Friday, 15 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-7

ஆ).சாதியத் தீட்டு

நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட கலப்பினால் உருவான சங்கரா சாதிகளைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம். அவற்றில் ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் பறையர் மற்றும் சக்கிலியர் எனும் அருந்ததியர் உள்ளிட்ட சாதிகளைத் தீண்டத்தகாத சாதிகள் என முத்திரை குத்தி, பிற சாதியினர் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறது சனாதனம். 

இத்தகைய சாதியினர் பிற சாதியினரைத் தொட்டால், பார்த்தால், மண்ணை மிதித்தால், காற்று பட்டால், நிழல் பட்டால் தீட்டு என்கிறான் மனு. இவர்கள் மீதான தீண்டாமையில், பிறப்பின் அடிப்படையிலான சாதி என்கிற சமூகக் காரணி மேலோங்கி இருப்பதால், இவை சாதியத் தீட்டு என அழைக்கப்படுகிறது. 

சண்டாளர்கள் எனும் பறையர்கள் 

சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த சண்டாளன் என்கிற பறையர் சாதியின் பிறப்பு, மிகவும் சிக்கல் வாய்ந்தது என்பதால், சமூகத்தின் இழி நிலைக்கு அவனைத் தள்ளிவிட்டதோடு, இழிவான தொழில்களையே செய்ய வேண்டும், என அவன் கட்டாயப்படுத்தப்பட்டான். 

மேலும், கெட்ட குணம், கெட்ட செயல், ஒழுக்கமின்மை, வன்முறை, நாகரிகமற்ற சேரி மொழி ஆகியவை அவனிடம் இருப்பதாகச் சொல்கிறது சனாதனம். இன்றும் சேரிக்காரர்கள் மீதான ஊர்க்காரர்களின் பார்வை இதுதானே! (மனு 10-58) 

காற்று பட்டால் தீட்டு

சண்டாளன் ஊருக்கு வெளியே வாழ வேண்டும் என்பதாலும், (மனு 10: 50)  சேரிக்காற்று ஊருக்குள் வரக்கூடாது என்பதாலும் பெரும்பாலும் சேரிகள் ஊருக்கு கிழக்கே அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு பீடை திசை என்பதால் சில இடங்களில் சேரிகள் ஊருக்குத் தெற்கேயும் உள்ளன. சேரியின் தண்ணீர் ஊருக்குள் வரக்கூடாது என்பதால் மேடான இடங்களில் ஊரும், பள்ளமான இடங்களில் சேரியும் அமைந்திருப்பதைப் பல இடங்களில் காண முடியும். 

'பைபாஸ் ரோடு'

இவை மட்டுமல்ல, ஊர்க்காரர்கள் அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் சேரிக்குள் நுழைந்து சென்றால் தீட்டுப் பட்டு விடுவார்கள் என்பதால், உயர்சாதியினரின் நலனுக்காக, ஒவ்வொரு சேரியிலும் புறவழிச்சாலை அமைத்தவர்கள் அன்றைய பார்ப்பனர்கள். சரக்குகளை எந்தவித இடையூறும் இன்றி விரைந்து எடுத்துச் செல்ல, பார்ப்பன-பனியா-அதானி-அம்பானிகளின் நலனுக்காக இன்று புறவழிச்சாலைகள் (பைபாஸ் ரோடு) அமைக்கின்றனர். 

இதுதான், இன்றைய இந்திய ஊர்-சேரிகளின் வரைபடம். இதன் மீதுதான் தீண்டாமை எனும் கற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. டெட்டனேட்டர்களையும், புல்டோசர்களையும் கொண்டு இந்த கற்கோட்டையை சிதைக்காமல் தீண்டாமை ஒழிப்பில் ஒரு அடிகூட முன்னேற முடியாது.

பறையர்களின் ஆடை அலங்காரம்

பறையர்கள் எப்போதும் தொழிலுக்காக அலைந்து திரிவதோடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கக் கூடாது, நாயை மட்டும் வளர்க்கலாம், பிணத்தின் துணியை உடுத்த வேண்டும், உடைந்த சட்டியில்தான் உணவு உண்ண வேண்டும், தங்க ஆபரணங்களை அணியக்கூடாது, இரும்பு பித்தளையிலான ஆபரணங்களை மட்டும் அணிய வேண்டும் என்கிறது சனாதன தருமம். (மனு 10: 51, 52, 54)

பறையர்கள் என்னதான் 'டிப்டாப்பாக' கோட்டு-சூட்டு போட்டு, பட்டாடை உடுத்தினாலும், இவர்கள் இழிந்த சாதியினர் என்ற பட்டம் மட்டும் மறைந்து விடாது. (மனு 10-57). இன்றைய சாதி இந்துக்களின் மன ஓட்டமும் இதுதானே!

முன்னால் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் ஆர் பி வி எஸ் மணியன் என்கிற ஒரு சனாதனி, அம்பேத்கரை மிகவும் தரக்குறைவாகப் பேசியதற்காக அண்மையில் கைது செய்யப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். 

தனிக்குவளை

ஒரு பாத்திரத்தை இவர்கள் தொட்டுவிட்டால், டெட்டால் போட்டு சுத்தம் செய்தாலும் அது பரிசுத்தமாகாது. இதனால்தானே தேநீர்கடைகளிலும் உயர்சாதியினரின் வீடுகளிலும் இன்றளவும் தனிக் குவளை-டீ கிளாஸ்-சொம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக எச்சில் அனைவருக்குமான வாழ்வியல் தீட்டின் ஒரு அம்சம் என்றாலும், பறையன் எச்சில் மட்டும் பாலிடால் கலந்தது போல! மேலும், இவர்கள் உலோகப் பாத்திரம் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. டம்ளர்களைக் கழுவுனால்கூட தீட்டு போகாது என்பவனை காராகிரகத்தில் அல்லவா அடைக்க வேண்டும்! (மனு 10: 51)

இவர்களுக்கு நேரே அந்நம் போடக்கூடாது, வேலைக்காரரை விட்டு உடைந்த பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டும்.‌ (மனு 10-54). 

முன்பெல்லாம் நெல் அளக்கப் பயன்படுத்தப்படும் படியில்தான் தண்ணீரோ, கஞ்சியோ, கூழோ ஊற்றிக் கொடுப்பார்கள். படியும் இல்லை என்றால் இரண்டு கைகளையும் விரிக்கச் சொல்லி ஊற்றுவார்கள். நான் சிறுவனாக இருந்தபோது நேரில் கண்ட காட்சிகள் இவை.

இது டிஜிட்டல் யுகம் என்பதால், இன்று பறையர்கள் பயன்பாட்டிற்கென்றே வீட்டுக்கு வெளியே திண்ணையில் ஒரு ஓரத்திலோ அல்லது மரக்கிளையிலோ, எவர்சில்வர் சொம்பு ஒன்றை நிரந்தரமாக வைத்துள்ளனர். சொம்பைப் பயன்படுத்திய பறையரே அதைக் கழுவி அடுத்த முறை பயன்பாட்டிற்காக அவ்விடத்திலேயே வைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நான் சமீபத்தில் கண்ட காட்சி இது. இது தீண்டாமை என்று தெரிந்தாலும், சொந்தக் காலில் நிற்க முடியாமல் அடுத்தவரை அண்டி வாழும் நிலை மாறாமல் தீண்டாமையும் வேறு வேறு வடிவங்களில் தொடரவே செய்யும். 

இது சட்டப்படி தீண்டாமைக் குற்றம் என்று உயர்சாதியினருக்குத் தெரிந்தாலும், இதுதான் இந்துக்களின் வாழ்வியல் முறை என்று சனாதனம் அவர்களுக்குப் போதித்திருக்கிறது.

அன்றே ஆதார்

கிராமத்திலும் ஊரிலும், ஏதாவது பொருளை விற்கவோ வாங்கவோ வேண்டும் என்றால் அரசன் கொடுத்த அடையாள அட்டையோடுதான் இவர்கள் ஊருக்குள் செல்ல வேண்டும். பார்த்தீர்களா! ஆதார் அட்டையை சனாதனவாதிகள் அன்றைக்கே கொண்டு வந்துள்ளனர். (மனு 10-55).

பேஷ்வாக்களின் ஆட்சியில், ஒருவன் தாழ்த்தப்பட்டவனா என்பதை அறிய அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கருப்புக் கயறு அணிய வேண்டும். (பக்கம் -77 அம்பேத்கர் தொகுப்பு: 25)

நிழல் பட்டால் தீட்டு

இவர்களின் நிழல் பட்டால் ஊர்க்காரர்கள் தீட்டுபட்டுவிடுவார்கள் என்பதால், ஊரிலும் பட்டணங்களிலும் இரவில் இவர்கள் சஞ்சரிக்கக்கூடாது. (மனு 10-54).

தீண்டத்தகாதவர்களின் நீண்ட நிழல்கள் ஒரு பிராமணன் மீது பட்டுவிட்டால் அவர் குளித்து தனது தீட்டைப் போக்கவேண்டியிருந்ததால், மாராட்டியத்தில் பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டத்தகாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

மேலும், அவர்களின் எச்சிலை ஒரு இந்து மிதித்து விட்டால் அவன் தீட்டுக்குள்ளாகக்கூடும் என்பதால், எச்சிலைத் துப்புவதற்காக தீண்டத்தகாதவர்கள் கழுத்தில் ஒரு பானையைத் கட்டிச் செல்ல வேண்டும். தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டும். (பக்கம் 76, 77: அம்பேத்கர் தொகுப்பு: 25).

தாங்கள் வாழும் பகுதி மட்டும்தான் ஊர் என உயர் சாதிக்காரர்கள் கருதுகிறார்கள். இதில் சேரி மக்களை அவர்கள் கணக்கில் கொள்வது கிடையாது. அதுபோல  சேரி மக்களுக்கான ஊர் என்றால் அது தீண்டத்தகாத மக்கள் வாழும் பகுதி மட்டும்தான் என்று தீண்டத்தகாதவர்கள் கருதுகிறார்கள். இதில் உயர் சாதியினர் வாழும் பகுதியை அவர்கள் கணக்கில் கொள்வதில்லை.

சாதியத் தீட்டு குறித்து மேலும் பார்க்கலாம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Thursday, 14 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-6

தீண்டாமை

தீண்டாமை என்பது, காலம் காலமாக இந்து மதத்தில் இருந்து வரும் ஒரு சமூக மரபு ஆகும். இந்த மரபுக்கு அடிப்படையாக இருப்பது மனுதரும சாஸ்திரம். சனாதன தருமத்தின் அடிப்படையான கூறுகளில் முதலிடத்தில் இருப்பது தீண்டாமை என்றால் அது மிகையல்ல.

தீண்டாமையை முதலில் அறிமுகப்படுத்தியது பார்ப்பனர்கள்தான் என்றாலும், சாதியப் படிநிலையில் அது மேலிருந்து கீழ்நோக்கிப் பரவி உள்ளது. தீண்டாமையைக் கடைபிடிப்பதை ஒரு சமூகக் கர்வமாக ஒரு இந்து பார்க்கிறான். 

எங்கே புனிதம் (purity) பேசப்படுகிறதோ, அங்கே தீண்டாமை (pollution) கடைபிடிக்கப்படுகிறது என்று பொருள். மாசு, அழுக்கு, களங்கம், அசுத்தம், கேடு, பாவம், தீட்டு இவை எல்லாவற்றின் பொருள் ஒன்றுதான். இவற்றின் எதிர்ப்பதம்தான் புனிதம்.

சனாதன தருமத்தின்படி ஒரு இந்து தனது அன்றாட வாழ்க்கையில், வாழ்வியல் தீட்டு, சாதியத் தீட்டு என இருவகைத் தீட்டுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

தீட்டுக் கழிப்புப் பரிகாரம்

தீட்டுக்கு ஆட்பட்ட ஒரு நபர் அல்லது ஒரு இடம்,  தலை முழுகுதல், தண்ணீர் தெளித்தல், சூரியனைப் பார்த்தல், கோமியம் தெளித்தல் / கோமியம் குடித்தல், சாணம் / மெழுகுதல், பசுவைத் தொடுதல் / தீட்டுப் பட்ட இடத்திற்கு ஓட்டிச் செல்லுதல், மந்திரம் ஓதுதல், பஞ்சகவ்யம் குடித்தல்  போன்ற பரிகாரங்கள் மூலம் தீட்டைப் போக்கிக் கொள்ள முடியும்.

அ).வாழ்வியல் தீட்டு

பெண்களின் பூப்பு-மாதவிலக்கு, கர்ப்பம், பிறப்புஇறப்பு, பிணம், முடிவெட்டிக் கொள்ளுதல், உடலுறவு ஆகியவை வாழ்வியல் தீட்டு என அழைக்கப்படுகிறது. இதில் தனிமனிதத் தூய்மை அடிப்படையானதாகும். எச்சில், வியர்வை, மலம், சிறுநீர், உடல் அழுக்கு, விந்து இவை எல்லாம்கூட தீட்டுக்குரியவை. இத்தகையத் தீட்டுகள் தற்காலிகமானவை, பரிகாரம் உடையவை என்பதால் தீட்டுக்கு உள்ளான அனைவருமே தீட்டிலிருந்து விடுபட்டு விடமுடியும்; அதாவது புனிதமடைந்து விடமுடியும்.

1.பெண்களின் பூப்பு-மாதவிலக்கு,

'மாதவிடாயான முதல் நாலு நாள் பெரியோர்களாலே நிந்திக்கப்பட்டிருக்கின்றது' (மனு 3:46),

'மாதவிடாயானவளுடன் பேசப்படாது' (மனு 4-57), 

மாதவிடாயானவளுக்குப் போட்டு மீந்த உணவை, (மனு 4: 208),  

பிரசவித்தவள் செய்த உணவை (மனு 4-212) 

உண்ணக் கூடாது என பெண்கள் பூப்பெய்வதையும், அதைத் தொடர்ந்து ஏற்படும் ஒரு இயற்கையான மாதவிலக்கு நிகழ்வையும், பிரசவிப்பதையும் தீட்டாக்கி, அவர்களை ஒதுக்கி வைக்கிறது சனாதனம். 

அதனால்தான், மாதவிடாய் காலத்தில் பெண்களை தனி அறையில் அடைத்து வைப்பது சமீபகாலம் வரை தமிழ்நாட்டில் நிலவியது. ஆனால், வட இந்தியாவிலும் நேபாளத்திலும் இன்றும் இந்த வழக்கம் தொடர்கிறது.

மாதவிடாய் தீட்டு என்பதனால்தான் சபரிமலை ஐயப்பனை வழிபடும் உரிமையும், மாதவிடாய்க்கு ஆட்படும் பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.  

2.வளைகாப்பு

ஒரு தாய் கருவுற்றாலே அதை தோஷம் அல்லது தீட்டு என்கிறது சனாதனம்.

'கர்ப்பகால மந்திரத்தாலும், சீமந்த ஓமத்தாலும், மாதாவின் கர்ப்பத்தில் வசித்த தோஷம் நீக்கப்படுகிறது' என்கிறது சனாதனம் (மனு 2-27).

இது ஏதோ வளையல் போடுற விழா என நினைத்துக் கொண்டு, அநேகமாக, எல்லோரும் இந்தத் தீட்டுக் கழிப்பு நிகழ்வை செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆணும் கர்ப்பத்திற்குக் காரணம் என்றாலும், பெண்ணை மட்டும் தீட்டுக்காரியாக்கி அவளை இழிவுபடுத்துவதுதானே வளைகாப்பு என்கிற சனாதன நிகழ்வு.


3.பிறப்பு

'பிறப்பில் தாய் தந்தையருக்கு மாத்திரம் தொடக்கூடாத தீட்டு, அதிலும் தாய்க்கு மாத்திரம் அதிகம், தகப்பனுக்கு பதினோராநாள் ஸ்நானத்தோடே நீங்கி விடுகிறது (மனு 5-62).

'பிரசவித்தவளைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான் (மனு 5-85)

மருத்துவமனைகளில், சனாதன தருமத்தைக் கடைபிடித்தால் சேயை வீட்டுக்கும், தாயை சுடுகாட்டுக்கும்தான் அனுப்ப  வேண்டும்.

4.இறப்பு

'பிணம், பிணத்தைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாகிறான் (மனு 5-85)

கர்பத்திலேயே இறக்கும் சிசு மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோர் இறந்து போனால் யார் யாருக்கு எத்தனை நாள் தீட்டு என்பதையும், தீட்டு எப்படி, எப்போது கழியும் என்பதையும் வரையறுக்கிறது சனாதனம் (மனு 5: 58-109).

இன்றளவும் ஒவ்வொரு இந்துவும், மனு சொன்னதைத்தான் தங்களது வாழ்க்கையில் கடைபிடித்து வருகின்றனர். ஆனால்,  பார்ப்பனர்கள் தங்களுக்கு 10 நாட்கள் மட்டுமே தீட்டு என சலுகை எடுத்துக் கொண்டு, சத்திரியனுக்கு 12 நாட்களும், வைசியனுக்கு 15 நாட்களும், சூத்திரனுக்கு 30 நாட்களும் தீட்டு என, தீட்டுக் காலத்தை நீட்டித்து அவர்களை முடக்குகிறது சனாதனம் (மனு 5: 83).

'பங்காளிகள் இறந்து போனாலும், தினந்தோறும் அக்கினிஹோத்திரம் செய்பவனுக்கு ஒரு நாள் அல்லது மூன்று நாளைக்கு மேல் தீட்டில்லை' என பார்ப்பனர்கள் மேலும் சலுகை எடுத்துக் கொள்கின்றனர் (மனு 5: 84).

'சூத்திரன் இறந்து போனால் ஊருக்கு தெற்குப் பக்கத்தாலும், வைசியன் இறந்து போனால் மேற்குப் பக்கத்தாலும், சத்திரியன் இறந்து போனால் வடக்குப் பக்கத்தாலும், பிராமணன் இறந்து போனால் கிழக்குப் பக்கத்தாலும் எடுத்துக் கொண்டு போக வேண்டியது' (மனு 5-92) 

என பிணத்தை எடுத்துச் செல்வதற்கான பாதையை மனு வரையறுத்து விட்டதனால், கிராமங்களில் சுடுகாட்டுப் பாதைக்கான சச்சரவுகளும் மோதல்களும் இன்றளவும் நடந்து வருகின்றன. சுடுகாட்டுப் பாதை சச்சரவுகளுக்கு, சனாதனம்தானே காரணம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

அடுத்து சாதியத் தீட்டு குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

Wednesday, 13 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-5

இடைநிலைச் சாதிகளின் தோற்றம்

கீழ்நிலைச் சாதிகளின் தோற்றம்  குறித்து ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) மற்றும் உயர் சாதியினர் எப்படித் தோன்றினர் என்ற கேள்வி எழுவது இயல்புதான். 

பிராமணர்கள்

ஐயங்கார், ஐயர், ஆச்சார்யா, தீட்சித், திவாரி, திரிவேதி, திக்கே, தாக்கூர், துபே, ஜெட்லி, ஜோஷி, ஷோரி, பாகவதர், பண்டிட், பாண்டே, பட், பதக், சுக்லா, மிஸ்ரா, ராய், வைத்தியா, வாஜ்பேயி, உபாத்யாயா என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளாக பார்ப்பனர்கள் இருந்தாலும், அவர்கள் இன்றுவரை பிரம்மா எப்படிப் படைத்தானோ அப்படியே, பிராமண வருணமாகத் தங்களைக் கருதிக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர். (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி 10) 

வடக்கே இமய மலை, தெற்கே விந்திய மலை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டு அமைந்திருந்த ஆரியவர்த்த தேசத்தில், பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சனாதன தருமம் (மனு 2: 21, 22).

சத்திரியர்கள் சூத்திரர்களாக ஆன கதை

பார்ப்பன மேலாதிக்கம் நாலாதிசைகளிலும் விரிவடைய முயன்ற போது, பிராமணர்களை வணங்காததாலும், பூணூல் அணிவதைப் புறந்தள்ளியதாலும் சுற்றியிருந்த பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்கீகம், சீனம், கிராதம், தரதம், கசம் ஆகிய பண்ணிரெண்டு நாடுகளைச் சேர்ந்த சத்திரியர்கள் வரவர சூத்திரத் தன்மையை அடைந்தார்கள் (மனு 10: 43, 44). 

எனவே, விந்திய மலைக்குத் தெற்கே ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு உள்ளிட்ட திராவிடப் பகுதிகளில் ஆட்சி செலுத்திய அனைத்து சத்திரிய மன்னர்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர். அது மட்டுமன்றி, சனாதனத்தை ஏற்க மறுத்த வேனன், நகுஷன், சுதாசன், யவனன், சுமுகன், நிமி இவர்கள் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சியை இழந்து அழிந்து போனார்கள் (மனு 7: 41)

மேலும், நான்கு யுகங்களில், முதல் மூன்று யுகங்களான திருத, திரேதா, துவாபரா யுகங்களில் நான்கு வருணங்களும் இருந்தன. கி.மு 3102 இல் தொடங்கியதாக பார்ப்பனர்களால்  நம்பப்படும் கலியுகத்தில், கேடுகள் நிறைந்து விட்டதால், பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என பார்ப்பனர்கள் உறுதியாக இன்றுவரை நம்புகின்னர். எனவே, எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட எங்கும், இன்று பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகிய இரண்டு வருணங்கள் மட்டுமே உண்டு என்பது உறுதியாகத் தெரிகிறது. (அம்பேத்கர் தொகுப்பு: தொகுதி-8, பக்கம் - 441). 

இடைநிலைச் சாதிகள்

தமிழ்நாட்டில் ஆசீவகம் காலம் தொடங்கி சங்ககாலம் வரையிலும் நான்கு வருணங்கள் கிடையாது. மாறாக இனக்குழுக்களை வழிநடத்திய தலைவர்கள் குறுநில மன்னர்களாகவும், பல்வேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியத் தலைவர்கள் பேரரசர்களாகவும் செயல்பட்டிருக்கக்கூடும். சனாதனத்தை ஏற்க மறுத்த இவர்கள் அனைவரும் சூத்திரர்களாக தரம் இறக்கப்பட்டு, இவர்களின் இனக்குழுக்களைச் சேர்ந்த மக்களும் சூத்திரர்களாக்கப்பட்டனர் என்றுதான் கருத வேண்டி உள்ளது. 

இத்தகைய இனக்குழுக்களின் பிரிவினர்தான் இன்று வேளாளர்களாகவும் (பிள்ளை), முதலியார்களாகவும், கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களாகவும், நாயுடு-ரெட்டிகளாகவும், வன்னியர்களாகவும், முத்தரையர்களாகவும், கள்ளர் - மறவர் - அகமுடையர் உள்ளிட்ட‌ முக்குலத்து தேவர்களாகவும் அறியப்படுகின்றனர். இதில் நாடார் சாதி அடங்குமா என்ற கேள்வி ஒருசிலருக்கு எழக்கூடும். இது குறித்து தீண்டாமை என்ற தலைப்பில் பார்ப்போம்.

பிற்காலச் சோழர்களின் ஆட்சியிலும், அதற்கு அடுத்த காலத்திலும், மேற்கண்ட சாதிகளைச் சேர்ந்த ஒரு சிலர் சிற்றரசர்களாகவும், பாளையக்காரர்களாகவும், ஜமீன்தார்களாகவும் இருந்ததால் "நாங்கள் ஆண்ட பரம்பரை" என்று உரிமை கோரி, தங்களைச் சத்திரியர்களாகக் காட்டிக் கொள்ள இன்று இவர்கள் முயல்கின்றனர். அதற்காக, கற்பனையான தளபுராணங்களை ஏற்கனவே ஒரு சிலர் உருவாக்கிக் கொண்டதோடு, இன்று வரலாற்றையும் புதிதாக திருத்தி எழுத முயல்கின்றனர். இவர்களது மூதாதையர்கள் சிற்றரசர்களாக இருந்திருந்தாலும், சனாதன தருமப்படி அவர்களும் சூத்திரர்களே; எனவே, அவர்களின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் இடைநிலைச் சாதியினரின் சந்ததியினரும் சூத்திரர்களே. 

சாதியப் படிநிலையில் பார்ப்பனர்களுக்கு அடுத்த உயர்நிலையில் உள்ள சைவப்பிள்ளைமார்களே, இன்றைய பார்ப்பனர்களின் சனாதன தருமப்படி சூத்திரவாளாகக் கருதப்படும் போது, படிநிலையில் அதற்கும் கீழே உள்ள வன்னியர்கள் உள்ளிட்ட பிற சாதியினர் எம்மாத்திரம்? இவர்கள் எல்லாம் வெறும் ஜூஜூபி!

அடுத்து தீண்டாமை குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-4

சாதிகளைத் தோற்றுவித்த சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

சாதிகளின் உருவாக்கம்

இரு பிறப்பாளர்கள் என்று சொல்லப்படும் பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அவரவர் வருணத்திலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விதி (மனு 3: 12) இருந்த போதும், வருணக் கலப்பை தடுக்க முடியவில்லை. ஐந்தாவது வருணம் என்று ஒன்று கிடையாது என்பதனாலும் (மனு 10:4), இத்தகைய வருணக் கலப்பை, தகாத மணம் அல்லது முறையற்ற மணம் என்று சொல்லி, இவர்களின் வாரிசுகளை,  வருணங்களின் சேர்க்கைக்கு ஏற்ப, தனித்தனி சாதிகளாக வகைப்படுத்துகிறான் மனு.

சங்கரா சாதிகள்

மேல் வருண ஆணுக்கும் கீழ்வருண பெண்ணுக்கும் பிறந்தவர்களை அநுலோம சாதி (மனு 10: 6-10) என்றும், கீழ் வருண ஆணுக்கும் மேல் வரும் பெண்ணுக்கும் பிறந்தவர்களை பிரதிலோம சாதி (மனு 10: 11-14) என்றும், அனுலோம சாதி மற்றும் பிரதிலோம சாதிகளின் வாரிசுகளுக்கு இடையிலும், இவர்களின் வாரிசுகள் மற்றும் வருணங்களுக்கு இடையிலும், உருவான வாரிசுகளை அந்தராள சாதி (மனு 10: 15-19)  என்றும், பாகியா சாதி என்றும், பூணூல் அணியாததால் உருவான பிராமண-சத்திரிய-வைசிய வாரிசுகளை விராத்திய சாதி (மனு 10: 20-25)  என்றும், ஐந்து வகை சாதிகளாகப் பிரித்து வைக்கிறான் மனு. சங்கரா சாதிகள் என்று அழைக்கப்படும் இந்தச் சாதிகளை, ஈன சாதிகள் என்கிறான்.

இத்தகைய கலப்புகளால், நூற்றுக்கணக்கான சாதிகள் உருவாக்கப்படுகின்றன.

நாவிதர் சாதி

பிராமண ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவனை அம்மஷ்டன் என்று நாமகரணம் சூட்டி, ரண வைத்தியம் செய்வது அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 8)

இது அநுலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

மேளக்கார சாதி

வைசிய ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் உருவான வைதேக சாதி ஆணுக்கும், அம்பஷ்டப் பெண்ணுக்கும் பிறந்தவனை வேணன் என்ற சாதியாக்கி, தாளம் முதலிய வாத்தியம் வாசிப்பது அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 19, 49)

இது அந்தராள சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

கலைஞர் குடும்பத்தை 'மேளக்காரன்' என்று இன்றும் சனாதனவாதிகள் இழிவு படுத்திப் பேசுவதற்கான அடிப்படை இதுதான்.

மீனவ சாதி

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்தவனை நிஷாதன் என்றொரு சாதியாக்கி, மீன் பிடித்தல் அவனுக்கான தொழில் என வரையறை செய்கிறான். (மனு 10: 8)

இது அநுலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

ஆசாரி / விஸ்வகர்மா சாதி

சூத்திர ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவனை அயோகவன் என்றொரு சாதியாக்கி, தச்சு வேலை செய்வதை  அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான்.(மனு 10: 12) 

இவர்கள்தான் இன்று ஆசாரி அல்லது விஸ்வகர்மா என்று அழைக்கப்படுகின்றனர்

இது பிரதிலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

பூணூல் அணியாத வைசிய ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறந்தவர்களையும் ஆசாரி என்கிற சாதியாக்கி தச்சு வேலை அவர்களுக்கானத் தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 23)

இது விராத்திய சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இருளர் சாதி

பிராமண ஆணுக்கும் சூத்திரப் பெண்ணுக்கும் பிறந்த நிஷாதன் என்ற சாதியைச் சேர்ந்த ஆணுக்கும், சூத்திர பெண்ணுக்கும் பிறந்தவனை புலக்கசன் என்றொரு சாதியாக்கி, அவனுக்கு எலி மற்றும் உடும்புப்  பிடித்தலைத் தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 18).

இன்று இருளர்கள் என்று அறியப்படும் இவர்களின் துயர நிலையை "ஜெய் பீம்" திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள்.

இது அந்தராள சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

பறையர் சாதி

"ஐயையோ! அந்த சண்டாளப் பசங்க நம்ம பொண்ணுங்கள இழுத்துட்டு ஓடுறாங்க"! என்று 1989 இல் "சீறும் சிங்கங்கள்" திரைப்படத்தில் வீ.கே.ராமசாமி வசனம் பேசும் போதும், 

"சண்டாளி உன் பாசத்தாலே, நானும் சுன்டெலியா ஆனே புள்ள" என்று 2003 இல், 'பருத்தி வீரன்' படத்தில் சினேகனின் பாடல் வரிகள் நம் காதுகளை வருடிய போதும், சண்டாளன் என்ற சொல்லின் பொருள் தெரியாமல் இரசித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

சூத்திர ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்தவனை சண்டாளன் என நாமகரணம் சூட்டி, சாதிகளிலேயே ஆகக் கீழான சாதி என வகைப்படுத்தி, தொழிலுக்காக இவன் அலைந்து திரிய வேண்டும் என்று வரையறை செய்கிறான் மனு (மனு 10: 13, 52). சண்டாளர்கள்தான் பறையர்கள் என்பது தெரியாமலேயே, கெட்ட செயல்களில் ஈடுபடுபடுவோரை "சண்டாளப் பாவி!" என்று வசை பாடுவது இன்றளவும் தொடர்கிறது. 

இது பிரதிலோம சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

சக்கிலியர் சாதி

அந்தராள சாதிகளில் ஒன்றான நிஷாத ஆணுக்கும், வைசிய ஆணுக்கும் பிராமண பெண்ணுக்கும் பிறந்த வைதேக என்கிற சாதியைச் சேர்ந்த  பெண்ணுக்கும் பிறந்தவனை காருவாரன் என்றொரு சாதியாக்கி, தோல் வேலை செய்வதை தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 35). இவர்கள்தான் இன்று சக்கிலியர் அல்லது அருந்ததியர் என்று அழைக்கப்படுகின்றனர்.

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

வெட்டியான்

சண்டாள ஆணுக்கும் நிஷாத பெண்ணுக்கும் பிறந்தவனை அந்தியாவசாயி என்றொரு சாதியாக்கி, சுடுகாட்டைக் காப்பதை அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான். வெட்டியான் என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள்தான் (மனு 10: 39).

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

ஒரு சாதியாரைத் திட்டுகிறோம் என்ற உணர்வின்றியே, எதற்கும் பயன்படாத ஒரு வேலையை "வெட்டி வேலை" என்றும், சும்மா வெளியில் போய் சுத்திட்டு வந்தா "வெட்டிப் பய" என்றும் பலரும் பேசுவதைப் பார்க்கிறோம். 

செம்படவ சாதி

நிஷாத ஆணுக்கும் அயோவகப் பெண்ணுக்கும் பிறந்தவனை மார்க்கவன் என்றொரு சாதியாக்கி, ஓடம் விடுதலை  அவனுக்குத்  தொழிலாக நிர்ணயிக்கிறான் (மனு 10: 34).

இது பாகியா சாதிகளில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது.

இப்படி நூற்றுக்கணக்கான கீழ்நிலைச் சாதிகளை, சனாதனம் உருவாக்கி உள்ளது. இந்தச் சாதியினர் அனைவருமே ஈன சாதிகள் என்று இழிவுபடுத்தப்படுவதால், இவர்கள் ஊரில் வசிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை; மாறாக இவர்கள் அனைவரும் ஊருக்கு வெளியே மரத்தடியில், தோப்புகளில், மயானத்திற்கு அருகே, மலையடிவாரங்களில் வசிக்க நேர்ந்தது (மனு 10: 50).

அடுத்து உயர்சாதி மற்றும் இடைநிலைச் சாதிகளின் தோற்றம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-1

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-2

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

வருணங்களில் சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

வருணங்களின் உருவாக்கம்

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,

பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், அந்த நான்கு வருணங்களைக் குறிப்பிடுகிறான் மனு. (மனு 1:31).

தூய்மைக்கு பார்ப்பனர்கள், வீரத்திற்கு சத்திரியர்கள், தானத்திற்கு வைசியர்கள், சேவை செய்வதற்கு சூத்திரர்கள் என்று அவர்களுக்கான குணங்களையும் வகுத்ததோடு,

பிராமணர்கள் வேதங்களை ஓதவும், சத்திரியர்கள் நாட்டையும் மக்களையும் காக்கவும், வைசியர்கள் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்யவும், சூத்திரர்கள் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென அவர்களுக்கான தொழிலையும் இறுதி செய்கிறான் மனு. (மனு 1: 88-91)

அவரவர் தொழிலை, அவரவர் தனித்தனியாக செய்ய வேண்டும் என்றும், ஒருவர் தொழிலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் முன் நிபந்தனை விதிக்கிறான் மனு (மனு 1: 87)

வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா தருமங்களும், ஒழுக்கங்களும், இந்த மனுதரும சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன (மனு 1: 101, 102). இந்த தருமங்களைக் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடைய முடியும் என்கிறான் மனு (மனு 2: 9)

பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது மூன்று பகுதிகளாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெயரிடும் போது, பிராமணன் பெயர் மங்களகரத்தைக் குறிப்பதாகத் தொடங்கி இறுதியில் சர்மா எனவும், சத்திரியன் பெயர் நலத்தைக் குறிக்கும் வகையிலான தொடங்கி வர்மா எனவும், வைசியன் பெயர் செல்வத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கி பதி எனவும், சூத்திரன் பெயர் தாழ்வைக் குறிக்கும் வகையில் தொடங்கி தாசன் எனவும் முடிய வேண்டும் என கட்டளையிடுகிறான். (மனு: 2: 31, 32)

சங்கர் தயாள் சர்மாவும், ராம் கோபால் வர்மாவும், குமுத் பல்லவ் பதியும், சித்த ரஞ்சன் தாசும் இன்றளவும் இருப்பதற்குக் காரணம் மனு இன்றும் உயிரோடு இருக்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆனால், பெண்கள் இத்தகையப் பெயர்களை சூட்டிக் கொள்ள முடியாது. மாறாக, பெண்களின் பெயர்கள் சுகமாக கூப்பிடத்தக்கதாயும், கொடுமை இல்லாததாயும், அர்த்தமுள்ளதாயும், மங்களமாயும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறதாயும் இருக்க வேண்டும் என்கிறான் மனு. (மனு 2:33) அதாவது நெடில் எழுத்துகளில் (long vowels: a, e, I, o, u) முடிய வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லுகிறான். தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட, இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வைக்கப்படுகின்றன.

பூணூல் கல்யாணம்

என்னதான் முதல் மூன்று வருணத்தார் தலையிலும் தோளிலும் தொடையிலும் பிறந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை (துவிஜர்கள்-இருபிறப்பாளர்கள்)  பிறந்தால்தான் அவர்களை மனிதர்களாகக் கருத முடியும் என்பதால்,

பிராமணர்கள் 8 வயதில் பஞ்சு நூலாலும், சத்திரியர்கள் 11 வயதில் சனப்பை நூலாலும், வைசியர்கள் 12 வயதில் வெள்ளாட்டு மயிரினால் ஆன நூலாலும் பூணூல் அணிய வேண்டும் என்கிறான் (மனு 2: 36, 44).

பூணூல் அணியவில்லை என்றால் அவர்களை சாதி விலக்கம் செய்து அவர்களை விராத்திய ஜாதி என்று சொல்லி  வருணத்திற்கு வெளியே விரட்டுகிறான் மனு (மனு 2: 39). சாதி விலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, இன்றும் கூட, இந்தியா முழுக்க பார்ப்பன குடும்பங்களிலும் தங்களை  சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் வீடுகளிலும் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. 

இரு பிறப்பாளர்கள் உயர்ந்தவர்கள் (மனு 2-169) என்றும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் (மனு 2-66) பூணூல் அணிகிற உரிமை கிடையாது என்பதனால் அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

பூணூல் அணிவது ஒரு வருணத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக அது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளம் என்று மகாத்மா காந்தி பூணூல் அணிவதைச் சாடுகிறார்.

திருமணம்

அவரவர், அவரவர் வருணத்திலேயே, தந்தையின் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். (மனு 3-11, 12).

ஏராளமான பார்ப்பன வீட்டுப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்வதை இன்று அதிகமாகக் காண முடிகிறது. அதனால்தான் பிராமணப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது; பிராமணப் பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கதருகிறார்கள். 

ஆணவப் படுகொலை

கீழ் சாதிப் பையன்கள், மேல் சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால், மற்ற சாதிகளிலும் இத்தகையக் கதரல்களைக் காணமுடிகிறது. மீறி திருமணம் செய்வோரை, ஒன்று சாதி விலக்கம் செய்வது, இல்லை என்றால் நாயக்கன் கொட்டாய் இளவரசனைப் (திவ்யா) போல, உடுமலை சங்கரைப் (கௌசல்யா) போல  படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று வருணக் கலப்பு மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், திருமணங்களை எட்டாக வகைப்படுத்தி அதில் சிலவற்றை இழிவானத் திருமணங்கள் என முத்திரை குத்துகிறான் மனு (மனு 3: 21, 41).

வருணக் கலப்பில் பிறந்த வாரிசுகளை, புதிய சாதிகளாக எப்படி வகைப்படுத்துகிறான் மனு என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்