உமியாகும் உழைப்பாளிகள்!
ஆலைகள் எல்லாம் பாய்லர்கள்தான்,
நெருப்புக்குப் பதிலாக
ஊழியர்களின் உழைப்பை எரிக்கும்
பாய்லர்கள்!
நெல் மணிகளை உள்ளே கொட்டி,
அரிசியைப் பிரித்தெடுப்பதுபோல்,
உழைப்பாளிகளின் வியர்வையை உறிஞ்சி
லாபங்களை அள்ளிக் குவிக்கின்றன
ஆலைகள்!
கைகளின் வலிமை,
கால்களின் உறுதி,
எதிர்கால நம்பிக்கை,
வாழ்க்கைக் கனவு —
எல்லாவற்றையும் அரைத்து
மூட்டைகளில் நிரப்பிக் கொள்கின்றன.
பிறகு...
பயன் தீர்ந்த உமிபோல
ஊழியர்களை வெளியே
ஊதித் தள்ளுகின்றன.
ஆனால்...
உமி தோல்வியின் அடையாளமல்ல;
அது மண்ணின் எதிர்காலம்.
காற்றில் பறந்தாலும்,
மழையில் நனைந்தாலும்,
இறுதியில் உரமாகி
பூமிக்கு உயிரூட்டுகிறது.
அதைப் போலவே,
சுரண்டப்பட்ட உழைப்பாளிகளின்
கண்ணீரும் கோபமும்
ஒருநாள் உரமாகி,
புதிய உலகின் விதைகளை
முளைக்க வைக்கும்.
உழைப்பை ஆலைகள்
உறிஞ்சிக்கொள்ளலாம்;
ஆனால்,
வரலாற்றை விளைவிப்பது
உமியென ஒதுக்கப்பட்ட
உழைப்பாளிகள்தான்!
வரலாற்றின் விளைச்சலை
அறுவடை செய்வதும்
அவர்கள்தான்!
— தமிழ்மணி

No comments:
Post a Comment