Showing posts with label கல்யாணம். Show all posts
Showing posts with label கல்யாணம். Show all posts

Wednesday, 13 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-3

வருணங்களில் சனாதனம்

வருண-சாதியக் கட்டமைப்பு, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் மற்றும் உயர்வு-தாழ்வைப் போதித்து கடைபிடிக்கும் பார்ப்பன மேலாதிக்கம் ஆகிய இவைதான் சனாதனத்தின் மிக முக்கியமான நான்கு தூண்கள். அதனால், இது குறித்து இனி விரிவாகப் பார்ப்போம்.

வருணங்களின் உருவாக்கம்

நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்கிறான் பகவத் கீதையில் கிருஷ்ணன் (கீதை 4:13), அதன்படி,

பிரம்மனின் தலையிலிருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், தோளிலிருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், தொடையிலிருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், பாதத்திலிருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும், அந்த நான்கு வருணங்களைக் குறிப்பிடுகிறான் மனு. (மனு 1:31).

தூய்மைக்கு பார்ப்பனர்கள், வீரத்திற்கு சத்திரியர்கள், தானத்திற்கு வைசியர்கள், சேவை செய்வதற்கு சூத்திரர்கள் என்று அவர்களுக்கான குணங்களையும் வகுத்ததோடு,

பிராமணர்கள் வேதங்களை ஓதவும், சத்திரியர்கள் நாட்டையும் மக்களையும் காக்கவும், வைசியர்கள் வியாபாரம் மற்றும் விவசாயம் செய்யவும், சூத்திரர்கள் மேலே உள்ள மூன்று வருணத்தாருக்குப் பணிவிடை செய்யவும் வேண்டுமென அவர்களுக்கான தொழிலையும் இறுதி செய்கிறான் மனு. (மனு 1: 88-91)

அவரவர் தொழிலை, அவரவர் தனித்தனியாக செய்ய வேண்டும் என்றும், ஒருவர் தொழிலில் மற்றவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் முன் நிபந்தனை விதிக்கிறான் மனு (மனு 1: 87)

வேதங்கள் மற்றும் ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டுள்ள எல்லா தருமங்களும், ஒழுக்கங்களும், இந்த மனுதரும சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளன (மனு 1: 101, 102). இந்த தருமங்களைக் கடைபிடித்தால் சொர்க்கத்தை அடைய முடியும் என்கிறான் மனு (மனு 2: 9)

பெயர் சூட்டல்

பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் போது அது மூன்று பகுதிகளாக இருக்க வேண்டும் எனவும், அவ்வாறு பெயரிடும் போது, பிராமணன் பெயர் மங்களகரத்தைக் குறிப்பதாகத் தொடங்கி இறுதியில் சர்மா எனவும், சத்திரியன் பெயர் நலத்தைக் குறிக்கும் வகையிலான தொடங்கி வர்மா எனவும், வைசியன் பெயர் செல்வத்தைக் குறிக்கும் வகையில் தொடங்கி பதி எனவும், சூத்திரன் பெயர் தாழ்வைக் குறிக்கும் வகையில் தொடங்கி தாசன் எனவும் முடிய வேண்டும் என கட்டளையிடுகிறான். (மனு: 2: 31, 32)

சங்கர் தயாள் சர்மாவும், ராம் கோபால் வர்மாவும், குமுத் பல்லவ் பதியும், சித்த ரஞ்சன் தாசும் இன்றளவும் இருப்பதற்குக் காரணம் மனு இன்றும் உயிரோடு இருக்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது!

ஆனால், பெண்கள் இத்தகையப் பெயர்களை சூட்டிக் கொள்ள முடியாது. மாறாக, பெண்களின் பெயர்கள் சுகமாக கூப்பிடத்தக்கதாயும், கொடுமை இல்லாததாயும், அர்த்தமுள்ளதாயும், மங்களமாயும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறதாயும் இருக்க வேண்டும் என்கிறான் மனு. (மனு 2:33) அதாவது நெடில் எழுத்துகளில் (long vowels: a, e, I, o, u) முடிய வேண்டும் என்பதைத்தான் இப்படிச் சொல்லுகிறான். தெரிந்தோ தெரியாமலோ இன்றும்கூட, இந்துப் பெண்களின் பெயர்கள் பெரும்பாலும் இப்படித்தான் வைக்கப்படுகின்றன.

பூணூல் கல்யாணம்

என்னதான் முதல் மூன்று வருணத்தார் தலையிலும் தோளிலும் தொடையிலும் பிறந்தாலும், அவர்கள் மீண்டும் ஒருமுறை (துவிஜர்கள்-இருபிறப்பாளர்கள்)  பிறந்தால்தான் அவர்களை மனிதர்களாகக் கருத முடியும் என்பதால்,

பிராமணர்கள் 8 வயதில் பஞ்சு நூலாலும், சத்திரியர்கள் 11 வயதில் சனப்பை நூலாலும், வைசியர்கள் 12 வயதில் வெள்ளாட்டு மயிரினால் ஆன நூலாலும் பூணூல் அணிய வேண்டும் என்கிறான் (மனு 2: 36, 44).

பூணூல் அணியவில்லை என்றால் அவர்களை சாதி விலக்கம் செய்து அவர்களை விராத்திய ஜாதி என்று சொல்லி  வருணத்திற்கு வெளியே விரட்டுகிறான் மனு (மனு 2: 39). சாதி விலக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள, இன்றும் கூட, இந்தியா முழுக்க பார்ப்பன குடும்பங்களிலும் தங்களை  சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் வீடுகளிலும் பூணூல் கல்யாணம் நடந்து கொண்டுதானே இருக்கிறது. 

இரு பிறப்பாளர்கள் உயர்ந்தவர்கள் (மனு 2-169) என்றும், சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் (மனு 2-66) பூணூல் அணிகிற உரிமை கிடையாது என்பதனால் அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 

பூணூல் அணிவது ஒரு வருணத்திற்கான அடையாளம் அல்ல, மாறாக அது தாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை காட்டிக் கொள்வதற்கான அடையாளம் என்று மகாத்மா காந்தி பூணூல் அணிவதைச் சாடுகிறார்.

திருமணம்

அவரவர், அவரவர் வருணத்திலேயே, தந்தையின் அனுமதியைப் பெற்று திருமணம் செய்து கொள்ள வேண்டும். (மனு 3-11, 12).

ஏராளமான பார்ப்பன வீட்டுப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்வதை இன்று அதிகமாகக் காண முடிகிறது. அதனால்தான் பிராமணப் பெண்கள் மற்ற சாதிப் பையன்களை திருமணம் செய்து கொள்ளக் கூடாது; பிராமணப் பையன்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் கதருகிறார்கள். 

ஆணவப் படுகொலை

கீழ் சாதிப் பையன்கள், மேல் சாதிப் பெண்களை திருமணம் செய்து கொள்வதும் அதிகரித்து வருவதால், மற்ற சாதிகளிலும் இத்தகையக் கதரல்களைக் காணமுடிகிறது. மீறி திருமணம் செய்வோரை, ஒன்று சாதி விலக்கம் செய்வது, இல்லை என்றால் நாயக்கன் கொட்டாய் இளவரசனைப் (திவ்யா) போல, உடுமலை சங்கரைப் (கௌசல்யா) போல  படுகொலை செய்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.

இதுபோன்று வருணக் கலப்பு மற்றும் சாதிக் கலப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், திருமணங்களை எட்டாக வகைப்படுத்தி அதில் சிலவற்றை இழிவானத் திருமணங்கள் என முத்திரை குத்துகிறான் மனு (மனு 3: 21, 41).

வருணக் கலப்பில் பிறந்த வாரிசுகளை, புதிய சாதிகளாக எப்படி வகைப்படுத்துகிறான் மனு என்பதை அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, 12 August 2014

கல்யாணம் முதல் கருமாதி வரை விடாது துரத்தும் சமஸ்கிருதம்!

100 கோடி பேருக்கு மேல் வாழக்கூடிய இந்திய நாட்டில் வெறும் 14,135 பேர் மட்டுமே சமஸ்கிருத மொழியை தங்களது தாய்மொழி என அறிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், வடக்கு தெலிங்கானா, தெற்கு இராஜஸ்தான், நாக்பூர், மற்றும் ஹரித்துவார் போன்ற ஒரு சில இடங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க ஒரு சிலர் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்.

சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டுள்ளோர்:

சித்பூர் மாவட்டம் (உத்தரப்பிரதேசம்) : 550
யுன்னாவோ (உத்தரப்பிரதேசம்)      : 334
லக்னோ (உத்தரப்பிரதேசம்)          : 307
கோரக்பூர் (உத்தரப்பிரதேசம்)         : 300
ஹரித்துவார் (உத்தரகாண்ட்)         : 288
டெல்லி                              : 279
பெங்களூரு                          : 235
அடிலாபாத் (தெலிங்கானா)          : 134

1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப்பிரதேசத்துக்கு கிழக்கே உள்ள மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம்.

சென்னை மாகாணத்தில் 315 பேர் சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்ததாக 1921 ஆண்டு புள்ளி விவரங்கள் சொல்கின்றன. அதன் பிறகு சமஸ்கிதத்தை தாய்மொழியாகக் கொண்டோர் 1981 ல் 6,106 பேரும், 1991 ல் 49,736, பேரும், 2001 ல் 14,135 பேரும் என ஏற்ற இறக்கங்கள் கண்டுள்ள ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமே. ஒரு வேளை இது புள்ளி விவரக் கணக்கெடுப்பில் நேர்ந்துள்ள தவறாக இருக்குமோ என ஒரு சிலர் கருதக்கூடும். உடனடி அரசியல் தேவைகளுக்காக இவர்கள் அடிக்கடி தாய்மொழியை மாற்றிக் கொள்வதே இந்த ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம்.

மேற்கு இந்தியாவில் வாழும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பேசும் ‘பில்’ (BHIL) மொழியை தங்களது தாய் மொழி என அறிவித்ததால் 1991 மற்றும் 2001 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அம்மொழி பேசுவோர் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. இவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும் பில் மொழிதான் தங்களது தாய்மொழி என் அறிவித்ததற்குக் காரணம் ஜார்கண்ட்டைப் போல தங்களுக்கு ஒரு தனி மாநிலம் தேவை என்பதற்காகத்தான்.

