Wednesday, 15 April 2026

தேர்தல் எனும் பெருமழையில் அடித்து வரப்படும் சாதியக் கழிவுகள்

முன்னுரை

இது கடும் கோடை காலம். சுட்டெரிக்கும் கதிரவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் பூமிப்பந்தே தகித்துக்கொண்டிருக்கிறது.

தாகத்தால் தவிக்கும் பூமி, தனக்கு 'நீர்ச்சத்து குறைபாடு' (Dehydration) ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, புழுக்கள் நெளிந்தாலும் பரவாயில்லை என்று தேங்கிக் கிடக்கும் சாக்கடை கழிவுநீரையே உறிஞ்சிக்கொள்ளும் அவலம் இங்கே அரங்கேறுகிறது. 

ஒரு பக்கம் இயற்கையின் சீற்றம் என்றால், மறுபக்கம் மனிதனின் அலட்சியம். நாய்கள் வீதிகளில் மலம் கழிப்பதைப் போல, மனிதர்கள் சாக்கடை ஓரங்களில் பாலித்தீன் பைகளையும் காலி பாட்டில்களையும் எறிந்துவிட்டுச் செல்லும் அலங்கோலம்.


மழைக்கால வெள்ளமும் சாதிய வெள்ளமும்

மழைக்காலத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தில், நாம் வீசியெறிந்த பாலித்தீன் பைகளும் சாக்கடைக் கழிவுகளும் எப்படி நீர்ப்பாதைகளை அடைத்துக்கொண்டு நம் வீடுகளுக்குள்ளேயே புகுந்து நாற்றமெடுக்கச் செய்கிறதோ, அதே போன்ற ஒரு நிலைதான் தேர்தல் காலத்திலும் நிகழ்கிறது. 

வீதிகள் தோறும் விரவிக் கிடக்கும் 'சாதியக் கழிவுகள்', தேர்தல் எனும் பெருவெள்ளக் காலத்தில் ஊரெங்கும் அடித்து வரப்படுகின்றன. அவை ஏற்படுத்தும் அந்த 'முடைநாற்றம்' மூக்கைத் துளைக்கிறது.

வேட்பாளர் தேர்வும் சாதியச் சாக்கடையும்

சில தொகுதிகளில் பண முதலைகள் சாதியச் சாக்கடையையே விழுங்கிவிடுவதால், அங்கே மட்டும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செல்வாக்கு செலுத்த முடிகிறது. மற்றபடி, ஒவ்வொரு தொகுதியிலும் எந்தச் சாதியினர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறார்களோ, அந்தச் சாதியைச் சேர்ந்தவரைத்தான் அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்துகின்றன.

"ஐயோ... நம் ஆட்களே இந்தத் தொகுதியில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகிறார்களே! இவர்களில் நான் யாருக்கு வாக்களிப்பது?" என்று புலம்பித் திரிகின்றனர் சாதியவாதிகள். இந்த அவலம் தனித் தொகுதிகளிலும் தொடர்கிறது. 

அங்கே பட்டியல் சாதியினர் மட்டுமே போட்டியிட முடியும் என்றாலும், அருந்ததியர், ஆதிதிராவிடர், தேவேந்திரகுல வேளாளர் என உட்பிரிவுகளைப் பார்த்து, "தகுதி-திறமையை" விட "சொந்தச் சாதி" என்ற குறுகிய மனப்பான்மையே மேலோங்கி நிற்கிறது. 

"நீ தவறு செய்தால் நானும் அதையே செய்வேன்" என்று அடம் பிடிக்கும் அவலமல்லவா இது?

கொள்ளையை நியாயப்படுத்தும் சாதிய உளவியல்

தனது சாதிக்காரரை வாக்களித்து வெற்றி பெறச் செய்தவுடன் எல்லாம் முடிந்துவிடுவதில்லை. எந்த மக்களின் வாக்குகளால் ஒருவர் வெற்றி பெற்றாரோ, அந்த மக்களை அவர் அடுத்த தேர்தல் வரை கண்டு கொள்வதில்லை. 

கொள்ளையடிப்பதிலும், காசு பார்ப்பதிலும் வல்லவராகி அவர் பெரும் பணக்காரராகி விடுவார். தான் பெரும் கோடீஸ்வரரான பிறகும், உதவி என்று நாடி வரும் தனது சொந்தச் சாதி நலிந்தோரைக்கூட அவர் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.

இங்கேதான் ஒரு விசித்திரமான 'சாதிய உளவியல்' வேலை செய்கிறது. "இவன் இப்படி எல்லாம் கொள்ளையடித்துப் பெரும் பணக்காரன் ஆகிவிட்டானே?" என்று எவராவது கேள்வி எழுப்பினால், "ஏன்... மற்ற சாதிக்காரன் மட்டும்தான் கொள்ளையடித்து பணக்காரன் ஆகவேண்டுமா? எங்கள் சாதிக்காரன் ஆகக்கூடாதா?" என்று எதிர் கேள்வி கேட்டு அந்தக் கொள்ளையை நியாயப்படுத்துகிறார்கள். இந்த வக்கிரமான உளவியல்தான் ஊழலுக்கு எதிரான போராட்டத்தையே முடக்கிப் போடுகிறது. மாற்றுச் சாதிக்காரன் ஊழல் செய்தால் கூச்சலிடுவதும், தனது சாதிக்காரன் ஊழல் செய்தால் பதுங்குவதும் என்கிற இழிநிலை ஏற்கனவே வந்துவிட்டது.

எச்சரிக்கை: சமூகச் சீரழிவு

இந்த உளவியல் இப்படியே வளர்ந்தால், நாளை தனது சாதிக்காரன் ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்தாலோ அல்லது ஒரு கொலையைச் செய்தாலோ, அதையும் நியாயப்படுத்த இந்தச் 'சாதிப் பாசம்' வீதிக்கு வரும்.

முடிவுரை

பெருவெள்ளக் காலத்தில் கழிவுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு போவது போல, இந்தச் சாதியச் சாக்கடை நாற்றத்தைச் சந்தனமாகப் பார்க்கும் 'சாதிய மனப்பான்மை கொண்டவர்கள்’ ஒட்டுமொத்தமாக ஒழிந்தால் ஒழிய இந்த மண்ணிற்கு விடிவு இல்லை. அறநெறியற்ற சமூகம் பிணத்தை விடக் கொடியது!

ஊரான்

ஆண்களுக்கான ‘வயிற்று வார்டு’: ஒரு மகப்பேறு வார்டில் தோன்றிய சிந்தனை

முன்னுரை

மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு. அங்கே இரண்டு மாதக் கருவைச் சுமப்பவர் முதல், எந்த நேரமும் பிரசவத்தை எதிர்பார்க்கும் நிறைமாதக் கர்ப்பிணிகள் வரை பல பெண்கள் குழுமியிருந்தனர்.

தமிழகத்தின் மரபுப்படி, தலைப்பிரசவம் என்றால் தாய் வீடு, அடுத்தடுத்த பிரசவங்கள் என்றால் புகுந்த வீடு எனப் பிரித்து வைத்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் புகுந்த வீடுதான் என்ற நிலை உருவாகிவிட்டாலும், பிரசவத்திற்கு மட்டும் ஏன் தாய் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே நீடிக்கிறது. ஒருவேளை, மகளின் வலியைத் தாயால் மட்டுமே பகிர முடியும் என்பதாலா?


விசித்திரமான ஒப்பீடு

மருத்துவமனை வராந்தாவில் இன்று நான் கண்ட காட்சி சற்று வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருந்தது. கர்ப்பிணிப் பெண்களின் வயிறு முன்னே தள்ளி இருப்பது இயற்கை; அது ஒரு புதிய உயிரின் அடையாளம். ஆனால், அவர்களுக்குத் துணையாக வந்திருந்த ஆண்களின் வயிறுகளும் போட்டி போட்டுக்கொண்டு முன்னே தள்ளி நின்றதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஒரு பக்கம், உயிரைச் சுமந்து நிற்பதற்கே சிரமப்படும் பெண்கள். மறுபக்கம், தேவையற்ற சதையைச் சுமக்கும் ஆண்கள்.
உயிரைச் சுமக்கும் பெண்கள் அமர இடமில்லாமல் நின்றுகொண்டிருக்க, தேவையற்ற சதையைச் சுமக்கும் ஆண்கள் அமர்ந்திருப்பது எவ்வகை அறம்? பாதுகாவலர்கள் வந்து அவர்களைச் சத்தமிட்டு எழுப்பி, பெண்களுக்கு இடம் கொடுக்கச் சொல்ல வேண்டியிருந்தது.

