Thursday, 22 November 2012

நாளேடுகளில்.....! சொன்னதும் சொல்லாததும்!


சொன்னது
“நீ ராசி இல்லாதவள் என்று கூறியதால் ராணுவ வீரரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை! திருமணமான ஐந்து மாதத்தில் பரிதாபம்!”

சொல்லாதது
ராணுவ ‘வீரனை’ இதற்காக உள்ளே தள்ளலாம். ராசி பலன்கனை நம்ப வைக்கும் சோதிடக்காரர்களையும் அவைகளைப் பரப்பும் ஊடகங்களையும் எங்கே தள்ளுவது?

சொன்னது
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் குண்டர் சட்டத்தில் கைது! வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சத்து நாற்பதாயிரம் ஏமாற்றி விட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார்!”

சொல்லாதது
ஆட்சி அதிகாரம் ஏதும் இல்லை என்றாலும் அல்லக்கைகள் ‘வெள்ளையும் சொள்ளையுமாக‘ ஸ்கார்பியோவில் திரிவதன் ரகசியம் இதுதானோ!

சொன்னது
“தருமபுரி கலவரத்துக்கு பா.ம.க காரணம் அல்ல! தாக்குதல் நடத்தியவர்களில் நாயுடு, செட்டியார், குறும்பர் என அனைத்து சுமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் அடங்குவர். பா.ம.க.மட்டுமல்ல எல்லா கட்சியினரும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்!” டாக்டர் ராமதாஸ் பேட்டி!

சொல்லாதது
இப்படி நீங்களே குற்றத்தை ஒப்புக் கொண்ட பின் எதற்காக “மைனர் கல்லாணம்” என்கிற தகிடு தத்தங்கள்?

சொன்னது
“சுசி ஈமு பண்ணை நிர்வாக இயக்குநர் குரு குண்டர் சட்டத்தில் கைது!
இவர் மீது மோசடி வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன!”

சொல்லாதது
பால்தாக்கரே மரணத்தையொட்டி வெளியான மிகச்சாதாரண ஒரு செய்திக்கு ‘லைக்’ கொடுத்ததற்கே கைது செய்கிறீர்களே! கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் ஈமு கோழி பண்ணைகளை மக்கள் ‘லைக்’ பண்ணக் காரணமான ஊடகங்களை என்ன செய்வது?

Monday, 12 November 2012

தித்திக்கும் தீபாவளி! யாருக்கு?


பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து மீண்டும் நாடு திரும்பி, ஆட்சிப்பொறுப்பு ஏற்க வந்த இராமனுக்கு அயோத்தி நகர மக்கள் கொடுத்த வரவேற்பே பின்னாளில் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்பது வட இந்தியர்களின் நம்பிக்கையாம்.

நரகாசுரனை, கிருஷ்ணன் வதம் செய்த நாளை தென்னக மக்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்களாம்.

இதோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை. இந்தியாவையும் தாண்டி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறதாம் தீபாவளி.

சாதி, மத, இன, மொழி பேதமின்றி நல்லிணக்கத் திருவிழாவாக தீபாவளி நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறதாம். இந்துவைத் தவிர வேறு எந்த மதத்துக்காரன் தீபாவளியைக் கொண்டாடுகிறான் என்று தெரியவில்லை – அதுவும் பல நூற்றாண்டுகளாக. இந்த சில - பல என்பதற்கு அளவுகோல் என்னவோ ? அது அவர்களுக்கே வெளிச்சம்! எந்தத் தீபாவளி நாயக்கன் கொட்டாய்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

கதைகள் எதுவாக இருப்பினும் அதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் வியாபாரிகளும் நாளேடுகளும் தொலைக்காட்சிகளும் உங்களை விடப் போவதில்லை.

தொடரும் மின்வெட்டால் நாம் இருளிலேயே மூழ்கிக் கிடந்தாலும் – எப்போது மின்சாரம் வரும் என ஏங்கி ஏங்கி ஏமாற்றம் அடைந்தாலும், மின் கட்டணம், பெட்ரோல்-டீசல் விலை, பேருந்து கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என அரசின் புதிய புதிய கொள்கைகளால் இருக்கிற பொழப்பும் நிலைக்குமா – எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சத்தோடு ஒவ்வொரு நாளையும் நாம் எதிர் கொண்டிருக்கும் வேளையில் நாக்கூசாமல் இருள் அகன்று, ஒளி கிடைக்கும் தீபாவளி என ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள். ஆனால் எப்படி ஒளி கிடைக்கும் என அவனும் சொல்லப் போவதில்லை, நாமும் சிந்திக்கப் போவதில்லை.