இந்திக்கு அடுத்தபடியாக பேசப்படும் வங்காளி மொழி பேசுவோரின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தில் அம்மாநில மக்கள் தொகையைவிட அதிகமாக உள்ளது. மேற்கு வங்கத்தில் குடியேறிய வங்காள தேசத்தினர் தங்களது தாய்மொழி உருதுவாக இருந்த போதிலும் “இந்தியக் குடியுரிமை“ கிடைக்கும் என்பதற்காக அவர்கள் தங்களது தாய்மொழி வங்காளம் என்று அறிவித்ததே  மேற்கண்ட எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம். இது கடந்த முப்பது ஆண்டு கால விவரக் கணக்கு.

கௌரவத்திற்காகவும், இந்திய அரசமைப்பில் சமஸ்கிருதத்திற்கு சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டிருப்பதனாலும் ஒரு சிலர் தங்களது தாய்மொழி சமஸ்கிருதம் என போலியாக அறிவித்துள்ளனர். இல்லை எனில் சமஸ்கிருதம் பேசுவோரின் எண்ணிக்கை மேலும் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.

இந்தியாவின் ஏதோ ஒரு மூளையில் இன்னமும் சமஸ்கிருதம் பேசப்படுவதாக ஒரு சிலர் உணர்வதால்தான் (feel) இம்மொழி செல்வாக்கு செலுத்துவதாகக் கருதப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் உள்ள சமஸ்கிருத கிராமம் என வர்ணிக்கப்படும் மட்டூர் (mattur) கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரே சமஸ்கிருதத்தை தங்களது தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.


வெறும் 0.000014135 சதவீதம் பேரின் தாய்மொழியாக இருக்கக்கூடிய சமஸ்கிருதம் எவ்விடத்திலும் எப்பொழுதும் இல்லாத ஒரு மொழியாக இருந்த போதிலும், அது நமது கருத்துக்களில், எண்ணங்களில் நம்முடன் வாழ்கிறது. அம்மொழியோடு ஒரு உணர்ச்சி பூர்வமான பிணைப்பு இருக்கிறது. புராண - இதிகாசங்கள் மீதும், சடங்குகள் - சம்பிரதாயங்கள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள் நீடிக்கும் வரை சமஸ்கிருதம் செல்வாக்கு செலுத்தவே செய்யும்.

வறட்சி - புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின் விளைவால் ஏற்படும் கேடுகளிலிருந்தும், அரசியல் -  பொருளாதார – பண்பாட்டுச் சூழலை கட்டுப்படுத்தும் சமுதாயச் சக்திகள் ஏற்படுத்தும்  கேடுகளிலிருந்தும் மந்திரச் சடங்குகள் செய்வதன் மூலம் தனக்குத் துன்பங்கள் நேராதிருக்கவே ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அடிமை உடைமைச் சமுதாயம் தொடங்கிய காலத்திலிருந்து  மந்திரங்கள் சமய வடிவில் பிரதிபலிப்பதாலும், இந்தியாவைப் பொருத்தவரை வேத - மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதாலும், மந்திரம் ஓதுவது ஒரு முழுநேரத் தொழிலாக இருப்பதாலும் இறப்பிற்குப் பிறகும் மந்திரங்கள் மனிதனை துரத்திக் கொண்டிருக்கின்றன.

அதனால்தான் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக யாரும் ஏற்றுக் கொள்ளாமலேயே அல்லது சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லாமலேயே பூமிபூஜைகளிலும், கிரகப்பிரவேசங்களிலும், கணபதி ஹோமங்களிலும், பூப்புனிதநீராட்டு விழாக்களிலும், கல்யாணம் – கருமாதி – திதிகளிலும், கோவில்களில் அன்றாட வழிபாடு மற்றும் பரிகாரப் பூஜைகளிலும் சமஸ்கிருதம் கோலோச்சுகிறது.

சமஸ்கிருதம் மக்களின் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவதை அறிவால் மட்டுமே ஒழித்துவிட முடியாது. இயற்கைக் கேடுகளிலிருந்தும், சமூகக் கேடுகளிலிருந்தும் மனிதனை பாதுகாக்கக்கூடிய, மனித வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரக்கூடிய ஒரு சமூகம் அமையும் பட்சத்தில் சமய வடிவில் பிதிபலித்து நிற்கும் சடங்குகளும் மந்திரங்களும் மறைந்தொழியும். அப்பொழுது மந்திரங்களில் மட்டுமே ‘உயிர் வாழும்’ சமஸ்கிருதமும் நம் அன்றாட வாழ்விலிருந்து மறையும். இதற்கு தனிமனித செயலைவிட ஒரு சமுதாயச் செயலே இன்றைய தேவையாக இருக்கிறது.


(குறிப்பு: புள்ளி விவர ஆதாரம்: THE HINDU, Chennai. 10.08.2014)

தொடர்புடைய பதிவுகள்: