Sunday, September 27, 2020

காசு, பணம், துட்டு!

 பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி தேவையா?

"......... நிரந்தரமான நிதியைத் திரட்டி, அந்த நிதியைக் கொண்டு சொத்துக்களை வாங்கி,  அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்து வருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ...... சொத்தை நிர்வகிப்பதற்குச் செல்வாக்கு உள்ளவர்களைக் கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறி விட்டது. .....  'நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்கள் நடத்துவது நல்லது அல்ல' என்பதே இப்போது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது.

நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்தில் இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும்  அந்நிதியுடன் ஊன்றப் பட்டு விடுகிறது.

பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்பிராயத்திற்கு மாறுபட்டக் காரியங்களையும், அடிக்கடி செய்கின்றன. நம் நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தர்ம ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள் கணக்குக் காட்டுவது என்பதையே விட்டு விட்டன. தர்மகர்த்தாக்களே, அச்சொத்துக்களுக்கு பொறுப்பாளிகள் அல்ல. 'இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப் பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது' என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்துவரும் உரிமையே இல்லை .வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத் தொகை, அதன் செல்வாக்குக்கும், அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து"

இதைச் சொன்னவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  இந்தக் கருத்து சரிதானா? உங்கள் கருத்து என்ன?

ஊரான்