Showing posts with label தண்ணீர். Show all posts
Showing posts with label தண்ணீர். Show all posts

Friday, 8 August 2014

வருண பகவானை மீட்க விரைந்துள்ள வானரப்படைகள்!

எங்கே வீடு?

“இந்தியாவின் நகர்ப்புறங்களில் 1.88 கோடி கும்பங்களுக்கு வீடுகள் இல்லை. அதாவது நகர்ப்புறங்களில் சுமார் 9.4 கோடி மக்கள் விடு இல்லாமல் தவிக்கின்றனர். 

தமிழ் நாட்டின் நகர்ப்புறங்களில் 12 லட்சம் குடும்பத்தினர் வீடின்றி தவிப்பு; அதாவது தமிழ் நாட்டின் நகர்ப்புறங்களில் சுமார் 60 லட்சம் பேர் 'பிளாட்பார' வாசிகள். 

அதே போல குஜராத்தின் நகர்ப்புறங்களில் 9 லட்சம் குடும்பத்தினர் வீடின்றி தவிப்பு; அதாவது குஜராத்தின் நகர்ப்புறங்களில் 45 லட்சம் பேர் 'பிளாட்பாரவாசிகள்'”.

சில குச்சிகளை மட்டும் நட்டு அதன் மேலே ஓலை / கீற்றுகளைப் போட்டு கீழே ஒண்டி வாழும் கோடிக்கணக்கான கிராமப்புற / பழங்குடி மக்கள் எல்லாம் சொந்த வீட்டில் வாழும் ‘லேண்ட்லார்டுகள்’ என்பதால் அவர்கள் இந்தப்புள்ளி விவரக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை போலும். 




எனினும் பரந்து விரிந்த கானகங்களில் பரண்களும், பண்டாரக்குடில்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளதால், இனி வீடற்றவர்கள் அங்கே குடியேறி பஜகோவிந்தம் பாடி ஆனந்தமாய் வாழ வழி பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே தண்ணீர்?

“நாட்டில் நகர்ப்புறங்களில் வசிக்கும் 71 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு உள்ளது. அதாவது 39 சதவீத வீடுகளில் வசிப்போர் மிதிவண்டிகளில் குடங்களைக் கட்டிக் கொண்டு தண்ணீருக்காக தெருத்தெருவாய் அலைந்து கொண்டுள்ளனர்”.

கோடைகாலங்களில் தண்ணீரைத்தேடி யானைகளும், மான்களும் காடுகளை விட்டு வெளியேறி, ஏரி குளங்களை நோக்கி படையெடுப்பதைப் போல, தாகம் தீர்க்க தண்ணீரைத்தேடி தங்கள் ஊரைவிட்டு வெளியேறி காலிக்குடங்களுடன் அலைந்து திரியும் கோடிக்கணக்கான கிராமப்புற /  பழங்குடி ஏழை எளிய மக்கள் இந்தக் கணக்கில் வரமாட்டார்களோ!



எனினும் எல்நினோ அரக்கனை வதம் செய்து வருண பகவானை மீட்பதற்காக வானரப்படைகள் இந்தியப் பெருங்கடல் நோக்கி விரைந்துள்ளதால் இனி குழாய் இணைப்பின்றியே குடிநீர்ப் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கே வெளிச்சம்?

“இந்தியாவில் எட்டு கோடி வீடுகளுக்கு மின் வசதி இல்லை. அதாவது சுமார் 40 கோடி பேர் இருளில் வாழ்கின்றனர்”.




வருகிற  ஐந்து ஆண்டு காலத்திற்கு நடுவானில் நங்கூரமடிக்கக்கோரி சூரியபகவானை கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவின் இருள் விரைவில் நீங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, 9 June 2014

பெண் என்ன செய்தாள்? …………தொடர்-2



மணி 6.50

கொஞ்சம் புளியை எடுத்து ஒரு சிறு கிண்ணத்தில் போட்டு புளி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்தேன். கேஸ் அடுப்பின் வலப்புற பர்னரை பற்ற வைத்து சிறு வானலி ஒன்றை வைத்து கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றினேன். எண்ணெய் சூடானதும் கொஞ்சம் உருட்டு உளுந்தைப் போட்டேன். பர்னரை சிம்மில் வைத்தேன். கொஞ்சம் கடுகைப் போட்டேன். கடுகு பொறிந்தவுடன் நறுக்கி வைத்திருந்த பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை போட்டேன். அதன்பிறகு தக்காளியை சேர்த்து தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்தேன். பிறகு வெண்டைக்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாக புரட்டிக் கிளறினேன். வெண்டைக்காயில் லேசாகத் தண்ணீர் விட்டு பர்னரை முழுமையாகத் திறந்து பாத்திரத்தை ஒரு மூடியால் மூடினேன். வெண்டைய்க்காய் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

