Monday, 24 February 2025

காசுக்காக மேடைகளில் வாயை அவிழ்ப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளா?

மக்களின் பிரச்சனைகளுக்காக  மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி, சிறை சென்று சித்திரவதைகளை அனுபவித்த ஒரு தியாகியைப் போல, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாளை பூதாகரமாக ஊதிப் பெருக்குகின்றன ஊடகங்கள்.

ஆளும் கட்சியை, அதிலும் குறிப்பாக திமுக மற்றும் திராவிட
அரசியலை, சீமானைப் போலவே, மேடைகள் தோறும் வரைமுறையின்றி திட்டித் தீர்த்து, சிந்தனை ஏதுமற்ற ஒரு லும்பன் இரசிகப் பட்டாளத்தை உருவாக்கிய 'பெருமைக்குரியவர்தான்' இந்தக் காளியம்மாள்.

காளியம்மாள்

இவர் ஊர் ஊராகச் சென்று கூட்டம் பேசியதைத் தவிர வேறு என்ன செய்தார்? சொந்தக் காசை செலவு செய்தா கூட்டங்களுக்குச் சென்று வந்தார்? வாயை விற்று காசு பார்க்கும் கலையை கைவரப் பெற்றவர்களில் இவரும் ஒருவர். இன்று தாள்கள் படபடத்தால்தானே இவர்களின் வாய்கள்கூட மேடை ஏறுகின்றன. 

சாக்கடை எங்கு ஓடினாலும் புழுக்கள்தான் நெளியும். காளியம்மாள் எந்தக் கட்சியில் இணைவார் என்று ஆருடம் சொல்வதைவிட, சாக்கடைகளை மூடுவது எப்படி என்பதை யோசிப்பதே அறிவுடமை.

மாமிசப் பிண்டத்தில் நெளியும் புழுக்கள், ஒன்றை ஒன்று விழுங்க முயலும் போது, ஒரு சில புழுக்கள் அங்கிருந்து நழுவ முயல்வது இயல்புதானே?

அரசியலில் காளியம்மாள் ஒரு கவர்ச்சிக்காரி. திரைப்பட ஆட்டக்காரிக்கும் காளியம்மாவுக்கும் என்ன வேறுபாடு? முன்னவர் காசுக்காக திரைகளில் ஆடைகளை அவிழ்க்கிறார். பின்னவர் அதே தேவைக்காக மேடைகளில் வாயை அவிழ்க்கிறார்.


ஊரான்

Sunday, 23 February 2025

பாராஞ்சி: ஒரு வகைமாதிரி சனாதன கிராமம்!

"வேண்டும் பெரியார்! மீண்டும் பெரியார்!" என்ற தலைப்பில் இராணிப்பேட்டை மாவட்டம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராஞ்சி முகாம் சார்பாக, பாராஞ்சி கிராமத்தில் இன்று (23.02.2025) நடைபெறும் தெருமுனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்.


பெரியார் குறித்து சீமான் அவதூறாகப் பேசிய பிறகு, சீமான் மறைந்து கொண்டிருக்கிறான்; பெரியார் பிறந்து கொண்டிருக்கிறார். இறந்துபோன ஒரு கிழவன் மீண்டும் அவதாரம் எடுப்பதையும், உயிரோடு உருமும் ஒரு கிடாத்தடியன் புதைந்து போவதையும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன். 

கூட்டத்திற்குச் செல்லலாமா என்ற எண்ணம் எழுந்தவுடன், கூகுள் வரைபடத்தில் பாராஞ்சியைத் தேடினேன். வரைபடம் விரிவடைய விரிவடைய சோளிங்கபுரம்-அரக்கோணம் நெடுஞ்சாலைக்கு வடக்கே ஊரும், தெற்கே  காலனியும் இருப்பதைப் பார்த்த போது மனுதர்ம சாஸ்திரப்படி கட்டமைக்கப்பட்ட ஒரு கிராமமாக இன்றும் பாராஞ்சி காட்சி அளிக்கிறது.

ஊருக்கு வடமேற்கே பாராஞ்சி ஏரி அமைந்துள்ளது. ஏரியின் உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் தென்கிழக்காக நீள்கிறது. 

சண்டாளர்களுக்கு (பறையர்கள்) வீடு ஊருக்கு வெளியே இருக்க வேண்டியது (மனு: 10.51) என்கிற மனுவின் வரையறைப்படி, பாராஞ்சியிலும் ஊருக்கு வெளியே, பீடை திசையான தெற்கில்தான் சேரி அமைந்துள்ளது. 

பருவ காலங்களில் மேற்கு திசைக் காற்று சேரிக்குள் புகுந்து ஊருக்குள் வரக்கூடாது என்பதற்காகவும், மேற்கும்-வடக்கும் மேடாக இருப்பதனால் ஏரியின் உபரி நீரோ மழை நீரோ சேரிக்குள் வழிந்தோடி ஊருக்குள் வராமல் இருப்பதற்கும் ஏற்பதான் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் பள்ளமான பகுதிகளிலேயே சேரிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாராஞ்சி சேரியும் இதற்கு விதிவிலக்கல்ல.

ஊர்-சேரி வேறுபாடு மட்டுமல்ல, ஊருக்குள்ளும் இதே கட்டமைப்புதான்
பாராஞ்சியிலும் உள்ளது. கிழக்கு-மேற்காக அமைந்துள்ள ஊர் தெருக்களில், வடக்கே ஐயங்கார் தெருவும், அதற்கு தெற்கே உடையார் தெருவும் அமைந்துள்ளது. உடையார் (அகமுடைய முதலியாரை உடையார்கள் என்பார்கள்)  தெருவுக்குக் கீழேதான் வன்னியர் தெரு உள்ளது. 


இந்து மத சாதியப் படிநிலை அமைப்பில் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் என்பதனால் அவர்கள் மேலேயும், அதற்கு அடுத்த படி நிலையில் உடையார்கள் இருப்பதனால் அதற்குக் கீழேயும், வன்னியர்கள் இவர்களுக்கும் கீழானவர்கள் என்பதனால் கிழக்கேயும் என  தெருக்கள் அமைந்துள்ளன.

இங்கேயும் மேடு-பள்ளம், மேற்கு-கிழக்கு என்கிற யுக்தி கையாளப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் இந்துக்கள் என்றாலும், பிராமண தெருவிற்கு மேற்கே அழகிய மணவாள சுந்தர நாராயண பெருமாள் கோவிலும்,  கிழக்கே கிருஷ்ணன் கோவிலும், உடையார் தெருவிற்கு கீழே பாதாளத்தம்மன் கோவிலும் அமைந்துள்ளது. சேரியில்கூட ஒரு பெருமாள் கோவில் இருக்கிறது. 

பாதாளத்தம்மனைத்தவிர மற்ற மூன்றுமே பெருமாளின் அவதாரங்கள்தானே? இந்துக்கள் அனைவரும் ஒன்று என்றால் ஒரே கோயில் போதாதா? ஏன் மூன்று கோயில்கள்? மேல் சாதிக்காரன வணங்கும் கோவிலுக்குள் கீழ்சாதிக்காரன்
வந்து விடக்கூடாது என்கிற ஏற்பாடுதான் இது. 

வைசிய வர்ணத்தைச் சேர்ந்த ஒருவன் உபநயனம் (பூணூல் கல்யாணம்) செய்து கொண்டால்தான் அவன் இருபிறப்பாளனாக ஆகி வைசியனாகத் தொடர முடியும். உபநயனம் செய்து கொள்ளாத பார்ப்பன, சத்திரிய, வைசிய வர்ணத்தினரை விராத்திய ஜாதி (மனு: 10: 20-24) என்று வகைப்படுத்துகிறான் மனு. இவர்கள் சாதியில் கீழானவர்கள் ஆகிறார்கள். 

உரிய காலத்திற்குள் உபநயனம் செய்து கொள்ளாத வைசிய வர்ணத்தைச் சேர்ந்தவனின் வாரிசுதான் ஆசாரி என்கிறது மனுதர்ம சாஸ்திரம். என்னதான் இன்று ஆசாரிகள் பூணூல் போட்டுக் கொண்டு தங்களை வைசியர்களாகக் காட்டிக்கொள்ள முனைந்தாலும் அவர்கள் மனுதர்ம சாஸ்திரப்படி கீழான சாதி என்பதனால் ஊரில் அவர்களுக்கு இடம் இல்லை என்பதைத்தான் இந்த ஊரில் தனியாக வெளியே உள்ள ஆசாரித் தெரு உணர்த்துகிறது.

மனுதர்ம சாஸ்திரப்படி, இன்று, விந்திய மலைக்குத் தெற்கே, அதாவது தென்னிந்தியாவில், பார்ப்பனர், சூத்திரர் என இரு வர்ணங்கள் மட்டுமே உண்டு என்பது தனி ஒரு செய்தி.

சேரிக்காரன் ஊர் தெரு வழியாகச் சென்றால் தெரு தீட்டாகிவிடும் என்பதாலும், சேரி வழியாகச் ஊர்க்காரன் சென்றால் செல்பவன் தீட்டுப்பட்டு விடுவான் என்பதனாலும் ஊர்காரர்கள் சேரிக்குள் நுழைந்தோ அல்லது சேரிக்காரர்கள் ஊருக்குள் நுழைந்தோ மற்ற ஊர்களுக்குச் செல்லும் வகையில் பொதுச்சாலை இருக்காது. அவ்வாறு நிகழாமல் இருப்பதற்கான பொதுச் சாலைதான் சோளிங்கபுரம்-அரக்கோணம் சாலை. இது ஊருக்கும் சேரிக்குமான (பை பாஸ்) புறவழிச் சாலை. மனுதான் புறவழிச் சாலைகளின் பிதா மகன்.

ஊருக்குள்ளும் இதுதான் நிலை. பிற சாதிக்காரர்கள் பார்ப்பனர்களின் தெருவுக்குள், அதாவது அக்ரகாரத்திற்குள் நுழைந்து செல்லும்படி பாதை அமைத்திருக்க மாட்டார்கள். அங்கேயும் புறவழிச் சாலைகள்தான்‌. இதை பாராஞ்சியிலும் பார்க்க முடியும். 

சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வுகளையும் தீண்டாமையையும் கடைபிடிப்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மாதிரி சனாதன கிராமம்தான் பாராஞ்சி. இந்திய கிராமங்கள் அனைத்தும் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஐயம் இருப்பின், நீங்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிராமத்தின் வடிவமைப்பையும் பரிசீலனை செய்து பாருங்கள். அவை பாராஞ்சியைப் போலத்தான் இருக்கும்.

இத்தகைய கிராமக் கட்டமைப்புகள் தொடரும் வரை, சாதியப் பிணக்குகளும், தீண்டாமையும், மோதல்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். மாற்று? தற்போதைய கிராமங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அதற்கு மாற்றாக, நகரிய (town shop), வீட்டு வசதி வாரிய (housing board), சமத்துவபுரம் போன்ற குடியிருப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஊர் சேரி பாகுபாடின்றி அனைவருக்கும் குலுக்கல் முறையில் இங்கே  வீட்டுமனைகளும் / வீடுகளும்
ஒதுக்கப்பட வேண்டும். 

சமூக நீதி ஏணியின் படிக்கட்டுகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையல்ல.

ஊரான்

Friday, 21 February 2025

கோவேறுக் கழுதைகள்!

பள்ளிக் கல்வியில் ஒன்றிய அரசின் தலையீடு இருந்தால் என்னவாகும்?

ஏற்கனவே காவி அடித்து களங்கமாகிப்போன
திருவள்ளுவன், இனி நித்தியைப்போல மற்றுமொரு சனாதன சாக்கடையாக மாற்றப்பட்டு அசிங்கப்படுவான். உலகப் பொதுமறை பார்ப்பன மறையாய் மாற்றப்படும்!

எழுத்துக்களை உருட்டிய தொல்காப்பியன், இனி அகத்தியனாகி கைகளில் ருத்ராட்சக் கொட்டைகளை உருட்டிக் கொண்டிருப்பான். சங்க இலக்கியங்களுக்கு சங்கு ஊதப்படும்.


முற்காலமோ பிற்காலமோ, வாளேந்திய மூவேந்தர்கள் எல்லாம்  கோமியம் குடித்துக் கொண்டிருப்பார்கள்.

கீழடிகள் மேலடியிலேயே கரைந்து போகும். 

மொத்தத்தில் தமிழனின் வரலாறுகள் பார்ப்பனிய புராணங்களாக வடிவமெடுத்து பிஞ்சுகளின் நெஞ்சங்களில்  ஏற்றப்படும்.

தமிழனின் பழம்பெருமை மட்டுமல்ல, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா, வங்கம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் பழம்பெருமைகளும் முற்றிலுமாக துடைத்தெரியப்படும்! 

இஸ்ரேலும்-காசாவும், ஆரியமும்-தமிழும் வேறு வேறு அல்ல. ஒண்ட வந்தவன் மண்ணில் மைந்தனாவான். மண்ணின் மைந்தன் இனி ஏதிலியாவான்.  

மாநிலங்களை நோக்கி படையெடுக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் பிறந்த கோவேறுகளின் கால்களை முடமாக்க, கரங்கள் தயாராகட்டும்!

ஊரான்

Monday, 27 January 2025

வீட்டு வாசலில் மாட்டுச் சாணம் தெளிப்பது ஏன்?

வேளாண் உற்பத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களால், ஏர் கலப்பை, கவலைகள், மாட்டு வண்டிகளின் பயன்பாடு அநேகமாக அற்றுப் போனதால் மாடுகளும் குறைந்து போயின. இனவிருத்திக்காகவும், கறிக்காகவும், ஜல்லிக் கட்டு-எருதுக்கட்டுகளுக்காகவும் மட்டுமே காளைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிலரது வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. 

மற்றபடி பாலுக்காக கறவை மாடுகள் எப்பொழுதும் போல வளர்க்கப்படுகின்றன. மொத்தத்தில் மாடுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்து போனதால் மாட்டுக் கொட்டகைகளும், எருக்குழிகளும் சின்னதாய் மாறின அல்லது அநேகமாய் காணாமல் போயின.


முன்பெல்லாம் வீட்டுத் தரையும், வாசலும், தெருவும், ஏன் சுவரும்கூட மண்ணால் பூசப்பட்டவை. நெல், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட களத்து மேடுகளையும் மண் தரையில்தான் அமைப்பார்கள். இத்தகைய மண் தரைகளில் சாணத்தைக் கரைத்துத் தெளித்துப் பூசி மெழுகுவதுண்டு, துடைப்பத்தால் தட்டி தரையில் படிய வைப்பதுண்டு. அது 'பெயிண்ட்' போல தரையில் ஒட்டிக்கொள்வதால் தரை கெட்டியாக இருக்கும்.

கூரை வீடுகளின் மண் சுவர்களில்கூட சுண்ணாம்பு அடிப்பதற்குப் பதிலாக சாணத்தைத்தான் கரைத்துப் பூசுவார்கள். காரணம் சுண்ணாம்பு என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும். சாணம் என்றால் தங்களது மாடுகளிடமிருந்தே கிடைக்கும்.

It is an adhesive to the floor and wall, nothing more than that. அதைத் தாண்டி அதற்கு மருத்துவ குணம் வெங்காயம் என்பதற்காக யாரும் தெளிப்பதில்லை, பூசுவதில்லை. சாணம் தெளிப்பதற்கான பயன்பாட்டுக் காரணம் இது ஒன்று மட்டுமே.

சரி, 'அவ்வளவு மருத்துவ குணம்' இருப்பதாகச் சொல்லப்படும் சாணத்தை இன்று ஏன் யாரும் தெளிப்பதில்லை? கிராமங்களில் கூட மொசைக் தரை, சிமெண்ட் வாசல்களுடன் கூடிய காங்கிரீட் வீடுகள் அதிகரித்து விட்டதால் சாணி தெளிப்பது தேவையற்றுப் போனது. களத்து மேடுகளும் எந்திர அறுவடையால் காணாமல் போயின அல்லது காங்கிரீட்டாய் மாறின. 

