Thursday, 24 July 2025

நீத்தாரை நினைவுகூற நீ கொடுப்பது 'திதி'யா? இல்லை 'நிதி'யா?

நீர்நிலைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் திதி கொடுப்பதற்காக இன்று குவிந்திருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் இந்தச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இராமேஸ்வரத்தில் இன்று (24.07.2025)

நீர்நிலைகளுக்குச் சென்று பாக்கெட்டில் உள்ள பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, முன்னோர்களுக்குப் படையல் போட்டு அவர்கள் அதை உண்ண வருகிறார்களா என வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவதைவிட,

வீட்டிலேயே உறவினர்களை அழைத்து மறைந்த முன்னோர்களின் பிறந்த நாளிலோ அல்லது இறந்த நாளிலோ அவர்களின் நல்ல அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி திதிக்கு நிதியாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அறுசுவை உணவு உண்டால் நம் வயிறும் மனமும் நிறையுமே? 

மக்கள் மாற வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது மட்டும் புரிகிறது. வீட்டிலேயே படையல் போட்டுக்கொண்டால் நிதி பெறுவோர் சும்மா விடுவார்களா என்ன? வீட்டில் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விட்டால் அதையேக் காரணமாகக் காட்டி அச்சமூட்டி உங்களை நீர்நிலைகளை நோக்கி ஓட வைப்பார்கள். அதற்குப் பயந்து நீயும் நீர்நிலைகளை நோக்கி திதி கொடுக்க, 'சாரி' நிதி கொடுக்க ஓடினால் அந்த AI கூட உன்னைப் பார்த்துக் கெக்களிக்கும். 

'கற்றதனால் ஆய பயன்யென் கொல்', இந்தக் குறளில் கடவுளை வணங்காவிட்டால் நீ கற்ற கல்வியினால் என்ன பயன் என்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே வாலறிவனைக் கடவுளாக்கி விட்டார்கள். 

என்னைப் பொருத்தவரை இங்கே வாலறிவன் கடவுள் அல்ல, உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர். அவர்களைக் கைவிடாமல் உயிரோடு இருக்கும் போது பராமரி; இறந்த பிறகு அவர்களின் நல்ல பண்புகளை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல். அதற்காகவே அவர்களை பராமரி, வணங்கு, நினைவு கூறு என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

உயிரோடு இருக்கும்போது வாலறிவன்களை வதைப்படுத்தி, முதியோர் இல்லங்களில் சிறைப்படுத்தி அவர்கள் இறந்த பிறகு திதி கொடுப்பதால் என்ன பயன்? ஒருசிலர் பணம் கறக்க செய்த இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு வாலறிவன்களை உண்மையாகவே மதிக்கக் கற்றுக் கொள்வதே உனது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.
 
இனியும் நீர்நிலைகளை நோக்கி ஓடாதே! வாலறிவன்கள் உனது வீட்டிலும் உனது நெஞ்சத்திலும்தான் இருக்கிறார்கள். உனது பெற்றோர்களாகிய வாலறிவன்களுக்கு மரியாதை செலுத்த இடைத்தரகர்கள் எதற்கு? 

'திதி' என்ற பெயரில் 'நிதி' கொடுப்பதை உடனே நிறுத்து! இது கட்டளை! பெரியாரின் கட்டளை!

ஊரான்

Wednesday, 9 July 2025

பிண்டங்கள் ஜாக்கிரதை!

நேற்றுவரை ஏதோ சமூக நீதிக்காக அதிமுக செயல்பட்டது போலவும் அது இன்று எடப்பாடி போன்றோரால்  மதிப்பிழந்து போனதாகவும் சிலர் அங்கலாய்க்கின்றனர். சனாதனத்திற்கு எதிரான சிந்தனை கொண்டுள்ள ஒரு சில பகுத்தறிவு அதிமேதாவிகளும் இதில் அடங்குவர் என்பதுதான் மிகப்பெரிய அவலம்.  

சனாதன எதிர்ப்பில் பார்ப்பனர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கலைஞரை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே சோ போன்ற பார்ப்பன 'அறிவாளி'களால் உருவாக்கப்பட்டதுதான் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக. எம்ஜிஆரின் மறைவிற்குப் பிறகு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிமுகவை பாதுகாத்து வந்தனர். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மக்களை ஈர்க்கக்கூடிய கவர்ச்சியானத் தலைவர்களாக இருந்ததனால் பார்ப்பனர்களுக்கு அவர்கள் தேவைப்பட்டனர்.

