Friday, 1 May 2026

நமது நம்பிக்கையின் வேர் எது?

நமக்கு ஏன் ஒருவரைப் பிடிக்கிறது?

சிறுவயதில் எனக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு பிடிக்கும், எம்.ஜி.ஆரைப் பிடிக்காது. ஏன் என்று அப்போது தெரியவில்லை, இப்போதும் தர்க்கரீதியாகச் சொல்லத் தெரியவில்லை.

ஒருவேளை, அந்தக் காலத்தில் நான் வாழ்ந்த சூழலில் சந்தித்த சிக்கல்களுக்குச் சிவாஜி கணேசனின் நடிப்பு ஒருவித ஆறுதலைக் கொடுத்திருக்கலாம்.

விளையாட்டுத் துறையில் அன்று ஃபெடரரை எனக்குப் பிடிக்கும், ஆனால் அவரைத் தோற்கடிக்கும் நடாலையோ, ஜோகோவிச்சையோ பிடிக்காது. இன்று அல்கராஸைப் பிடிக்கும், சின்னரைப் பிடிக்காது. காரணம் அவர்களுடைய உடல் மொழி, நடத்தையாக இருக்கலாம். 


இப்படி நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ரசிக்கிறோம், இன்னொருவரை ஒதுக்குகிறோம்.  அதற்கான காரணம் நடிப்பாகவோ அல்லது ஆட்டத்திறனாகவோ மட்டும் இருப்பதில்லை; அந்த மனிதர் வெளிப்படுத்தும் ஏதோ ஒரு பாணி, நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறது. இது தர்க்கத்தைத் தாண்டிய ஒருவித ஈர்ப்பு.


கடவுளை நம்புவதற்கான அடிப்படை


சித்ரா பௌர்ணமியில் திருவண்ணாமலையில் சிவனைத் தேடி ஓடும் லட்சக்கணக்கான மக்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்கும் கூட்டத்தில் முண்டியடிக்கும் ஒருவராக இருக்கலாம். எல்லா கடவுள்களும் நல்லவர்கள் என்று சொல்லிக்கொண்டே, ஒரு குறிப்பிட்ட கடவுளை மட்டும் நாம் ஏன் தேடி ஓடுகிறோம்? அந்த நம்பிக்கைக்கு ஏதேனும் அறிவியல் ஆதாரம் உண்டா? இல்லை. ஆனால், அந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கும் மன அமைதி, ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. நம் வாழ்க்கையில் வரும் இழப்புகளின் போது, "கடவுள் என்னைக் காப்பார்" என்று நாம் நம்புகிறோம். இது ஒரு தனிப்பட்ட நம்பிக்கை.

நாமே உணராத உளவியல்

சினிமா, விளையாட்டு, கடவுள் நம்பிக்கை, அரசியல் - இவை நான்கும் வெவ்வேறானவை போலத் தோன்றினாலும், மனித உளவியலில் இவை அனைத்தும் ஒரே புள்ளியில்தான் இணைகின்றன. இவை எல்லாமே நம் வாழ்வின் ஆசை, பயம், தனிமை மற்றும் பாதுகாப்பின்மையை நிரப்ப நாம் தேடும் ஒருவகை 'ஆறுதல்' அல்லது 'நம்பிக்கை' தரும் வெவ்வேறு வடிவங்கள்.

ஒரு திரைப்படத்தில் நாம் ஹீரோவை ரசிக்கிறோம், விளையாட்டு வீரரின் ஸ்டைலை ரசிக்கிறோம், கடவுளிடம் நம் துன்பங்களை ஒப்படைக்கிறோம், அரசியல் தலைவரிடம் நம் சமூக எதிர்காலத்தை ஒப்படைக்கிறோம். இந்த நான்கு இடங்களிலும் நாம் தர்க்கத்தைத் தாண்டி, உணர்ச்சிகரமான ஒரு பிம்பத்திடம் (Image) சரணடைகிறோம். நமக்குத் தேவைப்படுவது அந்தத் தலைவரோ, கடவுளோ அல்ல; மாறாக, நமது விருப்பத்தை, ஆசையை, நம் பிரச்சினைகளை அவர் தீர்த்துவிடுவார் என்கிற அந்த நம்பிக்கை தரும் மனநிம்மதிதான்.

ஒரு நடிகரை ஏன் நம்புகிறார்கள்?

இன்று அதே மக்கள், ஒரு தலைவரை அல்லது நடிகரை நம்பும்போது மட்டும், அதை முட்டாள்தனம் என்று வசைபாடுகிறார்கள். கடவுள் நம் சிக்கல்களைத் தீர்ப்பார் என்று நம்புவது 'பக்தி' என்றால், தங்களுக்குப் பிடித்த தலைவர் நம் சிக்கல்களைத் தீர்ப்பார் என்று நம்புவது ஏன் 'அறிவின்மை' ஆகிறது? உண்மையில், கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையும், நடிகர் மற்றும் தலைவர்கள் மீது வைக்கும் நம்பிக்கையும் ஒரே ஊற்றிலிருந்துதான் வருகின்றன.
இரண்டுக்கும் அடிப்படை உளவியல் ஒன்று தான்; ஆனால் விளைவுகள் வேறுபடும்அடிப்படையற்ற இந்த நம்பிக்கையை, கடவுள் விஷயத்தில் ஏற்பவர்கள், அரசியல் விஷயத்தில் மட்டும் ஏன் நிராகரிக்கிறார்கள்?

அன்று வெண் திரைகளில் மட்டுமே நாயகர்களைக் காண முடிந்தது. திரைகளைக் காண வாய்ப்பு இல்லாத அன்றைய சிறுவர்களுக்கு நாயகர்களைத் தெரியாது. ஆனால் இன்று, வெண் திரைகள் மென்திரைகளாகக் கைக்குள்ளேயே அடங்கி விடுவதால், அன்று எந்த உளவியலால் நாம் நாயகர்களை நேசித்தோமா, அதே உளவியல்தான் இன்று சிறுவர்களையும் ஈர்க்க வைக்கிறது.


வசைபாடுவதால் மாறிவிடுமா?

ஒரு நடிகரின் ரசிகர்களையோ, அல்லது பிற தீவிர ஆதரவாளர்களையோ ‘தற்குறிகள்’ என்று திட்டுவதால் அவர்களின் நம்பிக்கை மாறிவிடாது. அதனால் அவர்களின் நம்பிக்கை மேலும் வலுவாகுமே தவிர, குறையாது. அவர்கள் மாற வேண்டும் என்று விரும்பினால், நாம் செய்ய வேண்டியது என்ன?


ஏளனம் செய்யாதீர்கள்:  அவர்களின் நம்பிக்கையை அவமதிக்காதீர்கள். அது அவர்களின் 'கடவுள்' மீது வைக்கும் நம்பிக்கைக்குச் சமமானது.


கேள்வி கேளுங்கள்: அவர்களுக்குப் புரியும்படி, "புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவார் உங்கள் தலைவர் என்று நீ நம்புகிறாய், சரி. ஆனால், உங்கள் தலைவர் இதை எப்படி நிறைவேற்றுவார்?” என்று மென்மையாகக் கேளுங்கள்.

சிந்திக்கத் தூண்டுங்கள்: நியாயமான கேள்விகளால் அவர்கள் தர்க்கரீதியாகச் சிந்திக்கத் தொடங்கும் போதுதான், அவர்களின் நம்பிக்கை, பிம்பத்திலிருந்து எதார்த்தத்தை நோக்கி நகரும்.


முடிவு

“கடவுளை நம்புவது முட்டாள்தனம்” என்று திட்டுவதை விட, கடவுள் அவர்களது விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவார் என்று கேட்பதே அவர்களைச் சிந்திக்கத் தூண்டும்.

