Wednesday, 24 September 2025

மைசூர்பாகில் மிதக்கும் கோவை!

ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு, கோவையில் ஸ்வீட் விலை மளமளவென சரிந்துவிட்டதால், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட கடைகளில் ஸ்வீட் வாங்க மக்கள் முண்டியடிப்பதால், அங்கு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

விலை குறைவு என்பதால், மக்கள் மூன்று வேளையும் ஸ்வீட்டை மட்டுமே தின்பதால் காய்கறி, மளிகை சாமான், பழக்கடைகள் வெறிச்சோடி கிடப்பதாக வியாபாரிகள் ஒருபக்கம் கவலையடைந்துள்ளனராம்.

கோப்பு படம்

மைசூர்பாகை மூன்று வேலையும் தின்பதால், தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், மக்கள் நலனைவிட வியாபாரிகள் நலன் பெரிதல்ல என்பதால், அது பற்றிக் கவலைப்படாமல், எல்லோரும் ஸ்வீட் வாங்கித் தின்று, 'டாடி'க்கு நன்றி கூறி, இன்புற்றிருக்க வேண்டும் என  இனிப்பு வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைச் சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதாகவும் கோவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

விலை மலிவு என்பதால் ஒரு வாரத்துக்குத் தேவையான இனிப்புகளை மொத்தமாக வாங்கிச் செல்ல மக்கள் முயல்வதால், ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோவுக்கு மேல் தரக்கூடாது என ஸ்வீட் ஸ்டால் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு குடும்பத்திற்கு ஒருவர்தான் ஸ்வீட் வாங்க வர வேண்டும் என்றும், வரும் போது குடும்ப அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து கோவையை நோக்கி மக்கள் படையெடுப்பதால், மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் கோவைக்கு எதற்காகச் செல்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப அனுமதியைக் கட்டுப்படுத்துவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

ஸ்வீட் ஸ்டால்களில் மொய்க்கும் கூட்டத்தைப் பார்த்து, இனி 'அடுத்த முறையும் தாம்தான் சட்டமன்ற உறுப்பினர்' என்ற மகிழ்ச்சியில் வானதி திளைத்திருப்பதாகவும், தனது மகிழ்ச்சியை மக்களிடையே மைசூர்பாகுடன் பரிமாறிக்கொள்ளும் வேளையில், அதைத் தடுக்க திமுக அரசு சதி செய்வதாகவும் பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். 

எது எப்படியோ, ஜிஎஸ்டி குறைப்பால் கோவை மக்கள் இனிப்பில் மிதக்கிறார்கள். எனக்குகூட கோவை செல்ல ஆசை வந்துவிட்டது. கோவை செல்ல அனுமதி எங்கே வாங்க வேண்டும், வெளியூர் குடும்ப அட்டைகளுக்கு ஸ்வீட் கிடைக்குமா என்பதைத் தெரிந்தவர்கள் பகிர்ந்தால் நன்றி உள்ளவனாக இருப்பேன். 

ஊரான்

Wednesday, 17 September 2025

இந்தியா ஆன்மீக நாடா? நாத்திக நாடா?

கடவுள் இல்லை என்று கூறுபவன்தான் நாத்திகன் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவனும் நாத்திகனாக இருக்க முடியுமா என்று கேட்டால், ஆம் இருக்க முடியும் என்பதே பதில்.

வேதங்கள் பிழையற்றவை என்று நம்புகிறவன் எவனோ, வேதங்களின் மேலாண்மையை ஒப்புக் கொள்கிறவன் எவனோ அவன் மட்டுமே ஆத்திகன் என்கிறது இந்து மதத்தத்துவம். இவன்தான் சனாதனி என்று அறியப்படுபவன். மனுதர்ம சாஸ்திரமே இவனுக்கான உந்து சக்தி. 


இதற்கு நேர் மாறாக, எவன் ஒருவன் வேதங்களை மறுக்கிறானோ, வேதங்களை நிந்தனை செய்கிறானோ, அவனை நாத்திகன் என்கிறது இந்து மதத் தத்துவம்.

ஆகவே, இந்துமத வேதங்களை ஏற்றுக் கொள்ளாத சைவர்கள், பகுத்தறிவாளர்கள், பொதுவுடமைவாதிகள், பௌத்தர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட அனைவரும் நாத்திகர்கள்தான். வேதங்களை ஏற்றுக் கொள்ளாத பட்டைபோட்ட பக்திமான்கூட நாத்திகனே; நமது தோழனே!

ஆத்திகமே இந்தியாவில் பலம் வாய்ந்தது என சனாதனவாதிகள் பெருமை பேசுகின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல; இந்தியாவில் பெருமான்மையினர் நாத்திகர்களே என்று நாமும் உரத்துக் குரல் எழுப்புவோம்!

தகவல் ஆதாரம்:  இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்: தேவி பிரசாத் சட்டோபாத்யாயா

ஊரான்

Thursday, 21 August 2025

மோடியும் முக்கால்னா பிரச்சனையும்!

"இந்தப் படத்தில் மோடிக்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவர் பூனாவை சேர்ந்த யோகேஷ் சித்தார்த்தாவும் அவரது மனைவி சுமீதா சித்தார்த்தாவும். அவர்களைப் பாராட்டுவதற்காக தனது இல்லத்திற்கு அழைத்திருந்தாராம் மோடி. மோடியே தனது வீட்டிற்கு அழைக்கிற அளவுக்கு அவர்கள் அப்படி என்ன செய்து விட்டார்கள்?


யோகேஷ் சித்தார்த்தா ஓய்வு பெற்ற இந்திய வான்படை அதிகாரியாம். அவர் பணியாற்றிய காலத்தில் சியாச்சின் மலைப்பகுதியில் நமது இராணுவ வீரர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்றார்களாம்.

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக  யோகேஷ் சித்தார்த்தா யோசித்தாராம். தனது மொத்த சேமிப்பு பணத்தையும் வைத்திருந்த எல்லா நகைகளையும் தனது சொந்த வீட்டையும் விற்று ரூபா 1.25 கோடி செலவில் சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் உற்பத்திக் கூடத்தை அமைத்தாராம். 

இதன் விளைவாக சியாச்சின் மலைப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் 20 ஆயிரம் இராணுவ வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடுகிறார்களாம். 

பிரச்சனைகளைப் பேசுவதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், அதில் ஒரு சிலர்தான் பிரச்சனைகளை தீர்க்கிறார்கள். அரிய இந்தச் சேவையை செய்த சித்தார்த்தாவும் சுமீதா சித்தார்த்தாவும் அமைதியாக இருக்கிறார்களாம். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமாம்.
 
சல்யூட் டு யூ சார்!"

இப்படி ஒரு செய்தி வாட்ஸ்அப்பில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. 
மூளையை மொத்தமாகக் கழட்டி வைத்துவிட்டுப் பார்த்தால் இது ஏதோ மிகப்பெரிய தியாகம் அர்ப்பணிப்பு போலத் தோன்றும். 

ஆனால் யு.கே.ஜி அளவுக்கு யோசித்துப் பாருங்கள்,  

"சல்யூட் அடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பது பற்றி யோகேஷ் சித்தார்த்தாவுக்குத் தெரிந்தது, நாட்டை ஆளும் மோடிக்குத் தெரியாமல் போனது எப்படி? இலட்சம் கோடிகளை விழுங்கும் இராணுவத்தால் தனது வீரர்களைக் காக்க ஒரு ஒன்னேகால் கோடி ரூபாயை இதற்கு ஒதுக்க முடியாதா?"

இந்த முக்கால்னா பிரச்சினையைத் தீர்க்க வக்கற்ற மோடி, அவ்விருவரையும் அழைத்துப் பாராட்டுவது அவருக்கே வெட்கமாகத் தெரியவில்லையா?"
என்றுதானே கேட்கத் தோன்றும்!

ஊரான்

Sunday, 17 August 2025

கோனேரி கோனும் கேனக் கிறுக்கன்களும்!

'கோன்' ஐ கோனாராக்கி, 'கோனேரி கோன் கோட்டை'யை மீட்கக் கிளம்பி இருக்கிறான் ஒரு கேனன். இந்த கேனனுக்குப் பின்னால் விசில் அடித்துக் கொண்டே பலநூறு கேனன்கள்.

யார் சொன்னது தமிழ்நாடு முன்னேறி விட்டது என்று? இல்லை இல்லை இது வடநாடுதான் என்பதை தம்பிகள் மீண்டும் மீண்டும்  நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செஞ்சிக்கோட்டை 

செஞ்சிக்கோட்டையை கட்டியதோடு அதை ஆண்ட எத்தனையோ கோன்கள் இருக்கும்போது கோனேரி கோனை மட்டுமே இவன் தூக்கிக் கொண்டு திரிவது ஏன்? 

உலகப் பாரம்பரிய சின்னமாக அண்மைய யுனெஸ்கோ அங்கீகாரத்துடன் செஞ்சிக் கோட்டை அது பாட்டுக்குக் கிடக்கிறது. சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள், போகிறார்கள். 

இந்தக் கோட்டையை இவன் யாரிடமிருந்து மீட்கப் போகிறான்? வெள்ளைக்காரன் போய்விட்டான் என்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் விடுதலை நாள் கொடியேறினார்கள். ஒருவேளை முகலாயர்களோ, ராஜபுத்திரர்களோ,
நாயக்கர்களோ, மராட்டியர்களோ, நவாபுகளோ மாறுவேடம் பூண்டு மு.க.ஸ்டாலினுக்குத் தெரியாமல் இரவோடு இரவாக கோட்டையைக் கைப்பற்றி விட்டார்களா என்ன? 

எவனாக இருந்தாலும் இருபது ரூபாய் கட்டணம் செலுத்தி விட்டு எட்டு மணிக்குக் கோட்டைக்குள் நுழைந்தால் ஐந்து மணிக்கு வெளியே வந்து விட வேண்டும்.‌ தம்பிகள் வேண்டுமானால் ஐந்து மணிக்கு மேல் பாறைகளுக்கு பின்னால் கள்ளுண்டு கவிழ்ந்து கிடக்க வாய்ப்பு உண்டே ஒழிய ஒருவனும் கோட்டைக்குள் இருக்க முடியாது. இந்தத் தம்பிகளை கோட்டையில் இருந்து மீட்கக் குரல் கொடுத்தாலாவது அதில் ஒரு நியாயம் இருக்கும். 

கோனேரி கோனை மீட்பதற்கான உனது குரலும், அயோத்தியையும் மதுராவையும் வாரணாசியையும் திருப்பரங்குன்றத்தையும் மீட்பதற்காகக் குரல் எழுப்பும் உனது சகலபாடிகளின் குரலும் சங்கமிக்கும் இடம் நாக்பூர்தான் என்பதை தமிழர்கள் உணராத வரை தமிழ்நாடு வடநாடாய் மாறுவதை ஒருபோதும் தடுக்க முடியாது. 

ஊரான்

Thursday, 24 July 2025

நீத்தாரை நினைவுகூற நீ கொடுப்பது 'திதி'யா? இல்லை 'நிதி'யா?

நீர்நிலைகளிலும் கடற்கரை ஓரங்களிலும் திதி கொடுப்பதற்காக இன்று குவிந்திருக்கிற கூட்டத்தைப் பார்த்தால் இந்தச் சமூகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இராமேஸ்வரத்தில் இன்று (24.07.2025)

நீர்நிலைகளுக்குச் சென்று பாக்கெட்டில் உள்ள பணத்தைப் பறிகொடுத்துவிட்டு, முன்னோர்களுக்குப் படையல் போட்டு அவர்கள் அதை உண்ண வருகிறார்களா என வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டு வருவதைவிட,

வீட்டிலேயே உறவினர்களை அழைத்து மறைந்த முன்னோர்களின் பிறந்த நாளிலோ அல்லது இறந்த நாளிலோ அவர்களின் நல்ல அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கூறி திதிக்கு நிதியாகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு அறுசுவை உணவு உண்டால் நம் வயிறும் மனமும் நிறையுமே? 

மக்கள் மாற வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது மட்டும் புரிகிறது. வீட்டிலேயே படையல் போட்டுக்கொண்டால் நிதி பெறுவோர் சும்மா விடுவார்களா என்ன? வீட்டில் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விட்டால் அதையேக் காரணமாகக் காட்டி அச்சமூட்டி உங்களை நீர்நிலைகளை நோக்கி ஓட வைப்பார்கள். அதற்குப் பயந்து நீயும் நீர்நிலைகளை நோக்கி திதி கொடுக்க, 'சாரி' நிதி கொடுக்க ஓடினால் அந்த AI கூட உன்னைப் பார்த்துக் கெக்களிக்கும். 

'கற்றதனால் ஆய பயன்யென் கொல்', இந்தக் குறளில் கடவுளை வணங்காவிட்டால் நீ கற்ற கல்வியினால் என்ன பயன் என்பதாகச் சொல்லப்படுகிறது. இங்கே வாலறிவனைக் கடவுளாக்கி விட்டார்கள். 

என்னைப் பொருத்தவரை இங்கே வாலறிவன் கடவுள் அல்ல, உன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர். அவர்களைக் கைவிடாமல் உயிரோடு இருக்கும் போது பராமரி; இறந்த பிறகு அவர்களின் நல்ல பண்புகளை அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல். அதற்காகவே அவர்களை பராமரி, வணங்கு, நினைவு கூறு என்பதாகத்தான் இருக்க வேண்டும்.

உயிரோடு இருக்கும்போது வாலறிவன்களை வதைப்படுத்தி, முதியோர் இல்லங்களில் சிறைப்படுத்தி அவர்கள் இறந்த பிறகு திதி கொடுப்பதால் என்ன பயன்? ஒருசிலர் பணம் கறக்க செய்த இந்த ஏற்பாட்டைக் கைவிட்டு வாலறிவன்களை உண்மையாகவே மதிக்கக் கற்றுக் கொள்வதே உனது தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.
 
இனியும் நீர்நிலைகளை நோக்கி ஓடாதே! வாலறிவன்கள் உனது வீட்டிலும் உனது நெஞ்சத்திலும்தான் இருக்கிறார்கள். உனது பெற்றோர்களாகிய வாலறிவன்களுக்கு மரியாதை செலுத்த இடைத்தரகர்கள் எதற்கு? 

'திதி' என்ற பெயரில் 'நிதி' கொடுப்பதை உடனே நிறுத்து! இது கட்டளை! பெரியாரின் கட்டளை!

ஊரான்