Thursday, April 24, 2025

மணவிழாவில் ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்று கூடல்!

முன்னிரவு  தொடங்கிய மேடை அலங்கார வேலைகள் முடியும் தருவாயில் ஒரு பக்கம், மாலைநேர மணவிழா விருந்துக்கான சமையல் வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருக்க, பங்குனியின் கடைசிநாள் ஞாயிறு பிற்பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினர். 

நண்பர்களும் உறவினர்களும் தோழர்களும் மண்டபத்தின் கீழ்வாசல் வழியாக திரள் திரளாய் நுழைவதைக் கண்டு அச்சமோ என்னவோ, கதிரவன் மேற்கு நோக்கி வேகமாக ஓடியதால்  வெக்கையும் சற்றே தணிந்தது.  வந்திருந்தோரின் நேச மழையில், நானோ கொடுங்கோடையிலும் உறைந்து போனேன்.

நண்பர்களை ஆரத்தழுவி கட்டி அணைப்பது வழக்கம்தான் என்றாலும், பல ஆண்டுகள் கழித்து சிலரைக் கட்டித் தழுவியபோது ‘ஸ்பைடர்மேனாக’ நான் பறக்கலானேன். 

வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கின்ற சொந்தங்கள், பொது வாழ்வில் களப்போராட்டங்களில் கைகோர்த்து பயணிக்கின்ற தோழர்கள், மிக நீண்டகாலம் அருகருகே அமர்ந்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 

என இவர்கள், சிலசமயங்களில் சிலபல காரணங்களுக்காக விலகி நிற்கவோ, தோழமையை துண்டித்துக் கொள்ளவோ, மனம் கசிந்து போகவோ நேரிடலாம்.

“நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்” என்கிறான் வள்ளுவன் (785)

அண்மையில் சென்னையில் மின்சாரத்தால் தாக்குண்டு மழை நீரில்  தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு இளைஞன் காப்பாற்றிய போது அவன் மீது அதைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடுதானே? 

உலகையே உலுக்கிய சுனாமியின்போது உணவுக்காக நீண்ட வரிசையில் பலர் பசியோடு காத்திருக்க, முன்வரிசையில் தான்பெற்ற உணவை ‘என்னைவிடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்’ எனக்கூறி மீண்டும் மொத்த உணவோடு தனது உணவைச் சேர்த்த சிறுவனின் நடத்தையைப் படிக்கும் போது, அவன் எப்படி இருப்பான் என்பதுகூட தெரியவில்லை என்றாலும், அவன் மீது ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடன்றோ? 

அதனால்தான் நாம் உணர்வதை, நாம் செய்ய விரும்புவதை, பிறர் உணரும் போதும், செய்யும் போதும் ஏற்படும் உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கிறது என்கிறானோ வள்ளுவன்?

இரத்த உறவு எப்பொழுது ஒத்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது உறவினர்களும் நண்பர்களாகி விடுவார்கள்; தோழர்களும்தான். ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது. 

இப்படித்தான், நான் எனது உறவினர்களையும் தோழர்களையும் நண்பர்களையும் பார்க்கிறேன்; பாவிக்கிறேன்.

முதுமையையும் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, பெங்களூரு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் மட்டவெட்டு-அத்திமூரான் கொட்டாய்  என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொலை தூரங்களிலிருந்தும் அந்த ஒத்த உணர்ச்சிதான் எனது இல்ல மணவிழாவிற்கு  
திருப்பத்தூரை நோக்கி பலரையும் ஈர்த்ததோ?

இதுஒரு மணவிழா என்பதையும் தாண்டி, இது ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்றுகூடல் (get together) என்பதாகத்தான் ஒவ்வொருவரையும் உணர வைத்தது. 

“குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனை தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என்கிறான் வள்ளுவன் (1025). இந்த ஒன்றுகூடல் கூட அப்படித்தானோ?

ஆம்! குற்றமற்றவர்களாகவும், குடிமக்களின் நலன்களுக்கு பாடுபடுவோராகவும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முனைவோம். நண்பர்களாய், மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்க நமக்கென்ன கவலை?

மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 
நன்றிப் பெருக்குடன்,

பொன்.சேகர்

Monday, April 7, 2025

கம்யூனிஸ்டுகள் மனுதர்மத்தைப் புரிந்து கொள்ளவில்லையா?

குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரண்டாவது நாளில் புண்ணிய திதியில் நல்ல முகூர்த்தத்தில் நல்ல நட்சத்திரத்தில் பெயர் சூட்ட வேண்டும் (மனு: 2-30) 

உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் இன்றும்கூட இதன்படித்தானே பெயர் சூட்டுகிறார்கள்?

பிராமணனுக்கு மங்களத்தையும், சத்ரியனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகின்ற பெயரைச் சூட்ட வேண்டும் (மனு: 2-31)

பிராமணனுக்கு சர்மா என்பதையும், சத்ரியனுக்கு வர்மா என்பதையும், வைசியனுக்குப் பதி என்பதையும், சூத்திரனுக்கு தாசன் என்பதையும் தொடர் பெயராக இட வேண்டும் (மனு: 2-32)


தோழர் மீனாட்சி முகர்ஜி, CPI (M) 
மத்தியக் குழு உறுப்பினர் 

சங்கர் தயாள் சர்மா, இது ஒரு பார்ப்பனரின் பெயர். சர்மா என்பது பார்ப்பனர்களில் ஒரு பிரிவு. இதுபோல முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, துபே, பாண்டே என பார்ப்பனர்களில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் உண்டு. 

ராம் கோபால் வர்மா. இது ஒரு சத்திரியனின் பெயர்.

குமுத் பல்லவ் பதி. இது ஒரு வைசியனின் பெயர். 

சித்தரஞ்சன் தாஸ் இது ஒரு சூத்திரனின் பெயர். 

இப்படித்தான் வட இந்தியாவில் மனுதர்மத்தின் வழிகாட்டுதல்படி இன்று வரை தங்களது பெயரை வைத்துக் கொள்கிறார்கள். 

விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த திராவிடர்கள் மனுதர்மத்தை ஏற்க மறுத்ததால் (மனு: 10-43, 44) அன்றிலிருந்து பெயர் வைத்துக் கொள்வதில் மனுவின் வழிகாட்டுதலை கடைபிடிக்கவில்லை. எனவே பார்ப்பனர்களைத் தவிர பிற அனைவருமே சூத்திரர்களாகத் தரம் இறக்கப்பட்டிருந்தனர்.  அதனால்தான் நமது பண்டைய பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில்கூட மனுவின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டதில்லை. 

வட இந்தியாவில் நான்கு வருணங்களும் உண்டு. ஆனால் தென்னிந்தியாவில் பிராமணன், சூத்திரன் என இரு வருணங்கள் மட்டுமே உண்டு.

இன்று தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் மனுவின் வழிகாட்டுதல்படி இல்லை என்றாலும் தஷ், புஷ் என வடமொழி கலந்த பெயர்களாகத்தான் வைக்கிறார்கள் என்பது தனிக்கதை. 

அண்மையில் மதுரையில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பெயர்களில் சர்மா, பட்டாச்சார்யா, சவுத்ரி, தேஷ்பாண்டே, முகர்ஜிகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாசுகி, பாலபாரதி, சண்முகங்களைத்தான் காண முடிகிறது. 

கம்யூனிஸ்டுகளாய் இருந்தாலும், பெயர் வைப்பதில் வடக்கே இன்னும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மனுவின் பிடியிலிருந்து மீளவில்லை என்பதையும், தெற்கில் உள்ளவர்கள் மனுவிலிருந்து என்றோ துண்டித்துக் கொண்டவர்கள் என்பதையும் உணர முடிகிறது.

மனுதர்மம் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுப்பது. ஆனால் மூன்றையும் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடமை. எனவே, கம்யூனிஸ்டுகள் தங்களது பெயர்களுக்குப் பின்னால் மனுவின் வரையறையின்படி சாதிப்பட்டத்தைச் சுமப்பது மார்க்சுக்கு இழிவைத் தேடித் தருவதாகும்.

தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்தான் இதை வடஇந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஊரான்