Sunday, 13 September 2026

ஆ.ராசா: திமுக வெறுப்பு அரசியலும் இரட்டை அளவுகோல்களும்

தமிழ் அரசியல் களத்தில் மேடைப் பேச்சுகளும் தனிநபர் விமர்சனங்களும் விவாதத்திற்கு உள்ளாவது புதிதல்ல. ஆனால், ஒரே மாதிரியான தனிநபர் விமர்சனங்களுக்கு வெவ்வேறு முகாம்கள் காட்டும் எதிர்வினைகள், நடுநிலையான அரசியல் நடத்தப்படுகிறதா அல்லது "திமுக வெறுப்பு" என்ற ஒற்றைப் புள்ளியில் கொள்கைகள் அடகு வைக்கப்படுகின்றனவா என்ற கேள்வியை எழுப்புகிறது.


இரட்டை அளவுகோல்: ஆ.ராசா மற்றும் நிர்மல் குமார் பேச்சுகள்

சமீபத்திய அரசியல் மோதல்களில் ஆ.ராசாவின் பேச்சும், பாஜகவைச் சேர்ந்த நிர்மல் குமாரின் பேச்சும் கடுமையாக விவாதிக்கப்பட்டன.
நிர்மல் குமாரின் பிறப்பு குறித்து ஆ.ராசா தனிநபர் ரீதியாகப் பேசியதை, "ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்திவிட்டார்" என்ற தளத்திற்கு உயர்த்தி வலதுசாரிகள் முதல் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்தனர். தனிநபர் விமர்சனம் என்பது நாகரிக அரசியல் எல்லைக்குள் தவறானது என்ற அடிப்படையில் ஆ.ராசா அதற்காக வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

அதே நேரத்தில், மு.க. ஸ்டாலின் அவர்கள் "பெண்கள் விவகாரத்தில் தான் கைது செய்யப்பட்டார்"  என்று நிர்மல் குமார் பேசியதற்கு போதுமான எதிர்ப்பு எழவில்லை; நிர்மல் குமார் அதற்காக வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. இதிலும் பெண்களை அவர் தொடர்பு படுத்துகிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.

முன்னதில் மறைமுகமாக ஒருவரது தாயாரையும் பின்னதில் பெயர் குறிப்பிடாமல் ஒரு பெண்ணையும் என இருவரது பேச்சுகளிலுமே ஒரு பெண் சம்பந்தப்பட்டிருக்கிறார். ஆனால் ஆ.ராசாவின் பேச்சை "பெண்களுக்கு எதிரான கருத்தியல்" எனப் பொதுமைப்படுத்தி விமர்சித்தவர்கள், நிர்மல் குமாரின் பேச்சை கண்டுகொள்ளாமல் கடந்தது ஏன்? இது அரசியல் நடத்தையில் உள்ள இரட்டை நிலையை வெளிப்படையாகக் காட்டுகிறது.

திமுக-வும் முதலாளித்துவமும்

முற்போக்காளர்களும் இடது முகாம்களும் திமுகவை விமர்சிக்கும் போது "திமுக முதலாளித்துவத்திற்கு சாதகமாகச் செயல்படுகிறது" என்று குறிப்பாக விமர்சிக்கலாம்.

இத்தகைய விமர்சனம் தவறல்ல. ஆனால் இங்கே ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: இதே கொள்கையை அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆளும் போது பின்பற்றுகின்றன. தொழிற்சாலை நலச் சட்டங்கள் முடக்கப்படுவதும், கார்ப்பரேட்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படுவதும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவதும் பல்வேறு கட்சிகளால் வேறு வேறு அளவுகளில் முன்வைக்கப்படுகின்றன. இதில் முதன்மை வகிப்பது அன்றைய காங்கிரசும் இன்றைய பாஜக-வும்தான்.

ஆனால் திமுகவை மட்டும் குறி வைத்து விமர்சிப்பது ஏன்?
இந்த கேள்விக்கான நேர்மையான பதில், கொள்கை விமர்சனமல்ல; திமுக வெறுப்பு என்ற உளவியல் நிலைப்பாட்டிலிருந்து இந்த விமர்சனம் வருகிறது என்பதுதான்.

சனாதன சக்திகளால் கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்பு உளவியல்

திமுக மீதான இந்த வெறுப்பு அரசியல் திடீரென உருவானதல்ல. இதன் வேர்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
திராவிட இயக்கம் என்பது சாதிய படிநிலை, வர்ணாசிரமம், பார்ப்பனிய ஆதிக்கம் ஆகியவற்றை நேரடியாக நிலைகுலையச் செய்த இயக்கம். சமூக நீதி, இடஒதுக்கீடு, மாநில உரிமை, வைதீக-சடங்கு எதிர்ப்பு ஆகியவை திராவிட இயக்கத்தின் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகள். இந்த நிலைப்பாடுகளே சனாதன சக்திகளுக்கு உண்மையான எதிரிகளாக திமுகவை மாற்றியது.

