Friday, April 16, 2021

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

மனிதக் காதலை திசை மாற்றிய பக்தி இயக்கம்

சனாதனம் என்றால் பழைமையானது; சனாதன தர்மம் என்றால் பழைமையான நீதி நெறி என்று பொருள். ‘நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை; சமூகத்திற்குப் பொருத்தமான நீதி நெறிகளை அன்றே வகுத்து வழிகாட்டி உள்ளார்கள். பழைய நீதி நெறிகளை கடைபிடிக்கத் தவறியததால்தான் நாட்டில் கேடுகள் பெருகிவிட்டன. எனவே சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதன் மூலம்தான் நற்சமூகத்தை மீட்டெடுக்க முடியும்” என்பதுதான் சனாதன தர்மத்தை உயர்ந்ததாகக் கருதுவோரின் கருத்து. பார்ப்பனர்கள் மட்டுமல்ல பார்ப்பனியத்துக்கு பலியாகிப் போன பலரின் கருத்தும் இதுதான்.

சங்க இலக்கியங்களில் கூறப்பட்ட நெறிமுறைகளையே தமிழர்கள் தங்களது மரபாகப் பார்க்கின்றனர். சங்க இலக்கியங்கள் சனாதனக் கருத்துக்களை வலியுறுத்தவில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்று. அப்படியானால் சனாதன தர்மத்தை எங்கிருந்து, எப்படிப் புரிந்து கொள்வது? பார்ப்பன இந்து மத நூல்களான, சுருதிகள் என்று சொல்லக்கூடிய ரிக்-யஜூர்-சாம-அதர்வன உள்ளிட்ட 4 வேதங்களிலும், ஸ்மிருதிகள் என்ற சொல்லக்கூடிய மனு-யாக்ஞவல்கியர்-அங்கிரஸ்-ஆபஸ்தம்பர் உள்ளிட்ட 18 தர்ம சாஸ்திரங்களிலும், நாரத-பாகவத-கருட-லிங்க-நாரத-சிவ-ஸ்கந்த-விஷ்ணு உள்ளிட்ட 18 புராணங்களிலும். இதிகாசங்கள் என்று அறியப்படுகிற இராமாயணம், மகாபாரதம் மற்றும் பகவத் கீதையிலும் சனாதன தர்மம் குறித்த விவரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் பகவத் கீதை ஸ்மிருதி வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்து மதத்தைச் சார்ந்த ஒருவன் எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எப்படிச் செய்யக் கூடாது என்பதை ஸ்மிருதிகள் வலியுறுத்துகின்றன. இதில் முதன்மையானது மனுஸ்மிருதி. அதனால்தான் இது சட்டமாகவும் நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட நூல்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்ததால் பார்ப்பனர்கள் மட்டுமே அவற்றை விரித்துக் கூறும் ஆற்றல் பெற்றவர்களாக இருந்ததால் அவர்கள் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள்.

மனுவின் காலம் கி.பி 185 க்குப் பிறகு என அறியப்பட்டாலும் சமணம் செழித்தோங்கிய களப்பிரர் ஆட்சி (கி.பி 250-575) வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில்தான் தமிழர் வாழ்வில் மனு ஸ்மிருதி கோலோச்சத் தொடங்கி உள்ளது. சண்டாளர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டார்கள் என்கிற பாஹியான் (கி.பி 400) கூற்றிலிருந்தும், தோட்டிகள் நகருக்கு வெளியே வாழ்ந்தார்கள் என்கிற யுவான் சுவாங் (கி.பி 620) கூற்றிலிருந்தும், அறிய முடிகிறது. இந்தக் காலகட்டத்தில்தான் (கி.பி 400-600) தீண்டாமையும் புகுத்தப்பட்டிருக்கிறது.

களப்பிரர் காலம்வரை படைக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை அடிப்படையாகக் கொண்டவை. பக்தியினால் முக்தி எளிதாகும்; இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் எனக் கூறி சமணத்தையும் பௌத்தத்தையும் அழிப்பதற்காக சைவமும் வைணவமும் தோற்றுவித்த பக்தி இயக்கம், மனிதனுக்கும் மனிதனுக்குமான காதலை, தெய்வத்துக்கும் மனிதனுக்குமானக் காதலாக திசை மாற்றியது. கி.பி ஆறாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் இல்லாதிருந்த விநாயகர் வணக்கம் பிற்கால நூல்களிலேயே காணப்படுகிறது. சனாதன தர்மம் தமிழகத்தில் ஆழமாகக் கால் பதிக்க பக்தி இயக்கமும் ஒரு காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல. பின்னாளில் சைவத்துக்கும் வைணவத்துக்குமான மோதல் என்பது தனிக்கதை.

சனாதன தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்எஸ்-பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் கால்பதிக்க முயலும் இத்தருணத்தில் சனாதன தர்மம் குறித்தப் புரிதல் காலத்தின் கட்டாயம் என்பதால் அது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Thursday, April 15, 2021

இழி குணம்! 11-14

 "இழி குணம்" என்ற தலைப்பில் "எதிர்த்து நில்" வலைப்பூவில் எழுதி வந்த தொடர் கட்டுரையின் 11 முதல் 14 வரையிலான பகுதிகளின் இணைப்பைக்  கீழே கொடுத்துள்ளேன்.

இழி குணம்: போராளிகள் தடம் புரளும் தருணங்கள்!.....12

இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 
இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

Monday, April 12, 2021

வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இனி தனியாரிடம்! - இறுதிப் பகுதி

‘ஐடிஐ’ முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த எண்ணற்றோர் ‘பெல்’ போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேர்ந்த காலம் ஒன்றிருந்தது. பத்தாவதோ, பட்டப் படிப்போ அது எந்தப் படிப்பாக இருந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்தால் என்றைக்காவது ஒரு நாள் அரசு வேலை நிச்சயம் என்கிற நினைப்பு நேற்றுவரை இருந்தது. வேலை கிடைக்கும் என்ற நினைப்பே இனி வரக்கூடாது என்பதால்தான், தற்போதுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களையே (Employment Exchanges) வேலைவாய்ப்பு மையங்களாக (Career Centre) பெயர் மாற்றம் செய்து, தனியாரிடம் ஒப்படைக்கச் சட்டம் கொண்டு வந்துள்ளார் மோடி. இனி இத்தகைய மையங்கள் அடிமை வேலைக்கு ஆள்பிடித்துக் கொடுக்கும் கங்காணி மையங்களாக மட்டுமே செயல்படும்.

”The appropriate Government may also enter into an agreement with any institution, local authority, local body or private body for running a career centre”. Rule 57(2)-Code on Social Security (Central) Rules 2020.


சில ஆபத்தானப் பணிகளிலும், இரவு நேரங்களிலும் பெண்களைப் பணியில் அமர்த்தக் கூடாது; கேந்திரமான பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது என்கிற தடைகளை நீக்கி, வரைமுறையற்ற உழைப்புச் சுரண்டலுக்கு கதவைத் திறந்துவிட்டுள்ளது மோடி அரசு. பகல் நேரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் இனி இரவு நேரங்களில் யார் பாதுகாக்கப் போகிறார்கள்? ஒருவன் ‘விஎம்சி மெஷினிஸ்டே’ ஆனாலும் வாழ்க்கை முழுக்க இனி அவன் ஒப்பந்தத் தொழிலாளியாய் அற்பக்கூலிக்கு காலத்தை ஓட்ட வேண்டியதுதான். (Sec 43-58: Occupational Safety, Health and working conditions code – பணியிடப் பாகுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு)


ஒரு ஆலை சட்டப்படி இயங்குகிறதா இல்லையா என்பதை சோதித்தறிய இனி தொழிலக ஆய்வாளர்கள் (factory inspectors) வரமாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘ஆன் லைனிலேயே’ ஆலைகளை ஆய்வு செய்து, அவற்றில் ஏதேனும் குறை கண்டால் அவற்றை எப்படி சரி செய்வது என்கிற ஆலோசனையை வழங்கி முதலாளிகளின் வேலைகைளை எளிதாக்கும் (facilitator) சேவகர்களாக இனி அரசு அதிகாரிகள் செயல்படுவார்கள். ஆலைகளில் குறைந்தபட்ச ஏற்பாடுகளை மட்டும் செய்து கொண்டு கம்யூட்டரில் எல்லாம் சரியாக இருப்பதாகக் காட்டுவார்கள். இனி பாதுகாப்பற்ற சூழலில் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. (Sec 34-42: Occupational Safety, Health and working conditions code – பணியிடப் பாகுகாப்பு, சுகாதாரம் & பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு).


பத்து பேருக்கும் கீழ் வேலை செய்யக்கூடிய 4.67 கோடி நிறுவனங்கள் மற்றும் இருபது பேருக்கும் கீழ் வேலை செய்யக்கூடிய 50 லட்சம் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய 13.1 கோடி தொழிலாளர்களுக்கும், சுய வேலையில் ஈடுபடும் 9.4 கோடி தொழிலாளர்களுக்கும் புதிய சட்டத் தொகுப்புகள் எதுவும் பொருந்தாது. 85% தொழிலாளர்களுக்குப் பொருந்தாது. 


ஆண்டுக்கு 40000 மரணங்களை ஏற்படுத்தும் 90% ஆலைகள் புதிய சட்ட வரையறையின் பாதுகாப்பு வலையத்திற்குள் வரவில்லை. தொழிலாளர்களின் சுகாதாரம், பாதுகாப்பு குறித்து இனி நிறுவனங்களுக்குப் பொறுப்பில்லை. எட்டு மணி நேர வேலை என்பதெல்லாம் இனி கிடையாது. எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் தொழிலாளர்களின் உழைப்பை இனி முதலாளிகளால் சுரண்ட முடியும். பதினெட்டாம் நூற்றாண்டை நோக்கித் தொழிலாளர் வர்க்கத்தை பின்னுக்கு இழுத்துச் செல்கிறது மோடி கும்பல்.

 

புதிய சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பாகவே நிரந்தத் தன்மை உள்ள வேலைகள் 74% லிருந்து 64% வீழ்ச்சி கண்டுள்ளது. ஒப்பந்தத் தொழிலாளார் முறை 26% லிருந்து 36% அதிகரித்துள்ளது. ஏற்கனவே 54% தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு கிடையாது. 52% தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடையாது. இத்தகைய சூழலில் ஏற்கனவே இருக்கின்ற சொற்ப உரிமைகளையும் பறிக்கும் புதிய சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வருமேயானால், இந்தியத் தொழிலாளி வர்க்கம் கை கட்டி சேவகம் செய்யும் அடிமைகளாக, ஒரு வேலை சோற்றுக்காக முதலாளிகளிடம் மண்டியிட்டு கையேந்தும் அவல நிலைதான் வரும்.

வேளாண் சட்டத்திருத்தங்களின் ஆபத்துகளைப் புரிந்து கொண்ட விவசாயிகள் தங்களது உயிரைக் கொடுத்து டெல்லியில் போராடி வருகின்றனர். விவசாயிகள் விழித்துக் கொண்டார்கள். அவர்களது போராட்டம் ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமல்கூட போகலாம். ஆனால் வஞ்சிக்கப்படுகிற மக்கள் எப்படிப் போராட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேளாண் சட்டங்களைவிடக் கொடிய தொழிலாளர்களுக்கான புதிய சட்டத் தொகுப்புகளின் ஆபத்தை இந்தியத் தொழிலாளி வர்க்கம் புரிந்து கொண்டு களமாடவில்லை என்றால் எதிர்காலம் உங்களை மன்னிக்காது.  


நன்றி!


முற்றும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு மூடுவிழா! தொடர்-6
பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5
மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4
கொல்லைப்புற வழியாக புகுத்தப்பட்ட நான்கு சட்டத் தொகுப்புகள்! தொடர்-3
அரசியல் அமைப்புச் சட்டத்தில் தொழிலாளர் உரிமைகள்! தொடர்-2
தொழிலாளர்களுக்கான நான்கு சட்டத் தொகுப்புகள்: யாருக்குச் சாதகம்? தொடர்-1

Thursday, April 8, 2021

தொழிலாளர் நீதிமன்றங்களுக்கு மூடுவிழா! தொடர்-6

தொழிலகத்தில் ஏற்படும் தொழிற்தகராறுகளைைத் தீர்த்துக் கொள்வதற்கு பழைய சட்டப்படி சமரச அதிகாரியிடம் (conciliation) முறையிடலாம். அதன் பிறகு தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகலாம். ஆனால் தற்போது, சமரச அதிகாரியிடம் முறையிடுவதற்கு முன்பாக நடுவர்களை (arbitrator) ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை புதிதாகப் புகுத்தி உள்ளனர். தொழிற்தகராறு ஒன்றில் ஒரு முடிவைப் பெறுவதற்குப் பழைய நடைமுறையிலேயே தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது தொழிற்தகராறை மேலும் இழுத்தப்படிப்பதற்கான ஏற்பாடாக இந்த நடுவர் முறை நுழைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகளுக்குத்தான் சாதகம் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? (பிரிவு 42: தொழிலுறவு சட்டத் தொகுப்பு)

பழைய நடைமுறையில், சமரச அதிகாரியிடம் நியாயம் கிடைக்கவில்லை என்றால் அருகில் உள்ள மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களில் முறையிட முடியும். இனி மாவட்டங்களில் தொழிலாளர் நீதிமன்றங்கள் இருக்காது. அதற்கு மாறாக மாநில அளவில் ஓரிரு தீர்ப்பாயங்கள் (tribunal) மட்டுமே அமைக்கப்படும். அதே போல தேசிய அளவிலும் ஓரிரு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும். மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் இனி மாநிலத் தீர்ப்பாயங்களுக்கு மாற்றப்படும். இதன் மூலம் மாவட்டங்களிலேயே உடனடியாக அணுகக் கூடிய வாய்ப்பைப் பறித்து விட்டது மோடி அரசு (பிரிவு 43-61: தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

நடுவர் முறையைப் புகுத்தியது மற்றும் மாவட்டத் தொழிலாளர் நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு தீர்ப்பாயங்களை ஏற்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளியை தொலை தூரத்திற்கு அலைய விடுவதோடு நீதியைத் தாமதப்படுத்தி அவனை நடைபிணமாக்குவதற்குத்தான் வழிவகுக்கும். மொத்தத்தில் "சொன்னதைக் கேட்டுக் கொண்டு அடிமை போல வேலை செய்யப் பழகிக் கொள்!” என்பதை சொல்லாமலேயே உணர்த்துகிறார் மோடி.


வேலை நிறுத்தம் மற்றும் ஆலை மூடல்

 

குடி நீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் எத்தனை முறை மனு கொடுத்தாலும் மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினால்தான் அதிகார வர்க்கம் செவி மடுக்கிறது. அதுபோலத்தான் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டமும்.

 

வேலை நிறுத்தம் மற்றும் ஆலை மூடல் எதுவாக இருந்தாலும் 60 நாள் முன்னறிவிப்பின்றி, 14 நாட்களுக்கு முன்பாக, சமரசம் நிலுவையில் உள்ள போது செய்யக்கூடாது என பொதுவாகச் சொல்லப்பட்டாலும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கின்ற வகையிலேயே சட்டத் தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரும் அசம்பாவிதம் நடந்து விட்டது, நிர்வாகம் அதை அலட்சியப்படுத்துகிறது என்கிற சூழலில் திடீர் வேலைநிறுத்தம் மூலம்தான் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியும். ஆனால் இனிமேல் இத்தகைய திடீர் வேலை நிறுத்தங்கள் (flash strike) எதையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேலும் வேலை நிறுத்தம் செய்வதற்கு 60 நாள் முன்னறிவிப்புத் தேவை என்பதே வேலை நிறுத்தப் போராட்டமே செய்யக் கூடாது என்பதுதான். (பிரிவு: 62-64, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 


நீதியை எங்கே தேட?


சட்டத்தை  மீறிச் செயல்படும் ஒரு நிர்வாகத்தின் மீது பழைய சட்டங்களின்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களில்கூட இனி  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. மாறாக சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளே விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்களாம். (பிரிவு: 85-89, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 


ஆளும்வர்க்கத்தின் எடுபிடிகளான அரசுஅதிகாரிகளின் ஆசியோடுதான் எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீருகிறார்கள். ஆசி கொடுத்த அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகளே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நீதி கிடைக்கும்? தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் நான்கு புதிய சட்டத் தொகுப்புகளிலும் நீதி தேவதையின் காதுகள் செவிடாக்கப்பட்டுவிட்டன.


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்:

 

Tuesday, April 6, 2021

பறிபோகும் தொழிற்சங்க-கூட்டுபேர உரிமைகள்! தொடர்-5

ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஏழு தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டு ஒரு தொழிற்சங்கத்தை அமைக்க விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்களில் குறைந்தது 10% பேர் அல்லது 100 பேர்-இதில் எது குறைவோ அந்த அளவுக்கு-அந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே அந்தத் தொழிற்சங்கம் பதிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக 500 தொழிலாளர்கள் எனில் 50 பேரும் அல்லது 1000 தொழிலாளர்கள் எனில் 100 பேரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஒருவேளை தொடக்கத்தில் மேற்கண்ட நிபந்தனைகளின்படி ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அச்சங்கம் தொடர்ந்து அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே தொழிற்சங்கப் பதிவை தக்க வைத்துக் கொள்ள முடியும். (விதி 6, தொழிலுறவு சட்டத் தொகுப்பு). 

ஒரு நிறுவனத்தில் ஒரு சங்கம் மட்டுமே இருந்தால், அந்தச் சங்கம் கூட்டுபேர உரிமை பெற முடியும். ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் இருக்குமேயானால், எந்தச் சங்கம் 51 சதவீதத்திற்கு மேல் தொழிலாளர்களின் ஆதரவு பெற்றுள்ளதோ, அச்சங்கம் மட்டுமே நிர்வாகத்துடன் கூட்டுபேர உரிமையில் பங்கெடுக்க முடியும். எந்த ஒரு சங்கமும் 51 சதவீதத்திற்கு மேல் ஆதரவு பெறவில்லை என்றால் 20 சதவீத ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் கூட்டபேர கவுன்சில் ஒன்றை நிர்வாகமே ஏற்படுத்தும். (விதி 14, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).


அரசியல் சட்டம் வழங்கியுள்ள சங்கமாகச் சேரும் உரிமையை நேரடியாக பறிப்பதோடு, அங்கீகாரம் பெற்ற ஒரு சங்கம் நிர்வாகத்தின் எடுபிடிச் சங்கமாக செயல்படும் சூழலில், புதியதோர் மாற்றுச் சங்கம் அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அடைத்து விடுகின்றன மேற்கண்ட பிரிவுகள்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தொழிலாளர்களைப் பழிவாங்குவதில் எதேச்சதிகாரமாக செயல்படும் நிர்வாகங்களை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊழியர்களுக்கான நிலை ஆணைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். 100 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு நிலை ஆணைகள் சட்டம் பொருந்தும் என்றிருந்த பழைய சட்டத்தைக் குப்பைத் தோட்டியில் வீசிவிட்டு இனி 300 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே நிலை ஆணைகள் பொருந்தும் என சட்டத்தைத் திருத்தி உள்ளது மோடி அரசு. (விதி 28-29, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).

 

'நீம்' தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் அனைத்து வேலைகளையும் செய்வதற்கு ஏற்ப சட்டம் திருத்தப்பட்டுள்ளதால் இனி நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 300 பேருக்கும் குறைவாகவே வைத்துக் கொள்வார்கள். அனைத்து வகையான தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அந்த நிறுவனத்துக்கு நிலை ஆணைகள் தேவையில்லை என்கிறார் மோடி. இதன் மூலம் முதலாளிளுக்கு வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மீது ஏவப்படும் அடக்குமுறைகளுக்கு இனி அளவே இருக்காது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்  நிலை ஆணைகள் சட்டத்தின் மூலம் நிவாரணம் கோருவதற்கான அரைகுறை உரிமைகளையும் பறித்துக் கொண்டுவிட்டது பாஜக அரசு.


மாதிரி நிலை ஆணைகள் ( Model Standing Orders)


300 பேருக்கு மேல் பணிபுரியக்கூடிய நிறுவனங்களுக்கு மாதிரி நிலை ஆணைகள் (Model Standing Orders) ஒன்றை வெளியிட்டுள்ளது நடுவண் அரசு. இதன்படி நிரந்தரத் தொழிலாளர்கள் (Permanent), தற்காலிகத் தொழிலாளர்கள் (Temporary), பயிற்சியாளர்கள் (Apprentices), தகுதிகாண் தொழிலாளர்கள் (Probationers), பதிலிகள் (Badlies) மற்றும் குறிப்பிட்ட கால வேலை வாய்ப்புத் தொழிலாளர்கள் (Fixed Term Employment) என தொழிலாளர்களை வகைப்படுத்துகிறது இந்தச் சட்டம். (விதி-3: மாதிரி நிலை ஆணைகள்)


நான்கு சட்டத் தொகுப்புகளும் பயிற்சியாளர்களுக்குப் (Apprentices) பொருந்தாது என ஏற்கனவே சொல்லிவிட்டு அவர்களை மாதிரி நிலை ஆணைகள் பட்டியலில் சேர்த்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.


