்கப்படாத துணியில்கூட தீட்டு ஒட்டிக் கொண்டிருக்குமாம். அதனால்தான் உடுத்திய உடையோடு தலை முதல் பாதம் வரை தண்ணீரால் கழுவுகிறார்கள். சாவுக்குச் சென்று வந்தவன் என்ன செய்கிறானோ அதைத்தான் ஒரு தாழ்த்தப்பட்டவனின் துணி தன்மேல் பட்டுவிட்டதற்கும் செய்கிறார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவனை பிணத்துக்குச் சமானமாகத்தான் பார்க்கின்றனர்.

தனது துணியின் நுனி ஒரு உயர்சாதிக்காரன் மீது பட்டுவிட்டது என்பது மட்டும்தான் அந்தத் தாழ்த்தப்பட்டவனுக்குத் தெரியும். ஆனால் தீட்டுக் கழிப்புகள் எப்படி நடக்கின்றன என்பதை அவன் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. தீண்டாமை எத்தனைக் கொடியது என்பதை அவன் இன்னமும் முழமையாக அறிந்திருக்கவில்லை என்பதைத்தான் இச்செயல்கள் உணர்த்துகின்றன. ஒரு தாழ்த்தப்பட்டவனின் உடையின் ஒரு நுனி தன்மேல் பட்டுவிட்டதற்கே இத்தனை தீட்டுக்கழிப்புகள் நடத்தும் பிற மேல் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை மற்ற விசயங்களில் எப்படி நடத்தியிருப்பார்கள் / நடத்துகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டியதில்லை. குடம் குடமாய் தலையில் ஊற்றுவதற்குத் தண்ணீர் இல்லை என்றால் தலையில் தண்ணீர் தெளித்துவிட்டு ஆடைகளை மாற்றிக் கொண்டு தீட்டுக் கழிப்போரும் உண்டு.

இன்று போக்குவரத்து வசதிகள் கிராமம் வரை செய்யப்பட்டுள்ளன. எல்லாச் சாதியினரும் ஒரே பேருந்தில் ஒட்டி உரசிக் கொண்டு பயணிக்கிறார்கள். முன்பு துணியின் நுனி பட்டதற்கே தலை முழுகியவன் இன்று இவன் வேர்வையும் அவன் வேர்வையும் ஒன்று கலந்தாலும் அவ்வாறு தலை முழுகுவதில்லை. அப்படியானால் தீண்டாமை ஒழிந்துவிட்டதா? இது போன்ற சில மாற்றங்களை வைத்துதான் “இப்பவெல்லாம் யாரு சார் தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள்?” என்று பலரும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். 

வாடகை வீட்டில் தீட்டு

ஐயர் முதல் அகமுடையர் வரை சாதியைக் கேட்காமல் நகரங்களில் வாடகைக்கு வீடு தருகிறார்களா? எதற்காக முன்கூட்டியே சாதியைத் தெரிந்து கொள்கிறார்கள்? வாடகைக்கு வருபவன் தாழ்த்தப்படவனாக இருந்தவிடக்கூடாது என்பதால்தானே? இது தீண்டாமை இல்லையா? கிராமங்களில் சேரிகள் தனியாக இருப்பதனாலும், தாழ்த்தப்பட்டவர்கள் வாடகை வீடு தேடுவதற்கான தேவை இல்லை என்பதனாலும் வாடகை வீட்டுத் தீட்டு கிராமங்களில் இருக்க வாய்ப்பில்லை.

பரோடா மன்னரால் மாநிலத் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகத்தில் அம்பேத்கருக்கு பயிற்சியாளர் வேலை கிடைத்த போது அவர் ஒரு பயணிகள் விடுதியில் தங்குகிறார். அது பார்சிகள் தங்கும் விடுதி. தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால் விடுதியில் தங்க இடம் தரமாட்டார்கள் என்பதால் தன்னை ஒரு பார்சி எனக்கூறியதால்தான் அவருக்கு அங்கே இடம் கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களில் பார்சிகள் இதைத் தெரிந்து கொண்டு அவரை அடிக்க வந்த போது “இன்னும் ஒரு வாரமாவது தங்க அனுமதியுங்கள்” எனக் கெஞ்சிக் கேட்கிறார். ஆனால் பார்சிகள் அதற்கு இடம் தரவில்லை.

அதன் பிறகு தனது நெருங்கிய நண்பர்களான ஒரு இந்துவையும், ஒரு கிருஸ்தவரையும் அணுகி அவர்களது வீட்டில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி கோருகிறார். ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதித்தால் வேலையாட்கள் வெளியேறி விடுவார்கள் என்பதற்காக அந்த இந்து நண்பரும், பிராமணக் குடும்பத்திலிருந்து வந்த பழைமைவாதி என்பதால் தனது மனைவி ஒரு தாழ்த்தப்பட்டவரை வீட்டில் அனுமதிக்கமாட்டார் என அந்தக் கிருஸ்தவ நண்பரும் கைவிரித்துவிட அன்று இரவே ஊரைக் காலி செய்துவிட்டு பம்பாய்க்குப் பயணமாகிறார் அம்பேத்கர்.

“இந்துவுக்கு ஒருவன் தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்காரர்களுக்கும் தீண்டத்தகாதவன்தான் என்பதை அப்பொழுதுதான் முதன் முதலாகத் தெரிந்து கொண்டேன்” என 1916 ல் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வேதனையோடு பதிவு செய்கிறார் அம்பேத்கர். கிட்டத்தட்ட நுறு ஆண்டுகள் முடியப் போகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாடகை வீடு தருவதில் அதே நிலைதான் இன்றும் தொடர்கிறது. தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

கோவில்களில் தீட்டு

கோவில்களில் நுழைய தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப் படுவதில்லையே ஏன்? அவர்கள் கோவிலுக்குள் நுழைந்து வழிபட்டால் என்ன நடந்து விடும்? கோவில் இடிந்து விழுந்து விடுமா? அல்லது கோவிலில் வீற்றிருக்கும் சாமி கோபித்துக் கொண்டு வெளியேறிவிடுமா? “இது எங்க கோவில், வேண்டுமானால் அவர்கள் தனியாக கோவில் கட்டிக் கொள்ளட்டுமே, ஏன் இங்கே வர வேண்டும்?” என்று கேட்கிறார்களே இதில் தீண்டாமை இல்லையா?

தண்ணீரில் தீட்டு

அம்பேத்கர் உள்ளிட்ட சுமார் 30 பேர் வேருலிலுள்ள புத்த சமயக் குகைகளைப் பார்க்க அவர்கள் தவுலாதாபாத் நகரைக் கடந்து பிறகு அவுரங்காபாத் வழியாகச் செல்ல வேண்டும். தவுலாதாபாத் கோட்டை மிகவும் பிரபலமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காகச் செல்கிறார்கள். இவர்களோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களும் சேர்ந்து செல்கின்றனர். பயணக் கலைப்பைப் போக்க கோட்டை வாயிலுக்கு வெளியே நீர் நிரம்பியிருந்த குளத்தில் முகத்தையும் கால்களையும் கழுவிக் கொண்டு கோட்டை வாயிலுக்குச் சென்ற போது ஒரு வயதான வெள்ளைத் தாடியுடன் கூடிய முகமதியர் “தெத்கள் (தீண்டத்தகாதவர்கள் என்ற பொருளில்) குளத்தை அசுத்தம் செய்துவிட்டார்கள்” என்று கூப்பாடு போடுகிறார். அந்த முதியவரோடு பல இளம் முகமதியர்கள் சேர்ந்து கொண்டு “இந்தக் குளத்தை தீண்டத்தகாதவர்கள் உபயோகிக்கக்கூடாது என்பதை நீங்கள் ஏன் வெளியூர்க்காரர்களுக்குச் சொல்லவில்லை?” எனக் கொலை வெறியோடு உள்ளூர் தாழ்த்தப்பட்டவர்களை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்ததோடு மிகவும் ஆபாசமாகத் திட்டித் தீர்த்தார்கள். அதன் பிறகு தாழ்த்தப்பட்டவர்கள் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டாலும் எந்தத் தண்ணீரையும் அவர்கள் தொட்டுவிடக்கூடாது என்பதை கண்காணிக்க கூடவே ஆயுதந்தாங்கிய சிப்பாய் ஒருவனை அனுப்பி வைக்கிறார்கள்.

“ஒருவன் இந்துவுக்குத் தீண்டத்தகாதவன் என்றால் அவன் முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவனே என்பதை இந்த நிகழ்ச்சி படம் பிடித்துக் காட்டும்” என 1934 ல் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

இஸ்லாமியர்களே இப்படி என்றால் இந்துக்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?. எண்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால் பொதுக் கிணற்றிலும், பொதுக் குழாயிலும் தண்ணீர் பிடிப்பதற்கு இன்னமும் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே.ஏன்?  தீண்டாமை எங்கே ஒழிக்கப்பட்டிருக்கிறது?

காதலில் தீட்டு

பிற உயர் சாதிக்காரர்கள் தங்கள் சாதிகளுக்குள் காதலித்து திருமணம் செய்து கொண்டால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் ஏதோ ஒரு வழியில் சமாதானமாகி விடுகிறார்கள். இங்கே தீண்டாமை என்கிற கேள்வியே எழுவதில்லை. ஆனால் ஒரு தாழ்த்தப்பட்டவன் பிற சாதிப் பெண்ணைக் காதல் திருமணம் செய்து கொண்டால் அது எட்டிக் காயாகக் கசக்கிறது. சாதிய ஏற்றத்தாழ்வுதானே என அவன் இங்கே சமாதானமாவதில்லை. தாத்தப்பட்டவன் உயர்சாதிப் பெண்ணைக் காதலித்து விட்டால் நாயக்கன் கொட்டாய்கள் பற்றி எரிகின்றன. இத்தகைய காதல் திருமணங்களை எதிர்ப்பதில் தீண்டாமை கிடையாதா?

பொதுவாக பார்ப்பனர்கள் வேறு சாதிப் பெண்களைக் காதலிப்பதில்லை. ஒரு பார்ப்பனப் பெண் பிற்படுத்தப்பட்டவன் வீட்டிற்கு மருமகளாக வரலாம். அல்லது ஒரு பிற்படுத்தப்பட்டப் பெண் மற்றொரு பிற்படுத்தப்பட்டவனின் வீட்டிற்கு மருமகளாக வரலாம். சாதிய ஏற்றத்தாழ்வு என்கிற எதிர்ப்புகள் இருந்தாலும் பிறகு சமாதானமாகி விடுகிறார்கள். ஆனால் ஒரு தாழ்தப்பட்டவள் தனது வீட்டிற்கு மருமகளாக வந்தவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார்களே பிற உயர் சாதியினர். அது ஏன்? அதனால்தானே தாழ்த்தப்பட்டப் பெண்களை பிற உயர் சாதியினர் காதலிப்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது. இந்த எச்சரிக்கை உணர்வில் தீண்டாமை ஒளிந்திருக்கவில்லையா?

இப்படி தீண்டாமைக் கொடுமைகள் அன்றாட வாழ்க்கையில் ஏறாளமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய நவீன காலத்தில் தீண்டாமை என்பது தொட்டால் தீட்டு என்கிற பழைய வடிவிலிருந்து புதிய வடிவில் தொடர்கின்றன. இத்தகைய தீண்டாமையை பார்ப்பனர்கள் மட்டுமா கடை பிடிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்டவர்களுக்கு மேல் உள்ள எல்லா சாதியினரும்தான் கடைபிடிக்கிறார்கள். அப்படியானால் இவை எல்லாம் பார்ப்பனியம் கிடையாதா?

தொடரும்.....

தொடாபுடைய பதிவுகள்




பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7




Friday, May 17, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 8


நால் வர்ண சாதிய அமைப்பு முறை, அதில் உயர்ந்த சாதி - கீழான சாதி என்கிற சாதியப் படிநிலை, அச்சாதி படிநிலைக்கேற்ப சாதியத் தீண்டாமை, உணவுத் தீண்டாமை, மொழித் தீண்டாமை, மக்களை மடமையில் ஆழ்த்தும் ஜாதகம் – ஜோதிடம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை உள்ளடக்கியதுதான் பார்ப்பனியம் என முந்தைய தொடர்களில் பார்த்தோம்.

வர்ணாசிரமக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கினாலோ, சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பேசினாலோ, சாதியத் தீண்டாமை - உணவுத் தீண்டாமை - மொழித் தீண்டாமை உள்ளிட்ட அனைத்து வகையான தீண்டாமைகளுக்கு எதிராக போராடினாலோ இவை எல்லாம் இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாக சித்தரித்து போராடுபவர்களை இந்து மத விரோதிகள் என முத்திரை குத்துவது பார்ப்பனியத்தின் நடைமுறை. பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடையும் போது, அடக்கு முறை மற்றும் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமாகவும், பொய் – புனைசுருட்டு - நயவஞ்சகம் - சூழ்ச்சிகள் மூலமாகவும், நீதி மன்றம் மற்றும் அரசுகளின் துணையோடும் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பார்ப்பனர்கள் எப்போதுமே முயற்சித்து வருகின்றனர். இத்தகைய முயற்சிகளின் மூலமாகத்தான் பார்ப்பனியம் நிலை நிறுத்தப்பட்டு வருகிறது.

மிகச் சாதாரண மக்களைக்கூட தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்து மதக் கடவுளர்களையும் – நம்பிக்கைகளையும் இணைத்து பல்வேறு கட்டுத் கதைகளை அவ்வப் பொழுது அரங்கேற்றிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கான சமீபத்திய எடுப்பான உதாரணம்தான் சேதுக் கால்வாய்த் திட்டத்தை முடக்குவதற்கான ‘இராமர் பாலம்’ என்கிற கட்டுக் கதை.

பார்ப்பனியத்தின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வாலி வதத்திலும், ஏகலைவன் கட்டை விரலிலும் நாம் தேட வேண்டியதில்லை; சு.சாமி - சோ.சாமி போன்றோரின் கருத்துக்களையும் நடைமுறைகளையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்!

பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் பார்ப்பனர்களுக்கு கௌதம புத்தரைப் பிடிக்காது; அம்பேத்கரைப் பிடிக்காது; பெரியாரைப் பிடிக்காது; மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவாளர்களைப் பிடிக்காது; தமிழர்கள் தங்களுக்கான மொழி - பண்பாட்டு உரிமைகள் பற்றிப் பேசினால் பிடிக்காது; கோவில் கருவறையில் தமிழ் நுழைவது பிடிக்காது; அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது பிடிக்காது; சமூகரீதியாக இழிவுபடுத்தப்பட்டு, கல்வி - வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு, பொருளாதார ரீதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மக்கட்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு தருவது பிடிக்காது; பொதுவுடமைச் சமுதாயம் கோரும் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. மொத்தத்தில் பார்ப்பனியத்தைத் தவிர வேறு எதுவும் இவர்களுக்குப் பிடிக்காது. காரணம் மேற்கண்டவை அனைத்தும் பார்ப்பனியத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கி பலவீனப்படுத்தக் கூடியவை; வீழ்த்தக் கூடியவை.

மக்களுக்கான சுதந்திரம், சமத்துவம், சகோரத்துவம் ஆகிய அடிப்படையான ஜனநாயகக் கோட்பாடுகளை நால் வர்ணக் கோட்பாடுகள் மறுக்கின்றன. பார்ப்பனியத்தின் நால் வர்ணக் கோட்பாடுகளும் இந்து மதக் கோட்பாடுகளும் வேறு வேறானவை அல்ல என்பதால்தான் இந்து மதத்தை பார்ப்பன சனாதன மதம் என்றே பெரியாரும், அம்பேத்கரும் வரையறுக்கின்றனர்.

விதிவிலக்காக ஒரு சில பார்ப்பனர்களைத் தவிர பெரும்பாலான பார்ப்பனர்கள் பார்ப்பனியத்தை கடைபிடிப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் பார்ப்பனர்களாய்ப் பிறந்ததனாலா? அல்லது பார்ப்பனியக் கருத்துகளில் பயிற்றுவிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதனாலா? அதே போல பிற சாதியினர் பலரும் பார்ப்பனியத்தை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம்?

பார்ப்பனர்களைப் பற்றி மட்டுமல்ல ஒவ்வொரு சாதியினரைப் பற்றியும் அச்சாதிக்கே உரிய குணமாக சில குணங்களை அடையாளப்படுத்தி அச்சாதியைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிற கருத்து மக்களிடையே பரலமாக நிலை பெற்றிருக்கிறது. ஒருவரின் ஒரு குறிப்பிட்ட குணத்தை வைத்து அவர் அச்சாதியைச் சார்ந்தவர், அதனால்தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார் என பிறர் கூறுவதை இன்றளவும் நாம் கேட்க முடிகிறது. சுருக்கமாகச் சொன்னால் அச்சாதியில் அவர் பிறந்ததனால்தான் அவர் அத்தகைய குணங்களைக் கொண்டுள்ளார் என்பதுதான் மக்களின் பார்வையாக இருக்கிறது. இவ்வாறு பார்ப்பதில் படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் பிறப்பின் அடிப்படையில் அமைகின்றன? எத்தகைய குணங்கள் - அடையாளங்கள் வளர்ப்பின் அடிப்படையில் வளர்கின்றன? இவற்றில் மாறுதலுக்குள்ளாகும் குணங்கள் - அடையாளங்கள் எவை?

தொடரும்......





பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


Saturday, May 4, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 7


சென்னை முதல் கன்யாகுமரி வரை வாழும் தமிழனின் பொது அடையாளம் தமிழ் மொழி. ஆனாலும் அவனுக்கு சென்னைத் தமிழன், கொங்குத் தமிழன், நெல்லைத் தமிழன் என்கிற வட்டார அடையாளங்களும் உண்டு. சென்னைத் தமிழைக் கேவலமானதாகக் கருதி கிண்டல் செய்யும் கொங்குத் தமிழன் சென்னைக்கு வந்து வாழத் தொடங்கியதும் அவனிடம் சென்னைத் தமிழ் ஒட்டிக் கொள்கிறது. சென்னைக்காரன் நெல்லைக்குச் சென்றால் அவன் நெல்லைத் தமிழனாகி விடுகிறான். இவை எல்லாம் சாதிகளுக்கு அப்பாற்பட்ட அடையாளங்கள். பேசும் மொழி அடையாளம் ஒன்றைத்தவிர வேறு ஒன்றுபட்ட பொது அடையாளம் எதுவும் தமிழனிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அது போல இந்தியனை அடையாளப் படுத்தும் பொது அடையாளம் ஏதும் இருக்கிறதா? நான் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அப்படி பொது அடையாளம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பொது அடையாளம் எதுவும் இல்லாதது மட்டுமல்ல இந்தியர்கள் சாதி-மத-இன-பிராந்திய-மாநில-மொழி ரீதியாக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாய்ந்தாலும் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ எனக்கூறிக்கொண்டு பிய்ந்து கிடக்கும் இந்தியனை ஒட்டவைக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்தியனோ, தமிழனோ அவன் வேற்றுமையிலும் ஒன்றுபட்டு நிற்பது இரண்டு விசயங்களில்த்தான். ஒன்று லஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களின் சொத்தைச் சூறையாடுவது; இரண்டாவது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவது. மற்ற விசயங்களில் இவன் எப்படி எல்லாம் வேறுபடுகிறான் என்பதைப் பார்ப்போம்.

தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தழிழையே அன்றாடம் பேசினாலும் தமிழ் நாட்டுக் கோவில்களில் தமிழில் பூசை செய்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் நுழைந்து உள்ளே சென்று ஆண்டவனை வழிபடுவது பார்ப்பனர் உள்ளிட்டு பிற சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. அப்படி ஒரு அதிசயம் ஏதும் நடந்து விட்டால் ஒரு பறையன் கருவறைக்குள் சென்று பூசை செய்வது பிற்பட்ட சாதிக்காரன் எவனுக்கும் பிடிக்காது. அப்பொழுது இவர்கள் ஒட்டு மொத்தமாக நாத்திகர்களாக மாறினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி, ஓ.பி.சி இவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கொடுப்பது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. தங்களைவிட இவர்கள் முன்னேறுவதை பார்ப்பனர்களால் பொருத்துக் கொள்ள முடியாது.

இட ஒதுக்கீடு கிடைக்காத பார்ப்பனரல்லாத பிற உயர் சாதிக்காரனுக்கு ஓ.பி.சி க்காரன் முன்னேறுவதைப் பொருத்துக் கொள்ள முடியாது. எம்.பி.சி க்காரன் முன்னேறுவதை பி.சி க்காரனால் பொருத்தக் கொள்ள முடியாது. எளிமையாகச் சொன்னால் எம்.பி.சி ஒதுக்கீட்டின் மூலம் ஒரு வன்னியன் முன்னேறினால் ஒரு முதலியாருக்குப் பிடிக்காது. பறையர்-பள்ளர்-அருந்ததியர் உள்ளிட்ட தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுவதை ஓ.பி.சி – பி.சி – எம்பி.சி க்காரர்களால் பொருத்துக் கொள்ள முடியாது. தனி இட ஒதுக்கீடு மூலம் அருந்ததியர் முன்னேறுவதை பள்ளர் - பறையர்களால் பொருத்துக் கொள்ள முடிவதில்லை.

இஸ்லாமியனுக்கோ, தாழ்த்தப்பட்ட கிருஸ்தவனுக்கோ இட ஒதுக்கீடு கொடுப்பது இந்துக்களுக்குப் பிடிக்காது.

பார்ப்பனப் பெண்ணை பிற சாதிக்காரன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணை ஒரு முத்தரையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வெள்ளாளக் கவுண்டர்களுக்குப் பிடிக்காது. நாயுடுப் பெண்ணை ஒரு தேவன் காதலித்து திருமணம் செய்து கொள்வது நாயுடுகளுக்குப் பிடிக்காது. வன்னியப் பெண்ணை ஒரு பறையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வன்னியர்களுக்குப் பிடிக்காது. பள்ளர் பெண்ணை ஒரு சக்கிலியன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பள்ளர்களுக்குப் பிடிக்காது.

இப்படி அவரவருக்குப் பிடிக்காத அனைத்திலும் ஒளிந்திருப்பது தீண்டாமையைத் தவிர வேறெதுவுமில்லை. இத்தகைய தீண்டாமை பார்ப்பனர்களிடமிருந்தே தொடங்கி நடைமுறையில் இருப்பதால் இதைப் பார்ப்பனியம் என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.

Thursday, May 2, 2013

பார்ப்பனியம் பிறவிக் குணமா?.... தொடர் – 6


மானிடப் பிறப்பின் மேன்மையைப் பறைசாற்ற “அரிது! அரிது! மானிடராய்ப் பிறத்தல் அரிது!” என்று பாடினாள் ஔவைப் பாட்டி ஆனால் “அரிது! அரிது! ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்யும் ஒரு இந்துவைக் காண்பதும், நல்லது கெட்டதுகளுக்கு ஜோசியம் பார்க்காத ஒரு இந்துவைக் காண்பதும் அரிது!” என்றல்லவா இன்று பாட வேண்டியுள்ளது.

திருமணம் ஆகவேண்டிய வயதில் திருமணமாகவில்லை என்றாலும், திருமணத்திற்குப் பிறகு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும், குழந்தைக்குப் படிப்பு சரியாக வரவில்லை என்றாலும், படித்துவிட்டு வேலை கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வேலை பறிக்கப்பட்டுவிட்டாலும், வருவாய் போதாமல் கடனில் மூழ்கினாலும், விவசாயமோ – தொழிலோ அதில் நட்டம் ஏற்பட்டாலும், திடீரென விபத்துக்குள்ளானாலும், நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டாலும் அதற்கான காரணங்களை அறிவியல் பூர்வமாக பரிசீலிக்காமல் தனக்கு ‘ஏழரையில் சனி’ இருக்கிறது எனவும், தற்போது ‘கெட்ட தசை’ நடக்கிறது எனவும்தான் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் நம்பிக்கொண்டிருக்கிறான் நமது இந்துச் சகோதரன்.

சனியின் பிடியிலிருந்தும், கெட்டதசையிலிருந்தும் விடுபடுவதற்கு எண்ணிலடங்கா சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் கடைபிடித்துப் பார்க்கிறான். பரிகாரங்களையும் செய்து பார்க்கிறான். எதையும் விடுவதில்லை. ஆனாலும் அவனால் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடிவதில்லை. ஜாதகம், ஜோசியம் பார்க்கும் இந்த ‘கெட்ட தசை’ நமது இஸ்லாமியச் சகோதரனையும், கிருஸ்தவ பிரதரையும்கூட விட்டு வைக்கவில்லை என்பதுதான் இந்தியாவின் சாபக்கேடு. அவ்வளவு ஏன்? பிரச்சனைகளுக்கான காரணங்களைத் தெரிந்து வைத்திருந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இல்லாத போது தனது இயலாமையின் காரணமாக பகுத்றிவாளன்கூட இதற்குப் பலியாகிவிடுகிறானே!

ஏதோ ஒருவனுக்கு மட்டும் மேற்கண்ட பிரச்சனைகள் என்றால் அவனை மட்டுமே வைத்து பரிசீலிப்பதை ஒரு வாதத்துக்காக வேண்டுமானால் போனால் போகட்டும் என வாலாவிருந்துவிடலாம். ஆனால் ஒட்டு பொத்த மனிதர்களும் மேற்கண்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது அதற்கான காரணங்களை நமது சமூகத்தில் நிலவும் அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு நிலைமைகளை பரிசீலித்து அதற்கான காரணங்களை கண்டறிந்து தீர்ப்பதற்கல்லவா முயல வேண்டும்.

ஏன் ஒருவனால் தனது பிரச்சனைகளுக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக பரிசீலிக்க முடிவதில்லை? இரண்டே இரண்டு காரணங்கள்தான். ஒன்று அறியாமை. மற்றொன்று இயலாமை. பெரும்பாலும் பலருக்குக் காரணம் தெரிவதில்லை. அப்படியே காரணம் இன்னதென்று தெரிந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான ஆற்றல் இன்மை. இந்த இரு பலவீனங்களே அவனை ஜாதகம் மற்றும் ஜோசியத்தை நம்புவதற்கும், சடங்குகள் சம்பிரதாயங்களை கடைபிடிப்பதற்கும் இட்டுச் செல்கிறது. அப்படினால் அவன் இதைத் தானாகவே தேர்ந்தெடுத்துக் கொள்கிறானா? அல்லது பிறர் வழிகாட்டுவதால் அவ்வாறு செய்கிறானா?

நம் மக்கள் எப்பொழுதுமே இளகிய, பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். ஒருவனுக்கு பிரச்சனை என்று வந்துவிட்டால் தங்களுக்குத் தெரிந்த பரிகார வழிமுறைகளை எல்லாம் சொல்லி வழி காட்டுவார்கள். அவன் பிரச்சனைகளிலிருந்து மீள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அவர்களும் அறியாமையில் இருந்துதான் வழிகாட்டுகிறார்கள் என்பது அவர்களுக்கேத் தெரியாத போது பிரச்சனைக்கு உள்ளானவன் என்ன செய்வான் பாவம்? அதை நம்பித்தானே ஆகவேண்டும். போகாத ஊருக்கு வழி காட்டும் இந்த நடைமுறைதான் இன்றைய சமூக எதார்த்தம். இந்த எதார்த்தம் எப்படி சாத்தியமானது?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவன் வெவ்வேறு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். அவைகளிலிருந்து மீள்வதற்காக சில முயற்சிகளைச் செய்கிறான். ஏதோ ஒரு வகையில் ஒரு சில பிரச்சனைகள் முடிவுக்கு வந்தாலும் தான் மேற்கொண்ட முயற்சியால் மட்டுமே அவன் விடுபட்டதாக நம்புகிறான். அதை பிறறோடு பகிர்ந்து கொள்கிறான். இந்தப் பகிர்வு அடுத்தவனுக்கு பிரச்சனை வரும் போது அவனையும் செய்யத் தூண்டுகிறது. இப்படியாக சமூகம் முழுக்க ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை நடைமுறை பரவி விடுகிறது. இந்த நடைமுறைகளை எல்லாம் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறான். இப்படி தொகுக்கும் வேலையை ஒரு படித்த கூட்டம்தான் செய்ய முடியும். அப்படி தொகுத்ததை தனதாக்கிக் கொண்டு அதை வைத்தே பிறருக்கு வழிகாட்டும் வேலையையும் மேற்கொண்டிருக்க வேண்டும். தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இங்கே பேசப்படுவதில்லை. இங்கே, அது அவனது தலை எழுத்து என்கிற மற்றொரு அபத்தத்தையும் சேர்த்தே பரப்பிவிடுகிறார்கள்.

வழிகாட்டுபவன் எப்பொழுதுமே உயர்ந்தவனாகி விடுகிறான். புகழுக்கு உரியவனாகி விடுகிறான். போற்றுதலுக்கு உரியவனாகி விடுகிறான் இந்த வழிகாட்டுதலுக்கு தட்சணையாக தனக்குத் தேவையான தானியத்தையோ, பொருளையோ, பணத்தையோ பெற்றுக் கொள்கிறான். பார்ப்பனர்கள் மட்டுமே அன்று படித்தவர்களாக இருந்ததால் ஜாதகம் - ஜோசியம் பார்ப்பது, பரிகாரங்களை பரிந்துரைப்பது, சடங்குகள் - சம்பிரதாயங்களை செய்ய வைப்பது - செய்து வைப்பது அவர்களின் தொழிலாக மாறியிருக்க வேண்டும். அதனால்தான் இன்று வரை பஞ்சாங்கம் எழுதுவது, ஜாதகம் பார்ப்பது, பரிகாரங்களை பரிந்துரைப்பது போன்றவைகள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் வசமே இருக்கிறது. மற்ற சாதியினர்கூட இன்று வருவாய்க்காகவும், புகழுக்காகவும் இத்தொழிலைச் செய்தாலும் அவை எல்லாம் துள்ளியமாக இருக்காது என்கிற கருத்தும் பார்ப்பனர்களால் பரப்பப்படுகிறது. மற்றவர்கள் போட்டிக்கு வந்துவிட்டால் இவர்களின் பிழைப்பு போண்டியாகிவிடும் என்பதுதான் இதற்கும் காரணம். கழுதை விட்டையில் முன்விட்டை என்ன? பின் விட்டை என்ன? முன்விட்டை மட்டும்தான் கழுதையின் விட்டை என்பதுதான் பார்ப்னர்களின் வாதம்.

மக்களை மடமையில் ஆழ்த்தும் மேற்கண்ட தொழிலை பார்ப்பனர்களே பிரதானமாகச் செய்வதால் இத்தகைய மடைமைகளை அல்லது மூடநம்பிக்கைகளை பார்ப்பனியம் என்று அழைப்பதுதானே சரியானதாக இருக்க முடியும்.

தொடரும்....
தொடர்புடைய பதிவுகள்