Thursday, January 30, 2020

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, (CAA) எப்படி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது?


குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), அதைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் இந்திய விடுதலைக்குப் பிறகு நாடு கண்டிராத மிகப் பெரிய போராட்டங்களாகும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இப்போராட்டங்கள் என்னவோ இஸ்லாமியர்களால் கட்டமைக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன. பலதரப்பு அறிவுத்துறையினரிடையே தொடங்கிய எதிர்ப்பு, பிறகு மாணவர்கள் போராட்டமாக மிளிர்ந்து இன்று இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் போராட்டமாக வலுப்பெற்றுள்ளது.

எதிர்ப்பு இருக்கிற அதே நேரத்தில், ஆதரவு கருத்துக்களும் இருக்கவே செய்கின்றன. சட்டத்தின் பார்வையில் இவை சரியா எனப் பார்க்கத் தவறுவதால் ஏற்படும் தடுமாற்றத்தின் விளைவாக ஆதரிப்போரும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பின் காரணமாகவும், ஆளும் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்கிற அரசியல் காரணங்களுக்காவும் ஆதரிப்போரும் உண்டு. ஆதரிப்போர் பட்டியலில் சில வழக்கறிஞர்களும் உண்டு என்பதுதான் வேடிக்கை. இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் நீதிபதிகளாவதனால்தான் அயோத்தி பாபர் மசூதி வழக்கில் அநீதி தீர்ப்புகள் எழுதப்படுகின்றன.

குடியுரிமை திருத்தச் சட்டம் எப்படி அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கோணங்களில் கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. அதற்கான எதிர்வினைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. “கற்றறிந்த வழக்கறிஞர் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 11-ஐ வாசித்து விட்டு அனைவரும் அறியும் வகையில் பதிவிடுவார் என எதிர்பார்க்கிறேன்” என ஒரு வழக்கறிஞர் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் எழுதுகிறார்.

அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 11 என்ன சொல்கிறது.?

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இரண்டாம் அத்தியாயம் (Chapter II), பிரிவு 5 முதல் 11 வரை குடியுரிமை பற்றிப் பேசுகிறது. இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும், அவர்களுடைய பெற்றோரில் ஒருவர் இந்தியராக இருப்பின். அத்தகைய நபரும், அரசியல் சாசனம் துவக்கப்படுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் வசித்து வரும் நபர் ஒவ்வொருவரும் இந்தியக் குடிமக்கள் ஆவர் என்கிறது பிரிவு 5.

மேலும் பாகிஸ்தானில் அடங்கியுள்ள பிரதேசத்திலிருந்து வெளியேறி இந்திய மண்ணில் குடியேறியுள்ள ஒவ்வொரு நபரும், இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர் என்கிறது பிரிவு 6.

இப்படி யார் யார் எல்லாம் இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவர், யார் யார் எல்லாம் இந்தியக் குடிமக்களாக கருதப்படமாட்டார்கள் என விவரிக்கிறது அரவியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்.

இரண்டாவது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளவை எதுவும், ஒரு குடியுரிமை வழங்குவதற்கும், இரத்து செய்வதற்கும் மற்றும் குடியுரிமை விவகாரங்கள் பற்றிய விதிமுறைகளை உருவாக்குவதற்கும் நாடாளுமன்றத்திற்குரிய அதிகாரத்தைப் பாதிக்காது என்கிறது பிரிவு 11.

உண்மைதான். இந்த அதிகாரத்தைக் கொண்டுதான் இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அதே அடிப்படையில்தானே மோடி அரசும் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, கொண்டு வந்திருக்கிறது; அரசியலமைப்புச் சட்டப்படி இது சரியானதுதானே என்பதுதான் ஆதரிப்போரின் வாதம்.

நாடு, மதம் என்கிற அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்தியக் குடியுரிமைச் சட்ம் 1955, எங்குமே பேசவில்லை. ஒரு நபர் அல்லது எந்த ஒரு நபரும் (a person, any person) என்றுதான் அது பேசுகிறது. குடியுரிமை வழங்குவதில் நபர்களுக்கிடையில் பாகுபாடு காட்டவில்லை. அதனால்தான் இச்சட்டம் தவறானது என யாரும் அன்று பேசவுமில்லை; எதிர்க்கவுமில்லை. ஆனால், இன்று கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, மட்டும் ஏன் எதிர்க்கப்படுகிறது?

எந்த ஒரு நபரும் (any person) என்பதைத் தொடர்ந்து இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி, கிருத்தவர் (Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community) என மதத்தின் அடிப்படையிலும்; ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் என நாடு அடிப்படையிலும் (Afghanistan, Bangladesh or Pakistan) குடியுரிமை வழங்குவதில் பாகுபாடு பார்க்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம் 2019.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 அரசியலமைப்புக்கு எதிரானதா?

அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் அத்தியாயம் (Chapter III), பொதுவானவை என்ற தலைப்பில் பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசுகிறது.

இந்த அத்தியாயத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளைக் குறைக்கக்கூடிய அல்லது பறிக்கக்கூடிய எந்தச் சட்டத்தையும் அரசு உருவாக்கக் கூடாது. அப்படி மீறி உருவாக்கப்படும் சட்டம் எதுவும் செல்லத்தக்கதல்ல என்கிறது பிரிவு 13(2).

இங்கே அரசு என்பது நடுவண் அரசு, நாடாளுமன்றம், மாநில அரசுகள், சட்ட மன்றங்கள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து ஆட்சித் துறைகளையும் குறிக்கும் என பிரிவு 12 வரையறுக்கிறது.

மனிதனின் உரிமைகள் பற்றி 1789-இல் பிரான்சின் தேசிய அவை பிரகடனப்படுத்தியது முதல் உலகின் பல்வேறு நாடுகளிலும் மனித உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பாசிச கட்டமைப்பு உள்ள நாடுகளில்கூட நடைமுறை வேறாக இருந்தாலும், மனிதனின் அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமத்துவம், சுதந்திரம், சுரண்டலுக்கு எதிரான உரிமை, மதச் சுதந்திரம், கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை, அரசியலமைப்பு மூலம் நிவாரணம் கோரும் உரிமை என ஆறு வகையான அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன. 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15, 16 சமத்துவ உரிமை பற்றிப் பேசுகிறது. இந்தியாவில் உள்ள எந்த நபருக்கும், சட்டத்தின் முன்பு சம உரிமையும், சட்டத்தின் மூலம் சமமான பாதுகாப்பையும் அரசு உத்தரவாதம் செய்ய வேண்டும்; பாகுபாடு எதையும் காட்டக் கூடாது என்கிறது பிரிவு 14. பிரிவு 15 மற்றும் 16 ஆகியவை இந்தக் கோட்பாட்டை மேலும் விரிவு படுத்துகிறது. இவற்றில் சில உரிமைகள், இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமானதாகவும், சில உரிமைகள் அனைவருக்குமானதாகவும் - அவர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை என்றாலும் - உறுதி செய்யப்பட்டுள்ளன.

மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அடிப்படையில் வேலை வாய்ப்புத் தருவதில் பாகுபாடு பார்ப்பதைத் தடை செய்தல்; பேச்சு, கூட்டம் கூட-சங்கமாகச் சேர, சொத்து வாங்க, தொழில் தொடங்க – நடத்த, இந்தியாவில் எங்கும் செல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் குடியிருக்க-நிலைத்து வாழ, தனித்துவமான மொழி-பண்பாட்டைக் காக்க, சிறுபான்மையினர் நலன் காக்க உள்ளிட்ட உரிமைகள் இந்தியக் குடிமக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள உரிமைகளாகும்.
     The rights given to the citizens only are: Prohibition of discrimination on grounds of
religion, race, caste or sex, of place of birth, equality or opportunity in matters of public employment, freedom of speech, assembly and association, freedom to acquire property of to carry on any occupation, trade of business, right to move, to reside and settle in any part of the territory of India, the right to conserve a distinct language, script or culture, the protection of minority interests.

இந்தியக் குடிமக்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்வுரிமையைக் காத்தல், சட்டத்தின் முன் சமம் (equality before law), தனிமனித சுதந்திரம், ஆலைகள்-சுரங்கங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் அடிமை முறை-கட்டாய உழைப்புக்குத் தடை, ஒரு மதத்தைத் தழுவ-பிரச்சாரம் செய்ய மற்றும் அரசியலமைப்பு மூலம் நிவாரணம் கோரும் உரிமை உள்ளிட்ட உரிமைகள் அனைவருக்குமான உரிமைகளாகும்.
     The rights which are available to all persons whether they are citizens or not are:
Protection of life and personal liberty, equality before law, protection against ex post facto penalization, prohibition of slavery and enforced labour at employment, viz., whether in mines or factories, freedom of conscience and the right to profess, practice and propagate any religion, and right to constitutional remedies.

சட்டத்தின் முன் சமம் (equality before law), என்கிற உரிமையை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 உத்தரவாதம் செய்கிறது. இந்தியக் குடிமக்கள் அல்லாத-இந்தியாவில் வசித்து வரும் எவருக்கும் இது பொருந்தும். அதாவது இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்கள், திபெத் பௌத்தர்கள், நேபாள இந்துக்கள், மியான்மர் ரோஹிங்கியா மற்றும் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளின் இஸ்லாமியர்கள் என இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எவராக இருந்தாலும் அவர்களும் இந்தியக் குடிமக்களைப் போல சட்டத்தின் முன்பு சமமாக நடத்தப்பட வேண்டும். ஆனால் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இந்து, சீக்கியர், பௌத்தர், ஜெயின், பார்சி, கிருத்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்திருப்பதன் மூலம் ஒரு சாராரை பாகுபாட்டுடன் (discrimination) நடத்துவதற்கு வழிவகை செய்கிறது. இதனால்தான் இச்சட்டத் திருத்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிறோம்.  

குடியுரிமை தொடர்பான சட்டங்களை இயற்றுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 11-ன் படி நாடாளுமன்றத்துக்கு  அதிகாரம் இருப்பதைப் போலவே, இந்தியா முழுவதற்கும் அல்லது இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் உரிய சட்டங்களை இயற்றுவதற்கும் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 245-ன் படி நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவ்வாறு இயற்றப்படும் அத்தகையச் சட்டங்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறது பிரிவு 245. (Subject to the provisions of the Constitution, Parliaments may make laws,.). எனவே, குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, அரசியலமைப்பு விதிகளுக்கு அதாவது பிரிவு 14 உள்ளிட்ட பிரிவுகளுக்குப் புறம்பானதாக இருப்பதால், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 245-ன்படியும் செல்லத்தக்கதல்ல.
 
சட்டத்தின் முன்பு அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; பாகுபாடு பார்க்கப்படுவதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம். இதை இந்தியாவும் ஏற்றுக் கொண்டு கையொப்பமிட்டிருக்கிறது. எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தையும் மீறுவதாக உள்ளது. அதனால்தான் ஐரோப்பிய ஒன்றியமும் இச்சட்டத் திருத்தத்தை எதிர்க்கிறது.

பொன்.சேகர்
வழக்குரைஞர்
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!

Sunday, January 26, 2020

CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?


CAA, NRC, NPR என்றால் என்ன? இவற்றை நாம் ஏன் எதிர்க்க வேண்டும்?

குடியுரிமை திருத்த மசோதா (CAB- Citizenship Amendment Bill) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போது அதற்கு எதிராகத்தான் முதன் முதலில் எதிர்ப்புக் கிளம்பியது. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அது சட்டமாக்கப்பட்டது. சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு ஜனவரி 10, 2020 முதல் சட்டம் நடைமுறைக்கும் வந்து விட்டது. மசோதாவுக்கு (CAB) எதிராகத் துவக்கப்பட்ட எதிர்ப்புக் கிளர்ச்சிகள் சட்டத் திருத்தத்திற்கு (CAA-Citizenship Amendment Act) எதிரானதாக மாறியது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டம், தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC- National Register of Citizens), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR-National Population Register) ஆகியவற்றிற்கு எதிரானதாகவும் உருவெடுத்துள்ளது. இவற்றிக்கிடையே எந்தத் தொடர்பும் கிடையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். ஆனால் அவர் இவ்வாறு அறிவித்த அதே நாளில்தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பதற்காக 3941.35 கோடி ரூபாயை மந்திரிசபை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. 

இந்தப் பின்னணியில் CAA, NRC, NPR பற்றியும் இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு குறித்தும் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) குறித்து விவரிக்கிறது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948 (The Census Act 1948). இது ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான சட்டம் மட்டுமே. குடியுரிமை பற்றி இச்சட்டம் பேசவில்லை. இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான விதிமுறைகள் 1990-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டன (Census Rules, 1990).

இந்தியாவில் வசிக்கும் மக்களில் இந்தியக் குடிமக்கள் யார் என்பதை வரையறுப்பதற்கான சட்டம்தான் குடியுரிமைச் சட்டம் 1955 (The Citizenship Act, 1955). இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான விதிமுறைகள் 2003 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டன (Registration of Citizens and Issue of National Identity Cards) Rules, 2003). இந்த விதிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொண்டால்தான் CAA, NRC, NPR குறித்த புரிதலைப் பெறமுடியும்.

தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (NPR) பற்றி, குடிஉரிமைச் சட்டம் 1955 பேசுகிறது. மக்கள் தொகைப் பதிவேடு (Population Register) பற்றிய வரையறை இச்சட்டத்தின் விதிகள், பிரிவு 2(l)-ல் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திலோ அல்லது நகரத்திலோ வசிக்கும் நபர்கள் பற்றிய விவரங்கள் இந்தப் பதிவேட்டில் அடங்கி இருக்கும்.

2. Definitions—In these rules, unless the context otherwise requires,—
(l) “Population Register” means the register containing details of persons usually residing in a village or rural area or town  or  ward  or demarcated  area  (demarcated  by the  Registrar General of Citizen Registration) within a ward in a town or urban area;

ஒவ்வொரு குடிமகனைப் பற்றிய கீழ்கண்ட விவரங்கள் மக்கள் தொகை பதிவேட்டில் இருக்க வேண்டும் என்கிறது 2003 விதிகள், பிரிவு 3(3).

பெயர்
குடும்பத் தலைவரோடு அவருக்கு உள்ள உறவு
தந்தை பெயர்
தாயார் பெயர்
திருணமாகியிருந்தால் துணைவர் பெயர்
பாலினம்
திருமணமானவரா? ஆகாதவரா?
பிறந்த இடம்
நாட்டினம்
தற்போது வசிக்கும் முகவரி
தற்போதைய முகவரியில் வசிக்கும் காலம்
நிரந்தர முகவரி
தொழில் / நடவடிக்கை
கல்வித் தகுதி

2003 விதிகள், பிரிவு 3(4)–ன்படி தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) மத்திய அரசு தயாரிக்கும்.

3(4)  The  Central  Government may,  by  an  order issued in this regard, decide a date by which the Population  Register  shall  be prepared  by collecting  information relating to all persons who are usually residing within the jurisdiction of Local Registrar.

சாதாரணமாக பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன்படி 2011 ஆம் ஆண்டிற்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான விவரங்கள் 2010-ஆம் ஆண்டிலேயே சேகரிக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டு அவை சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டன. ஆனால் இதற்கு முரணாக அசாம் தவிர்த்து நாட்டின் பிறபகுதி முழுமைக்குமான தேசிய மக்கள் தொகை விவரங்களை ஏப்ரல் 1, 2020 இல் தொடங்கி செப்டம்பர் 30, 2020 க்குள் சேகரித்து முடிக்க வேண்டும் என 31.07.2019 அன்று மத்திய அரசு ஒரு அறிவிக்கையை வெளியிடுகிறது. கேரளா, மேற்கு வங்கம், இராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளன. ஆனால் எடுபிடி எடப்பாடி அரசோ இதை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் (Census) தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் (NPR). இடையிலான வேறுபாடு என்ன?

மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) என்பது மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன்படி ஒவ்வொரு நபரும் தாமாக முன்வந்து கொடுத்த விவரங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகுப்பு. ஆவணங்களைக் கொண்டு சரிபார்க்கப்படாத விவரங்களே இதில் அடங்கி இருக்கும். ஆனால் குடியுரிமைச் சட்டம் 2003 விதிகளின்படி தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கானத் (NRC) தரவுகளைப் பகிர்ந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தரவுகளைத் தருவதற்கு ஒத்துழைக்காத நபர்களை தண்டிப்பதற்கும், ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கும் குடியுரிமைச் சட்டம் 2003 விதிகள், பிரிவு 17 வழிவகை செய்வதால் தரவுகளைத் தருவதற்கு மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

17. Penal consequences in certain cases—Any violation of provisions of Rules 5, 7, 8, 10, 11    and    14    shall    be    punishable    with    fine    which    may    extend    to    one    thousand  rupees.

மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) அகியவற்றை தயாரிப்பதற்கான வேலைகள் ஒரே அலுவலகத் தலைமையின் கீழ்தான் மேற்கொள்ளப்படும் என்பது மிக முக்கியமானது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன? (NRC / NRIC)

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பதுதான் NRC. இந்திய தேசிய குடிமக்கள் பதிவேடு (NRIC) என்றும் இதைச் சொல்லலாம். இதற்கான அடிப்படை குடியுரிமைச் சட்டம் 1955 (Citizenship Act 1955) பிரிவு 14A – இல் உள்ளது.

இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் மத்திய அரசு கட்டாயமாகப் பதிவு செய்து அவருக்கு தேசிய அடையாள அட்டையை (National Identity Card) வழங்கலாம். இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டை (NPR) மத்திய அரசு பராமரிக்கலாம், அதற்காக ஒரு தேசியப் பதிவேடு ஆணையத்தை அமைக்கலாம் என்கிறது சட்டம்.

14A. Issue of national identity cards.

(1) The Central Government may compulsorily register every citizen of India and issue national identity card to him.

(2) The Central Government may maintain a National Register of Indian Citizens and for that purpose establish a National Registration Authority.

குடியுரிமைச் சட்டம், விதிகள் 2003, பிரிவு 3(1)-ன்படி குடிமக்கள் பதிவிற்கான பதிப்பாளர் தலைவர், இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேட்டை நிறுவிப் பராமரிப்பார்.

3(1).The Registrar General of Citizen Registration shall establish and maintain the National Register of Indian Citizens.

இந்தியக் குடிமக்களின் தேசியப் பதிவேடு என்பது மாநிலப் பதிவேடு, மாவட்டப் பதிவேடு, துணை மாவட்டப் பதிவேடு மற்றும் உள்ளூர் பதிவேடு ஆகியவற்றை உள்ளடக்கியப் பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (NPR) தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (NRC) தொடர்பு உண்டா?

குடியுரிமைச் சட்டம், விதிகள் 2003-ஐ வாசித்தாலே, தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு (NRC) அடிப்படையாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட விவரங்களே, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) இடம் பெற்றிருக்கும். குடியுரிமைச் சட்டம், விதிகள் 2003, பிரிவு 3(5) இதைத் தெளிவு படுத்துகிறது.

”3(5) மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து சரிபார்க்கப்பட்ட நபர்களின் விவரங்கள் மட்டுமே இந்தியக் குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் இருக்கும் "

3(5) The Local Register of Indian citizens shall contain details of persons after due verification made from the Population Register.

உள்ளூர் மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட பிறகே அதிலிருந்து இந்தியக் குடிமக்கள் குறித்த  உள்ளூர் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. இதிலிருந்துதான் NRC உருவாக்கப்படுகிறது.

4(3) For the purposes of preparation and inclusion in the Local Register of Indian Citizens, the particulars collected of every family and individual in the Population Register shall be verified and scrutinized by the Local Registrar, who may be assisted by one or more persons as specified by the Registrar General of Citizen Registration.

NPR விவரங்களை சரிபார்த்த பிறகு 'சந்தேகத்திற்குரிய குடிமக்கள்' யார்  என்பதை முடிவு செய்ய குடியுரிமைச் சட்டம் 2003 (Citizenship Act) விதிகள் குறிப்பிட்ட உள்ளூர் பதிவேடு அலுவலருக்கு அதிகாரம் அளிக்கிறது.
 
விதி 4(4) சொல்கிறது

"விவரங்கள் சரிபார்க்கப்படும் போது,  சந்தேகத்திற்குரிய நபர்களின் விவரங்கள், மக்கள்தொகை பதிவேட்டில் உள்ளூர் பதிவாளரால் பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படும். மேலதிக விசாரணையின் மூலம் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு அவரது குடியுரிமை குறித்து சந்தேகம் ஏற்பட்டால், அந்த தனிநபருக்கு அல்லது அவரது குடும்பத்தாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்படும்."

Rule 4(4) says:

"During the verification process, particulars of such individuals, whose Citizenship is doubtful, shall be entered by the Local Registrar with appropriate remark in the Population Register for further enquiry and in case of doubtful Citizenship, the individual or the family shall be informed in a specified proforma immediately after the verification process is over."

'சந்தேகத்திற்கிடமான குடிமக்கள்' பட்டியலிலிருந்து தங்களது பெயரை நீக்கக்கோரி முறையீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்பிறகு, உள்ளூர் பகுதிக்கான NRC வரைவு வெளியிடப்படும். ஒருவரை NRC இல் சேர்ப்பதற்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்ப, பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

(5)(a) Every person or family specified in sub rule (4), shall be given an opportunity of being heard  by  the  sub district  or  Taluk Registrar  of  Citizen  Registration, before  a final  decision  is  taken to include or to exclude their particulars in the National Register of Indian Citizens

இதைத் தொடர்ந்து, இறுதி  NRC வெளியிடப்படும்.
 
NPR மற்றும் NRC இரண்டும் ஒரே அலுவலகத்தின் கீழ் உள்ளன என்பதையும்  கவனத்தில் கொள்ள வேண்டும் (இந்தியப் பதிவாளர் தலைவர்தான், குடிமக்கள் பதிவுத் தலைவராகவும் செயல்படுகிறார்).

NRC-க்கு NPR முதல் படிக்கட்டா?

NRC-சிக்கு NPR வழிவகுக்கும் என்பது அவசியமில்லை. முதலில் 2010 இல் NPR தயாரிக்கப்பட்டு 2015 இல் இறுதிசெய்யப்பட்டது. ஆனால் அன்று அதைத் தொடர்ந்து NRC தயாரிக்கப்படவில்லை.
 
இருப்பினும், 2003 விதிகளின்படி NRC தயாரிப்பது NPR-க்குப் பிறகுதான் செய்ய  முடியும். எனவே, NPR என்பது NRC-க்குத் தேவையான முன் நிபந்தனையாகும். நாடு தழுவிய NRC-ஐ கொண்டுவருவதற்கான நோக்கத்தைத்தான்  தற்போதைய நிலைமைகள் பல சந்தர்ப்பங்களிலும் உணர்த்தி வருகின்றன. 2019 நாடாளுமன்றக் கலந்துரையாடலின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடு தழுவிய NRC-யைத் தயாரிக்கும் நோக்கம் குறித்து 
பேசியிருந்தார்.
 
இனி தயாரிக்கப்படும் NPR 2020, NRC-க்கு முதல் படியாக கருதப்படுகிறது என்பதை அரசாங்கத்தின் பல அறிக்கைகள், செய்திக்குறிப்புகள் பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதில்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறையின் ஆவணங்கள் உறுதி செய்கின்றன.

2020 NPR-க்காக கேட்கப்படும் கேள்விகள் 2010 NPR இருந்து வேறுபட்டது என்று தகவல்கள் கூறுகின்றன. 2010 NPR-ல் கோரப்பட்ட விவரங்களோடு  கூடுதலாக ஒருவரின் பெற்றோரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் பற்றிய விவரங்களையும், 2020 NPR 'அட்டவணை' கோருகிறது.1987 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் குடியுரிமைச் சட்டம் 1955-ல் மேற்கொள்ளப்பட்ட 
திருத்தங்களுக்குப் பிறகு, பிறப்பின் அடிப்படையில் ஒருவரின் குடியுரிமையை தீர்மானிப்பதற்கு பெற்றோரின் குடியுரிமை  அவசியமாக்கப்பட்டுள்ளது.  
 
இது NPR க்கும் NRC க்கும் இடையிலான தொடர்பைக் காட்டும் கூடுதல்  காரணியாக இருக்கிறது.

NRC ஏன் சிக்கலானது?

 பல ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் ஒரு நபரை ஆவணங்களின் அடிப்படையில் நிர்வாக அதிகாரிகள் முன்பு தனது குடியுரிமையை நிரூபிக்கக் கோருவது நடைமுறையில் மிகவும் சிக்கலானதாக இருக்கும்
 
குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர்  படிக்காதவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும் இருக்கும்போது இது  அதிகாரிகளின் அதிகாரத்துவப் போக்கு தலைதூக்குவதற்கும் அவர்களின் ஒருதலைபட்சமான, தன்னிச்சையான செயல்பாட்டிற்கும் வழிவகுக்கும்.
 
சமீபத்தில் முடிவடைந்த அசாம் NRC நடைமுறையின் போது கிட்டத்தட்ட 
2 மில்லியன் மக்கள் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர், NRC நடைமுறை குறைபாடுகளுடையதாகவும் சிக்கலானதாகவும் இருந்ததாக தகவல்கள்  கூறுகின்றன. இது தன்னிச்சையாக ஒருசாராரை விலக்கி வைப்பதற்கு வழிவகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
"சந்தேகத்திற்கிடமான குடிமகன்" என்கிற ஒரு வகையை 2003 விதிகள்  உருவாக்குகின்றன. இது வினோதமானதாகும். 'சந்தேகத்திற்கிடமான  குடிமக்களை' அடையாளம் காண்பதற்கு எந்த வழிகாட்டுதல்களும்  சொல்லப்படாத நிலையில் நிர்வாகிகள் தங்கள் விருப்பத்திற்குத் தகுந்தவாறு தாங்களே ஒரு விளக்கத்தைக் கொடுத்து ஒருவரை  சந்தேகத்திற்குரிய நபராக அறிவிக்கலாம்.
 
ஒருவர் சந்தேகத்திற்குரிய நபராக இருக்கும்பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது பற்றி விதிகளில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் 1964-ஆம் ஆண்டு போடப்பட்ட வெளிநாட்டினருக்கான தீர்ப்பாய  ஆணைகளில் 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி  சந்தேகத்திற்குரிய ஒரு குடிமகனை' இந்தத் தீர்ப்பாயத்தில் நிறுத்தி  விசாரிப்பதற்கு மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
 
வெளிநாட்டினர் தீர்ப்பாயங்கள் என்பவை அரை-நீதித்துறை அமைப்புகளாகும், அங்கு உள்ள நிர்வாக அதிகாரிகள் முறையான நீதித்துறை பயிற்சி  இல்லாதவர்களின் தலைமையின் கீழ் செயல்படுபவர்கள். உரிய காரணங்கள் ஏதும் இன்றி மிசகச்சாதாரணமாக அவர்கள் உத்தரவுகளை பிறப்பிப்பதாக ஏற்கனவே குற்றச் சாட்டுகள் உள்ளன.
 
எந்தவொரு நபரையும் குடிமக்களின் உள்ளூர் பதிவேட்டில் சேர்ப்பதற்கு எதிராக ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய விதி 4(6)(a) வழிவகை செய்கிறது. யார் வேண்டுமானாலும் இந்த ஆட்சேபனையை எழுப்பலாம். இதனால்  NRC-ஐத் தவறாக பனப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும்.
 
தற்போதைய சட்டத்தின்படி, குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய சுமை தனிநபர் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது.
 
எனவே, NRC அதிகாரிகள் தங்களது விருப்பதிற்கு ஏற்ப அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் விளைவுகள் மிகக் கடுமையானதாக 
இருக்கும். இது ஒரு நபரின் உண்மைத்தன்மைக்கு எதிரானதாகவும் அமையும். பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இது பேரழிவை ஏற்படுத்தும்.


NRC தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பதால், குடியுரிமையை நிரூபிக்க என்னென்ன ஆவணங்கள் போதுமானதாக இருக்கும் என்பது பற்றி முன்கூட்டியே பேசுவது சரியாக  இருக்காது என்றாலும்கூட NRC விதிகளின் கட்டமைப்பானது ஒரு நபரை  நிர்வாக அதிகாரிகளின் தயவை நாட வைக்கிறது. அதிகாரிகள் தன்னிச்சையாக தங்களுக்கு உள்ள அதிகாரகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மிகப் பெரிய அளவில் இடையூறுகளை ஏற்படுத்தி ஒருவரை துன்புறுத்த முடியும்.

CAA-க்கும் NRC-க்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்கு (religious persecution) ஆட்பட்டு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து  2014, டிசம்பர் 31-க்கு முன்பாக இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இந்துக்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், கிருத்தவர்கள் ஆகிய ஆறு மதப்பிரினர் மட்டும் இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு ஏற்ப குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA). பௌத்த சிங்களப் பேரினவாத துன்புறுத்தலுக்கு ஆளாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள், பௌத்த மியான்மர் ஆட்சியாளர்களின் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ரோஹிங்கியா முஸ்லீம்கள்  மற்றும் பூட்டானிலிருந்து வந்துள்ள கிருத்தவர்கள், திபெத்திலிருந்து 
வந்துள்ள பௌத்தர்கள், நேபாளத்திலிருந்து வந்துள்ள இந்துக்கள்  எவருக்கும் இச்சட்டத் திருத்தம் பொருந்தாது. இவர்கள் இந்தியக்  குடியுரிமை பெறத் தகுதியற்றவர்கள். மத-இன அடிப்படையில் இச்சட்டம் மக்களை பாகுபடுத்துகிறது; இது இந்திய அரசமைப்புக்கு எதிரானது என்பதால் நாடெங்கிலும் பல்வேறு தரப்பினரும் CAA-வுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
 
CAA-வுக்கும் NRC-க்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை என்று சொல்லப்பட்டாலும், முதலில் NRC, அதைத் தொடர்ந்து CAA என வரிசைக்கிரமமாக அரசு இவற்றை நடைமுறைப்படுத்தும் என 2019 தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது அமித்ஷா பேசியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். CAA-வுக்கு எதிரானப் போராட்டங்கள் நாடு முழுவதும்  தீவிரமடைந்த உடனே, NRC-ஐக் கொண்டுவருவது குறித்து எந்தவித விவாதமும் அரசு சார்பில் இதுவரை நடத்தப்படவில்லை என்று பிரதமர் மோடி பம்முகிறார்.
 
நாடு தழுவிய அளவில் NRC அமுலுக்கு வரும் போது, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து  மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு அங்கிருந்து டிசம்பர் 31, 2014 க்கு முன்பாக இந்தியாவிற்குள் வந்தவர்கள், தாங்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதை நிரூபித்தால், அவர்களுக்கு CAA உதவலாம். ஆனால் ஏற்கனவே தொகுக்கப்பட்டுள்ள அசாம் NRC பட்டியல் மீது CAA-வின் தாக்கம் மிகப் பெரிய அளவில் இருக்கும். இது நாடெங்கிலும் மிகப்பெரிய விவாதத்தைக் கிளரிவிடும்.
 
பொன்.சேகர், 
வழக்குரைஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
 
குறிப்பு: Live Law.in  இணைய தளத்தில் 27.12.2019 அன்று வெளியான கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு சில திருத்தங்களுடன் எழுதப்பட்டது.

https://www.livelaw.in/top-stories/what-is-the-caa-npr-nrc-linkexplainer-151105?infinitescroll=1

ஊரான்

Saturday, January 25, 2020

சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன!



மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் CAA-NRC-NPR-க்கு எதிராக 11.01.2020 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற கருத்தரங்கில் எனது உரை. வினவு தளத்திலிருந்து......


சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !

https://www.vinavu.com/2020/01/16/anti-caa-nrc-npr-tiruvannamalai-prpc-conference-pon-sekar-speech/

ஊரான்

Tuesday, January 21, 2020

சென்னை புத்தகக் காட்சி: அப்படி என்னதான் இருக்கிறது அங்கே?


படிக்காத ஒருவன் ஒரு புதிய விசயத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மற்றொருவன் சொல்வதைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள முடியும். அந்த மற்றொருவனும் படிக்காதவனாக இருந்தால் அவன் ஒரு மூன்றாம் நபரிடம் இருந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மூன்றாம் நபர் நான்காம் நபரிடமிருந்தும், நான்காம் நபர் ஐந்தாம் நபரிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடியும். இப்படி யாரோ ஒருவரிடமிருந்துதான் குறிப்பிட்ட விசயம் பற்றிய புரிதல் தொடங்க முடியும். இப்படி வாய்வழியாகத் தெரிந்து கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வது ஒரு வகை. இதில் யாருமே படித்திருக்க வேண்டியதில்லை. மொழி எழுத்து வடிவம் பெறாதவரை இப்படித்தானே இருந்திருக்க முடியும். மொழிகள் வளர்ச்சி அடைந்த இன்றைய காலத்திலும் இத்தகைய முறையில் செய்திகள் பரிமாறிக் கொள்வது நடந்து கொண்டுதான் உள்ளது. இந்த முறையில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் பொழுது கடைசி நபரிடம் வந்து சேரும் போது முற்றிலும் மாறுபட்டதாக அமைந்து விடுவதும் உண்டு.

ஒரு புதிய விசயத்தைத் தெரிந்து கொள்வதற்கான மற்றொரு வழி எழுத்து வடிவம். ஒரு புதிய எழுத்து வடிவக் கருத்து ஒன்று மற்றொரு எழுத்து வடிவக் கருத்திலிருந்து தொகுக்கப்பட்டிருக்கலாம் அல்லது மேலே சொன்னது போல படிக்காதவர்கள் பரிமாறிக் கொண்ட கருத்துக்களே எழுத்து வடிவம் பெற்றிருக்கலாம். எழுத்து வடிவம் நேற்றுவரை அச்சு வடிவத்தில் இருந்தது. இன்று மின்னணு வடிவமாக வளர்ச்சி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் அச்சு வடிவும் முற்றிலுமாகக் காணாமல்கூட போகலாம். நாம் மின்னணு வடிவத்தை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாகவும் மாறலாம். எனினும் பேச்சு வடிவம் போல எழுத்து வடிவம் மாறக் கூடியதல்ல. எனவே இதில் நம்பகத் தன்மை அதிகம்.

கருத்துக்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதில் முன்பு ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் பெரும் பங்காற்றின. இன்று புத்தகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. நாளை மின்னணு முக்கியப் பங்காற்றலாம். விசயங்களைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமல்ல பல்வேறு ஆய்வுகளுக்கும் புத்தகங்களே ஆதாரமாய் விளங்குகின்றன. வாய்வழிச் செய்தியாகவோ அல்லது ஓலைச் சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகளில் மட்டுமே இருந்த கருத்துக்கள் ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அச்சு வடிவம் பெற்றதனால் அவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்பிறகே அவற்றின் உண்மைத் தன்மை குறித்த விவாதங்கள் தொடங்கின. அதுவரை சொல்லப்பட்டு வந்த கருத்துக்களை அப்படியே தலையாட்டி ஏற்றுக் கொண்ட மக்கள், அச்சு வடிவில் படித்த பிறகு ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கினர். வரலாறு, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், அறிவியல், பண்பாடு என சகல துறைகளிலும் மனிதனின் சிந்தனை விரிவடைந்தது. அச்சிந்தனை எழுத்து வடிவம் பெற்று நம் கைகளிலே நூல்களாகத் தவழ்கின்றன. எழுத்து வடிவம் வருவதற்கு முன்பு யாரும் சிந்திக்கவில்லை என்று இதற்குப் பொருள் அல்ல. அன்றைய சிந்தனையாளர்கள் தங்களது கருத்துக்களை வாழ்வழியாக மட்டுமே பிறருக்குக் கடத்தினர்.

பழையன காக்க, புதியன படைக்க, பொழுது போக்க, பணம் ஈட்ட என எழுத்துக்கு நோக்கங்கள் பல உண்டு. சிந்தனை எழுத்தாகி, எழுத்து அச்சாகி, பின் அதுவே நூலாகி தன் கைகளில் விழும் போது படைப்பாளி பரவசமடைகிறான். ஆனால் அது அனைவரது கைகளிலும் தவழ்ந்தால்தான் அவன் அடுத்தப் படைப்பை ஆக்க முடியும். அச்சகமும் அச்சமின்றி அடுத்த நூலைக் கோர்க்க முடியும். இல்லையேல் படைப்புகள் பரணியில் துயில் கொள்ள நேரிடும்.

‘நூலோரே’ நூட்கள் ஆக்கிய காலம் போய் ‘கீழோரும்’ ஆக்கும் காலம் இது. அதனால் நூல்களுக்குப் பஞ்சமில்லை. நூல்கள் எதுவானாலும் அவற்றை வஞ்சமின்றி வாரி வழங்குவதில் சென்னைக்கு மிஞ்சி யாரும் இல்லை என்பதைதான் சென்னை புத்தகக் காட்சி ஆண்டுதோறும் மெய்ப்பித்து வருகிறது. சென்னை மெரினாவில் கால் நனைக்கிறோமோ இல்லையோ புத்தகக் காட்சியில் கட்டாயம் கால் பதித்தாக வேண்டும். அப்படி என்ன அங்கே இருக்கிறது?

அது ஒரு பெருங்கடல். அங்கே விலை மலிவு மத்தி முதல் விலை மதிப்பற்ற சிங்கி வரை அள்ளிவர ஏராளம் உண்டு. சில ஆண்டுகளாக நான் தவறாது நீந்தும் கடல் இது. இந்த ஆண்டு காட்சி முடியும் முதல் நாள் அன்று ஓடினேன் கடலை நோக்கி. நீந்தி இளைப்பார நேரம் இல்லை என்றாலும் கால் நனைத்து கீழைக்காற்றின் ஸ்பரிசத்தோடு கரையேறினேன்.

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள்

புத்தகக் கண்காட்சி: எதற்காக?



Thursday, January 16, 2020

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2


பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியும், நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்கள் மற்றும் உயிரினங்களும், நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாலில்லாக் குரங்கும், பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதனும் தோன்றியதாக பரிணாமக் கோட்பாடு கூறுகிறது. ஆப்ரிக்காவிலிருந்துதான் மாந்தவினம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டமே குமரிக் கண்டத்திலிருந்து பிரிந்ததுதான் என்பதால் மாந்தவினத்தின் தோற்றம் குமரிக்கணடமே என தமிழ் வரலாற்றறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.

முதலில் விலங்குகளைப் போலவே வேட்டையாடி வாழ்ந்த மனிதன் பிறகு பயிரிடுதலைத் தொழிலாகக் கொண்டு ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கி உள்ளான். உழவுத் தொழிலுக்கான கருவிகளின் தேவை மற்றும் செம்பு, வெண்கலம், இரும்பு என தொடர் உலோகக் கண்டபிடிப்புகளும் கருவிகள் பயன்பாடும் கைவினைத் தொழிலுக்கு வித்திட்டுள்ளன. கைவினைத் தொழில் பட்டறைத் தொழிலுக்கு வித்திட்டு அதுவே ஆலைத் தொழிலுக்கு வித்திட்டுள்ளது. இன்று நாம் காணும் நவீன சமுதாயம் இப்படித்தான் வளர்ச்சி பெற்று வந்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் சிந்து சமவெளி நாகரிகம், சுமேரிய நாகரிகம், பாபிலோனிய நாகரிகம், சீன நாகரிகம் என பல்வேறு நாகரிகங்கள் இருந்ததாக அறியப்படுகிறது. கி.மு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் குறித்த அகழ்வாய்வு முடிவுகளும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளும் ஒத்திருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சிந்து சமவெளி
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழகத்தில் பழம் பெரும் நாகரிகம் இருந்துள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் செப்புக் காலமும், தமிழ் மொழிக்கான வரிவடிவக் காலமும் கி.மு 10000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பார் சிலர். இந்தக் காலத்தில் முதல் தமிழ் கழகமும் அதன் பிறகு கி.மு 2500 ஆண்டு வரை இரண்டாம் தமிழ்க் கழகமும் செயல்பட்டு வந்ததாகத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். இக்காலகட்டங்களில் பல்வேறு கடற்கோள்கள் அடுத்தடுத்து நிகந்ததால் பல்வேறு திசைகளில் தமிழர்கள் குடியேற்றம் நிகழ்ந்ததாகவும் அதில் ஒரு பிரிவினர் சிந்து சமவெளியைத் தமது இருப்பிடமாகக் கொண்டனர் என்பதும் அறிஞர்கள் கருத்து.

தொல்லியல் ஆய்வுச் சான்றுகள் தவிர்த்து, பழைய நாகரிகங்களை அறிவதற்கு இலக்கியங்களே பெரிதும் பங்காற்றுகின்றன. தமிழின் தொன்மை வாய்ந்த இலக்கியம் தொல்காப்பியம். தொல்காப்பியர் காலம் கி.மு. 1000-700 என்பது தமிழறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. தொல்காப்பியம் வளர்ச்சியுற்ற தமிழ் மொழியின் வளமையைக் கூறுகிறது. தொல்காப்பியர் புதியனவாக எவற்றையும் சொல்லிவிடல்லை. சுருக்கமாகச் சொன்னால் தொல்காப்பியம் முந்தைய தமிழ் நூல்களின் தொகுப்பு எனலாம். தொல்காப்பியருக்கு முன்னமே செம்மையான தமிழர் நாகரிகம் இருந்தமைக்கு தொல்காப்பியமே சான்றாகத் திகழ்கிறது.
கீழடி

சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பிறகே கி.மு. 2000 ஆண்டு வாக்கில் ஆரியர்கள் இந்திய நிலப்பகுதிக்குள் வந்ததாகக் கருதப்படுகிறது. கி.மு 500 வாக்கில் தமிழர் பகுதிகளில் ஆரியத்தின் தாக்கம் உணரப்பட்டதாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் தொடங்கி களப்பிரர் ஆட்சிக்காலமான கி்.பி 575 வரை தமிழர் வாழ்வில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற ஐவகை நில வாழ்வியல் முறையே சொல்லப்பட்டுள்ளன. ஆரியர்களின் வருண முறையும், சாதி முறையும் அறியப்பட்டிருந்தாலும் அவை தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்ததில்லை. ஆரியக் கதைகளிலும் புராணங்ககளிலும் தமிழரின் ஐவகை நில வாழ்வியல் முறையைக் காணவியலாது என்பதை நினைவில் கொள்க.

மாயோன் (திருமால்) – சேயோன் (முருகன்) – வேந்தன் (இந்திரன்) -வருணன் பற்றிய செய்திகளும், அந்தணர் – அரசர் – வணிகர் - வேளாளர் பற்றி ‘மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே’ என்கிற செய்திகளும் தொல்காப்பியப் பாடல்களில் இடம் பெற்றுள்ளமை, ஆரியம் அக்காலத்தில் புகுந்தமையை இயம்புவதாக இருந்தாலும் அது தமிழரின் வாழ்வியலை ஆட்கொண்டுவிடவில்லை என்பதே உண்மை. சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க இலக்கிய நூட்கள் சிலவற்றில்கூட இத்தகைய ஆரியக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளமை இங்கு நோக்கத் தக்கது. 

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? - தொடர்-1


Monday, January 13, 2020

மார்கழி மழை:கர்ப்பத்தைக் கலைக்குமா? ---இறுதிப் பகுதி


சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்ற போது பறக்கும் ரெயில் மேம்பாலத்தருகில் எங்கு திரும்பினாலும் காக்கிச் சட்டைகளாகவே காட்சி அளித்தன. போதாக்குறைக்கு ஐப்பதுக்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் வேறு. வாலாசா சாலை என்றாலே M.A.சிதம்பரம் ஸ்டேடியமும் கிரிக்கெட்டும் நினைவுக்கு வராமல் போகாது. வாலாசா சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. நடந்து செல்பவர்களைக்கூட அனுமதிக்கவில்லை. வரப்போகும் மிகப் பெரிய கலவரத்தைத் தடுப்பதற்கு காவல்துறை தயாராய் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.

அப்படி ஒன்றும் அங்கு நிகழப் போவதில்லை என்பது போலீசாருக்கும் தெரியும். பிறகு எதற்கு இத்தனை கெடுபிடிகள்? பொதுமக்களை அச்சமூட்டுவதற்காக காவல்துறை கையாளும் யுக்தி இது. இன்று தொடங்கும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது ஆகிய கோரிக்கைளை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்ப்பில் கோட்டையை நோக்கிப் பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். அதற்குத்தான் இத்தனை கெடுபிடி.

நூற்றுக்கணக்கான மக்கள் அதிகார அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை வலியுத்தி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். போராட்டக்காரர்களை கைது செய்து அழைத்துச் செல்வதற்காக பேருந்துகளும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. நான் அங்கிருந்த வழக்கறிஞர் அணியோடு இணைந்து கொண்டேன். போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டால் அதில் தலையிடுவதற்கும், போராடும் மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு அளிப்பதற்கும், போராட்டக் களத்தில் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள். அதற்காகத்தான் நானும் சென்னை சென்றேன்.

காலையில் பெய்த கனமழையின் சுவடுகள் எதுவும் தெரியவில்லை. கதிரவன் உக்கிரமாக மேலேறிக் கொண்டிருந்தான். உச்சிவெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இளம் பெண் காவலர்கள் வெயில் கொடுமையால் சற்றே களைப்புற்றனர். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வெயில் ஒரு பொருட்டாகவேத் தெரியவில்லை. விருப்பத்தோடு ஒரு வேலையில் ஈடுபட்டால் எதிர்வரும் இடர்கள் எதுவாயினும் அது ஒரு பொருட்டே அல்ல என்பதை உணர்த்தியது அவர்கள் எழுப்பிய முழக்கம்.

இடையிடையே போராட்டத்தின் அவசியம் குறித்து பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் உரையாற்றினர். “Say No CAA, Say No NRC, Say No. NPR” என்ற பாடலை ம.க.இ.க பாடகர் கோவன் பாடியபோது ஆர்ப்பாட்டம் கலை கட்டியது. பிற்பகல் 1.30 மணி அளவில் அர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு கோட்டையை நோக்கிப் பேரணியாக புறப்பட்டவர்களை அங்கேயே தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை.

கைது செய்யப்பட்டவர்கள் புதுப்பேட்டையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு சமுதாயக் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்ததை அறிந்து அங்கு சென்றோம். மறு உத்தரவு வரும்வரை அவர்களை மண்பத்தில் பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினுடையது என்பதால் அங்கும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கைதிகளை முறையாக நடத்துகிறார்களா? உணவு உள்ளிட்ட தேவைகள் மற்றும் குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்பதற்கும், குறைபாடுகள் ஏதேனும் இருப்பின் அதற்காக முறையிடுவதற்கும்தான் வழக்கறிஞர்கள் தேவைப்படுகிறார்கள்.

நகராட்சி சமுதாயக் கூடம் என்பதால் பராமறிப்பு ஏதுமின்றி பூத்பங்களாவாய்க் காட்சி அளித்தது. சும்மா கொடுத்தால்கூட யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அழுக்கேறி கிடந்தது. கழிப்பறைகளோ கவனிப்பாரற்றுக் கிடந்தது.

போராட்டக்காரர்களுக்கு உணவு ஏற்பாடு உறுதி செய்யப்பட்ட பிறகு  பகல் உணவைத் தேடினேன். புதுப்பேட்டை இன்னொரு பேரணாம்பட்டு போல இருந்தது. இங்கு சைவ உணவைத் தேடுவது, ஹரித்துவாரில் அசைவ உணவைத் தேடுவது போலாகிவிட்டது. புதுப்பேட்டையில் எங்கு திரும்பினாலும் பீப் பிரியாணிதான். பீப் இல்லாமல் சாப்பாடா? இதுதான் புதுப்பேட்டையின் புறநிலை. மாட்டுக்கறிக்கு எதிராகக் களமாடும் வடநாட்டு சங்கிகள் இங்கு வந்தால் அவர்களது சங்கும் பிரியாணி ஆகிவிடும் போல.

மீண்டும் மண்டபத்திற்கு வந்தேன். ஆயிரம் பேர் ஓரிடத்தில் அடைக்கப்பட்டிருந்தாலும் அங்கு கூச்சல் குழப்பம் இல்லை. உணவு வாங்கும்போது தள்ளுமுள்ளு இல்லை. சும்மா இருந்தாலே நேரத்தைக் கொல்வது என்பார்கள். ஆனால் இங்கே பேச்சு, பாட்டு என அறிவார்ந்த விசயங்களைப் பகிர்ந்து கொண்டதால் நேரம் போனதே தெரியவில்லை.

அனுமதியின்றி பேரணி சென்ற குற்றத்திற்காக போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பின்னர் மாலை 7 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காலையில் பெய்த மழையால் கர்ப்பம் கலைந்ததா என்பதை ‘நம் முன்னோர்கள்தான்’ உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய மழையால் சென்னையின் தூசு மாசிலிருந்து எனக்கும் விடுதலைதான். இல்லையேல் ஈஸ்னோபில் என்னை சிறைபடுத்தி இருக்கும்.

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

Friday, January 10, 2020

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? ... தொடர் - 3


வாலாசாவிலிருந்து பூந்தமல்லி வருவதற்கு ஏற்கனவே நூறு ரூபாயை செலவழித்துவிட்டேன். எனவே அண்ணா சதுக்கத்திற்குச் சாதாரணக் கட்டணத்தில் பயணிப்பதுதான் நமது கையிருப்புக்கு நல்லது என எண்ணிக் கொண்டிருந்த போது ஒரு பழைய 25ஜி வந்து நின்றது. முதல் ஆளாக ஏறினேன். ஒரு சில இருக்கைகள் தவிர பெரும்பாலான இருக்கைகள் பெய்து கொண்டிருக்கும் மழையால் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளாக மாறியிருந்தன. வானத்தைப் பொத்துக் கொண்டு மழை பொழியும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கே 25ஜி யைப் பொத்துக் கொண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது. நனையாத இருக்கைகளில் ஒரு சிலர் அமர்ந்தனர். அப்பொழுது பின்னால் வந்து நின்ற சிவப்பு நிற புது 25ஜி யை நோக்கி சிலர் சென்றனர். அதில் டீலக்ஸ் என்று வேறு போட்டிருந்ததால் நான் செல்லவில்லை. டீலக்ஸ் என்றாலே கூடுதல் கட்டணம்தானே.

காலை மணி ஒன்பது. மழை சற்றே ஓய்ந்தது. பெரும்பாலான இருக்கைகளை பயணிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர். பாதி பேர் நின்று கொண்டனர். நடத்துநரிடம் இருபது ரூபாய் கொடுத்து அண்ணா சதுக்கம் என்றேன். முப்பத்தொரு ரூபாய் என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வேலூரில் இதே தூரத்திற்கு இருபது ரூபாய்தான். சென்னையில் மட்டும் பணம் என்ன வானத்திலிருந்தா கொட்டுகிறது? 

பழுத்த அனுபவமுடைய ஓட்டுநர் 25ஜியை நகர்த்தத் தொடங்கினார். கடுமையான போக்குவரத்து நெரிசல். ஒரு அடிக்கு ஒரு முறை ஆக்சிலேட்டரில் கால் வைக்கும் போதெல்லாம் "உர்! உர்!" என 25ஜி உருமியது. பேருந்தின் ஒவ்வொரு உருமலுக்கும் கொஞ்சம் முன்னே சென்று பின்னே வரவேண்டும். உருமலின் போது முன் இருக்கையின் கைப்பிடியை இருகப் பிடித்து இரு கால்களையும் கீழே அழுத்த வேண்டும். இல்லையேல் மொகர கட்டை பேந்திடும்.

போரூர் போய்ச் சேரவே ஒரு மணி நேரம் ஆனது. ஒரு பழைய வண்டியை இந்த அளவுக்காவது நகர்த்துகிறாரே என்று திருப்திப்பட்டுக் கொள்வதை விடுத்து ஓட்டுநருக்கு வண்டி ஓட்டத் தெரியவில்லை என முணுமுணுக்கத் தொடங்கினர் ஒரு சிலர். திரை மறைவு முறைகேடுகளால்தானே இப்படி 25ஜிக்கள் உருமுகின்றன? ஓட்டுநனரை நொந்து என்ன செய்ய?

காலை மணி 10.15. போரூரைத் தாண்டி வடபழனி நோக்கி பயணித்தது 25ஜி. உருமலில் எந்த மாற்றமும் இல்லை. எந்த ஒரு அவசர வேலையாக இருந்தாலும் அதை ஒரு சாதாரண வேலையாகக் கருதினால்தான் சென்னையில் வாழ முடியும் என்பதை உணர வைத்த பயணம் இது. ஒரு வழியாய் 11 மணிக்கு அண்ணா சாலையைத் தொட்ட போது இனி நெரிசல் இருக்காது என ஒரு ஏக்கப் பெருமூச்சு.

திருவல்லிக்கேணியை நோக்கி நகர்ந்தது 25ஜி. நல்லிரவில் சொர்க்க வாசல் வழியாக வரதராசப் பெருமாள் வெளியேறிய போது அவரோடு போக முடியாதவர்கள் பகலிலாவது நுழையலாம் என படை எடுத்ததால் மீண்டும் உருமத் தொடங்கியது 25ஜி. நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் பையை நிரப்புகிறார். ஆண்டுக்கொரு முறை பெருமாள் கல்லா கட்டுகிறார். போகாத ஊருக்குத்தான் வழிகாட்டுகிறார்கள் என்பதை உணராதவரை சொர்க்கவாசல்கள் திறந்து கொண்டேதான் இருக்கும்.

காலை 10.30 மணிக்கு அண்ணா சதுக்கம் வந்து சேர்ந்தேன். இருபது கிலோமீட்டர் பயணிக்க இரண்டரை மணிநேரம். ‘பொருமை முக்கியம் அமைச்சரே’ என எண்ணிக் கொண்டே அங்கிருந்து கொடி நடையாய் விருந்தினர் மாளிகையை நோக்கிச் சென்றேன். சாலையின் இருமருங்கிலும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை மாற்றி அமைத்திருந்தனர். நூற்றுக்கணக்கான காக்கிச் சட்டைகளோடு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!


Wednesday, January 8, 2020

மார்கழி மழை: கர்ப்பத்தைக் கலைக்குமா? - தொடர் - 2


இது கர்ப்போட்டக் காலமாம். காலண்டரில்கூட போட்டிருக்கானாம். கரு ஓட்டம் என்பதே கர்போட்டம் என்றாகிவிட்டதாம். தமிழர்களின் அடுத்த ஆண்டுக்கான மழை கணிப்பு முறையாம். நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு இராசி மண்டலங்களாகவும் பிரித்து பின்பற்றும் முறையாம். மார்கழியில் சூரியன் தனூர் மண்டலத்தைக் கடக்கும் போது பூராட நட்சத்திரத்தைக் கடக்க பதினான்கு நாட்களாகுமாம். இந்த நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருமாம். இந்த நாட்கள்தான் கர்போட்ட நாட்களாம். டிசம்பர் 28 முதல் ஜனவரி 11 வரை, அதாவது மார்கழி அமாவாசையிலிருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள்.

இந்த நாட்களில் லேசான தூரல் என்றால் மழை நன்றாக கருக்கொண்டு விட்டதாகப் பொருளாம். அடுத்த ஆண்டு நல்ல மழை இருக்குமாம். ஆனால் மார்கழி இறுதியில் பலத்த மழை, சூறைக்காற்று என்றால் கரு கலைந்து விட்டதாகப் பொருளாம். அதனால் அடுத்த ஆண்டு மழை இருக்காதாம். இது நம் முன்னோர்களின் அரிய கண்டு பிடிப்பாம். ஆங்கிலக் கல்வியால் நம் பாரம்பரியத்தை இழந்து விட்டோமாம். அதனால் மழை வரும் நாட்களைத் தெரிந்து கொள்ள வாநிலை அறிக்கைக்காக தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறோமாம்.

இப்படி “நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை!” என்கிற ஒரு கூட்டம் இந்த நவீன உலகில் நம்மை பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஓரிரு முறை மட்டுமே ஜனவரியில் அதிக மழைப் பொழிவு இருந்துள்ளது. இந்த ஓரிரு ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் கர்போட்டம் நன்றாகத்தானே இருந்தது. பிறகு ஏன் மழை பொழியவில்லை? ஒரு சில ஆண்டுகளைத் தவிர பெரும்பாலும் தொடர்ந்து நாம் வறட்சிகளைத்தானே சந்தித்து வருகிறாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆர்பரித்த ஆறுகளெல்லாம் இன்று கருவக் காடுகளாய் காட்சி அளிக்கின்றனவே. படிப்படியாக மழை குறைந்து கொண்டுதானே போகிறது. இதற்கு சுற்றுச்சூழல் கேட்டைக் காரணம் காட்டி முன்னோர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.

பல ஆண்டுகளின் தொடர் நிகழ்வுகளைக் கணக்கில் கொண்டு கணிப்பதுதான் பழைய கால முறை. அறிவியல் வளராத காலத்தில் அப்படித்தமான் கணிக்க முடியும். கணிப்புப்படி நடக்கலாம். நடக்காமலும் போகலாம். நடக்காமல் போனால் ஏன் நடக்க வில்லை என்று ஆய்வு செய்வதற்கு கணிப்பு முறையில் வழியில்லை. அது கணிப்புதானேயொழிய உறுதியான முடிவு அல்ல. எனவே கணிப்பை அறிவியலுக்கு மேலாக நிறுத்துவது முட்டாள்தனம். அறிவியல், பொறியியல் துறைகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள்கூட கணிப்புகளைத்தான் நம்புகிறார்களேயொழிய அறிவியலை நம்புவதில்லை. காரணம் அவர்கள் அறிவியலை வேலைக்குச் சென்று காசு பார்க்கும் கருவியாகத்தான் பயன்படுத்தி உள்ளார்கயேயொழிய அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக அல்ல என்பதுதான் அப்பட்டமான உண்மை.

அறிவியல் என்பது வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சுழல் ஏணி போன்ற ஒரு தொடர் நிகழ்ச்சிப் போக்கு. அது சூழல் மாறுபாடுகளையும் கணக்கில் கொண்டு வளர்வது. அறிவியல் ஓடும் ஆற்று நீரைப் போன்றது. ஆனால் கணிப்பு என்பது தேங்கிய குட்டை நீர் போன்றது. எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது என்கிற இயங்கிலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சூழல் மாறுபாடுகள் பற்றி கணிப்பதற்கு அதனால் முடியாது. இதற்கான வழிமுறை எதுவும் அதனிடம் கிடையாது. முன்னோர்களின் கணிப்புகளை தூக்கி நிறுத்தி அதற்கு அறிவியல் சாயம் பூச முற்படும் அவர்களின் வழித் தோன்றல்கள் தங்களது முன்னோர்களின் வழியில் இன்று கணித்துச் சொல்ல வேண்டியதுதானே. யார் தடுத்தார்கள்?

சரி! அவர்கள் முன்னிறுத்தும் இந்த முன்னோர்கள் யார்? “நம் முன்னோர்கள் யார்? குரங்குதானே நம் முன்னோர்? குரங்கிலிருந்து வந்தவன்தான் மனிதன். ------ எனக்கு யார் முன்னோர்கள்? ரிஷி, யாக்ஞவல்கியர், நாரதர், மனு இவர்கள் யார்? பத்து கோடி வருஷம் வாழ்ந்தார்கள் என்கிறான்! ஒருவனாவது மனிதனுக்குப் பிறக்கவில்லை. கழுதைக்கும், குதிரைக்கும், புலிக்கும், கரடிக்கும், பன்றிக்கும் இப்படி பிறந்தான். அஸ்திவாரமில்லாத புளுகு கற்பனைகள் இது. முன்னோர் சொன்னது, எழுதியது என்ன? சூத்திரன் படிக்கக் கூடாது பதவியில் இருக்கக் கூடாது என்பதுதானே? மனுவிலும் கீதையிலும் உபநிஷதத்திலும் காணப்படுவது அதுதானே?----“  என்கிறார் பெரியார். சங்க இலக்கிய காலத்திற்குப் பிறகு நம் முன்னோர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. கடந்த இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றில் நம் முன்னோர்கள் தற்குறிகளாகத்தான் வைக்கப்பட்டிருந்தனர். அப்படி இருக்க நம் முன்னோர்கள் எல்லாம் புத்திசாலிகளாக, அதுவும் இன்றைய நவீன அறிவியலுக்கு சவால் விடும் அளவிற்கு இருந்தார்கள் என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது.

முன்னோர் புராணம் படிக்கும் நண்பர்களே! நாம் நமது பிள்ளைகளிடம் பேசும் போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? “அட சும்மா இருப்பா. உனக்கு ஒன்னும் தெரியாது. நீ அந்த காலத்து ஆளு!” என்று சொல்லும் போது நாம் வாய்மூடி மௌனியாகத்தானே இருக்கிறோம். நம் கண்முன்னே  நம்மையே அடுத்த தலைமுறை ஏற்க மறுக்கும் போது நீங்கள் என்னடாவென்றால் ஓராயிரம் தலைமுறைக்கு முன்னர் சொன்னதை ஏற்கச் சொல்கிறீர்கள். 

ஊரான்

தொடரும்


தொடர்புடைய பதிவுகள்

ஜெ.பி-யிலே ஒரு நாள்!

ஊர்ப் பயணம்! கலைஞருக்கு 'ஓட்டு' விழுமா?

ஊர்ப் பயணம்! காலை நேர அனுபவம்!

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!