Sunday, 2 June 2024

மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்றால் என்ன?

மெய்ஞானம் என்றால் புறநிலைமைகளை மனிதன் தன் ஐம்புலன்களால் உணர்ந்து அவ்வாறு உணர்ந்தவற்றைத் தொகுத்து அதில் உள்ள உண்மைகளைக் கண்டறிந்து ஒரு கருத்தை உருவாக்குவது. இதைத்தான் தத்துவம் என்கிறார்கள். 

புற உலகில் நடக்கின்ற பல்வேறு விசயங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தத் தாக்கங்கள் சாதகமானதாகவோ பாதகமானதாகவோகூட இருக்கலாம். பாதகமான தாக்கங்கள் ஏற்படும் போது அது குறித்தக் காரணங்களைக் கண்டறிந்து அதிலிருந்து மீள்வதற்கு ஒரு பொதுவான வழிகாட்டுதலை கொடுக்கிறான். அதையே முழு முற்றான உண்மையாக ஏற்றுக் கொண்டு அதை கடைபிடிக்க முயற்சிக்கிறான் மனிதன். 

சாதகமான விசயங்கள்கூட பரிசீலிக்கப்பட்டு தொகுக்கப்பட்டு அதுவும் தத்துவத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது.

இங்கே முதன்மையானது புற உலகில் உள்ள பொருள்கள்தான். புறவுலகில் பொருள்கள் இல்லை என்றால் ஐம்புலன்களுக்கு உள்ளீடுகள் ஏதுமில்லை. ஐம்புலன்களுக்கு உள்ளீடுகள் ஏதுமில்லை என்றால் மூளையில் எதுவும் பதிவாகப் போவதில்லை. மூளையில் எதுவும் பதிவாகவில்லை என்றால் மனம் என்ற ஒன்றுக்கு வேலையே இல்லை. மனம் என்பது மூளையின் ஒரு வெளிப்பாடுதானே ஒழிய மனம் என்று ஒன்று தனியாக இல்லை. mind is the product of brain. 

சமூக வாழ்க்கையும் இங்கே புறவுலகைச் சார்ந்ததுதான். புற உலகில் உள்ள பொருள்களோடு மனிதன் கொண்டுள்ள தொடர்பு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர்பு- தனியாகவோ அல்லது கூட்டாகவோ-இவை எல்லாமே மனித மூளைக்கான உள்ளீடுகள்.

ஐம்புலன்களின் ஆரோக்கிய நிலையைப் பொறுத்து பதிவாகின்ற உள்ளீடுகள் வேறுபடுகின்றன. உள்ளீடுகள் வேறுபடும் பொழுது மனமும் வேறுபடுகிறது. இவை எல்லாம் வேறுபடுவதனால்தான் மாறுபட்ட கருத்துக்கள் வருகின்றன. அதனால்தான் ஒரு குறிப்பிட்ட பிரச்சினை குறித்து எல்லோரும் ஒரே மாதிரியான கருத்துக்களை முன் வைப்பதில்லை. தத்துவஞானிகளுக்கும் இது பொருந்தும்தானே? எனவே முழு முற்றான உண்மை / அறிவு என்று எதுவும் இல்லை.  நேற்றைய உண்மை இன்றைய பொய்யாகிறது. இன்றைய பொய் நாளைய உண்மையாகக்கூட ஆகலாம். அது புறஉலகைச் சார்ந்தது. 

மனித சமூகம் முதன் முதலில் கூட்டம் கூட்டமாக தனித்தனி இனக் குழுக்களாகத்தான் இருந்தன. அப்பொழுதெல்லாம் தத்துவங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை. எழுத்தறிவில்லா காலகட்டமல்லவா அது. 

அதன் பிறகு அடிமைச் சமூகம் வந்த பொழுது அடக்கு முறையும் சேர்ந்து வந்ததனால் அவற்றிலிருந்து மீள்வதற்கான தத்துவங்கள் தோன்றின.

அதன் பிறகான நில உடமைச் சமூகம் வந்த பொழுது சொத்துடமை பிரதானமாக இருந்தது. அதற்கேற்ப குடும்ப அமைப்புகளும் தோன்றின. 

அந்த காலகட்டத்தில்தான் போட்டி, மோதல், பொறாமை, களவு, காமம், போதை உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் அதிகரித்து, அவற்றிலிருந்து மக்களை மீட்பதற்கான வழியைத் தேட முயன்றனர்.  அப்பொழுதுதான் திருவள்ளுவரைப் போன்ற மெய்ஞானிகள் தோன்றினார்கள். 


சொத்துடைமைச் சமூகமும் குடும்ப அமைப்பும் இன்னும் மாறிவிடவில்லை. அதனால்தான் வள்ளுவர் காலத்திய பல்வேறு சீர்கேடுகளும் இன்றும் தொடர்கின்றன.

அறிவியல் வளர்ச்சி, அதை ஒட்டிய புதிய கருவிகளின் கண்டுபிடிப்புகள், அதைத் தொடர்ந்து கருவிகளுக்குச் சொந்தக்காரர்களான முதலாளிகள், லாபம், சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்றைய சமூகத்தில் கூடுதலாக வந்து சேர்ந்தன. 

இவற்றையெல்லாம் தொகுத்து பார்த்துதான் இவற்றிலிருந்து மக்களை எப்படி மீட்பது என்று சிந்திக்கும்போது காரல் மார்க்ஸ் போன்ற தத்துவஞானிகள் தோன்றுகிறார்கள். 

மெய் என்றால் உண்மை. இது குறித்த அறிவைத்தான் தத்துவம் என்கிறார்கள். எனவே காரல் மார்க்ஸ் போன்றவர்களும் மெய்ஞானிகள்தான். 

மெய்ஞானமோ தத்துவஞானமோ அது என்றென்றைக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. 

உற்பத்தி முறை மாறும் பொழுது உற்பத்தி உறவுகளும் மாறும். உற்பத்தி உறவுகள் மாறும் பொழுது பண்பாடு பழக்க வழக்கங்களும் மாறும். இவை எல்லாம் மாறும் பொழுது பிரச்சனைகளும் மாறும். பிரச்சனைகள் மாறும் பொழுது அதற்கான தத்துவ விளக்கங்களும் மாறும். 

எனவே என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் ஒரே மாதிரியான தத்துவங்கள் இருக்க முடியாது. 

சுரண்டலற்ற ஒரு பொதுவுடமைச் சமூக சமுதாயம் அமையும் பொழுது அங்கே வேறு விதமான பிரச்சினைகள் தோன்றும். அப்பொழுது காரல் மார்க்சின் தத்துவஞானம் தேவையற்றதாகி, வேறு ஒரு தத்துவஞானம் தோன்றும். இதுதான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி போக்காக இருக்கும். இருக்க முடியும்.

மனித சமுதாயத்தின் வளர்ச்சியினூடே அறிவியலும் சேர்ந்தே வளர்கின்றது. எனவே அறிவியலை உள்ளடக்கியதுதான் மனித சமூகமும். அறிவியலில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் மனித சமூகத்தில் விளைவுகளை ஏற்படுகின்றன என்பதை நாம் ஒதுக்கிவிட முடியாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனின் தேவைக்காகத்தான். ஆனால் அது யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து அதனுடைய பயன்பாடு அமையும். சோசலிச காலகட்ட ருசியாவை ஒப்பிட்டுப் பாருங்கள். இதன் உண்மை புரியும்.

தத்துவஞானம் என்பது தமிழ் இனத்திற்கானது மட்டுமல்ல அது உலக மனித இனத்திற்கானது. ஒவ்வொரு இனமும் அவர்களுக்கான தத்துவஞானத்தை கொண்டவர்கள்தான். இதில் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டிய அவசியமில்லை. அந்தந்த இனத்தின் சூழலுக்கு ஏற்ப அந்தந்த காலகட்டத்தில் தோன்றிய தத்துவஞானங்களில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். தமிழ் மரபிலும் எண்ணற்ற தத்துவஞான கருத்துக்கள் உள்ளன என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

ஊரான்

(ஒரு வாட்ஸ்அப் குழுவில் எழுதிய பதில்)

Friday, 31 May 2024

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

மாலைநேர மறைவிடமாய் தமிழ்நாடு

சிறு பிள்ளைகளுக்கு 'போரடிக்கும்' பள்ளிகளின் விடுமுறைக் காலம் இது. வெளியே போகலாம் என சிறுவர்கள் அடம்பிடிக்க, மாலை ஐந்து மணி வாக்கில் அருகில் உள்ள ஜலகாம்பாறைக்குப் பயணமானோம்.  

கேரளாவில் பருவமழை தொடங்கி விட்டது, அதன் தாக்கம் திருப்பத்தூர் வரை எட்டிவிட்டதால், தூரலில் குழந்தைகள் குதூகலிக்க வெளியே அழைத்து வந்தது வீண் போகவில்லை.

ஜலகாம்பாறை வரத்தின்றி வற்றியிருந்தது. அடர்ந்த காடுகளும் நெடிதுயர்ந்த மரங்களும் நம் கண்களைக் கவர்ந்தாலும் சற்றே அச்சமூட்டும் மெல் இரவு நேரம் அது. படிகளில் ஏறி உலாவலாம் என்றால், பாட்டில்களோடு சில இளைஞர்கள் நமக்கு முன்னே மரங்களின் பின்னே ஒதுங்கினர். தமிழ்நாடே இன்று மாலை நேர மறைவிடமாய் மாறியபின் ஜலகாம்பாறை மட்டும் விதிவிலக்கா என்ன?

காடுகளையும் மலைகளையும் வயல்களையும் தோப்புகளையும் எத்தனைமுறை கண்டாலும் புதியவற்றைக் காணும் பொழுது அவை நம் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.

குமரிக் கொட்டம் முடிவுக்கு வருமா?

நேற்று பெய்த மழையில் பூமித்தாய் நனைந்து குளிர்ந்து மலர்ந்திருந்ததால், தோட்டத்தில் சிறிது நேரம் களை எடுத்து,  பின் களைப்புக்கு சற்றே இளைப்பாரி மாலையில் தொடர் வண்டியில் வாலாஜா நோக்கிப் பயணமானேன்.

படுகளக் காட்சிபோல வலப்புறமாய் ஏலகிரி நீண்டிருக்க, கோடை மழையால் உழவு கண்ட புழுதி மண்ணின் வாசம் நாசிகளில் சங்கமிக்க, வலப்புறமும் இடப்புறமும் வரிசைகட்டி நிற்கும் தென்னைகள்  கேரளத்தை நினைவூட்ட,

சேலம்-அரக்கோணம் MEMU விரைவு வண்டியில் அறுபது ரூபாய்க்கு அலுப்பின்றி பயணமானேன். இதில் முப்பது ரூபாயை* ஆட்டயப் போட்டவன் குமரியிலே கொட்டமடிக்க, நானோ பயணத்தில் லயித்திருந்தேன்.

முடியாதவர்கள் காலை நீட்டிப் பயணிக்கவும், பதின்ம வயதினர் சன்னல் ஓர இருக்கைகளில் அரட்டை அடிக்கவும், முதுகு வலிப்போர் சற்றே எழுந்து நிற்க, நடமாடஇளைப்பாற, இருக்கைகள் ஏற்றதல்ல எனக் கருதும் உழைப்பாளிகள் தரையில அமர்ந்து இயல்பாய் பயணிக்க ஏற்ற வண்டி இது.

எளியோர்கள் பயணிக்கும் இந்த வண்டியின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற அச்ச உணர்வோடு ஜூன் நான்கை** எதிர்நோக்கித் தூரலின் சாரல்களினூடே வாலாஜா ரோடில் இறங்கி, ஒரு தானி மூலம் இல்லம் சேர்ந்தேன்.

ஊரான்

* முதியோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% பயணச் சலுகையை கரோனா காலத்தில் பறித்துக் கொண்டு மோடி கன்யாகுமரி வந்திருந்த போது எழுதப்பட்டது.

** ஜூன் 4 நடுவண் அரசின் வரவு செலவு தாக்கல்.

Thursday, 23 May 2024

ரெண்டு தீனிப்பண்டாரங்கள யாருடா அதுல ஏறச் சொன்னது?

அண்மையில் சென்னை திருவொற்றியூர் பெருமாள் கோவில் கருட சேவையின் போது பல்லக்குக் ஒன்று கவிழ்ந்தது குறித்து,


"நீங்க கும்பிடுங்க, தூக்கிகிட்டு போங்க, ஆனால் அந்த ரெண்டு தீனிப்பண்டாரங்கள  யாருடா அதுல ஏறச் சொன்னது?"

என கேள்வி எழுப்பி, முகநூலில் வெளியான பதிவு ஒன்றை வாட்ஸ்அப் நண்பர்கள் குழு ஒன்றில் நான் பகர்ந்தபோது,

"மதம் சார்ந்த பதிவுகள் இங்கு வேண்டாமே" என எதிர்வினையாற்றியதோடு கிருத்தவ தேவாலயம் ஒன்றில் பல்லக்கு ஒன்று கவிழ்ந்ததைப் பகிர்ந்திருந்தார். அந்தப் பல்லக்கின் மேல் மனிதர்கள் இல்லை, சிலை மட்டுமே இருந்தது.


அதற்கு நான்,

"நான் பகிர்ந்த பதிவில் மனிதனை மனிதன் சுமக்கிறான். நீங்கள் பகிர்ந்த பதிவில் மனிதன் சிலையை சுமக்கிறான். இரண்டும் ஒன்றா? மனிதனை மனிதன் சுமப்பது அவமானம் என்று உங்களுக்கு உரைக்கவில்லையா?

மதம் சார்ந்த பதிவுகளே வேண்டாம் என்றால், மதத்தின் பெயரால் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தினாலும் அதை சகித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறீர்களா? சொரணையற்றவர்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். சக மனிதனை நேசிக்கும் எவராலும் அப்படி இருக்க முடியாது. 

வாழ்வியல் சார்ந்த எனது பதிவுகள் வரும் பொழுது மௌனம் காக்கிறீர்கள். ஆனால் மதத்தின் பேரால் நடத்தப்படும் இழிவுகள் தொடர்பான பதிவு பகிரப்படும்போது மட்டும் உங்களது எதிர் வினைகளில் வன்மம் வழிகிறது. தயவு செய்து என் பதிவுகள் மீதோ அல்லது நான் பகிரும் பதிவுகள் மீதோ கருத்து கூறத் தேவையில்லை. பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்கள். நானும் அப்படித்தான் உங்களது பதிவுகளையும் வேறு சில நண்பர்களுடைய பதிவுகளையும் கடந்து செல்கின்றேன். நன்றி! வணக்கம்!"

என எதிர்வினையாற்றினேன்.

அதற்கு அவர், கீழ்கண்ட படத்தைப் பகிர்ந்திருந்தார்.


இதற்கான எனது எதிர்வினை,

"இதில் சுமப்பவன், ஒன்று அடிமை புத்தி கொண்டவனாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஆதாயம் தேடுபவனாக இருக்க வேண்டும். இரண்டுமே ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. 

அடிமை புத்தி உள்ளவனும் ஆதாயம் தேடுபவனும் சொரணையற்றவர்கள் பட்டியலில், இதை ஆதரிப்போரும்தான்.

