Tuesday, 10 June 2014

பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!

 தமிழக மீனவர்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தொடர் தாக்குதல் மற்றும் கைது விவகாரம் மோடி அரசிலும் தொடர்வது , 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் அனந்தகுமார் மற்று வெங்கைய்ய நாயுடு ஆகிய நடுவண் அமைச்சர்களின் தமிழகத்திற்கு எதிரான பேச்சு, 

போன்ற தமிழக மக்களின் நலன் சார்ந்த விசயங்களிலும்-

மாதாந்திர டீசல் விலை உயர்வைத் தவிர்க்க வாய்ப்பில்லை என்கிற பெட்ரோலியத் துறை செயலாளரின் அறிவிப்பு,

இரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்கிற நடுவண் அமைச்சரின் அறிவிப்பு,

போன்ற ஒட்டு மொத்த இந்திய மக்களின்  நலன் சார்ந்த விசயங்ளிலும்,

தேர்தலுக்கு முன்புவரை காங்கிரஸ் அரசுக்கு எதிராக தொலைக்காட்சி ஊடகங்களில் உச்சஸ்தாயில் உதார் விட்ட ராகவன், கல்யாணராமன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க வின் தமிழக முன்கள வீரர்கள் 

இன்று

"உங்களுடைய அணுகுமுறை 'புதிய மொந்தையில் பழைய கள்ளு'! என்பதாகத்தானே உள்ளது?" என்று ஊடகங்களில் எழுப்பப்படும் சரமாரியான கேள்விக் கணைகளை எதிர்கொள்ள முடியாமல், முகம் வெளிறி, எச்சிலை விழுங்கி, முக்காடிட்டு, முகம் தொங்கிப் போய் உட்கார்ந்திருக்கும் காட்சிகள்  இருக்கிறதே! அடடா! கண் கொள்ளாக் காட்சி!

இப்படம் இன்றே கடைசி அல்ல! இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்றாலும் பிரேமுக்கு பிரேம் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நிறைந்து இருப்பதால் "பா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு!" என்கிற திரை ஓவியத்தை அன்றாடம் தொலைக்காட்சி ஊடகங்களில் கண்டு களிக்குமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்!

கட்டணம் ஏதும் இல்லை! அனுமதி இலவசம்!!

Monday, 9 June 2014

பெண் என்ன செய்தாள்? …………தொடர்-2



மணி 6.50

கொஞ்சம் புளியை எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு புளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தேன். கேஸ் அடுப்பின் வலப்புற பர்னரை பற்ற வைத்து சிறு வானலி ஒன்றை வைத்து கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றினேன். எண்ணெய் சூடானதும் கொஞ்சம் உருட்டு உளுந்தைப் போட்டேன். பர்னரை சிம்மில் வைத்தேன். கொஞ்சம் கடுகைப் போட்டேன். கடுகு பொறிந்தவுடன் நறுக்கி வைத்திருந்த பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டேன். அதன்பிறகு தக்காளியை சேர்த்து தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்தேன். பிறகு வெண்டைக்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாக புரட்டிக் கிளறினேன். வெண்டைக்காயில் லேசாகத் தண்ணீர் விட்டு பர்னரை முழுமையாகத் திறந்து பாத்திரத்தை ஒரு மூடியால் மூடினேன். வெண்டைய்க்காய் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

குக்கரில் நீராவி உஸ்ஸ்ஸ்….. என விசில் சப்தத்துடன் வெளியேறியது. அவ்வாறு மூன்று முறை வெளியேறிய பிறகு குக்கரை இறக்கிவிட்டு அந்த அடுப்பில் மற்றொரு சிறு வாணலியை வைத்தேன். நல்லெண்ணெய் ஊற்றி வெண்டைய்க்காய் பொரியல் செய்வதற்குப் போட்ட அதே பொருட்களை வானலியில் போட்டு அவை வதங்கியவுடன் துருவிய கேரட்டைப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடினேன். குக்கரைத் திறந்து உருளைக் கிழங்கு துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து அதன் தோலை மட்டும் நீக்கினேன். உருளைக் கிழங்கு மிகவும் சூடாக இருந்ததால் கைச்சூட்டைத் தணிக்க அடிக்கடி குளிர்ந்த நீரில் கையை நனைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கொப்புளம் வருவதை தவிர்க்க முடியாது. உருளைனக் கிழங்கை நன்றாக மேலும் சிறு துண்டுகளாக்கி வெந்து கொண்டிருந்த கேரட்டுடன் சேர்த்து நன்றாகக் கிளறினேன்.

