Tuesday, 28 June 2022

ஓ! தோழனே! உனது மரணத்தை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது!

1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் 20 ஆண்டு காலம் புரட்சிகர அரசியல் பயணத்தில் அவரோடு மிக நெருக்கமாக பயணித்திருக்கிறேன். நான் மிகத் தீவிரச் செயல்பாட்டாளராக வாழ்ந்த காலம் அது. அதன் பிறகு எனது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சில ஆண்டுகாலம் அவரோடு நெருங்கிப் பழக-பயணிக்க முடியவில்லை என்றாலும் இயக்க வேலைகளினூடே அவரை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறக்கும். பிரியமானவர்களின் ஸ்பரிசம் அது.

நகமும் சதையும் போல எனது குடும்பத்தோடு உறவாடியவர். எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது, அவர்களுக்கு ஒரு மூத்த நண்பனாக விளங்கியவர். நானும் எனது துணைவியாரும் இல்லாத போது அவரே எனது பிள்ளைகளைப் பராமரிப்பார்.  அதனால்தானோ என்னவோ ஒரு இருபது ஆண்டு காலம் அவரை எனது பிள்ளைகள் பார்க்கவில்லை என்றாலும், பிள்ளைகளின் நினைவில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘எயிலு’ என எனது இளைய மகனை அவர் வாஞ்சையோடு அழைக்கும் அந்தக் குரல் என் காதுகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

அரசியல் மற்றும் களப்பணிகளின் போது ஏற்படும் தவறுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில் மேலும் என்னை வளர்த்துக் கொள்வதற்கு உற்சாகப் படுத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க எனது இல்லம் தேடி அவர் வந்த போது நான் “ஊரான்” வலைப்பூவில் எழுதுவது குறித்து அறிந்து கொண்டு, மேலும் மேலும் எழுதுமாறு உற்சாகப் படுத்தியவர். முன்னணியாளர்களின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் ”மனுதர்ம சாஸ்திரம்” குறித்து உரையாற்ற ஒரு கருத்தாளராக நான் செல்வதற்கு இந்தச் சந்திப்புதான் வழி வகுத்தது. 

மிகக் கடுமையான உணவு கட்டுப்பாடுகளுடன் அப்பொழுது அவர் இருந்ததை நான் பார்த்த போது என் நெஞ்சம் ஏனோ சஞ்சலப்பட்டது. நோய்வாய்ப்பட்டுள்ள காலத்திலும், வயது முதிர்ந்த காலத்திலும் ஒருவர் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வது எத்துணை கொடூரமானது என்பது அவரைப் போல அனுபவித்தவர்களுக்குதான் புரியும். 

நக்சல்பாரி பொதுவுடமைப் புரட்சி அரசியலை மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பெயரில் தமிழகத்தில் பரப்புரை செய்ததில், அரசியல் தலைமைக் குழுவின் செயலாளராக இருந்து வழிகாட்டிய அவரது பங்களிப்பு அளப்பரியது. இவரைப்போன்ற முகம் தெரியாதவர்கள்தான் மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியலுக்கு முகவரி கொடுத்தவர்கள்.

புரட்சி என்ற நீண்ட நெடிய பயணத்தில், சகடுகள் நிறைந்த இச்சமூகத்தில் பயணிக்கும் போது, சில சறுக்குல்களும் பின்னடைவுகளும் தவிர்க்க முடியாதவை.  கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் வாழ்க்கையில் சறுக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டதன் விளைவாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கக்கூடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. முதுமை காலத்தில் முடிவுக்கு வராத மன உளைச்சல் உயிருக்கே உலை வைக்கும் என்பது எல்லோருக்கும் பொருந்தும்தானே? 

என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ‘இஎல்' எனும் என் இனிய தோழனே! சென்று வா! இறுதிக்காலம் மட்டுமே வரலாறு அல்ல. நீ கடந்து வந்த நீண்ட நெடிய பாதையின் சாதகங்கள்-சாதனைகள் நினைவு கூறப்படும் பொழுது சமூக மாற்றம் அடுத்த கட்டத்திற்கு தாவிச் செல்லும்! 

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!










Wednesday, 25 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-6

  X

காதல்

மனு: 8-266: உயர்குலத்துப் (பிராமண-சத்திரிய-வைசிய) பெண்ணை  ஒரு சூத்திரன் காதலித்தால் சாகும் வரையில் அவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்.

(பட்டியல் இனச் சாதியைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தனக்கு மேலே உள்ள சாதிப் பெண்ணைக் காதலித்தால், அவனைக் கொலை செய்யவும் இன்று ஆதிக்கச் சாதியினர் துணிகிறார்கள் என்றால் அதற்கு மனு வகுத்த நீதான் அடிப்படை-ஊரான்).

மனு: 8-373: திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணுடன் ஒரு சூத்திரன் சோரம் போனால், அவன் தனது சொத்துக்களை இழப்பதுடன் அவனது ஆண் குறியும் வெட்டப்பட வேண்டும். 

மனு: 8-385: திருமணமான ஒரு பறையர் சாதிப் பெண்ணுடன் ஒரு பிராமணன் சோரம் போனால் அவனுக்கு ஆயிரம் பணம் அபராதம் விதிக்க வேண்டும்.

(இப்படி காதல் செய்வதிலும், சோரம் போவதிலும் வருணத்திற்கு ஏற்ப தண்டனை முறையில் மிகப்பெரிய பாகுபாடுகளை வைத்திருக்கிறான் மனு-ஊரான்)

XI

பல வகைக் குற்றங்கள்

மனு: 8-379: ஒரு பிராமணன் மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த போதிலும், அவனைக் கொல்லக் கூடாது‌. அவனுக்கு மொட்டை அடிப்பதே மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். ஆனால் மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

மனு:8-380: ஒரு பிராமணன் எத்தகையப் பாவத்தை செய்தபோதிலும் அவனை கொல்லக் கூடாது.  ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.

மனு:8-381: பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் கூட நினைக்கக்கூடாது.

(இப்பொழுது புரிகிறதா, எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ, சின்ன சங்கரனையோ, தேவநாதனையோ ஏன் தண்டிக்க முடியவில்லை என்று?- ஊரான்)

இந்து சட்ட முறைகளுக்கும், இந்து அல்லாத சட்ட முறைகளுக்குள்ளேயும் எத்துனை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம்.

குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரேவிதமான தண்டனையே.

ஆனால், மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பைத் துண்டித்தல்‌, வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்க்குத் தனித்தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும், கருதி தண்டனை அளித்தல்.

மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத்தன்மையற்ற தண்டனை விதித்தல். 

மனுவில் குற்றவியல் சட்டத்தில் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது. 

குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள்,  சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச்சமமின்மையை நிலைநாட்டுவதேயாகும்.

சமூக சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன். அடுத்து மத சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கு மனு விதித்திருக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி - 6, பக்கங்கள் 43-46.

தொடரும்,.

தொகுப்பு: ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Friday, 13 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-5

 IX

சாட்சிகள் விசாரணை

சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மனு: 8-88: பிராமணனிடத்தில் "கூறுக' என்றும், சத்ரியனிடத்தில் 'உண்மையைக் கூறுக' என்றும், வைசியனிடத்தில் அவனுடைய 'பசுக்கள், பொன், தானிங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக' என்றும், சூக்கிரனாய் இருப்பின் 'தலை மீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி, அச்சுறுத்திக் கூறுக' என்றும் பிரமாணம் செய்க.

பொய்ச் சாட்சி

பொய்சாட்சி அளிப்பதை ஒரு குற்றமாக கருதி விதிக்கும் தண்டனை வருமாறு.

மனு: 8-123: சத்திரியன் முதலான மூவகை கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்து விட்டு, பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும். ஆனால் பிராமணராயின் நாடுகடத்தல் மட்டுமே செய்ய வேண்டும்.

மனு:8-112: ---பிராமணரைக் காப்பாற்றுவதற்காக பொய்ச் சாட்சி சொல்வது பெரும் பாவமன்று! 

முக்கிய குற்றங்களுக்கான தண்டனை

அவதூறு

மனு: 8-267: பிராமணனை அவதூறு செய்யும் சத்திரியனுக்கு 100 பணமும், வைசியனுக்கு 150 அல்லது 200 பணமும், சூத்திரன் தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.

திட்டுதல்

மனு:8-270: சூத்திரன், இருபிறப்பாளரை-அதாவது பிராமணன்-சத்திரியன்-வைசியன்-ஆகியோரைக் கடுஞ்சொற்களால் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.

மனு:8-271: பெயர் மற்றும் ஜாதியைச் சொல்லி ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் திட்டினால்,  பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை சூத்திரன் வாயில் நுழைத்தல் வேண்டும்.

மனு: 8-272: கர்வத்தால் 'நீ இதைச் செய்யவண்டும் என்று ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் கட்டளையிட்டால், சூத்திரனின் வாயிலும் காதிலும் காச்சிய எண்ணையை ஊற்ற வேண்டும்.

மனு:8-276: ஒரு பிராமணனும் ஒரு சத்திரியனும்  ஒருவருக்கொருவர் சண்டையிட்டு திட்டிக் கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும் சத்திரியனுக்கு 500 பணமும் தண்டம் விதிக்க வேண்டும்.

தாக்குதல்/அடித்தல்

மனு: 8-279: ஒரு சூத்திரன் ஒரு பிராமணனை தாக்கினாலோ அல்லது புண்படுத்தினாலோ, எந்தெந்த அவயங்களைத் தாக்கினானோ, அதற்கேற்ப சூத்திரனின் அந்தந்த அவயங்களைத் துண்டித்து விட வேண்டும்.

மனு: 8-281: ஒரு பிராமணனுடன் ஒரு சூத்திரன் சரிசமமாக உட்கார்ந்தால், அந்த ஆணவச் செயலுக்காக, சூத்திரன் இடுப்பில் சூடு போடுதல் வேண்டும் அல்லது நாடு கடத்தப்படுதல் வேண்டும் அல்லது அவனது ஆசனத்தில் அதாவது குண்டியில் ஒரு வெட்டுப் புண் ஏற்படுத்திட வேண்டும்.

(குறிப்பு: சங்கராச்சாரியைப் பார்க்கச் செல்லும் சூத்திரப் பெரும்புள்ளிகள் ஏன் தரையில் உட்காருகிறார்கள் என்பதற்கான காரணம் புரிகிறதா?-ஊரான்)

மனு: 8-282: ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் காரித்துப்பினால், சூத்திரனின் இரண்டு உதடுகளையும் வெட்டிவிட வேண்டும்‌. ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் சிறுநீர் கழித்தால் அவனது ஆண்குறியை வெட்டி விட வேண்டும். ஒரு சூத்திரன் ஒரு பிராமணன் மீது குசு விட்டால் அவனது ஆசனத்தை வெட்டிவிட வேண்டும்.

8-283: ஒரு பிராமணனின் முடியை ஒரு சூத்திரன் பிடித்து இழுத்தாலோ, காலை வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ சூத்திரனின் கையை வெட்டி விட வேண்டும்.

(குறிப்பு: இவை எல்லாம் மிகையாக ஒரு சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இன்றைய காலகட்டத்திலும் பார்ப்பனர்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும், பிற சாதியினர் குறிப்பாக கீழ்சாதி மக்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மேற்கண்ட கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது புரியும்.-ஊரான்)

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4



அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

Tuesday, 10 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4

VII

அடிமைத்தனம்

அடிமைத்தனத்தை மனு அங்கீகரித்தார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத்துள்ளார். மூன்று உயர் சாதி அமைப்பினராலும் சூத்திரர்கள் மட்டுமே அடிமைப்படுத்தப்பட முடியும். ஆனால் உயர் சாதியினர் சூத்திரர்களுக்கு அடிமைகளாக முடியாது.

மனுவும் அவரது வழி வந்தவர்களும், அடிமைத்தனத்தை அதிகரித்தபோது வருண அமைப்பில், தலைகீழ் வரிசையில் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று விதித்தனர். 

அதன் பொருள், ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம்; ஆனால், அவன் சத்திரிய, வைசிய, சூத்திர அல்லது ஆதி சூத்திரன் ஆகிய இதர வருணத்தைச் சார்ந்தவனுக்கு அடிமையாக மாட்டான்.

மாறாக ஒரு பிராமணன், நான்கு வருணங்களில், எந்த வகுப்பினைச் சேர்ந்தவரையும் தனது அடிமையாக்கிக் கொள்ளமுடியும்.

ஒரு சத்திரியர், வேறொரு சத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர மற்றும் ஆதி சூத்திரரையோ தனது அடிமையாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணனை அவ்வாறு அடிமையாகக் கொள்ள முடியாது.

ஒரு வைசியர், ஒரு பிராமணனையும், சத்திரியனையும் தவிர, வேறொரு வைசியரையோ, சூத்திரரையோ, ஆதி சூத்திரரையோ தனது அடிமையாக்கிக் கொள்ளலாம்.

ஒரு சூத்திரன், வேறொரு சூத்திரரையும், ஆதி சூத்திரர் மற்றொரு ஆதி சூத்திரரையும் அடிமைகளாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணரையோ, சத்திரியரையோ, வைசியரையோ,  சூத்திரரையோ-ஆதி சூத்திரர் அடிமையாக்க முடியாது.

VIII

கலப்பு மணங்கள்

பல்வேறு வகைப்பட்ட வருணத்தாருக்கு இடையே நடைபெறும் கலப்பு மணங்கள் பற்றி மனு விதித்துள்ள விதிகள் பின்வருவன.

மனு:3-12: இருபிறப்பாளர்களுக்கு (பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தார்) திருமணம் செய்யும்போது தன் வருணத்திலேயே திருமணம் செய்வது உயர்ந்தது. இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் மேற்சொல்லப் போகிறபடி செய்து கொள்ள வேண்டியது.

மனு:3-13: சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்குத் தன் சாதியிலும்-சூத்திர சாதியிலும், சத்திரியனுக்குத் தன் சாதியிலும்-வைசிய சூத்திர சாதியிலும், பிராமணனுக்குத் தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர்‌. ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே மணம் புரிதல் வேண்டும். குறித்த வருணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மனு பொதுவாக அங்கீகரித்தாலும், பிராமணன் எந்த ஒரு பெண்ணையும் மணக்கலாம். சத்திரியன் தன்வருணம், தன் கீழ் வருணமான வைசிய-சூத்திர வருணங்களிலும் பெண் கொள்ளலாம். ஆனால், மேல் வருணமாகிய பிராமணப் பெண்களை மணக்கக்கூடாது.

வைசியன் தன் வகுப்பிலும், சூத்திர சாதியிலும் பெண் கொள்ளலாம். ஆனால் சத்ரிய-பிராமணப் பெண்களை மணத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த பாரபட்சம்? அவரது வழிகாட்டு நெறியாக அமைந்துள்ள சமத்துவமின்மையை அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தின் விளைவுதான் இது.

-பக்கம் 38, 39, 40: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-6

ஊரான்


தொடரும்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1




Thursday, 5 May 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

VI

"சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா?

இந்தக் கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்படவில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும், ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதொரு அமைப்பு அது‌. சாதிகளைத் தோற்றுவித்ததில் மனுவுக்கு பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்;  நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்தவகையில் சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து மனுவில் குற்றம், அவர் தரப்படுத்தி,  படிமப்படுத்தும் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் பொறுப்பு வகித்தார் என்பதில் ஐயமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தளத்தில் வைக்கப்பட்டான்‌. அதற்கு அடுத்து சத்திரியர்; சத்திரியருக்குக் கீழே வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்பதாகும்; எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவை கூடத்தின் விழா கூட்டத்திற்காக வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல அது. மக்களினத்தவரிடையே கடைபிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும் அமலாக்கப் படவேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக்கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்."

-பக்கம்-38, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 6.

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1