குக்கரில் நீராவி உஸ்ஸ்ஸ்….. என விசில் சப்தத்துடன் வெளியேறியது. அவ்வாறு மூன்று முறை வெளியேறிய பிறகு குக்கரை இறக்கிவிட்டு அந்த அடுப்பில் மற்றொரு சிறு வாணலியை வைத்தேன். நல்லெண்ணெய் ஊற்றி வெண்டைய்க்காய் பொரியல் செய்வதற்குப் போட்ட அதே பொருட்களை வானலியில் போட்டு அவை வதங்கியவுடன் துருவிய கேரட்டைப் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பாத்திரத்தை மூடினேன். குக்கரைத் திறந்து உருளைக் கிழங்கு துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து அதன் தோலை மட்டும் நீக்கினேன். உருளைக் கிழங்கு மிகவும் சூடாக இருந்ததால் கைச்சூட்டைத் தணிக்க அடிக்கடி குளிர்ந்த நீரில் கையை நனைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் கொப்புளம் வருவதை தவிர்க்க முடியாது. உருளைனக் கிழங்கை நன்றாக மேலும் சிறு துண்டுகளாக்கி வெந்து கொண்டிருந்த கேரட்டுடன் சேர்த்து நன்றாகக் கிளறினேன்.

கேரட் கூட்டு செய்து கொண்டிருந்த போதே வலப்புற அடுப்பில் சட்டி தீயும் வாடை வந்தது. மூடி இருந்த தட்டை எடுத்துப் பார்த்த போது வெண்டைய்க்காய் பொரியல் சற்றே தீய்ந்து போயிருந்தது. இனி வெண்டைய்க்காய் தேறுமா என எண்ணிக் கொண்டே அடுப்பை அணைத்துவிட்டு வெண்டைய்க்காய் பொறியலை இறக்கி வைத்தேன். மல்லித்தழையை சிறுதுண்டுகளாக்கி கேரட் கூட்டு மற்றும் வெண்டைய்க்காய் பொரிலில் தூவினேன்.

மணி 7.00

கேஸ் அடுப்பின் பர்னரை மீண்டும் பற்றவைத்து சாம்பார் வைப்பதற்குரிய பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெயை அதில் ஊற்றினேன். எண்ணெய் சூடானவுடன் நறுக்கிவைத்த இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கினேன். பிறகு முருங்கைக்காய்த் துண்டுகளையும் போட்டு கிளறினேன். அதன் பிறகு மஞ்சள் தூள், மிளகாயத் தூள், உப்பு சோ்த்தேன். துவரம் பருப்பை குக்கரில் வேக வைத்திருந்ததால் அதைக்கடைய வேண்டிய அவசியம் இல்லாததால் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அலசி வெந்து கொண்டிருந்த முருங்கைக்காயுடன் சேர்த்தேன். பாத்திரத்தை ஒரு மூடியால் மூடிவைத்தேன். இதற்குள் புளி நன்றாக ஊறி இருந்தது. அதை நன்றாகப் பிசைந்து புளிச்சாற்றை கையாலேயே வடிகட்டினேன். இதற்குள் முருங்கைக்காய் சாம்பார் கொதிக்கத் தொடங்கியது. அதனுடன் புளிச்சாற்றைக் கலந்து கரண்டியால் நன்றாகக் கலக்கி மீண்டும் மூடிவைத்தேன்.

காலை 7.10

தெருவில் பால்காரர் வருகிறார் என்பதை அவரது டி.வி.எஸ். ஃபிப்டியின் ஹாரன் சப்தம் உணர்த்தியது. பால் குக்கரை ஏற்கனவே கழுவி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை அலசி எடுத்துக் காண்டு படி இறங்கி தெருவுக்குச் சென்றேன். அதற்குள் பால்காரர் தெருவின் மறுமுனையில் உள்ளவர்களுக்கு பால் ஊற்றிவிட்டு எங்களது வீட்டிற்கு முன்பாக வந்து நின்றார். 700 மில்லி பால் வாங்கிக் கொண்டு அட்டையிலும் அதைப்பதிந்து கொண்டு மீண்டும் சமையலறைக்கு வந்தேன்.

இதற்குள் சாம்பார் நன்றாகக் கொதித்துக் கொண்டிருந்தது. ஒரு கரண்டியால் சிறிதளவு சாம்பாரை எடுத்து இடது உள்ளங்கையில் ஊற்றி உப்பு சுவை பார்த்தேன் உப்பு சற்றே குறைவாக இருந்ததால் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினேன். மீண்டும் சுவை பார்த்தேன். கொதிக்கும் போதே உப்பு சேர்த்தால்தான் முருங்கைக் காயிலும் உப்பு ஊறி சாப்பிடும் போது சுவையாக இருக்கும். பிறகு சேர்த்தால் அந்த அளவிற்கு சுவை இருக்காது. மற்றொரு பர்னரை பற்ற வைத்து தாளிப்புக் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் சிறிது கடுகு, கொஞ்சம், கருவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த குண்டு மிளகாய்களைப் போட்டு லேசாக ஆட்டி அது பொறிந்தவுடன் சாம்பாரில் கலந்து மூடிவைத்தேன். இப்பொழுது சாம்பார் தயாராகிவிட்டது. சாம்பாரை இறக்கி வைத்துவிட்டு பால் குக்கரை அடுப்பில் வைத்தேன்.

இபபொழுது ரைஸ்குக்கரில் சோறும் நன்றாக வெந்திருந்ததால் ரைஸ் குக்கரின் சுவிட்ச் மஞ்சள் லைட்டுக்கு மாறி இருந்தது.

சமையல் தயாரிக்கப் பயன்படுத்திய அறுவாமனை, கேரட் துருவி, தட்டு, கிண்ணம் இவைகளை விம்-சபீனா பவுடர் பயன்படுத்தி நன்றாகக் கழுவி கவிழ்த்து வைத்தேன். ரைஸ் குக்கரிலிருந்து சோறு உள்ள பாத்திரத்தை தனியாக எடுத்து வைத்தேன். ரைஸ்குக்கர் அடுப்பை அதற்குரிய இடத்தில் பாதுகாப்பாக எடுத்து வைத்தேன்.

காலை 7.30 மணி

இப்பொழுது சமையலறையில் பால் மட்டுமே சூடாகிக் கொண்டிருந்தது. கோல்கேட் பிரஷில் பெப்சோடண்ட் பேஸ்ட்டை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றேன். சர்ப் பவுடரில் ஊறவைத்திருந்த துணிகளை வாளியிலிருந்து எடுத்து மேலும் அரசன் சோப்பைப் போட்டு துணி பிரஷால் தேய்த்து நன்றாகக் கும்மினேன். அவ்வாறு கும்மும் போது ஒரு மக்கைக் கொண்டு தண்ணீரால் அலம்பிக்கொண்டே கும்மினேன். இவ்வாறு செய்யும் போது சோப்பு மற்றும் சர்ப் பவுடரின் நுரை பெரும்பாலும் வெளியேறிவிடும். பிறகு அலசுவதற்கு சுலபமாகவும் இருக்கும்; தண்ணீரும் சற்று குறைவாக செலவாகும். பிறகு துணிகளை நன்றாக அலசிய பிறகு துணிகளை இரண்டு கைகளாலும் பிழிந்து எடுத்தேன். வாளியில் தண்ணீர் நிரப்பி பல்துலக்கி குளித்து முடித்து உடலைத் துவட்டி உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் பால் சூடாகி விசில் சப்தம் வந்தது. பால் வைத்திருந்த அடுப்பை அணைத்துவிட்டு வராண்டாவில் உள்ள கயிற்றில் துணிகளைக் காயப் போட்டேன் காற்றடித்தால் பறக்காமல் இருக்க மறக்காமல் கிளிப்புகளையும் போட்டேன்.

காலை 7.50.

200 மில்லி அளவுக்கு சூடான பாலை எடுத்து ஃபேன் காற்றில் ஆறவைத்தேன். இப்பொழுது காலை உணவை சுவைக்க வேண்டிய நேரம். இரண்டு கரண்டி சோற்றை சாப்பாட்டுத் தட்டில் போட்டு சொஞ்சம் வெண்டைய்க்காய் பொரியல் மற்றும் கேரட் கூட்டு ஆகியவற்றை தட்டின் ஒரு ஓரமாக தனித் தனியாக வைத்துக் கொண்டு சோற்றில் இரண்டு கரண்டி சாம்பாரை ஊற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்து காலை உணவை சுவைத்தேன். வெண்டைய்க்காய் தீய்ந்து போயிருந்தது. மற்றவைகளின் சுவை சாப்பிடும்படியாக இருந்ததால் திருப்தியொடு காலை உணவை முடித்தேன். அதற்குள் பாலும் ஆறி இருந்தது. பாலுக்கு புறை ஊற்றி மூடிவைத்துவிட்டு “அம்மா! வெண்டைய்க்காய் பொரியல் மட்டும் கொஞ்சம் தீய்ந்து போச்சு, மற்றதெல்லாம் பரவாயில்லை. காலையிலும் மத்தியானமும் சாப்பிட்டுக்குங்க. தயிரும் இருக்கு போட்டுக்க!” எனக் கூறிவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு அலுவலக உடைக்கு மாறி தலைவாரிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் காலை 8.00 மணிக்கு அலுவலகம் நோக்கி விரைந்தேன்.

தொடரும்…..

தொடர்புடைய பதிவுகள்:

பெண் என்ன செய்தாள்? .........தொடர்-1



Sunday, 25 May 2014

உயிரோடு விளையாடும் ‘ரயில் நீர்’!



நண்பரின் மகளுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள்தான் ஆகி இருக்கும். அவரது மனைவி - மகள் மற்றும் மருமகன் ஆகிய நான்கு பேரும் அரியலூரிலிந்து திருச்சிக்கு பாசஞ்சர் இரயிலில் பயணம் செய்கின்றனர். அது கோடை காலம். எடுத்து வந்த தண்ணீர் தீர்ந்துவிட்டது. அடுத்த இரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது அவரது மருமகன் இரண்டு காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி குடிநீர்க் குழாயைத் தேடுகிறார்.

அவர்கள் பயணம் செய்தது எஞ்சினை ஒட்டி இருந்த இரண்டாவது பெட்டி. எனவே நடைமேடையில் பின்னோக்கி சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி குடிநீர்க் குழையை அடைந்த போது அங்கே ஏற்கனவே நான்கு - ஐந்து பேர் முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்ததால் கடைசியாக இவர் தண்ணீர் பாட்டில்களை நிரப்பிக் கொண்டு திரும்புவதற்குள் வண்டி மெதுவாக நகரத் தொடங்கிவிட்டது.

அருகிலுள்ள பெட்டியிலேயே இவர் ஏறி இருக்கலாம். பாசஞ்சர் இரயிலில் அப்படி ஏறினால் தான் பயணம் செய்த பெட்டிக்குச் செல்ல முடியாது. தண்ணீர் பிடிக்கப் போனவரைக் காணவில்லையே என உடன் வந்தவர்களும் தவித்துப் போவார்கள் என்பதால் இரண்டு கைகளிலும் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி வருகிறார். அப்படி ஓடி வரும் போது நடைமேடையைத்தாண்டி இவர் பயணித்த பெட்டி நகர்ந்து விட்டது. நடைமேடையின் முடிவில் இருந்த சாய்வான பகுதியை கவனிக்காமல், ஓடி வந்த வேகத்தில் இடறி விழுந்ததில் இரயில் தண்டவாளங்களுக்கிடையில் சிக்கி அவ்விடத்திலேயே மாண்டு போகிறார்.

இச்சம்பத்தை நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர் சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும் ஆனால் அவர் சொன்ன நிகழ்ச்சி என் கண் முன்னால் நடந்தது போல பத்து ஆண்டுகள் கழித்தும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. தாகம் தீர்ப்பதற்காக ஐந்து மாத கர்ப்பினி மனைவியை நிரந்தரமாய் தவிக்கவிட்டுவிட்டு ஒரு உயிர் பலியாகிப் போனது.

தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குவதா என்று இன்றும் நாம் எண்ணுவதில்லையா? அப்படிகூட அவர் நினைத்திருக்கலாம். காசு கொடுத்து வாங்க நினைத்தாலும் சிறிய இரயில் நிலையங்களில் தண்ணீர் பாட்டில்கள் கிடைப்பதில்லையே! இன்று வேண்டுமானால் “ரயில் நீர்” பாட்டில்களில் கிடைக்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அப்படி இல்லையே.

நான் ஒவ்வொரு முறை தொடர் வண்டியில் பயணிக்கும் போதெல்லாம் இச்சம்பவம் என் நினைவுக்கு வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.

இன்று காலை 4.45 மணிக்கு வீட்டிலிருந்து தொடர் வண்டி நிலையம் நோக்கி நடந்தேன். ஒரு இருபது நிமிட நேரம்தான் நடந்திருப்பேன். காலை நேரம் என்றாலும் கோடை காலம் என்பதால் இருபது நிமிட பயணத்திலேயே நா வறண்டு விட்டது. இந்தத் தொடர் வண்டி நிலைய நடைமேடையில் உள்ள குழாயில் எப்பொழுதுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். இந்த நல்ல தண்ணீர் கிடைப்பதுகூட இரயில்வே நிர்வாகத்தின் முயற்சியினால் அல்ல; அருகிலுள்ள நடுவண் அரசின் குடியிருப்பு நிர்வாகத்தின் தயவினால்தான். குடியிருப்பு நிர்வாகத்திற்கு நன்றி கூறி குழாயைத் திறந்து வயிறு முட்ட குடித்தேன். பாட்டில் எதுவும் கைவசம் இல்லாததால் வீட்டிலிருந்தும் தண்ணீர் எடுத்து வரமுடியவில்லை; தொடர் வண்டி நிலையத்திலும் தண்ணிர் பிடிக்க முடியவில்லை.

படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய ஸ்லீப்பர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு எஸ்-5 பெட்டியில் ஏறினேன். உட்கார இடம் கிடைத்த மகிழ்ச்சியை தொடர் வண்டிக்குள் இருந்த நாற்றம்  பறித்துக் கொண்டது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து  கேரள மாநிலம் ஆலப்புழை வரை செல்லும் மிக நீண்ட தூர தொடர் வண்டி அது. இந்த வண்டியில் எப்பொழுதுமே இந்த நாற்றம் இருக்கும். வண்டியை சுத்தம் செய்யாமல் நாட்கணக்கில் இயக்கினால் நாறாமலா இருக்கும்?

சுமார் ஒன்றரை மணி நேர பயணம். காலை நேர தண்ணீர் தாகத்தை அடக்கிக் கொண்டேன். திருமண மண்டபத்திற்கு சென்ற உடனே காலை உணவு. தண்ணீர் தாகத்தையும் தீர்க்க முடிந்தது. இரயிலிலேயே தண்ணீர் பாட்டில் வாங்கி இருக்கலாமே என கேள்வி எழுவது இயல்புதான். ஒன்றரை மணி நேரத்திற்கு 15 ரூபாயை செலவழிக்க வேண்டுமா என்கிற எண்ணம்தான்.

திருமணம் முடிந்து 11 மணிக்குத் திரும்பும் போதும் இரயில் பயணம்தான். பகல் நேரப் பயணம், தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என மண்டப டைனிங் ஹாலில் தேடினேன். பாட்டில்கள் தீர்ந்துவிட்டன என்றனர். வெறுங்கையோடு திரும்பினேன். 11.30 மணிக்கு தொடர் வண்டி வந்தது. அதே ஸ்லீப்பர் முறையில் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி எஸ்-3  பெட்டியில் ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நண்பகல் ஆனதால் வெப்பம் வாட்டியது. காலையில் சாப்பிட்ட பொங்கலும் கடும் வெப்பமும் இரண்டும் ஒன்று சேர எனது நாக்கு தண்ணிருக்காக ஏங்கியது. சிக்கனம் பார்த்தால் சீக்காகி விடுவொம் என்பதால் 15 ரூபாய் கொடுத்து ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டேன். வீடு போய்ச் சேரும் வரை இந்த ஒரு லிட்டர் தண்ணீரை வைத்தே சமாளிப்பது என முடிவெடுத்து அவ்வப்பொழுது தொண்டையை நனைத்துக் கொண்டு 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு ஐந்து மணி நேர இரயில் பயணத்திற்கு குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீருக்கு 30 ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கு. ஜார்கண்டிலிருந்தும், ஒடிசாவிலிருந்தும் கேரளா மற்றும் தமிழகத்திற்கு நாட்கணக்கில் பயணம் செய்யும் போது எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? பொரியையும் மிக்சரையும் கலந்து நான்கு வாய்ப்பிடி அளவு மென்று தின்று தண்ணீரைக் குடித்து வயிற்றை நிறப்பி காலை சிற்றுண்டியை முடித்துக் கொள்ளும் வட இந்தியர்களே இன்று மிக அதிகமாக தொடர் வண்டிகளில் நீண்ட தூரம் பயணிக்கின்றனர். சொந்த மண்ணில் வாழ வழி இல்லாமல் பிழைப்பு தேடி பிற மாநிலங்களுக்குச் செல்லும் இந்த ஏழை எளிய மக்களால் தண்ணீருக்காக மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழிக்க முடியுமா? ஒவ்வொரு இரயில் நிலையத்திலும் வண்டி நிற்கும் போது இருக்கிற பாட்டில்களை அள்ளிக் கொண்டு குடிநீர்க் குழையை தேடிப்பிடித்து பாட்டில்களை நிரப்பிக் கொண்டு ஓடோடி வந்து மூச்சிறைக்க இவர்கள் வண்டியில் ஏறுவதைப் பார்க்கும் போது நண்பரின் மருமகன் மரணம் என் நினைவிற்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.