ஆகவே, திமுகவை அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தவும், அதன் சமூக நீதிச் சாதனைகளைச் சிறுமைப்படுத்தவும், மக்கள் மனதில் திமுக என்றால் ஊழல், திமுக என்றால் வாரிசு அரசியல் என்ற படிமத்தை ஊடகங்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட பிரச்சாரங்கள் வழியாக சனாதன சக்திகள் வலிமையாக விதைத்து வந்திருக்கின்றன. இந்த விதை தலைமுறை தலைமுறையாக வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. கவனிக்க ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு மற்ற கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கு அல்ல.

கிராம்சி சுட்டிக்காட்டுவது போல, ஆளும் வர்க்கம் தனது ஆதிக்கத்தை வெறும் அதிகாரத்தால் மட்டுமல்ல, மக்களின் பொதுப்புத்தியை வடிவமைப்பதன் மூலமும் நிலைநிறுத்துகிறது. "திமுக வெறுப்பு" என்பது இந்தப் பண்பாட்டு மேலாதிக்கத்தின் ஒரு வெளிப்பாடே.

முற்போக்காளர்களும் இந்த வலையில் சிக்குவது ஏன்?

கெடு வாய்ப்பாக, வர்க்கப் போராட்டம் பேசும் முற்போக்காளர்களும், இடது தோழர்களும் கூட சில நேரங்களில் இந்த சனாதனக் கட்டமைப்பின் வெளிப்பாடான திமுக வெறுப்பை கையில் எடுக்கிறார்கள்.

திமுக தொழிலாளர் நலனுக்கு எதிரான கொள்கைகளை செயல்படுத்தும்போது விமர்சிப்பது, கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்ப்பது — இவை நியாயமான வர்க்கப் பார்வையின் வெளிப்பாடுகள். இவற்றை யாரும் மறுக்க முடியாது.
ஆனால் வலதுசாரிச் சக்திகளின் அவதூறுகளையும், ஒரு பெண்ணின் கண்ணியத்தை கேள்விக்குட்படுத்தும் பேச்சுகளையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, திமுகவின் மீதான விமர்சனத்தை மட்டும் பூதாகரமாக்குவது வர்க்கப் பார்வை அல்ல. அது அறியாமலேயே சனாதன சக்திகளின் திமுக வெறுப்பு பிரச்சாரத்திற்கு கருவியாக மாறுவதாகும்.

தீவிர முதலாளித்துவக் கொள்கைகளையும் கார்ப்பரேட் ஆதிக்கத்தையும் வெளிப்படையாக ஆதரிக்கும் வலதுசாரி சக்திகளைக் காட்டிலும், திமுகவையே தங்களின் முதன்மை எதிரியாகக் கருதி முற்போக்காளர்கள் தாக்குவது சித்தாந்த முரண்பாடாகும். இது உண்மையான வர்க்க எதிரியை மறைக்கும் அரசியல் நடைமுறையாகும்.

முடிவுரை

அரசியல் நாகரிகமும் பெண்ணியப் பாதுகாப்பும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்த அதே முற்போக்குக் குரல்கள், நிர்மல் குமாரின் பேச்சையும் கண்டிக்கத் தவறியது கொள்கை உறுதியின்மையை வெளிப்படுத்துகிறது.

திமுகவின் கொள்கை தவறுகளை விமர்சிக்கலாம்; அது ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை. ஆனால் அந்த விமர்சனம் அதே அளவுகோலில் அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும். திமுக மட்டும் முதலாளித்துவம் பின்பற்றுவதில்லை; அனைத்துக் கட்சிகளும் பின்பற்றுகின்றன — இந்த உண்மையை மறைத்து திமுக மட்டும் தாக்கப்படும்போது, அது கொள்கை விமர்சனமல்ல; சனாதன சக்திகளால் கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்பு உளவியலின் வெளிப்பாடு.

திமுக வெறுப்பு எனும் கட்டமைக்கப்பட்ட உளவியலிலிருந்து விலகி, உண்மையான வர்க்க மற்றும் சமூக எதிரி யார் என்பதை அடையாளம் கண்டு செயல்படுவதே ஒரு விழிப்புணர்வடைந்த முற்போக்கு இயக்கத்திற்கு அழகாகும்.

ஊரான்

No comments:

Post a Comment