Thursday, December 31, 2020

இழி குணம் - முதல் ஐந்து.

இழி குணம் தலைப்பில் எதிர்த்து நில் என்ற எனது மற்றுமொரு வலைப்பூவில் தொடர் கட்டுரை ஒன்றை எழுதி வருகிறேன். 

அவற்றின் இணைப்புகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

இணைப்பு 

இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5

இழி குணம்: என்னை ஈர்த்த மக்கள் கலை இலக்கியக் கழகம்!.....4

இழி குணம்: கூட்டுறவு சொசைட்டி பொது நலன் சார்ந்ததா?.....3

தொடரும்

நன்றி!

ஊரான்

Monday, December 28, 2020

தஞ்சை விவசாயிகள் பேரணி: அடக்குமுறை! எஜமானர்களை மிஞ்சும் எடப்பாடிகள்!

வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடுங் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் விவசாயிகள் போராடுகின்றனர். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி 29.12.2020 தஞ்சை பேரணி-பொதுக் கூட்டத்தைத் தடுப்பதற்கான ஈனத் தனமான வேலைகளில் ஈடுபடுகிறது எடப்பாடி கும்பல். 'நானும் விவசாயிதான்' என்று கூப்பாடு போட்டுக் கொண்டே போராடுவோர் குரல்வளையை நெரிப்பதில் ரவுடிக் கும்பலையும் விஞ்சி விட்டது இந்தக் கும்பல். 

மோடி கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும், ஏன் ஜெயலலிதா எதிர்த்தவைகளைக்கூட எடப்பாடிக் கும்பல் ஆதரிப்பது ஏன்? பெரிய ரகசியம் ஒன்றுமில்லை. எல்லாம் பெட்டியைக் காக்கத்தான்.

நீட் தேர்வு: (National Eligibilty cum Entrance Test-NEET): 2016


மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வு தொடர்பான வழக்கில் 2016 ஆம் ஆண்டில் தடை நீக்கப்பட்ட பிறகு, நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. மறைந்த ஜெயலலிதா நீட் தேர்வு முறையை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார்.  ஆனால் இன்றைய எடப்பாடி கும்பல். நீட் தேர்வு முறையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால் அனிதா, பிரதீபா உள்ளிட்ட பலரை நாம் இழந்தது மட்டுமல்ல ஏழை எளிய மக்களின் மருத்துவக் கனவுகளும் நாசமாகி வருகிறது.


ஜூலை 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை, 3, 5, 8 வகுப்புகளில் புதிதாக பொதுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தி குலக்கல்விக்கு வித்திட்டுள்ளது மோடி அரசு. இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பு மட்டுமன்றி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி உரிமையை மத்திய அரசு பறித்து விடுகிறது. இதையும் ஆதரிக்கிறது எடப்பாடி கும்பல்.


தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்: 2013


மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொது வினியோகத் திட்டத்தில் மத்திய அரசு தலையிட்டு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஒருங்கிணைந்த பொதுவிநியோகத் திட்டம் (integrated management of public distribution system) என்ற பெயரில் "ஒரே நாடு, ஒரே ரேஷன்" என்கிற திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. ஜெயலலிதா எதிர்த்து வந்த இந்தத் திட்டத்தைத்தான் இன்றைய எடப்பாடி கும்பல் 01.10.2020 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.


உதய் மின் திட்டம்: 2015


நிதி மற்றும் செயல் திறனை மேம்படுத்துவது என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் காலாண்டுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள வழிவகுக்கிறது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கப்படும் நிலக்கரியின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி மின்கட்டணம் உயர்வதை தவிர்க்கவியலாத ஒன்றாக மாற்றியுள்ளது. மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மாநில அரசின் நடவடிக்கைகள் மீது நேரடியாக மத்திய அரசு தலையிடுகிறது. இந்தத் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகக்கடுமையாக எதிர்த்து வந்தார்.


இதன் தொடர்ச்சியாகத்தான் புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020 என்கிற மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது மோடி அரசு. ஏற்கனவே 2003 இல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஒரே துறையாக இருந்த மின் வாரியத்தை உற்பத்தி (generation), அனுப்புதல் (trasmission), பகிர்மானம் (distribution) என்று தனித்தனியாக பிரித்து தனியாருக்குத் தாரை வார்க்கும் அடிக்கல்லை நாட்டியது‌. அரசு மின்சாரத்தைத் தயாரித்து கம்பிகள் வழியாக அனுப்பினால், அதை எடுத்து வீடுகளுக்கு விநியோகம் செய்து கட்டணத்தைத் தீர்மானித்து தனியார் கொள்ளையடிக்க அனுமதி அளிக்கிறது புதிய மின்சார சட்டத் திருத்தம் 2020. மின் கம்பி அரசுக்கு, அதில் பாயும் மின்சாரம் அதானிக்கு என்பதுதான் இந்த சட்டத்தின் சாரம். இதற்கும் பச்சைக்கொடி காட்டுகிறது எடப்பாடி கும்பல்.


பணமதிப்பிழப்பு: 2016


500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த 2016, நவம்பர் 8 நள்ளிரவை யாரும் மறக்க முடியாது. கருப்புப் பணம் ஒழியும், ஊழல் மறையும் எனக் கூவினார்கள். ‌ நடந்ததா? மாறாக நிச்சயக்கப்பட்டத் திருமணங்கள் நின்றன. சிகிச்சைக்குப் பணம் இன்றி நோயாளிகள் தவித்தனர். அன்றாட செலவுகளுக்காக வங்கி வாசலில் வரிசையில் நின்று மாண்டு போனவர்கள் ஏராளம். சிறுதொழில்கள் முடங்கியதால் தொழிலாளர்கள் கிராமங்களுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். கட்டுமானத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏற்றுமதிகள் குறைந்தன. சுமார் 90 லட்சம் பேர் வேலை இழந்தனர். இதை மட்டும் எடப்பாடி கும்பல் எதிர்த்து விட்டதா என்ன?

ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி : 2017

மீண்டும் சிறு குறு தொழில்கள் நலிவடைந்தன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். ஏற்றுமதிகள் பாதிப்படைந்தன. மாநில அரசுகளுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இழப்பீட்டை ஈடுசெய்து கொள்ள 21 மாநில அரசுகள் ரூ.78,542 கோடி வெளியிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது மோடி அரசு. இதனால் மாநில அரசுகள் கடன் சுமைக்குத் தள்ளப்பட்டன. மாநில அரசுகள் ஓட்டாண்டி ஆனாலும் பரவாயில்லை, தங்களது பெட்டி பாத்திரமாக இருந்தால் போதும் என்று மௌனம் காக்கிறது எடப்பாடி கும்பல்.


கால்நடை விற்பனைக்குத் தடை: 2017


கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனையை ஒரு பண்ணைத் தொழிலாக மாற்றி கிராமப் பொருளாதாரத்தை கார்ப்பரேடடுகளிடம் ஒப்படைக்கும் கெட்ட நோக்கம் கொண்டது. கால்நடை விற்பனைக்கு வரி விதித்து கால்நடை வளர்ப்பின் மூலம் பயனடைந்த கிராமப்புற விவசாயிகளைக் கடுமையாக பாதிக்கும் திட்டம் இது. இப்படி ஒன்று இருப்பதே எடப்பாடி கும்பலுக்கு எங்கே தெரியப் போகிறது?


உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தயாரிப்புத் திட்டம்: 2018


உணவு தானியத்தில் இருந்து 30 சதவீத எரிபொருளை தயாரிப்பதற்கான அனுமதியை வழங்கும் திட்டம் இது. இதனால் கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும். இது மட்டும் தெரிந்து விடுமா என்ன எடப்பாடி கும்பலுக்கு?


சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு: 2018


இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி அளிக்கிறது இந்தத் திட்டம். இதன் மூலம் சிறு வணிகத்தை ஒழித்துக்கட்டி, பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் இந்திய வணிகத்தை ஒப்படைக்கிறது. எவன் வந்தால் நமக்கென்ன? பெட்டி பத்திரமாக இருந்தால் போதும் என்பதைத்தவிர வேறென்ன செய்துவிடப் போகிறது எடப்பாடி கம்பெனி?


வேளாண் சட்டத்திருத்தங்கள் 2020


கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்மையை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரவும், கள்ளச்சந்தையை ஊக்கப்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுத்து உணவுப்பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவும் வழிவகை செய்துள்ளது மோடி அரசு. இதற்கு எதிராகத்தான் இன்றைக்கு விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.


மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கொண்டுவரப்பட்ட மருத்துவ படிப்பில் நீட் பொதுத்தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கை, ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி, உதை மின் திட்டம் மற்றும் புதிய மின்சார சட்டத் திருத்தம், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' என்கிற பொது விநியோகத் திட்டம், புதிய வேளாண் சட்டங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் இவை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலேயே அமைந்துள்ளன. 


ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்து வந்த நீட் தேர்வு, பொது விநியோகத் திட்டம், உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புத் திட்டம், ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்ட அனைத்தையும் அம்மா பெயரில் ஆட்சி நடத்தும் எடப்பாடி அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஜெயலலிதா எதிர்த்தவைகளை இவர்கள் ஆதரிப்பது ஏன்? பஞ்சாப் ஹரியானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் வேளையில் எடப்பாடி கும்பல் மட்டும் ஏன் ஆதரிக்கிறது? 'ரெய்டு' எனும் கத்தி அவர்கள் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டிருப்பதை தவிர வேறென்னவாக இருக்க முடியும்?


'ரெய்டு' எனும் கத்தி!


21.12.2016 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்கள் வீடு என 14 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு ரூ.48 லட்சம் பணம் ரொக்கமாகவும், 7 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. தலைமைச் செயலருக்கும் சேகர் ரெட்டி தொடர்பு இருப்பதாகவும் சொல்லப்பட்டது. சேகர் ரெட்டி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவர் என்றும் சொல்லப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் சேகர் ரெட்டியின் வீட்டில் கட்டுகட்டாக கைப்பற்றப்பட்டதை நாடே அறியும். ஆனால் பின்னாளில் அவர் குற்றமற்றவர் என்று விடுக்கப்பட்டார் என்பது தனிக்கதை.


07.04.2017 அன்று சென்னை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் ஆகிய இடங்களில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டதில் ரூ. 5 கோடி அளவிற்கு ரொக்கமாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.


அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் இன்றைய ஆட்சியாளர்கள் ஜெயாவின் வழியிலே மக்கள் பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ளனர். இதையெல்லாம் தெரிந்து வைத்துள்ள மத்திய அரசு 'ரெய்டு' என்ற கத்தியைக் காட்டி இவர்களை மிரட்டி வருகிறது. 


மோடியின் அடிமைகளாய் மாறிப்போய் அம்பலப்பட்டு, செல்வாக்கிழந்து இனியும் தமிழக அரசியலில் முகவரி இல்லாமல் முடங்கிப் போவோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் சுருட்டியப் பணத்தைப் பாதுகாத்துக்கொள்ள மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோதத் திட்டங்களையும், சட்டங்களையும் ஆதரித்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது எடப்பாடி கும்பல். அரசியல் அரங்கில் முகவரி இல்லாமல் உடனடியாக துடைத்தெறியப்படவேண்டிய கூட்டமிது.


ஊரான்


தொடர்புடைய பதிவுகள்


எடப்பாடி ஆட்சி எப்படி நீடிக்கிறது?




Saturday, November 21, 2020

வெள்ளையனை நடுங்க வைத்த மைசூர் புலி!

ஆற்காட்டு நவாப், ஹைதராபாத் நிஜாம், புதுக்கோட்டை தொண்டைமான், திருவிதாங்கூர் சமஸ்தானம், மராட்டிய பேஷ்வாக்கள் என பலரும் மண்டியிட்டு அண்டிப் பிழைத்த போது வெள்ளையனை எதிர்த்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் சமரசமின்றி போராடிய ஒரு மாவீரன். 

'மராத்தியர்கள் அல்ல நம் எதிரி, நிஜாமும் கூட அல்ல நமது எதிரி, இந்த மண் எவ்வளவு எனக்கு உரியதோ அதே அளவு அவர்களும் இதன் உரிமையாளர்களே. இந்த மண்ணுக்கு உறவற்ற பிரிட்டிஷ்காரர்களே நமது பொது எதிரி' என எதிரியை அடையாளம் காட்டியவன். 

உருது, ஆங்கிலம், பார்ஸி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவன். 'சீனம் சென்றேனும் ஞானம் தேடு' என்பதற்கிணங்க, நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம், அரண்மனையில் பெரிய நூலகம் என அறிவுப் பசிக்கு வித்திட்டவன்.

தனது காதலி ஒரு சாதாரண படைவீரனின் மகள் என்று கருதாமல் தான் காதலித்த பெண்ணையே மணம் புரிந்து காதலுக்கும் மகுடம் சூட்டியவன்.

பெண்கள் மேலாடை உடுத்தக் கூடாது என்கிற நடைமுறையை ஒழித்துக்கட்டியவன்.

'ஏன் இந்துக்களையும் சமமாக பாவிக்கிறாய்? இஸ்லாமை வளர்ப்பது உன் கடமை அல்லவா?' எனக் கேட்டபோது 'நான் என் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறேன்',  நீங்கள், 'நான் என் மதத்தைச் சார்ந்த மக்களைக் காக்க வேண்டும் என்கிறீர்கள். இந்த மண் என்னுடையதல்ல, அவர்களுடையது. எனது வலிமை பெரியதா? மக்கள் ஒற்றுமை பெரியதா? ஒரு பிரிவினருக்கு அன்பு, மறு பிரிவினருக்கு கடுமை என்பது எப்படி நல்ல முடிவை எட்ட உதவும்? அவர்களை பதவியில் வைத்திருப்பது இராஜதந்திரம் என்றல்ல. அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்பதாலேயே. நான் இந்து கோவில்களுக்கு தாராளமாக உதவுவது  சமநிலை பேணும் ராஜதந்திரம் அல்ல. அவர்கள் பெரும்பான்மையினர். அவர்களுக்கு நான் அரசன். அதற்கு மேல் நானும் அவர்களும் இந்தியர்கள்' என மதமாச்சரியம் பார்க்க கூடாது என்பதை உணர்ந்தவன்.

உயர் பதவிகளில் தனது அரசின் முதலமைச்சராகவும் அந்தரங்கச் செயலாளராகவும் பார்ப்பனர்களையே அமர்த்தி தான் சாதி மதம் பார்க்காதவன் என்பதை நிலைநாட்டியவன்.

சட்டத்திற்குப் புறம்பாக எந்த மனிதனும் தண்டிக்கப்படக்கூடாது என அறிவித்தவன். மரண தண்டனையை ஏற்க மறுத்தவன்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தியவன். மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி மாற்றுத் தொழில் ஏற்பாடு செய்தவன். இளைஞர்களின் நன்னடத்தையும் எதிர்காலமும் மது ஒழிப்புடன் இணைந்தது. மது ஒழிப்புடன் மக்கள் நல வாழ்வும் சமூகப் பண்பாடும் பாதுகாக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டவன். மூடப்பட்ட சாராய ஆலைகளுக்கு இழப்பீடு இல்லை என்று அறிவித்தவன்.

வேளாண்மையையும் தொழில்துறையையும் வளர்ப்பதற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தவன்.

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக வருவாய்ச் சட்டங்களைத் திருத்தியவன். விவசாயி தவறு செய்தால் அதற்கு அபராதமாக பழ மரங்களை வளர்க்கச் சொன்னவன். 

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு அடிக்கல் நாட்டியவன். 'வானம் உள்ளவரை, பசி உள்ளவரை விவசாயிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உணவளிப்பவர்கள்' என்று அறிவித்தவன்.

மதத்தால், ஜாதியால், இனத்தால் ஒருவரை இழிவுபடுத்தி வேறுபாடு வளர்த்தால் அது சட்டத்திற்கு எதிரானது, தண்டனைக்குரியது என அறிவித்து சாதி மத வெறுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தவன்.

தொழில் வணிக முனைவோரை ஊக்குவித்தவன். பன்னாட்டுப் பொருள் விற்பனைக்கான அரசு விற்பனை மையங்களை ஏற்படுத்தியவன்.

வெடி மருந்து தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள் காவிரியில் கலந்து மீன்கள் சாவதைக் கண்டு அந்தத் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக நின்றவன்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை அளிப்பதற்காகவே சாலையை செப்பனிடுதல், மரம் வளர்த்தல், ஓய்வு இல்லங்கள் கட்டுதல் எனப் பல்வேறு பணிகளை உருவாக்கி வேலைவாய்ப்பை உத்தரவாதப் படுத்தியவன்.

அரசு ஆடம்பரங்களை, வீண் செலவுகளை முற்றாகக் கட்டுப்படுத்தியவன். கட்டில் மெத்தையைத் துரந்து பாயில் படுத்து உறங்கியவன். ஆடம்பர உடைகளைத் துறந்து போர் வீரனைப் போல வாழ்ந்தவன். அதிகாரிகள் மக்களிடம் வரி வசூலிப்பதில் கடுமை காட்டக் கூடாது என உத்தரவிட்டவன். 

