Thursday, February 12, 2026

எழுதப்படாத பக்கங்கள்: ஓர் அறிமுகம் (1)

வாசிப்பும் வாழ்வியலும்: ஒரு தேடல்

அறிவியல், அரசியல், ஆன்மீகம், சிறுகதை, நாவல், இலக்கியம் எனப் பல தளங்களில் நான் வாசித்ததையும், அவை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளையும், எனது வாழ்க்கை அனுபவங்களையும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக
வலை உலகில் எழுதி வருகிறேன்.

நாம் வாசிக்கும் நூல்கள் வெறும் கதைகளாகவோ கருத்துகளாகவோ மட்டுமல்ல. அவை அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழல், ஆன்மீகப் பார்வை, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பிரதிபலிப்பதோடு, மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நற்செயல்கள், தீஞ்செயல்கள், நீதிபோதனைகள் போன்ற பல்வேறு அம்சங்களையும் நினைவூட்டுகின்றன.

நூல்களை வெறும் வாசிப்பாகக் கடந்து செல்லாமல், சற்று நின்று நிதானித்துப் பார்த்தால், உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உருவாகும் சமூக மாற்றங்களையும், அரசியல் சூழலால் ஏற்படும் உற்பத்தி உறவுகளின் மாற்றங்களையும் அவற்றின் ஊடாகக் காண முடிகிறது. இவை அனைத்தும் கடந்த காலப் படைப்புகளில் மட்டுமல்ல, நிகழ்கால படைப்புகளிலும் தெளிவாக வெளிப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஏதோ சிலவோ, அல்லது பலவோ, நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறியிருப்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை.


வேர்களும் தொடக்கக் கல்வியும்

சுமார் அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகளோ மின்விளக்குகளோ இல்லாத ஒரு மலையோரக் குக்கிராமத்தில், ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் எண்மரில் ஒருவனாகப் பிறந்து வளர்ந்தவன் நான், ஒத்தையடிப் பாதையில் சில கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே தொடக்கக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் முடித்தேன். அதன் பிறகு மிதிவண்டிப் பயணத்துடன் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்து, மெட்ராஸ் பட்டணத்தில் பொறியியல் பட்டயப் படிப்பைச் சிறப்பாக முடித்தேன்.

தொழில்முறைப் பயணமும் அரசியல் வாழ்வும்

திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, மார்க்சிய–லெனினிய அரசியலில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பன்முகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.
இதனூடே  BHEL நிறுவனத்தில் நடைபெற்ற போனஸ் போராட்டத்தையொட்டி என் வேலை பறிபோனது.

அந்தக் காலகட்டத்தில் உடல்நலக் குறைவால் கோமா நிலைக்குச் சென்று மீண்டெழுந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, பிறகு இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்தேன். அந்தச் சூழலிலும் அரசியல் பணிகளைத் தொடர்ந்ததோடு, ஹோமியோபதி மருத்துவ முறையையும் கற்றறிந்தேன்.

எழுத்துப் பயணமும் தொடரும் தேடலும்

பணியிலிருந்து ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இன்றும் வலை உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கைப் பயணம் பன்முக அனுபவங்களைக் கொண்டதனால், அவற்றை அவ்வப்போது எழுத்தாக்கி பகிர்ந்து வருகிறேன்.

எதிர்த்து நில்’ வலைப்பூவில் “இழி குணம்தலைப்பில், தமிழ்மணி என்ற பெயரில் என் அனுபவங்களைத் தொடராக எழுதினேன். பின்னர் அவற்றைத் தொகுத்து அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டேன். நான் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் “குற்ற இயல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி?” என்ற நூல் மட்டும் அச்சு வடிவில் வெளியானது.

இழி குணம்என்ற தலைப்பில் என் அனுபவங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற உணர்வு இன்னும் என்னுள் உள்ளது. அதனால் அவற்றை மேலும் விரிவாக எழுதலாம் என எண்ணுகிறேன். நான் எழுதப் போவது கட்டுரையா, கதையா, நாவலா என்று வகைப்படுத்தத் தெரியாது. இதுவரை எதையும் நான் திட்டமிட்டு எழுதியதுமில்லை.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள் இனியும் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,
எழுதப்படாத பக்கங்களை
விரைவில் எழுதத் தொடங்குகிறேன்.

பொன்.சேகர்

Wednesday, February 11, 2026

காலத்தின் சுவடுகள்: என் பயணத் தோழர்களும்... பிரிய மனமில்லா பிரிவுகளும்!

காலச் சக்கரம் உருண்டோடினாலும், சில நினைவுகள் மட்டும் நெஞ்சில் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கின்றன.

பச்சை வண்ண சுசிகி மேக்ஸ் 100... 
சுமார் 25 ஆண்டுகாலம்! 
வெறும் இயந்திரமாக அல்ல, 
என் இன்ப துன்பங்களைச் சுமந்த ஒரு ஜீவனாகவே 
என்னோடு வாழ்ந்தாய். 
என் கால்கள் தளர்ந்த போதெல்லாம் நீ என் வலிமையான கால்களானாய். பிறர் செய்த தவறுகளால் சிறு விபத்துகள் நேர்ந்த போதும், 
ஒரு தாய் தன் சேயைக் காப்பது போல, அந்த அடிகளை 
உன் இரும்புச் சட்டத்திற்குள் உள்வாங்கிக் கொண்டு 
என்னைக் காத்தாய். 
என் உடல் கீறப்படாமல் இருக்க, உன் காயங்களை நீயே சுமந்தாய்.


ஸ்கூட்டி பெப் – 
குடும்பத்தில் ஓர் அங்கம்... 
உன்னோடு கூடவே, எம் குடும்பத்தின் ஒரு அங்கமாகப் பயணித்தது அந்த 'ஸ்கூட்டி பெப்'. பழையதானாலும் பாசம் குறையாத வாகனம் அது. ஆனால், ஒரு நாள் 
தெரு நாய் குறுக்கிட்ட அந்த நொடி... எதிர்பாராத விபத்து. என் முழங்கையில் நேர்ந்த எலும்பு முறிவு, என் உடல் நலனை மட்டுமன்றி, என் மன உறுதியையும் உலுக்கியது.


பிரிய நேர்ந்த கனத்த தருணம்... 
"இனி பழைய வாகனங்கள் வேண்டாம்" என்ற குடும்பத்தினரின் அக்கறையான குரல், 
என் உள்ளுக்குள் ஒரு கட்டளையாக ஒலித்தது. அந்த ஒரு விபத்து, 
உன்னையும் (மேக்ஸ் 100), 
அந்த ஸ்கூட்டியையும் ஒரே நேரத்தில் பிரிய வைத்தது.
இன்று நீ (மேக்ஸ் 100) வேறொருவரின் கைகளில் புதுப்பொலிவுடன் ஜொலிப்பதைக் காணும் போது, என் பழைய காதலுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்ததாக உள்ளம் மகிழ்கிறது. ஆனால், அந்த ஸ்கூட்டி பெப் என்னவானது? எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. அதுவும் எங்காவது ஒரு மூலையில் 
நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே என் அவா.


இன்று... 
வாகனங்கள் இன்றி 
இரண்டு ஆண்டுகளாய் 
என் பயணங்கள் தொடர்கின்றன. ஆனால், சாலையைக் கடக்கும் போதெல்லாம் உன் எஞ்சின் சத்தம் 
என் காதுகளில் ரீங்காரமிடுகிறது. 
நீ வெறும் இரும்புத் துண்டல்ல... என் பொற்கால நினைவுகளின் நிழற்பயணி.

காதலின் கவன் – 
ஓடினேன் ஓடினேன்… 
மீண்டும் ஒருமுறை நீ என் கால்களாவாயா? அல்லது இந்த நினைவுகளின் கதகதப்பே என் மீதி வாழ்வுக்குப் போதுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஊரான்

குறிப்பு: கவன்-"காலம் கடந்து போனாலும், தீராத காதலால் உந்தப்பட்டு மீண்டும் அந்தப் பழைய நினைவுகளுக்கே திரும்புதல்"

பளபளக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எல்லாம் தரம் தானா? - நீங்கள் ஏமாறாமல் இருக்க சில உண்மைகள்!

"தக தக" என மின்னுவதைப் பார்த்து, தரம் என நம்பி நாம் வாங்கும் தட்டு, கரண்டி, தண்ணீர் குழாய்கள் (Taps) போன்றவை சில நாட்களிலேயே துருப்பிடித்து 'பல்ளிளிப்பதை' பார்த்திருப்போம். "ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எப்படி துருப்பிடிக்கும்?" என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.

உண்மை என்னவென்றால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அதன் அணு அமைப்பைப் பொறுத்து இரண்டு முக்கிய வகைகள் உண்டு. இதில் ஒன்று துருவை எதிர்க்கும், மற்றொன்று எளிதில் துருப்பிடிக்கும்.


முக்கிய வகைப்பாடுகள்:

1. ஆஸ்டெனிட்டிக் (Austenitic - 200 & 300 Series): 

இதில் குரோமியத்துடன் நிக்கல் (Nickel) கலந்திருக்கும். இது துருவை மிகச்சிறப்பாக எதிர்க்கும் திறன் கொண்டது.

Grade 304: இது மிகச்சிறந்த தரம். வாழ்நாள் முழுவதும் உழைக்கும். இதில் காந்தம் ஒட்டாது.

Grade 202: இதில் நிக்கல் குறைவாக இருப்பதால், ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் (குழாய்கள், சிங்க்) பயன்படுத்தினால் விரைவில் துருப்பிடிக்கும். இதிலும் காந்தம் ஒட்டாது என்பதால் பலரும் இதை '304' என நம்பி ஏமாந்துவிடுகிறார்கள்.

2. ஃபெரிடிக் (Ferritic - 400 Series):

இதில் நிக்கல் இருக்காது, வெறும் குரோமியம் மட்டுமே இருக்கும். இது இரும்பை ஒத்த குணமுடையது.
Grade 430: இதில் காந்தம் நன்றாக ஒட்டும். பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும், தண்ணீர் அல்லது ஈரப்பதம் பட்டால் மிக எளிதில் துருப்பிடித்துவிடும். விலையும் மிகவும் குறைவு.

எந்த வகை ஸ்டீல் சிறந்தது? - ஒரு பார்வை

அம்சம்ஆஸ்டெனிட்டிக் (304)ஆஸ்டெனிட்டிக் (202)ஃபெரிடிக் (430)
காந்தம் ஒட்டுமா?ஒட்டாதுஒட்டாதுநன்றாக ஒட்டும்
துரு எதிர்ப்புமிக அதிகம்மிதமானதுகுறைவு
விலைஅதிகம்நடுத்தரம்குறைவு
சிறந்தது எது?சமையலறை & குழாய்கள்பாத்திரங்கள் & கைப்பிடிகள்அலங்காரப் பொருட்கள்

வாங்கும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

காந்த சோதனை (Magnet Test): ஒரு சிறிய காந்தத்தை எடுத்துச் செல்லுங்கள். காந்தம் பலமாக ஒட்டினால் அது ஃபெரிடிக் (400 series) வகை. இது வீட்டு உபயோகத்திற்கு (குறிப்பாக தண்ணீர் படும் இடங்களுக்கு) ஏற்றதல்ல.

காந்தம் ஒட்டவில்லை என்றால் அது நல்லதா? இல்லை! ஏனெனில் ஆஸ்டெனிட்டிக் வகையிலேயே தரம் குறைந்த 202 கிரேடிலும் காந்தம் ஒட்டாது.

கெமிக்கல் டெஸ்ட் (SS Test Solution): பெரிய அளவில் பொருட்கள் வாங்கும் போது, கடைகளில் கிடைக்கும் 'SS Test Solution' திரவத்தைப் பயன்படுத்தலாம். 202 கிரேடு ஸ்டீலில் இதை வைத்தால் சிவப்பாக மாறும், உயர்தர 304-ல் நிறம் மாறாது.

ISI முத்திரை: தரமான பொருட்களில் SS 304 அல்லது SS 202 போன்ற தரக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருக்கும். அதை கவனித்து வாங்குங்கள்.

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதைப் போல, "பளபளப்பதெல்லாம் தரமான ஸ்டீல் அல்ல". விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைந்த ஸ்டீலை வாங்கி, பின்னாளில் துருப்பிடித்து, அதைக் கண்டு வருந்தி, துரு நீக்க 'பிளீச்சிங் போடவா, ஆசிட் போடவா, எதைப் போட்டால் துரு நீங்கும்' என படாத பாடுபட வேண்டாமே!

வருந்துவதை விட, வாங்கும்போதே சரியான கிரேடு எது என அறிந்து வாங்குவது புத்திசாலித்தனம்.

ஊரான்

Sunday, February 8, 2026

பிரதாப முதலியார் சரித்திரம்: ஒரு சமூகச் சீர்திருத்தக் களஞ்சியம்

மாயூரம் முன்சீப் ச.வேதநாயகம் (பிள்ளை) அவர்களால் 1876-இல் எழுதப்பட்ட தமிழ் மொழியின் முதல் நாவலான "பிரதாப முதலியார் சரித்திரம்", ஒரு நகைச்சுவையான கதையோட்டத்திற்குள் வாழ்வியலுக்குத் தேவையான அறக்கருத்துகளை விதைத்த ஒரு சீர்திருத்தக் களஞ்சியம்.


1. மூடநம்பிக்கைகளைச் சாடுதல்

நாவலின் நாயகி ஞானாம்பாள், அறிவின் சிகரமாகச் சித்தரிக்கப்படுகிறாள். அக்காலத்தில் நிலவிய பேய், பிசாசு மீதான பயம் மற்றும் போலிச் சோதிடங்களை ஆசிரியர் கடுமையாகச் சாடுகிறார்.
  • பயமே பேயாக உருவெடுக்கிறது என்பதைத் தர்க்கரீதியாக விளக்கி, அறிவியலுக்குப் புறம்பான சடங்குகளைக் கேலி செய்கிறார்.
  • ஜாதகம் பார்த்துத் திருமணங்களைத் தள்ளிப்போடுவதை விட, ஒருவரின் குணநலன்களே அவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை ஞானாம்பாள் கதாபாத்திரம் மூலம் நிறுவுகிறார்.

2. தமிழ் மொழியின் முக்கியத்துவம்

வேதநாயகம் பிள்ளை தமிழுக்குத் தனி இடம் வழங்கியவர். "தாய்மொழி தெரியாதவன் தன் தாயை அறியாதவன்" என்ற ஆழமான கருத்தை முன்வைக்கிறார்.
  • ஆங்கிலக் கல்வி அலுவலுக்கு உதவலாம்; ஆனால் செத்துப்போன மொழிகளான லத்தீன் மற்றும் சமஸ்கிருதத்தைக் கற்பதால் பயன் ஏதுமில்லை எனச் சாடுகிறார்.
  • “தமிழ் படிக்காதவர்களை தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர் பாஷைகளைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால் சுயபாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரான்சு மட்டும் படிப்பவர்களைப் பாரிசுப் (Paris) பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்குஞ் (Latin) சமஸ்கிருதத்துக்குஞ் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்தப் பாஷைகளைப் படிக்கிறவர்களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்கிறார் நூலாசிரியர். 
  • இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிக்கும் இந்தக் காலத்தில்கூட இப்படி ஒரு சிந்தனைப் போக்கு எவருக்கும் எழவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  • தமிழ்நாடு, திராவிட தேசம் போன்ற சொற்களை 150 ஆண்டுகளுக்கு முன்னரே கையாண்டு, தமிழ் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது வியப்பிற்குரியது.

3. நீதித்துறையில் நேர்மை

நீதிமன்றத் துறையில் (முன்சீப்பாக) பணியாற்றிய அனுபவத்தால், சட்டத் துறையில் நடக்கும் முறைகேடுகளை ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.
  • வழக்கறிஞர்கள் பொய் சாட்சிகளை உருவாக்கக் கூடாது; நீதியை விலைபேசுவது மகாபாவம் என்கிறார்.
  • ஒரு வழக்கில் திருடனுக்கு எதிராகவும், மற்றொரு வழக்கில் அதே திருடனுக்கு ஆதரவாகவும் வாதாடும் வழக்கறிஞர்களின் அறமற்ற தன்மையைக் கேள்வி கேட்கிறார்.
  • நீதிமன்றங்கள் எளிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும்; வழக்குகளைத் தாமதப்படுத்துவது அநீதிக்குச் சமம் என 'வாய்தா' கலாசாரத்தைக் கண்டிக்கிறார்.

4. கனகபுரி ஆட்சி: ஒரு நல்லரசின் அடையாளம்

நாவலில் வரும் 'கனகபுரி' நாட்டின் ஆட்சி முறை, தற்கால ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடி.
  • மக்கள் நலம்: அரசு என்பது மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கே செலவிட வேண்டும். பெண் கல்வி, ஏழைகளுக்கு உதவி, பாரபட்சமற்ற நீதி ஆகியவையே நல்லரசின் அடையாளம்.
  • நிர்வாகச் சீர்திருத்தம்: ஊதியம் பெற்றுக்கொண்டு வேலை செய்யாத அதிகாரிகளை நீக்க வேண்டும்; அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைத்து அந்தப் பணத்தை மக்கள் பயன்பாட்டுக்குச் செலவிட வேண்டும் என்ற இவரது 'சோசலிச' சிந்தனை அக்காலத்திலேயே எழுந்தது ஆச்சரியம்.

5. வேளாண்மையில் கூட்டுறவு முறை

விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்பதை நாவல் பல இடங்களில் பறைசாற்றுகிறது.
  • தனிமனித விவசாயத்தை விட, 'கூட்டுறவு' (Co-operative) முறையில் பயிர் செய்வதும் விளைச்சலைப் பகிர்ந்து கொள்வதும் லாபகரமானது என்ற சிந்தனையை விதைத்துள்ளார்.
  • அரசு நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதையும், விவசாயிகள் கடன்படாமல் வாழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

6. காலரா தொற்றும் கொரோனா பேரிடரும்: ஒரு ஒப்பீடு

ஞானாம்பாள் காலரா நோயால் பாதிக்கப்படும் சூழல், இன்றைய கொரோனா (COVID-19) காலத்தோடு பல விதங்களில் ஒத்துப்போகிறது:

அச்சமும் பீதியும்: அன்று காலராவுக்கு மருந்து இல்லாதபோது மக்கள் அடைந்த அதே கையறு நிலையை நாம் கொரோனா தொடக்கத்தில் கண்டோம்.

தனிமைப்படுத்துதல் (Quarantine): ஞானாம்பாள் நோயுற்றபோது அவளைப் பிரித்து வைக்கும் சூழல், இன்றைய 'Isolation' முறையை அன்றே நினைவுபடுத்துகிறது.

சமூகத் தாக்கம்: தொற்று பரவும்போது மக்கள் ஊரை விட்டு ஓடுவதும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் இன்றைய ஊரடங்கு (Lockdown) காலத்துத் துயரங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.

நிலையாமை: செல்வாக்கு மிக்கவர்களையும் தொற்றுநோய் விட்டுவைக்காது என்பதை ஞானாம்பாள் கதாபாத்திரம் மூலம் உணர்த்தி, மனித வாழ்வின் நிலையாமையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

முடிவுரை

"வசன காவியங்களால் (உரைநடை) ஜனங்கள் திருந்த வேண்டுமே அல்லாது, செய்யுட்களைப் படித்து திருந்துவது அசாத்தியம்" எனக் கூறி, தமிழில் முதல் உரைநடை நாவலைப் படைத்து வரலாறு படைத்தார் வேதநாயகம் பிள்ளை.

"பிரதாப முதலியார் சரித்திரம்" வெறும் கற்பனையல்ல; அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக மாற்றத்திற்கான ஒரு அறைகூவல்.

இந்த நாவலை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? அல்லது ஞானாம்பாள் போன்ற ஒரு கதாபாத்திரத்தை இன்றைய இலக்கியங்களில் காண்கிறீர்களா? உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

ஊரான்

(நூல்: மாவட்ட கிளை நூலகம், வாலாசாப்பேட்டை)



Saturday, February 7, 2026

ஆக்கிரமிப்பு அகற்றம்: கடவுளுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு ஒரு நீதியா?

பனிமூட்டமும்... பதைபதைக்கும் நகரமும்! 

காலை 5:30 மணி. கைபேசியின் மெல்லிய மணி ஓசை உறக்கத்தைக் கலைத்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால், நரைத்த கிழவனின் தாடியைப் போல வாலாஜா ஹவுஸிங் போர்டு சாலைகளைப் பனிமூட்டம் போர்த்தியிருந்தது. "வழக்கமான நடைப்பயிற்சியைத் தொடங்கலாமா? அல்லது இராணிப்பேட்டை திருமணத்திற்குத் தயாராகலாமா?" என்ற ஊசலாட்டத்தில், அன்றைய நடைப்பயிற்சி அரைமனதோடு தடைப்பட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தபோது 'சிமெண்ட் காடுகளாக' நகரத்தின் கட்டடங்கள் மௌனமாய் வரவேற்றன. இதே தை மாதக் காலையில் ஒரு கிராமத்துச் சாலையாக இருந்திருந்தால், பொங்கல் கொண்டாட்டத்தின் எஞ்சிய கோலங்களும், தைப் பனியின் ஈரமும், தாலாட்டும் மேகங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். அந்த இயற்கை எழிலை இந்தத் தார்ச் சாலைகளில் தேடுவது ஏனோ எட்டாக்கனியாகவே இருக்கிறது.


ஒரு கிலோமீட்டர் "நடை"யும்... சில கசப்பான உண்மைகளும்! 

காலை 7:00 மணிக்கு இராணிப்பேட்டை நோக்கியப் பயணம் தொடங்கியது. வாலாஜாவிலிருந்து முத்துக்கடை வரை பேருந்துப் பயணம். அங்கிருந்து தண்டலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம். "தடைப்பட்ட காலை நடைப்பயிற்சியை இந்த ஒரு கிலோமீட்டர் நடை ஈடு செய்துவிடும்" என்ற சமாதானத்தோடு நடக்கத் தொடங்கினேன்.

போகும் வழியில் சாலையை ஆக்கிரமித்திருந்த சில கோயில்கள் கண்ணில் பட்டன. பேருந்துகளும் லாரிகளும் திரும்ப முடியாத அளவுக்கு அங்கே சாலை குறுகிக் கிடந்தது. முறையான சாலை வசதியின்றி அந்தப் பகுதி வளர்ச்சி காணாது என்பது ஆண்டவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் மனிதனுக்குத் தெரியும்தானே?

ஆனால், கடவுள் மீதான அச்சம் வளர்ச்சிப் பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் அவனைத் தடுக்கிறது. அரசாங்க இடத்தை 'ஆட்டையைப்' போட்டு, போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் இந்தக் கோயில்கள்தான், மக்களின் இன்னல்களைத் தீர்ப்பதாக மக்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் காலத்தின் பெரும் முரண்!

சடங்குகளில் மறைந்திருந்த முற்போக்கு! 