கேரட் கூட்டு செய்து கொண்டிருந்த போதே வலப்புற அடுப்பில் சட்டி தீயும் வாடை வந்தது. மூடி இருந்த தட்டை எடுத்துப் பார்த்த போது வெண்டைய்க்காய் பொரியல் சற்றே தீய்ந்து போயிருந்தது. இனி வெண்டைய்க்காய் தேறுமா என எண்ணிக் கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு வெண்டைய்க்காய் பொறியலை இறக்கி வைத்தேன். மல்லித்தழையை சிறுதுண்டுகளாக்கி கேரட் கூட்டு மற்றும் வெண்டைய்க்காய் பொரிலில் தூவினேன்.

மணி 7.00

கேஸ் அடுப்பின் பர்னரை மீண்டும் பற்றவைத்து சாம்பார் வைப்பதற்குரிய பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெயை அதில் ஊற்றினேன். எண்ணெய் சூடானவுடன் நறுக்கிவைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கினேன். பிறகு முருங்கைக்காய்த் துண்டுகளையும் போட்டு கிளறினேன். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாயத் தூள், உப்பு சோ்த்தேன். துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்திருந்ததால் அதைக்கடைய வேண்டிய அவசியம் இல்லாததால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வெந்து கொண்டிருந்த முருங்கைக்காயுடன் சேர்த்தேன். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடிவைத்தேன். இதற்குள் புளி நன்றாக ஊறி இருந்தது. அதை நன்றாகப் பிசைந்து புளிச்சாற்றை கையாலேயே வடிகட்டினேன். இதற்குள் முருங்கைக்காய் சாம்பார் கொதிக்கத் தொடங்கியது. அதனுடன் புளிச்சாற்றைக் கலந்து கரண்டியால் நன்றாகக் கலக்கி மீண்டும் மூடிவைத்தேன்.

காலை 7.10

தெருவில் பால்காரர் வருகிறார் என்பதை அவரது டி.வி.எஸ். ஃபிப்டியின் ஹாரன் சப்தம் உணர்த்தியது. பால் குக்கரை ஏற்கனவே கழுவி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை அலசி எடுத்துக் காண்டு படி இறங்கி தெருவுக்குச் சென்றேன். அதற்குள் பால்காரர் தெருவின் மறுமுனையில் உள்ளவர்களுக்கு பால் ஊற்றிவிட்டு எங்களது வீட்டிற்கு முன்பாக வந்து நின்றார். 700 மில்லி பால் வாங்கிக் கொண்டு அட்டையிலும் அதைப்பதிந்து கொண்டு மீண்டும் சமையலறைக்கு வந்தேன்.

இதற்குள் சாம்பார் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு கரண்டியால் சிறிதளவு சாம்பாரை எடுத்து இடது உள்ளங்கையில் ஊற்றி உப்பு சுவை பார்த்தேன் உப்பு சற்றே குறைவாக இருந்ததால் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினேன். மீண்டும் சுவை பார்த்தேன். கொதிக்கும் போதே உப்பு சேர்த்தால்தான் முருங்கைக் காயிலும் உப்பு ஊறி சாப்பிடும் போது சுவையாக இருக்கும். பிறகு சேர்த்தால் அந்த அளவிற்கு சுவை இருக்காது. மற்றொரு பர்னரை பற்ற வைத்து தாளிப்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சிறிது கடுகு, கொஞ்சம், கருவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த குண்டு மிளகாய்களைப் போட்டு லேசாக ஆட்டி அது பொறிந்தவுடன் சாம்பாரில் கலந்து மூடிவைத்தேன். இப்பொழுது சாம்பார் தயாராகிவிட்டது. சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு பால் குக்கரை அடுப்பில் வைத்தேன்.

இபபொழுது ரைஸ்குக்கரில் சோறும் நன்றாக வெந்திருந்ததால் ரைஸ் குக்கரின் சுவிட்ச் மஞ்சள் லைட்டுக்கு மாறி இருந்தது.

சமையல் தயாரிக்கப் பயன்படுத்திய அறுவாமனை, கேரட் துருவி, தட்டு, கிண்ணம் இவைகளை விம்-சபீனா பவுடர் பயன்படுத்தி நன்றாகக் கழுவி கவிழ்த்து வைத்தேன். ரைஸ் குக்கரிலிருந்து சோறு உள்ள பாத்திரத்தை தனியாக எடுத்து வைத்தேன். ரைஸ்குக்கர் அடுப்பை அதற்குரிய இடத்தில் பாதுகாப்பாக எடுத்து வைத்தேன்.

காலை 7.30 மணி

இப்பொழுது சமையலறையில் பால் மட்டுமே சூடாகிக் கொண்டிருந்தது. கோல்கேட் பிரஷில் பெப்சோடண்ட் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றேன். சர்ப் பவுடரில் ஊறவைத்திருந்த துணிகளை வாளியிலிருந்து எடுத்து மேலும் அரசன் சோப்பைப் போட்டு துணி பிரஷால் தேய்த்து நன்றாகக் கும்மினேன். அவ்வாறு கும்மும் போது ஒரு மக்கைக் கொண்டு தண்ணீரால் அலம்பிக்கொண்டே கும்மினேன். இவ்வாறு செய்யும் போது சோப்பு மற்றும் சர்ப் பவுடரின் நுரை பெரும்பாலும் வெளியேறிவிடும். பிறகு அலசுவதற்கு சுலபமாகவும் இருக்கும்; தண்ணீரும் சற்று குறைவாக செலவாகும். பிறகு துணிகளை நன்றாக அலசிய பிறகு துணிகளை இரண்டு கைகளாலும் பிழிந்து எடுத்தேன். வாளியில் தண்ணீர் நிரப்பி பல்துலக்கி குளித்து முடித்து உடலைத் துவட்டி உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் பால் சூடாகி விசில் சப்தம் வந்தது. பால் வைத்திருந்த அடுப்பை அணைத்துவிட்டு வராண்டாவில் உள்ள கயிற்றில் துணிகளைக் காயப் போட்டேன் காற்றடித்தால் பறக்காமல் இருக்க மறக்காமல் கிளிப்புகளையும் போட்டேன்.

காலை 7.50.

200 மில்லி அளவுக்கு சூடான பாலை எடுத்து ஃபேன் காற்றில் ஆறவைத்தேன். இப்பொழுது காலை உணவை சுவைக்க வேண்டிய நேரம். இரண்டு கரண்டி சோற்றை சாப்பாட்டுத் தட்டில் போட்டு சொஞ்சம் வெண்டைய்க்காய் பொரியல் மற்றும் கேரட் கூட்டு ஆகியவற்றை தட்டின் ஒரு ஓரமாக தனித் தனியாக வைத்துக் கொண்டு சோற்றில் இரண்டு கரண்டி சாம்பாரை ஊற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்து காலை உணவை சுவைத்தேன். வெண்டைய்க்காய் தீய்ந்து போயிருந்தது. மற்றவைகளின் சுவை சாப்பிடும்படியாக இருந்ததால் திருப்தியொடு காலை உணவை முடித்தேன். அதற்குள் பாலும் ஆறி இருந்தது. பாலுக்கு புறை ஊற்றி மூடிவைத்துவிட்டு “அம்மா! வெண்டைய்க்காய் பொரியல் மட்டும் கொஞ்சம் தீய்ந்து போச்சு, மற்றதெல்லாம் பரவாயில்லை. காலையிலும் மத்தியானமும் சாப்பிட்டுக்குங்க. தயிரும் இருக்கு போட்டுக்க!” எனக் கூறிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு அலுவலக உடைக்கு மாறி தலைவாரிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் காலை 8.00 மணிக்கு அலுவலகம் நோக்கி விரைந்தேன்.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1



Friday, 6 June 2014

பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1



காலை 5.30 மணிக்கு கண் விழித்த போது கீழ்வானம் சற்றே வெளுத்திருந்தது. வயது 56 ஐக் கடந்து விட்டது. விடலைகளைப் போல விடிந்த பிறகும் தூங்குவது இந்த வயதுக்காரர்களிடம் காண முடியாது. காலைக் கடனை முடித்துவிட்டு நடைபயிற்சி. காலை நடைபயிற்சி மிகவும் உற்சாகமானதாகவே இருக்கும். இதயத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் வேண்டி இருப்பதால் காலை நடைபயிற்சியை பெரும்பாலும் தவிர்ப்பதில்லை. அரை மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு வீடு வந்து சேர்ந்தேன். 

இருபது நிமிட நேரம் மட்டுமே நடை பயிற்சி மேற்கொள்வதால் நமக்கு பயன் ஏதும் ஏற்படுவதில்லை; நமது ஆற்றலை செலவழித்தால் மட்டுமே நடைபயிற்சியின் பலன் நமக்குக் கிட்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. இருபது நிடம் நடந்த பிறகே நமது ஆற்றல் செலவாகத் தொடங்கும். ஆற்றல் செலவானால்தான் வேர்க்கத் தொடங்கும். குறைந்தது ஒரு மணி நேரம் நடந்தால்தான் நடைபயிற்சியின் முழு பலனும் நமக்குக் கிட்டும் என்றாலும் எனது உடல் நிலையை கணக்கில் கொண்டு  அரை மணி நேர பயிற்சியை மேற்கொள்கிறேன்.

நடை பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும் நடைபயிற்சிக்காக இரண்டு கால்களிலும் சாக்சைச் சொருசி, அதன் பிறகு கேன்வாஸ் ஷீவை திணித்து, போதுமான அளவு அழுத்தம் கொடுத்து லேசைக் கட்டுவதும், அதே போல ஷீவையும் சாக்சையும் கழற்றுவதும் ஒரு சுமையாகவேத் தோன்றும். நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு செய்தாலும் இவ்வேலையை குனிந்து கொண்டுதான் செய்ய வேண்டும். 
 
