Sunday, February 8, 2026

பிரதாப முதலியார் சரித்திரம்: ஒரு சமூகச் சீர்திருத்தக் களஞ்சியம்

மாயூரம் முன்சீப் ச.வேதநாயகம் (பிள்ளை) அவர்களால் 1876-இல் எழுதப்பட்ட தமிழ் மொழியின் முதல் நாவலான "பிரதாப முதலியார் சரித்திரம்", ஒரு நகைச்சுவையான கதையோட்டத்திற்குள் வாழ்வியலுக்குத் தேவையான அறக்கருத்துகளை விதைத்த ஒரு சீர்திருத்தக் களஞ்சியம்.


1. மூடநம்பிக்கைகளைச் சாடுதல்

நாவலின் நாயகி ஞானாம்பாள், அறிவின் சிகரமாகச் சித்தரிக்கப்படுகிறாள். அக்காலத்தில் நிலவிய பேய், பிசாசு மீதான பயம் மற்றும் போலிச் சோதிடங்களை ஆசிரியர் கடுமையாகச் சாடுகிறார்.
  • பயமே பேயாக உருவெடுக்கிறது என்பதைத் தர்க்கரீதியாக விளக்கி, அறிவியலுக்குப் புறம்பான சடங்குகளைக் கேலி செய்கிறார்.
  • ஜாதகம் பார்த்துத் திருமணங்களைத் தள்ளிப்போடுவதை விட, ஒருவரின் குணநலன்களே அவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பதை ஞானாம்பாள் கதாபாத்திரம் மூலம் நிறுவுகிறார்.

2. தமிழ் மொழியின் முக்கியத்துவம்

வேதநாயகம் பிள்ளை தமிழுக்குத் தனி இடம் வழங்கியவர். "தாய்மொழி தெரியாதவன் தன் தாயை அறியாதவன்" என்ற ஆழமான கருத்தை முன்வைக்கிறார்.
  • ஆங்கிலக் கல்வி அலுவலுக்கு உதவலாம்; ஆனால் செத்துப்போன மொழிகளான லத்தீன் மற்றும் சமஸ்கிருதத்தைக் கற்பதால் பயன் ஏதுமில்லை எனச் சாடுகிறார்.
  • “தமிழ் படிக்காதவர்களை தமிழ் நாட்டில் வசிக்க யோக்கியர்கள் அல்ல. அவர்கள் எந்த ஊர் பாஷைகளைப் படிக்கிறார்களோ, அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால் சுயபாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக்கிறவர்களை இங்கிலீஷ் தேசத்துக்கு அனுப்பி விடுவோம். பிரான்சு மட்டும் படிப்பவர்களைப் பாரிசுப் (Paris) பட்டணத்துக்கு அனுப்புவோம். லத்தீனுக்குஞ் (Latin) சமஸ்கிருதத்துக்குஞ் சொந்த ஊர் இல்லாதபடியால் அந்தப் பாஷைகளைப் படிக்கிறவர்களை அநாமகரணத் தீவுக்கு அனுப்புவோம்” என்கிறார் நூலாசிரியர். 
  • இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முயற்சிக்கும் இந்தக் காலத்தில்கூட இப்படி ஒரு சிந்தனைப் போக்கு எவருக்கும் எழவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  • தமிழ்நாடு, திராவிட தேசம் போன்ற சொற்களை 150 ஆண்டுகளுக்கு முன்னரே கையாண்டு, தமிழ் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது வியப்பிற்குரியது.

3. நீதித்துறையில் நேர்மை

நீதிமன்றத் துறையில் (முன்சீப்பாக) பணியாற்றிய அனுபவத்தால், சட்டத் துறையில் நடக்கும் முறைகேடுகளை ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார்.
  • வழக்கறிஞர்கள் பொய் சாட்சிகளை உருவாக்கக் கூடாது; நீதியை விலைபேசுவது மகாபாவம் என்கிறார்.
  • ஒரு வழக்கில் திருடனுக்கு எதிராகவும், மற்றொரு வழக்கில் அதே திருடனுக்கு ஆதரவாகவும் வாதாடும் வழக்கறிஞர்களின் அறமற்ற தன்மையைக் கேள்வி கேட்கிறார்.
  • நீதிமன்றங்கள் எளிய மக்களுக்கானதாக இருக்க வேண்டும்; வழக்குகளைத் தாமதப்படுத்துவது அநீதிக்குச் சமம் என 'வாய்தா' கலாசாரத்தைக் கண்டிக்கிறார்.