படித்துவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டால் வாழ்க்கையில் ‘செட்டில்’ஆகி விடலாம் என இனி யாரும் கனவுகூடக் காண முடியாது. பொறியியல் பட்டதாரியானாலும், முனைவர் பட்டமே பெற்றிருந்தாலும் இனி குறிப்பிட்ட காலப் பணிக்கான வேலைவாய்ப்பு மட்டுமே கிடைக்கும். ஆறு மாதமோ, ஓர் ஆண்டோ அல்லது மூன்று ஆண்டுகளோ என கால அளவு நிர்ணயிக்கப்பட்டால், கால இலக்கு முடிந்த பிறகு எந்தவித அறிவிப்பும் இன்றி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். ஏற்கனவே ‘பெல்’ போன்ற மத்திய அரசு நிறுவனங்களே இதை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட கால வேலை முடிந்த பிறகு வேறு ஒரு வேலை தேடி ஓட வேண்டும். ஒருவேளை உணவுக்காக பிச்சைக்காரர்கள் தட்டேந்தி வீடு வீடாக ஓடுவதைப் போல படித்தவர்கள் இனி வேலை தேடி ஓட வேண்டும். மாற்று வேலை கிடைக்க ஆறு மாதமோ ஓர் ஆண்டோ ஆகலாம். அதுவரை உயிரோடு இருந்தால் அடுத்த வேலைக்குப் போகலாம். இல்லையேல் எமதர்மன் உங்களை எடுத்துக் கொள்வான்.  


குறிப்பிட்ட கால வேலை வாய்ப்பு என்பது மிகவும் ஆபத்தானது. மலிவான தொழிலாளர் சந்தைக்கு வழிவகுப்பதோடு வாழ்க்கை நிலையற்றதாக மாற்றப்படும். எங்கும் அமைதியின்மை ஏற்பட்டு சமூகத்தில் எப்பொழுதும் பதற்றமே நிலவும்.


யுத்தத்தில் பிடிபட்டவன், பக்தியினால் வேலை செய்பவன், தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், தானமாகக் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்பவன் மற்றும் குற்றத்திற்காக வேலை செய்பவன். இவர்கள் மனு வகைப்படுத்தும் ஏழு வகைத் தொழிலாளர்கள் (மனு:8-415). மனு காட்டிய வழியில்தான் இன்றைய மனுவாதிகளும் தொழிலாளர் வர்க்கத்தை மாற்றி அமைக்க முயல்கின்றனர்.


அனைத்துவிதமான உடல்தகுதி சோதனைக்குப் பிறகுதான் ஒருவருக்கு வேலையே தருகிறார்கள். பணிச் சூழலால் ஒரு தொழிலாளிக்கு உடல்ரீதியான குறைபாடுகள் ஏற்பட்டால் அவற்றைக் கண்டறிந்து தொழிலாளியை சரி செய்வதோ அல்லது உடல் தகுதிக்கு ஏற்ற மாற்று வேலையை தருவதோ நிர்வாகத்தின் கடமை. இதுதான் இதுவரை உள்ள நடைமுறை. ஆனால் இனி எந்த நேரத்திலும் தொழிலாளர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என நிலை ஆணைகளை வகுத்திருக்கிறார்கள் (விதி-19: மாதிரி நிலை ஆணைகள்). தொழிலாளர்களின் உழைப்பைச் சக்கையாகப் பிழிந்துவிட்டு நிறுவனத்திற்காக உழைத்தத் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் உடல் தகுதியைக் காரணம் காட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்கு முதலாளிகளுக்கு அதிகாரத்தை வழங்கி உள்ளார் மோடி.  


தொடரும்


பொன்.சேகர்

வழக்குரைஞர்


குறிப்பு: இராணிப்பேட்டை BAP எம்ளாயீஸ் யூனியன் 14.03.2021 அன்று மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர்களுக்கான பயிற்சி வழுப்பில் ஆற்றிய உரையின் சாரம்.


தொடர்புடைய பதிவுகள்


மனுவின் வழியில் குறைந்த பட்ச ஊதியம்! தொடர்-4