"பெண்களின் வயிறாவது பத்து மாதத்தில் பிரசவத்திற்குப் பின் மறைந்துவிடும்; ஆனால் ஆண்களின் வயிறோ நாளுக்கு நாள் பெருகுமே தவிர வற்றுவதே இல்லை" என்ற உண்மை சுளீரென உறைத்தது.

பொதுவாகப் பெண்கள் கர்ப்ப காலத்தில்தான் பருமனாகத் தெரிவார்கள். மற்ற நேரங்களில் சிலர் சதைப்பிடிப்போடு இருப்பார்களே ஒழிய, பெரும்பாலும் பெண்களுக்குத் தொப்பை விழுவதில்லை. ஆனால், ஆண்களுக்கோ எந்தப் பிரசவ வலியும் இல்லாமல், 'தொப்பை' மட்டும் வாழ்நாள் துணையாகிவிடுகிறது.

ஆண்களுக்கு ஒரு 'வார்டு' தேவை!

கர்ப்பிணிப் பெண்களின் பேறுகால வயிற்றையும், ஆண்களின் பெருத்த தொப்பையையும் ஒரே வரிசையில் கண்டபோது எனக்குத் தோன்றியது இதுதான்:

பெண்களுக்குப் பிரசவம் பார்க்க ஒரு 'லேபர் வார்டு' (Labour Ward) இருப்பது போல, இந்தப் பெருத்த தொப்பை கொண்ட ஆண்களைப் பராமரிக்கவும், அந்தச் சதையைக் குறைக்கவும் ஒரு தனி ‘வயிற்று வார்டு’ (Tummy Ward) அவசியமோ என்று தோன்றியது.

முடிவுரை

பெண்கள் தங்கள் உடலை வருத்தி ஒரு உயிரை உலகிற்குக் கொண்டு வருகிறார்கள். ஆனால், சில ஆண்கள் முறையற்ற உணவு பழக்கத்தாலும், உடற்பயிற்சி இன்மையாலும் தேவையற்ற பாரத்தைச் சுமக்கிறார்கள். அடுத்த முறை மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்லும்போது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணிற்கு இடம் கொடுக்கும் மனப்பக்குவமாவது இந்த 'தொப்பை' ஆண்களுக்கு வர வேண்டும். குறைந்தபட்சம், சுமக்கும் உயிரின் கனத்தை உணர்ந்தாவது அவர்கள் எழுந்து நிற்கட்டும்!

ஊரான்

நமக்கான ‘அவசியமே’ அவர்களுக்கான மூலதனம்: எளிய மக்களின் தேவையும் அதிகார வர்க்கத்தின் லாபமும்!

மக்களாட்சி தத்துவத்தில் குடிநீர், சாலை, மின்சாரம், கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றை ஒரு குடிமகனுக்கு உறுதி செய்வது அரசின் கடமை. ஆனால், இன்றைய அரசியலில் இவை 'கடமைகள்' என்பதைத் தாண்டி, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் லாபகரமான 'மூலதனமாக' மாற்றப்பட்டிருப்பதுதான் மிகப்பெரிய அவலம்.

தேவையே சந்தையாகிறது

மக்களுக்கு எது மிகவும் அவசியமோ, அங்கிருந்துதான் ஊழல் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது 'புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்' என்ற பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. 
மக்கள் தாகத்தைத் தீர்ப்பதைவிட, அந்தத் திட்டத்தின் ஒப்பந்தங்களில் தங்களுக்குக் கிடைக்கப்போகும் ‘பங்கு’ என்ன என்பதில்தான் அதிகார வர்க்கத்தின் கவனம் உள்ளது.


நிரந்தரத் தீர்வை விரும்பாத நிர்வாகம்

ஒரு சாலையைத் தரமாகப் போட்டால் அது பத்து ஆண்டுகளுக்குத் தாங்கும். ஆனால், அது அதிகாரிகளுக்கு நட்டம். ஒவ்வொரு பருவமழைக்கும் சாலைகள் சிதைய வேண்டும்; அப்போதுதான் 'சீரமைப்புப் பணி' என்ற பெயரில் மீண்டும் நிதி ஒதுக்க முடியும். மக்களின் அன்றாடத் துயரம் (சாலைப் போக்குவரத்துப் பாதிப்பு) அதிகாரிகளின் வருடாந்திர வருமானமாக மாறுகிறது. மக்களின் ‘அவசியம்’ தீர்க்கப்படாமல் இருக்க வேண்டிய ஒன்றாகவே இங்கே பராமரிக்கப்படுகிறது.

சாக்கடையிலும் சந்தனம் தேடும் அரசியல்வாதிகள்

இராணிப்பேட்டையில் உள்ள பிஞ்சி ஏரியை சீரமைத்து அதை ஊட்டி அல்லது கொடைக்கானல் போன்ற சுற்றுலா தளங்களுக்கு இணையான இடமாக மாற்றப் போவதாக புல்டோசர்களை இறக்கி புரட்டிப் போட்டார்கள். குறைந்தபட்சம் காட்பாடி கழிஞ்சூர் ஏரி அளவுக்காவது செய்திருக்க முடியும். ஆனால் பிஞ்சியில் இன்று புழுக்கள்தான் நெளிகின்றன. இந்தப் புனரமைப்பில் அவர்கள் சுருட்டியது எவ்வளவு என்பது யாருக்காவது தெரியுமா?

இடம்மாறும் மேம்பாலங்கள்

விஷாரத்தில் இருந்து வரும் வாகனங்கள், வேலூர் புறவழிச் சாலையை இணைக்கும் இடத்தில் மேம்பாலம் இல்லாததால் அன்றாடம் விபத்துகள், உயிர்ப்பலிகள். மக்களைக் காக்கவேண்டிய இந்த மேம்பாலம், ஆள்நடமாட்டமே இல்லாத ஒரு பிரபல அரசியல்வாதியின் வி.பி.பேலஸ் எனும் ஒரு கல்யாண மண்டபத்தைக் காப்பதற்காக இடம் மாறிப் போனது. இங்கே மக்களின் அவசியத்தைத் தங்களின் அவசியமாக மாற்றிக் கொண்டார்கள்.

கல்வி மற்றும் மருத்துவத்தின் வணிக மயம்

அரசுப் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் வலுப்படுத்துவதுதான் ஒரு நாட்டின் வளர்ச்சி. ஆனால், அவற்றை நலிவடையச் செய்து, தனியார் மயம் நோக்கி மக்களைத் தள்ளுவதன் மூலம் கிடைக்கும் 'கமிஷன்கள்' மிகப்பெரியது. உயிருக்குப் போராடும் ஒரு நோயாளிக்கு மருத்துவமனை ஒரு 'அவசியம்'. அந்த அவசியத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் காப்பீட்டுத் திட்டங்களிலும், கட்டுமானங்களிலும் லாபம் பார்ப்பதே இன்றைய அதிகார நடைமுறையாக உள்ளது.

வாக்கு வங்கி அரசியலும் 'அவசியமும்'

தேர்தல் நேரங்களில் வாக்குறுதிகளாகத் தரப்படும் குடிநீர் இணைப்பும், மின்சார வசதியும் மக்களின் உரிமைகள் அல்ல; அவை 'விலைப்பேசப்படும் பொருட்கள்'. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் ஐந்து ஆண்டுகள் மக்களைத் தவிக்க விடுவதும், தேர்தல் வரும்போது அதே தேவைகளைச் சற்று அசைப்போட்டு வாக்குகளைப் பெறுவதும் ஒரு திட்டமிட்ட அரசியல் முதலீடு.

முடிவுரை

"மக்களின் இயலாமையும், அறியாமையும் நீங்க வேண்டும்" என்ற உன்னத நோக்கம் கொண்டவர்களுக்கு, இந்தச் சூழல் மிகுந்த மனவேதனையைத் தரும். குடிமக்களின் அத்தியாவசியத் தேவைகள் அதிகாரத்தின் மூலதனமாக இருக்கும் வரை, சமூகம் உண்மையான வளர்ச்சியை எட்ட முடியாது.

மக்களுக்குத் தேவை தர்மங்கள் அல்ல; தார்மீகமான உரிமைகள். இந்த உரிமைகளுக்காகப் போராடும் போர்க்குணமிக்க குரல்களே இந்தச் சங்கிலியை உடைக்கும் ஆயுதம்!

ஊரான்

Tuesday, 14 April 2026

அண்ணல் அம்பேத்கர்: மாலைகளுக்குப் பின்னால் மறைக்கப்படும் புரட்சி!

அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 வந்துவிட்டால் போதும், அண்ணல் அம்பேத்கரின் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் போட்டியே நடக்கிறது.

தங்களை அம்பேத்கரின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் இந்தப் புகைப்படப் 'போஸ்'களுக்குப் பின்னால், அவர் எதற்காகப் போராடினாரோ அந்த அடிப்படை நோக்கங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. 

அம்பேத்கர் என்பவர் வெறும் ‘சேரிகளுக்கான தலைவர்’ அல்ல; அவர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமத்துவத்திற்கான விடிவெள்ளி.

அம்பேத்கர்

சனாதனம் எனும் நச்சுச் சுழல்

அம்பேத்கர் எதிர்த்தது மனிதர்களை வருணங்களாகவும், சாதிகளாகவும் பிளவுபடுத்தி, பெருமான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும், ஊர் என்றும் சேரி என்றும் பிரித்து வைத்திருக்கும் இந்து மதச் சனாதனத்தைத்தான். 

சனாதனம் என்பது வெறும் சாதியப் பாகுபாடு மட்டுமல்ல.
அது பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் சமூக அமைப்பும் ஆகும். மாதவிடாய் முதல் பிறப்பு வரை அனைத்திலும் ‘தீட்டு’ கற்பித்து அதன் பெயரால் சடங்குகளை உருவாக்கி, பார்ப்பனர்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு சுரண்டல் அமைப்பாகும்.

அம்பேத்கருக்கு இழைக்கப்படும் துரோகம்

அம்பேத்கர் வழங்கிய சட்ட உரிமையால் படித்து, பட்டம் பெற்று, உயர்பதவியில் இருக்கும் பல பட்டியல் சாதியினர் இன்று செய்கின்ற செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காலத்தில் தங்கள் வீட்டு வாசலை மிதிக்காத பார்ப்பனர்களை, இன்று கௌரவம் என்ற பெயரில் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கும் சடங்குகளுக்கும் அழைத்து சனாதனத்திற்குத் தூபம் போடுகிறார்கள். பார்ப்பன புரோகிதர்களை அழைப்பது என்பது உங்கள் வீட்டிற்குள் சனாதனத்தை அழைப்பதாகும். இது அம்பேத்கரின் போராட்டத்திற்கும் கொள்கைக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

காரல் மார்க்சின் கொள்கை வழியில்,  பெரியார்- அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி சனாதன ஒழிப்பு
சடங்குகளற்ற, பார்ப்பனியமற்ற வாழ்வியலை முன்னெடுக்கும் மார்க்சிய-லெனினிய போராளிகளிடமாவது இவர்கள் பாடம் கற்க வேண்டும். அப்பு-பாலன் காலத்தில் நாயக்கன் கொட்டாயில் நடந்த போராட்டங்களை நினைத்துப் பாருங்கள்.

சனாதனக் கசடுகளைத் தம் சொந்த வாழ்விலிருந்து துடைத்தெறிவதே அம்பேத்கருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும். சனாதன எதிர்ப்பு என்பது அம்பேத்கரின் உயிர் மூச்சு. இதை உணராமல் சடங்குகளில் மூழ்கிக்கிடப்பது அடிமைத்தனத்தை மீண்டும் தழுவுவதே ஆகும்.

பிழைப்புவாதமும் அரசியல் சாதியவாதமும்

இன்று பட்டியல் சாதியினரிடையே பிழைப்புவாதிகள் அதிகரித்து வருகின்றனர். சனாதனத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் சக்திகளோடும், பாஜக போன்ற அமைப்புகளோடும் கைகோர்த்துக்கொண்டு அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது வேடிக்கையானது. ‘சொந்த சாதிக்காரன்’ என்ற ஒரே காரணத்திற்காக, சனாதனக் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் ஒருவரை ஆதரிப்பது கடைந்தெடுத்த சாதியவாதமாகும். இது அம்பேத்கரின் உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் செயலாகும்.

ஜனநாயக சக்திகளிடம்
ஐக்கியம்

பட்டியல் சாதி மக்கள் தனித்து நின்று சனாதனத்தை ஒழித்துவிட முடியாது. அவர்கள் பிற சாதி மக்களோடும், ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளோடும் ஐக்கியமாக வேண்டும். சாதி கடந்த ஒரு பெரும் போராகச் சனாதன எதிர்ப்பு மாற வேண்டும்.

முடிவுரை

அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் ‘போஸ்’ அரசியலைக் கைவிடுவோம். நம் வீட்டுச் சடங்குகளில் இருந்து பார்ப்பனியத்தை விரட்டுவோம். அதிகாரப் பிழைப்புக்காகச் சனாதனத்திடம் மண்டியிடும் துரோகிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவோம். சனாதனக் கசடுகளைத் துடைத்தெறிந்து, சமத்துவப் பாதையில் நடப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான பிறந்தநாள் காணிக்கை!

ஊரான்



Monday, 13 April 2026

அடுப்பங்கரை என்ன கர்ப்பக்கிருகமா? -2 : ஒரு செய்தி சொல்லும் பெண்களின் வாழ்வியல் உண்மை

இன்று காலை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டை புரட்டிக் கொண்டிருந்தபோது மனைவியை சமையலறைக்குள் அனுமதிக்காத கணவன் குறித்த ஒரு சிறிய செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

பிறந்த வீட்டில் வானம்பாடியாய் உயரே உயரே பறந்தவர்கள் புகுந்த வீட்டில் நெருப்புக் கோழியாய் முடக்கப்படுகிறார்கள்.

புதுவாழ்வு தொடங்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, போகிற இடம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் அவளைக் கவ்விக்கொள்கிறது. 


அண்ணனிடமே ‘வாடா போடா’ என்று அன்போடு பழகியவள், புதிய வீட்டில் எப்படிப் பழகுவது என்று குழம்பிப் போகிறாள்.

அவள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பரவாயில்லை.
காலங்காலமாக போதிக்கப்பட்ட ‘பெண்மை’ என்ற கருத்து, புகுந்த வீட்டில் மாமனார் மாமியாரிடம் மண்டியிட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறது.

நேற்று வரை அண்ணன் அப்பா முதல் தாத்தா பாட்டி வரை அனைவருக்கும் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்து பழக்கப்பட்டவர், அவள் மெத்தப்படித்திருந்தாலும் மேன்மையான‌ பதவியில் இருந்தாலும் புகுந்த வீட்டில் மாமனார் மாமியார் இருக்கும் போது நாற்காலி சோபாவில் அமர அச்சப்பட்டு தரையில்தான் அமர வேண்டும். இல்லையென்றால் ‘பாத்தியா மரியாதைய’ என முனுமுனுப்புகள் தொடங்கி விடும். பெற்ற மகளும் வந்த மகளும் பெண்தானே; ஆனால் இங்கே வந்தவளுக்கு மட்டும் தனி நீதி.

இப்படித்தான் மராட்டியத்தில் ஒருவன் கட்டின மனைவியை சமையல் அறைக்குள் செல்லக்கூடாது என தடை விதிக்கிறான். அவள் சமைக்கக் கூடாது என்பதற்காக சமையலறையையே பூட்டி வைத்திருக்கிறான். கடைக்குச் சென்று உணவு வாங்கி வரச் சொல்கிறான். வெளியே சென்று வந்தால் வீட்டுக் கதவு சாத்தி இருக்கும். இவள் வீட்டிற்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக ‘காலிங் பெல்லையே’ அகற்றி உள்ளார்கள்.

இப்படி மனைவியைத் துன்புறுத்தியதோடு, போதிய காரணம் ஏதுமின்றி விவாகரத்துக் கோரி இருக்கிறான்.  கீழமை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தபின், இவன் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறான். இவன் தனது மனைவியை நடத்திய விதம் உடல் ரீதியான வன்முறை மட்டுமல்ல, மனரீதியான வன்முறையும்கூட எனக்கூறி, அவனது மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று மகளிரைப் போற்றும் வகையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடிவிட்டுச் சென்றுவிட்டார். 

“மகளிராய்ப் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தோமோ” என்று பாடும் அளவுக்குத்தான் மகளிர் நிலைமை உள்ளதோ என்பதைத்தான் இந்த வழக்கு உணர்த்துகிறது. 

கோவில்களின் கர்ப்பகிருகத்திற்குள் கூட சமத்துவம் பேசப்படும் காலத்தில், இல்லத்தரியை அடுப்பங்கரைக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! 

முற்றும்

ஊரான்
13.04.2026

தொடர்புடைய பதிவு