4. கனகபுரி ஆட்சி: ஒரு நல்லரசின் அடையாளம்

நாவலில் வரும் 'கனகபுரி' நாட்டின் ஆட்சி முறை, தற்கால ஜனநாயகத்திற்கு ஒரு முன்னோடி.
  • மக்கள் நலம்: அரசு என்பது மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கே செலவிட வேண்டும். பெண் கல்வி, ஏழைகளுக்கு உதவி, பாரபட்சமற்ற நீதி ஆகியவையே நல்லரசின் அடையாளம்.
  • நிர்வாகச் சீர்திருத்தம்: ஊதியம் பெற்றுக்கொண்டு வேலை செய்யாத அதிகாரிகளை நீக்க வேண்டும்; அதிகாரிகளின் சம்பளத்தைக் குறைத்து அந்தப் பணத்தை மக்கள் பயன்பாட்டுக்குச் செலவிட வேண்டும் என்ற இவரது 'சோசலிச' சிந்தனை அக்காலத்திலேயே எழுந்தது ஆச்சரியம்.

5. வேளாண்மையில் கூட்டுறவு முறை

விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்பதை நாவல் பல இடங்களில் பறைசாற்றுகிறது.
  • தனிமனித விவசாயத்தை விட, 'கூட்டுறவு' (Co-operative) முறையில் பயிர் செய்வதும் விளைச்சலைப் பகிர்ந்து கொள்வதும் லாபகரமானது என்ற சிந்தனையை விதைத்துள்ளார்.
  • அரசு நீர்ப்பாசன வசதிகளைச் செய்து தர வேண்டும் என்பதையும், விவசாயிகள் கடன்படாமல் வாழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

6. காலரா தொற்றும் கொரோனா பேரிடரும்: ஒரு ஒப்பீடு

ஞானாம்பாள் காலரா நோயால் பாதிக்கப்படும் சூழல், இன்றைய கொரோனா (COVID-19) காலத்தோடு பல விதங்களில் ஒத்துப்போகிறது:

அச்சமும் பீதியும்: அன்று காலராவுக்கு மருந்து இல்லாதபோது மக்கள் அடைந்த அதே கையறு நிலையை நாம் கொரோனா தொடக்கத்தில் கண்டோம்.

தனிமைப்படுத்துதல் (Quarantine): ஞானாம்பாள் நோயுற்றபோது அவளைப் பிரித்து வைக்கும் சூழல், இன்றைய 'Isolation' முறையை அன்றே நினைவுபடுத்துகிறது.

சமூகத் தாக்கம்: தொற்று பரவும்போது மக்கள் ஊரை விட்டு ஓடுவதும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதும் இன்றைய ஊரடங்கு (Lockdown) காலத்துத் துயரங்களை அப்படியே பிரதிபலிக்கிறது.

நிலையாமை: செல்வாக்கு மிக்கவர்களையும் தொற்றுநோய் விட்டுவைக்காது என்பதை ஞானாம்பாள் கதாபாத்திரம் மூலம் உணர்த்தி, மனித வாழ்வின் நிலையாமையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

முடிவுரை

"வசன காவியங்களால் (உரைநடை) ஜனங்கள் திருந்த வேண்டுமே அல்லாது, செய்யுட்களைப் படித்து திருந்துவது அசாத்தியம்" எனக் கூறி, தமிழில் முதல் உரைநடை நாவலைப் படைத்து வரலாறு படைத்தார் வேதநாயகம் பிள்ளை.

"பிரதாப முதலியார் சரித்திரம்" வெறும் கற்பனையல்ல; அது பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக மாற்றத்திற்கான ஒரு அறைகூவல்.

இந்த நாவலை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? அல்லது ஞானாம்பாள் போன்ற ஒரு கதாபாத்திரத்தை இன்றைய இலக்கியங்களில் காண்கிறீர்களா? உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!

