Showing posts with label thambraas. Show all posts
Showing posts with label thambraas. Show all posts

Sunday, 26 February 2012

தனுஷின் கொலவெறியும் தம்ராஸின் கவலையும்!

தமிழக பார்ப்பனர்களின் சங்கமான 'தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின்' (thambraas) அதிகார்வ பூர்வ ஏடான "தம்ராஸ்" பிப்ரவரி 2012 மாத இதழை தற்செயலாக பார்க்க நேர்ந்தது.


ஹும்... இந்தக் காலத்து பசங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் ...
ஒன்னு 'தல விரி'...
இன்னொன்னு 'கொலவெறி..அதான்!'

அந்த இதழில் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ள ஸ்ரீ-யின் ஒரு கார்ட்டூன் வசனம் இது.

'தல விரி'...

ஜிம்னாஸ்டிக் தொழிலுக்கு ஏற்ற இறுக்கமான முழுக்காலுரை,அதற்கு 'மேட்சான' மேற்சட்டையுடன் தலை மயிர்களை ஒன்றுசேர்த்து கட்டிப்போடாமல் ஒவ்வொரு முடிக்கும் முழுவிடுதலை கொடுத்து இரு கன்னங்களையும் தொட்டுக் கொண்டு அணிவகுத்து விரிந்து தொங்கும் முடி அலங்காரத்துடன் நிற்கும் இரு இளம் பெண்களைப் பார்த்து சடை பின்னிய மடிசார் மாமிகள் இரண்டு பேர் இப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

இங்கே இவர்கள் குறிப்பிடும் 'தலவிரி'பசங்க,மாமி வீட்டு குலக் கொழுந்துகளைத்தான்.பார்ப்பனர்கள் பிறரைப்பற்றி எப்போது கவலைப்பட்டிருக்கிறார்கள் இப்பொழுது மட்டும் கவலைப்படுவதற்கு?

ஒரு பக்கம் இத்தகைய பண்பாடுகளை தொலைக்காட்சி ஊடகங்களில் அறிமுகப்படுத்தி அதையே பிறருக்கும் பரவச் செய்யும் பணிகளையும் இவர்களே செய்வார்களாம். அதே நேரத்தில் இவாளுடைய பத்திரிக்கையில் கண்டிக்கவும் செய்வார்களாம். இது யாரை ஏமாற்ற?

உடை மற்றும் முடி அலங்காரம் என்பது தாங்கள் செய்கிற தொழிலுக்கு ஏற்ப இருந்தால் அதில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

 'கொலவெறி..

இங்கே இவர்கள் கவலைப்படுவது தலவிரிக்காக அல்ல, தனுஷின் காதல் கொல வெறிக்காகத்தான். இந்தக் கொலவெறியைத் தூண்டும் தனுஷ் அவாளின் வட்டத்துக்குள்தானே இருக்கிறார்? ஏன் இப்படிக் கொல வெறியைத் தூண்டுகிறாய் என கண்டிக்கக் கூடாதோ! அப்படிக் கண்டித்தால் அவாளுக்காக அவ்வப்பொழுது குரல் கொடுக்கும் தனுஷின் மாமாவுக்கு சங்கடம் ஏற்படுமோல்ல?

கல்லாக் கட்ட மட்டும்தான் இந்தக் கொல வெறியத் தூண்டலாம். ஆனால் வாழ்க்கையில் கூடாது. காதல்-கீதல்-கொல வெறி என கலப்புத் திருமணம் ஏதும் பிராமணர்கள் செய்து விடக்கூடாதாம். அதற்காக பிராமணாகள் சத்தியம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இது பற்றி அவர்களின் இணைய தளத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

அந்தணர் என்போர் அறவோராம். நீதி-நேர்மை-நியாயம்-தர்மம் மற்றும் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப் பட்டவர்களாம். அதனால் புராணங்களிலும் இலக்கியங்களிலும் இவர்களுக்கு மிக உயரிய அந்தஸ்து அளிக்கப்பட்டதாம். தமிழகத்தில் ஒருதலைபட்சமான பிராமண துவேஷ பிரச்சாரத்தால் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார்களாம்.அதனால் கலாச்சார சீரழிவு தொடங்கிவிட்டதாம்.

பிராமணர் என்பது சாதியா?

 எப்படி முதலியார் என்பது சாதி அல்லவோ,  எப்படி கவுண்டர் என்பது சாதி அல்லவோ,  எப்படி பிள்ளை என்பது சாதி அல்லவோ,  எப்படி செட்டியார் என்பது சாதி அல்லவோ அது போல பிராமணர் என்பதும் சாதி அல்ல.

எப்படி முதலியார் என்பது செங்குந்தர், அகமுடையர், துளுவ வேளாளர் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடோ அது போல பிராமணர் என்பது ஐயர், ஐயங்கார் போன்ற சாதிகளை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு. கவுண்டர், பிள்ளை, செட்டியார் போன்ற குறியீடுகளிலும் பல்வேறு சாதிகள் உண்டு. இவர்கள் ஒரே குறியீட்டின் கீழ் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டாலும் அந்தந்த சாதிகளுக்குள்தான் திருமண உறவுகளை வைத்துக் கொள்கிறார்கள். ஐயங்கார் ஐயருக்குப் பெண்தரமாட்டார். துளுவ வேளாளர் அகமுடையர் வீட்டில் பெண் எடுக்க மாட்டார்.