மணி 6.00.

தமிழகத்தில் 21 மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட நிலத்தடி நீர்மட்டம் 2 மீட்டருக்குக் கீழே சென்றுள்ளது. நகரங்களில்தான் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை இது வரை இருந்தது. ஆனால் இன்று கிராமங்களிலும் அதே நிலைதான். முப்போகம் விளையக்கூடிய பகுதிகளில்கூட குடிநீருக்கும் வீட்டு தேவைகளுக்கும்கூட காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கே மக்கள் அல்லாடும் போது விவசாயத்திற்கு வழி ஏது?

ஆனால் நாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள ஊராட்சி பொதுக்குழாயில் தண்ணீருக்குப் பஞ்சமில்லை. அன்றாடம் குறைந்தது அரைமணி நேரத்திற்கு தண்ணீர் விடுவார்கள். நாங்கள் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு நாள்கூட தண்ணீர் வற்றியதே இல்லை.
 
நாங்கள் முதல் மாடியில் குடியிருப்பதால் அங்குள்ள குழாயில் தண்ணீர் வரவேண்டுமானால் மேநீர்த் தேக்கத் தொட்டி நிறைந்தால் மட்டுமே சாத்தியம். பெரும்பாலும் அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மாடியில் உள்ள குழாயில் தண்ணீர் வருவதில்லை. எனவே தெரு பொதுக் குழாயில்தான் குடி தண்ணீர் பிடிக்க வேண்டும். நடை பயிற்சி முடித்து வந்த உடனே தேவையைப் பொருத்து இரண்டு குடம் தண்ணீரோ அல்லது மூன்று குடம் தண்ணீரோ பிடிப்பது வழக்கம். இருபது படிகள் ஏற வேண்டி இருப்பதால் குடத்தை தோள் மீது சுமந்துதான் எடுத்துச் செல்வேன். அவ்வாறு எடுத்துச் செல்வது வேலையை சற்றே சுலபமாக்கும். இது எனது அன்றாடப் பணிகளில் ஒன்று. குடத்தைத் தூக்கி தோள்மீது வைப்பதற்கு பலமும் அதே போல தோளிலிருந்து குடத்தை இறக்குவதற்கு லாவகமும் தேவை; இல்லையேல் முதுகு பிடித்துக் கொள்ளும்.

குடத்தை ஏற்கனவே அலம்பி இருந்தாலும் தண்ணீர் பிடிக்கும் போது இரண்டு முறை குடத்தை அலம்புவது இயல்பாகிவிட்டது. குடத்தின் கழுத்தை இடது கையால் பிடித்துக் கொண்டு மெதுவாக இடப்புறமாக திருப்பியவாறே குடத்தின் வெளிப்பகுதியை வலது கையால் அலம்புவதும் அதே போல குடத்தின் உட்பகுதியில் தண்ணீரை மேலும் கீழுமாக சலக் சலக் என அடித்து அலம்பி கீழே ஊற்றிவிட்டு மீண்டும் ஒரு முறை அவ்வாறு செய்வது வழக்கமாகிவிட்டது. இப்படிச் செய்யும் போது குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது செலவாகும். குடத்தை அலசுவதற்கே இவ்வளவு தண்ணீரை செலவழிக்கிறோமே என்று எண்ணத் தோன்றினாலும் குடத்தை இவ்வாறு அலம்புவது ஒரு அனிச்சைச் செயலாகவே மாறிவிட்டது. தண்ணீர் பிடிக்கும் வேலையை குனிந்தவாறுதான் செய்ய வேண்டும். தண்ணீர் நிரம்பும் போது மட்டும் சற்றே நிமிர்ந்து நிற்கலாம். இப்படி மூன்று குடம் தண்ணீர் பிடிப்பதற்குள் மூச்சிரைத்துவிடும்.

வீட்டிற்குள் குடிதண்ணீர் குழாய் இணைப்பு வைத்துள்ளவர்களில் ஒரு சிலர் தண்ணீர் நின்றவுடன் குழாயை மூடாமல் விட்டுவிடுவார்கள். மறுநாள் இவர்கள் எழுந்து தண்ணீர் பிடிப்பதற்குள் ஏராளமான நீர் வெளியேறி சாக்கடையில் கலப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கும். ஒரு முறை இப்படி வீனாகினால்கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால் சில வீடுகளில் இது அன்றாட நிகழ்வாகவே இருக்கிறது. அப்பொழுதெல்லாம் எனக்கு ஆத்திரம் வரும். இது குறித்து அவர்களுக்கு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் குழாயை மூடி வைப்பதில்லை.

மணி 6.15.

