Sunday, May 12, 2024

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவே கிடையாதா?

இராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்ட ஒரு தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம், தமிழ்நாட்டில் வேங்கை வயல் சம்பவம்  என சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் குறித்து whatsapp நண்பர்கள் குழு ஒன்றில் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அந்த விவாதத்தில் நான் பதிவு செய்த கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

***
நண்பா,

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாதிய முரண்களும் மோதல்களும் குறையப் போவதில்லை. இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கம்யூனிஸ்டுகள் வந்தால் ஓரளவுக்கு குறையக் கூடும். அவ்வளவுதானே ஒழிய முற்றிலுமாக சாதிய மோதல்கள் நின்று விடாது.


காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பிணக்குகளும் இந்து மதத்தோடு, சொல்லப்போனால் மனுதர்ம சாஸ்திரத்தோடு பிணைக்கப்பட்டவை. மனுதர்ம சாஸ்திரத்தை ஆகப்பெரும்பான்மையோர் படிக்கவில்லை என்றாலும் அதைத்தான் ஒவ்வொரு சாதியினரும் கடைபிடித்து வருகின்றனர். இது மன்னராட்சி காலத்தில் மிக வலுவாக ஊன்றபட்ட ஒன்று.

தமிழ்நாட்டின் வள்ளலார் முதல் கேரளாவின் தர்மதீர்த்த அடிகளார் வரை எத்தனையோ மத சீர்திருத்த வாதிகள் இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. காரணம் இந்து மதத்தில் குறிப்பாக மத அதிகாரத்தில் உள்ள பார்ப்பனியம்தான். இங்கு நான் தனிப்பட்ட பார்ப்பனர்களைச் சொல்லவில்லை.

பார்ப்பனியம் என்பது ஒரு சித்தாந்தம். மக்களை, ஏற்றத்தாழ்வுடைய வருணங்களாகவும் படிநிலைச் சாதிகளாகவும் பகுத்து அவர்களுக்கான கடமைகளையும் வகுத்து அதை நிலை நிறுத்தி வைத்திருப்பபது மனுதர்ம சாஸ்திரம்.

மனுதர்ம சாஸ்திர நூலைப் படித்தால் இது நன்றாக விளங்கும். "சனாதன தர்மம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! என்கிற தொடரில் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன்.

டாக்டர் அம்பேத்கரைப் போல மனுதர்ம சாஸ்திரத்தை மிக விரிவாக ஆய்வு செய்தவர் எவரும் இல்லை. இவருக்கு முன்பாகவே மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவும் அதைப் பற்றி அலசி இருக்கிறார்.  எனவே, மத அதிகாரத்திலிருந்து பார்ப்பனர்களையும், இந்து மதத்திலிருந்து பார்ப்பனிய சித்தாந்தத்தையும் அகற்றாமல், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் பார்ப்பனிய பண்பாட்டு நடைமுறைகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப் படுத்தாமல் சாதியை முரண்களும் மோதல்களும் நிற்கப் போவதில்லை. 

இந்து மதத்திலேயே பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் பங்காரு அடிகளார், பிரேமானந்தா, அமிர்தானந்தமயி, நித்தியானந்தா உள்ளிட்ட நவீன கால ஆன்மீகவாதிகள். தனிப்பட்ட முறையில் இவர்களது நடைமுறையில் சில முறைகேடுகள் இருந்த போதிலும் உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்தியவர்கள். 

பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடிய ஆன்மீகவாதிகளில் வள்ளலாரே முன்னிலை வைக்கிறார். ஐயா வைகுந்தர் வழிபாடும் அத்தகையதே.  இன்றைய குன்றக்குடி அடிகளாரும், சுகிசிவம் போன்ற ஆன்மீக வாதிகளும் இதில் அடங்குவர்.

ஆன்மீகத்தில் நம்பிக்கையும் நாட்டமும் உள்ளவர்கள் மேற்கண்ட ஆன்மீகவாதிகளை பின்பற்றலாமே ஒழிய பார்ப்பன குருமார்களை அல்ல.

இந்து மதத்தில், மனுதர்ம சாஸ்திர நடைமுறைகளில் மாற்றமே நடைபெறவில்லையா என்று கேட்டால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு வித்திடுகிறது. அவரவர் அவரவர் சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதவாதிகளும் மனுதர்ம சாஸ்திரமும் வலியுறுத்தினாலும், சாதி மறுப்பு காதல்  திருமணங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நவீன கால உற்பத்தி முறையும் அது ஏற்படுத்தி உள்ள உற்பத்தி உறவுகளும்தான் என்றால் அது மிகையல்ல. சாதி மறுப்பு திருமணங்களுக்கு தாமாக முன்வரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே புதிய உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளை நோக்கி இந்தச் சமூகம் நகரும் போது, இது போன்ற மதமாச்சரியங்களும் அது தொடர்பான ஏற்றத்தாழ்வுகளும், மதத்தின் மீதான நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல மறைந்து போகும்.

ஊரான்

No comments:

Post a Comment