இது தித்திக்கும் தீபாவளியாம். வண்ண வண்ணமாக எழுதுகின்றன பத்திரிகைகள். வர்ண்ஜாலம் காட்டுகின்றன தொலைக்காட்சி ஊடகங்கள். பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் வண்ண வண்ண விளம்பரங்களால் வாரிச்சுருட்டுகின்றனர். இது அவர்களுக்கு தித்திக்கும் தீபாவளிதான்.

விளப்பரங்களுக்கு கொட்டிக் கொடுத்தக் காசையும் சேர்த்து - பேரீட்சம் பழத்துக்குகக்கூட லாயக்கற்ற ஓட்டை உடைசல் வீட்டு உபயோகப் பொருட்களையும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என ஆசை காட்டியும், கரித்துணிக்குக்கூட தேறுமா என்கிற நிலையில் ஆண்டுக் கணக்கில் தேங்கிப்போன ஜவுளித் துணிகளை வண்ண வண்ண விளம்பரங்களைக் காட்டி மயக்கியும் நம் தலையில் கட்டும் பெரும் வியாபாரிகளுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

சிவகாசியில் தொழிலாளர்கள் கருகினால் என்ன, எனக்கு பை நிறைந்தால் போதும் என ஒரு நாள் கூத்துக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகள் மூலம் ஓராண்டு லாபத்தைச் சுருட்டும் பட்டாசு ஆலை முதலாளிகளுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

இந்திய உணவுக்கிடங்குளில் மக்கிப்போகும் கோதுமையாக இருந்தாலும் அதிலேயும் அல்வா கிண்டி நம் வாயை அடைத்து பாக்கெட்டில் உள்ளதை லவட்டிக் கொள்ளும் பெரும் ஸ்வீட் ஸ்டால் ஓனர்களுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.

வாழ்க்கை மின்னுகிறதோ இல்லையோ தங்கத்தால் பெண்களை ஜொலிக்க வைக்கும் ஜீவல்லர்ஸ்காரனுக்கு இது தித்திக்கும் தீபாவளிதான்.
எது எப்படியோ ஊருக்குச் சென்று உறவுகளையாவது பார்க்கலாம் என பேருந்து நிலையம் சென்றால் –

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அரசுப் பேருந்தில் செல்ல ஓராண்டுக்கு முன்பு கட்டணம் ரூ.300 இருந்ததை ரூ.600 ஆக உயர்த்தியதையே தாங்க முடியவில்லை. இந்த தீபாவளி சீசனில் தனியார் ஆம்னி பேருந்துகளில் ரூ.1500 என்றால் தாங்கவா முடியும்? ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது மற்றவர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ! ஆம்னி பேருந்துக்காரன் தீபாவளிக்குப் பிறகு இன்னொரு பேருந்தை வாங்கிவிடுவான். இது அவனுக்கு தித்திக்கும் தீபாவளிதான்.

தீபாவளிக்குப் பிறகு -

முதலாளி கணக்குப் பார்ப்பான் – லாபம் எவ்வளவு என்று!
உழைப்பாளியும் கணக்குப் பார்ப்பான் – இழந்தது எவ்வளவு என்று!

Sunday, 11 November 2012

பதிவர்களின் சிந்தனைக்குச் சிறை!


தொடரும் மின்வெட்டு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு, தென்னகத்தில் சாதிக் கலவரம், தருமபுரியில் வன்னிய சாதி வெறி என நாடெங்கிலும் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன. இது குறித்து நமது கருத்துக்களை வலைப்பூக்களில் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில் சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிப் பதிவர்கள் தவித்து வருகிறார்கள்.

மின்வெட்டினால் தொழில்கள் பாதிப்பு, அதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, மாணவர்களின் படிப்பு பாதிப்பு, தூக்கம் கெடுதல் கொசுக்கடிக்கு ஆளாவதால் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுதல், மொத்தத்தில் அன்றாட வாழ்க்கையே சீர்குலைந்து சின்னாபின்னமாகி உள்ளது.

எப்பொழுது மின்சாரம் வரும் எப்பொழுது போகும் என்று சொல்ல முடியாது. எனக்கு கிடைக்கிற நேரமோ மாலை 6 மணி முதல் 9 மணி வரைதான். இதில் ஒரு மணி நேரம்தான் மின்சாரம் இருக்கும். இதற்குள் நான் பிற வலைப்பூக்களை படித்துவிட்டு பின்னூட்டம் போடுவதா அல்லது சொந்த வலைப்பூவில் பதிவிடுவதா; எதைச் செய்வது என்ற குழப்பத்திற்கு ஆட்படுவதால் ஒரு விதத்தில் எனது சிந்தனை ஓட்டமே நின்று போனது என்றுதான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் மின்வெட்டு நமது சிந்தனையை சிறையில் அடைத்துவிட்டது.

இந்தப்பதிவைக்கூட ஆழமாக சிந்திக்க நேரமின்றி அவசர அவசரமாக பதிவிட்டுள்ளேன்.

Wednesday, 17 October 2012

கொசுக்களோடு ஒரு யுத்தம்: எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!


டெங்கு முன்னுக்கு வந்து மின்தடை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இன்றைய தேவை கருதி மீள்பதிவு.

************************************

சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்பு தேடி சென்னை சென்ற இளைஞர் தற்போது திருமணமாகி கையில் ஒரு குழந்தையுடன் தனது மனைவியோடு சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். அடுத்தக் குழந்தைக்கும் தயாராகியிருந்தார் அவரது மனைவி. சென்னையில் வாழ்க்கையை ஓட்ட முடியாததால் வந்துவிட்டதாகச் சொன்னார்கள். 

ஆலைகள் நிறைந்த தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள சிற்றூரில்தான் அவரது வீடு. ஏதோ ஒரு ஆலையில் குறைந்த ஊதியத்திற்கு வேலைக்குச் சென்றாலும் வயித்தக் கழுவலாம் என முடிவெடுத்து அவர் வந்திருக்கலாம். வீடோ ஓட்டு வீடு. சற்று பலமான மழை என்றால் உள்ளே ஒண்ட முடியாது. ஏற்கனவே அவரது தந்தையும், தங்கையின் குடும்பமும் என ஆறு பேர் வசிக்கும் வீடு. இவர்களோடு மொத்தம் ஒன்பது பேர். மூச்சுக் காற்றுகூட வெளியேற முடியாது. அவ்வளவு சிறிய வீடு. அவர்கள் அத்தனை பேரும் எப்படி அதில் வாழ முடியும்?

ஆனால் இதுவல்ல அவரது துணைவியாருக்குப் பிரச்சனை. பக்கத்திலிலேயே சாக்கடை. தேங்கிக் கிடக்கும் சாக்கடை நீரில் இருந்து வரும் கொசுக்களின் தொல்லை. தாங்கமுடியவில்லை.  வந்து ஒருவாரமே ஆகிறது. வாடகைக்கு வேறு வீடு பார் எனக் கூறிவிட்டார். இன்னும் ஒரு வேலையைக்கூட தேடவில்லை. அதற்குள் வாடகை வீடு என்றால் சமாளிக்கமுடியுமா? வாழ வழியில்லை என ஊர் மாறி வந்தால் இங்கே கொசுவுக்காக சொந்த வீட்டை விட்டு ஓட வேண்டிய அவலம். வேறு வீட்டிற்குச் சென்றால் மட்டும் தீர்ந்தவிடுமா கொசுப்பிரச்சனை?

தேசியப் பிரச்சனை:

இது ஏதோ அவரது பிரச்சனை மட்டுமல்ல. இந்தியக் குடிமக்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு தேசியப் பிரச்சனை. கொசுக்களால் பிரச்சனைக்கு ஆளாகாத குடும்பங்களே இருக்க முடியாது. குடிசையோ, கோபுரமோ..அதெல்லாம் கொசுக்களுக்குத் தெரியாது. கொசுக்களுக்குத் தேவை மனித இரத்தம். எங்கே இடைவெளி இருக்கிறதோ அங்கே நுழைந்து தேவையான அளவு சட்டகுடித்துவிட்டு அங்கேயே ஒளிந்து ஓய்வெடுத்துக் கொண்டு மறுநாளும் வேலையைத் தொடரும் கொசுக்களும் உண்டு. அல்லது குடித்துவிட்டு தனது வசிப்பிடத்திற்கே திரும்பும் கொசுக்களும் உண்டு.

மழைக் காலமோ, கோடை காலமோ எல்லாக் காலங்களிலும் நம்மை விடாது துரத்தும் கருப்பு கொசுதான். என்ன.... கோடையில் சற்று வேகம் குறைவே ஒழிய துரத்தவது ஒன்றும் நிறுத்தப்படுவதில்லை. ஆனால் கோடையை சமாளித்து வாழும் கொசுக்களின் வல்லமை சற்றே அதிகம்தான். அதனால்தான் கோடை கொசுக்கள் 'சிக்குன்குனியா' மூலம் நம்மை முடக்குகின்றன.

தட்டினால் பொட்டெனெப் போகும் கொசுக்களைக் கண்டு அஞ்சாதவர்கள் உண்டோ? ஒன்றா, இரண்டா தட்டிவிட்டுத் தூங்குவதற்கு. பெரும் படையாய் அல்லவா அணிவகுத்து வருகின்றன. எப்படி அஞ்சாமல் இருக்க முடியும்? இருந்தாலும் வறியவர்கள் தட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்;

தப்பிக்க வழியே இல்லையா?:

ஒரே வழி தற்காப்புதான். தற்காப்புக்கு என சந்தையில் ஏராளமான கேடயங்கள். வசதியைப் பொருத்து வலுவான கேடயம் எனில் நமக்கு சேதாரம் குறைவு. மார்ட்டின் கொசுவத்திச் சுருள், 'ஆல் அவுட் லிக்குயிட்', 'ஹிட் ஸ்ப்பிரே'-இவைகள் உள்ளே நுழைந்த எதிரிகளை விரட்ட ஏவப்படும் அம்புகள். எத்தனை முறைதான் ஒரே 'பிராண்ட்' அம்புகளை ஏவ முடியும்? முனை மழுங்கிப் போகாதா? 

எதிரிகளை உள்ளே விட்டால்தானே. தடுப்பரண்களைப் போட்டு தடுத்துவிட்டால் எதிரிகள் முட்டிப் பார்த்துவிட்டு எட்டி ஓடிவிடுவார்கள். இதற்காகவே 'காட்டன்-நைலான்' கொசு வலைகளும், 'நெட்லான்களும்', 'ஒயர் மெஷ்களும்' ஏராளமாய் சந்தையில் குவிந்துள்ளன. என்ன.... தடுப்பரண் போட ஒரே நேரத்தில் சற்று கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும். எதிரிகள் இலேசுப்பட்டவர்களா என்ன? எத்தனை யுத்தங்களைப் பார்த்திருப்பார்கள்? உங்கள் தடுப்பரண்கள் என்ன முக்காலத்துக்கும் தாங்கக்கூடியவையா? விரிசலுக்கிடையில் சர்.....சர்ரென நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துவதை தடுத்திடவா முடியும்?

இப்படிப்பட்ட திடீர்த் தாக்குதல்களை எதிர்கொள்ள சீனாக்காரன் ஏராளமான அதிரடி மட்டைகளை நமக்கு அளித்து வருகிறான். இரவில் எப்பொழுதும் இந்த அதிரடி மட்டை அருகில் இருக்க வேண்டும். இதுவே இப்போதைக்கு சிறந்த ஆயுதமாகத் திகழ்கிறது. இந்த மட்டைகள்கூட எதிரிகளின் தாக்குதலால் செயலிழந்து போகின்றன. பயனற்றுப் போன மட்டைகளுக்காக நான் ஒரு ஆயுதக் கிடங்கையே வைத்திருக்கிறேன். காசு கொடுத்து வாங்கியாச்சே. தூக்கியெறிய மனமில்லை.
கொசுக்களை விரட்ட பெரும்பாலானோருக்கு தற்போது அதிகமாகப் பயன்படுவது மின் விசிறிதான். கடுங் குளிரில்கூட காற்றாடி ஓட வேண்டும். குளிரைவிடக் கொடுமையானதல்லவா கொசுக்கடி. நள்ளிரவில் திடீரென மின்வெட்டு என்றால் நிலைகுலைந்து போகிறோம். ஆனால் எத்தனை நாளைக்கு? சுழன்றடிக்கும் சூறாவளியைக்கூட எதிர் கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வது விலங்கினங்களின் பரிணாமமாயிற்றே.

எதிரிகளின் படையெடுப்பை தனி மனிதர்களால் எதிர் கொள்ள முடியவில்லை என்பதால் நகராட்சிகள் அவ்வப் பொழுது ஏவுகனைத் தாக்குதல்களை நடத்துவதுண்டு. கவச வாகனங்கள் பெரும்புகையை எழுப்பிக் கொண்டு வீதிகளில் வரும் போது அச்சம் எதிரிகளுக்கு மட்டுமல்ல நமக்கும்தான். புகையில் சிக்கிக் கொண்டால் நாம்தான் விழ வேண்டி வரும். எதிரிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். அதிகாரிகள் தங்கள் பையை நிரப்பிக் கொள்ளத்தான் இந்த 'ஆபரேஷன் மேலா'வேயொழிய எதிரிகளைக் கொல்வதற்கு அல்ல. கார்க்கில் யுத்தத்திலேயே கை வைத்தவர்கள் அல்லவா நம் 'கர்னல்கள்'.

யுத்த பாதிப்புகள்:

யுத்தத்தில் நாம் பயன்படுத்தும் ஆயுதங்களால் ஏற்படும் நச்சுப் புகையால் கண் எரிச்சல், தோல் நோய் உள்ளிட்டு பல்வேறு உபாதைகளையும் நாம் எதிர் கொள்ள வேண்டும். யுத்தம் என்றால் சும்மாவா?

நமக்குத் தெரிந்த போர்த் தந்திரங்கள் அனைத்தையும் கையாண்டு பார்த்தோம். அறுபத்து ஆறு ஆண்டு கால யுத்தத்தில் பொது மக்களின் சொந்தப் பணம் உள்ளிட்டு பல இலட்சம் கோடி விரயமானதோடு சரி.  டார்வினின் இயற்கைத் தேர்வு மூலம் (natural selection) எதிரிகள் பலமாகிவிட்டார்கள். 

இனி என்ன செய்வது? யாருடைய உதவியையாவது நாடலாமா? 'கேன்சரையும்', மூட்டு வலியையும் விரட்டும் பால் தினகரன்களை அழைப்பதா? மச்சவதாரம், பிச்சவதாரம் என பல அவதாரங்களைக் கண்ட மகா விஷ்ணுக்களை அழைப்பதா? அல்லது சைத்தான்களைத் துரத்தியடிக்கும் முல்லாக்களை நாடுவதா? ஒரே குழப்பமாக இருக்கிறது. இந்திய மக்களைக் காக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன். ஒரு வேளை ஒபாமா உதவுவாரோ? எதற்கும் கேட்டுப் பார்க்கலாம். அதற்கு முன்பு அமெரிக்க வாழ் நண்பர்கள் அங்குள்ள நிலமையைச் சொன்னால் ஒபாமாவை நாடுவது குறித்து முடிவெடுக்கலாம்.

சமீபத்தில் தொலை காட்சி ஒன்றில் புராணக் கதை ஒன்று கேட்டேன். ஐந்து சிறுவர்கள் ஒரு குளத்தில் உள்ள மீன்களைப் பிடித்து மீனின் ஒரு கண் வழியாக முள்ளாள் குத்தி அது அடுத்த கண் வழியாக வருவதைக் கண்டு இரசித்தார்களாம். இதைக் கண்ட இறைவன் "இது என்ன கொடுமை?" என்று அந்த ஐவரையும் "மீனாய்ப் பிறக்கக் கடவ" என்று சாபமிட்டானாம். அது போல இந்தக் கொசு அரக்கனுக்குச் சாபமிட சாமிகள் ஏதும் வாராதோ என விழி வைத்துக் காத்திருக்கிறேன். 

ஒரு வேளை ஏதேனும் புதிய யுக்தியைக் கையாண்டு கொசுக்களைக் கொல்லும் போது அதைப் பார்த்து "கொசுவாய்ப் பிறக்கக் கடவ" என ஆண்டவன் நமக்குச் சாபமிட்டுவிட்டால்... அந்தப் பயமும் இருக்கத்தானே செய்கிறது. அது மட்டுமல்ல 'புளூகிராஸ்காரர்கள்' வழக்குப் போட்டால் அதையும் எதிர்கொள்ள வேண்டுமே. ஒரே பயமாக இருக்கிறதே. 'பிலீஸ் ஹெல்ப்'.

தாக்குதலில் எதிரிகள் ஏற்படுத்தும் சேதாரம் கொஞ்சமா? நஞ்சமா? 'சிக்குன் குனியா' வந்தால் நடமாட்டமே முடங்கிப் போகிறது. 'மலேரியா' வந்தால் மரணம் தவிர்க்க முடியாதது. யாணைக்காலை எத்தனை ஆண்டுகள் சுமப்பது? அதுவும் திருமணத்திற்கு முன்பு என்றால் வாழ்க்கை முழுக்க பிரம்மச்சரியம்தான். காஞ்சிபுரம், வாலாஜா, வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பிரதேசங்களில் யுத்தத்தின் விளைவு அதிக அளவில் யானைக்கால்தானாம். மருத்துவர்களும், செவிலியர்களும் யுத்த களத்தில் காயமடைந்த நமக்குத் தொடர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

எதிரிகளின் தாக்குதல்களை சமாளிக்க மருத்துவர்களும் பல்வேறு ஆலோசனைகளை அளித்தவண்ணம் உள்ளனர். உடைந்த சட்டி, பானை, ஓடு, கொட்டாங்குச்சிகளை கவிழ்த்து வையுங்கள். திறந்து வைத்தால் அவைகளே எதிரிகளின் புகலிடமாக அமைந்து விடும் என்பதால். நாமும் மெனக்கெட்டு இதையெல்லாம் செய்துதான் பார்க்கிறோம்.

இரான்-ஈராக் யுத்தத்தில் ஆயுதத் தளவாடங்களைத் தள்ளிவிட்டதன் மூலம் கோடிகளைச் சுருட்டிய அமெரிக்கா போல இங்கே 'குட்நைட்', 'ஆல் அவுட்', 'மார்ட்டின்', 'ஹிட்' என ஆயுத விற்பனை மூலம் முதலாளிகள் கோடிகளைச் சுருட்டுகிறார்கள். யுத்தம் தொடர்கிறது. புதிய புதிய 'பிராண்டுகளில்' சந்தையில் ஆயுதத் தளவாடங்களை முதலாளிகள் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எதிரிகளை ஒழிக்கமுடியுமா?:

இடையில்....எனக்கு ஒரே ஒரு கவலை மட்டும் உண்டு. எதிரிகள் முற்றாக ஒழிக்கப்பட்டு விட்டால்... ஆயுதத் தொழிற்சாலைகள் பல மூடப்படும். மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்தி குறையும். இதனால் இலட்சக் கணக்காணோர் வேலையிழந்து வீதியில் வீசப்படுவர். கொசுக்களை ஒழிக்கக்கூடாது என அவர்கள் போராடத் தொடங்கிவிட்டால் நாடே களேபரம் ஆகும். சொசுக்களைக்கூட ஒழிக்க இயலாத நமது அரசு மக்களின் இந்தப் போராட்டத்தை எப்படி சமாளிக்கும்? 

எதிரிகள் 'ஐ.எஸ்.ஐ ஏஜெண்டுகளும்' அல்ல. 'அல்உமா' தீவிரவாதிகளும் அல்ல. எல்லாம் நம்ம ஊர் குளம்,  குட்டை, சாக்கடைகளின் கழிவு நீரில் பிறப்பவர்கள்தான். நம்ம தண்ணியக் குடிச்சவங்கதான். எதிரிகளுக்கு மட்டும் தண்ணிப் பஞ்சம் எப்போதும் வராது. எதிரிகள் பாதுகாப்பாக இருக்க சாக்கடையில் தண்ணி வடியாம பாத்துக்கிற வேலயத்தான் நம்ம ஊர் நாட்டாமைங்க... அதாங்க.... ஊராட்சி -  நகராட்சி கவுன்சிலரு, சேர்மேனுங்க கண கச்சிதமா செய்யராங்களே. எதிரிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை நம்மால் ஒழிக்கவா முடியும்?.

Sunday, 14 October 2012

பாடாய் படுத்தும் டெங்கு!


