Sunday, July 29, 2018

வெல்லப் போவது யார்? ஐய்யப்பனா? அரசியல் சட்டமா?


பக்த கோடிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
நமது கோவிலில் பிரசாதம் வாங்கும் பொழுது தயவுசெய்து நம்பூதிரிகளைத் (பூசாரிகளைத்) தொடாமல் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
நிர்வாகம் ஐயப்பன் கோவில் கேரளா.
சபரிமலையில் பார்ப்பனர்களால் கடைபிடிக்கப்படும் முதல் வகைத் தீட்டு இது.

சீறிப் பாயும் பம்பை ஆற்றில் முங்கித்தானே பக்தன் கோவிலுக்குள் செல்கிறான். பம்பை ஆற்றின் சீற்றத்தில் கோவணமே கந்தலாகும் போது அவனது கைகள் மட்டும் கறையோடு கரையேறுமா என்ன? அது மட்டுமல்ல. அவன் முங்குவது வெறும் தண்ணீரா என்ன! புனித நீராச்சே! புனித நீராடியவனே உன்னைத் தொட்டால் தீட்டு என்றால் யாருக்கடா தேவை உன் ஐயப்பன் என கேள்வி கேட்க எந்த ஒரு ஆணுக்கும் துணிவில்லை.

சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் இருக்கிறானாம். ஐயப்பனை வழிபட வேண்டுமானால் 41 நாள் விரதமிருக்க வேண்டுமாம். பெண்கள் மாதவிடாய்க்கு ஆட்படுவதால் அவர்களால் விரதத்தையும் தூய்மையையும் பின்பற்ற முடியாதாம். .அதனால் ஐய்யப்பனை வழிபட பெண்களை அனுமதிப்பதில்லையாம். இது பார்ப்பன திருவாங்கூர் தேவஸ்தானம் சொல்லும் நியாயவாதம். மாதவிடாய் என்பது தீட்டு, தோஷம், அசுத்தம். இது தூய்மையற்றது என்பதை மிகத் தெளிவாகச் சொல்கின்றனர் பார்ப்பனர்கள். சபரிமலையில் கடைபிடிக்கப்படும் இரண்டாம் வகைத் தீட்டு இது.

ஐயப்பன் எங்களுக்குமானவர். ஐயப்பனை வழிபடுவது எங்களது மத உரிமை; தனிமனித வழிபாட்டுரிமை என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர் கேரளப் பெண்கள். இது குறித்த பஞ்சாயத்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த பஞ்சாயத்து மிகவும் முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆண்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள தீண்டாமையை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்றுள்ள நிலையில்தான் பெண்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தி உள்ளனர்.

பெண்கள் கோவிலுக்குள் வந்தால் தீட்டாகி விடும் என்றால் அவ்வளவு பலவீனமான சாமியை என்ன வெங்காயத்துக்கு கும்பிடுறீங்க? என சீறுகிறார் ஆதவன் திட்சண்யா. பார்ப்பனர்களுக்கு எதிராக திருப்பப்பட வேண்டிய சீற்றம் பக்கத்தர்களுக்கு எதிராக திருப்பப்பட்டுள்ளது என்கிற வருத்தம் எனக்கு உண்டு.

சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சொல்கிறார். இது மனித உரிமை மீறல் இல்லையாம். ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லையாம். கார்த்திகை – தை - மார்கழி மாதங்களில் கடுங் குளிர் நிலவுவதாலும் மலைப் பிரதேசங்களில் தங்க நேரிடுவதாலும் பெண்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுமாம். இது அவரது நியாயவாதம்.

சரி. இந்த சிரமங்களுக்காக நீங்கள் பெண்களை சபரிமலைக்கு வரவேண்டாம் என்பதை ஒரு வாதத்திற்காக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலையிலேயே ஒரு நூறு மீட்டர் தூரத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை வழிபட அனுமதிக்கலாமே!

ஆனால் விசயம் இதுவல்ல. ஜீயர் மேலும் அடுக்குகிறார்.

ஒரு சிலரால் (அதாவது ஒரு சில பெண்களால்) ஐயப்பனுக்காக பக்தர்கள் (அதாவது ஆண் பக்தர்களுக்கு) இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியே நம் முன்னோர்கள் (அவாள்தான் வேறு யார் நம் முன்னோர்கள்) இந்த ஏற்பாட்டை செய்துள்ளனராம். இது வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறதாம். எந்தெந்த வேலைகளை யார் யார் எப்போது செய்ய வேண்டும், ஆண்மீகப் பணிகளில் ஆண்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எது, பெண்கள் செய்ய வேண்டிய காரியம் எது என வேதங்கள் சில வழி காட்டுதல்களையும் செய்து வைத்துள்ளவாம். இந்து மதம் பெண்களைப் பெருமையாகக் கருதுகின்றதாம்.

800 ஆண்டுகால ஐயப்பன் குறித்து ‘5000’ ஆண்டுக்கு முந்தைய வேதங்களில் எப்படி சொல்லியிருக் முடியும் என கேள்வி எழுப்ப இங்கு யாருக்கடா தைரியம் இருக்கு என்கிறார் இந்த ஜீயர்.

ஆண்களுக்கு இருப்பது போல பெண்களுக்கும் ஐயப்பனை வழிபடுவது அடிப்படை உரிமை. 1950 க்குப் பிறகு சட்டத்துக்கு உட்பட்டே எதுவும் இருக்க வேண்டும். அரசியல் சாசன விதி-மதக்கோட்பாடு இதில் எதற்கு எது உட்பட்டது? என சரமாரியாக நீதிபதிகள் கேள்விகள் எழுப்புகின்றனர்.

ஆனால்,

10 முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாதவிடாய் காரணமாக 41 நாள் விரதத்தையும், தூய்மையையும் பின்பற்ற முடியாது அதனால் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விசயத்தில் நீதிமன்றம் தலையிட்டால் பெரும் சர்ச்சை ஏற்படும் என நீதிமன்றத்தையே எச்சரிக்கிறார் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி. மாதவிடாய் என்பது தூய்மையற்றதுதான் என்பதை திருவாங்கூர் தேவஸ்தானம் தனது வழக்கறிஞர் மூலம் நிறுவ முயல்கிறது.

வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வியும் (பார்த்தீர்களா வழக்கறிஞருக்குள்ளும் ஒரு மனு இருக்கிறான்), திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஜீயர் உள்ளிட்ட பார்ப்பனர்களும் பார்ப்பன இந்து மதத்தின் சட்டத் தொகுப்பான மனுஸ்மிருதியை ஆதாரமாகக் கொண்டுதான் தங்களது வாதத்தை முன்வைக்கின்றனர்.

மாதவிடாய் காலத்தில் உள்ள ஒரு பெண்ணை ஒருவன் தொட்டுவிட்டால் தான் குளிப்பதன் மூலம் அவன் தூய்மையடைகிறான் என்கிறது மனுஸ்மிருதி (மனு:  5-85). மாதவிடாய் தீட்டு என்பது உறுதி செய்யப்பட்டு விட்டதா!

“மாதர்களின் சுபாவமே மனிதர்களுக்கு சிரிங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால் தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாயிரார்கள்” (மனு:  2-213).  ஒரு சிலரால் (அதாவது ஒரு சில பெண்களால்) ஐயப்பனுக்காக பக்தர்கள் (அதாவது ஆண் பக்தர்களுக்கு) இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற ஜீயரின் அச்சம் மனுவால் உறுதி செய்யப்படுகிதே!

“புலன்களையடக்கியவனாயினும் (அவன் ஐயப்ப பக்தனேயாயினும்), அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பினால் காமக்குரோதமுள்ளவனாகக் செய்வர் மாதர்” என்கிறது மனுஸ்மிருதி (மனு:  2-214)

பால் அடிப்படையில் எவரையும் பாகுபாடு செய்யக் கூடாது என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் விதி 15 வலியுறுத்தினாலும் ஜீயர் சொன்னது போல இதற்கெல்லாம் மேலான விதி வேதங்களில் இருக்கிறதுதானே? வேதம் என்று சொன்னாலே நாம்தான் வீழ்ந்து விடுகிறோமே! இது வேதத்தையும் விஞ்ஞானத்தையும் கலந்து செய்த கலவை என்று ஒருவன் விளம்பரம் செய்யும் போது நாம் வாய்பிளந்துதானே நிற்கிறோம்.

தொடர்புடைய பதிவுகள்:


    Saturday, July 7, 2018

    பணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….

    இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்னவோ இந்தியக் குடிமகனுக்கு கருத்துச் சுதந்திரம் இருப்பதாகச் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச் சூழல் பற்றி பேசினால் கைது-சிறை. சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிபோவது பற்றி பேசினால் கைது-சிறை. நடுவண் மற்றும் மாநில அரசுகளின் மக்கள் விரோத திட்டங்கள்-செயல்பாடுகள் குறித்து பேசினால் கைது-சிறை. இந்தியக் குடிமகனின் குரல் வலையை ஒரு பக்கம் நெறித்துக் கொண்டே மற்றொரு பக்கம் உலகிலேயே இரண்டாவது பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் என பெருமை பேசுகின்றனர் ஒரு சாரார். உண்மையிலேயே நாம் ஒரு திறந்த வெளிச் சிறையில்தான் வாழ்ந்து வருகிறோம் என்றால் அது மிகையல்ல.

    அரசு ஊழியராகவோ அல்லது ஒரு பொதுத் துறை ஊழியராகவோ ஒரு இந்தியக் குடிமகன் இருந்துவிட்டால் போதும் அவன் தனது வேலையைத் தவிர வேறு எதையும் பற்றி பேசக்கூடாது. அவன் பணிபுரியும் நிறுவனத்தின் செயல்பாடுகள் ஊழியர்களுக்கு எதிரானதாக இருந்தால்கூட அவன் வாய் திறக்கக் கூடாது.

    நடுவண் மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள், தான் பணிபுரியும் நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றாலும்கூட, இந்த பாதிப்பு தனது வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் என்றாலும்கூட அவன் வாய் திறக்கக் கூடாது. மீறினால் அவனது வேலை-வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு வீதியில் வீசப்படுகிறான். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆங்கிலேயர் காலத்து நடத்தை விதிகளே இன்றைய சுதந்திர இந்தியாவிலும் அப்படியே நீடிக்கிறது. ஜனநாயக உணர்வு கொண்ட ஒருவர் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணியில் சேருவது என்பது கிளைச் சிறையில் அடைக்கப்படுவதற்கு ஒப்பாகும்.

    1981 ல் நடுவண் அரசின் பொதுத்துறை ஒன்றில் பணிக்குச் சேர்ந்த நான் அந்த நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு சிலரின் ஊழல் முறைகேடுகளை தட்டிக் கேட்டத்தற்காக பணி நீக்கம் செய்யப்பட்டு வீதியல் வீசப்பட்டேன். தொடர் போராட்டத்தின் மூலம் அதே நிறுவனத்தில் வேறு ஒரு கிளையில் நான் மீண்டும் புதிதாக பணியில் சேர்ந்தேன்.

    கிளைச்சிறையில்தான் எனது வாசம் என்றாகிவிட்ட பிறகு வெளிப்படையாக எனது எண்ணங்களை வெளிப்படுத்தவியலாத சூழலில்தான் இணையத்தின் வலைப் பக்கம் என்னை ஈர்த்தது. கிளைச் சிறைவாசி என்பதனால் மெய்யுலகில் நேரடியாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்றாலும் மெய்நிகர் உலகிலாவது எனது எண்ணங்களை வெளிப்படுத்தாலாம் என்கிற வகையில்தான் நான் ஊரான் வலைக் பக்கத்தை 2010 ல் தொடங்கினேன்.

    நான் 60-வது அகவையை நிறைவு செய்ததால் 23.06.2018 அன்று நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஒரு கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். கிளைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் திறந்த வெளிச் சிறைக்குதான் தள்ளப்பட்டுள்ளேனே தவிர தற்போதும் நான் சுதந்திரமானவன் அல்ல.

    இந்தச் சூழலில்தான் வாசிப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இராணிப்பேட்டை பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் சார்பில் எனது பணி ஓய்வு மற்றும் ஊரான் வலைப் பக்கம் அறிமுக விழா 28.06.2018 அன்று நடைபெற்றது.

    இவ்விழாவில் அலுவலக ஊழியர்கள், நண்பர்கள், பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் அங்கத்தினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஊரான் வலைப்பக்கதில் உள்ள படைப்புகள் குறித்து விமர்சன நோக்கில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். சால்வை மற்றும் மாலைகள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது என்பதை முன்கூட்டிடே அறிவித்து விட்டதால் புத்தகங்கள் மட்டுமே விழாவில் பரிசாக பெறப்பட்டது. மாலை 06.30 மணி முதல் 08.30 மணி வரை சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற விழாவில் ஒருவரும் கலைந்து செல்லாமல் இறுதிவரை இருந்து சிறப்பித்தனர். இது ஒரு விழா என்பதைவிட ஒரு கருத்தரங்கமாக அமைந்ததே இதன் சிறப்பு. விழாவை சிறப்பித்த அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.

    பொன்.சேகர்








    தொடர்புடைய பதிவு: