Tuesday, 28 October 2014

தொடப்பக் கட்டையும் தூய்மை இந்தியாவும்!



விரைந்து செல்லும் வாகனங்களால் சட்டெனப் பறந்து மறையும் இலைச் சரகுகள் அக்டோபர் 2 அன்று மட்டும் எப்பொழுதும் தூய்மையாக காணப்படும் டெல்லி பாராளுமன்ற வளாக சாலைகளிலும், சென்னையின் ராஜ்பவன் சாலைகளிலும் அகல மறுத்து அடம் பிடித்தன. காய்ந்த பின் உதிரவேண்டிய பச்சை இலைகள்கூட அன்று சரகாய் மாறி சாலைகளை அலங்கறித்தன. மோடியின் துடைப்பம் மயிலிரகாய் சரகுகளை இதமாய் வருடியபோது “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என முணுமுணுத்தவாறு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி மெய்சிலிர்த்து குதூகலித்தன சரகுகள்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தி,  மக்களிடம் கொள்ளை நோயை உண்டு பண்ணும் பாலிதின் பைகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும், ஆலைகளின் இரசாயணக் கழிவுகளும், ஊராட்சி - நகராட்சிகளின் கக்கூசு – சாக்கடைக் கழிவுகளும் மலை மலையாய்க் குவிந்து கோபுரம் கட்டி வாழும் போது அவைகளைச் சீண்டுவதற்கு திராணி இன்றி, செடி - கொடி - மரங்களுக்கு எருவாய், பயிர்களுக்கு உரமாய், ஏன் எதிர்கால சந்ததிக்கு நிலக்கறியாய் மாறி பன்முகப் பயன்பாட்டைத் தரும் தம்மை, ஏன் இவர்கள் ஊர்கூடி ஒழிக்க நினைக்கிறார்கள் என்கிற ஐயம் மட்டும் சரகுகளுக்குள் எழுந்த வண்ணம் இருந்தன.

வீட்டுக் குப்பையைக் கூட்டுவதற்கே வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளும் கோமான்களும் சீமாட்டிகளும் தெருவைக்குகூட்ட துடைப்பம் ஏந்தி  “வாருங்கள்! பாரதத்தை தூய்மைப்படுத்துவோம்!” என வானதியாய்-லட்சுமியாய் வடிவெடுத்து மெரினாவை மென்மையாய் வருடுவதைப் பார்க்கும் போது இவர்கள் “சொல்வதெல்லாம் உண்மை” தானா என்கிற ஐயம் உயிரற்ற சரக்குகளுக்கே எழும் போது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டும் எழாதா என்ன?

இந்த பேஷன் ஷோ பெரேடில் ஒய்யாரம் காட்ட தேச பக்தர்கள் துடைப்பக் கட்டையோடு பூங்காக்களை மொய்க்கிறார்கள்; பீச்சுகளை மேய்கிறார்கள். வேலூர் கோட்டைப் பூங்காவில்  வி.ஐ.டி யின் இளவலும், ஐதராபாத் சினிமா ஸ்டுடியோவில் சிரஞ்சீவியும் இதில் முந்திக் கொண்டனர்.

இதே நிலை நீடித்து பேஷன் ஷோவில் எதிர்க்கட்சிக்காரன் பரிசு பெற்றுவிட்டால் அது முதலுக்கே மோசம் என்பதால் இது குறித்து நடுவண் அரசின் அமைச்சரவை உடனடியாகக்கூடி ஆலோசித்ததாம். குப்பை கூட்டுபவர்களுக்கு படிப்பறிவும் போதாது; திறமையும் போதாது எனவே குறைந்த பட்ச கல்வித்தகுதியுடைய திறமையானவர்களைக் கொண்டு குப்பை கூட்டினால் மட்டுமே இந்தியாவைத் தூய்மைப்படுத்த முடியும் என முடிவெடுத்து குப்பை மேலாண்மை குறித்த படிப்பை பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் இந்தப்பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுமாம்.

மேல்நிலைப் பள்ளிக் கல்வி அளவில் ஒவ்வொரு சாதியிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் பெறும் போதே வேலையில் சேருவதற்கான ஆணையும் கையோடு வழங்கப்படுமாம். பாரத தேசத்தை குப்பையற்ற தேசமாக மாற்றும் வல்லமை 60 லட்சம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது என ராஜ்நாத் சிங் கண்டறிந்துள்ளதால்தான் இந்த வேலையை இளைஞர்கள் கையில் ஒப்படைப்பதோடு அதைக் கட்டாயப் பணியாகவும் அறிவித்துள்ளார்களாம். மீறுவோர் நாடற்றவர்கள்களாக அறிவிக்கப்பட்டு பாரதத்தை விட்டே விரட்டப்படுவார்களாம்.