சொன்னது

‘’டெங்கு அச்சம் தேவையில்லை! – சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ்.விஜய் - தினமணி (13.10.2012)

‘’மர்மக் காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

‘’வேலூரில் மர்மக்காய;ச்சல்: பலி 10 ஆக உயர்வு! – தினமணி (13.10.2012)

‘’தென்மாநிலங்களில் கடந்த ஆண்டில் 2859 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 மடங்கு (12500) உயர்ந்துள்ளது. – மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் - தினமணி (13.10.2012)

‘’கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை டெங்கு காய்ச்சலில் 33 பேர் இறந்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 77 பேர் வரை இறந்துள்ளனர் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

எல்லாத்தையுந்தான் நீங்களே சொல்லீட்டீங்களே! அப்புறம் எப்படி பீதியடையாம இருக்க முடியும்?
***********
சொன்னது

''டெங்கு காய்ச்சலுக்கு காரணமான ஈடிஸ் வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டுமே உற்பத்தியாகும் - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

''டெங்கு காய்ச்சலை பரப்பும் பகல்நேர கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும். – அரசு டாக்டர்கள் - தினமணி (12.10.2012)

வேலூரில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். - தினமணி (12.10.2012)

கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிட்ட பொது மக்கள காலிக்குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். - தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

வேலூரில் மனுசனுக்கேத் தண்ணியில்ல. பெறவு டெங்கு கொசுவுக்கு ஏதப்பா நல்ல தண்ணி?
**************
சொன்னது

‘’வேலூரில் மர்மக்காய்ச்சல்: பலி 10 ஆக உயர்வு! – தினமணி (13.10.2012)

‘’சொசு உற்பத்தியைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். - நோய் கண்காணிப்புத் திட்ட ஆலோசகர் ஜி.கே.துரைராஜ் - தினமணி (13.10.2012)

‘’தண்ணீரைத் தேக்கி வைக்கும் வாளிகளை நன்கு மூடி பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். - பொது மக்களுக்கு அரசு டாக்டர்கள் அறிவுரை - தினமணி (13.10.2012)

‘’டெங்கு: மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய வேண்டும்.

டெங்கு காயச்சலில் இருந்து தப்பிப்பதற்காக மாணவர்கள் பேண்ட், முழுக்கை சட்டை அணிய வேண்டும், மற்றவர்களும் இதை கடைபிக்கலாம் - மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் - தினமணி (13.10.2012).

‘’பிரதமர் வீட்டு வளாகத்தில் டெங்கு கொசு:
என்.டி.எம்.சி அதிகாரிக்கு நோட்டீஸ்.

டெங்கு கொசுக்களை அழிக்க உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து விளக்கம் அளிக்கும்படி புதுதில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு (என்.டி.எம்.சி) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. - தினமணி (13.10.2012)

என்னத்தச் சொல்ல!

அங்க யாருமே மண்டய போடல. அதுக்கு நோட்டீசு.
இங்க பத்து பேர் மண்டய போட்டும் நமக்கு உபதேசமாம்?

பிரதமர் வீட்டில் கொசு இருந்தாலும் பிரமருக்கு பாதிப்பு வராதே! அவர்தான் குலாம் நபி ஆசாத்தின் ஆலோசனையை கச்சிதமாக கடை பிடிக்கிறாரே! போதாக் குறைக்கு தலைப்பாகையும் தாடியும் கூடுதல் பாதுகாப்பு.

நோட்டீசை வேலூருக்கு திருப்புப்பா!
**********
சொன்னது

வாளிகளில் பிடித்து வைக்கும் நல்ல தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதால் வாளிகளை நன்கு மூடிவைத்து பராமரிக்கச் சொல்கிறீர்கள்.

ஆமாம்! சென்ற ஆண்டு வரை  கொட்டங்கச்சிகளிலும் உடைந்த சட்டிப்-பானை ஓடுகளிலும் தேங்கும் தண்ணீரில்தான் டெங்கு - சிக்குன் குனியா கொசுக்கள் உற்பத்தியாவதால் அவற்றில் தண்ணீர் தேங்காமல் இருக்க அவைகளை கவிழ்த்துப் போடச் சொன்னீர்கள்.

என்னத்தச் சொல்ல!

இதைப்புரிந்து கொண்ட டெங்கு கொசுக்கள் நல்ல தண்ணீருக்குத் தாவி பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டனவோ! எதுக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை அடுத்த மூன்று மாத்துக்கு மூடி வையுங்க!.
*******
தொடர்புடைய பதிவு: 

எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!

http://hooraan.blogspot.com/2011/03/blog-post_26.html