ஊரான்


Saturday, February 7, 2026

ஆக்கிரமிப்பு அகற்றம்: கடவுளுக்கு ஒரு நீதி, மனிதனுக்கு ஒரு நீதியா?

பனிமூட்டமும்... பதைபதைக்கும் நகரமும்! 

காலை 5:30 மணி. கைபேசியின் மெல்லிய மணி ஓசை உறக்கத்தைக் கலைத்தது. ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தால், நரைத்த கிழவனின் தாடியைப் போல வாலாஜா ஹவுஸிங் போர்டு சாலைகளைப் பனிமூட்டம் போர்த்தியிருந்தது. "வழக்கமான நடைப்பயிற்சியைத் தொடங்கலாமா? அல்லது இராணிப்பேட்டை திருமணத்திற்குத் தயாராகலாமா?" என்ற ஊசலாட்டத்தில், அன்றைய நடைப்பயிற்சி அரைமனதோடு தடைப்பட்டது.

வீட்டை விட்டு வெளியே வந்தபோது 'சிமெண்ட் காடுகளாக' நகரத்தின் கட்டடங்கள் மௌனமாய் வரவேற்றன. இதே தை மாதக் காலையில் ஒரு கிராமத்துச் சாலையாக இருந்திருந்தால், பொங்கல் கொண்டாட்டத்தின் எஞ்சிய கோலங்களும், தைப் பனியின் ஈரமும், தாலாட்டும் மேகங்களும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும். அந்த இயற்கை எழிலை இந்தத் தார்ச் சாலைகளில் தேடுவது ஏனோ எட்டாக்கனியாகவே இருக்கிறது.


ஒரு கிலோமீட்டர் "நடை"யும்... சில கசப்பான உண்மைகளும்! 

காலை 7:00 மணிக்கு இராணிப்பேட்டை நோக்கியப் பயணம் தொடங்கியது. வாலாஜாவிலிருந்து முத்துக்கடை வரை பேருந்துப் பயணம். அங்கிருந்து தண்டலம் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம். "தடைப்பட்ட காலை நடைப்பயிற்சியை இந்த ஒரு கிலோமீட்டர் நடை ஈடு செய்துவிடும்" என்ற சமாதானத்தோடு நடக்கத் தொடங்கினேன்.

போகும் வழியில் சாலையை ஆக்கிரமித்திருந்த சில கோயில்கள் கண்ணில் பட்டன. பேருந்துகளும் லாரிகளும் திரும்ப முடியாத அளவுக்கு அங்கே சாலை குறுகிக் கிடந்தது. முறையான சாலை வசதியின்றி அந்தப் பகுதி வளர்ச்சி காணாது என்பது ஆண்டவனுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் மனிதனுக்குத் தெரியும்தானே?

ஆனால், கடவுள் மீதான அச்சம் வளர்ச்சிப் பாதையில் அடுத்த அடி எடுத்து வைக்க விடாமல் அவனைத் தடுக்கிறது. அரசாங்க இடத்தை 'ஆட்டையைப்' போட்டு, போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் இந்தக் கோயில்கள்தான், மக்களின் இன்னல்களைத் தீர்ப்பதாக மக்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் காலத்தின் பெரும் முரண்!

சடங்குகளில் மறைந்திருந்த முற்போக்கு! 

எட்டு மணி அளவில் திருமண மண்டபம் சென்றடைந்தேன். மெல்ல மெல்லக் கூட்டம் கூட, இந்து முறைப்படி மணவிழாச் சடங்குகள் அரங்கேறின. ஆனால், அவற்றின் பின்னால் ஒரு முற்போக்கு ஒளிந்திருந்தது. அது சாதி மற்றும் மதக்கலப்புடன் கூடிய ஒரு திருமண நிகழ்வாக அமைந்திருந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டுத் திரும்பும் வழியில் நண்பரோடு உரையாடியபோது,

திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பெருகிவரும் சாதி மறுப்புத் திருமணங்கள் குறித்துப் பேசினோம்.

"பட்டியல் சாதி இளைஞர்கள்தான் இடைநிலைச் சாதிப் பெண்களைக் காதலிக்கிறார்கள்" என்ற பொதுவான பிம்பத்திற்கு மாறாக, இடைநிலைச் சாதி இளைஞர்களும் பட்டியல் சாதிப் பெண்களை மனதாரக் காதலிக்கிறார்கள். ஆனால், இத்தகையக் காதலில் பெண் வீட்டார், "இடைநிலைச் சாதிப் பையனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்தால், எங்கே ஆணவக் கொலை (Honor Killing) நடந்துவிடுமோ?" என்று அஞ்சும் நிலை இன்னும் நீடிக்கிறது.

இருப்பினும், இத்தகையத் திருமணங்கள் வட மாவட்டங்களில் வெற்றிகரமாக நிகழ்வது ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி. தென் மாவட்டங்களைவிட இந்த விஷயத்தில் வட மாவட்டங்கள் எவ்வளவோ பரவாயில்லை. நகரங்களோடு ஏற்பட்டுள்ள நேரடித் தொடர்பு மற்றும் முதியோர்களிடையே ஏற்பட்டுள்ள சமூக விழிப்புணர்வு போன்றவை இம்மாற்றத்திற்கு முக்கியக் காரணங்களாக இருப்பதை உணர முடிகிறது.

அதிகாரமும்... ஆக்கிரமிப்பும்!

முத்துக்கடையிலிருந்து வாலாஜா வரை சாலை விரிவாக்கப் பணிகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. சாலையின் இருபுறமும் இருந்த கட்டடங்களின் முகப்புகளும், வணிக நிறுவனங்களும் இரக்கமின்றி இடிக்கப்பட்டுச் சிதைந்து கிடந்தன. ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், அதே சாலையில் ஆக்கிரமித்திருந்த கோயில்கள் மட்டும் எவ்விதச் சேதமுமின்றி 'அரச மரியாதையோடு' அப்படியே நிற்கின்றன!

கேள்வி இதுதான்: 

சாலையை ஆக்கிரமிப்பது மனிதனா? கடவுளா? சட்டப்படி பார்த்தால் இரண்டுமே குற்றம்தான். ஆனால், மனிதர்களின் ஆக்கிரமிப்பை வேரோடு அகற்றும் அதிகாரம், கடவுளின் ஆக்கிரமிப்பு என்று வரும்போது மட்டும் தயங்கி நிற்பது ஏனோ? 'கடவுள் பழிவாங்குவார்' என்ற அச்சமா? அல்லது 'வாக்கு வங்கி' அரசியல் என்ற தந்திரமா?

குற்றவாளி யார்? 

இன்று இடிக்கப்பட்டுக் கிடக்கும் அந்த இடிபாடுகளைப் பார்க்கும்போது ஒன்று மட்டும் தெளிவாகிறது. ஒரு காலத்தில் இவை அனைத்தும் அரசுக்குச் சொந்தமான நிலமாகத்தானே இருந்திருக்க வேண்டும்? இடையில் இவை எப்படி ஆக்கிரமிக்கப்பட்டன? அப்போதெல்லாம் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஆக்கிரமித்துக் கட்டியவர்களைக் குற்றம் சொல்வதா? அல்லது கட்டுவதற்கு கையூட்டு பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்த அதிகாரிகளைக் குற்றம் சொல்வதா? 

எனது பார்வையில் இரு தரப்புமே குற்றவாளிகள்தான். ஆனால், முதன்மைக் குற்றவாளி அரசு அதிகாரிகளே! அவர்கள் அன்று கடமை தவறாமல் இருந்திருந்தால், இன்று இத்தனை பேரின் உழைப்பும், கட்டடங்களும் இடிபாடுகளாகத் தெருவில் விழுந்திருக்காது. மக்கள் ஆக்கிரமிக்கும் போது, அதை வேடிக்கை பார்க்கும் அதிகாரிகளின் துரோகம் என்றென்றும் மன்னிக்க முடியாதது.

- ஊரான்



Wednesday, February 4, 2026

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா?

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாரா, அல்லது அந்த அதிகாரம் பிற்காலச் சேர்க்கையா என்ற விவாதம் நெடுங்காலமாக நீடித்து வருகிறது.

‘அகர முதல’ மற்றும் ‘தெய்வத்தான் ஆகாதெனினும்’ என்ற இரண்டு குறள்களை ஒப்பிட்டுப் பார்த்தால், வள்ளுவரின் மதங்களைக் கடந்த மெய்யியல் அணுகுமுறை தெளிவாக வெளிப்படுகிறது.


கடவுள் வாழ்த்து: சர்ச்சையும் பின்னணியும்

திருக்குறளின் முதல் அதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ திருவள்ளுவரால் பாடப்பட்டதா, அல்லது பின்னாளில் சேர்க்கப்பட்டதா என்ற கேள்வி இலக்கியவாதிகளிடையே தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒன்றாகும்.

இந்த விவாதத்தை உணர்ச்சிப் பூர்வமாக அல்லாமல், வள்ளுவரின் சொற்களையே வைத்து ஆய்வு செய்தால் ஒரு சுவாரசியமான பார்வை கிடைக்கிறது.

அதற்கான முக்கியமான திறவுகோல், குறள் 1 மற்றும் குறள் 619.

‘அகர முதல எழுத்தெல்லாம்’ – உலகின் தொடக்கத்தைப் பற்றிய பார்வை

“அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.”

மேலோட்டமாகப் பார்த்தால், இங்கு ‘ஆதி பகவன்’ என்பது ஒரு கடவுளைக் குறிப்பதாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக ஆராய்ந்தால், இந்தக் குறள் மத வழிபாட்டை விட தத்துவ விளக்கத்திற்கே நெருக்கமாக நிற்கிறது.

‘அகர முதல’ என்பது ஒலியியல் சார்ந்த ஒரு இயற்கை விதி. எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் எப்படியோ, அதுபோல உலகிற்கும் ஒரு தொடக்கம், ஒரு மூல இயக்கம் உண்டு என்ற கருத்தை வள்ளுவர் முன்வைக்கிறார்.

இங்கு வரும் ‘பகவன்’ என்ற சொல் சங்க காலத்தில் ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளைக் குறிக்கும் சொல்லாக மட்டுமில்லை.
அறிவில் சிறந்தவர், மூல ஆற்றல், உலகின் ஆதார சக்தி போன்ற பொதுவான அர்த்தங்களிலேயே அது பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், இது உருவ வழிபாட்டைச் சுட்டுவது அல்ல; ‘பிரபஞ்சத்தின் தொடக்கப் புள்ளி’ என்ற தத்துவக் கருத்தையே உணர்த்துகிறது.

‘தெய்வத்தான் ஆகாதெனினும்’ – உழைப்பை உயர்த்தும் வள்ளுவம்

“தெய்வத்தான் ஆகாதெனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.”

இந்தக் குறள், முதல் குறளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்னும் தெளிவாக வள்ளுவரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இங்கு ‘தெய்வம்’ என்பது நாம் இன்று சொல்லும் அதிசய சக்தி அல்லது தனிப்பட்ட கடவுள் அல்ல.

அது ‘ஊழ்’, ‘விதி’, அல்லது மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட இயற்கைச் சூழல் எனப் பொருள் கொள்ளக் கூடியது.

அத்தகைய தெய்வம் கூட உதவவில்லை என்றாலும், மனிதனின் முயற்சி—அதாவது உடல் உழைப்பு—அவனுக்கு உரிய பலனைத் தரும் என்று வள்ளுவர் உறுதியாகச் சொல்கிறார்.
இதன் மூலம், கடவுளை விட மனித முயற்சியே உயர்ந்தது என்ற ஒரு தெளிவான பகுத்தறிவு நிலைப்பாட்டை அவர் முன்வைக்கிறார்.

இரண்டு குறள்களின் ஒப்பீடு: கடவுள் வாழ்த்தா, இயற்கை வாழ்த்தா?

இந்த இரண்டு குறள்களையும் இணைத்துப் பார்த்தால், வள்ளுவரின் பார்வை தெளிவாகிறது.

முதலாவது குறளில் அவர் உலகிற்கு ஒரு தொடக்கம் உண்டு என்கிறார்.

ஆனால் அந்தத் தொடக்கம், ஒரு மதக் கடவுளாக இல்லை; ஒரு இயற்கை விதியாகவும், இயக்க சக்தியாகவும் விளக்கப்படுகிறது.

இரண்டாவது குறளில், அந்தத் தொடக்க சக்தியைவிட மனித முயற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்.

“கடவுள் நினைத்தால் எல்லாம் நடக்கும்” என்ற பார்வை வள்ளுவத்தில் எங்கும் இல்லை.
மாறாக, “கடவுளாலேயே முடியாததை மனித உழைப்பு சாதிக்கும்” என்ற துணிச்சலான கருத்தே முன்னிலையில் நிற்கிறது.

வள்ளுவரின் மெய்யியல்: மதங்களைத் தாண்டிய நடை

திருவள்ளுவர் ஒரு படைப்பாற்றலை, ஒரு மூல இயக்கத்தை உணர்ந்திருந்தார் என்பதை ‘அகர முதல’ குறள் காட்டுகிறது.

ஆனால் அந்த சக்தியை அவர் எந்த மதக் கட்டமைப்புக்குள்ளும் அடைக்கவில்லை.

அதனால்தான், திருக்குறளில் சிவன், விஷ்ணு, முருகன் போன்ற எந்த மதக் கடவுளின் பெயரும் நேரடியாக வருவதில்லை.
வள்ளுவரின் கடவுள், வழிபாட்டுக்குரிய உருவம் அல்ல; வாழ்வை ஒழுங்குபடுத்தும் இயற்கை நீதி.

முடிவாக,

திருவள்ளுவர் பாடியது ஒரு மதக் கடவுள் வாழ்த்து அல்ல.
அது ஒரு இயற்கை வாழ்த்து, அல்லது அறிவின் வாழ்த்து.

அவர் குறிப்பிட்ட ‘தெய்வம்’ என்பது நாம் இன்று சொல்லும் ‘விதி’ அல்லது ‘சூழல்’.
அந்த விதியையும் மதியால்—முயற்சியால்—வெல்லலாம் என்பதே வள்ளுவத்தின் மையச் செய்தி.

அதனால்தான் திருக்குறள், காலம் கடந்தும் மதங்களைத் தாண்டியும் மனித சமுதாயத்தின் பொதுநூலாக வாழ்ந்து வருகிறது.

ஊரான் 

சமூகச் சீரழிவுகளும் அறநெறி போதனைகளும்!

சமூகத்தில் எப்போது அறநெறிகள் (நீதி போதனைகள்) உரக்கப் பேசப்படுகின்றன? அந்தச் சமூகம் தனது விழுமியங்களிலிருந்து மிக மோசமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் போதுதான்!

மருத்துவமனையில் மருந்துகளைப் பற்றிய விவாதம் அதிகமாக இருக்கிறது என்றால், அங்கே நோயாளிகள் அதிகம் என்று பொருள். அதேபோலத்தான், சமூகத்தில் 'அறம்' ஒரு விவாதப் பொருளாக மாறும் போது, அங்கே 'சீரழிவு' ஒரு நோயாகப் பரவியிருக்கிறது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.


1. நீதி நூல்கள் காலம் 

ஒழுக்கக் கட்டுப்பாடும் குழப்பமும் 
சங்க காலத்திற்குப் பிந்தைய 'சங்கம் மருவிய காலம்' தமிழக வரலாற்றில் பெரும் கொந்தளிப்பான காலம்.
  • சீரழிவு: தொடர்ச்சியான போர்கள் மற்றும் சமூக நிலையின்மையால் மக்கள் வாழ்வாதாரம் சிதைந்தது.
  • எதிர்வினை: இந்தச் சூழலில்தான் 'பதினெண் கீழ்க்கணக்கு' நூல்கள் தோன்றின. "பொய் சொல்லாதே", "கள்ளுண்ணாதே" போன்ற கட்டுப்பாடுகள் தீவிரமாகப் போதிக்கப்பட்டன. சமூக ஒழுங்கு சீர்குலைந்திருந்ததால், அதை நிலைநிறுத்த 'அறம்' (நீதி) ஒரு சட்டமாகப் பயன்படுத்தப்பட்டது.

2. பக்தி இலக்கிய காலம்

மதப் போர்களும் அன்னதானமும்

கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் மற்றொரு முரண்பாட்டைக் காட்டியது.
  • சீரழிவு: மதங்களுக்கு இடையே கடும் மோதல்களும், அதிகாரப் போட்டியும் நிலவின. மறுபுறம் வறுமை தாண்டவமாடியது.
  • எதிர்வினை: மதப் பூசல்களை மறைக்க "அன்பே சிவம்" முழக்கமும், வறுமையைத் தணிக்கக் கோயில் வழி 'அன்னதானம்' ஒரு புனிதச் சடங்காகவும் மாற்றப்பட்டது.

3. அறம்: ஒப்பனையா? மருந்தா?
 
அறம் என்பது சமூகத்தின் இயல்பான ஓட்டமாக இருக்க வேண்டும். ஆனால், வரலாறு காட்டும் அறங்கள் பெரும்பாலும் இரண்டு நிலைகளில் செயல்படுகின்றன:
  • ஒப்பனை (Cosmetics): அழுகிப்போன சமூகக் கட்டமைப்பை மறைக்கப் பயன்படும் மேலோட்டமான போதனைகள். வறுமையை ஒழிக்காமல் 'தானம் செய்' என்று சொல்வது, காயத்தின் மேல் போடும் 'மேக்கப்' போன்றது. இது சீரழிவை மறைக்குமே தவிர குணப்படுத்தாது.
  • மருந்து (Medicine): சீரழிவின் மூலக்காரணத்தை (Root Cause) ஆராய்ந்து களைவது. ஒருவன் பசியால் திருடுகிறான் என்றால், அவனுக்குத் தர்மம் செய்வது ஒப்பனை; அவனது பசிக்கான பொருளாதாரக் காரணத்தை நீக்குவதுதான் உண்மையான 'மருந்து'.

4. இன்றைய 'அறவிலை பகர்வோர்' 

மணிமேகலை காப்பியத்தில் சீத்தலைச் சாத்தனார் "அறவிலை பகர்வோர்" (அறத்தை விலைக்கு விற்பவர்கள்) என்று ஒரு கூட்டத்தைக் குறிப்பிடுவார். இன்றும் விளம்பரத்திற்காகவும், தற்பெருமைக்காகவும் அறத்தைச் செய்பவர்கள் பெருகிவிட்டனர்.

இயக்கவியல் உண்மை என்ன?

அறம் என்பது போதிக்கப்பட வேண்டிய பாடமல்ல; அது வாழப்பட வேண்டிய வாழ்க்கை. ஒரு ஆரோக்கியமான சமூகத்தில் அறம் என்பது மூச்சு விடுவதைப் போன்ற இயல்பான செயலாக இருக்கும்.

இன்றைய தேவை, அறத்தைப் போதனையாக மாற்றும் சமூகச் சீரழிவுகளைக் கண்டறிந்து, போதனைகளே அவசியமில்லாத ஒரு நீதிமிக்கச் சமூகத்தை உருவாக்குவதாகும்!

ஊரான்

ChatGPT பார்வையில், ஊரான்: எழுத்தும் சிந்தனையும்!

2010க்குப் பிறகு தமிழில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் வலைப்பூக்களில் ஊரான் (hooraan.blogspot.com) ஒரு தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. தனிப்பட்ட அனுபவக் குறிப்புகளாகத் தொடங்கிய இந்த வலைப்பூ, காலப்போக்கில் சமூக விமர்சனமும் தத்துவ விசாரணையும் கலந்த எழுத்துத் தளமாக வளர்ந்துள்ளது.


ஆரம்பக் காலப் பதிவுகளில், கிராம வாழ்க்கை, வேலைச் சூழல், சமூகச் சடங்குகள் போன்றவை நேரடியான அனுபவ மொழியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் பெரிய வாதங்களை முன்வைப்பதில்லை; ஆனால் “இது ஏன் இப்படியே இருக்கிறது?” என்ற கேள்வியை இயல்பாக எழுப்புகின்றன. இந்தக் கேள்வியெழுப்பும் மனநிலையே, பின்னாளில் உருவாகும் விமர்சன எழுத்துகளின் அடிப்படையாக அமைகிறது.

2014க்குப் பிறகு வெளிவரும் பதிவுகளில், எழுத்தாளர் நேரடியாக சமூக மற்றும் அரசியல் விவாதங்களில் ஈடுபடத் தொடங்குகிறார். மதம், நம்பிக்கை, சடங்கு, சமூக ஊடகங்களில் உருவாக்கப்படும் பொதுப் பிம்பங்கள் போன்றவை விமர்சனப் பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றன. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளை மாற்றுக் கோணத்தில் வாசிக்க வைப்பதே இக்கட்டுரைகளின் மையமாக இருக்கிறது. இந்நிலையில், ஊரான் வலைப்பூ ஒரு தனிப்பட்ட நாட்குறிப்பிலிருந்து சமூக விவாத மேடையாக மாறுகிறது.

சமீப ஆண்டுகளில், குறிப்பாக 2020க்குப் பிறகு, வலைப்பூவில் தத்துவ ரீதியான ஆழம் தெளிவாகப் படிகிறது. திருக்குறள் தொடர்பான சில கட்டுரைகள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளன. திருக்குறளை பக்தி நூலாக அல்லாமல், அறிவு மற்றும் அறம் பற்றிய சிந்தனை நூலாக வாசிக்கும் முயற்சி இங்கு காணப்படுகிறது. “மெய்யுணர்வு” என்பது கடவுளை உணர்வதா, அல்லது புலன்களைத் தாண்டிய அறிவு நிலையா என்ற கேள்வி மூலம், பாரம்பரிய உரைகள் பகுத்தறிவு பார்வையில் மீள்வாசிக்கப்படுகின்றன.

“அன்னதானம் ஒரு அறச்செயலா?” என்ற கட்டுரை, சமூகத்தில் பெரிதும் போற்றப்படும் ஒரு நடைமுறையை நேரடியாக கேள்விக்குள்ளாக்குகிறது. அவசர காலங்களில் உணவளித்தல் மனிதநேயக் கடமை என்றாலும், நிரந்தர வறுமையை மறைக்கும் அமைப்புசார் அன்னதானம் உண்மையான அறமா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அறம் என்பது தனிநபர் செயல் அல்ல; சமூக அமைப்புகளை மாற்றும் முயற்சி என்ற பார்வை இக்கட்டுரையில் வெளிப்படுகிறது.

அதேபோல், பாவ–புண்ணியம், கர்மா, மறுமை பயன் போன்ற கருத்துகள் பற்றிய பதிவுகள், அவை நல்லெண்ணத்தை வளர்க்கும் மொழியாக மட்டுமா, அல்லது சமூக ஒழுங்கைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட கருவிகளா என்ற கோணத்தில் ஆராயப்படுகின்றன. இங்கு நம்பிக்கைகள் முழுமையாக மறுக்கப்படுவதில்லை; அதே நேரத்தில் அவற்றின் வரலாற்றுப் பின்னணி மற்றும் அரசியல் பயன்பாடும் வெளிச்சம் போடப்படுகிறது.

ஊரான் வலைப்பூவின் முக்கிய தனிச்சிறப்பு, கடுமையான மறுப்போ அல்லது முழுமையான சமரசமோ இல்லாமல், சிந்திக்க வைக்கும் கேள்விகளை முன்வைப்பதுதான். பாரம்பரிய கருத்துகளை விமர்சிக்கும் போதும், அவற்றை உருவாக்கிய சமூகச் சூழலையும் கணக்கில் எடுக்க முயற்சி செய்யப்படுகிறது. இதனால், இந்த வலைப்பூ ஒரு கருத்துத் திணிப்புத் தளமாக இல்லாமல், வாசகனை சிந்தனைப் பயணத்திற்கு அழைக்கும் வெளியாக மாறுகிறது.

ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தாமல், காலத்தோடு சேர்ந்து கேள்விகளும் பார்வைகளும் மாறிச் செல்வதையே ஊரான் வலைப்பூ பதிவு செய்கிறது. அந்த வகையில், இது தனிநபரின் எழுத்துப் பயணம் மட்டுமல்ல; கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு சமூக சிந்தனை எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதற்கான எழுத்துச் சாட்சியமாகவும் வாசிக்க முடியும்.

நன்றி ChatGPT

ஊரான்