Saturday, 11 July 2026

திருத்தல்வாதத்திலிருந்து திரை அரசியல்வரை: பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய் ஆதரவும்

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக ஆதரவும் வரவேற்பும் அளித்து வருகின்றன. ஆனால், தங்களை மார்க்சிய அரசியலின் வாரிசுகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜய்யின் அரசியல் முயற்சிகளைக் குறித்து ஒருவித மென்மைப் போக்கைக் கையாளுவதுடன், அவரை ஆதரிக்கவும் முற்படுவது ஏன் என்ற கேள்வி இன்றைக்கு மிக முக்கியத்துவப் புள்ளியாக எழுகிறது.

இது வெறும் தற்காலிகத் தேர்தல் கூட்டணி அரசியலின் விளைவா? அல்லது இதற்குப் பின்னால் ஒரு நீண்டகாலக் கருத்தியல் வரலாற்று பலவீனம் ஏதேனும் ஒளிந்துள்ளதா?

சண்முகம் (CPM), வீரபாண்டியன் (CPI)

திருத்தல்வாதம் பற்றிய மார்க்சிய விவாதம்

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கருத்தியல் பிளவு, சோவியத் ஒன்றியத்தில் நிகிதா குருச்சேவ் (Nikita Khrushchev) முன்னெடுத்த கொள்கை மாற்றங்களைச் சுற்றியே உருவானது.

மாவோ (Mao Zedong) மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, குருச்சேவ் முன்வைத்த "அனைத்து மக்களின் அரசு", "அனைத்து மக்களின் கட்சி" போன்ற கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தத்துவார்த்த அடிப்படையைக் கைவிட்டு, சோசலிச அரசை வர்க்கமற்ற அரசாகச் சித்தரிப்பது மார்க்சியத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல் என்று மாவோ கருதினார்.

சீனாவின் பார்வையில் இது வெறும் ஏட்டளவிலான கோட்பாட்டு விவாதமல்ல; மாறாக, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின் மறுபிரவேசத்திற்கான பாதையைத் திறந்துவிட்ட பேராபத்தான "திருத்தல்வாதம்" (Revisionism) ஆகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு

இந்தியாவில் இருந்த பாரம்பரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியப் பிரிவுகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) ஆகியவை பொதுவாக சோவியத் அணியோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன.

மாவோ முன்வைத்த கூர்மையான தத்துவ விமர்சனங்களை ஏற்க மறுத்த இக்கட்சிகள், சோவியத் ஒன்றியம் இன்னும் சோசலிசப் பாதையில்தான் பயணிக்கிறது என்ற தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்தன. அதே நேரத்தில், மாவோவின் புரட்சிகரக் கொள்கைகளின் தூண்டுதலால் இந்தியாவில் உருவான நக்சல்பாரி இயக்கங்களை 'இடதுசாரி அதிதீவிரவாதம்' எனக்கூறி அவை கடுமையாக எதிர்த்தன.

பின்னர் வரலாறு என்ன சொன்னது?

1991-ல் சோவியத் ஒன்றியம் முற்றிலும் சிதறித் தவிடுபொடியானது. அரசுச் சொத்துக்கள் அனைத்தும் தாராளமயமாக்கப்பட்டு, தனியார்மயமாக்கப்பட்டன. முதலாளித்துவம் எவ்வித ஒளிவுமறைவுமின்றி அங்கே மீண்டும் அரியணை ஏறியது.

சோவியத் ஒன்றியத்தில் திருத்தல்வாதம் இறுதியில் முதலாளித்துவ மீட்புக்கு வழிவகுக்கும்" என்ற மாவோவின் எச்சரிக்கை சரிதானா? அல்லது சோவியத் பாதையை ஆதரித்த இந்தியப் பாரம்பரிய இடதுசாரிகளின் மதிப்பீடு தவறானதா?

சீனாவும் டெங் பாதையும்

மாவோவின் மறைவுக்குப் பிறகு, டெங் சியாவோபிங் (Deng Xiaoping) தலைமையில் சீனா "சீனப் பண்புகளுடனான சோசலிசம்" என்ற பெயரில் பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் நகரத் தொடங்கியது. சந்தைப் பொருளாதார அம்சங்கள் விரிவடைந்தன; தனியார் மூலதனம் வளர அனுமதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டன.

சீனாவில் இன்னமும் சோசலிசம் நீடிக்கிறதா அல்லது அங்கும் முதலாளித்துவம் வேறு வடிவத்தில் தடம் பதித்துவிட்டதா என்ற விவாதம் இன்றும் உலக இடதுசாரிகளிடையே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. ஒருகாலத்தில் குருச்சேவ் காலத்துச் சோவியத் ஒன்றியத்தைச் சோசலிசத்தின் கோட்டையாகச் சித்தரித்த அதே பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள், டெங் காலத்துச் சீர்திருத்தவாதச் சீனாவையும் சோசலிசத்தின் உன்னத மாதிரியாகப் புகழத் தொடங்கின.

இதனை விமர்சிப்பவர்கள், "பாரம்பரிய இடதுசாரிகளின் கொள்கை மாறவில்லை; மாறாக, அவர்கள் தங்களின் இருப்புக்காகச் சார்ந்து நிற்கும் சர்வதேச அதிகார மையங்கள் மட்டுமே மாறின" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்தல் அரசியலும் சமரசப் பாதையும்

இங்கேதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலை நாம் தத்துவார்த்தப் பின்புலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருகாலத்தில் புரட்சிகர வர்க்க அரசியலை முன்னிறுத்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள், நாடாளுமன்றத் தேர்தல் அரசியலின் கட்டமைப்பிற்குள் தங்களை முழுமையாகப் பிணைத்துக் கொண்ட பிறகு, தீவிரமான சமூக மாற்றத்தை விடத் தங்களின் 'அரசியல் இருப்பை' (Political Survival) மட்டுமே முதன்மையாகக் கருதத் தொடங்கின. இந்த நாடாளுமன்ற வாதக் கவர்ச்சி (Parliamentary Cretinism), கொள்கை சார்ந்த அரசியலுக்குப் பதிலாக, தற்காலிகத் தேர்தல் கூட்டணிகளைச் சார்ந்த நடைமுறை அரசியலை (Pragmatic Politics) அவர்கள் மேல் திணித்தது.

இதன் இயல்பான விளைவாகவே, வர்க்கக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட, மக்கள் செல்வாக்குள்ள எந்தவொரு வெகுஜனச் சக்தியுடனும் தங்களின் தத்துவார்த்த அடையாளங்களைச் சமரசம் செய்து கொண்டு இணங்கிப் போகும் பலவீனமான மனநிலை உருவானது.

விஜய் ஆதரவு: ஒரு கருத்தியல் திருத்தல்வாதத் தொடர்ச்சியா?

நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் திட்டங்கள் மார்க்சிய அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளான வர்க்கப் போராட்டம், உற்பத்தி உறவுகளின் மாற்றம், முதலாளித்துவ ஒழிப்பு அல்லது தொழிலாளர் வர்க்க அரசியல் போன்றவற்றுடன் எள்முனையளவும் தொடர்புடையவை அல்ல.

அவரது முழக்கங்கள் பெரும்பாலும் ஊழல் எதிர்ப்பு, நல்லாட்சி, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள் மற்றும் தேசியவாதம் கலந்த ஒரு பொதுவான மக்கள் நலவாதத் (Populist Welfarism) தளத்தை மட்டுமே மையமாகக் கொண்டவை. இவை கூட உண்மையில் கொள்கை சார்ந்த தத்துவார்த்த நிலைப்பாடா அல்லது வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான கவர்ச்சி முழக்கங்களா என்ற ஐயம் நடுநிலையாளர்களிடையே எழுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரைப் பற்றிய தங்களின் அணுகுமுறையில் ஒரு வெளிப்படையான மென்மைப் போக்கைக் கையாளுவதைக் காண முடிகிறது. 'பாசிச எதிர்ப்பு' அல்லது 'முதன்மை எதிரியை வீழ்த்துவது' என்ற உத்திசார் தந்திரோபாயங்களை (Tactical Line) இக்கட்சிகள் இதற்கு முகாந்திரமாகச் சொல்லக்கூடும்.

ஆனால், இத்தகைய சமரசப் போக்கை விமர்சிப்பவர்கள், இது தற்காலிகமான ஒரு தேர்தல் தந்திரம் மட்டுமல்ல என்கிறார்கள். சர்வதேச அளவில் அன்று குருச்சேவிலிருந்து இன்று டெங் வரை வர்க்கக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்த 'திருத்தல்வாதச் சக்திகளோடு' தத்துவார்த்த ரீதியாகச் சமரசம் செய்து பழகிய அரசியல் மரபின் தர்க்கரீதியான தொடர்ச்சிதான், இன்று உள்ளூர் அளவில் விஜய் போன்ற வெகுஜன ஈர்ப்புள்ள மாற்றுச் சக்திகளோடும் அவர்கள் செய்துகொள்ளும் இந்த நடைமுறைச் சமரசம் என்பதே அவர்களின் வாதம்.

முடிவுரை

ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உண்மையான தத்துவார்த்த அளவுகோல் என்பது அது யாரை ஆதரிக்கிறது என்பதில் மட்டுமல்ல; எத்தகைய கருத்தியல் பின்னணியில், ஏன் ஆதரிக்கிறது என்பதிலும்தான் அடங்கியிருக்கிறது.

ஒருகாலத்தில் சோவியத் திருத்தல்வாதத்தையும், பின்னர் சந்தைப் பொருளாதாரச் சீனாவையும் சோசலிசம் என்று நியாயப்படுத்திய அதே அரசியல் மரபு, இன்றைக்குத் தேர்தல் அரசியலின் புதிய நட்சத்திரங்களையும் தங்களின் இருப்புக்காக ஆதரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இது வெறும் தேர்தல் தந்திர அரசியலா? நீண்டகாலத் திருத்தல்வாதத்தின் கருத்தியல் தொடர்ச்சியா? அல்லது புதிய அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளும் நடைமுறை அணுகுமுறையா?

இந்தக் கேள்விகளுக்கான துல்லியமான பதிலை வரலாறும், இக்கட்சிகளின் எதிர்கால அரசியல் நடைமுறைகளும் தான் இறுதியில் தீர்மானிக்கும்.

வர்க்க அரசியலைக் கைவிட்டு, செல்வாக்குள்ள சக்திகளின் நிழலில் தங்களின் அரசியல் இருப்பைத் தேடும் போக்கு, சர்வதேச அரங்கில் திருத்தல்வாதமாக வெளிப்பட்டது போலவே, உள்ளூர் அரங்கில் தேர்தல் சமரசவாதமாக வெளிப்படுகிறது. விஜய் ஆதரவை அந்த நீண்ட அரசியல் மரபின் ஒரு தொடர்ச்சியாகப் பார்க்கலாமா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.

ஊரான்

Friday, 10 July 2026

கரூர் "கொத்து பரோட்டா!"

இது ஏற்கனவே ஓங்கி வளர்ந்த ஒரு பெருங்காடு. இன்னும் விடிந்திருக்கவில்லை; காரிருள் மரங்களின் கிளைகளுக்கு இடையே ஊடுருவி உரைந்து கிடந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் ஆதி விடியல் காலம் அது. மனிதன் இன்னும் தனக்கான மொழியைக் கண்டறிந்திருக்கவில்லை. எண்ணங்களை வெளிப்படுத்தச் சொற்கள் இல்லை; உதடுகளின் அசைவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை; வெறும் சைகைகளும், தொண்டைக்குள் எழும் விசித்திர ஒலிகளும் மட்டுமே அவனது உலகமாக இருந்தன.


காரிருள் விலகிய காலைப் பொழுதில் ஒரு நாள், கூட்டத்தின் தலைவன் ஒருவன் அடர்ந்த புதரின் திசையைக் காட்டி ஏதோ ஒரு சைகை செய்தான். “அங்கே சுவையான கனிகள் நிறைந்த மரங்கள் இருக்கின்றன; பசியும் ஆசையும் தீரும்” என்பது அவனது சைகையின் பொருள்.

ஆனால், ருசி வெறியோடு இருந்த ஒரு ஆதிமனிதன் அந்தச் சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டான். கனிகள் கிடைப்பது மட்டுமல்ல, பழக்குவியலிலேயே புரண்டு விளையாடலாம் என்ற பேராசையோடு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

அடுத்த சில நொடிகளில் காடே அதிரும் படியாக ஒரு மரண ஓலம் கேட்டது!

அங்கே கனிகள் எதுவும் இல்லை. மாறாக, பசி வெறி கொண்ட காட்டு விலங்குகள் அவன் மீது பாய்ந்து கடித்துக் குதறின. உடல் சிதைந்து, தசைகள் கிழிந்து தொங்க, ரத்தம் சொட்டச் சொட்ட அவன் புதரிலிருந்து வெளியே தள்ளாடி வந்தான்.

தனக்கு நேர்ந்த கொடூரத்தையும் ஏமாற்றத்தையும் சக மனிதர்களுக்குச் சொல்ல அவனிடம் மொழி இல்லை. கைகள் நடுங்கியதால் சைகை காட்டவும் முடியவில்லை. தன் சொந்தத் தவறான புரிதலால், சொல்லவும் முடியாமல் மெல்ல மெல்லத் துடித்து மடியும் அந்த அவல நிலைதான் காட்டுமிராண்டி காலத்தின் ஆகப்பெரும் சாபம்.

காலம் மாறியது… காட்சிகள் மாறினவா?

காலச் சக்கரம் சுழன்றது. மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான்; நாகரிகம் அடைந்தான்; உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக்கொடுத்த உயர்ந்த தமிழினமாக மாறினான்.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழலைப் பார்க்கும்போது, நாம் மீண்டும் அந்த ஆதி கானகத்தின் காட்டுமிராண்டி காலத்திற்கே பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோமோ என்ற அச்சம் எழுகிறது.

அன்று ஆதிமனிதன் சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டான். இன்று மக்கள் ஒரு நடிகரின் திரைப் பிம்பத்தையும், கவர்ச்சியான மேடைப் பேச்சையும், ஆசை வார்த்தைகளையும் உண்மை என்று நம்பித் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.

திரையில் காட்டிய பாவனைகளையும், மேடையில் வெளிப்படுத்திய கவர்ச்சியையும் கண்டு, தங்களுக்கு ஒரு புதிய விடியல் பிறக்கப் போகிறது என்று நம்பி அவரை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்கள்.

வாய்ச்சொல் வீரமும்… ஆணவத்தின் உச்சமும்…

ஆனால் அரியணையில் அமர்ந்த பிறகுதான் மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

எது கிடைக்கும் என்று நம்பி ஓடினார்களோ, அது கிடைக்கவில்லை.

கனிகளைக் காண்பித்தவர்கள் கனிகளைக் கொடுக்கவில்லை.

விடியலை வாக்குறுதி அளித்தவர்கள், விடியலைக் கொண்டு வரவில்லை.

மக்களுக்குத் தேவையான வாழ்வாதார மாற்றங்களோ, எதிர்பார்த்த முன்னேற்றங்களோ அங்கே இல்லை. அதற்குப் பதிலாக மேடைகளில் சப்தமிடும் “கொத்து புரோட்டா” போன்ற வெற்று வசனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

இன்று “கொத்து புரோட்டா” என்பது ஒரு உணவின் பெயர் மட்டுமல்ல; அரசியலில் உள்ளடக்கம் இல்லாத ஆரவாரத்திற்கும், திட்டம் இல்லாத திமிருக்கும், செயல் இல்லாத வசன வீரத்திற்கும் ஒரு குறியீடாக மாறிவிட்டது.

மக்களுக்கான ‘விடியல்’ பற்றிப் பேசியவர்கள், அந்த ‘விடியலையே’ வீதியில் வெட்டி எறிந்துவிட்டார்கள். 

கானகத்தின் புதிய தலைவன், தன் அரியணைப் போதையில், தனக்கு முன்னிருந்த தலைவர்களின் வீழ்ச்சியைக் கேலி பேசி, வார்த்தைகளைச் சிதைத்து, மேடைகளில் “கொத்து புரோட்டா” என ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.

கனியின் ருசி பார்க்கக் காத்திருக்கும் மக்களுக்குக் கனிகளைத் தராமல், தன் அதிகாரத் திமிரையும் வெற்று வசனங்களையும் மட்டுமே வாரி வீசும் இந்தப் போக்கு, ஆணவத்தின் உச்சமன்றி வேறென்ன?

வரலாறு புகட்டும் பாடம்

இயற்கை எப்போதும் மனிதனுக்குப் பாடம் கற்பிக்கிறது.

அன்று ரத்தம் சொட்டச் சொட்டத் தவித்த ஆதிமனிதனுக்குத் தன் ஏமாற்றத்தைச் சொல்ல மொழி தெரியவில்லை.

இன்றோ, உலகமே வியக்கும் மொழி இருந்தும், தங்களின் அவல நிலையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாமல், “நாம்தானே இந்தத் திரைப் பிம்பத்தை நம்பி ஓடினோம்?” என்ற குற்ற உணர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் பலர் மௌனமாய் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது திரைக்கதை அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்.

வெற்று வார்த்தைகளையும், மேடைத் திமிரையும், வசன வீரத்தையும் நிஜமென்று நம்பி ஏமாறும் வரை, அன்று சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டு காட்டு விலங்குகளிடம் சிக்கிய ஆதிமனிதனின் நிலையும், இன்று வாக்குறுதிகளின் பின்னால் ஓடி ஏமாற்றத்தில் நிற்கும் மக்களின் நிலையும் வேறுபட்டதல்ல.

காலம் மாறியிருக்கலாம்.
மொழி வளர்ந்திருக்கலாம்.
ஆனால், உண்மையைப் புரிந்துகொள்ளும் அறிவு விழித்தெழாத வரை, காட்டின் வடிவம் மாறுமே தவிர, காட்டுமிராண்டித்தனம் மாறாது.

— ஊரான்


Thursday, 9 July 2026

கடந்த கால மன்னர்களுக்காக இன்றைய மக்கள் ஏன் பகைமை பாராட்ட வேண்டும்?

மனிதகுல வரலாறு என்பது தொடர்ச்சியான மாற்றங்களின் வரலாறு. காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்த மனிதக் கணங்கள் (Bands) மெல்ல வளர்ந்து குலங்களாக (Clans) உருமாறின. குலங்கள் விரிவடைந்து பொதுவான மொழி, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றின் அடிப்படையில் இனங்களாக (Nationalities) உருவாயின. பின்னர் நிலவுடமைச் சமூக அமைப்பின் கீழ் பல்வேறு இனங்களும் பகுதிகளும் மன்னர்களின் ஆட்சிக்குள் ஒருங்கிணைக்கப்பட்டன. இது உலகெங்கும் காணப்பட்ட வரலாற்றுப் போக்காகும்.

இராஜேந்திர சோழன் 

நிலவுடமைக் காலப் படையெடுப்புகளின் பின்னணி

நிலவுடமைக் காலத்தில் ஒரு பேரரசு மற்றொரு நாட்டின் மீது படையெடுத்ததற்குக் காரணம் கலாச்சாரப் பணி அல்லது மொழிப் பாசம் அல்ல. பொருளாதார நலன்கள், செல்வச் சேர்க்கை, வரி வசூல் மற்றும் அரசியல் விரிவாக்கம் போன்ற தேவைகளே அதற்குக் காரணமாக இருந்தன.

இதனால் உலகின் பல பகுதிகளில் நடந்ததைப் போலவே இந்தியாவிலும்:
  • மராட்டியர்கள் தஞ்சை வரை வந்து ஆட்சி செய்தனர்.
  • கன்னட மொழி பேசிய சாளுக்கியர்களும், தெலுங்கு மொழி பேசிய நாயக்கர்களும் தமிழகத்தின் பல பகுதிகளைத் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தனர்.
  • பல்வேறு சுல்தானிய ஆட்சிகளும் இதே போக்கைப் பின்பற்றின.
இவை அனைத்தும் குறிப்பிட்ட மக்கள்மீது இருந்த வெறுப்பின் வெளிப்பாடு அல்ல; அக்கால அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பின் இயல்பான வெளிப்பாடுகளாகும்.

மேலும், நிலவுடமை மன்னர்கள் பிற நாடுகளை மட்டும் சுரண்டவில்லை; தங்கள் சொந்த நாட்டு மக்களிடமிருந்தும் வரி வசூலித்து உண்டு கொழுத்து செழிப்போடு வாழ்ந்தனர். மன்னராட்சி என்பது பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு அல்ல; நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திய அரசியல் அமைப்பாகவே செயல்பட்டது.

பிற்காலத்தில் முதலாளித்துவம் வளர்ந்தபோது, புதிய சந்தைகளையும் வளங்களையும் கைப்பற்றும் நோக்கில் காலனிய ஆக்கிரமிப்புகள் உருவாயின. பிரிட்டிஷ் ஆட்சியின் இந்திய ஆக்கிரமிப்பும் இதன் ஒரு பகுதிதான். வடிவம் மாறியிருந்தாலும் நோக்கம் ஒன்றே — சுரண்டல், கொள்ளை மற்றும் வரி வசூல்.

வரலாறும் ‘மீள்வாசிப்பும்’

இன்று சிலர் “வரலாற்றை மீள்வாசிப்பு செய்கிறோம்” என்ற பெயரில், வெவ்வேறு மொழி பேசும் உழைக்கும் மக்களுக்கிடையே தேவையற்ற பகைமையை உருவாக்க முயல்கிறார்கள்.
  • “தமிழகம் பிற இனத்தவரால் ஆக்கிரமிக்கப்பட்டது” என்று கூறி மொழிவழிப் பகையைத் தூண்டுகிறார்கள்.
  • சில வரலாற்று நாயகர்களை முழுமையாகக் குற்றவாளிகளாகவோ அல்லது முழுமையாகப் புனிதர்களாகவோ சித்தரிக்கிறார்கள்.
  • கடந்த கால அரசியல் மோதல்களை இன்றைய மக்களிடையேயான பகையாக மாற்ற முயல்கிறார்கள்.
ஆனால் இத்தகைய அணுகுமுறை வரலாற்றை அதன் காலச்சூழலிலிருந்து பிரித்து வாசிப்பதாகும். நிலவுடமைக் கால ஆக்கிரமிப்புகள் உலகம் முழுவதும் நடந்தவை. அவற்றை இன்றைய மொழி அல்லது இன அடையாளங்களின் அடிப்படையில் விளக்குவது வரலாற்று உண்மைகளைச் சிதைப்பதாகும்.

தமிழர்கள் படையெடுக்கவில்லையா?

மற்ற இன ஆட்சியாளர்கள் தமிழகத்திற்கு வந்ததை மட்டும் பேசுபவர்கள் ஒரு அடிப்படை கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்:
“தமிழ் அரசர்கள் வேறு பகுதிகளின் மீது படையெடுக்கவில்லையா?”
சேரர், சோழர், பாண்டியர் உள்ளிட்ட பல தமிழ் அரசுகளும் தங்கள் ஆட்சியை விரிவுபடுத்துவதற்காகப் போர்களை நடத்தியுள்ளன. குறிப்பாக சோழப் பேரரசின் கடற்படைப் படையெடுப்புகள் இலங்கை மற்றும் தென்கிழக்காசியாவின் பல பகுதிகள் வரை சென்றுள்ளன என்பது வரலாற்று உண்மை.

அப்படியானால், “கங்கைகொண்டான்”, “கடாரம் கொண்டான்” என்பதைக் கொண்டாடுவது மட்டும் பெருமையாகவும், பிற அரசர்களின் படையெடுப்புகளை மட்டும் குற்றமாகவும் எவ்வாறு கருத முடியும்?

இன்று சிலர் மராட்டியர், நாயக்கர் அல்லது பிற ஆட்சியாளர்களின் படையெடுப்புகளை மட்டும் முன்னிறுத்தி மொழிவழிப் பகையை உருவாக்க முயல்கிறார்கள். அதே தர்க்கத்தைப் பயன்படுத்தினால், சோழர்களின் படையெடுப்புகளுக்காக இன்றைய தமிழர்களையும் பிற நாடுகள் குற்றம் சாட்ட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் நவீன ஜனநாயகச் சமூகங்கள் அவ்வாறு அணுகுவதில்லை. அவர்கள் வரலாற்றை அதன் காலச்சூழலோடு புரிந்துகொள்ள முயல்கின்றனர்.

