Wednesday, October 16, 2024

இலக்கியத்திற்கு வடார்க்காடு தூரமா? - தொடர் 3

ஒரு காலத்தில் குமுதம், ஆனந்த விகடன் என பெட்டிக்கடைகளில் சரஞ்சரமாய் தொங்கும் வார மாத இதழ்களில் வரும் தொடர்களை, சிறுகதைகளைப் படித்து ரசிக்க வரிசைகட்டி நின்றது ஒரு இளைஞர் கூட்டம்.
 
இன்றைய இளைஞர் கூட்டமும் பெட்டிக்கடைகளை மொய்க்கின்றனர், கமுக்கமாய் விற்கப்படும் கஞ்சா-போதைப் பொட்டலங்களில் மயங்கிக் கிடக்க.
 
இதழ்களின் அட்டைகளிலும், நடுப்பக்கங்களிலும் ஆடுகளைப் போல் தோலுரித்துக் தொங்கவிடப்பட்ட திரை நட்சத்திரங்களின் மின்னலில், 
மயங்கிக் கிடந்தது அன்றைய இலைஞர் கூட்டம். அது மகளிர் மீதான கண நேர கிரக்கம் மட்டுமே என்பதனால் அடுத்தடுத்த வேலைகளில் அவர்களால் நாட்டம் கொள்ள முடிந்தது. ஆனால் இன்றோ போதையில் சிக்கிய இளைஞர்கள் மதி இழந்து, உடல் நலிந்து எதற்கும் உதவாத நடைபிணங்களாய் 
நடமாடுகின்றனர்.
 
மிச்சமிருக்கின்ற இளைஞர்களோ ரீல்ஸ்களிலும், டிக்-டாக்குகளிலும் சிக்கிக் கொள்ள, இல்லத்து மகளிர் எல்லாம் தொலைக்காட்சித் தொடர்களில் தொலைந்து போக, வேலைக்குச் செல்வோர் எதிர்கால அச்சத்துடன் ஓய்வின்றி ஓட, வேளாண் குடிகளும்-உதிரிப் பாட்டாளிகளும் டாஸ்மாக்குகளில் தஞ்சம் புக, பிறகு யார்தான் படிப்பது இலக்கியங்களை?

அதனால்தானோ என்னவோ, கோடி பேர் கூடி வாழ்ந்தாலும் ஆயிரம் பிரதிகளைக் கரை சேர்ப்பதற்குள் ஒரு படைப்பாளிக்கு நாக்கல்லவா தள்ளி விடுகிறது. பிறகு எப்படி இலக்கியம் செழிக்கும்?
இருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் இலக்கியங்கள் படைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
 
இலக்கியத்திற்குக் கற்பனை அவசியமென்றாலும் அவை மக்களின் பாடுகளைப் பேச வேண்டுமல்லவா?
 
ஏழ்மை-வறுமையினாலும், சுரண்டல்-அடக்குமுறைகளினாலும், சாதி-தீண்டாமையினாலும் அல்லல் படுகின்ற மக்களின் பாடுகளை வெளிக்கொணர்வதோடு அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கான முனைப்புகளையும் முன்னெடுக்கின்ற வகையில் இலக்கியப் படைப்புகள் இருக்க வேண்டுமல்லவா?
 
இலக்கியத்திற்கு எந்த மண், தூரம் என்று இதுவரை ஒதுக்கப்பட்டு வந்ததோ, அதை உடைக்கும் வகையில் இன்று,
 
இராணிப்பேட்டை வசூரிலிருந்து கவிப்பித்தன், ஆம்பூரிலிருந்து யாழன் ஆதி, பேரணாம்பட்டிலிருந்து அழகிய பெரியவன், லாலாப்பேட்டையிலிருந்து சுகிர்தராணி, வந்தவாசியிலிருந்து வெண்ணிலா, செங்கம்-முன்னூர் மங்கலத்திலிருந்து ஸ்டாலின் ராஜாங்கம் என எண்ணற்றோர் வடார்க்காட்டு மண்ணிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் இன்று 
வலம் வருகின்றனர். வறண்ட பாலாற்று மணலில் இலக்கியமும் ஊற்றெடுக்கிறது.

கவிப்பித்தன்

ஆம்! அந்த வரிசையில் பொன்னை ஆற்றங்கரை வசூர் எனும் சிற்றூரிலிருந்து  பிறப்பெடுத்த சிறு ஊற்று, இன்று பெருவெள்ளமாய் பாய்கிறது பாலாற்றையும் தாண்டி.
 
எப்போதோ ஒருமுறை பாலாறு பெருக்கெடுத்தாலும், ஒரு சில ஆண்டுகளுக்கு அதனால் மக்கள் பயனுறுவதைப் போலவடார்க்காட்டில் ஊற்றெடுக்கும் இலக்கியமும் குறைவேயாயினும், இளைப்பாற, களைப்பு நீங்கி களமாட அது நிழல் தரும் பெருவிருட்சமாய் செழித்தோங்க, நீர் ஊற்றி உரமிட்டு வளர்த்து பாதுகாப்பது வாசகர்களின் கடமையன்றோ?
 
தொடரும்
 
ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment