Saturday, May 11, 2024

நான் கடவுளைக் கண்டேன்! ---3

மாலை நேர மயக்கம் 1

நவம்பர் 14, 2021 அன்று இராணிப்பேட்டை காரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வழக்கமான எனது சுசுகி மேக்ஸ் 100 இல் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தேன். மாலை நேரம் சற்றே இருட்டிவிட்டது. சுசுகியின் முகப்பு விளக்குகூட அவ்வளவாக பளிச்சென்று இருக்காது. 2000 மாடல் ஆச்சே? 'எப்ப மாத்த போற?' என்று அடிக்கடி பிள்ளைகள் கேட்பதுண்டு.


சாலையின் இடது ஓரமாக ஆட்டோ நகரில் வந்து கொண்டிருந்த பொழுது நேர் எதிரில் ஒரு உருவம் வருவது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது. சுதாரிப்பதற்குள் அவர் மீது வண்டி மோதியது. நான் மோதினேனா அல்லது அவராக வந்து விழுந்தாரா என்பதெல்லாம் தெரியாது. பாதசாரிக்கு என்ன ஆனது என்றும் எனக்குத் தெரியவில்லை. 

உடனே கூட்டம் கூடிவிட்டது. ஒருவர் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டார். இது போன்ற சம்பவங்களில், அதாவது பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விட்டால், அடி பலமாக இல்லை என்றாலும் வாகனக்காரரிடமிருந்து முடிந்தவரை கறப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். 
அவரைத் தெரிந்த ஒரு சிலர் இராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்றனர். நானோ, 'இல்லை இல்லை வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் போவோம்' என்றேன். நான் வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. எனவே நண்பர் வாலாஜா அசேன் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள, அவர் உடனே வி.சி.மோட்டூரிலிருந்து ஒரு நண்பரை அனுப்பி வைத்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு எதிரில் உள்ள கடைக்காரர் எனது வீட்டுக்கு எதிர் வீட்டு நண்பரின் மருமகன். அவரும் வந்து விடுகிறார். எனக்கு ஆதரவாக முக்கியமான நபர்கள் வந்துவிட அங்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நபர்கள் ஒதுங்கிக் கொள்ள ஒரு ஆட்டோவைப் பிடித்து இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே எனக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க அழைத்த போது அவர் காணாமல் போய்விட்டார். காரணம் பிறகுதான் தெரிய வந்தது, அவர் போதையில் இருந்தார் என்று. விபத்து நடந்த இடத்திற்கு எனது மகனும் உடனே வந்து விட்டதால் எனது வண்டியும் வந்து சேர்ந்தது. 

மாலை நேர மயக்கம் 2

2018 இல் பணி ஓய்வு பெற்ற பிறகு பழைய வீட்டை இடுத்துவிட்டு புதிய வீடு கட்டிக் கொண்டிருந்த போது  பிப்ரவரி 12, 2019 அன்று வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பிறகு, மாலையில் பெல் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அவ்வளவாக இருட்டிவிடவில்லை. சிப்காட் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி அதே சுசுகி மேக்ஸ் 100 இல் வந்து கொண்டிருந்த பொழுது இடது பக்கமிருந்து ஒரு இரு இருசக்கர வாகனம் இருவரை சுமந்து கொண்டு சற்றே தாழ்வான பகுதியிலிருந்து மேலேறி சர்ரென பிரதான சாலையில் நுழைய, அதன் மீது எதிர்பாராத விதமாக எனது வண்டி மோதி நான் கீழே விழுகிறேன். இந்த முறையும் மண்டைதான் தரையில் மோதுகிறது. எப்பொழுதும் தலைக்கவசம் அணியும் நான் அன்று மட்டும் தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் மண்டை தப்பி இருக்கும் . 

நெற்றியின் மேல் பகுதியிலிருந்து இரத்தம் வழிகிறது. வண்டி ஒரு பக்கம் பழுதாகி விழுந்து கிடக்கிறது. அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட பலர் கூடிவிட்டனர், நான் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் என்னை உடனடியாக பெல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே முதல் உதவி அளிக்கப்பட்டு மண்டை காயத்திற்கு எட்டு தையல் போடப்பட்டது.

எனது வண்டியை பத்திரமாக எடுத்து வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மறுநாள் வண்டியை என்னிடம் ஒப்படைத்தார். எதற்கும் மண்டையை ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விடலாம் என்று மேல் சிகிச்சைக்காக விஷாரம் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டேன். உள்காயம் ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

வலதுகை மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 25 வயது  சுசுகியையும், 20 வயது ஸ்கூட்டியையும் வேறு ஒருவருக்கு கைமாற்றிய பிறகு கடந்த ஐந்து மாதங்களாக எங்கு சென்றாலும் நடராஜாவும், ஆட்டோக்களும் பேருந்துகளும்தான். போகிறப் போக்கை பார்த்தால் இதுவே பழகிவிடும் போலத்தான் தெரிகிறது. எனினும் உற்ற நண்பர்களை இழுந்து விட்டது போன்ற ஒரு வெறுமை என்னுள் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு வகைமாதிரிக்காக எனது சொந்த அனுபவத்திலிருந்து ஐந்து சம்பவங்களை நான் மேலே விவரித்திருக்கிறேன். இந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினை என்ன? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

No comments:

Post a Comment