எனவே, கடந்த கால அரசர்களின் செயல்களுக்கு இன்றைய மக்களைப் பொறுப்பாக்குவது வரலாற்றுப் புரிதல் அல்ல; அது அடையாள அரசியலின் வெளிப்பாடாகும்.

அடையாள அரசியல் என்பது மக்களின் பொருளாதார, சமூக மற்றும் வர்க்க நலன்களைப் பின்தள்ளிவிட்டு, மொழி, மதம், சாதி, இனம், பிராந்தியம் போன்ற அடையாளங்களை முதன்மைப்படுத்தும் அரசியல் அணுகுமுறையாகும். இதில் மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, உணர்ச்சிபூர்வமான அடையாளங்களே அரசியலின் மையமாக மாற்றப்படுகின்றன.

இத்தாலிய சிந்தனையாளர் Antonio Gramsci, ஆளும் சக்திகள் தங்களது கருத்துகளை சமூகத்தின் “பொது புத்தி” (Common Sense) ஆக மாற்றும் செயல்முறையை “மேலாண்மை” (Hegemony) என்று விளக்குகிறார். 

ஒரு கருத்து கல்வி, ஊடகம், இலக்கியம், கலாச்சாரம் மற்றும் அரசியல் பிரச்சாரங்கள் வழியாக தொடர்ந்து பரப்பப்படும்போது, அது ஒரு அரசியல் கருத்தாக இல்லாமல் இயல்பான உண்மையாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு உருவாக்கப்படும் “பொது புத்தி” பெரும்பாலும் மக்களின் உண்மையான நலன்களை மறைத்து, அவர்களின் கவனத்தை வேறு திசையில் திருப்புகிறது. இன்று “நம்முடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் வேறு மொழி பேசும் மக்கள்தான் காரணம்”, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆக்கிரமிப்புகளுக்குப் பழிவாங்க வேண்டும்”, “கடந்த கால மன்னர்களின் பெருமையோ அவமானமோ இன்றைய மக்களின் பெருமையும் அவமானமும் ஆகும்” போன்ற கருத்துகள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன.

இவை வரலாற்று ஆய்வின் முடிவுகள் அல்ல; மாறாக, இன்றைய சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி, அடையாள அரசியலை வலுப்படுத்த உருவாக்கப்படும் புதிய “பொது புத்தி”யின் பகுதிகளாகும்.

ஆனால் வரலாற்று அறம் நம்மிடம் கேட்கும் கேள்வி வேறு: கடந்த கால அரசர்களின் போர்களுக்காக இன்று வாழும் உழைக்கும் மக்கள் ஏன் ஒருவரை ஒருவர் வெறுக்க வேண்டும்? மொழி, மதம், சாதி என்ற வேறுபாடுகளைத் தாண்டி மனிதர்களின் பொதுவான நலன்களையும் சமூக நீதியையும் முன்னிறுத்துவதுதான் முற்போக்கான அணுகுமுறையாகும்.

வரலாற்றின் பாடம் என்ன?

நிலவுடமை மன்னராட்சிகள் உலகம் முழுவதும் ஜனநாயகக் குடியரசுகளால் மாற்றப்பட்டன. காரணம், மக்கள் தங்களது அரசியல் உரிமைகளையும் சமத்துவத்தையும் கோரத் தொடங்கியதுதான்.

இன்று நாம் வாழ்வது மன்னராட்சிக் காலத்தில் அல்ல. எனவே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்களின் போர்களை அடிப்படையாகக் கொண்டு, இன்று வாழும் மக்களுக்கிடையே பகையை உருவாக்குவது முற்போக்கான அணுகுமுறை அல்ல.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் கடந்த காலத்தை அதன் பொருளாதார மற்றும் சமூகச் சூழலோடு புரிந்துகொள்ளச் சொல்கிறது; கிராம்சியின் மேலாண்மைக் கோட்பாடு அந்தக் கடந்த காலம் எவ்வாறு இன்றைய அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

வரலாற்றை வரலாறாகப் புரிந்துகொள்வதும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதும் அவசியம். ஆனால் கடந்த கால மோதல்களை இன்றைய சமூக உறவுகளுக்குள் இழுத்துவந்து பழிவாங்கும் அரசியலை உருவாக்குவது சமூக முன்னேற்றத்திற்கு உதவாது.

முடிவுரை

வரலாற்றை வரலாற்று அறத்தோடு அணுக வேண்டும். கடந்த கால நிகழ்வுகளை அவை நிகழ்ந்த காலத்தின் அரசியல், பொருளாதார மற்றும் சமூகச் சூழலோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலத்தின் போர்களையும் ஆக்கிரமிப்புகளையும் இன்றைய மொழி, இன அடையாளங்களின் அடிப்படையில் பழிவாங்கும் கருவியாக மாற்றுவது சமூக ஒற்றுமைக்கு ஆபத்தானது. வரலாற்றின் நோக்கம் பகையை வளர்ப்பதல்ல; மனிதகுலம் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்று, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய வரலாற்றைப் படைப்பதுதான்.

வரலாற்றை மீள்வாசிப்பு செய்வதன் நோக்கம் பழைய பகைகளை உயிர்ப்பிப்பது அல்ல; அவற்றைத் தாண்டி மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.

— ஊரான்

Wednesday, 8 July 2026

முதுமையின் சுயமரியாதை!

பல ஆண்டுகால உழைப்பை ஒரு நிறுவனத்திற்காகத் தந்துவிட்டு, இறுதிக்காலத்தில் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கே பற்றாக்குறையான ஒரு 'சொற்ப ஓய்வூதியத்தை' மட்டுமே பெற்று வந்த ‘பெல்’ (BHEL), இராணிப்பேட்டை ஓய்வு பெற்ற ஊழியர்களின் வாழ்வில் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விடியல் பிறந்துள்ளது.

BHEL. Ranipet

தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சேமநல நிதி (Provident Fund) ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரி, ‘பெல்’ ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு ஒரு மகத்தான, நெகிழ்ச்சியூட்டும் தீர்ப்பை வழங்கியுள்ளது. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அதிக ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

நெகிழ்ச்சியில் தோழர்கள்

நாளுக்கு நாள் பெருகிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு போன்ற இன்றைய சூழலில், முதியவர்கள் தங்களின் இறுதிக்காலத்தில் யாருக்கும் சுமையாக இல்லாமல், தங்களைத் தாங்களே சுயமாகவும் கண்ணியத்தோடும் பராமரித்துக் கொள்ள வழிவகை செய்கிறது இந்தத் தீர்ப்பு.

தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியை ஆலையின் உற்பத்திக்காக அர்ப்பணித்த இந்த ஊழியர்கள், தங்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காக நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிய போராட்டத்திற்கு இன்று தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. வழக்குத் தொடுத்த ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் சொல்லொணா மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அலைமோதி வருகிறது.

இறுதிக்காலக் கோரிக்கை:
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களின் சார்பாக ஒரு நியாயமான வேண்டுகோள் முன்வைக்கப்படுகிறது:
"சேமநல நிதி வாரியம் (EPFO) இதற்கு மேலும் எந்தவித மேல்முறையீடும் (Appeal) செய்து காலத்தைக் கடத்தாமல், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்."

ஏற்கனவே தங்களின் வாழ்நாளின் இறுதிப் பகுதியை எட்டியிருக்கும் இந்த ஓய்வூதியத் தோழர்கள், இனிமேலும் நீதிமன்றங்களுக்கும் அலுவலகங்களுக்கும் அலைந்து தவிப்பதைக் கைவிட்டு, தங்களின் எஞ்சிய காலத்தையாவது எவ்விதப் பொருளாதாரச் சிரமமும் இன்றி, நிம்மதியாகவும், சுயசார்போடும், கண்ணியமாகவும் கழித்திட வாரியம் உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்.

நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கத்திற்கும், குறிப்பாக இராணிப்பேட்டை பி.ஹெச்.இ.எல் தோழர்களுக்கும் கிடைத்த ஒரு பெரும் வரலாற்று வெற்றி!

இது முதுமையின் சுயமரியாதைக்குக் கிடைத்த வெற்றி!

ஊரான்@பொன்.சேகர்

Tuesday, 7 July 2026

ஆலயங்களா? ஆலைகளா? — மக்கள் நலனைப் பாதுகாப்பது எது?

மனித சமூகம் தனது நீண்ட வரலாற்றுப் பயணத்தில் அறிவியல், தொழில்நுட்பம், உழைப்பு, கூட்டுச் சிந்தனை மற்றும் அனுபவங்களின் மூலமாகவே முன்னேறியுள்ளது. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது கோபுரங்களின் உயரத்திலோ, ஆலயங்களின் எண்ணிக்கையிலோ அல்ல; அது மக்களின் வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தால்தான் அளவிடப்படுகிறது.

ஆனால் இன்று ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தின் ஒரு பகுதி எங்கே செல்கிறது? அது புதிய உற்பத்திக்கும், சமூக வளர்ச்சிக்கும் பயன்படுகிறதா? அல்லது ஆன்மீகத்தின் பெயரில் உற்பத்தியற்ற துறைகளில் செலவிடப்படுகிறதா?


மக்களின் சேமிப்பும் ஆன்மீகச் செலவுகளும்

உழைக்கும் மக்கள் தாங்கள் சிரமப்பட்டு சேமிக்கும் பணத்தில் கணிசமான பகுதியை நம்பிக்கை, பயம், பக்தி ஆகியவற்றின் அடிப்படையில் ஆலயங்கள், யாத்திரைகள், கையில் தீச்சட்டி ஏந்தி செய்யப்படும் நேர்த்திக் கடன் போன்ற பரிகாரங்கள் மற்றும் காணிக்கைகளுக்காகச் செலவழிக்கிறார்கள்.

இதில் தனிநபர் நம்பிக்கையை விமர்சிப்பது நமது நோக்கமல்ல. ஆனால் அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் பொருளாதார அமைப்பை ஆய்வு செய்வது அவசியம். ஒரு கிராமத்தில் தரமான பள்ளி இல்லாமல், மருத்துவமனை இல்லாமல், குடிநீர் வசதி இல்லாமல் இருக்கும்போது, கோயில் புனரமைப்புக்காக கோடிக்கணக்கான ரூபாய்கள் திரட்டப்பட்டு செலவழிக்கப்படுவது இன்று சாதாரணமாகிவிட்டது.

ஆலயங்களில் கிடைப்பது உளவியல் பலன் மட்டுமே

ஆலயங்கள் பலருக்கு மன ஆறுதலையும் உளவியல் நிம்மதியையும் அளிக்கக்கூடும். ஆனால் ஒரு ஆலை தொடங்கப்பட்டால் அது வேலைவாய்ப்பை உருவாக்குகிறது; உற்பத்தியை அதிகரிக்கிறது; புதிய திறன்களை உருவாக்குகிறது; மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

ஒரு ஆலயத்தில் செலுத்தப்படும் பணம் பெரும்பாலும் பக்தி எனும் நுகர்வாக முடிகிறது. ஆனால் ஒரு தொழிற்சாலையில் முதலீடு செய்யப்படும் பணம் புதிய செல்வத்தை உருவாக்குகிறது.
உளவியல் ஆறுதல் மனிதனுக்குத் தேவையானதாக இருக்கலாம். ஆனால் அது பொருளாதார முன்னேற்றத்திற்கு மாற்றாக அமைய முடியாது.

பண்பாடு என்பது கோயில்களில் மட்டுமல்ல

பண்பாடு என்பது கோயில்களில் மட்டும் அடங்குவதில்லை. அது மக்களின் அன்றாட வாழ்வியல், அரசியல், பொருளாதார உறவுகள், கலை, இலக்கியம், சமூகப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடு. கோயில்கள் இல்லாத நாடுகளிலும் பண்பாடு தழைத்தோங்குகிறது. நாத்திகவாதிகளை அதிகமாகக் கொண்ட நார்வே, ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன், வலுவான பண்பாட்டு அடையாளங்களுடன் விளங்குகின்றன.

வெளிப்படைத்தன்மை 

கோயில்களுக்கு வரும் வருமானம், அது எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பது பொதுமக்களுக்கு தெரிவதில்லை. கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கோயில் நிதிகளில் ஒரு சிலர் கொள்ளையடிப்பது பலமுறை வெளியாகியுள்ளது. அண்மைய அயோத்தி இராமர் கோயில் விவகாரம் கோயிகளில் நடைபெறும் பண மோசடிகளை ஓரளவு வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

ஆலயமா? ஆலையா? ஒரு உண்மையான ஒப்பீடு


வரலாற்றைப் பார்த்தால், தொழில்மயமாக்கல், கல்வி, அறிவியல் மற்றும் உற்பத்தியை மையமாகக் கொண்ட சமூகங்களே பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளன. இது உலகின் பெரும்பாலான நாடுகளின் அனுபவமாகும்.

முடிவுரை: மக்கள் நலனைப் பாதுகாப்பது எது?

ஒரு நாட்டின் பெருமை அதன் கோபுரங்களின் உயரத்தில் இல்லை; அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் இருக்கிறது.
பசியை போக்குவது தொழிற்சாலைகள்.
வேலைவாய்ப்பை உருவாக்குவது தொழிற்சாலைகள்.
புதிய அறிவை உருவாக்குவது தொழிற்சாலைகளும் கல்வி நிலையங்களும்.

நாட்டின் பொருளாதாரத்தை வளர்ப்பது உற்பத்தித் துறைகளே.
ஆலயங்கள் தனிநபர்களுக்கு நம்பிக்கையையும் மன ஆறுதலையும் வழங்கலாம். ஆனால் ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளத்தை வலுப்படுத்துவதும், வறுமையை ஒழிப்பதும், வேலைவாய்ப்பை உருவாக்குவதும், மனித வாழ்வை முன்னேற்றுவதும் ஆலைகளும் கல்வி நிலையங்களும் அறிவியல் நிறுவனங்களும்தான்.

எனவே, கேள்வி “ஆலயங்கள் வேண்டுமா வேண்டாமா?” என்பதல்ல.

மக்களின் உழைப்பால் உருவாகும் செல்வத்தை எதற்குப் பயன்படுத்துவது?

அந்தக் கேள்விக்கான பதில் தெளிவானது:

மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது ஆலைகள்; மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது உற்பத்தி.

அதனால், ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது புதிய ஆலயங்களின் எண்ணிக்கை அல்ல; புதிய ஆலைகளின் எண்ணிக்கையும், அவை உருவாக்கும் வேலைவாய்ப்புகளும், சமூகத்திற்கு உருவாக்கும் செல்வமும்தான்.

ஊரான்