இதெல்லாம் அக்காவுக்கு எப்படித் தெரியும்? மண் வீட்டில் வசித்து எப்பவாவது சாணி தெளித்திருந்தால்தானே அதைத் தெளிப்பதற்கான காரணம் அக்காவுக்குப் புரிந்திருக்கும். காங்கிரீட் வீட்டிலேயே பிறந்து வளர்ந்தவராச்சே. சரி, இப்பவும் வாய்ப்பிருக்கு. தமிழிசை அக்கா
தனது வீட்டு மொசைக்/கிரானைட் தரைகளிலும், சுவர்களிலும் சாணம் தெளித்து அதன் 'மணம் கமழும் மருத்துவ மகிமையின்' சுகத்தை அனுபவிக்கட்டுமே? யார் தடுத்தது? அதற்கு லட்டி லட்டியாக சாணத்தை அமேசானில்தான் வாங்க வேண்டி வரும். 

சாணம் குறித்த நடைமுறை அறிவு எதுவுமே இல்லாத பஞ்சகச்சங்களும் மடிசார்களும் எடுக்கும் சாண வாந்தியை  அப்படியே இரு கைகளால் ஏந்திக் குடிக்கக் துடிக்கிறார்கள் தமிழிசைகள்‌.  குடிக்கட்டும். அது அவர்களது உணவு, அவர்களது உரிமை. சாணத்தின் பயன்பாடு பற்றித் தெரிந்த நமக்கு அக்காக்கள் வகுப்பெடுக்க வேண்டாம்!

ஊரான்

Monday, 6 January 2025

கட்சிப் பொறுப்புகளுக்குக் கடும் போட்டி! என்ன காரணம்?

மாவட்டச் செயலாளர் தேர்வுக்காக திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இன்று பாஜக தொண்டர்கள் ஒரு திருமண மண்டபத்தில் ஒன்று கூடியபோது அவர்களுக்கிடையே தள்ளமுள்ளு! 




இங்கு மட்டுமல்ல திமுக, அதிமுக உள்ளிட்ட தேர்தலில் பங்கெடுக்கின்ற எல்லாக் கட்சிகளிலும் கட்சிப் பொறுப்புகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. 

மாவட்டச் செயலாளருக்கான போட்டி மிகக் கடுமையாக இருப்பதால், மாவட்டங்கள் வடக்கு கிழக்கு மேற்கு தெற்கு என இருந்தது போய், இன்று சட்டமன்றத் தொகுதிகளே மாவட்டங்களாய் மாறுகின்றன.

மக்களுக்குச் சேவை செய்வதற்காகவா இவர்கள் முண்டியடிக்கிறார்கள்? கட்சித் தலைவர்கள் இதை எதைச் சொல்லி நியாயப்படுத்தினாலும், ஆளும் கட்சியினர் அடிக்கும் கொள்ளையில், சிதறும் சில்லுகளைப் பொறுக்குவதற்குத்தான் இந்தக் கடும் போட்டி.  


இதெல்லாம் நமக்குத் தெரிகிறதோ இல்லையோ போட்டியாளர்களுக்கு இது மட்டும்தான் தெரியும். இதன் விளைவுதான் தள்ளுமுள்ளுகள். பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறுவதும், புதிதாக யாராவது கட்சித் தொடங்கினால் அதில் நுழைந்து கொள்வதும் நம் கண் முன்னால் நடக்கும் நிஜக் காட்சிகள். 

ஓராயிரம் உள்ளூர் பிரச்சனைகள் இருந்தாலும், அனைத்துக் கட்சிப் பிரமுகர்களும் இவற்றைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு இதுதான் காரணம். ஆற்று மணலா,  கல்குவாரியா கொஞ்சம் சில்லறைகளைத் தட்டிவிட்டால் அல்லக்கைகள் அடங்கிவிடும். இதில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஓரளவுக்கு விதிவிலக்கு. 

இதுதான் இன்றைய அரசியல். மக்கள் கம்யூனிஸ்டுகளை ஆதரித்து வளர்க்காத வரை, உள்ளூர் அல்லக்கைகளின் கைகளில்தான் அரசியல் சுற்றிக் கொண்டிருக்கும்.

ஊரான்