இந்த வேலை வாய்ப்பில் திறமைக்கு மட்டுமே முன்னுரிமை என நடுவண் அரசு அறிவித்த போது அதற்கு இதர பிற்பட்ட வகுப்பினரிமிருந்து (OBC) கடுமையான எதிர்ப்பு கிளம்பியதாலும் குப்பை கூட்டும் இந்தப் பணி புனிதமானது என்பதாலும் விகிதாச்சார அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் வேலை வாய்ப்புகள்  பகிர்ந்து அளிக்கப்படும் என நடுவண் அரசு தெளிவு படுத்தி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனவாம். அனைத்து சாதிகளிலும் உள்ள பெண்களுக்கும் இந்த வேலை வாய்ப்பில் 50 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒருவர்  இந்த வேலை வாய்ப்பினை பெறுவதற்கு ஏற்ப சுழற்சி முறையும் கடைபிடிக்கப்படுமாம். இளைஞர்கள் இல்லாத குடும்பங்களிலிருந்தும் ஒருவர் கட்டாயமாக இந்தப் பணியை செய்ய வேண்டுமாம். அவர்கள் பிற பணிகளில் இருந்தாலும்கூட டெப்புடேஷனில் வந்து இப்பணியை மேற்கொள்ள வேண்டுமாம்.

தெருவோர சாக்கடைகளை சுத்தம் செய்தல், ஊராட்சி – நகராட்சி, ரயில் நிலைய – பேருந்து நிலைய கழிவறைகளை கழுவுதல், பாதாள சாக்கடை கழிவு நீர்த்தொட்டிகளில் மூழ்கி அடைப்புகளை அகற்றுதல் போன்ற வேலைகளைச் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மூன்று மாதம் முறையான பயிற்சி அளிக்கப்படுமாம். ஓராண்டு வேலை செய்த பிறகு இவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்களாம். இவர்கள் விட்டுச் சென்ற பிறகு, இப்பணியை தொடர மேற்கண்டவாறு புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்களாம்.

விலைவாசி உயர்வும் வெண்டைய்க்காயும்!



பதிவெழுதி ஒரு மாதகாலத்திற்கு மேல் ஆகிவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் தட்ப வெட்ப நிலைகளில், அரசியல் தளங்களில், ஆட்சியாளர்களின் கொள்கைகளில், சமூக நடப்புகளில் இமயம் முதல் குமரி வரை பல்வேறு பாரிய மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. மேற்கண்ட மாற்றங்கள் குறித்து அன்றாடம் ஒரு பதிவு எழுதி இருந்தால்கூட குறைந்தது ஒரு முப்பது பதிவுகளாவது எழுதி இருக்க முடியும். என்ன செய்ய! கணினிக் கோளாறு என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால்  கடந்த ஆண்டு உத்தரகாண்ட்டில் ஏற்பட்ட சேதாரம் அதைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட மீட்புப் பணிகளைப் போல கடந்த மாதம் ஜம்மு - காஷ்மீரத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கின் போது முடுக்கிவிடப்பட்டதா என்கிற கேள்வி என்னுள் மட்டுமள்ள காஷ்மீரத்தின் சேதாரத்தை உற்று நோக்கியவர்கள் அனைவருக்குள்ளும் எழுந்திருக்கும் என்றே கருதுகிறேன். காஷ்மீர் சேதாரத்திற்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்க முனைந்த பல்கலைக்கழக பேராசியர்கள் மீது பீகாரில் சங்பரிவார ‘தேசபக்தர்கள்’கள் தொடுத்த தாக்குதலின் போது இந்தக் கேள்விக்கான விடை கிடைத்தது மட்டுமல்ல ‘பாரதத்தின்’ ‘சகோரத்துவ’ லட்சணமும் பளிச்சென வெளிப்பட்டது. வேண்டுதல் நிறைவேறினால் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்தும் செல்வந்தன் வெளியே வரும் போது வாசலில் தட்டேந்தும் பிச்சைக்காரர்களின் தட்டில் வீசப்படும் சில்லரைகள் போலத்தான் சியாச்சின் சென்று திரும்பிய குஜராத்தின் முன்னாள் கோமகனும் பாரதத்தின் இந்நாள் பிதாமகனும் கொஞ்சம் சில்லரைகளை பனிமலையின் வாசலிலும் வீசிவிட்டு வந்துள்ளார்.

வடக்கே பனிமலை மட்டுமல்ல; சுனாமியால் கொத்துக் கொத்தாய் மக்கள் தென் கோடியில் அன்று மாண்ட போதும், அதைத் தொடர்ந்து தானே புயல் சீற்றத்தால் தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு தலைமுறை சேதாரம் ஏற்பட்டபோதும்கூட ‘இந்தியாவின்’ லட்சணமும் இப்படித்தான் இருந்தது.

அக்டோபர் மாதத்தில் தென்மேற்குப் பருவ மழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டது. வழக்கத்தைவிட இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை குறைவாகப் பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள போதும் இந்த மழை குறைவு வரும் காலங்களில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பது பற்றி ஆட்சியாளர்கள் எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இடையே “வூட் வூட்“ புயலும் வந்தது; விசாகப்படடிணத்தை புரட்டிப் போட்டது. வழக்கத்தைப் போலவே நட்டக் கணக்கும் போடப்பட்டு அடுத்த புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ஆயத்தமாகிவிட்டனர் ஆட்சியாளர்கள்.

வட கிழக்குப் பருவ மழை தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கூடுதல் மழை என ரமணன் வாசிக்கும் அறிக்கை மட்டுமே நமக்கு மழை பற்றிய மதிப்பீடைத் தருகிறது. ஆனால் திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் போதிய மழை இன்மையால் விவசாய வேலைகள் முடங்கிப் போய் விவசாயிகள் மாடுகளை மேய்த்துக் கொண்டு எஞ்சிய நேரத்தில் தாயம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்கிற உண்மை எத்தனை பேருக்குத் தெரியப் போகிறது? வரும் நவம்பரிலும் மழை பொய்த்துப் போனால் இம்மாவட்டங்கள் வறட்சியின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

‘அக்கினி பகவானும்’, ‘வருண பகவானும்’ குடியானவனின் வயிற்றில் நெருப்பையும் மண்ணையும் வறட்சியாய்-புயலாய் மாறி மாறி கொட்டும் போது அவன் எரிந்து போனானா இல்லை புதைந்து போனானா என எட்டிப் பார்க்கக்கூட நாதி இல்லை.

அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தால் அதற்கு பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டுவார்கள் ஆட்சியாளர்கள். இப்போது பெட்ரோல் - டீசல் விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலைதான் இதற்குக் காரணம் என்றாலும் விலை குறைப்புக்கு நாங்கள்தான் காரணம் என ஒரு பக்கம் மார் தட்டுகிறார்களே; பெட்ரோல் - டீசல் விலை குறைந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் குறைய வேண்டுமே என கேள்வி கேட்டால் கள்ள மௌனத்தையே பதிலாகத் தருகிறார்கள் தமிழிசைகள். என்ன செய்ய? ”மாமியார் உடைத்தால் மண்குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்” என சண்ட மாருதம் செய்யும் தமிழிசைளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!

Sunday, 21 September 2014

அறுக்கமாட்டாதவளுக்கு இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாளாம்!

முதல் நாள் காஞ்சிபுரத்திலிருந்து திருப்பதி நோக்கி சில கி.மீ தூரம் நடப்பது. அதாவது திருப்பதிக்கு பாத யாத்திரை மேற்கொள்வது. பிறகு அங்கிருந்து காஞ்சிபுரத்திற்கு காரில் திரும்புவது.

இரண்டாம் நாள் காஞ்சிபுரத்திலிருந்து முதல் நாள் விட்ட இடத்திற்கு காரில் செல்வது. பிறகு அங்கிருந்து மேலும் சில கி.மீ தூரம் திருப்பதி நோக்கி நடப்பது. ஆக இரண்டு நாளில் திருப்பதி நோக்கி நடந்த தூரம் ஒரு சில கி.மீ.தான் இங்கிருந்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே காரில் திரும்புவது.

மூன்றாம் நாள் காஞ்சிபுரத்திலிருந்து இரண்டாம் நாள் விட்ட இடத்திற்கு காரில் செல்வது. பிறகு அங்கிருந்து மேலும் சில கி.மீ தூரம் திருப்பதி நோக்கி நடப்பது.. ஆக மூன்றாம் நாளில் நடந்த தூரம் மேலும் சில கி.மீ.தான் இங்கிருந்து மீண்டும் காஞ்சிபுரத்திற்கே காரில் திரும்புவது.

இப்படி ஒரு வினோத பாத யாத்திரையை அதாவது ‘இன்கிரிமென்ட்டல்’ பாதயாத்திரையை காஞ்சி சங்கர மடத்து இளைய தளபதி சமீபத்தில் மேற்கொண்டுள்ளார். ஏன் இந்த வினோத பாதயாத்திரை என்று யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக தினமும் மடத்தில் நடைபெறும் ஸ்ரீசந்திர மௌலீஸ்வர பூஜையில் பங்கேற்பதற்காக அவர் திரும்புவதாக கதை அளக்கிறார்கள்.

“அறுக்கமாட்டாதவளுக்கு இடுப்பில் ஆயிரத்தெட்டு அருவாளாம்”! என்கிற கிராமத்து பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

Sunday, 14 September 2014

சங்கரராமன் கொலை வழக்கு: அப்பீலுக்கு ஆப்பு!

2004 ம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரரராமன் கொலை வழக்கில் எதிரிகள் குற்றமற்றவர்கள் என புதுச்சேரி நீதிமன்றத்தால் நவம்பர் 23, 2013 ல் விடுவிக்கப்பட்டனர். தீர்ப்பை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய விரும்பாததால், மேல்முறையீடு செய்யாமல் விட்டுவிட்டது. 

அதைத் தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் மேல்முறையீடு செய்ய பரிந்துரைத்ததையடுத்து இந்தப் பரிந்துரையை நடுவண் அரசின் அட்வகேட் ஜெனரலின் கருத்தை அறிய உள்துறை அமைச்சகத்தின் மூலம் அனுப்பி வைத்தது பதுச்சேரி அரசு. இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்த வழக்கு அல்லவென்றும், மீறி மேல்முறையீடு செய்தால் உயர்நீதி மன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாவோம் என்பதனால் மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார்.
 
தற்போது புதுச்சேரி அரசு அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு  சங்கரராமன் கொலை வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை என முடிவு செய்துவிட்டதால் இவ்வழக்கு ஒரேயடியாக ஊத்திமூடப்பட்டுவிட்டது என்பது உறுதியாவிவிட்டது.
சங்கரராமன் இப்போது உயிரோடு இல்லை; செத்துப் போனது என்னவோ உண்மை. அதுவும் கொலை செய்யப்பட்டு செத்துப் போனார் என்பது உலகத்துக்கே வெளிச்சம். இவ்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் கொலையாளிகள் இல்லை என்பது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுவிட்டது. மேல்முறையீட்டுக்கான கதவும் மூடப்பட்டு விட்டதால் கீழமை நீதி மன்றம் தவறான தீர்ப்பு வழங்கியிருக்குமோ என்பதற்கான கேள்விக்கும் இனி இடமில்லை.

சங்கரராமன் கொலை வழக்கில் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. அப்படியானால் உண்மையான கொலையாளிகளை கண்டுபிடிக்கின்ற திறனை இழந்துவிட்டதா நமது காவல் துறை? உலகிலேயே ஸ்காட்லாந்து காவல்துறைக்கு அடுத்து மிகவும் திறமை வாய்ந்தது நமது காவல்துறைதான் என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தானா? அப்படி எல்லாம் நமது காவல் துறையை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

சாதி – மத அடிப்படையிலும், ஏழை - பணக்காரன் என்கிற வர்க்க அடிப்படையிலும் மக்கள் வேறுபட்டு இருக்கும் ஒரு சமுதாயத்தில் பொதுவான நீதிக்கு வாய்ப்பே கிடையாது. இந்த வழக்கில் மட்டுமல்ல, பல்வேறு வழக்குகளிலும் பொதுவான நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மறுக்க முடியாது. சாதி – மதம் மற்றும் ஏழை – பணக்காரன் என்கிற அம்சங்களை கணக்கில் கொண்டே தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இப்பொழுது மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் இதுதான் நடைமுறையாக இருந்துள்ளது; இருந்தும் வருகிறது.

”பிராமணன் சட்டம் தெரிந்தவனாகையால், எந்தக் குற்றங்களையும் அரசன் பார்வைக்கு கொண்டு வரவேண்டியதில்லை; மாறாக தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு தன்னைக் காயப்படுத்தியவனை தண்டிக்கலாம்” (மனு: 11-31).

“தனக்குள்ள அதிகாரம், அரசனின் அதிகாரத்தைவிட வலுவானதாகையால், ஒரு பிராமணன் தனது எதிரிகளை தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டே தண்டிக்கலாம்” (மனு: 11-32).

சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள், சங்கரராமனை மேற்குறிப்பிட்ட மனுதர்ம சட்டப்பிரிவுகளின் கீழ் கொலை செய்து தண்டித்திருக்கலாம். அப்படி தண்டித்திருந்தால் மனுதர்ம சட்டப்படி எதிரிகள் குற்றம் செய்ததாகக் கருத முடியாதே!

“ஒரு பிராமணன் குற்றம் செய்து விட்டால் அதற்குத் தண்டனையாக அவனது தலையை மழித்தாலே போதும்; அதுவே, அவனை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகும். ஆனால் மற்ற சாதியினர் குற்றம் செய்துவிட்டால் அவர்களை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டும்” (மனு: 8-379).

ஒரு வேளை சங்கரராமன் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் தாங்கள் செய்த குற்றத்திற்காக தங்களது தலையை மழித்துக் கொண்டிருக்கலாம். அப்படி அவர்கள் மழித்துக் கொண்டிருந்தால் அதுவே, அவர்களை தூக்கிலேற்றியதற்கு ஈடான தண்டனையாகிவிடுகிறதே! பிறகு மீண்டும் எப்படி தண்டனை கொடுக்க முடியும்? இதையும் மீறி தண்டிப்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை கொடுக்கின்ற பாபத்திற்கு நீதித்துறை ஆளாகிவிடக் கூடாதல்லவா? இக்கூற்றின்படிகூட  இவ்வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்ததல்லதானே!

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. சங்ரராமனை வேறு சாதியினர் எவரும் கொன்றிருந்தால் அவர்களுக்கு தூக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்.

சொத்து குவிப்பு வழக்கில் என்ன நடக்கிறது என செப்டம்பர் 20 அன்று பார்ப்போம்! இவ்வழக்கிலும் ‘எதிரி’ விடுவிக்கப்பட்டுவிட்டால் மனுதர்ம சட்டம் அமுலுக்கு வந்து விட்டது; தொகாடியாக்கள் சொல்வது போல இந்தியா 'ஹிந்து' நாடுதான் என உறுதியாக நம்பலாம்.

Sunday, 7 September 2014

திருமலையில் மொட்டைக்கு மூடு விழா!

பிரச்சனைகள் ஒன்றா! இரண்டா! பட்டியலிடுவதற்கு? குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்; பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வேண்டும், அதன் பிறகு நல்லதொரு வேலை கிடைக்க வேண்டும்; வேலை கிடைத்தால் மட்டும் போதாது, காலா காலத்தில் திருமணம் நடக்க வேண்டும்; சொந்த வீடு வேண்டும் என பாமரர்கள் முதல் படித்தவர்கள் வரை-ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை பிரச்னைகளோ ஏராளம்.

இன்றைய மாறி வரும் உலகமயச்சூழல், பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கவே செய்கிறது. என்ன செய்ய? பிரச்சனைகள் தீர வேண்டாமா? காணிக்கை செலுத்தினால் பிரச்சனைகள் தீரும் என்கிற நம்பிக்கையை மக்களிடையே விதைத்து அதன் மூலம் வாழ்க்கையை ஓட்டுகிறது ஒரு கூட்டம். காணிக்கை செலுத்தினால்தான் காரியம் நிறைவேறும் என கட்டாயப்படுத்துகிறது மற்றொரு கூட்டம்.

காணிக்கைகள்தான் எத்தனை? எத்தனை?

பிறப்புச் சான்றிதழ் தொடங்கி இறப்புச் சான்றிதழ் வரை நமது வாழ்க்கையில் பல்வேறு காலகட்டங்களில் நமக்கு தேவைப்படும் சான்றிதழ்களையும் உரிமங்களையும் பெற அரசு ஊழியர்களுக்கு செலுத்துவது ‘கவர்’ காணிக்கை.

விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்க கல்லூரி தாளாளர்களுக்கு செலுத்துவது நன்கொடை காணிக்கை.

சத்துணவு ஆயா முதல் நீதி காக்கும் நீதியரசர் வரை கவர்மெண்ட் வேலைக்காக அரசியல்வாதிகளுக்கு செலுத்துவது அன்பளிப்பு காணிக்கை. சாலை போடவும், பாலம் கட்டவும் காண்ட்ராக்ட் எடுத்தால் சதவீத கணக்கில் அதிகாரிகளுக்கு செலுத்துவது ‘கமிஷன்’ காணிக்கை. ஆட்சிகளையே கவிழ்க்கும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தது இந்த ‘கமிஷன்’ காணிக்கை.

ஒன்வேயோ, ஓவர் ஸ்பீடோ! இன்சூரன்சோ, ஆர்.சி.புக்கோ! எதுவாய் இருந்தால் என்ன? மாட்டிக்கொண்டால் ஒயிட் சர்ட்டிடம் செலுத்துவது ‘டிராபிக்’ காணிக்கை.

எக்குத் தப்பாய் ஏதாவது செய்துவிட்டு ஏட்டுவிடம் மாட்டிக் கொண்டால் ஸ்டேசனுக்கு செலுத்துவது ‘ஜாமின்’ காணிக்கை.

காலையில் எழுந்து வேலைக்குச் சென்று நல்லபடியாய் மாலையில் வீடு திரும்ப மரத்தடி பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டால் அதற்காக ஐயரிடம் செலுத்துவது அர்ச்சனை காணிக்கை.

காரியவாத காணிக்கை!

மேற்சொன்ன காணிக்கைகள் எல்லாம் பெரும்பாலும் நிர்பந்தத்தினாலோ அல்லது கட்டாயத்தினாலோ செலுத்தப்படுபவை. இந்த காணிக்கைகள் - செலுத்தியதுகூட பிறருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் நினைத்த காரியம் கைகூடினால், தானே முன்வந்து ஏழுமலையானுக்கு விரும்பி செலுத்துவது முடி காணிக்கை. முடி காணிக்கை - மனமுவந்து செலுத்துவது; வெளிப்படையானது; மறைக்கமுடியாதது.

மற்ற காணிக்கைகளில், காணிக்கை செலுத்தினாலும் காரியம் கைகூடாமல்கூட போகலாம்; ஏமாற வாய்ப்புகள் அதிகம். ஆனால் முடி காணிக்கை, காரியம் கைகூடினால் மட்டுமே செலுத்தப்படும். இது ஒரு காரியவாத காணிக்கை! மற்ற காணிக்கைகள் ஃப்ரீ பெய்டு என்றால் முடி காணிக்கை போஸ்ட் ஃப்பெய்டாக்கும்!


இந்த முடி காணிக்கைக்கும் இப்போது கேடு வந்தவிட்டது. திருமலையில் மொட்டையடிக்க ஆள் பற்றாக் குறையாம். முடி காணிக்கை செலுத்த திருமலையில் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுவதால் இனி பக்தர்கள் தாங்கள் வசிக்கும் ஊரிலேயே மொட்டையடித்து, அந்த முடியை திருமலையில் உள்ள உண்டியலில் சேர்ப்பிக்கும் புதிய நடைமுறையை   கொண்டுவரப் போவதாக அறிவித்தள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

நினைத்த காரியம் கைகூட வேண்டும் என்பதற்காகத்தான் திருப்பதியில் மொட்டை போட வேண்டிக் கொள்கிறான் பக்தன். ஊரிலேயே மொட்டை போட்டு முடியை மட்டும் எடுத்து வா என்றால் அது அவனது உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாகாதா?

இதுநாள்வரை மொட்டைகளைப் பார்த்தால் “என்ன திருப்பதியா?” எனக் கேட்போம். இனி மொட்டைகளைப் பார்த்தால் “என்ன திருப்பதிக்கா?” என்றுதான் கேட்க வேண்டும்.


சரி! அப்படியே மொட்டை அடித்து முடியை எடுத்து வருவதாக வைத்துக் கொண்டாலும் ஒரு குடும்பமே மொட்டை போட்டு முடியை மட்டும் மூட்டை கட்டி எடுத்துச் சென்றால் அதற்கான லக்கேஜை யார் தருவார்கள்? வரும் வழியில் முடி மூட்டை திருடு போனால் வெறுங்கையோடு ஏழுமலையானை தரிசிப்பது நியாயமாகுமா?

அதைப்பற்றி எல்லாம் ஏழுமலையானுக்கே கவலை இல்லை. முடியை நேரடியாகக் கொண்டவர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. இனி டிமாண்ட் டிராப்டோடு முடியை பார்சலில் அனுப்பி வை என்பான். கட்டணம் இன்றி காணிக்கை செலுத்த முடியாதே! முடியிலேயே கோடிகளைப் பார்ப்பவனால் வேறு எப்படி யோசிக்க முடியும்!