அடுத்து தேநீர் தாயாரிக்க வேண்டும். அதற்கு முன் இரண்டு டம்ளர் அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைத்தேன். சமைப்பதற்கு முன்பு 1/2 மணி நேரம் அரிசி ஊறினால் சோறு மிருதுவாக இருக்கும்; விரைவில் சோறு வெந்துவிடும் என்பதற்காக இந்த முன் ஏற்பாடு.

நேற்று மாலை வாங்கிய பால் 200 மில்லி மீதம் இருந்தது. கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டர் வால்வை கீழ்புறமாக திருப்பிய பிறகு  கேஸ் அடுப்பின் வால்வை இடது கையால் இடது புறமாக திருப்பிய அதே நேரத்தில் வலது கையால் லைட்டரை அழுத்தி அடுப்பைப் பற்ற வைத்தேன். அலுமினியத்தால் ஆன பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை அதில் ஊற்றிய பிறகு இரண்டு தேக்கரண்டி த்ரீரோசஸ் தேயிலைத் தூளை போட்டு அதே அளவு சர்க்கரையையும் போட்டேன். சிறிது நேரத்தில் தேயிலையோடு பாலும் சேர்ந்து பொங்கியது. அடுப்பை சிம்மிற்கு குறைத்து மீண்டும் வால்வை முழுவதுமாக திறந்தேன். மீண்டும் பால் பொங்கியது. மீண்டும் சிம்மில் வைத்து…......இப்படியாக மூன்று முறை செய்து அடுப்பை அனைத்து விட்டு தேநீரை வடிகட்டி இரண்டு டம்ளரில் ஊற்றி ஒன்றை எனது தாய்க்குக் கொடுத்துவிட்டு மற்றொன்றை நான் எடுத்துக் கொண்டேன். தேநீரை இரண்டு முறை மட்டுமே ஆற்றினேன். இச்செய்முறைப்படி தயாரிக்கப்படும் தேநீரின் சுவை நட்சத்திர வீதிகளில்கூட இருக்காது. இந்த செய்முறையை நான் வட இந்தியாவிற்குச் சென்றிருந்த போது பார்த்து கற்றுக் கொண்டது. தேயிலையை அதிகமாக கொதிக்க வைத்தாலோ அல்லது அதிக முறை ஆற்றினாலோ தேநீரின் சுவை குன்றிவிடும் என்பது எனது அனுபவம். தேநீர் தாயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் பிளாஸ்டிக் கைப்பிடி ஏற்கனவே உடைந்து விட்டது. ஒரு துணியைக் கொண்டு அலுமினிய கைப்பிடியைப் பிடித்துதான் அந்த பாத்திரத்தைக் கையாள வேண்டும். அவ்வாறு செய்யும் போது துணியை சரியாகப் பிடிக்கவில்லை என்றால் கையில் சூடுபடுவதை தவிர்க்க முடியாது. இன்று எனது வலது கையின் நடு விரலில் சூடு பட்டுவிட்டது. பிறகு அது தீக்கொப்புளமாகவும் ஆகிவிட்டது.

தேநீர் குடித்து முடித்த பிறகு டம்ளரைக் கழுவி அதன் இடத்தில் கவிழ்த்து வைத்தேன். தேநீர் தாயாரிக்கப் பயன்படுத்திய அலுமினியக் பாத்திரத்தையும் அப்பொழுதே கழுவிவிட வேண்டும். பாத்திரத்தைத் தேய்ப்பதற்கு பயன்படுத்தப்படும் செயற்கை நாரை விம் பவுடர் மற்றும் சபீனா பவுடர் இரண்டிலும் ஒத்தி எடுத்து கிண்ணத்தை இடது கையால் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு வலது கையால் பாத்திரத்தின் உட்பகுதியை அழுத்தி அழுத்தித் தேய்க்க வேண்டும். அழுத்தித் தேய்க்கும் போது பாத்திரத்தையும் லேசாக சுழற்றியவாறே செய்தால்தான் பாத்திரத்தின் முழுபகுதியையும் சுத்தம் செய்ய முடியும். தேய்த்து முடித்த பிறகு தண்ணீரால் அலம்பி உட்பகுதியைப் பார்க்க வேண்டும். ஒரு முறை கழுவினால் முழு கரையும் போகாது. பால் காயும் போது பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் கரை அவ்வளவு லேசில் போவதில்லை. அதற்கு சில கே.ஜி.போர்ஸ் (kgf) அழுத்தம் கொடுத்தால்தான் முழு கரையும் நீங்கும். அவ்வாறு அழுத்தம் கொடுக்கும் போது வலது கை விரல்களின் மூட்டுகள், மணிக்கட்டு மூட்டு, முழங்கை மூட்டு, தோள்பட்டை மூட்டு என அனைத்து மூட்டுகளும் ஓராயிரம் கிலோ அழுத்தத்தைத் தாங்கிக் கொள்கின்றன. அந்த அழுத்தத்தால் ஏற்படும் வலியை உணரத்தான் முடியுமே ஒழிய விவரிக்க முடியாது. கையோடு வடிகட்டியையும் கழுவி வைத்தேன்.