விழிப்புற்று வரும் தமிழ்நாட்டை இப்படிப்பட்ட பிரபலங்கள்தான் மீண்டும் இருளுக்குள் தள்ளுபவர்கள். சடங்குகள் சம்பிரதாயங்கள் மூலம் அடிமைத்தனத்தை விதைப்பதை சகித்துக் கொள்ளக் கூடாது என்பதே எனது நிலை."

சங்கி மன நிலையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம் தொடரும்!

ஊரான்

Tuesday, 21 May 2024

வங்கமே பங்கமாகும்பொழுது இனி வானரப் படைகளுக்கு சங்குதானோ?

ஒரு அவசர வேலையாக கோவையை நோக்கிப் பயணம்.‌
தொலைதூரப் பயணம், பேருந்தில் பயணிப்பது அவ்வளவு உசிதமல்ல என்பதால் தொடர் வண்டியில் பயணிக்க, தத்கல் முறையில் முதல் நாளே முயற்சித்தேன். காலை 11 மணிக்கு கைபேசியுடன் காத்திருந்தேன்.  419 இருக்கைகள் இருப்பதாகக் காட்டியது. இவ்வளவு இருக்கைகளா, கண்டிப்பாக கிடைக்கும் என நம்பி ஒரு சில நிமிடங்களில் விவரங்களை உள்ளீடு செய்து கட்டணமாக ரூபாய் 383 செலுத்தி வெளியே வந்தேன், 46, 47 என காத்திருப்போர் பட்டியலைக் காட்டியது.
 
வழமையான முறையில்தான் காத்திருப்போர் பட்டியல் என்றால் இதிலுமா? சரி, இது கதைக்குதவாது, வேறு வழியில்லை, முன்பதிவில்லாத பெட்டியில்தான் நமது பயணம் என‌ எண்ணியவாறு இன்று பிற்பகல் 300 ரூபாய் செலுத்தி இருவருக்கும் 
பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு நடைமேடையில் காத்திருந்தேன்.
 
பசியாற ஏதாவது கிடைக்குமா என அங்கே உலாவிய குரங்கு ஒன்று பயணிகளின் பைகளை நோட்டமிட, எச்சரிக்கையான பயணிகள் தங்களது பைகளைப் பாதுகாக்க, அங்கே இருந்த குப்பைத் தொட்டியைக் கவிழ்த்து ஒரு டப்பாவில் ஒட்டியிருந்த எச்சில் மிச்சத்தை மோர்ந்து பார்த்து, அது உண்பதற்கு உகந்ததல்ல என ஒதுக்கிவிட்டு அடுத்த இடத்தை நோக்கி நகர்ந்தது அந்தக் குரங்கு. பிளாட்பாரத்தில் இருந்து நிரந்தரமாக அந்தக் குரங்கை அப்புறப்படுத்திவிட்டால் பயணிகளின் பைகளுக்கு பாதுகாப்புதானே?
 
நாங்கள் இருவரும் மூத்த குடிமக்களாக இருந்த போதும், 150 ரூபாய்க்குப் பதிலாக கூடுதலாக ஒரு 150 ரூபாயை டெல்லி வானரக் கூட்டம்  பிடுங்கிக் கொண்டதே? பிளாட்பாரக் 
குரங்கிடமிருந்து நமது பைகளைக் காக்க முடிந்த 
நம்மால்டெல்லி வானரக் கூட்டத்திடமிருந்து காக்க முடியவில்லையே என்கிற 
ஆதங்கத்தைச் சுமந்தவாறு வந்த வண்டியில் தொற்றிக் கொண்டேன்.

இங்கே 150 ரூபாயை லவட்டியது போதாது என்று தத்கல்லின் போது செலுத்திய 380 ரூபாயில் 240 ரூபாயைத்தான் திருப்பித் தருவோம் என‌குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இது டெல்லி வானரக் கூட்டத்தின் வழிப்பறி அல்லவா? தத்கல் கதவைத் தட்டியதற்கு தண்டனையாடா இது? நான் என்ன உன்னை மாதிரி ஓசிச்சோறா? ஓய்வூதியத்தில் வாழ்க்கையை நகர்த்துபவன். ஏண்டா இப்படி வதைக்கிற?

முன்பதிவு பெட்டியில் ஏறி, டிடிஆர் ஐப் பார்த்து இடம் கேட்கலாம் என்றாலும் முன்பதிவில்லா பெட்டிகளில் நுழைவது என்பது ஏதோ சேரிக்காரன் ஊர் தெருவுக்குள் நுழைவதைப் போலத்தான் பல்வேறு சமயங்களில் பார்த்திருக்கிறேன். சுயமரியாதை கருதி முன் பதிவில்லா பெட்டியில் நுழைந்தேன்.

தத்கலில் முயன்று இடம் கிடைக்காதவர்கள், திடீரென பயணத்தைத் தொடங்கியவர்கள் என பலரும் முன்பதிவில்லா பெட்டியைத்தானே நாடமுடியும். பெட்டிக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நான்கு பேர் உட்கார வேண்டிய இருக்கையில் ஐந்து பேர் ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். ஒரு சில இருக்கைகளில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் அவர்களுக்கு அது இறுக்கமாகத்தான் இருந்தது. உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களாலும் உடல் உழைப்புக் குறைந்து போய் உடல் பருத்ததனாலும் வந்த விளைவு இது.

 
நீண்ட நேரம் நின்று கொண்டே பயணிக்க இயலாது என்பதால் இருக்கையின் விளிம்பிலாவது இடம் கிடைத்தால் போதும் என்றெண்ணி, ஏற்கனவே அமர்ந்திருப்பவர்களை
பரிதாபமாகப் பார்த்தால் சிலர் இறக்கப்பட்டு சற்றே நகருவார்கள். இங்கே அமர்ந்திருப்பவன் ஆண்டை போலவும், இடம் கேட்பவன் அடிமை போலவும்தான் கருதப்படுகிறான். எப்படியோ அரை மணி நேரப் பயணத்திற்கு பின் நானும் ஒரு விளிம்பில் ஒட்டிக் கொண்டேன்.

சோலையார்பேட்டையில் வட இந்திய இளைஞர்கள் சிலர் ஏறினர். என் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞனிடம் பேச்சுக் கொடுத்தேன். தான் திருப்பூரில் தையல் வேலை செய்வதாகவும், 
சோலையார்பேட்டை வரை வேறு ஒரு வண்டியில் முன்பதிவு பெட்டியில் வந்ததாகவும், அதன் பிறகு இந்த வண்டியில் முன்பதிவின்றி பயணிப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டீர்களா என்று கேட்டபோது, ஆம் என்றார். யார் வருவார்கள் என்று கேட்டபோது காங்கிரஸ் என்று கட்டைவிலை உயர்த்தினார். ஏன் மம்தா என்னவாயிற்று என்ற போது அவரது செல்வாக்கு குறைந்து வருவதாகக் கூறினார். பாஜக என்றபோது கட்டை விரலைக் கவிழ்த்துக் காட்டினார். ஏன் இப்படிச் சொல்கிறீர்கள் என வினவியபோது இனி எல்லாமே இராகுல்தான் என்றார். வங்கமே பங்கமாகும் பொழுது இனி வானரப் படைகளுக்கு சங்குதானோ?

எப்படியோ டெல்லியில் இருந்து வானரப் படைகள் விரட்டப்பட்டு நமது பைகளுக்கு  பாதுகாப்பு கிடைத்தால் சரி என்ற ஏக்கத்தோடு பயணத்தைத் தொடர்ந்தேன்.

ஊரான்