Tuesday, 15 March 2011

அறிவை ஆண்டவனா கொடுக்கிறான்?

"அறிவிருக்கா?”

"முட்டாள், முட்டாள்”.

"இது கூடத் தெரியாம இருக்க?”

"எந்த ஊர்?”

"எங்க படிச்ச?”

"உனக்கு எத்தனை முறைதான் சொல்லறது?”

"மர மண்ட, மர மண்ட”.

"உனக்கு சொல்லிக் கோடுத்தே எனக்குத் தாலி அறுந்திடும் போல".

இப்படி திட்டு வாங்காத ஆளே இருக்க முடியாது. 'இவங்கிட்ட திட்டு வாங்கறத விட சும்மா இருக்கலாம்' என திட்டு வாங்க முடியாமல் வேலையை விட்டே ஓடுபவர்கள் பலர்.

ஏன் இந்த நிலை?

தான் செய்கிற வேலையைப் பற்றிய புரிதலும்,அறிவும் இல்லாத காரணத்தால்தான் இப்படி எல்லாம் நடக்கிறது.

தெரிந்த வழிமுறைகளில் முடிந்தவரை அறிவைப் பெருக்கிக் கொள்ள முயற்சிப்போர் உண்டு.  முடியாது போனால் "இறைவா எனக்கு அறிவைக் கொடு!" என ஆண்டவனிடம் இறைஞ்சுவோரும் உண்டு. மதம் கடந்து மறக்காமல் தனக்குத் தெரிந்த அனைத்துக் கடவுளர்களையும் அன்றாடம் வழிபடுவதும் உண்டு. மகாத்மா சொன்னார், மகரிஷி சொன்னார் என தியானங்களை (meditation) நாடுவோரும் உண்டு.

என்னதான் முயன்றாலும் அறிவு மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏறமாட்டேங்குது. இதுதான் பலரது நிலை. அறிவை எப்படித்தான் வளர்த்துக் கொள்வது?

புலனறிவு:

நாம் காண்கின்ற காட்சிகள், கேட்கின்ற ஒலிகள், நுகர்கின்ற வாசனைகள், ருசிக்கின்ற சுவைகள், உணர்கின்ற உணர்ச்சிகள் (sensation) இவையே ஐம்புலன்களின் (கண், காது, மூக்கு, வாய், மெய்) ஊடாக நாம் பெறும் புற உலகின் உள்ளீடுகள் (input). இதைத்தான் புலனறிவு என்கிறோம். இது அறிவின் முதற் கட்டாகும். இதற்கு புற உலகில் உள்ள பொருட்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். இத்தகைய முதற்கட்ட அறிவு அனுபவங்களிலிருந்தே தொடங்குகிறது.

நான்கு வயதே ஆன நமது வீட்டுக் குழந்தைகள் செல்பேசிகளையும் கணிணிகளையும் கையாளும் போது அசந்து போகிறோம். ஆனால் நாற்பது வயதிலும் குறுஞ்செய்தி அனுப்பத் தெரியாமல் முழிக்கிறோம். நான்கு வயதுக் குழந்தைக்கு இருக்கும் அசாத்தியத் திறமை நமக்கு இல்லாமல் போனது ஏன்?  செல்பேசியோடு கொண்டுள்ள தொடர்புதான் இதைத் தீர்மானிக்கிறது.

புற உலகோடு நாம் எந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறோமோ, நெருங்கியிருக்கிறோமோ அந்த அளவுக்கு நமது புலனறிவு அதிகரிக்கும். 

ஐம்புலன்களில் உள்ள குறைபாடுகளுக்கு ஏற்பவும்,அவைகளை முழுமையாகப் பயன்படுத்தாத போதும், புற உலகோடு நெருக்கமில்லாத போதும் ஐம்புலன்களுக்குக் கிடைக்கும் உள்ளீடுகள் குறைவாகத்தான் இருக்கும். அவ்வாறு இருப்பது முதற்கட்ட அறிவைப் பெறுவதில் உள்ள குறைபாடாகும்.

பகுத்தறிவு:

வெவ்வேறு சூழலில் புலனறிவின் மூலம் பெற்ற விவரங்களை ஒழுங்கு படுத்தி, அவற்றை ஒருங்கிணைத்து பார்க்கிறோம்.பிறகு பகுப்பாய்வு செய்கிறோம். மதிப்பீடு செய்கிறோம். கருத்துக்களை (concepts) உருவாக்குகிறோம். இத்தகைய அறிவை பகுத்தறிவு என்கிறோம். பகுத்தறிவு புலனறிவைச் சார்ந்திருக்கிறது. புலனறிவு பகுத்தறிவாக வளர்க்கப்பட வேண்டியுள்ளது. இதுதான் அறிவு பற்றிய கோட்பாடாகும். இது அறிவைப் பெறுவதற்கான இரண்டாவது கட்டமாகும்.

கணித மேதை பித்காரஸை அறியாதவர்கள் இருக்கமுடியாது. ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் மீது வரையப்படும் சதுரத்தின் பரப்பளவு,மற்ற இரு பக்கங்களின் மீது வரையப்படும் சதுரங்களின் பரப்பளவுக்குச் சமம். இந்தத் தேற்றம் தெரியாமல் பத்தாம் வகுப்பைத் தாண்ட முடியாது. தேற்றம் தெரியுமேயொழிய இதன் பயன்பாடு பலருக்குத் தெரியாது. கட்டடங்கள், பாலங்கள் கட்டும் போது பொறியாளர்களுக்குப் பயன்படும் சூத்திரம் இது.

ஜப்பானை உலுக்கிய ஆழிப் பேரலையைப் பார்த்து நாம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறோம். ஆனாலும் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்கும் நாம், அது பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொள்கிறோம். இந்த விவரங்களை ஒருங்கிணைத்து, பகுத்துப் பார்த்து கடலில் தோன்றிய நில நடுக்கமே ஆழிப் பேரலைக்குக் காரணம் என முடிவுக்கு வருகிறோம். ஆழிப் பேரலை பற்றிய கருத்தை உருவாக்கும் பகுத்தறிவுக் கட்டம் என்பது இதுதான்.

பித்தகாரஸ் ஒரு முறை கடற்கரையில் உட்கார்ந்து கடலையேப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதிகாலை நேரம். கடல் அமைதியாய் இருக்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் கடலில் எதுவுமே தென்படவில்லை. சற்று நேரத்தில் பறக்கும் ஒரு கொடி மட்டும் தெரிகிறது. சிறிது நேரம் கமித்து கொடி மரம் தெரிகிறது. அதன் பிறகு ஒரு கப்பல் தெரிகிறது. கடல் தட்டையாக கண்ணுக்குத் தெரியும் போது கொடி-கொடிமரம்-கப்பல் அனைத்துமே ஒரே நேரத்தில் அல்லவா தெரிய வேண்டும்? அவர் கணித மேதை என்பதால் சிந்தனையில் ஆழ்கிறார். தட்டை, உருளை, கொடி, கொடி மரம், கப்பல் இவைகளை ஒருங்கிணைத்து தொகுத்துப் பார்த்து பூமி கோள (sphere) வடிவத்தில் இருக்க வேண்டும் என அறிவிக்கிறார். உலகம் உருண்டை என முதன் முதலில் அறிவித்தவரும் அவரே.

இப்படித்தான் புலனறிவு பகுத்தறிவாக வளர்கிறது.

நடைமுறை அல்லது பரிசோதனை:

அனுபவங்களிலிருந்தே முதற்கட்ட அறிவு தொடங்குகிறது. இதைத்தான் புலனறிவுக் கட்டம் என்ற பார்த்தோம். இந்த அனுபவங்களில் இருந்துதான் இரண்டாவது கட்டத்தில் சொல்லப்பட்ட பகுத்தறிவு பெறப்படுகிறது. பின்னர் அது மீண்டும் நடைமுறைக்கே சென்றாக வேண்டும். இது தொகுத்து வகுத்த கோட்பாட்டை சோதித்தறிதலாகும். அதாவது கோட்பாட்டை பரிசோதித்து அதை வளர்ப்பதாகும். இது அறிவின் வளர்ச்சிக்கான மூன்றாவது கட்டமாகும். அறிதல் முழுவதையும் தொடர்ந்து செய்வதற்கான நடைமுறை இதுதான்.

பித்தகாரஸ் உலகம் உருண்டை என சொன்னாலும் அப்படியே நம்பி விட முடியுமா? மெகலன், கொலம்பஸ் போன்றவர்களின் கடற் பயணங்களே நடைமுறையில் உலகம் உருண்டை என நிரூபிக்க உதவின. பித்தகாரசின் பகுத்தறிவு இங்கே மெகலன், கொலம்பஸ் போன்றோரால் சோதித்தறிப்பட்டுள்ளது. இதுதான் கோட்பாட்டை பரிசோதித்தறியும் மூன்றாவது கட்டமாகும்.

உலகை வெறுமனே சுற்றிப் பார்த்தாலும் உருண்டை என அறிவித்து விடமுடியாது. கண்ட காட்சி (புலனறிவு), தொகுத்து ஒழுங்கு படுத்திய கணித அறிவு (பகுத்தறிவு),கடற்பயண அனுபவம் (நடைமுறை அல்லது பரிசோதனை) ஆகிய இம்மூன்றையும் இணைக்கும் போதுதான் உலகம் உருண்டை என்ற முடிவுக்கு வரமுடிந்தது.

ஆர்க்கிமிடீசின் மிதவைக் கோட்பாடு (law of flotation), நியூட்டனின் ஈர்ப்பு விசைக் (law of gravitation) கோட்பாடு என பல கோட்பாட்டு உண்மைகள் எப்படி கண்டறியப்பட்டன? நடைமுறை அனுபவங்களின் மூலம் கண்டறிந்த புலனறிவு விவரங்கள்,பிறகு பகுத்தறிவின் மூலம் தொகுக்கப்பட்டு கோட்பாடாக்கி, அதைச் சோதித்தறிந்து பிறகு மீண்டும் நடைமுறைக்கே கொண்டு செல்லப்பட்டுதான் இவ்விதிகளைப் பற்றிய அறிவைப் பெறமுடிந்தது, பெறமுடிகிறது.

ஒரு குறிப்பிட்ட விசயத்தில் பெறுகின்ற உள்ளீடு ஒருவருக்கொருவர் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். பகுப்பாய்விற்குப் பிறகு வந்தடையும் கருத்தும், விவரங்களைப் பொருத்து மாறுபடலாம். ஆனால் நடைமுறையில் பரிசோதனைக்குப் பிறகு வந்தடையும் முடிவு கண்டிப்பாக ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் உள்ளீடும் பகுப்பாய்வும் போதுமானதாக இல்லை என்று பொருள்.

சாதாரண நீர், குளிர்ந்த நீர், சூடான நீர், நீராவி, பனிக்கட்டி என தண்ணீரின் பல்வேறு நிலைகளை ஐப்புலன்களின் மூலம் நடைமுறை அறிவைப் பெறுகிறோம். ஆனால் தண்ணீர் பற்றி பகுப்பாய்வு செய்து தொகுத்த கருத்தை அதாவது அதன் பண்புகளை நடைமுறையில் சோதித்தறிந்த பிறகே இறுதி செய்கிறோம். ஜீரோ டிகிரியில் தண்ணீர் பனிக்கட்டியாவதும், நூறு டிகிரியில் நீராவியாவதும் நடைமுறை பரிசோதனையின் மூலம் வந்தடைந்த முடிவுகள். தண்ணீர் பற்றிய இத்தகைய அறிவு மேற்கண்ட மூன்று கட்டங்களினூடாகத்தான் பெறப்பட்டன. இன்று யார் சோதித்தறிந்தாலும் இதே முடிவுகள்தான் வரும். இதைத்தான் அறிவியல் பூர்வமானது என்கிறோம்.

அறிவை வளர்த்துக் கொள்ளவும், உண்மையைக் கண்டறியவும் அன்றாடம் நாம் கடைபிடிக்கும் வழிமுறை இதுதான். இது ஒரு இயங்கியல் நிகழ் முறை. மேற்சொன்ன மூன்று அடுத்தடுத்த கட்டங்களினூடாக சுழல் வட்டம் போல நடக்கும் இயக்கமாகும்.

இதற்கும் அப்பால் அறிவை வளர்த்துக் கொள்ள வேறு வழிமுறைகள் கிடையாது. ஆண்டவன் அறிவைக் கொடுக்கிறான் என்பதெல்லாம் ஆண்டவனைத் தக்கவைத்துக் கொள்ள ஆன்மீக 'அறிவாளிகள்' செய்யும் முயற்சிகளே.

குறிப்பு: அறிவின் வளர்ச்சி பற்றி ஜார்ஜ் தாம்சன் அவர்கள் எழுதிய "மனித சாரம்" என்ற நுலில் நான் படித்து புரிந்து கொண்டதிலிருந்து எழுதப்பட்ட கட்டுரை. 

ஊரான்

whatsapp குழுவில் பகிர்ந்த போது நண்பர்களின் கருத்துக்கள் கீழே:
*****
ஞானசேகரன்: ஒரு விடயத்தை விளங்கிக் கொள்ளும் பக்குவம், அறிவு வேண்டும். அதாவது, முன்பு பெற்ற   அறிவு (கல்வி) மற்றும் அனுபவங்களைக் கொண்டு விடயத்தை பகுத்துக் கற்றுக் கொள்ளும் அடிப்படை அறிவு. அது இல்லை என்றால் நல்ல, பயனுள்ள விடயமாக இருந்தாலும். எப்படி விளக்கினாலும் பயனற்று போகும். அதனால்தான் கல்வி கற்பதற்கு படிநிலைகள் வகுக்கப்பட்டுளளன.
கோட்பாடுகளும், நிரூபனங்களும் முக்கியமல்ல, மாறாக அவற்றின் பயன்பாடே முக்கியம். எடுத்துக்காட்டாக, கொத்துவேலை, மரவேலை செய்பவர்கள் பெரும்பாலோருக்கு சதுரம், வட்டம், முக்கோணம் பற்றிய பண்புகள் (கோட்பாட்டு அறிவு) தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் அனுபவ அறிவைக் கொண்டு திறம்படப் பயன்படுத்துவதைக் காணமுடிகிறது.

கருவிகளின் நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க முன்பு நிருவப் பட்டவை மாறும். 

அறிவியலில் எல்லா விடயங்களுக்கும் நிரூபணம் கிட்டாது/முடியாது.
அன்பு, அறிவு, மகிழ்ச்சி, துன்பம், நட்பு, எண்ணம், நோக்கம், ... ? வாழ்வில் இன்றியமையாத இவற்றை அனுமானிக்க முடியும். அனுமானம் முற்றும் சரி என்று பொருளாகாது. இதுவே நடைமுறை.

****
ஒரு விடயத்தை தெளிவாக முழுமையாக அறிந்து கொள்ள அறிவு அடிப்படை அறிவு பட்டறிவு  என்று எல்லா இளைய சகோதரிகள் நமக்கு அனுகூலமாக  இருந்தாலும் அமைந்தாலும் செயல்பட்டாலும் ...

மன இறுக்கம் இல்லாத திறந்த மனது அதாவது ஒன்றை அறிந்து கொள்ளும் விருப்பம் தடங்கலற்ற தொடர்ச்சியான ஈடுபாடு  என்ற மூத்த சகோதரியின் தயவும் ஒத்துழைப்பும் அவசியம் ஆகும் இதுவே முதல்நிலை என்ற வாசல் ஆகும் ...

**** 

*****

Friday, 11 March 2011

யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று!

சமீபத்தில் நண்பர் ஒருவர் புதுமனைப் புகுவிழா நடத்தினார். கிரஹப்பிரவேசத்துக்குரிய சகல சம்பிரதாயங்களோடுதான் இந்த விழாவும் நடைபெற்றது. நடுத்தர வர்க்கத்து இரசனைக்கேற்பதான் வீடு கட்டியிருந்தார். விழாவிற்கு வந்தவர்கள் வீட்டை ஒரு நோட்டம் விட்ட பிறகு இது நல்லா இருக்கு. அது எதற்கு? இங்கே இதை வைக்கலாம். அதை அங்கே வைக்கலாம். பக்கத்தில் உள்ள காலியிடம் யாருடையது? எனக் கேள்விகளை எழுப்பி சிலவற்றிற்கு பதிலையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வீட்டைக் கட்டியவரோ 'பார்க்கலாம்' என்பது போல தலையசைத்தார். தலையை மட்டும்தான் ஆட்டமுடியும். ஏற்கனவே கடன் எனும் ஈட்டி தலைக்கு மேலே தயாராய் இருக்கிறது.

எல்லோரும் வீட்டைப் பார்த்தபோது நான் மட்டும் ஐயரையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ஐயர் அல்ல இரண்டு ஐயர்கள் வந்திருந்தார்கள். முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இளவயது ஐயர்கள். மாநிறத்தில் வாட்டசாட்டமாய் வாலிப மிடுக்கோடு இருந்தார்கள். இவர்கள் மந்திரம் ஓதும் ஐயர்கள் மட்டுமல்ல, மல்யுத்தத்திற்கும் தயாராய் இருக்கும் பரிவாரக் காளைகள் என்பதை உடற்கட்டு எடுத்தியம்பியது. தேவநாதன்களின் சூட்சமம் இதுதானோ? 

ஐயர்களைப் பார்க்க வேண்டுமானால் காலை ஆறுமணிக்குள் செல்ல வேண்டும். ஆறு மணிக்குமேல் கிரஹப்பிரவேசம் நடத்தப்படாது. பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அப்போது இருப்பார்கள். நண்பர்கள் எல்லாம் பின்னர்தான் வருவார்கள். இது வாடிக்கை.

நெருப்புக் குண்டம் வைத்து யாகம் வளர்த்தார்கள். வீட்டு உரிமையாளரும் அவரது துணைவியாரும் புதுமணத் தம்பதியராய் மாறியிருந்தார்கள். ஐதீகப்படி இது அவர்களுக்கு இன்னொரு திருமணமாம். ஐயர் ஏதேதோ மந்திரங்களைச் சொல்லி வீட்டில் புகையைக் கிளப்ப வந்திருந்தோர் கண்களைக் கசக்க சம்பிரதாயங்கள் முடிந்தன. ஒன்றரை மணி நேரத்தில் வேலை முடிந்தது. ஐயர்களின் வேலை நேரத்தை ஆண்டவன் அன்றே தீர்மானித்து விட்டான். அதற்கு மேல் நீங்கள் வேலை வாங்கினால் அது தெய்வக் குத்தம் ஆகிவிடும். 

அக்கினியில் எரிந்தது போக மீதியை சுருட்டி மூட்டைக் கட்டினார்கள். இது ஒரு ஐநூறு தேரும். ஒன்றரை மணி நேர கூலி மட்டும் ஆயிரத்து ஐநூறு. மொத்த வசூல் இரண்டாயிரம். எந்தத் தொழிலில் இத்தனை வரும்படி வரும்?

பிரவேசமெல்லம் விடிவதற்குள் முடிந்துவிடும். அதன்பிறகு 6-7.30, 9-10.30 என இரண்டு முகூர்த்தங்களை நடத்தினால் மேலும் ஒரு ஆறு தேறும். ஆயிரமாயிரமாய் ஐயர்களுக்கு அள்ளித் தரும் அட்சய பாத்திரங்களையும் அவர்களே தயாரித்து வைத்துள்ளதுதான் அவாளின் சாமார்த்தியம்.

இடுப்பைச் சுத்தி 'செல்போன்கள்', அடுத்த முகூர்த்தத்துக்கு விரைந்து செல்ல 'ஸ்பிளண்டர்கள்', மூட்டை முடிச்சை எடுத்துச் செல்ல மூட்டையின் அளவைப் பொருத்து 'டி.வி.எஸ் ஃபிப்டியிலிருந்து' மகிழுந்து (car) வரை என சகல வசதிகளும் இவர்களுக்குச் சொந்தம். நம்மால் ஐம்பதுகளில்தான் பூமி பூஜையே போடமுடிகிறது. அவாளெல்லாம் முப்பதுகளில் பிரவேசத்தையே முடித்து விடுகிறார்கள். பாலைக்கூட இன்று 'பாக்கெட்டில்' கேட்கும்போது முடியாதா என்ன?

"'அங்கிள்', நீக்களும் கோயிலுக்குப் போங்க. எங்கள மாதிரி 'கார்' வாங்கலாம்" என என்னிடம் விளிக்கும் ஏதும் அறியா எதிர் வீட்டு 'ப்ரி.கே.ஜி' பெண் குழந்தைக்கு எப்படி தெரியும் இதெல்லாம் அவாள் மட்டுமே செய்யும் தொழில் என்று.   

உலக மயத்தால் அமெரிக்காவின் கதவுகள் திறந்த போது முதல் ஆளாக உள்ளே நுழைந்தவர்கள் ஐயர்கள்தானே. ஒரு சிலர் 'ஐ.டி'துறையில் ஐக்கியமாக, எஞ்சியவர்களுக்கோ ஏக கிராக்கி. பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்யலாம் என நாம் யோசிப்பதற்குள் பையை எடுத்துக் கொண்டு அவாளெல்லாம் கிளம்பி விடுகின்றனர். மந்திரம் ஓதும் தொழிலுக்குதான் எத்தனை மவுசு. யானை செத்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அது இதுதானோ!

ஒரு பக்கம் உலக மயத்தால் ஆட்குறைப்பு, ஆலைமூடல் என உள்ளதும் பறிபோகுதே என நாம் அங்கலாய்க்கிறோம். வாழ்க்கை நெருக்கடிக்கு வழி தெரியாததால் பரிகாரங்களை நாடுகிறோம். ஐயர்கள் இல்லாமல் பரிகாரம் ஏது? ஐயர்களே எட்டிப் பார்க்காத சேரிகள்கூட இன்று அவாளின் தொழிற் பேட்டைகளாக மாறிவிட்டன. தொழில் பெருகிவிட்டது. பரிகாரம் செய்ய தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. அதியமான்=லிபர்டேரியன் 'தியரிப்படி' இங்கே 'டிமாண்ட்' அதிகம். 'சப்ளையோ' குறைவு. விலை... கூலி.....கட்டணம் ஏறாதா பின்ன? 

இன்று மந்திரம் ஓத ஆள் பற்றாக் குறை என்றால் பாருங்களேன். ஆள் பற்றாக் குறையை சமாளிக்க அய்யன் கலைஞர் ஆணை பிறப்பிக்க, அதைப் பிடுங்கி அடுப்பில் போட்டு விட்டார்கள். சாஸ்திர சந்தையில் போட்டிக்கு இடமில்லையாம். ஊக்குவிப்பது போலத் தோன்றினாலும் இறுதியில் போட்டியாளர்களை ஒழிப்பதுதானே உலகமயம், தாராளமயம், தனியார்மயம். உலக மயத்தின் முதல் வெற்றி இங்கேதான் தொடங்குகிறது.

இன்றைய சாஸ்திரத் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது உலக மயம்தான். அதை 'மோனோபோலியாக' தக்கவைத்துக் கொள்வது அவாளின் சமார்த்தியம்.

ஒன்றரை மணி நேரத்தில், சிறுநகரங்களில் ஆயிரங்களையும் சென்னை போன்ற பெருநகரங்களில் பத்தாயிரங்களையும் சுலபமாய் அள்ள முடியும். கை ராசிக்கேற்ப ஆயிரங்கள் அதிகமாகுமேயொழிய ஒரு போதும் குறையாது.

யார் சொன்னது? உலக மயம் வாழ்வைப் பறிக்கும் என்று! 

Tuesday, 8 March 2011

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

எனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அண்ணன் முறை வேண்டும். அவர் இறந்த போது நான் வெளியூரில் இருந்ததால் சாவுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் காரியத்தில் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் ஊருக்குச் சென்றேன்.


உழவனின் மரணம் பேரிழப்பல்லவா?

அவரது வீடு மலையடிவாரம் காட்டோரத்தில் இருந்தது. ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்செடிகளே காணப்பட்ட கரட்டு மேட்டில் இன்று வேர்க்கடலையும் கரும்பும் செழித்திருந்ததைக் கண்டு நான் வியந்து போனேன்.

ஒரு பக்கம் பொன் விளையும் பூமியெல்லாம், நகரவாசிகளால் நாசமாக்கப்படும் போது, ஏதும் அறியா எனது அண்ணன் போன்ற விவசாயிகள் எதற்கும் உதவா மண்ணை, பொன் விளையும் பூமியாக மாற்றி விட்டல்லவா இறக்கிறார்கள். உறவினர் என்பதைவிட ஒரு உழைப்பாளியை இந்த உலகம் இழந்த விட்டது என்பதல்லவா எனக்கு..... ஏன் நமக்கு பேரிழப்பு.

தலை நிறைய பூச்சூடி, பட்டுப் புடவை கட்டி, மணப் பெண் போல ஜோடிக்கப்பட்ட எனது அண்ணி மாட்டுக் கொட்டகையில் தனியாக உட்கார்ந்திருந்தார். அண்ணன் இறந்த பிறகு பதினைந்து நாட்களாக மாட்டுக் கொட்டகையில்தான் வாசம். காரியம் முடியும் வரை வீட்டிற்குள் செல்லக் கூடாதாம். வீடு என்ன மாடி வீடா? கதவு வைத்த கொட்டகை அவ்வளவுதான். இவைதான் இன்று இந்தியாவில் எண்ணற்ற ஏழை விவசாயிகளின் பங்களாக்கள்.

துக்கம் விசாரிக்க வருபவர்கள் எல்லோருடனும் வாஞ்சையாய் கையைப் பிடித்தும், கட்டியழுதும் தனது சோகத்தை தணித்துக் கொண்டிருந்தார் அண்ணி. என்னாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் “எப்பிட்ரா இருக்க?” என்று கேட்ட அவரது குரல் மட்டும் என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. ஆனால் அவர் எப்பொழுதும் பீடியும் கையுமாகத்தான் இருப்பார்.  இப்படித்தான் நூறு வயது வாழ வேண்டியவர்கள் அறுபது வயதிலேயே ஆயுளை முடித்துக் கொள்கின்றனர்.

புண்ணியாதானம்!

ஐயர் வந்தார். வீட்டில் செய்யும் புண்ணியாதானம் என்ற சடங்கை முடித்தார். வடக்கே காட்டுப் பக்கம் ஒரு சிறுவனோடு சென்றார்.

”எங்கே இந்தப் பக்கம் போறார்?” எனக் கேட்டேன்.

 ”தண்ணி அடிக்கப் போறார்” என்றார் அருகிலிருந்த உறவினர்.

கல்லாணமோ கருமாதியோ தண்ணியடிப்பதுதானே இன்றைக்கு 'பேஷன்' என்பதால் நான் தப்புக் கணக்குப் போட்டு விட்டேன்.

"என்ன தண்ணி அடிக்கவா”? என ஆச்சரியமாய் நான் கேட்க, புண்ணியாதானம் முடித்து பங்காளி வீடுகளின் கூரைகளில் புனித நீரைத் தெளித்து வரவேண்டுமாம். அது ஐதீகம். எதற்கு என்றெல்லாம் எவரும் கேட்பதில்லை. ஐயர் சொன்னால் ஏன் என்று கேட்கக்கூடாது. இப்படித்தானே பல சப்பிரதாயங்களைப் புகுத்தி மக்களை மடமையில் வைத்துள்ளார்கள். அதுதானே பார்ப்பனர்களுக்கு மூலதனம். இல்லை என்றால் அவாளெல்லாம் அமெரிக்கா செல்லும் போது இவாளைப் போன்ற சிலர் இன்னும் மலைக் கிராமத்தைக்கூட விடவில்லையே ஏன்?

ஆங்காங்கே நிலத்ததையொட்டியே உறவினர்களின் வீடுகளும் இருந்ததால் ஒவ்வொரு வீடாகச் சென்று தண்ணீர் அடித்துவிட்டு ஏரி ஓரம் உள்ள குளக்கரைக்கு வந்து சேர்ந்தார் ஐயர். சம்பந்தம் கட்டும் சடங்கை முடிக்க வந்தவர்கள் ஏற்கனவே அங்கே கூடியிருந்தனர்.

ஊர்ப்பக்கம் வரும் ஒற்றைப் பேருந்தை நம்பி, தொலை தூர ஊர்களிலிருந்து ஒரு சிலர் வந்திருந்தனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களிலும், மிதி வண்டிகளிலும் பலர் வந்திருந்தனர். பெரும்பாலானோரின் கைகளில் ஜவுளிக்கடைகளின் பைகள் தொங்கின.

சம்பந்தம் கட்டுதல்!

இறந்து போனவரின் உறவினர்களுக்கு, அவரவர்களின் சம்மந்தி முறை உறவினர்களும், திருமணமாகிச் சென்ற அக்கா-தங்கைகள் தங்களது அண்ணன்-தம்பிகளுக்கும் சம்மந்தம் கட்டுவது காரியத்தில் காலம் காலமாய் கடைபிடிக்கப்படும் ஒரு சம்பிரதாயம். வேட்டி மற்றும் துண்டு என இருந்த சம்மந்தம், பிறகு 'பேண்ட்' சட்டையாய் மாறியது. சில சமயங்களில் சிறுவர்களுக்கான 'ரெடிமேடு'களாய்க்கூட மாறுவதுண்டு. ஆனால் இன்று பணத்தையே சம்மந்தமாய் மொய் போல சிலர் கொடுத்து விடுகிறார்கள். துணியோ பணமோ எல்லாமே கல்யாண மொய் போல பின்னால் செய்ய வெண்டிய கடன்தானே. அதனால் இன்று ஆயிரங்களில்கூட சம்மந்தம் போடுகிறார்கள்.

நான் இது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் கடைபிடிப்பதில்லை . சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில்லை என்றாலும் வெறுத்து ஒதுங்கிக் கொள்வதில்லை. நல்லது கெட்டதுகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். பெரும்பாலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அர்த்தமற்றவைகளாக இருந்தாலும் அவற்றை கடைபிடிப்பதால் அவர்கள் கெட்டவர்கள் இல்லையே. அறியாமையால்தானே இவைகளை மக்கள் கடைபிடிக்கிறார்ள். அறியாமையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிதான் இங்கு தேவையேயொழிய ஒதுங்கிக் கொண்டு அவர்களை வைவதல்ல.

ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

பூஜைகள் முடிந்தன. சம்மந்தம் கட்டும் சடங்கு தொடங்கியது. ஒவ்வொருவரும் ஊரையும் பேரையும் சொல்ல, அதையே ஐயர் திருப்பிச் சொல்லி, துணியையும் பணத்தையும் வாழ்த்திக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் சம்மந்தம் கட்டும் போதும் தட்டில் விழுந்த ஐந்தும் பத்தும் ஐயர் மடிக்குச் சென்றன. ஆண்டவனின் ஆசிபெற்றல்லவா கொடுக்கிறார். சும்மாவா கொடுக்க முடியும்? 

சுமார் 250 பேர் சம்பந்தம் கட்டியிருப்பார்கள். மொத்தமாக ஐயர் மடியில் சுமார் இரண்டாயிரம் சேர்ந்திருக்கும். சடங்குகள் செய்ய அழைத்து வந்தவர் கொடுக்கும் கட்டணம் தனி. அது ஒரு ஆயிரம் என்றாலும் மூன்று மணி நேரத்தில் ஐயருக்கு வரும்படி மூவாயிரம் ரூபாய். 'ஐ.டிஐ' முடித்து ஆலையில் வேலை செய்பவன் மாதத்தில் மூவாயிரம் தேத்துவதற்கு மூன்று 'ஷிப்டும்' உழைத்தாலும் முடிவதில்லையே.

அப்படி என்னதான் படித்துள்ளார் எங்க ஊர் ஐயர். ஐந்தாங் 'கிலாஸ்'கூட தாண்டவில்லை. ஐயராய் இருந்தால் என்ன? யாராக இருந்தாலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் படித்தால் எப்படித் தாண்ட முடியும்?

இவரது தந்தை பத்து ஏக்கர் நிலத்தோடு விவசாயம் பார்த்த அதிசய ஐயர். அவர் வயலில் இறங்கி உழைக்கவில்லை என்றாலும் ஒரு பணக்கார விவசாயியாய் வாழ்க்கை நடத்தியவர். என்னை ”கரிபால்டி” என்பார்கள் எனது பள்ளி நண்பர்கள். அவர் என்னைவிட கருப்பு. வாரிசும் அப்படியே. ஆரிய திராவிட இனக்கலப்புக்கு ஒரு எடுப்பான உதாரணம். இதை இழிவாக நான் சொல்லவில்லை. திராவிடர்களிலும் செக்கச் சிவப்புகளும் ஏராளமாய் இருக்கத்தானே செய்கிறார்கள். இது எதார்த்தம்.

பையனுக்கு படிப்பு இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாலையே கிடையாது. போக்கு வரத்துக்கு நடராஜாதான். பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? ஆனாலும் துணிந்து வந்தார் ஒருவர் நிபந்தனையோடு. பையன் புரோகிதம் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. திருமணத்தோடு சில மந்திரங்களை மனப்பாடம் செய்ய அடித்தது யோகம். வேறு ஒரு ஊரில் இருந்து மிதி வண்டியில் வந்து புரோகிதம் பார்த்த ஐயரும் மூப்பாகி முடியாமல் போனதால் சுத்துப் பட்டு பத்து கிராமங்களுக்கும் சேர்த்து இன்று இவர் ஒருவரே “ஆஸ்தான“ புரோகிதர்.

முக்கி முக்கிப் படித்து வக்கீலாகி வாழ்க்கையில் “செட்டில்“ ஆவதற்குள் வழுக்கை விழுந்த எனது மற்றொரு அண்ணன் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம். "என்னடா தொழில் பரவாயில்லையா?" என்றபோது பெரு மூச்சு விட்டான் “டி.வி.எஸ்.ஃபிப்டியில்“ புறப்படத் தயாராய் இருந்த ஐயரைப் பார்த்து.

அவ்வை பிராட்டி இன்று இருந்திருந்தால் "அரிது அரிது பார்ப்பனராய்ப் பிறத்தல் அரிது" எனப் பாடியிருப்பாரோ!

ஊர் வந்து சேர்ந்தேன். பயணம் முடிந்தது.

Sunday, 6 March 2011

கேப்டன் கேடட் ஆன கதை!

வாள் எடுத்து வீசுவதில் சூராதிசூரன். தோள்களைக் கொண்டு எதிரிகளைத் தூக்கி எறிவதில் இவருக்கு இணை யாரும் இல்லை. 'ஏ.கே.பார்ட்டி செவன்களும்', ஏவுகனைகளும் சரமாரியாய் குண்டு மழை பொழிந்தாலும் கையடக்க 'ரிவால்வரிலேயே' எதிரிகளை எமலோகம் அனுப்பவதில் இவர் ஒரு 'ரிவால்வர் ரீட்டா'. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை இவர் பந்தாடும் போது இவரது படையணிகள் வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும். இவர் ஒருவரே முடிப்பார். 'கேப்டன்' ஆயிற்றே.

அம்மாவும் அய்யனும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் எதிர் வரும் யுத்தத்தில்  குறுக்கே நுழைந்து எதிரிகள் இருவரையும் கோடரியால் போட்டுத்தள்ள இது ஒன்றும் கோடம்பாக்க 'ரிகர்சல்கள்' அல்லவே. இந்த யுத்தத்திற்கு படையணிகள் இல்லாமல் பப்பு எதுவும் வேகாது. ஏற்கனவே நடந்த யுத்தங்களில் இருக்கின்ற துண்டையும் தொலைத்து விட்டு கோவணத்தோடு நிற்கும் அல்லக்கைகைள் இம்முறை தனித்து நின்றால் அம்மனமாவது, அல்லக்கைகள் மட்டமல்ல 'கேப்டனுக்கே' கோவணம்கூட மிஞ்சாது.

ஏற்கனவே தனியாக வாள்வீசி, கோவணமும் பறிபோய், ஒட்டு (இரட்டை) இலையால் மானம் காத்து, இலை விலகாமல் இருக்க இன்று 'சைலன்ட்டாய்' இருக்கும் வைகோ கற்ற பாடம் பண்ருட்டிக்குத் தெரியாதா என்ன? பக்குவமாய் எடுத்துச் சொல்ல 'கேப்டனும் கேடட்' ஆனார். அம்மா தலைமையில் கண்டபடி வாள் எடுத்து வீச முடியாதுதான். என்ன செய்ய? 

இது 'டி-புரமோஷன்தானே'.வேலை ஒன்றும் போய்விடவில்லையே! யுத்தத்தில் அம்மா வென்று, அல்லக்கைகள் அள்ள வாய்ப்பளித்தால் 'ரிவோக்' ஆகாமலா போகும். அம்மாவின் ஆணையின் கீழ் இப்போதைக்கு 'கேடட்டாய்' இருப்பதே மேல்.

அம்மா இருக்க ஆண்டவன் எதற்கு?

Saturday, 5 March 2011

நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

இரண்டு நாட்களுக்கு முன்பு மகாசிவராத்திரி. சிறப்பு வழிபாடு, நாட்டியாஞ்சலி என சிவன் கோயில்கள் கலைகட்டியிருந்தன. நாட்டியாஞ்சலியைக் கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தார்களாம். வெளிநாட்டினர்கூட மெய்சிலித்தார்களாம். இருக்காதா பின்ன? காஞ்சிச் சின்னவனின் தூக்கத்தைக் கலைத்த சுவர்ணமால்யா ஈசனை எழுப்ப ருத்ரதாண்டவம் ஆடினால் பார்ப்பவன் பரவசமடையமாட்டானா?

அம்மி அரைக்கும் மாமிகள்கூட அசைக்க முடியாத கால்களைத் தூக்கி தாண்டவமாடிய காட்சிகள் அரங்கேறின. இதெல்லாம் அவாளுக்கு வரும்படி 'சீசன்'. அமெரிக்காவிலிருந்து வந்து ஆடுகிறார்கள் என்றால் சும்மாவா வந்து ஆடுவார்கள்? 

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் கேளிக்கை விருந்து நடனங்களைப் போல மகாசிவராத்திரி மேன்மக்களின் திருவிழா.

மகாசிவராத்திரியை அடுத்து மயானக் கொள்ளை. அம்மனைக் கட்டி இழுத்து ஆற்றுக்குச் செல்கிறார்கள். கூட்டம் அலைமோதுகிறது. மக்களின் முகங்களில் மலர்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து பாட்டிமார்களைப் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல அம்மனைக் கண்டு மகிழ்கிறார்கள். இந்த மகிழ்ச்சியில் திளைப்பவர்கள் கீழ்தட்டு மக்கள். 

எதற்காக மயானக் கொள்ளைத் திருவிழா?

மகாசிவராத்திரியையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் நடத்தப்படுவது மயானக் கொள்ளைத் திருவிழா.  இதற்கு ஒரு புராணக் கதை உண்டாம்.

சிவ பெருமானுக்கு ஐந்து தலைகள் இருந்தனவாம். தனக்கும் ஐந்து தலைகள் வேண்டும் என சிவனிடமே முறையிட்டு தவம் செய்து ஐந்து தலைகளைப் பெற்றானாம் பிரம்மா. கர்வத்துடன் கயிலாயம் சென்ற பிரம்மாவை சிவன்தான் வந்துவிட்டான் என்று பார்வதி வணங்கினாளாம். பிறகு உண்மையை அறிந்த பார்வதி சிவனிடம் முறையிட்டாளாம். சிவனும் பிரம்மாவின் ஐந்து தலைகளையும் துண்டித்தானாம்.

இருப்பினும் வெட்டப்பட்ட தகைள் மீண்டும் மீண்டும் வந்தனவாம். 999 தலைகள் வந்ததும் அவைகளை மாலையாக அணிந்து கொண்டானாம் சிவன். ஆயிரமாவது தலையை சிவன் எடுத்த போது பிரம்ம கபாலம் சிவனது கையுடன் ஒட்டிக் கொண்டதாம்.

இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டதாம். ஆண்டவனுக்கே தோஷமா எனக் கேட்காதீர்கள். தோஷம் பிடித்து காடு மேடுகளில் அலைந்த சிவனைக் கண்ட மகாவிஷ்ணு, பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க அங்காளம்மனுக்கு ஆலோசனை தெரிவித்தானாம். அதர்மத்தை அழிக்க பல அவதாரங்கள் எடுத்த மாவிஷ்ணு அந்த வேலையை ஏன் அங்காளம்மனுக்கு ஒப்படைத்தான் என கேள்வி கேட்கக் கூடாது. 'ஒர்க் லோடு' அதிகமாய் இருந்திருக்கும். 

உலகில் உள்ள பயிர்களை ஒன்று சேர்த்து, உணவாக படைத்து, அதை மூன்று கவளமாக்கி, அவற்றில் இரு கவளங்களை கபாளத்தில் போடு. மூன்றாவது கவளத்தை தரையில் வீசு. அதை எடுக்கக் கபாலம் கீழே இறங்கும் போது அதை அழித்து விடு என அங்காள பரமேஸ்வரிக்கு 'பிராசஸை' விளக்கினானாம் மகாவிஷ்ணு.

அதன்படி அங்காளம்மன் பிரம்ம கபாளத்தை தனது காலடியில் மிதிக்க, சிவனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாம். இதுவே மயான கொள்ளைத் திருவிழாவாக நடத்தப் படுகிறதாம்.

அது அவாளின் கட்டுக் கதை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னதான் புராணங்களை எழுதி வைத்தாலும் உண்மையை ஒருக்காலும் மறைக்க முடியாது. அதனால்தான் மயானத்தில் அதாவது இடுகாட்டில் புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாக இத்திருவிழா இப்பொழுது மாறிஉள்ளதாக தினமணி எழுதுகிறது.

இப்பொழுது மாறவில்லை. எப்பொழுதும் அதுதான் உண்மை. புராணப்படி மும்மூர்த்திகளும் சம்பந்தப்பட்ட இந்த விழாவில் பார்ப்பணர்கள் ஏன் கலந்து கொள்வதில்லை? உயர் சாதியினர் ஒருவர்கூட எடுத்து நடத்துவதில்லையே? இது ஒன்று போதாதா இது புராணக் கதை அல்ல, புருடாக் கதை என்பதற்கு.

பாட்டிகளே படைத்தலைவிகளாய்...

இது தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாய் தொடரும் ஒரு விழா. இங்கே ஈசனுக்கு வேலை இல்லை. ஏழைகளைக் கொடுமைப்படுத்திய கயவர்களை நம் மூதாதைய மகளிர் குத்திக் கொன்று வீர மரணம் அடைந்ததைக் கொண்டாடும் நாள். கயவர்கள் யாராய் இருந்திருக்க முடியும்? ஆண்டைகளைத் தவிர.

இரத்தக் கறையோடு தொங்கும் நீண்ட நாக்கும், மடித்துக் கடித்துத் தடித்த நாக்கும்,  இரண்டுக்குப் பதிலாய் நான்கு கைகளும், அக்கைககளில் வீச்சரிவாளும் கோடரியும், உருட்டி மிரட்டும் கண்களும், அட்டைக் கரியாய் மேனியும் என சூர்ப்பநகை போல யார் இருந்திருக்க முடியும்? ஏழைகளைத் தவிர.

ஆட்டைக் கடித்து இரத்தம் குடிப்பதும், பச்சைக் கறியை கொத்துக் கொத்தாய் தின்பதும் இன்றும் இவ்விழாக்களில் நடக்கின்றனவே. இவை ஆக்ரோஷத்தின் வெளிப்பாடல்லவா? 

அம்மன்கள் இப்படி ஆக்ரோஷமாய் யாருக்கெதிராய் வெகுண்டெழுந்திருப்பார்கள்? வெள்ளையனுக்கு எதிராய் வேலுநாச்சியார் வெகுண்டெழுந்ததைப் போல அன்று ஆண்டைகளுக்கெதிராய் சில தாய்மார்கள் ஆர்த்தெழுந்திருக்க வேண்டும். அவர்களே இன்று அம்மனாய்த் தெரிகிறார்கள் நம் மக்களுக்கு. அங்காளத்தாள் தலைமையேற்றிருக்க வேண்டும். பிறகு பார்ப்பனர்கள் அவளை பரமேஸ்வரியாக்கி நிறுவனப் படுத்தியிருக்க வேண்டும்.

யார் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்?

மேல் மலையனூர் போன்ற சில ஊர்களில் செம்படவர்களும் (மீனவர்கள்), ஆற்காடு போன்ற சில ஊர்களில் வன்னியர்களும் வேலூர் விருதம்பட்டு தோட்டப்பாளையம் போன்ற சில ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் மட்டுமே இதைத் தங்கள் வீட்டுத் திருவிழாவாக நடத்துகிறார்கள். விழாவில் பங்கேற்போரும் இப்பிரிவு மக்களே. அதிலும் குறிப்பாக கீழ் வருவாய் பிரிவினர் (lower income group) மற்றும் அன்றாடங்காய்ச்சிகளே. மருந்துக்குக்கூட ஒரு உயர் சாதிக்காரனை பார்க்க முடியாது. தெரு வழியாக அம்மன் வரும் போது கும்பிடாமல் விட்டால் மரியாதை போய்விடும் என்பதாலும், சாமி குத்தம் வந்து விடுமோ என்ற அச்சத்தாலுமேயொழிய உயர் சாதியினர் யாரும் அம்மனை விரும்பி வழி படுவதில்லை.  

அங்காளம்மனைப் போல கொடுமைக்கெதிராய் கொதித்தெழவா இன்று இதுபோன்ற விழாக்கள் நடத்தப் படுகின்றன? விழாவை நடத்தும் பொருப்பு ஊர்ப் பெரியவர்களுக்கு இருந்தாலும் நடைமுறை வேலைகளை இளைஞர்கள்தான் முன்னெடுக்கிறார்கள்.

நல்ல வேளை! இதுவரை நமீதாக்கள் அம்மனாக நடிக்கவில்லை!

அண்ணன்களுக்கும், அய்யாக்களுக்கும், தளபதிகளுக்கும், கேப்டன்களுக்கும் அல்லக்கைகள் வைக்கும் கட் அவுட்களைப் போல இங்கே அம்மன்களுக்கும் கட் அவுட்டுகள். இதில் ஆக்ரோஷமாய் காட்சியளிக்கும் அம்மன்கள் அதிகம் என்றாலும் பத்மினி, கே.ஆர்.விஜயாக்களும் அம்மனாய் அவதரித்துள்ளதும் இருக்கத்தான் செய்கின்றன. குத்தாட்டம் போட்ட ரம்யாக்கள்கூட அம்மனாய் அவதாரம் எடுத்துள்ளார்கள். நல்ல வேளை நமீதாக்கள் இதுவரை அம்மன் வேடம் போட்டதில்லை.   பாவம் ஓவியர்கள்தான் என்ன செய்வார்கள்? 'ஒரிஜினல்' அம்மனை யார்தான் பார்த்தார்கள்? மனப் பதிவுகள்தானே படைப்பாய் வரும்.

இந்த ஆண்டு மயானக் கொள்ளையை என்னால் மறக்கவே முடியாது. உடல் நலக் குறைவால் அவதிப்படும் 80 வயதான எனது தந்தையை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மூத்திரப் பையை மாற்றிக் கொண்டு திரும்பி வர மாலை மூன்று மணியாகிவிட்டது. பேருந்து நிலையத்தில் ஐந்து மணிவரை காத்திருந்த பிறகே ஒரு பேருந்து வந்தது. ஏறிப் பயணித்தோம். முப்பது கிலோ மீட்டர் தூரப் பயணம்தான். ஆனால் மூன்று நகரங்களைக் கடக்க வேண்டும். 

வழி நெடுக மயானக் கொள்ளை. கூட்டம் அலைமோதியது. பேருந்துகள் ஊர்ந்துகூட செல்ல முடியவில்லை. சில இடங்களில் போக்குவரத்து நிலைகுலைந்து போனது. காவல் துறையினர்தான் என்ன செய்வார்கள்? கட்டுப் படுத்தமுடியவில்லை.

மூன்று மணி நேரப் பயணம். பேருந்து நிலையத்தில் காத்திருந்த இரண்டு மணி நேரம். ஆக மொத்தம் ஐந்து மணி நேரம். ஒரு மணி நேரத்திற்குப் பதிலாக ஐந்து மணிநேரமானால் எரிச்சல் வராமலா இருக்கும்? பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்கு ஆட்டோவில் சென்றபோது மயங்கிச் சுருண்டுவிட்டார் எனது தந்தை. வாந்தியும் வேறு. எப்படி இருந்திருக்கும் எனக்கு? எவன் கண்டு பிடித்தான் 'பஸ் டேவை' என்று சில பதிவர்கள் கேட்பது போல எவன் கண்டுபிடித்தான் மயானக் கொள்ளையை என்று கேட்கவா முடியும்.

விழாக்கள் தேவைதானா?

துன்ப துயரங்களால் அவதிப்படும் மக்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தவும்,  மயானத்தில புதைக்கப்பட்ட மூதாதையருக்கு படையல் இடும் விழாவாகவும் இது போன்ற விழாக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படத்தான் செய்கின்றன. அவர்களும் பொது மக்கள்தானே. வேறு ஒரு தரப்பினர் ஒரு விழா கொண்டாடும் போது அவர்களும் இது போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகத்தானே செய்கிறார்கள். யாரை யார் நொந்து கொள்வது?

விழாக்கள் தேவைதானா என்பது பரிசீலனைக்குரியவைதான். தேவையற்ற விழாக்களை தவிர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்தான். அதுவும் இன்றைய விழாக்கள் எதுவாக இருந்தாலும் தண்ணியில் மிதக்காமல் நடப்பதில்லையே. குறிப்பாக குடிக்காத இளைஞர்களே இன்று இல்லை என்ற நிலைதான் எங்கும் நிலவுகிறது. இதற்காகவே விழாக்களை ஒழித்துக் கட்டினால் தவறொன்றும் இல்லைதான்.

ஆனால், மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகிவிட்ட விழாக்களை ஒரேயடியாக ஒழித்துவிட்டு எந்தத் தொந்தரவும் இல்லாமல் யாராலும் இப்போதைக்கு வாழமுடியாது. விழாக்களில் கிடைக்கும் மகிழ்ச்சி அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு கிடைக்கும் போது தேவையற்ற விழாக்கள் கண்டிப்பாய் காணாமல் போகும்.

ஊரான்