பிண்டம்

ஏற்கனவே பெரியார், அண்ணா இருவரின் திராவிடக் கருத்தியல் மற்றும் சமூக நீதிக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டிருந்த தமிழக மக்களை நம்பவைப்பதற்காகவே திராவிடத்தையும் சமூக நீதியையும்  அரிதாரமாக அதிமுக அன்று பூசிக் கொண்டது என்பதைத் தாண்டி அன்றிலிருந்து இன்று வரை திராவிடம் மற்றும் சமூக நீதிக்கும் அதிமுகவுக்கும் எள்ளவும் தொடர்பில்லை. ‘திராவிடம்னா என்னன்னு படிச்சவங்களதான் கேட்கணும்’ என்று எடப்பாடி போட்டுடைத்த அன்றே அதிமுகவின் திராவிடம் அம்பலத்தில் ஏறியது. 

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவால் முன்னிறுத்தப்பட்டவர்கள் அனைவரும் பிழைப்புவாத தற்குறிகள் மட்டுமே. பதவி சொத்து சுகத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு எப்போதும் தேவைப்பட்டதில்லை. பதவிக்காக இவர்கள் மேசைக்கடியில் தவழ்ந்த காட்சிகளை தமிழகமே பார்த்து கெக்களித்தது. சசிகலாவிடமே இப்படி என்றால் ஜெயலலிதாவிடம் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

இன்றைய எடப்பாடி தலைமையிலான அதிமுகவோ கலைஞர் வழியிலான ஸ்டாலினை வீழ்த்துவதற்கான ஆற்றலை இழந்துவிட்டதால் அது இனிமேலும் பார்ப்பனர்களுக்குத் தேவைப்படாத ஒரு அழுகிய பிண்டம். எனவே, தேவையில்லாத இந்தப் பிண்டத்தை அறுத்தெறிந்து விட்டு அந்த இடத்தில் வேறு ஒரு பிண்டத்தை ஒட்ட வைப்பதற்கு பார்ப்பனர்கள் முயல்கின்றனர். 

தாதுபுஷ்டி லேகியம் எல்லாம் கொடுத்து வத்திப்போன ‘பாட்சா’வின் பிண்டத்திற்கு பசை ஏற்ற பலமுறை முயன்றார்கள். ஆனால் அது பளபளப்பாவதற்குப் பதிலாக கடைசியில் உப்புகண்டமாய் உலர்ந்து போனது. 

வேறு பிண்டம் எதுவும் அப்போதைக்குக் கிட்டவில்லை. வேறு வழி இல்லாததால், தமிழ்நாட்டில் குறைப் பிரசவத்தால் நைந்து கிடக்கும் தங்களின் ‘டிமோ’ வின்  பிண்டத்திற்கு நாலுகால பூசை செய்து வேதமந்திரம் ஓதி 'அரோகரா' போட்டு உசுப்பிக்க முயல்கின்றனர். அதற்காக அக்காவையும் ஆட்டுக்குட்டியையும் இறக்கி வேலி தாண்டி மேய்ந்து வந்தாலாவது நைந்துபோன பிண்டத்தில் குருதி ஏறும் என்று எதிர்பார்த்தனர். வேலி தாண்டி ஆடு மேய்ந்ததே ஒழிய பிண்டம் பிதுங்கியதாகத் தெரியவில்லை. அக்காவும் எம்பி எம்பிப் பார்த்தது. எதிரில் இருந்தவர்களுக்கோ 'போடிய'த்திற்கு மேலே பரட்டைதான் தெரிந்ததே ஒழிய பிண்டம் தெரியவில்லை. 

குறைப் பிரசவம்  குறைப் பிரசவம்தான். நோஞ்சான் நோஞ்சான்தான். நைந்து போனது நைந்து போனதுதான். 

இனி இதை நம்பிப் பயனில்லை என்பதனால் கொஞ்சம் தசைப் பிடிப்பான மினுமினுப்பான ஒரு பிண்டத்தைக் கண்டெடுத்து புறவாசல் வழியாக பாலும் பழமும் ஊட்டி உசுப்பேற்றி வருகின்றனர். ஊட்டம் அதிகம் கிடைப்பதனால் இந்த சதைப் பிண்டமும் ‘கில்லி’யாய் துள்ளாட்டம் போட்டு வருகிறது. 

‘கில்லி’கள் திரையில் ஜொலிக்கலாம் ஆனால் நிஜத்தில்…?

பார்ப்போம்! 2026க்குப் பிறகு வேறு ஒரு பிண்டம் அவர்களுக்குத் தேவைப்படலாம்!

பிண்டங்கள் ஜாக்கிரதை!

ஊரான்

Tuesday, 8 July 2025

நூறு நாள் வேலை! ஆள் பற்றாக்குறை! அல்லாடும் அரசியல் கட்சிகள்!

‘நூறு நாள் வேலை கிடைக்கவில்லையா,  கவலையை விடுங்கள், நான் தருகிறேன்' என்று நூறு நாள் வேலையை கோவை வடவள்ளியில் இன்று எடப்பாடி அவர்கள் திறந்தவெளி வேனில் நின்று கொண்டே தொடங்கி வைத்திருக்கிறார். 


இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை, ஏற்கனவே மதுரை முருகன் மாநாட்டின் மூலமாக பாஜக தொடங்கி வைத்திருக்கிறது. திமுகவும் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தில்தான் பயணிக்க வேண்டும். மற்ற கட்சிகளால் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்துவது சற்றே சிரமம்தான். 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிகிற வரை இந்த நூறு நாள் வேலை தொடரும் என்பதனால் வரும் நாட்களில் இந்த வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அச்சம் இருக்காதா பின்ன? ஒரே நாளில் ஒரே இடத்தில் வேலை செய்வதற்கு இரண்டு மூன்று கட்சிகள் முண்டியடித்தால் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடுமே?

இந்த வேலைத் திட்டத்தில் பங்கேற்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், வேலை நடைபெறும் இடங்களில் அல்லக் 'கைகள்' நீளும் என்பதனால், அது இளம் பெண்களுக்கு  பாதுகாப்பற்றது என உளவுத்துறை  கருதுவதனால், நரைகண்ட ஔவைகளை மட்டுமே இந்த வேலைக்கு அழைத்துச் செல்லுமாறு காவல்துறை தரப்பிலிருந்து நூறு நாள் வேலைத் திட்ட ஏஜெண்டுகளுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். 

வேலை செய்வதற்காக ஆறு ஏரி குளங்களுக்கோ வாய்க்கா வரப்புகளுக்கோ, மண்வெட்டி கொடுவா அறுவா அன்னக்கூடை என எதுவும் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. 
இந்த வேலை பெரும்பாலும் நகரங்களில் விஸ்தீரனமான வீதிகளிலும் மைதானங்களிலும் நடைபெறும் என்பதனால்
கொஞ்சம் மினுமினுப்பாகவே செல்லலாம்.  'வாழ்க' என கோஷமிட்டு கைதட்ட வேண்டும். இதுதான் உங்கள் ஒரே வேலை.

நூறு நாள் வேலை நடைபெறும் இடத்திற்கும் நீங்களாகச் செல்ல வேண்டியதில்லை. அவர்களாக வந்து வாகனங்களில் அழைத்துச் செல்வார்கள். ஆனால் வேலை முடிந்து திரும்பும்போது சில மையங்களில் பிங்க் கலர் பஸ் வருவதற்காகக் காத்திருக்க வேண்டி நேரிடலாம். 

வேலையைத் தொடங்கி வைக்க விரைப்பான காலருடன் மினிஸ்டர் ஒயிட் முதலாளிமார்கள் மேடை ஏறுவார்கள். அவர்கள் மேடை ஏறி, எதற்காக இந்த நூறு நாள் வேலை என்பதைப் பற்றிக் கதைக்கத் தொடங்குவார்கள். அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் நைசாக அந்த வளாகத்தில் இருந்து வெளியேறுவதற்கு வழியைத் தேட வேண்டும். அதற்கு ஏற்ப நீங்கள் எந்த லொகேஷனில் இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

இரண்டு மணி நேர வேலைக்காக ஒரு சோத்துப் பொட்டலத்துடன் 500 ரூபாய் வரை பேட்டாவும் கிடைக்கும். ஏஜெண்டுகளின் கருணை உள்ளத்தைப் பொறுத்து சோத்துப் பொட்டலம் சில சமயம் கலவை சாதத்தையும் தாண்டி  சிக்கன் பிரியாணியாகக்கூட  இருக்கக்கூடும்.

இன்று அவர்கள் கொடுக்கும் பொட்டலத்தை நீங்கள் மடியில் கட்டினால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் உங்களைப் பொட்டலம் கட்டுவார்கள்!

ஊரான்
08.07.2025

Monday, 23 June 2025

எடப்பாடியின் செவுளில் அறைந்த 'முருகனுக்கு அரோகரா'!

மதுரை முருக பக்த மாநாட்டில் அண்ணாவை இழிவுபடுத்தியக் காணொளி; மேடையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த அதிமுக தலைவர்கள். அண்ணாவை மட்டுமல்ல  திராவிடத்தையும் சேர்த்தே சங்கிகள் இழிவுபடுத்துவது ஒன்றும் அதிசயமல்ல.



அண்ணா பெயரிலும், திராவிடம் பெயரிலும் கட்சி நடத்தும் அதிமுக-காரனுக்கு இதெல்லாம் உரைக்கவில்லையா என திமுக, கம்யூனிஸ்ட், சிறுத்தைகள் உள்ளிட்ட பலரும் கேள்வி எழுப்புகின்றனர். 

திமுக-விலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி கண்டதே சங்கிகளின், அதாவது பார்ப்பனர்களின் தூண்டுதலின் பேரில்தான் என்பதை மறந்துவிட்டு, ஏதோ, அண்ணாவையும் திராவிடத்தையும் தாங்கிப் பிடிப்பதற்காகவே அதிமுக இருப்பதாக எண்ணுவோர்களுக்குத்தான்  மேற்கண்டவாறு கேள்விகள் எழும்.

பொதுவாக ஒரு கட்சியிலிருந்து  ஒரு பிரிவினர் வெளியேறும் போது புதிதாக ஒரு பெயரில் செயல்படுவதைவிட, ஏற்கனவே பிரபலமாக உள்ள, தான் செயல்பட்டக் கட்சிப் பெயரோடு ஒரு முன்னொட்டையோ அல்லது பின்னொட்டையோ சேர்த்துக்கொண்டு செயல்படுவதன் மூலம் மக்களிடம் சுலபமாக பரிச்சயமாக முடியும் என்பதற்காகத்தான் 'அண்ணா' என்ற முன்னொட்டைக் கொண்டு அதிமுக என்று தனது கட்சிக்கு நாமகரணம் சுட்டிக் கொண்டார் எம்.ஜி.ஆர்.  மற்றபடி எம்.ஜி.ஆர் தொடங்கியக் கட்சிக்கு
கொள்கை அடிப்படையில் அண்ணாவுக்கும் திராவிடத்திற்கும்  எந்தப் பிணைப்பும் கிடையாது.

எம்.ஜி.ஆருக்கோ அதன் பிறகான ஜெயலலிதாவுக்கோ திராவிடக் கருத்தியலில் எள்ளளவும் உடன்பாடில்லை என்றாலும், உடன்பாடு இருப்பது போலக் காட்டிக் கொண்டால்தான் அரசியல் செய்ய முடியும் என்பதை உணர்ந்து அண்ணாவின் வாரிசுகள் போல நாடகமாடிய ஒரு நாடகக் கம்பெனிதான் அதிமுக. 

ஆனால், இவை எல்லாம் தெரிந்தும், தங்களின் சுய நலனுக்காக 'சமூகநீதி காத்த வீராங்கணை' என ஜெயலலிதாவுக்கு 'ஆசிரியரே' அரிதாரம் பூசியதால் அம்மையாரும், 'அண்ணா நாமம் வாழ்க' என வசனம் பேசி 'அம்மா'வாய் அவதாரம் எடுக்க முடிந்தது. 

தாங்கள் சொல்வதை மட்டும் கேட்டு பிழைப்புக்காக மண்டியிடும் எடுபிடிகளை இருவரும் திட்டமிட்டே வளர்த்தனர். அத்தகைய எடுபிடிகளின் எச்சங்கள்தான் இன்று அதிமுக-வில் எஞ்சி இருப்பவர்கள். அதன் உச்சபச்சம்தான் 'திராவிடம் என்றால் அது புராணம் படித்தவர்களுக்குத்தான் தெரியும்' என்கிற எடப்பாடியின் உளறல். அவர்களிடம் போய் அண்ணாவையும் திராவிடத்தையும் எதிர்பார்ப்பது நரகலில் நல்லரிசி தேடுவதாகும்.

அன்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி செயல்பட்டார்கள் என்றால், இன்று  சங்கிகளின் கட்டளைகளுக்கு அதிமுக எடுபிடிகள் அடிபணிகிறார்கள்.

எந்தக் கொள்கைப் பின்னணியும் இல்லாத, பிழைப்புவாத அதிமுக என்கிற பார்ப்பன அடிமைக் கூட்டம் முற்றிலுமாக அழிவதே இன்றைய உடனடி தேவை. முருக பக்த மாநாடு இதற்கு வித்திட்டது என்ற மகிழ்ச்சி அடைவோம்.  துரோகிகளைவிட எதிரிகளை எதிர்கொள்வது எளிதுதானே?

ஊரான்

Thursday, 19 June 2025

சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

கள் இறக்குவதன் மூலமாகத்தான் பனை தொழில் பாதுகாக்கப்படுமா? கள் இறக்கினால் தமிழ்நாடு ஓஹோவென்று உயர்ந்து விடுமா? பனையில் இருந்து வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் சாத்தியமில்லையா? 

பனை வெல்லம், கருப்பட்டி, இதைத்தாண்டி வேறு என்ன வேண்டும்? நொங்கு, பனங்கிழங்குகூட காசுதானே? சும்மாவா கிடைக்கிறது? பனம்பழம் அதன் கூழை ஏன் 'மார்க்கெட்டிங்' செய்யக்கூடாது? 

தென்னை, பயன்பாடு சொல்ல வேண்டியதில்லை. அது தரும் எல்லாமே பயன்தான். பிறகெதற்கு கள்?

கள்ளுண்ட கோமாளி

கள் வேண்டும் என்றால் ஈச்சமரம்கூட வளர்க்கலாமே?  மக்கள் நலன் சார்ந்து சிந்திப்பதே இன்றைய தேவை.

கள்ளை எல்லோரும் குடிப்பதில்லை. குடிகாரர்கள் மட்டுமே பனை-தென்னை மரத்தடிகளில் தவம் கிடப்பார்கள். 
கள் ஒரு உணவு என்று பேசுபவன் மகா மடையன். கள் தேவை என்று கோருவது குடிகாரர்களின் கோரிக்கை.

எந்த ஒரு தொழிலிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள் உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பதாக இருக்கக் கூடாது. 

கள்ளில் ஆல்கஹால் அளவு குறைவு என்று பேசுபவர்களே? டாஸ்மாக் சரக்கில் ஆல்கஹாலின் அளவைக் குறைத்து விட்டால் அது போதைப்பொருள்  இல்லை என்று ஆகிவிடுமா? ஆல்கஹால் அது எந்த அளவில் இருந்தாலும் அதனால் போதை ஏறுகிறது என்றால் அதை ஆதரிப்பது மக்களுக்கு எதிரானதே!  மக்களுக்கு எதிரானதை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோதிகளே!

கள் இறக்கினால் ஒருசிலருக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கலாம்.
காசு பணம் கிடைக்கும் என்பதற்காகக் காமக்கிழத்தியாய் ஆக முடியுமா? 

ஒரு சிலருக்காக பலர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? பலருக்காக சிலர் விட்டுக் கொடுப்பதுதானே உலக நியதி!

சாராயம், கள்ளு, போதைப் பொருள்களை ஒட்டுமொத்தமாக, உடனடியாக ஒழிக்க முடியாது என்று சொல்வது கோழைத்தனத்தின் அல்லது இயலாமையின் அல்லது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு. 

சாராயத்த உடனடியாக நிறுத்திவிட்டால் அதிலிருந்து மீள முடியாமல் ஒரு சிலர் மாண்டு போகலாம் என்று உரைப்போரும் உண்டு. சாகட்டும்! அந்த ஒரு சிலரோடு முடியட்டும் சாராய சாக்காடு!

ஊரான்