Sunday, May 19, 2024

உயிர் என்றால் என்ன?

உயிர் என்பது ஒரு இயக்கம். உடல் என்கிற இயந்திரத்தில் உட்கிரகித்தலும் கழிவுகள் வெளியேற்றமும் என்கிற செயல்முறைக்குப் (process) பெயர்தான் உயிர். உட்கிரகத்தில் மற்றும் கழிவுகள் வெளியேற்றம் இவற்றில் எது ஒன்று முடிவுக்கு வந்தாலும் உடலில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல் முறையும் முடிவுக்கு வந்துவிடுகிறது அதாவது உயிர் முடிவுக்கு வருகிறது. இதைத்தான் உடலில் இருந்து உயிர் பிரிந்து விடுகிறது என்று சொல்லுகிறோம். இதைத் தாண்டி உயிருக்கு வேறு பொருள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


இயந்திரங்கள் பழுதடைந்து இனி செயல்படவே முடியாது என்ற நிலை வரும் பொழுது அது படுத்துவிட்டது என்று சொல்லுகிறோம். எரிபொருளை உள்வாங்க முடியவில்லை என்றாலோ அல்லது எரிபொருளை உள்வாங்கினாலும் அதைப் பயன்படுத்தியும் இயங்க முடியவில்லை என்றாலோ அல்லது எரிபொருளை உள்வாங்கி அதைப் பயன்படுத்தி இயங்கிய பிறகு கழிவுகளை வெளியேற்ற இயலவில்லை என்றாலோ அந்த இயந்திரத்தின் இயக்கம் எவ்வாறு முடிவுக்கு வருகிறதோ அது போலத்தான் மனித உடல் இயக்கமும். 

ஒரு இயந்திரம் செயல்படாமல் முடிவுக்கு வந்து விட்டால் அதை காயலான் கடையில் போடுகிறோம். அதன் பிறகு அது உருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டு வேறு பொருளாக மாற்றப்படுகிறது.

ஆனால் இயக்கம் நின்று போன மனித உடலை அவ்வாறு காயலான் கடையில் போட முடியாது. ஒன்று செல்கள் அழுகி மண்ணோடு மண்ணாகும் அல்லது எரிக்கப்பட்டால் அது எரிந்து சாம்பலாகும், அதிலிருந்து வாயுக்கள் (gas molecules) வெளியேறும். இதைத்தான் ஆவி என்கிறார்கள் போலும்?

எலும்புகள், பற்கள், மண்டை ஓடுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம் அல்லது அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் அழுகக் கூடியவை. அவற்றை மண்ணில் புதைத்தாலும் அல்லது எரித்தாலும் அவற்றில் உள்ள தனிமங்களின் சேர்க்கைகளினால் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு ஒன்று தனிமங்களாக மண்ணில் மறையும் அல்லது வாயுக்களாக காற்றில் கரையும்.

திடப்பொருளோ, திரவப் பொருளோ வாயுக்களோ, உயிர் உள்ளவையோ, உயிரற்றவையோ எல்லாமே தனிமங்களின் சேர்க்கைதானே. தனித்த தனிமங்களாகவோ அல்லது மூலக்கூறுகளாகவோ அல்லது உயிர் செல்களாகவோதானே இந்த உலகில் பொருட்கள் இருக்கின்றன. இதைத் தாண்டி வேற என்ன இருக்கு?

ஹோமியோபதி கோட்பாடுகளைக் கற்ற பிறகு உயிர் பற்றிய எனது புரிதல் இது.

உயிர் பிரிந்த பிறகு ஆன்மா அல்லது ஆத்மா (soul) பற்றி பேசுகிறோம். அப்படி ஒன்று இருக்க முடியுமா? இது குறித்து பிறகு பேசுவோம்.

ஊரான்

No comments:

Post a Comment