எட்டு மணி அளவில் திருமண மண்டபம் சென்றடைந்தேன். மெல்ல மெல்லக் கூட்டம் கூட, இந்து முறைப்படி மணவிழாச் சடங்குகள் அரங்கேறின. ஆனால், அவற்றின் பின்னால் ஒரு முற்போக்கு ஒளிந்திருந்தது. அது சாதி மற்றும் மதக்கலப்புடன் கூடிய ஒரு திருமண நிகழ்வாக அமைந்திருந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டுத் திரும்பும் வழியில் நண்பரோடு உரையாடியபோது,

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெருகிவரும் சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்துப் பேசினோம்.

"பட்டியல் சாதி இளைஞர்கள்தான் இடைநிலைச் சாதிப் பெண்களைக் காதலிக்கிறார்கள்" என்ற பொதுவான பிம்பத்திற்கு மாறாக, இடைநிலைச் சாதி இளைஞர்களும் பட்டியல் சாதிப் பெண்களை மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால், இத்தகையக் காதலில் பெண் வீட்டார், "இடைநிலைச் சாதிப் பையனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால், எங்கே ஆணவக் கொலை (Honor Killing) நடந்துவிடுமோ?" என்று அஞ்சும் நிலை இன்னும் நீடிக்கிறது.

இருப்பினும், இத்தகையத் திருமணங்கள் வட மாவட்டங்களில் வெற்றிகரமாக நிகழ்வது ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. தென் மாவட்டங்களைவிட இந்த விஷயத்தில் வட மாவட்டங்கள் எவ்வளவோ பரவாயில்லை. நகரங்களோடு ஏற்பட்டுள்ள நேரடித் தொடர்பு மற்றும் முதியோர்களிடையே ஏற்பட்டுள்ள சமூக விழிப்புணர்வு போன்றவை இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக இருப்பதை உணர முடிகிறது.

அதிகாரமும்... ஆக்கிரமிப்பும்!

முத்துக்கடையிலிருந்து வாலாஜா வரை சாலை விரிவாக்கப் பணிகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. சாலையின் இருபுறமும் இருந்த கட்டடங்களின் முகப்புகளும், வணிக நிறுவனங்களும் இரக்கமின்றி இடிக்கப்பட்டுச் சிதைந்து கிடந்தன. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அதே சாலையில் ஆக்கிரமித்திருந்த கோயில்கள் மட்டும் எவ்விதச் சேதமுமின்றி 'அரச மரியாதையோடு' அப்படியே நிற்கின்றன!

கேள்வி இதுதான்: 

சாலையை ஆக்கிரமிப்பது மனிதனா? கடவுளா? சட்டப்படி பார்த்தால் இரண்டுமே குற்றம்தான். ஆனால், மனிதர்களின் ஆக்கிரமிப்பை வேரோடு அகற்றும் அதிகாரம், கடவுளின் ஆக்கிரமிப்பு என்று வரும்போது மட்டும் தயங்கி நிற்பது ஏனோ? 'கடவுள் பழிவாங்குவார்' என்ற அச்சமா? அல்லது 'வாக்கு வங்கி' அரசியல் என்ற தந்திரமா?

குற்றவாளி யார்? 

இன்று இடிக்கப்பட்டுக் கிடக்கும் அந்த இடிபாடுகளைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது. ஒரு காலத்தில் இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமான நிலமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? இடையில் இவை எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன? அப்போதெல்லாம் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஆக்கிரமித்துக் கட்டியவர்களைக் குற்றம் சொல்வதா? அல்லது கட்டுவதற்கு கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்த அதிகாரிகளைக் குற்றம் சொல்வதா? 

எனது பார்வையில் இரு தரப்புமே குற்றவாளிகள்தான். ஆனால், முதன்மைக் குற்றவாளி அரசு அதிகாரிகளே! அவர்கள் அன்று கடமை தவறாமல் இருந்திருந்தால், இன்று இத்தனை பேரின் உழைப்பும், கட்டடங்களும் இடிபாடுகளாகத் தெருவில் விழுந்திருக்காது. மக்கள் ஆக்கிரமிக்கும் போது, அதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளின் துரோகம் என்றென்றும் மன்னிக்க முடியாதது.

- ஊரான்