போரின் இறுதிக்கட்டத்தில் தப்பித்து உயிர் வாழ வேண்டும் என மந்திரிகள் ஆலோசனை கூறிய போது, 

'உயிர் உன்னதமானது. ஏனெனில் நாம் அதை ஒரு உன்னத இலட்சியத்திற்காக தியாகம் செய்ய வேண்டும். நம் பெருமைக்குரிய மண்ணை அடிமைப்படுத்த ஒரு கொடிய எதிரி வருகிறான் எனும் போது அதை எதிர்த்து நின்று மரணத்தைத் தழுவுகிறவர்கள் மரணத்தின் பின்னும் வாழ்கிறார்கள். நாடு அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றும்' என்ற இலக்கணத்திற்கு ஏற்ப போரில் வீரமரணம் அடைந்தாலும் இன்றும் நம் நினைவில் வாழ்பவன்.

போர் என்பது வெற்றி தோல்வி அல்ல அது வீரத்தின் களம் என்று காட்டியவன்.

இப்படி நீள்கிறது அவனது வாழ்க்கைக் கதை. அவன் மன்னனாக வாழ்ந்திருந்தாலும் ஒரு நவ கால சிற்பியாகக் காட்சியளிக்கிறான். இவனைப் படிக்கப் படிக்க இப்படி ஒருவன் நமக்குக் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கத்தை உருவாக்குகிறான். ஆனால் காவிக் கூட்டமோ இவனைப் படிக்கக் கூடாது என தடை விதிக்கிறது. தடைகளைத் தாண்டி அவன் பலரது நெஞ்சங்களில் ஊடுருவிக் கொண்டுதான் இருக்கிறான். 

வீரத்தின் விளைநிலம், மைசூர் புலி திப்பு சுல்தான் பிறந்தநாள் - நவம்பர் 20 - நினைவாக....

நெகிழ்ச்சியுடன்

ஊரான்

ஆதாரம்: திப்புவின் வாள் நூலிலிருந்து. நூலைக் கொடுத்து உதவிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்களுக்கு நன்றி.




Friday, October 23, 2020

எனக்குக் கோவிட்-19 இருக்குமோ?

மார்ச் 24 ஆம் தேதியிலிருந்து உலகையே முடக்கிய கரோனாவால் நானும் முடங்கிப் போனேன். அகவை 62 ஐக் கடந்துவிட்ட நிலையில் சர்க்கரைக்கு ஆட்படவில்லை என்றாலும் இதயம், சிறுநீர் கழித்தல், தைராய்டு பிரச்சனைகள் இருப்பதால்  கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள சமூக இடைவெளி, முகக் கவசம், அடிக்கடி சோப்புப் போட்டுக் கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை சரியாகவேக் கடைபிடித்து வந்தேன். கடைவீதிக்குச் செல்லும் பொழுது சில நபர்களுடன் முகக்கவசத்திற்கும், சமூக இடைவெளிக்கும் மல்லுக் கட்ட வேண்டியிருந்தது. "என்ன உயிருக்குப் பயமா?" என முறைத்தவர்களும் உண்டு. அவ்வப்பொழுது ஆர்சனிகம் ஆல்பமும், இஞ்சி-சுக்கு-டீயும், ஆவி பிடித்தலும், சில வேலைகள் ஆங்கில மாத்திரைகளும் எடுத்துக்கொள்வது இயல்பாய் மாறின. சும்மாவா பின்னே! உயிர் வாழ்வது ஒரு முறைதானே!

இடைப்பட்டக் காலத்தில் நெருங்கிய உறவினர்களின் திருமணங்கள், நேசித்த உறவுகளின் மரணங்கள் நிகழ்ந்தபோதும் நேரில் செல்லவியலாத நிலைக்குத் தள்ளப்பட்டது நான் மட்டுமல்ல நீங்களும்தான். நிலைமையைப் புரிந்து கொள்ளாதவர்களிடையே உறவுகளும் நட்புகளும்கூட முறிந்து போய் இருக்கலாம். முறிவுகள் முடிவுக்கு வர சில காலங்கள்கூட ஆகலாம். காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஆனால் சில நேரங்களில் உயிருக்கும் மேலான பிரச்சனைகள் சிலருக்கு மேலெழக்கூடும். அந்த வகையில் இந்த மாதத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'வேன்' மற்றும் மகிழுந்துகளில் வெளியூர் பயணங்கள் மற்றும் பேருந்துகளில் உள்ளூர் பயணங்களை நான் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய நபர்கள் மற்றும் புதியச் சூழலை எதிர்கொள்ள நேர்ந்தது.  பழைய ஒழுங்கே நமக்கு எட்டிக்காயாய் இருக்கும்பொழுது புதிய ஒழுங்கு மட்டும் கட்டுக்குள் வந்து விடுமா என்ன? ஆதங்கத்தை உள்அமுக்கிக் கொண்டுதான் சிலரோடு பழகவும் பேசவும் நேர்கிறது.

கோப்புப் படம் (நானல்ல)

சளித்தொல்லை எனக்கு இயல்பானதுதான் என்றாலும் இந்த ஒரு மாதத்தில் சற்றே கூடுதல் ஆனதால் 'சுவாப்' சோதனை எடுத்துக் கொள்ளச் சென்ற மாதமே மருத்துவர்கள் பரிந்துரைத்தும்,  முக்கிய வேலைகள் காரணமாகத் தள்ளிப் போட்டேன். நாட்கள் ஓடின. சளியும் குறைந்த பாடில்லை. கோவிட்-19 க்கான வேறு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும் தள்ளிப்போடுவது சிலநேரங்களில்  தலைப்பாகைக்கே ஆபத்தாகிவிடும் என்பதால் 22.10.2020 அன்று வாலாசாப்பேட்டையில் உள்ள இராணிப்பேட்டை மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சளி மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அரசு மருத்துவமனை என்றாலே எப்படி இருக்குமோ என்ற அச்சம் உள்ளூர நமக்கு இருக்கம்தானே? வாலாசாப்பேட்டை அரசு மருத்துவமனையில் செயல்படும் கோவிட்-19 பரிசோதனை மையம் பழைய மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வந்தாலும், சோதனை மாதிரிகள் எடுக்கின்ற இடத்தின் சுத்தம், பாதி அச்சத்தைப் போக்கியது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் நேர்த்தியான சேவை மீதி அச்சத்தையும் போக்கி விட்டது. கோவிட்-19 பரிசோதனைக்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதை நேரடியாக உணர்ந்து கொண்டேன்.

வீட்டுக்கு வந்தேன். முடிவு வரும்வரை தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தது. ஏற்கனவே சில நாட்களாக இருந்த மூச்சிரைப்பு 'கோவிட்டி'னால் இருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டது. ஆனால் 'சுவாப்' எடுத்த போது, HR-106/mt, SPO2-99%  இருந்ததால் அச்சம் என்கிற மடமையை மட்டுப்படுத்தியது.  ஒரு வேளை எனக்கு 'பாசிட்டிவ்' என வந்து விட்டால், வீட்டில் உள்ளவர்களையும் அள்ளிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் துரத்த, நான் தனிமரமாய் வீட்டில். 'பாஸிட்டிவ்' ஆனாலும் அதற்கும் தயாராகிக் கொண்டேன். 

இன்று (23.10.2020) மாலை குறுஞ்செய்தியில் முடிவு வந்தது 'நெகட்டிவ்' என்று. நிம்மதிப் பெருமூச்சு! பைசா செலவு இன்றி!

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்


Wednesday, October 21, 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்? பகுதி - 2

இராணிப்பேட்டை ஏன் வாழத் தகுதியற்ற இடமாக மாறிப்போனது; இதற்கு யார் காரணம் என்பது குறித்து வரும் தொடர்களில் எழுதவிருக்கிறேன்.

இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, ஓசூர் உள்ளிட்டப் பகுதிகளில் செயல்படும் ஆலைகளின் மாசுக்கட்டுப்பாட்டைக் கண்காணிப்பதற்காக செயல்படும் வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பொறியாளராகப் பணியாற்றி வரும் பன்னீர்செல்வம் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதாக புகார் வந்ததையொட்டி  13.10.2020 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.3.25 கோடி ரொக்கம், 3.6 கிலோ தங்க நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.100 கோடி மதிப்பிலான 90 அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. ஒரு சாதாரண பொறியாளராக உள்ளவர் இவ்வளவு சொத்துக்களை எப்படி சேர்க்க முடிந்தது?

மல்லாடி, திருமலை கெமிகல்ஸ், அல்ட்ரா மரைன் உள்ளிட்ட கொடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் 16 சிவப்பு வகை ஆலைகள் (red catagory industries), 176 ஆரஞ்சு மற்றும் பச்சை வகை ஆலைகள் இராணிப்பேட்டையில் செயல்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் விதிகளை இந்த ஆலைகள் முறையாக கடைபிடிக்கின்றனவா என்பதை சோதித்தறிந்து அதைக் கட்டுப்படுத்துகின்ற வேலைகளை வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்தான் மேற்கொண்டு வருகின்றனர். 

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகளை திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம் புளியங்கண்ணு ஏரிக்குள் திறந்துவிட்டதையொட்டி பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டது. அதன் பிறகு திருமலை கெமிக்கல்ஸ் உள்ளிட்ட ஆலைகளில் பெங்களூரு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு ரூ.6.88 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது. 

வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விட்டு  இங்குள்ள ஆலை முதலாளிகள் தொடர்ந்து நச்சுக் கழிவுகளை வெளியேற்றி வருவதனால்தான் உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இராணிப்பேட்டையும் இடம் பிடித்துள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல ஆடு மாடுகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் இனி இராணிப்பேட்டையில் வாழ முடியாது என்ற அளவுக்கு நமது மண்ணும் நீரும் காற்றும் மாசடைந்து விட்டது. இந்த சீர்கேட்டுக்கு காரணமானவர்கள் ஆலை முதலாளிகள் மட்டுமல்ல அவர்களுக்கு துணை போகும் பன்னீர்செல்வம் போன்ற அதிகாரிகளும்தான்.

எனவே, சுற்றுச்சூழலை நாசமாக்கிய ஆலைகள் அனைத்தையும் உடனடியாக இழுத்து மூட வேண்டும்.  பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் முறைகேடுகளை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வாலாஜா மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காட்பாடியில் அமைந்துள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் 20.10.2020 அன்று காலை 10.30 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வாலாஜா மேற்கு ஒன்றியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் புளியங்காண்ணு டி.ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் இழுத்து மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


போராட்டக் களத்திலிருந்து

பொன்.சேகர், வழக்குரைஞர்



Wednesday, October 14, 2020

வாழத் தகுதியற்ற இடத்தில் இராணிப்பேட்டை: யார் காரணம்?

கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்கிற பட்டிமன்றம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இலஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

இராணிப்பேட்டை நகரம் உலகச் சுற்றுச்சூழல் சீர்கேட்டில் பத்தாவது இடத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. 


இவை எல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளை அல்ல. பல்வேறு ஊடகங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட செய்திகள் மேற்கண்ட குற்றச்சாட்டுகளை உறுதிசெய்கின்றன. நல்லவற்றில் நாம் முதலிடத்தைப் பிடிக்க முடியாதா என்கிற ஏக்கம் மட்டும்தான் நம்மிடம் மிஞ்சியிருக்கிறது. 

தவறுகளுக்கு எதிரான விடாப்பிடியான போராட்டத்தை நடத்தும் போது மட்டுமே குறைந்த பட்சம் நல்லவற்றின் பட்டியலில் நாம் ஓர் இடத்தையாவது பெற முடியும். தற்காலிக வெற்றி என்றாலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரானப் போராட்டத்தில் தூத்துக்குடி மக்கள் இதை நிலைநாட்டி இருக்கிறார்கள். 

போராட வேண்டும் என்றால் தரவுகள் வேண்டும். தரவுகள் இருந்தாலும் மக்களை நெஞ்சுரம் மிக்கவர்களாக மாற்றுகின்ற ஆற்றலுள்ள அமைப்புகளும், விலை போகாத தலைவர்களும் வேண்டும். அவர்களை மக்கள்தான் அடையாளம் காண வேண்டும்.

வேலூர் மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர்,  இலஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய செய்தி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இராணிப்பேட்டையில் செயல்படும் நூற்றுக்கணக்கான ஆலைகளின் சுற்றுச்சூழலை மதிப்பீடு செய்து, சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பொறுப்பு வேலூர் மண்டல அதிகாரியிடம்தான் இருக்கிறது. இராணிப்பேட்டை ஆலைகளின் சுற்றுச்சூழல் குறித்து இந்தத் தொடரில் சற்று விரிவாக எழுதவிருக்கிறேன். 

வேலூர் சுற்றுச்சூழல் அதிகாரியின் லஞ்ச ஊழல் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் கீழ்கண்ட இணைப்புகளில் உள்ளன.

1. விகடனில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.vikatan.com/amp/story/news%252Fcrime%252Fvellore-government-official-arrested-over-bribery&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjACegQIChAB&usg=AOvVaw2JMDVnUY1zqAVHgd0Xgae3&ampcf=1

2.தினமணியில்-
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.dinamani.com/tamilnadu/2020/oct/14/environmental-associate-chief-engineer-house-rs-33-lakh-confiscated-3484791.amp&ved=2ahUKEwif__md7bXsAhXryzgGHXhKDLUQFjAAegQIAxAC&usg=AOvVaw2b2VLnxtlz6tzmQiOjuE93&ampcf=1

தொடரும்...


பொன்.சேகர்
வழக்குரைஞர்


Sunday, September 27, 2020

காசு, பணம், துட்டு!

 பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி தேவையா?

"......... நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக் கொண்டு சொத்துக்களை வாங்கி,  அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்து வருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ...... சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறி விட்டது. .....  'நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்கள் நடத்துவது நல்லது அல்ல' என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது.

நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்தில் இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும்  அந்நிதியுடன் ஊன்றப் பட்டு விடுகிறது.

பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்டக் காரியங்களையும், அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தர்ம ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள் கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தர்மகர்த்தாக்களே, அச்சொத்துக்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. 'இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது' என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்துவரும் உரிமையே இல்லை .வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத் தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து"

இதைச் சொன்னவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  இந்தக் கருத்து சரிதானா? உங்கள் கருத்து என்ன?

ஊரான்

Monday, August 10, 2020

பட்டா பெயர் மாற்றம்! சர்வேயர்கள் காட்டில் பண மழை!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஹுகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவி இந்த அகிலத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மார்ச் மாதத்திலேயே முதல் கரோனாத் தொற்று கண்டறியப்பட்ட போதும் அதைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மணியடிப்பது, விளக்கு பிடிப்பது, அப்பளம்-கோமியம்- மந்திரம் உள்ளிட்ட கோமாளித்தனமான கூத்துக்களை அரங்கேற்றினார்கள். இதனால் 30 ஆம் இடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியதுதான் மிச்சம்.  ஆனால் தொற்று தொடங்கியபோது முதலிடத்தில் இருந்த சீனா முப்பதாவது இடத்திற்கு சென்றுவிட்டது. 

ஆறாவது மாதமாக பொது முடக்கும் தொடர்வதால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் பட்டினிச்சாவுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கடும் வேதனையில் இருக்கும் மக்கள் மூச்சுக்கூட விடாமல் திணறிக் கொண்டிருக்கும் பொழுது மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். "வேளாண் விலை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்" மற்றும் " பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம்" கொண்டு வந்து சிறு-குறு விவசாயிகளை ஒட்டச் சுரண்டவும், பதுக்கல்காரர்கள் கொள்ளையடிக்கவும் வழி செய்துள்ளார்கள். "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020" என்ற திட்டத்தின் மூலம் காடு, மலைகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க முன் வந்துள்ளார்கள்.

சாத்தான் குளம் நம் கண் முன்னே நிற்கும் போதே காவல்துறையினரையே நீதிபதிகளாக்கும் வகையில் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரவிருகிறார்கள். "தேசியக் கல்விக் கொள்கை" என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை முளையிலேயேக் கிள்ளி எறிய எத்தனிக்கிறார்கள்.

நாடும், மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; தங்களின் பணப் பைகள் நிறைந்தால் போதும் என்ற வெறியோடு அரசு அதிகாரிகள் அலைகின்றனர். "இ- பாஸ்"  முறையில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை உயர் நீதிமன்றமே எள்ளி நகையாடுகிறது. 

சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும்  உரியவர்களுக்கு  முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர்களுக்குப் பணம் லஞ்சமாகக் கை மாறினல் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் நடக்கிறது. குறிப்பாக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் காட்டில் பணம் அடை மழையாகப் பொழிகிறது. பணம் தரவில்லை என்றால் பட்டா பெறுவதற்கு நில அளவை கோரி விண்ணப்பித்தால் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்.

சர்வேயர்களை நாம் நேரடியாக சந்திக்கவே முடியாது. எங்கும் புரோக்கர்களே  நிறைந்திருக்கிறார்கள். அதிலும் இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப்  பறக்கிறது. 

சர்வேயரைச் சந்திக்கச் சென்றால் நகராட்சி சர்வேயர் அலுவலகம் எப்பொழுதும் பூட்டியேக் கிடக்கிறது.

              

                    ஜெ.அசேன் உரை

தண்டோராப் போராட்டம்

லஞ்சம் வாங்கும் வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 'பிரண்ட்ஸ் ஆப் போலீசை' ஒழித்தது போல, புரோக்கர்களாக செயல்படும் 'பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை' ஒழிக்கக் கோரியும், பட்டா கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நில அளவை செய்து பட்டா வழங்கக் கோரியும் 10.08.2020, திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் வாலாசாப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக வாலாஜாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள "நீதிக்கான குரல்"  என்ற  அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் "தண்டோராப் போராட்டம்" மிக எழுச்சியோடு நடைபெற்றது.

திரு K.K.ரவி, திரு P.மதன், திரு.D.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்குரைஞர் பொன்.சேகர் அவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். சர்வேயர்களின் ஊழல் முறைகேடுகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக திரு.ஜானகிராமன் அவர்கள் நன்றி கூறினார்.

                  பொன்.சேகர் உரை

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த தண்டோரா ஒலி அரசு அதிகாரிகளின் செவிகளை எட்டியிருக்கும். 

போராட்டம் முடிந்த பிறகு பட்டா வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களையக் கோரி மாவட்ட ஆட்சியர், இராணிப்பேட்டை கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வாலாஜா வட்டாட்சியர், வாலாஜா நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. 

வாலாஜாவில் தொடங்கிய இந்த  நீதிக்கான குரல் இராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் ஓங்கி ஒலிக்கட்டும். 

செய்தித் தொகுப்பு

பொன்.சேகர்

வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் மனு


புகார் மனு

நீதிக்கான குரல்

வாலாசாப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம்

தேதி: 10.08.2020

வாலாஜாபேட்டை

பெறுநர்


உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் 


அன்புடையீர் வணக்கம்,


பொருள்: வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா அலுவலக சர்வேயர்களின் நடவடிக்கைகள் குறித்து 


தமிழகத்தின் முதல் நகராட்சியும் பழம்பெரும் நகரமுமான வாலாஜா நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அலையவிடும் வகையிலும் நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன


உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த போதும், நில அளவை செய்து பட்டா வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. சர்வேயர் அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதால் சர்வேயர்களை பொதுமக்கள் அணுக முடியாத சூழலே எப்பொழுதும் நிலவுகிறது. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே அவர்களை சந்திக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது விதிகள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு பணம் லஞ்சமாகக் கை மாறினால் மட்டுமே வேலைகள் நடைபெறுகின்றன. இல்லை என்றால் கோரிக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 

உதாரணத்திற்கு,

1. வாலாஜா நகராட்சி, அம்பேத்கர் நகர், வார்டு 2, பிளாக் 30, டவுன் சர்வே நம்பர் 2109 ல் உள்ள இடத்தை சர்வே செய்வதற்கு பாண்டியன் என்பவர் 25.02.2019  அன்றுநகராட்சி அலுவலகத்தில் ரூபாய் 270 பணம் செலுத்தி உள்ளார். (இரசீது எண் 36/ WL2/18-19/0011115). அதன்பிறகு வாலாஜா நகராட்சியில் 21.05.2020 அன்று  ரூபாய் 120 பணம் செலுத்தி உள்ளார். ( இரசீது எண் 036/WL2/1/20-21/0000060). ஒன்றறை ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனையை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

2. வாலாஜா தாலுக்கா, அம்மன ந்தாங்கல் பஞ்சாயத்து சர்வே எண் 58/2 ல் அடங்கல் மனை எண் 1 ஐ சர்வே செய்ய சுந்தர் என்பவர் மனு செய்து 23.01.2020 அன்று ரூபாய் 80 பணம் செலுத்தி உள்ளார். ஆறு மாத காலம் ஆகியும் இதுவரை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

3. வாலாஜா தாலுக்கா, வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட தேவதானம் ரோடு, ரஜிவ் காந்தி நகர், சர்வே எண் 12/7 ல் (one scheme patta) அரசு ஆவணங்களில் மாற்றங்கள் கோரி 30.11.2015 முதல் பல முறை மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட 107 பேரில் அரசு ஆவணங்களில் மாற்றங்கள் எதையும் செய்யாமலேயே ஒரு சிலருக்கு மட்டும் போலி பட்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவை சில உதாரணங்கள்தான். விதிமுறைப்படி சர்வேயர்கள் செயல்பட்டு பட்டாவை முறைப்படுத்தாததால் பல குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று அல்லல் பட்டு வரும் அவலம் தொடர்கிறது.

எனவே, இது போன்ற கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து நீதி தர்மத்தை நிலைநாட்டக் கோரி தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு 


(வாலாஜா  ஜெ.அசேன்)

நீதிக்கான குரல்

வாலாசாப்பேட்டை

முழக்கங்கள்

சர்வேயர்களின் ஊழலைக் கண்டித்து

வாலாஜாவில்

தண்டோராப் போராட்டம்

முழக்கங்கள்


பட்டா மாற்றம் செய்வதற்கு 

பகல் கொள்ளை அடிக்கிறான் 

நில அளவைத் துறையிலே

லஞ்சப் பணம் குவியுது


தமிழக அரசே தமிழக அரசே 

மாவட்ட நிர்வாகமே 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸை ஒழித்தது போல 

பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை ஒழித்திடு

இடைத்தரகர்களை ஒழித்திடு


பூட்டிக்கிடக்குது பூட்டிக்கிடக்குது

எப்போதுமே பூட்டிக்கிடக்குது 

சர்வேயர் ஆபீஸ் பூட்டிக்கிடக்குது

திறந்து வை திறந்து வை 

சர்வீஸ் ஆபீஸைத் திறந்து வை 

பொதுமக்கள் அணுகுவதற்கேற்ப

சர்வையர் ஆபீஸைத் திறந்து வை


தடுத்திடு தடுத்திடு

ரிட்டையர் ஆன அதிகாரிகள் 

பட்டா வழங்கும் வேளைகளில் 

தலையிடுவதைத் தடுத்திடு


புறம்போக்கு நிலம் என்ன

உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா

கையூட்டு கிடைத்து விட்டால் 

பட்டா செய்து கொடுப்பதற்கு?


தாலுக்கா அலுவலகமா

புரோக்கர்களின் கூடாரமா

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

வெளிப்படைத் தன்மைக்காக 

உடனடியாக நடவடிக்கை எடு


பறிபோகுது பறிபோகுது 

புறம்போக்கு நிலமெல்லாம் 

பறிபோகுது பறிபோகுது

அரசு நிலத்தை விற்பதற்கு 

சர்வேயர் என்ன வாலாஜா நவாப்பா?


நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

புறம்போக்கு நிலத்தையெல்லாம் 

சூறையாடும் சர்வேயர்கள் மீது 

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

மாவட்ட நிர்வாகமே 

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு


சுல்தானே சொத்துக்கழும்போது 

சுல்தான் குதிரை குலாப்ஜாமுனுக்கழுததாம் 

கரோனாவிலே நாம் தவிக்கும்போது 

சர்வேயர்கள் நம்மைச் சுரண்டுவது நியாயமா?


இவண்

நீதிக்கான குரல் 

வாலாசாப்பேட்டை 

இராணிப்பேட்டை மாவட்டம்

10.08.2020

ஊடகங்களில்

இந்து தமிழ் 11.08.2020


  PRD தங்கம் online TV

தொடர்புடைய பதிவுகள்




Wednesday, May 13, 2020

வர்ணங்கள் குறித்து வாட்ஸ்அப் வதந்தி!

“பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைசியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களைத் தூற்றுகிறார்களாம்.”  

வேதம் படித்த பார்ப்பனனின் முகம் பொலிவானதாம். சத்திரியனின் தோள் பிரம்ம தேவனின் தோள் போல வலிமையானதாம். வலிமையான துடை கொண்டு அமர்ந்து வாணிபம் செய்பவனாம் வைசியன். வயலில் பாடுபடும் சூத்திரனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டுமாம். இதுதான் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்திற்கான உண்மையான பொருளாம். இப்படி புதுக் கோணார் உரை எழுதி வாட்ஸ்அப்பில் உலவவிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.

மேலும் பிறப்பால் வர்ணங்கள் இல்லை என மனு தர்மம் சொல்வதாக வேறு அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் அது எந்த சுலோகத்தில் வருகிறது என்பதைச் சுட்டவில்லை.

வேதங்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பன இந்து மத நூல்களின் சாரம்தான் மனுதர்மம். இது வர்ண பேதங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூல். மனுதர்மம் இல்லையேல் வர்ணங்கள் இல்லை. வர்ணங்கள் இல்லையேல் சாதிகள் இல்லை. சாதிகள் இல்லையேல் இந்து மதமே இல்லை.

வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதற்கான ஆதாரங்கள் மனுதர்மத்தில் கொட்டிக் கிடக்கின்றன. காட்டாக சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டு பண்ணினார். (மனு 1-31)
But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. (Manu 1-31)

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத்தைக் காப்பாற்றுதற்காக தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று முண்டான பிராமண சத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
But in order to protect this universe He, the most resplendent one, assigned separate (duties and) occupations to those who sprang from his mouth, arms, thighs, and feet. (Manu 1-87)

வர்ணம் பிறப்பின் அடிப்படையில்தான் திர்மானிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் வர்ண சாதி அமைப்பு குறித்து பல்வேறு அறிஞர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். குறிப்பாக அவரது ஆய்வு நூல் தொகுப்பு (தமிழில்) 6 முதல் 10 வரை வர்ண சாதி அமைப்பு பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மனு மட்டுமல்லாமல் யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் பார்ப்பன இந்து மத சட்ட நூல்களும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம் குறித்துப் பேசுகின்றன. “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்”(4-13) என்கிறான் கிருஷ்ணன் கீதையிலே. நான்கு வர்ணங்களும் குணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அவை பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என சங்கிகளின் தலைமைப் பீடமான நாக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பகவத் கீதை தெளிவு படுத்துகிறது.
ஆனால் தற்பொழுது வெளியிடப்படும் பார்ப்பன இந்து மத நுல்களில் மேற்கண்டவை எல்லாம் திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோதான் வெளியிடப்படுகின்றன. அத்தகையதோர் முயற்சிதான் கீழ்கண்ட வாட்ஸ்அப் பதிவும்.

எனவே பார்ப்பன இந்து மதத்தின் மூல நூல்களைத் தேடிப் படித்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.

ஊரான்
*****
பார்ப்பனர்கள் உலவவிட்ட வாட்ஸ்அப் செய்தி கீழே.


#ஒரு_கதை_ரொம்ப நாளாக_ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது

பிராமணன்  முகத்தில் இருந்து பிறந்தான்
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் 

.....இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்). 
பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைஷியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்

-இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” 
- (ரிக் வேதம் 10-90-12)

ஸ்லோகத்தின் பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும்

அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை 
மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). 

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனாபிறப்பால்;
ஜாயதேபிறந்த அனைவரும்
சூத்ரசூத்திரரே
கர்மணாதான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜஇருபிறப்பாளனாக
ஜாயதேபிறப்பாளன் ஆகிறான்.