அதேபோல அரசியலில், நாம் யாரை நம்புகிறோம் என்பது முக்கியமல்ல, எதனால் நம்புகிறோம் என்பதுதான் முக்கியம். கடவுளை நம்புவதற்கும், தலைவரை நம்புவதற்கும் அடிப்படை ஒன்றுதான். எனவே, பிறரின் நம்பிக்கையை ஏளனம் செய்வதை விடுத்து, அந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் 'ஏன்?', 'எப்படி?' என்ற கேள்விகளை அவர்களுக்குள் விதைப்போம்.

அவர்கள் தானாகவே சிந்திக்கத் தொடங்கும் போது, பிம்பங்கள் மெல்ல உடைந்து, உண்மையான தெளிவு பிறக்கும். இதற்கு வசைபாடுதல் குறுக்கு வழி; உரையாடலே உண்மைக்கான வழி.

ஊரான்

குறிப்பு: இந்த உளவியல் ரீதியான பிணைப்புகளுக்குச் சமூக அறிவியலில் வலுவான ஆதாரங்கள் உள்ளன. மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையிலிருந்து விடுபட ஒரு 'மீட்பரை' நாடுவதை 'பய மேலாண்மைக் கோட்பாடு' (Terror Management Theory) விளக்குகிறது. 

நாம் நேரில் சந்திக்காத தலைவர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதாக உணர்வதை 'பாரா-சமூக உறவுகள்' (Parasocial Relationships) என்றும், ஒரு குறிப்பிட்ட குழுவின் அடையாளத்தோடு நம்மை இணைத்துக்கொண்டு நம் சுய மதிப்பைக் கூட்டிக்கொள்வதை 'சமூக அடையாளக் கோட்பாடு' (Social Identity Theory) என்றும் உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். 

சுருக்கமாக, வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளத் தயங்கும் நிலையில், தர்க்கத்தைத் தாண்டி ஒரு பிம்பத்திடம் நம் பொறுப்புகளைச் 'சரணடைவது' (Delegation of Agency) என்பது, மனிதன் தன்னைத் தானே பாதுகாத்துக்கொள்ளத் தேர்ந்தெடுத்த ஒரு பரிணாம உளவியல் உத்தியாகும்.

Wednesday, 29 April 2026

வறட்சியின் பிடியில் பீகார்: தாகம் தீர்க்கும் 'பாபா'க்களும், 'மேம்'களும்!

பீகார் மாநிலத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு வினோதமான "வறட்சி" நிலவுகிறது. இது இயற்கை கொடுத்தது அல்ல; அரசாங்கம் சட்டத்தின் மூலம் திணித்த மதுவிலக்கு வறட்சி.
ஆனால், தாகத்தில் தவிக்கும் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்கிறதோ இல்லையோ, மது மட்டும் தாராளமாகக் கிடைக்கிறது.

'டைம்ஸ் ஆப் இன்டியா' (TOI) இதழின் சமீபத்திய கட்டுரை, காகிதத்தில் இருக்கும் மதுவிலக்கு சட்டம், களத்தில் எப்படி ஒரு நிழல் உலகப் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது என்பதை நையாண்டியுடன் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது

நிழல் உலகப் பொருளாதாரத்தின் விஸ்வரூபம்

அரசாங்கம் மதுக்கடைகளை மூடியபோது, அதன் மூலம் கிடைத்த வருவாய் மக்களின் சேமிப்பாக மாறும் என்று கணக்குப் போட்டது. ஆனால் எதார்த்தமோ வேறாக இருக்கிறது. மதுவிலக்குக்கு முன்பு ஆண்டுக்கு சுமார் ₹3,142 கோடி வருவாய் ஈட்டிய அரசுக்கு, கடந்த பத்தாண்டுகளில் சுமார் ₹30,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தொகை மக்கள் நலத்திட்டங்களுக்குப் போயிருக்க வேண்டியது.

அரசு இழந்த இந்தத் தொகையை விடப் பல மடங்கு அதிகமாக, அதாவது ஆண்டுக்கு சுமார் ₹40,000 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்டமான கள்ளச்சந்தை இன்று பீகாரில் கொடிகட்டிப் பறக்கிறது. சுமார் 5,480 உரிமம் பெற்ற கடைகள் மூடப்பட்ட அந்த வெற்றிடத்தை, இன்று பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத ஏஜெண்டுகள் ஆக்கிரமித்துள்ளனர். 

இது மதுவிலக்கு அல்ல; மது விற்பனையை முறைசாரா சந்தைக்கு மடைமாற்றிய ஒரு தோல்வித் திட்டம்.

பீகாரின் மது விநியோக 'நெட்வொர்க்'குகள்
ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட விநியோக வலையமைப்பைப் போல செயல்படுகின்றன.

பாட்னா பல்கலைக்கழக ஆய்வின்படி, 58% மக்களுக்குத் தேவையான மது இப்போதும் கிடைக்கிறது. ஆனால், அது சந்தை விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.

அரசு இழந்தது வருவாய் மட்டும் அல்ல; கட்டுப்பாடும்தான்.

'பாபா'க்களும் 'மேம்'களும்: ஒரு போலி முகம்

ஊடகங்களில் வெளியாகிய தகவல்களின்படி…

சன்னியாசி 'பாபா'க்கள்: ஆன்மீகத்தின் பெயரால் இயங்கும் இந்த ரகசிய அமைப்புகள், உணவு விநியோக செயலிகளை விட வேகமாக வெறும் 10 நிமிடங்களில் மதுவை 'டெலிவரி' செய்கின்றன.

'டியூஷன் மேம்'கள் & 'நர்ஸ்'கள்: சமூகத்தில் மரியாதைக்குரிய தொழிலைச் செய்பவர்கள் போல வேடமிட்டு, காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு வீட்டு வாசலுக்கே மதுவைக் கொண்டு சேர்க்கும் அவலம் அரங்கேறுகிறது.

குறியீட்டு மொழிகள்: மதுவை "தூய பால்" என்றும் "புரோட்டீன் ஷேக்" என்றும் அழைத்துக்கொண்டு, பால் கேன்களிலும், பெட்ரோல் டேங்க்குகளிலும் கடத்துவது ஒரு அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தர்க்கரீதியான கேள்விகளும் அதிர்ச்சிகளும்

ஏழைகளின் துயரம்: அதிக விலை கொடுத்து மது வாங்க முடியாத ஏழைகள் கள்ளச்சாராயத்தை நாடி உயிரை விடுகிறார்கள். இந்தச் சட்டம் பெரிய திமிங்கிலங்களை விட்டுவிட்டு, சாமானியர்களையே அதிகம் பாதிக்கிறது.

போதை மாற்றம்: மது கிடைக்காத இளைஞர்கள் கஞ்சா மற்றும் உயிருக்கு ஆபத்தான போதை மருந்துகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். இது சமூகத்தின் எதிர்காலத்தையே சிதைக்கும் செயல் அல்லவா?
சட்டம் காகிதத்தில் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆனால் நிலத்தில் அது தோல்வியடைந்துவிட்டது.

மதுவிலக்கின் நோக்கம் சமூக நலனே ஆனாலும் அதன் நோக்கத்திற்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளி குறித்து கேள்விகள் எழுவது இயல்புதான். 

இது மதுவிலக்கு வறட்சி அல்ல;
சட்டத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை வறட்சி.

முடிவுரை

முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி N. V. Ramana குறிப்பிட்டது போல, இது “தொலைநோக்குப் பார்வை அற்ற சட்டமிடலின்” ஒரு எடுத்துக்காட்டு.

அதிகாரம் என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் கருவியாக இருக்க வேண்டும்; ஆனால், பீகாரில் அது கள்ளச்சந்தையை வளர்க்கும் ஒரு மறைமுக அமைப்பாக மாறியிருக்கிறது.

பீகார் நமக்கு சொல்லும் பாடம் தெளிவானது:

சட்டங்கள் கொண்டு வருவது எளிது; அதை நடைமுறைப்படுத்தும் ஆட்சித் திறன்தான் உண்மையான சவால்.

மாற்றத்தை விரும்பும் மக்கள் மனநிலையைப் புரிந்துகொள்ளாத எந்தச் சட்டமும் — தோல்வியிலேயே முடியும்.

சட்டங்கள் பயத்தை உருவாக்கலாம்;
ஆனால் சமூகத்தை மாற்றுவது
நம்பிக்கையும் நடைமுறையும்தான். 

தமிழ்நாடு உள்ளிட்ட நம் அனைவருக்குமான பாடம் இது.

ஊரான்

தகவல் ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா (ஏப்ரல் 30, 2026).

கருத்துக்கணிப்புகளும் மக்களின் மனநிலையும்: எதார்த்தத்தை உணருமா முற்போக்கு முகாம்?

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அரசியல் தரப்புகள் மட்டுமல்ல, பொதுமக்களின் எதிர்பார்ப்பும் மே 4-ஐ நோக்கி திரும்பியுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தரும் தரவுகள் சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்க, "மயிர் பிளக்கும்" தொலைக்காட்சி விவாதங்களுக்கு அப்பால் மக்கள் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கும் உள்ளார்ந்த மனக்கசப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் முற்போக்கு சக்திகள் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தருணம் இது.


தனிநபர் விமர்சனங்கள் தீர்வாகுமா?

இன்று அரசியல் களத்தில் எதிர்த்தரப்பினரை வசை பாடுவதன் மூலமாகவோ அல்லது தரம் தாழ்த்திப் பேசுவதன் மூலமாகவோ மாற்றுச் சக்திகளை வீழ்த்தி விட முடியாது. அவ்வாறு பேசுவது வெறும் மேடைப் பேச்சாக மட்டுமே இருக்குமே தவிர, தேர்தல் களத்தில் அது வாக்குகளாக மாறுவது அரிது.

எதிர்தரப்பை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டுமானால், மக்களின் எண்ணக் குமுரல்களுக்குச் சரியான "வடிகால்கள்" என்ன என்பதைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.

நிர்வாகச் சீர்கேடும் மக்களின் அதிருப்தியும்

உள்ளாட்சி முதல் மாநில ஆட்சி வரை அதிகாரத்தின் முழுப் பிடியும் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருந்தும், மக்களிடையே ஒருவிதமான சலிப்பும் அதிருப்தியும் நிலவுவதற்குக் காரணம் — அடிப்படைத் தேவைகளில் நிலவும் பாராமுகமே. 
இந்த அதிருப்தி, அரசியல் மாற்றமாக மாறும் முன் அதை யார் கேட்கப் போகிறார்கள்?

அதிகாரத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட செல்வச் சேர்க்கை நடைபெறுகிறது என்ற மனநிலை பொதுமக்களிடையே உருவாகியுள்ளது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் பல ஆண்டுகளாக பதவியைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் சொத்து குவித்து வருவது மக்களுக்குத் தெரியாமல் இல்லை. 

அரசு அலுவலகங்களில் புரையோடிப் போயுள்ள லஞ்ச ஊழல் முறைகேடுகள், அது எந்த ஆட்சியாக இருந்தாலும் தொடர்கதையாகவே இருப்பது தமிழக ஜனநாயகத்தின் சாபக்கேடு.

நீர் மேலாண்மையில் பல ஆண்டுகால அலட்சியம்

தற்போது பெய்து வரும் கோடை மழையில் கூட வடிகால் வசதியின்றி விளைநிலங்கள் பாழாவதும், வீடுகளுக்குள் நீர் புகுவதும் நிர்வாகத்தின் தோல்வியையே பறைசாற்றுகின்றன. டெல்டா மாவட்டங்களில் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத இந்தப் பிரச்சனை ஒரு பெரும் நிர்வாகத் தோல்வி அல்லவா? இதனால் வடிகால் சீரமைப்புப் பணிகளை ஒரு தனியார் நிறுவனம் செய்ய வேண்டிய அவலச் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

இது வெறும் ஒரு கிராமத்தின் பிரச்சனை அல்ல; ஒட்டுமொத்த தமிழகத்தின் நீர் மேலாண்மை குறித்த கேள்வியாகும்.

முற்போக்கு சக்திகளுக்கான எச்சரிக்கை

பாஜக அல்லது அதனுடன் தொடர்புடைய அரசியல் சக்திகள் தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது என்று விரும்பும் ஜனநாயக சக்திகள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். கொள்கை ரீதியாக மதவாத சக்திகளை எதிர்ப்பதில் ஆளுங்கட்சியை ஆதரிப்பதில் தவறில்லை; ஆனால், மக்களின் அன்றாடத் துயரங்களை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதை முற்போக்கு இயக்கங்கள் தட்டிக்கேட்பதை ஒரு கடமையாகக் கொள்ள வேண்டும்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி வெற்றிக்காக வீடு வீடாக, தெருத்தெருவாக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் எப்படி மக்களைச் சந்தித்தோமோ, அதுபோலவே மக்களின் பிரச்சினைகளுக்காகவும் களம் காண வேண்டியது கட்டாயம். இல்லை என்றால், மாற்று அரசியல் சக்திகள் அதிகாரத்தை எட்டிப்பிடிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

முடிவுரை

மே 4-ஆம் தேதி முடிவுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், இன்றைய கருத்துக்கணிப்புகள் உணர்த்தும் பாடம் ஒன்றுதான்: அதிகாரம் என்பது மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான வடிகாலாக இருக்க வேண்டுமே தவிர, அதிகாரத்தில் உள்ளவர்களின் சுகபோக வாழ்க்கைக்கான கேடயமாக இருக்கக் கூடாது.

மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்வது மட்டும் போதாது; அதை மாற்றும் செயலில் இறங்கும் அரசியல் தான் நம்பிக்கையை உருவாக்கும். அதுவே முற்போக்கு அரசியலின் இன்றைய அவசரத் தேவை.

ஊரான்



Monday, 27 April 2026

தோல் நோய்கள் உணர்த்தும் உள்ளார்ந்த உண்மை என்ன?

நமக்கு ஒரு நோய் வரும்போது, அது ஏன் முதலில் தோலில் தடிப்புகளாகவோ அல்லது அரிப்பாகவோ வெளிப்படுகிறது என்று நாம் எப்போதாவது யோசித்ததுண்டா?


இந்தக் கேள்விக்கு பல்வேறு மருத்துவ முறைகள் பல்வேறு விளக்கங்களை வழங்குகின்றன. அவற்றில் ஒன்றாக ஹோமியோபதி ஒரு தனித்துவமான கோணத்தை முன்வைக்கிறது.



1. உடல் எனும் தற்காப்பு அரண்


உடல் ஒரு புத்திசாலித்தனமான அமைப்பு.


இதயம், மூளை போன்றவை உயிர் காக்க அத்தியாவசியமானவை. இவை பாதிக்கப்பட்டால் உயிருக்கு நேரடி ஆபத்து ஏற்படும்.


மாறாக, தோல் என்பது உடலின் வெளிப்புற உறுப்பு. அங்கே ஏற்படும் பாதிப்பு உடனடி உயிர் ஆபத்தை ஏற்படுத்தாது.


ஹோமியோபதி கோட்பாட்டின் படி, ஒரு நோய் தாக்கும்போது உடல் தனது “உயிர் சக்தி” (vital force) மூலம் அந்தப் பாதிப்பை முக்கிய உறுப்புகளிலிருந்து விலக்கி, தோல் போன்ற குறைவான ஆபத்து உள்ள பகுதிகளில் வெளிப்படுத்தும் என்று கருதப்படுகிறது.


இதை, வீட்டின் அஸ்திவாரத்தை காப்பாற்ற வரவேற்பறை திரையைத் தியாகம் செய்வதற்கு ஒப்பிடலாம்.


2. ‘அழுத்துதல்’ (Suppression) – ஒரு கோட்பாட்டு பார்வை


தோலில் அரிப்பு அல்லது தடிப்பு தோன்றும்போது, நாம் அதை வெளிப்புற மருந்துகளால் விரைவாக மறைக்க முயற்சிப்போம்.


