Wednesday, May 13, 2020

வர்ணங்கள் குறித்து வாட்ஸ்அப் வதந்தி!

“பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைசியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களைத் தூற்றுகிறார்களாம்.”  

வேதம் படித்த பார்ப்பனனின் முகம் பொலிவானதாம். சத்திரியனின் தோள் பிரம்ம தேவனின் தோள் போல வலிமையானதாம். வலிமையான துடை கொண்டு அமர்ந்து வாணிபம் செய்பவனாம் வைசியன். வயலில் பாடுபடும் சூத்திரனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டுமாம். இதுதான் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்திற்கான உண்மையான பொருளாம். இப்படி புதுக் கோணார் உரை எழுதி வாட்ஸ்அப்பில் உலவவிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.

மேலும் பிறப்பால் வர்ணங்கள் இல்லை என மனு தர்மம் சொல்வதாக வேறு அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் அது எந்த சுலோகத்தில் வருகிறது என்பதைச் சுட்டவில்லை.

வேதங்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பன இந்து மத நூல்களின் சாரம்தான் மனுதர்மம். இது வர்ண பேதங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூல். மனுதர்மம் இல்லையேல் வர்ணங்கள் இல்லை. வர்ணங்கள் இல்லையேல் சாதிகள் இல்லை. சாதிகள் இல்லையேல் இந்து மதமே இல்லை.

வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதற்கான ஆதாரங்கள் மனுதர்மத்தில் கொட்டிக் கிடக்கின்றன. காட்டாக சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டு பண்ணினார். (மனு 1-31)
But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. (Manu 1-31)

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத்தைக் காப்பாற்றுதற்காக தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று முண்டான பிராமண சத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
But in order to protect this universe He, the most resplendent one, assigned separate (duties and) occupations to those who sprang from his mouth, arms, thighs, and feet. (Manu 1-87)

வர்ணம் பிறப்பின் அடிப்படையில்தான் திர்மானிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் வர்ண சாதி அமைப்பு குறித்து பல்வேறு அறிஞர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். குறிப்பாக அவரது ஆய்வு நூல் தொகுப்பு (தமிழில்) 6 முதல் 10 வரை வர்ண சாதி அமைப்பு பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மனு மட்டுமல்லாமல் யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் பார்ப்பன இந்து மத சட்ட நூல்களும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம் குறித்துப் பேசுகின்றன. “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்”(4-13) என்கிறான் கிருஷ்ணன் கீதையிலே. நான்கு வர்ணங்களும் குணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அவை பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என சங்கிகளின் தலைமைப் பீடமான நாக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பகவத் கீதை தெளிவு படுத்துகிறது.
ஆனால் தற்பொழுது வெளியிடப்படும் பார்ப்பன இந்து மத நுல்களில் மேற்கண்டவை எல்லாம் திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோதான் வெளியிடப்படுகின்றன. அத்தகையதோர் முயற்சிதான் கீழ்கண்ட வாட்ஸ்அப் பதிவும்.

எனவே பார்ப்பன இந்து மதத்தின் மூல நூல்களைத் தேடிப் படித்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.

ஊரான்
*****
பார்ப்பனர்கள் உலவவிட்ட வாட்ஸ்அப் செய்தி கீழே.


#ஒரு_கதை_ரொம்ப நாளாக_ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது

பிராமணன்  முகத்தில் இருந்து பிறந்தான்
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் 

.....இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்). 
பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைஷியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்

-இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” 
- (ரிக் வேதம் 10-90-12)

ஸ்லோகத்தின் பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும்

அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை 
மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). 

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனாபிறப்பால்;
ஜாயதேபிறந்த அனைவரும்
சூத்ரசூத்திரரே
கர்மணாதான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜஇருபிறப்பாளனாக
ஜாயதேபிறப்பாளன் ஆகிறான்.

Tuesday, May 12, 2020

அருளற்ற ஆட்சியாளர்கள்! தொடரும் துன்ப துயரங்கள்…..

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு நிலையில் உள்ள சாம்பல் துகல்களை ஈர்த்து வெளியேற்றுவதற்காக எலக்ட்ரோ ஸ்டாடிக் பிரசிபிடேட்டர் (ESP) என்ற அமைப்பு செயல்படுகிறது. உயர் மின் அழுத்தத்தில் சாம்பல் துகல்கள் எதிர்மறை அயனிகளாக மாற்றப்பட்டு நேர்மறை தகடுகளில் ஈர்க்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இத்தகைய நிகழ்வுக்குப் பெயர் கரோனா விளைவு. (Corona effect). சாம்பல் துகல்கள் அயனிகளாக மாற்றப்படும் போது சூரியனைப் போன்று தீப்பிழம்பாய் காட்சியளிக்கும். இதில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் சாம்பலாகத்தான் வெளியே வரமுடியும். மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய ஒரு தொழில் நுட்பம் இந்தக் கரோனா விளைவு.

இதற்குச் சற்றும் சளைத்ததல்ல இன்று உலகையே அச்சுறுத்தும் கரோனா நோய்க் கிருமி. கரோனாவைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் அறிவித்த ஊரடங்கால் மக்கள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது கருணையற்ற இந்த ஆட்சியாளர்கள் கரோனாவைவிடக் கொடியோர் அல்லவோ!

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

“மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ; அத்தகையதே அரசின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்கும் துன்பமும் ஆகும்” என்கிறான் வள்ளுவன்.

துன்ப – துயரங்கள் காட்சிகளாய்…..































ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

கரோனா ஊழல் முறைகேடு! வாலாசாப்பேட்டையில் போராட்டம்!

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!

Sunday, May 3, 2020

கரோனா ஊழல் முறைகேடு! வாலாசாப்பேட்டையில் போராட்டம்!

கரோனா காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு இராணிப்பேட்டை மாவட்டம்வாலாசாபேட்டை நகரப் பகுதியில் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிப் பிரமுகர்களும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தனக்குப் புகார்கள் வருவதாகக் கூறி, அவற்றைக் கண்டித்து இன்று 03.05.2020 ஞாயிறு காலை 9 மணிக்கு சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ  வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் அறிவித்திருந்தார். இதுகுறித்த முகநூல் பதிவு ஒன்றை நேற்று நான் வெளியிட்டிருந்தேன். இன்று காலை அவரது வீட்டருகே வாலாசாப்பேட்டை நகர காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் தலைமையில் சில காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்

நகராட்சி நிர்வாகமோ அல்லது மாவட்ட நிர்வாகமோ அசேன் அவர்களின் கோரிக்கை குறித்து பேசுவதற்குப் பதிலாக போராட்டம் துவங்குவதற்கு முன்பாகவே அவரைக் கைது செய்வதில் குறியாக இருந்தனர். அப்பொழுது நானும் அங்கு இருந்தேன். அசேன் அவர்கள் கைது செய்யப்படும் போது புகைப்படங்கள் எடுப்பதற்காகத் தயாராக இருந்தேன். அதற்கு முன்னர் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் எடுத்திருந்தேன். உடனே அங்கிருந்த வாலாசா நகரக் காவல் நிலைய ஆய்வாளர் கடும் கோபத்தோடு என்னை அணுகி, நான் வழக்குரைஞர் என்று கூறியும் என்னுடையக் கைப்பேசியை வலுக்கட்டாயமாகப் பறித்து புகைப்படத்தை அழித்துவிட்டார். இந்தக் காட்சியை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளிப் பதிவில் காணமுடியும். ஒரு கிரிமினலை நடத்துவது போல எனது வழக்குரைஞர் அடையாள அட்டையையும் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதை வைத்துக் கொண்டு அவர்களால் நாக்குகூட வழிக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். நான் அங்கு இருக்கவே கூடாது என்று சொல்லி துணை ஆய்வாளர் என்னை வலுக்கட்டாயமாக 100 மீட்டர் தூரம் வரை தள்ளிக் கொண்டே வந்து என்னை வெளியேற்ற முனைந்தார். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பதுபோல இந்த போராட்டத்தைப் பலரும் அறியும் வண்ணம் அவர்களே செய்து விட்டனர். இது அவர்களின் வழமையான நடைமுறை என்றாலும் அதற்காக அவர்களுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
போராட்டத்தைத் துவக்குவதற்காக அசேன் அவர்கள் தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்தார். அதுவரை கைது செய்வதற்குத் தயாராக இருந்த காவல்துறையினர் திடீரென, அவரது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறி போராட்டத்தைக் கைவிடுமாறு கோரினர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அசேன் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டார். தனது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தைத் தொடருவேன் என்ற நிபந்தனையோடு அசேன் அவர்களின் இன்றையப் போராட்டம் முடிவுக்கு வந்ததுஅதன் பிறகு ஊடகங்களுக்கு அவர் பேட்டி அளித்தார். போராட்டம் குறித்து அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தி.

“இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகராட்சிப் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வாலாஜா நகரத்தில் உள்ள காய்கறி, மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் முடி உள்ளன. இதனால் வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்னாள் காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ வுமான வாலாஜா ஜெ.அசேன், வாலாஜா நகரத்தில் கரோனா தொற்று காரணமாக தன்னார்வகளுக்கு டி-ஷர்ட் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும்கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தின் விலை 750 ரூபாய் தான், ஆனால் நகராட்சியில் அதிக விலைக்கு வாங்கியதாகவும், கறிக் கடைகள் திறப்பதிலும்  முறைகேடு இருப்பதாகவும் கூறி முன்னாள் எம்எல்ஏ அசேன் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக துண்டுப் பிரசுரத்தை நேற்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து இன்று வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் முன்னாள் எம்எல்ஏ அசேன் வீட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆவன செய்வோம் என்று உறுதி அளித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரினார்கள். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு உண்ணாவிரதம் இருப்பதை அசேன் கைவிட்டார். மேலும் துறை ரீதியான நடவடிக்கை  எடுக்காவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்

வாலாசா நகராட்சியில் நடப்பது தமிழகத்தின் ஒருவகை மாதிரிதான். ஊழல் புரையோடிப் போன அதிகாரிகள், ஆளும் கட்சி அரசியல்வாதிகள் குறித்து நான் நேற்று ஊரான் வலைப்பூவில் எழுதிய "நாய் வாலை நிமிர்த்த முடியுமா?" என்ற பதிவுதான் என் நினைவுக்கு வருகிறது.

செய்தித் தொகுப்பு
பொன்.சேகர், வழக்குரைஞர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

வாலாசாப்பேட்டை

வாலாஜா அசேன் அவர்களின் கவிதை:
தொடர்புடைய பதிவுகள்

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?