குடும்ப உறவுகளில் தங்களுக்குள் ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளாதவர்கள் பிறகு ஏன் தங்களை பிராமணர்கள் என்றும் முதலியார்கள் என்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்? காரணம் வர்ணாசிரம அடிப்படையில் இவர்கள் பிராமணர்கள் என்றும் சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்படி சொல்லிக் கொள்வதில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்கிறார்கள். அதனால்தான் ஐயர் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான். செட்டியார் தன்னை வைசியன் என்று சொல்லிக் கொள்கிறான். கவுண்டர் தன்னை சத்திரியன் என்று சொல்லிக் கொள்கிறான்.

சாதியப்படிநிலையில் தாங்கள் பெருமைக்குரியவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ள முடியாததால்தான் பள்ளர், பறையர் அருந்ததியர் உள்ளிட்ட சாதியினர் தங்களை சூத்திரர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள்கூட தங்களுக்குள் திருமண உறவுகளை வைத்துக் கொள்வதில்லை. அகமணமுறையை ஒழிப்பது சாதியை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறை என்பதை டாக்டர் அம்பேத்கர் வலியுறுத்தியும் அவரது வழிகாட்டுதலை ஒதுக்கிவிட்டு சனாதன தர்மத்தை கடைபிடிப்பது ஒரு அவலமாக இன்னமும் நீடிக்கத்தான் செய்கிறது.  வர்ணாசிரம தர்மத்தின் வெற்றி இதில்தான் அடங்கி இருக்கிறது.

உலக மயமும் கொலவெறியும்

மேலும் பிராமணர்கள் சொல்கிறார்கள்,

"சமீபத்திய உலகமயமாக்கல் மற்றும் கணினிமயமாக்குதல் (IT Revolution) காரணமாக மாபெரும் கலாச்சார சீரழிவு அனைத்து சமூகங்களையும் பாதித்தாலும் நமது பிராமண சமூகத்தை மிகப்பெரும் அளவில் பாதித்துள்ளது. இதன் விளைவாக பல பிராமண சமூகப் பெண்களும், சில பிராமண சமூக ஆண்களும் கலப்புத் திருமணம் செய்து கொள்வது பெருகி வருகின்றது. கலப்புத் திருமணம் நமது பிராமண பாரம்பரியத்தை வேரறுக்கச் செய்திடும்.

உலக மயமாக்களால் தனியார் மயம் - தாராள மயக் கொள்கைகள் அமுலுக்கு வந்ததால் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள். விவசாயம் நொடிந்து போய் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படார்கள். சிறு தொழில், சிறு வணிகம் உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது.பன்னாட்டுக் கம்பெனிகள் இந்நாட்டைக் கொள்ளையடிக்க கதவுகள் திறக்கப்பட்டதால் உள்நாட்டுத் தொழில் நலிவடைந்தது.உலகமயமாக்கலின் விளைவால் இன்று கோடிக் கணக்கானோரின் வாழ்வு கேள்விக்குரியதாகிவிட்டது. இதெல்லாம் நமக்குக் கவலை அளிக்கிறது.

ஆனால் அவாளுக்கு கலப்புத் திருமணங்கள் பெருகிவிட்டதே என்கிற கவலை.
பிராமண பாரம்பரியத்தை காதல் திருமணங்கள் வேரறுக்கச் செய்து விடுமாம். அதனால் பிராமணர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடாதாம். உலக மயத்தால் சமூகம் சீரழிகிறது, காதல் திருமணங்கள் அதிகரிக்கிறது, பிராமணியம் அழிகிறது என்றால் உலக மயத்தையல்லவா பிராமணர்கள் எதிர்க்க வேண்டும். அவன் பேண்டதைத் இவன் தின்பானாம். ஆனால் 'நோய்' மட்டும் வரக்கூடாதாம் என்பது போல இருக்கிறது இவாளின் கவலை.

பிறவியிலே மிகச் சிறந்த பிறவியான மனிதப் பிறவியில் அதிலும் புண்ணிய பாரத தேசத்தில், மேலும் குறிப்பாக ரிஷிவர்க்கமாக பிராமணத் தாயார், தகப்பனாருக்குப் பெண்ணாக / பிள்ளையாக பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமண பாரம்பரியத்தை கடைப்பிடிப்பேன்.”
“எதிர்காலத்தில் என்னுடைய கணவர் / மனைவி பிராமண சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை, வேறு மதத்தினரை கலப்புத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனது குடும்பப் பெரியவர்கள் மத்தியில் / ஸ்வாமி சந்நிதியில் / தாம்ப்ராஸ் நடத்துகின்ற சத்யப்ரமாண நிகழ்ச்சியில் நான் இந்த சத்யப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கின்றேன்.”

என்று பிராமணப் பெண்களும் பையன்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வேண்டுமாம்.

"நடந்தவகைள் நடந்தவைகளாக இருக்கட்டும்!
இனி நடக்க இருப்பவை நம்மவைகளாக மட்டுமே இருக்கட்டும்!!"

என நம்பிக்கை வைத்து அந்த அறிவிப்பை முடித்துள்ளார்கள்.

இனி நடப்பவை அவாளுடையதாக இருக்கக் கூடாது. உலக மயம் சமீபத்தியது. வீழ்த்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பார்ப்பனியம் பல ஆயிரம் ஆண்டு பழைமையானது: உறுதிப் படுத்தப்பட்டது. வீழ்த்துவது கடினம். பார்ப்பனியத்தை வீழ்த்த உலக மயம் உதவும் என்றால் சிறிது காலம் உலக மயத்தை வீழ்த்துவதை தள்ளிப் போடலாமோ என்று கூடத் தோன்றுகிறது!