ஹோமியோபதி இதை ‘குணப்படுத்துதல்’ என்று பார்க்காமல், ‘அழுத்துதல்’ (Suppression) எனக் குறிப்பிடுகிறது.

அதாவது, வெளிப்புற அறிகுறி மட்டும் மறைக்கப்படும்போது, உடலின் அடிப்படைச் சிக்கல் தீராமல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இது Hering's Law of Cure போன்ற கோட்பாடுகளின் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது.


ஆனால், இந்தக் கருத்தை நவீன மருத்துவம் (அலோபதி) அறிவியல் ஆதாரமாக ஏற்றுக்கொள்வதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும்.


3. நவீன மருத்துவத்தின் பார்வை


நவீன மருத்துவம் இந்த நிகழ்வுகளை வேறு விதமாக விளக்குகிறது.


பல நோய்கள் — குறிப்பாக Psoriasis — ஒரு உடல் மண்டலச் சிக்கலின் (உதா: நோய் எதிர்ப்பு மண்டல கோளாறு) வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன.


இதேபோல், Asthma போன்ற நோய்களும் சில நேரங்களில் அதே உட்கூறு காரணிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.


அதாவது, தோல் மற்றும் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவது
“நோய் உள்ளே தள்ளப்பட்டது” என்பதற்கான ஆதாரம் அல்ல;
மாறாக, பாதிப்பு பல இடங்களில் ஒரே நேரத்தில் வெளிப்படுவது என்றே பார்க்கப்படுகிறது.


4. ஒரு உடல் – இரண்டு கோணங்கள்


ஒரே உடலைப் பற்றி இரண்டு மருத்துவ முறைகள் வெவ்வேறு விளக்கங்களை வழங்குவது இயல்பாகவே குழப்பமாகத் தோன்றலாம்.


இதைக் கீழ்க்கண்ட ஒப்புமையால் புரிந்துகொள்ளலாம்:


ஒரு கட்டிடத்தில் விரிசல் விழுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

  • நவீன மருத்துவம்: விரிசலை உடனடியாக சரிசெய்யும் பொறியாளரைப் போன்றது —சேதத்தை கட்டுப்படுத்தி, பாதிப்பை குறைக்கிறது.
  • ஹோமியோபதி: அஸ்திவாரத்தை ஆய்வு செய்யும் அணுகுமுறையை முன்வைக்கிறது — “இந்த விரிசலின் அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்கிறது.
இரண்டும் வெவ்வேறு அணுகுமுறைகள்; ஒன்றை ஒன்று முழுமையாக மாற்றுவதில்லை.


முடிவுரை


மருத்துவத்தை ஒரே கோணத்தில் பார்க்க முடியாது.


நவீன மருத்துவம் —
அவசர சிகிச்சைகள், உயிர் காப்பு, அறிவியல் ஆதாரங்கள் ஆகியவற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.


ஹோமியோபதி உள்ளிட்ட சில மாற்று மருத்துவ முறைகள் —
உடலின் முழுமையான சமநிலையைப் பற்றிய சிந்தனையை முன்வைக்கின்றன.

எந்த அணுகுமுறையையும் முழுமையான உண்மையாகவோ அல்லது முற்றிலும் தவறானதாகவோ பார்க்காமல்,
அறிவோடு அணுகுவது தான் முக்கியம்.


உடல் தரும் அறிகுறிகள் —
அவை வெறும் பிரச்சனைகள் மட்டுமல்ல;
ஒரு வகையில் எச்சரிக்கைச் சிக்னல்கள்.


அறிகுறிகளை மட்டும் அல்ல, அதன் பின்னால் உள்ள காரணத்தையும் புரிந்துகொள்ளும் அணுகுமுறையே ஆரோக்கியமான சிந்தனை.


குறிப்பு:
இந்தக் கட்டுரை ஒரு கோட்பாட்டு புரிதலை மட்டுமே விளக்குகிறது.
இது மருத்துவ ஆலோசனை அல்ல. எந்த உடல்நலப் பிரச்சனைக்கும் தகுந்த மருத்துவ நிபுணரை அணுகுவது அவசியம்.


ஊரான்