மணி 6.30.

குளியலறை சென்று ஒரு வாளியில் 2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் பிடித்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சர்ப் பவுடரைப் போட்டேன். மீண்டும் தண்ணீரைத் திறந்து வலது கையால் வாளியிலிருந்து தண்ணீரை வேகமாக சுழற்றி சுழற்றி பவுடர் முழுவதுமாக கரைந்து நுரை பொங்கும் வரை கலக்கினேன். நேற்று பயன்படுத்திய துணிகளை நுரைபொங்கிய நீரில் அமுக்கினே். இதற்கு ஒரு 5 நிமிடம் ஆகிற்று. இந்த வேலையையும் குனிந்தேதான் செய்ய வேண்டும்.

மணி 6.35

குளிர் சாதனப்பெட்டியைத் திறந்து 5 பச்சை மிளகாய், 2 முருங்கைக் காய், 20 வெண்டைய்காய், 4 கேரட், ஒரு துண்டு இஞ்சி, கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் மல்லித்தழை  ஆகியவற்றை வெளியில் எடுத்து வைத்தேன். 4 வெங்காயம், 4 தக்காளி, 10 பல்லு பூண்டு ஆகியவற்றையும்  எடுத்து வைத்துக் கொண்டேன். அகலமான தட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். பச்சை மிளகாய்களை இரண்டாக நறுக்கி பிறகு அதை பாதி அளவு குறுக்காக பிளந்து அகலமான தட்டின் ஒரு ஓரத்தில் வைத்தேன். பூண்டை லேசாகத்தட்டி அதன் தோலை உறித்து எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக்கினே். வெங்காயத்தை இரண்டாகப் பிளந்து மேல் தோலை நீக்கி அதன் பிறகு நீள்வாக்கில் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தேன்.  ஒரு சிறு கத்தியைக் கொண்டு இஞ்சியின் தோலை நீக்கி பிறகு அதை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மத்தைக் கொண்டு மேலும் அதை நசுக்கி வைத்தேன். தக்காளியைக் கழுவி நெடுக்குவாட்டில் ஒவ்வொன்றையும் எட்டுத் துண்டுகளாக்கி வைத்தேன். முருங்கைக்காயை சிறு துண்டுகளாக்கினேன். வெண்டைக்காயை நன்றாகக் கழுவி காம்மையும் நுனியையும் நறுக்கி ஒதுக்கிவிட்டு மற்றதை இரண்டு துண்டுகளாக்கினேன்.

அறுவா மனையின் அடிப்பகுதி இரும்புத் தகட்டினால் ஆனது. தொடர் பயன்பாட்டின் காரணமாக அடிப்பகுதி இத்துப் போனதால் காய்கறிகளை நறுக்கும் போது சற்றே ஆட்டம் கண்டது. இந்த ஆட்டத்தோடுதான் காய்கறிகளை நறுக்கினேன். கொஞ்சம் அவசரப்பட்டாலும் காய்கறி உண்ட பிறகு நம் உடலில் ஊறும் ரத்தத்தை இப்பொழுதே காய்கறிகள் எடுத்துக் கொள்ள நெரிடும். காய்கறி நறுக்கும் போது எச்சரிக்கை மிக மிக அவசியம்.

கேரட்டை நன்றாகக் கழுவி ஒரு கத்தியால் அடிப்பகுதியையும் நுனிப்பகுதியையும் நறுக்கி ஒதுக்கிவிட்டு கேரட்டின் மேல் தோலை லேசாக சீவி எடுத்தேன். மேல் தோலை லேசாக நீக்கினால் கேரட் வீணாவதை குறைக்க முடியும். இதற்கு அனுபவம் தேவை. இல்லையேல் கத்தி கையைப் பதம் பார்த்தவிடும். அகலமான தட்டு ஒன்றை எடுத்து கேரட் துறுவியை அதன் நடுவில் வைத்து இடது கையால் அதன் கைப்பிடியை பிடித்து அழுத்திக்கொண்டு வலது கையின் கட்டை விரல், ஆட்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஒத்துழைப்புடன் மேலிருந்து கீழ்நோக்கி அழுத்தித் தேய்த்து ஒவ்வொரு கேரட்டையும் லேசான நீள் துண்டுகளாக துருவிக் கொண்டேன். கேரட்டின் கடைசித் துண்டை துருவும் போது கவனம் சிதறினால் விரல் நுனி சதையையும் சேர்த்து கூட்டு செய்ய நேரிடும்.

மணி 6.45

அரை மணி நேரம் அரிசி ஊறிவிட்டது. ரைஸ் குக்கரை எடுத்து பிளக்கைச் சொறுகினேன். அரிசியை இரண்டு முறை நன்றாக அலசி பின் குக்கருக்குரிய பாத்திரத்தில் கொட்டி அரிசியின் அளவைப் போல மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தை அதற்குரிய மூடியால் மூடி மெயின் சுவிட்சைப் போட்டு அதன் பிறகு ரைஸ் குக்கரின் சுவிட்சை கீழ்பக்கம் அழுத்தினேன். சிவப்பு லைட் எறியத் தொடங்கியது.

5 லிட்டர் குக்கரை நன்றாகக் கழுவி கேஸ் அடுப்பின் இடதுபுற பர்னரில்  வைத்து ஒரு 300 மில்லி அளவு தண்ணீரை ஊற்றினேன். ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு இரண்டு முறை தண்ணீரால் அலசிக் கழுவி குக்கரில் போட்டேன். இரண்டு உருளைக்கிழங்குகளை நன்றாகக் கழுவி ஒவ்வொன்றையும் நீள்வாக்கில் நான்கு துண்டுகளாக்கி அவற்றையும் குக்கரில் போட்டு குக்கரை மூடினேன். பர்னரைப் பற்றவைத்தேன். சிறிது நேரத்தில் உஸ் என நீராவி வெளியேறிபோது குக்கர் குண்டைப் போட்டு மூடினேன்.

தொடரும்....

Sunday, 25 May 2014

உயிரோடு விளையாடும் ‘ரயில் நீர்’!



நண்பரின் மகளுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள்தான் ஆகி இருக்கும். அவரது மனைவி - மகள் மற்றும் மருமகன் ஆகிய நான்கு பேரும் அரியலூரிலிந்து திருச்சிக்கு பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்கின்றனர். அது கோடை காலம். எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அடுத்த இரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது அவரது மருமகன் இரண்டு காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி குடிநீர்க் குழாயைத் தேடுகிறார்.

அவர்கள் பயணம் செய்தது எஞ்சினை ஒட்டி இருந்த இரண்டாவது பெட்டி. எனவே நடைமேடையில் பின்னோக்கி சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி குடிநீர்க் குழையை அடைந்த போது அங்கே ஏற்கனவே நான்கு - ஐந்து பேர் முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் கடைசியாக இவர் தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக் கொண்டு திரும்புவதற்குள் வண்டி மெதுவாக நகரத் தொடங்கிவிட்டது.

அருகிலுள்ள பெட்டியிலேயே இவர் ஏறி இருக்கலாம். பாசஞ்சர் இரயிலில் அப்படி ஏறினால் தான் பயணம் செய்த பெட்டிக்குச் செல்ல முடியாது. தண்ணீர் பிடிக்கப் போனவரைக் காணவில்லையே என உடன் வந்தவர்களும் தவித்துப் போவார்கள் என்பதால் இரண்டு கைகளிலும் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வருகிறார். அப்படி ஓடி வரும் போது நடைமேடையைத்தாண்டி இவர் பயணித்த பெட்டி நகர்ந்து விட்டது. நடைமேடையின் முடிவில் இருந்த சாய்வான பகுதியை கவனிக்காமல், ஓடி வந்த வேகத்தில் இடறி விழுந்ததில் இரயில் தண்டவாளங்களுக்கிடையில் சிக்கி அவ்விடத்திலேயே மாண்டு போகிறார்.

இச்சம்பத்தை நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும் ஆனால் அவர் சொன்ன நிகழ்ச்சி என் கண் முன்னால் நடந்தது போல பத்து ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தாகம் தீர்ப்பதற்காக ஐந்து மாத கர்ப்பினி மனைவியை நிரந்தரமாய் தவிக்கவிட்டுவிட்டு ஒரு உயிர் பலியாகிப் போனது.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றும் நாம் எண்ணுவதில்லையா? அப்படிகூட அவர் நினைத்திருக்கலாம். காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் சிறிய இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில்லையே! இன்று வேண்டுமானால் “ரயில் நீர்” பாட்டில்களில் கிடைக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லையே.

நான் ஒவ்வொரு முறை தொடர் வண்டியில் பயணிக்கும் போதெல்லாம் இச்சம்பவம் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தேன். ஒரு இருபது நிமிட நேரம்தான் நடந்திருப்பேன். காலை நேரம் என்றாலும் கோடை காலம் என்பதால் இருபது நிமிட பயணத்திலேயே நா வறண்டு விட்டது. இந்தத் தொடர் வண்டி நிலைய நடைமேடையில் உள்ள குழாயில் எப்பொழுதுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். இந்த நல்ல தண்ணீர் கிடைப்பதுகூட இரயில்வே நிர்வாகத்தின் முயற்சியினால் அல்ல; அருகிலுள்ள நடுவண் அரசின் குடியிருப்பு நிர்வாகத்தின் தயவினால்தான். குடியிருப்பு நிர்வாகத்திற்கு நன்றி கூறி குழாயைத் திறந்து வயிறு முட்ட குடித்தேன். பாட்டில் எதுவும் கைவசம் இல்லாததால் வீட்டிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரமுடியவில்லை; தொடர் வண்டி நிலையத்திலும் தண்ணிர் பிடிக்க முடியவில்லை.

படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய ஸ்லீப்பர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு எஸ்-5 பெட்டியில் ஏறினேன். உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சியை தொடர் வண்டிக்குள் இருந்த நாற்றம்  பறித்துக் கொண்டது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து  கேரள மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் மிக நீண்ட தூர தொடர் வண்டி அது. இந்த வண்டியில் எப்பொழுதுமே இந்த நாற்றம் இருக்கும். வண்டியை சுத்தம் செய்யாமல் நாட்கணக்கில் இயக்கினால் நாறாமலா இருக்கும்?

சுமார் ஒன்றரை மணி நேர பயணம். காலை நேர தண்ணீர் தாகத்தை அடக்கிக் கொண்டேன். திருமண மண்டபத்திற்கு சென்ற உடனே காலை உணவு. தண்ணீர் தாகத்தையும் தீர்க்க முடிந்தது. இரயிலிலேயே தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கலாமே என கேள்வி எழுவது இயல்புதான். ஒன்றரை மணி நேரத்திற்கு 15 ரூபாயை செலவழிக்க வேண்டுமா என்கிற எண்ணம்தான்.

திருமணம் முடிந்து 11 மணிக்குத் திரும்பும் போதும் இரயில் பயணம்தான். பகல் நேரப் பயணம், தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என மண்டப டைனிங் ஹாலில் தேடினேன். பாட்டில்கள் தீர்ந்துவிட்டன என்றனர். வெறுங்கையோடு திரும்பினேன். 11.30 மணிக்கு தொடர் வண்டி வந்தது. அதே ஸ்லீப்பர் முறையில் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி எஸ்-3  பெட்டியில் ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நண்பகல் ஆனதால் வெப்பம் வாட்டியது. காலையில் சாப்பிட்ட பொங்கலும் கடும் வெப்பமும் இரண்டும் ஒன்று சேர எனது நாக்கு தண்ணிருக்காக ஏங்கியது. சிக்கனம் பார்த்தால் சீக்காகி விடுவொம் என்பதால் 15 ரூபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டேன். வீடு போய்ச் சேரும் வரை இந்த ஒரு லிட்டர் தண்ணீரை வைத்தே சமாளிப்பது என முடிவெடுத்து அவ்வப்பொழுது தொண்டையை நனைத்துக் கொண்டு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு ஐந்து மணி நேர இரயில் பயணத்திற்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீருக்கு 30 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கு. ஜார்கண்டிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும் கேரளா மற்றும் தமிழகத்திற்கு நாட்கணக்கில் பயணம் செய்யும் போது எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? பொரியையும் மிக்சரையும் கலந்து நான்கு வாய்ப்பிடி அளவு மென்று தின்று தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறப்பி காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளும் வட இந்தியர்களே இன்று மிக அதிகமாக தொடர் வண்டிகளில் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லும் இந்த ஏழை எளிய மக்களால் தண்ணீருக்காக மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழிக்க முடியுமா? ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது இருக்கிற பாட்டில்களை அள்ளிக் கொண்டு குடிநீர்க் குழையை தேடிப்பிடித்து பாட்டில்களை நிரப்பிக் கொண்டு ஓடோடி வந்து மூச்சிறைக்க இவர்கள் வண்டியில் ஏறுவதைப் பார்க்கும் போது நண்பரின் மருமகன் மரணம் என் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

Thursday, 22 May 2014

இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறதோ!



இது வேலூர் தொகுதியில் நடந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் மொத்தம் நான்கு வாக்குகள். பா... சார்பில் கொடுத்தது தலா ரூ.300 வீதம் மொத்தம் ரூ1200. .தி.மு. சார்பில் கொடுத்தது தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ800. இருப்பதோ நாக்கு வாக்குகள். யாருக்கு எத்தனை வாக்கு போடுவது என்பதில் குழப்பம்தான். இருந்தாலும் நடு நிலை’ எடுத்து தாமரைக்கு இரண்டு வாக்கும், இரட்டை இலைக்கு இரண்டு வாக்கும் என வாக்களித்து தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார்கள். இவர் ஒன்றும் அன்றாடம் காய்ச்சி அல்ல. பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ.40000 ஊதியம் பெறும் ஊழியர். 

இந்த பணப்பட்டுவாடாவையும் தேர்தல் முடிவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகுதான் தமிழகமே திருமங்கலமாக மாறுமா? என மார்ச் 29 ல் நான் எழுதியது நடந்தேறிவிட்டது என்று. 

ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை ! யை வினவில் படித்த போது தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறது என்பது புரிந்தது.