Monday, 30 December 2024

படைப்புகள் பாமரனின் கைகளில் தவழுவது எப்போது?

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியாச்சு!
ஒவ்வொரு ஆண்டும் 
ஓடிச் செல்லும் நான், 
இந்த ஆண்டு எட்டிப் பார்ப்பேனா? தெரியவில்லை!

தொடங்கிய இரண்டு நாட்களில் சிலரது அலப்பறைகளும் அங்கலாய்ப்புகளும் 
மெய்நிகர் உலகை மேவு(ய்)கின்றன.

பக்கம் பக்கமாய் எழுதிக் குவித்து, 
பக்கங்களும் விலையும் ஆயிரங்களைத் தாண்டிக் 
கனக்கும் பொழுது, 
எளியோரால் எட்டித்தான் பார்க்க முடியுமே ஒழிய, 
பொறுமையாய் புரட்டிப் பார்க்க இயலுமோ?


"விலையைப் பற்றிக் கவலைப்படாமல், 
வாங்குவோரே உண்மையான வாசகர்கள்" என்றும், "மற்றோரை வழிப்போக்கர்கள்" என்றும் வசைபாடுகின்றான்,
தனது கவிதைக் கட்டுக்கு ஆயிரத்துக்கு மேல் விலை குறிக்கும் ஒரு கவிஞன்!

ஒன்றரை அடியில், 
பத்து ரூபாயில், 
உலகையே வலம் வருகிறான் வள்ளுவப் பெருந்தகை!
ஆனால், சிலர்
நீட்டி முழக்கி எழுதினாலும்
சில அடிகள் கூட நகர முடியாமல் தடுமாறுவது ஏனோ? ஏனோ?

பாக்களின் வரிகள் 
"பேரண்டத்தின் ஊடே 
ஓர் சூறைக்காற்று 
சுழன்று வீசுவது போல், 
துயரச் சிக்கல்களைப் பிரித்தெடுக்க வேண்டும்" (1)

இல்லையேல், அரசு நூலகங்களிலும் பரன்களிலும் 
பலரது படைப்புகள் 
உறங்குமே ஒழிய
பாமரனின் கைகளில் 
ஒரு போதும் தவழாது! 

ஊரான்

குறிப்பு: (1). செஞ்சீனப் புரட்சியாளன் தோழர் மாவோவின் கவிதை வரிகள். "மா சேதுங் கவிதைகள்". பொதுமை வெளியீடு, 1981

தொடர்புடைய பதிவுகள் 

Sunday, 29 December 2024

'சொல்' அம்புகள்!

காசாவின் இதயத்தைத் துளைக்கும் இஸ்ரேலின் ஏவுகணைக் 'கொல்' அம்புகள் போல,
நம் நெஞ்சுக் கூட்டை ஓயாது துளைக்கும் நாவின் 'சொல்' அம்புகள்! (4)

எதிரிகளின் கொலைக் களத்திலிருந்துக் 'கொல்' அம்புகள் ஏவப்படுகின்றன.
ஆனால், 
உறவெனும் பசப்புத் தளத்திலிருந்து அல்லவோ 'சொல்' அம்புங்கள் வீசப்படுகின்றன? (8)


காசாவின் சிதிலமடைந்த இதயத் துண்டுகளை எப்பாடுப் பட்டேனும் ஒட்டவைத்துவிட முடியும்.
ஆனால்,
சிதறிய நம் நெஞ்சத் துண்டுகளை..., 
அந்த 'இறைவனே' முயன்றாலும்...? முடியாத ஒன்று! (12)

காசாவில் 'கொல்' அம்புகளைத் தாங்கும் 'பதுங்குக் குழி' எனும் கவசங்கள் உண்டு.
ஆனால், 
பஞ்சு போன்ற நம் நெஞ்சுக் கூட்டைக் காக்க,
கல்லோ, இரும்போ, தங்கமோ எதைக் கொண்டு வேய்ந்தாலும்,
அவற்றையும் கரைத்து, அரித்து, தேய்த்துத் துளையிடும் 
ஆற்றல் வாய்ந்தவை அன்றோ நாம் வீசும் 'சொல்' அம்புகள்! (14)

'கொல்' அம்புகள், ஒன்று உடலை முடமாக்கும், இல்லையேல் உயிரை ஒரேயடியாய்ப் போக்கிவிடும். ஆனால்,
'சொல்' அம்புகளோ, உள்ளத்தை முடமாக்கி, சாகவும் விடாமல், வாழவும் விடாமல், ஒவ்வொரு நொடியும் நம்மைத் துளைத்துக் கொண்டே இருக்கும்! (16)

'கொல்' அம்புகள் ஒரே நேரத்தில் ஒன்றாய், பத்தாய், நூறாய்கூட கொத்தாய் வரக்கூடும்.
ஆனால்,
'சொல்' அம்புகளோ, 
நா மொழியோடு முக மொழியும் சேர்ந்து 'மூஞ்சைக் காட்டுவதால்', அந்த 'உலகளந்தப் பெருமாளே' வந்தாலும் அளவிட முடியாததாய், 
ஒன்று இரண்டாய், இரண்டு நான்காய், நான்கு பதினாறாய், பதினாறு இருநூற்று ஐம்பத்தாறாய்... பிஷனாய்ப் (fission) பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்! (20)

'பாசிஸ்ட்டுகள்' 'கொல்' அம்புகளை ஏவுகிறார்கள்.
'சேடிஸ்ட்கள்' 'சொல்' அம்புகளை வீசுகிறார்கள்! (22)

'கொல்' அம்புகளால் மாண்டவர் போக, எஞ்சியவர் உண்டு.
ஆனால், 
'சொல்' அம்புகளால் மீண்டவர் எவரும் உண்டோ? (24)

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

(குறள் 129)

என்று சும்மாவா சொன்னான் வள்ளுவன்?

ஊரான்

Thursday, 26 December 2024

2025 புத்தாண்டு ராசி பலன்: செவ்வாய் மேல வழக்கு வருமா?

செவ்வாயோட ஆதிக்கத்துல 2025 பொறக்கறதனால சட்டம் ஒழுங்கு சீராகுமாம். காவல்துறை, ராணுவத்தின் கை ஓங்குமாம். தீவிரவாதிகள் ஒடுங்கிப் போவாங்களாம்”.

அடேய், ஆட்டுக் குட்டி, சேக்கிழாரு! இனி சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு முதல்வர் மேலப் பாயாதீங்கப்பா. செவ்வாய வெறட்டுனாதான் வர்ற வருசம் ஒங்களுக்கு அரசியல் பொழப்பாவது ஓடும். மொதல்ல அதுக்கான வேலையப் பாருங்கப்பா. 

ஓ! செருப்ப கழட்டிட்டு, சாட்டையால அடிச்சுகிட்டா செவ்வாய் ஓடிடும்னு ஆக்ஸ்போர்டுல சொல்லிக் கொடுத்தாங்களோ? இருக்கும்! இருக்கும்!


அப்புறம் முதல்வர் கிட்ட எனக்கு ஒரு ரிக்வெஸ்ட். நீங்க செய்ய வேண்டிய வேலைய செவ்வாயே செஞ்சிடறதால, ஸ்டாலின் சார், யூ டேக் ரெஸ்ட் சார்.

ஒருவேளை சட்டம் ஒழுங்கு எங்கயாச்சும் கெட்டுப் போச்சுன்னா, டூட்டிய சரியாப் பாக்காத செவ்வாய் மேல ஒரு கேஸப் போடுங்க. என்ன நான் சொல்றது சரிதானே?

***
பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேர்வார்களாம்”.

செவ்வாயால சேருவாங்கன்னா, இதுக்கு முன்னாடி பிரிஞ்சது யாரால? அடேய்! ஜோதிடப் பசங்களா, சொத்துச் சண்டை இருக்கிற வரைக்கும் சகோதரச் சண்டை நிக்காதுடா. அவிங்க பிரிஞ்சுதான்டா கெடப்பாங்க. ஒங்க ஒன்பது கெரகமும் ஒச்சத்துல வந்தாலும்கூட நம்ம சகோதரர்கள ஒட்ட வைக்க முடியாதுடா. அது சொத்துடமையோட கூடப்பொறந்த பண்புடா. சொத்துடமை இருக்கிற வரைக்கும் ஓயாதுடா இந்தச் சண்டை.

அப்புறம் "செவ்வாயோட ஆதிக்கத்துல பூமி வெலை ஒசருமாம்..”

ஏற்கனவே ஏழை பாழைங்க பிளாட்டு வாங்கி வீடு கட்ட முடியலடா. அந்த செவ்வாய்கிட்ட சொல்லி ரியல் எஸ்டேட் புரோக்கர் பசங்கள கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கடா.

காடுகள் எல்லாம் செழிப்படையுமாம்...கிளி, மயில் பட்சிகளின் எண்ணிக்கை கூடுமாம்".

கேஸ் அடுப்பு, கான்கிரீட் வீடு, தகரக் கொட்டாய், டிராக்டர் கலப்பைகளின் தயவால எங்க காடுகள் எல்லாம் செவ்வாயோட பார்வை இல்லாமலேயே செழித்து வளர்ந்து நிக்குதுடா. 

காடுகள் செழித்ததால் மயில்கள் மட்டுமா பன்றிகள், குரங்குகள்கூட பெருகிவிட்டன. இதனால் வேளாண் பயிர்கள் நாசமாகின்றன. தெரியுமா உனக்கு?

இதெல்லாம் நாட்டு நடப்புடா. அதுக்கு எதுக்குடா 12 கட்டம்? 

லக்னத்தின் மீது அமர்ந்திருக்க குரு பகவான் பார்ப்பதால ஆன்மீகமும், தெய்வீகமும் வளருமாம். சந்திரனுக்குப் பக்கத்தில் கேது இருப்பதால கோவில் கும்பாபிஷேகம் அதிகம் நடக்குமாம்… மலை கோவில்களுக்குப் பாதை அமைக்கப்படுமாம்"

அடிச்சு வுடுறான் பாருங்களேன். இவன் தன்னம்பிக்கைய உண்மையிலேயே பாராட்ட வேண்டும். துன்பங்களும் துயரங்களும் பெருகப் பெருக, ஆன்மீகமும் தெய்வீகமும் வளரத்தான் செய்யும். அதையொட்டி கோயில்கள் பெருகத்தான் செய்யும். கும்பாபிஷேகமும் நடைபெறத்தான் செய்யும். கோவிலுக்குப் பாதை போடத்தான் செய்வார்கள். 

அது எப்படிடா வருஷா வருஷம் கிரகங்கள் எடத்தை மாத்திக்கிட்டே இருக்கு. ஆனா நீங்க சொல்ற இந்த ஆன்மீகப் பலன்கள் மட்டும் எப்பவும் மாறவே மாட்டேங்குது? 

சரி! இந்த ஆன்மீகத்தைக் குறைப்பதற்கு எந்த கிரகமும் கிடையாதா? கொஞ்சம் கருணை காட்டி ஒரு கெரகத்தையாவது எத்தியிஸ்ட் பக்கம் பார்வையைத்
திருப்பச் சொல்லக் கூடாதா? நாங்களும் கத்தி கத்திப் பார்த்துட்டோம். ஆன்மீகம் கொறைஞ்சதா தெரியல. 

அட்லீஸ்ட் 2026  லாவது, ஒரே ஒரு வருசத்துக்கு மட்டும் இந்த ஒம்பது மெயின் ரோடு பார்ட்டிங்களுக்கு  ஒர்க் லோடு ஜாஸ்தின்னா, இந்த ராகு, கேது அப்ரன்டிஸ்ங்களையாவது எங்களப் பார்க்கச் சொல்லுங்கப்பா. நாங்க எவ்ளோ நாளைக்குத்தான் பெரியாருக்காகக் காத்துக் கிட்டுக் கெடக்கறது?

அப்புறம், "சாலை வசதி பெருகுமாம். ஆறு வழிப் பாதை எட்டு வழிப் பாதை எல்லாம் புதுசா வருமாம்” 

சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் ஹைவே முடியப் போறத எவ்ளோ நாசுக்காகச் சொருவுறான் பாருங்க. 

சுக்கிரன் சனி பகவான் வீட்ல இருப்பதனால நிலக்கரிச் சுரங்கம் மூழ்குமாம்”. 

இந்தியாவுல ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில், நெய்வேலி உள்ளிட்ட 352 நிலக்கரிச் சுரங்கங்கள் இருக்கு. இதுல எந்தெந்த சுரங்கம் மூழ்கும்ன்னு சொல்லிட்டா நாங்க உஷாராயிடுவோமில்ல. குத்து மதிப்பா சொன்னா எப்படி? அப்ப, ஜோதிடம் துல்லியமானதுன்னு சொல்றதெல்லாம் பொய்யா கோபால்?

"செவ்வாய் நீசமாகி நிற்பதனால தினசரி மற்றும் வார பத்திரிகைகளின் விற்பனையை உயர்த்தப் பாடுபட வேண்டி இருக்குமாம்".

செவ்வாய் நீசமாக இருப்பதனால் தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் மவுசு கொறையல ராசா. வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூபு, கூகுள் எல்லாம் சுத்தறதனால வந்த வெனை இது. வேணும்னா அவங்களோடு, செவ்வாயைப் பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லு. சர்குலேஷன கூடுறதுக்கு ஏதாவது சலுகை காட்டுவாங்க.

ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பெருகுமாம். பால் உற்பத்தி அதிகரிக்குமாம்” 

இது உண்மைதானே? அசைவப் பிரியர்கள் அதிகரித்து வருவதால காளை மாடுகளும், ஆடுகளும்  பெருகித்தானே ஆகணும். பால் கறந்தாதான் வீட்டில் அடுப்பு எரியும் என்று நிலையில் விவசாயி இருக்கிறதனால பால் உற்பத்தியும் அதிகமாகும்தானே? இதுக்கு செவ்வாய் எங்க இருந்தா என்னடா? நாங்க எங்க இருக்கோங்கிறதுதான்டா முக்கியம்!

அப்புறம், "வாகன உற்பத்தி உயரும், பேட்டரி கார், சோலார் பயன்பாடு அதிகரிக்கும்... கம்ப்யூட்டர் மற்றும் ஏ.ஐ துறைகள் வளர்ச்சி அடையும். ஷேர் மார்க்கெட் ஏறி இறங்கும். தங்கம் விலை உயரும்".
என அள்ளி வுடுறானுங்க. 

பொருளாதாரம் படிச்சவனே இதெல்லாம் சொல்றானே? கைநாட்டுப் பசங்க, நீங்க எதுக்குடா கட்டத்தத் தூக்கிகிட்டு இதில் எல்லாம் மூக்க நொழைக்கிறீங்க?

இப்படி இன்னும் பலப் பல, 26.12.2024, இந்து தமிழ் திசை நாளேடு, ஆனந்த ஜோதி பக்கத்தில்,  2025 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன் பற்றி ஜோதிஷ பூஷன் வேங்கடசுப்பிரமணியனின் பொதுப் பலன்கள் எனும் புருடாக்கள் இவை.

இவை தவிர 12 ராசிக்காரர்களுக்கும் தனித்தனி கணிப்புகள். 

நமது மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் நிகழும் சமூக நடப்புகளை ஓரளவுக்குப் புரிந்து கொண்டு, அவற்றை ராசிகளோடு பொருத்தி, கட்டத்தை வைத்து கலந்து கட்டி அடிப்பது ஜோதிடக்காரர்களுக்குக் கைவந்த கலை. 

ஜோதிடம் மிகவும் துல்லியமானது என்று இவர்கள் கதை அளப்பார்கள். ஆனால் நாலு ஜோதிடர்களின் கணிப்புகளை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தாலே இவர்கள் அடிப்பது கப்சா என்பது அம்பலமாகும். அதேபோல கடந்த ஆண்டுகளின் ராசி பலன்களையும், இந்த ஆண்டு ராசி பலனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கப்சா இன்னும் உறுதியாகும். (கட்டுரையின் விரிவு கருதி நான் இதற்குள் செல்லவில்லை).

ராசிபலன் பகுதியில், நம்ம ராசிக்கான பலனை மட்டும்தானே நாம் பார்க்கிறோம். மத்ததையும் படிச்சாதானே ஒரே மேட்டரை வரிசை மாத்தி, வார்த்தை மாத்தி போட்டிருக்கானுங்க என்பதே தெரியும். அதை ஒருபோதும் நாம் செய்ய மாட்டோம் என்பதை அவன் தெரிந்து வைத்திருக்கிறான். 

ஜோதிடத்தால் பத்திரிகைகளின் பக்கங்கள் நிறைகின்றன. தொலைக் காட்சிகளில் நேரங்கள் கழிகின்றன. மொத்தத்தில் ஜோதிடர்களுக்கும் ஊடகங்களுக்கும் பைகள் நிறைகின்றன. நாமோ கைநாட்டு ஜோதிடக்காரனுக்கு முன்னால் வாய் பொத்தி மௌனியாய் நிற்கின்றோம். 

பசியாற, தாகம் போக்க புல்வெளிகளை, நீர் நிலைகளை நாடும் அப்பாவி மாடுகளும், மான்களும் கொடிய விலங்குகளிடம் சிக்கித் தவிப்பதைப் போல, துன்பங்களாலும், துயரங்களாலும் சிக்கி மீள வழி தெரியாமல் முழிக்கும் நம்மை ஜோதிடம் கவ்விக் கொள்கிறது.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 



Tuesday, 24 December 2024

கலகக்காரர்களையும் கடவுளாக்கிவிட வேண்டாம்!

தலைவர்கள் என்ன பேசினார்கள், என்ன செய்தார்கள் என்பது குறித்துத் தெரிந்து கொள்வதைவிட, அவர்களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாட்களில், சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, 'கோஷமிட்டு' கலைந்து செல்வது ஒரு 'ஃபேஷனாகி' விட்டதோ?


ஆலயங்களில் பக்தன் தெண்டனிட்டு 'போற்றி! போற்றி!' என்கிறான். நாமோ சிலை அருகில் நின்று கொண்டு 'வாழ்க! வாழ்க!' என்கிறோம்.

அதைத் தாண்டி என்ன செய்கிறோம் என்பதுதான் பக்தனையும் நம்மையும் பிரித்துக் காட்டும் எல்லைக்கோடு.

என்ன, 
கோர்த்தப் பூக்களைக் கோவில்களில்
மாலையாய் சாத்துகிறான். 
உதிரிப் பூக்களை கிள்ளிப் போட்டு அதையே புஷ்பாஞ்சலி என்கிறான். 

ஆனால், நாமோ கோர்த்தப் பூக்களை மாலையாய் சிலைகளுக்கு அணிவிக்கிறோம். உதிரி மலர்களை அள்ளித் தூவுகிறோம்.

அங்கே, கோவில்களில் இடைத்தரகர்கள் உண்டு. 
அதனால் கடவுளின் சிலைகளைக் காணத்தான் முடியுமே ஒழிய 
தொட முடியாது. 
ஆனால் இங்கோ,
வீதிகளில்  தலைவர்களின் சிலைகளை நம்மால் தொட முடியும். ஏன் கன்னத்தில் முத்தம்கூட இடமுடியும்

"அம்பாள் என்னைக்கடா பேசி இருக்கா, அற்பனே?" என்று கோவில் சிலைகள் பேசாதென்பதை அன்றே 'பராசக்தி'யில்  போட்டுடைத்தான் எங்கள் குணசேகரன். 

ஆனால், தலைவர்களின் சிலைகளோ ஓயாது பேசிக் கொண்டிருப்பவை. 

இங்கும்கூட எல்லாச் சிலைகளும் பேசிவிடாது. 

'செம்மல்கள்', 'அம்மா'க்களின்  இரசிகத் தலைமுறை முடியும் போது அவர்களின் சிலைகளும்கூட அன்றோடு மறைந்து போகும்.

ஆனால், 
எளியோரின் வலி உணர்ந்து, 
வலிப் போக்கும் வழி அறிந்து, 
கருத்தை விதைத்துப் பாடுபட்ட காரல் மார்க்சின், அண்ணலின், தாடிக்காரக் கிழவனின் சிலைகள், 
அவர்கள் மாண்டு ஆண்டுகள் பல கடந்தாலும் தலைமுறைகளையும் தாண்டிப் பேசிக் கொண்டே இருக்கும். 

சிலைகள் மட்டுமா? கிழவனின் கோடுகள்கூட பேசுகின்றனவே!

அவர்கள் தொடர்ந்து பேச வேண்டுமானால், வீதிகளில் உள்ள சிலைகள் அருகிலோ அல்லது பொது இடங்களில் படங்களை வைத்தோ ஒன்று கூடி, வீர வணக்கம் செலுத்தி சிறு உரையாற்றினால் வழிப்போக்கர்களின் காதுகளுக்குள்ளும் தலைவர்கள் ஊடுருவிச் செல்வார்கள்.

மாலைகளுக்கும் மலர்களுக்கும் செய்யும் செலவில் தலைவர்களின் கருத்துக்களை எழுத்தாகக் கோர்த்து நாலு பக்க அளவில் நாலு பேரிடம் சேர்த்தாலாவது, வீதிகளில் மட்டும் நில்லாமல் வீடுகளுக்குள்ளும் தலைவர்கள் எடுத்துச் செல்லப்படுவார்கள்

கலகக்காரர்களையும் கடவுளாக்கிவிட வேண்டாம்!  

ஊரான்

Monday, 23 December 2024

ஊசிப்போன ஊறுகாய்!

வரிக்கு மேல வரிய போடுற அரசாங்கம்

கடந்த வெள்ளி அன்று நகராட்சி ஊழியர்கள் வீடு தேடி வந்து. வீட்டு வரி, தண்ணீர் வரி கட்டச் சொல்லி விவரச் சீட்டுக் கொடுத்தார்கள். தாமதிக்கத் தாமதிக்கத் தண்டம் கட்ட வேண்டி வரும் என்று அவர்கள் அச்சுறுத்தியதால், அன்றே இணையவழியில் முயன்றேன், ஆனால், அரசு அலுவலகங்களில் அடுத்த மேசைக்கு நகர மறுக்கும் மனுக்களைப் போல, இங்கே இணையமும் அடுத்தப் பக்கத்திற்குப் போக மறுத்தது. 

மறுநாள் காலை அலுவலகத்தில் கணினி காட்டியத் தொகையைக் கட்டிவிட்டு இரசீதைப் பார்த்தேன். ஓராண்டின் இரு தவணைகளும் பாக்கி, அதுவும் காலம் கடந்து கட்டியதால் ரூ.120 தண்டம், அதோடு தாமதத்திற்குக் கூடுதலாக ஒரு சதவீதம் என ரூ.15 தண்ட வட்டி ஆக மொத்தம் ரூ.135. 


கட்டுறதே 'வீட்டு வரி', இதுல தாமதத்துக்குத் தண்டம் வேற, சரி. அதுக்கு மேல ஒரு சதவீதம் வட்டி எதுக்கு?  இது என்ன 'வரிக்கு மேல வரியை போடுற' கதையா இருக்கு? எல்லாம் ஊறுகா மாமியோட 'ட்ரெயினிங்' போல?

சொற்ப ஓய்வூதியத்தில் காலம் தள்ளுவோருக்கு இது பெரிய தொகை என்பதை என் முகம் காசாளருக்குக் காட்டிவிட்டது போல! "தவணைத் தேதிக்குள் வரியை செலுத்தினால், 10 சதவீதம் கட்டணத்தில் சலுகை" என்றார். மிச்சப்படுத்த வேண்டிய அளவுக்கு தண்டமாகச் செலுத்துகிறோமே என்ற ஏமாற்றத்துடன், "தவணைத் தேதிக்கு முன்னரே ஒரு குறுஞ்செய்தி அனுப்பலாமே?" என்று எனது ஆதங்கத்தை மட்டும் அவரிடம் வெளிப்படுத்திவிட்டு வெளியே வந்தேன்.

"இதுக்கே அலுத்துக்கிட்டா எப்பூடி? கார் வாங்கும் போது சாலையில் நுழைவதற்கு முன்பே ரோடு டேக்ஸ் கட்றோம், அப்புறம் ரோடுல ஓடும் போதெல்லாம் டோல் டேக்ஸ் கட்றோம். இது ஒரு மாட்டை ரெண்டு முறை தோலுரிக்கறதா தெரியலையா உங்களுக்கு?" என கார்காரங்க விம்முறது என் காதுல கேட்குது. என்ன செய்ய?

ஊசிப்போன ஊறுகாயத் தூக்கி வீசாதவரைக்கும் ஊறுகளை அனுபவிச்சுத்தானே ஆகணும்?

ஊரான்

40 ஆண்டுகளுக்கு முந்தைய மகஇக பாடல்

வரி...வரி...வரி

வரிக்கு மேல வரியப் போடுற அரசாங்கம்... 
நம்ம, வாழ்வக்கெடுத்து வறுமையாக்குது அரசாங்கம்...      இந்த அரசாங்கம் (2)
(வரிக்கு மேல...)

தாத்தாப் பாட்டி முதல் பொம்பள ஆம்பள போடுற வெத்தல பாக்குக்கு வரி!
காஞ்சத் தொண்டைய நனையக் குடிக்கிற 
காப்பிக்கும் போடுறான் விற்பனை வரி!
காலையில் எழுந்துக் கஞ்சிக் குடிக்கிற பானைக்கும் போடுகிறான் பானை வரி!
சினிமா டிராமா காட்சிக்குப் போனா
அங்கேயும் போடுறேன் கேளிக்கை வரி!
பார்த்தா வரி... சிரிச்சா வரி... கேட்டா வரி (வரிக்கு மேல...)

கட்டாதப் பணத்துக்குப் பீசப் புடுங்குறான் 
அங்கே இருக்குது மின்சார வரி!
ஓட்டச் குடிசையில் கதவை ஒடைக்கிறான் அங்கே போடுறது வீட்டு வரி!
கொழாயத் தொறந்தாத் தண்ணியும் வராது
அதுக்கும் போடுறான் தண்ணி வரி!
குடிசையில் எரியும் சிமினி விளக்குக்கு
ஊத்துற சீமெண்ணைக்கும் போடுறான் வரி!

வீட்டு வரி... தண்ணீ வரி... சீமெண்ணெய் வரி...(வரிக்கு மேல...)

வெளைஞ்ச நெல்லையே கொறைஞ்ச வெலைக்காகக்
கொள்முதல் செய்வது தானிய வரி! 
கஷ்ட ஜீவனம் நடத்தும் தொழிலாளி விவசாயிக் கட்டுற துணிக்கு வரி!
டீக்கடை சைக்கிள் கடை பெட்டிக் கடை மளிகைக் கடை 
அத்தனைக்கும் போடுறான் தொழில் வரி!
திருடர்கள் போக்கிரிகள் கொள்ளைக்காரர்கள் 
கோர்ட்டில் கட்டுவது குண்டர்கள் வரி!
வரவுக்கு வரி... தொழிலுக்கு வரி... கோர்ட்டுக்கு வரி...

நபர் 2: வர்ற காலத்துல இன்னும் எதெதுக்கெல்லாம் வரி போடப் போறானுங்களோ?

நபர் 1: சொல்றேன் கேளு!

பொஞ்சாதிப் புரசன் ஒண்ணாகப் போனா அதுக்கும் போடுவான் தம்பதி வரி!
நாட்டில்... பிறக்கிற ஒவ்வொரு குழந்தைக்கு எல்லாம் 
அவனும் போடுவான் குழந்தை வரி!
விலைவாசி ஏற்றத்தாலப் பட்டினியாக் கிடந்தா
அதுக்கும் போடுவான் பட்டினி வரி! 
பெத்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தா 
அதுக்கும் போடுவான் தாய்ப்பால் வரி!

குனிஞ்சா வரி... நின்னா வரி... நெளிஞ்சா வரி...
(வரிக்கு மேல...)

***