Monday, 11 May 2026

வலி... வலியது!

உலகில் ஆகச்சிறந்த மொழி ‘வலி’தான்.
அந்த வலியைத் தன் உடம்பில் படாமலேயே, பிறர் படும்போது தன் இதயத்தில் உணர்வதுதான் உண்மையான மனிதநேயம்.


ஒருவன் அழுகையைத் தன் கண்ணீராக்கி, ஒருவன் ரத்தத்தைத் தன் நெஞ்சில் துடிப்பாக்கும்போதுதான் சமூகம் உயிர்த்தெழுகிறது. 

இந்த உணர்வு இல்லையென்றால், இந்த உலகம் நெடுநாட்களுக்கு முன்பே அழுகிப் புழுத்து நாற்றமெடுத்துப் போயிருக்கும்.

கலை தரும் வலியின் அதிர்வுகள்

நாம் ஜவுளிக்கடை ஊழியர்கள் அல்ல. ஆனால் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில், இருக்கை இல்லாமல் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்கும் தொழிலாளர்களின் வலி நம் கால்களில் இறங்கவில்லையா?

நாம் சாலை விபத்தில் அடிபட்டவர்கள் அல்ல. ஆனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடும் ஒரு மனிதனைப் பார்க்கும்போது நம் உடல் பதறி, நெஞ்சு துடிப்பதில்லையா?

அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நாவலைப் படிக்கும்போது, நாம் ஆப்பிரிக்க அடிமைகளாக இல்லாவிட்டாலும், அவர்களின் முதுகில் விழும் ஒவ்வொரு சவுக்கடியும் நம் நெஞ்சைப் பிளப்பதில்லையா?

ஈழத்தில் கொத்துக்கொத்தாகச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் உடல்களின் வலியும், இன்று காசாவில் பசியால் துடிக்கும் குழந்தைகளின் அலறலும் நம் இரத்தத்தில் ஓடுகிறதுதானே?

இதுதான் மனிதம்.

வர்க்கம் கடந்த தோழமை

மனித வரலாற்றில் பெரிய மாற்றங்கள் அனைத்தும், பிறர் வலியைத் தன் வலியாக உணர்ந்த மனிதர்களால்தான் நிகழ்ந்தன.

பாட்டாளி வர்க்கத்தின் வலியைத் தன் உயிரில் உணர்ந்ததால்தான், பணக்காரரான ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்-ஆல் காரல் மார்க்ஸ் உடன் கைகோர்க்க முடிந்தது.

தீண்டத்தகாதவர்களின் வலியைத் தன் மனதில் ஏற்றதால்தான், பல உயர்சாதி இளைஞர்கள் சாதி-தீண்டாமையை எதிர்த்து வீதிக்கு வந்தனர்.

ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு சாதாரண கான்ஸ்டபிளை மணிக்கணக்கில் நிற்க வைத்து அவமானப்படுத்தும்போது, அந்த அதிகாரத் திமிருக்கு எதிராக நம் மனம் கொதிக்கிறது. இங்கே வலி வர்க்கத்தையோ, சாதியையோ, மதத்தையோ பார்த்து வருவதில்லை.

வலியை அரசியலாக்கும் இன்றைய போக்குகள்

ஆனால் இன்றைய அரசியல் மிகவும் வேதனையளிக்கிறது.
பிறர் வலியை உணர்வதற்குப் பதிலாக, அதை அடையாள அரசியலின் சந்தைக்குள் அடைத்து விற்பனை செய்யும் மனநிலை வலுப்பெற்று வருகிறது.

நேற்றுவரை “சனாதனத்தின் பிள்ளைதான் விஜய்” என்று முழங்கிய அதே 'முற்போக்கு' முகங்கள், இன்று பதவி மோகத்தில் “ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு” என்று கரம் கோர்க்கின்றன.

இதை விமர்சித்தால், “உனக்கு வேங்கைவயலின் வலி தெரியுமா?” என்று திசைதிருப்புகின்றனர்.

ஒரு மனிதன் அனுபவித்த வலியின் முழு ஆழத்தை, அதை அனுபவித்தவனே முழுமையாக உணர முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் பிறர் அந்த வலியை உணரவே முடியாது என்று சொல்லிவிட்டால், மனிதநேயத்தின் அடிப்படையே சிதைந்து போகாதா?

எந்தச் சனாதன அமைப்புகள் தீண்டாமையையும் மனித இழிவையும் உருவாக்கினவோ, அந்தச் சக்திகளோடு சமரசம் செய்துகொண்டே, அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையே ‘பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்தினால் அவர்களுடைய மனமும் ஒருநாள் வலிக்காதா?

“பட்டியலினத்தைச் சேர்ந்தவனாக ஒருவன் இல்லையென்றால் தீண்டாமையின் வலியை உணர முடியாது” என்ற வாதம், வரலாறு முழுவதும் பிறர் வலியைத் தன் வலியாக ஏற்றுப் போராடிய எண்ணற்ற மனிதர்களின் தியாகத்தை அவமதிப்பதோடு, இன்றும் கூட அந்த உணர்வோடு களத்தில் நிற்பவர்களை அந்நியப்படுத்தும் அபாயத்தையும் உருவாக்குகிறது.

வலியைப் போக்கும் அரசியல் வேண்டும்

“அவனவன் வலியை அவனவன்தான் உணர முடியும்” என்றால், பிறகு அடுத்தவர்களின் வலியைப் போக்கப் போராடும் இயக்கங்களும், கட்சிகளும், தியாகங்களும் எதற்காக?

அடுத்தவனின் வலியைத் தன் சொந்த வலியாகக் கருதுபவன்தான் உண்மையான போராளி. ஆனால் பதவியும் அதிகாரமும், பிறர் வலியை உணரும் இதயத்தை மங்கச் செய்யும் போது, அரசியல் இயக்கங்கள் தங்கள் ஆன்மாவையே இழக்கத் தொடங்குகின்றன.

வலி என்பது சாதி, வர்க்க, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. அடுத்தவனின் வலியைத் தன் வலியாக உணரும் இதயம்தான் உண்மையான மனித இதயம்.

வலியை அரசியலாக்காமல் —
வலியைப் போக்கும் அரசியலே இந்த மண்ணுக்கு அவசியம்.

ஊரான்

Saturday, 9 May 2026

ஈட்டி முனையில் ஒரு இதயம்

வசந்த காலத்தின் வரவு

படிப்பு முடிந்து முதல் வேலைக்கான ஆணை வந்தபோது வீடு திருவிழாக் கோலம் பூண்டது. அப்பாவின் கண்களில் பெருமிதம், அம்மாவின் ஆனந்தக் கண்ணீர், அண்ணன் தம்பிகளின் ஆரவாரம் இவை எல்லாம் மாணிக்கத்துக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சின.


“என் குடும்பம், என் சொந்தம்” என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. முதல் சம்பளம் முதல் ஒவ்வொரு ஊக்கத்தொகையும் குடும்பத்துக்கே சென்றது. தங்கைகளின் திருமணம், தம்பியின் படிப்பு என அவன் எல்லோருக்கும் ஏணியானான்.

முட்டுக்கட்டையும் முதல் கசப்பும்

திருமணத்துக்குப் பின் மரகதம் வீட்டுக்கு வந்தாள். மாணிக்கம் அவளை உயிருக்கு உயிராக நேசித்தான். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவளை ஒரு பெண்ணாகப் பார்க்கவில்லை. “என்ன கொண்டு வந்தாள்?” என்ற தராசிலேயே அவளை எடை போட்டனர்.

மாமனார், மாமியார், நாத்தனார்களின் ஏச்சுகளும் அவமான வார்த்தைகளும் அவளது மனதில் ஈட்டியாகப் பாய்ந்தன. மாணிக்கத்தின் காதுகளுக்கு அவை எட்டவில்லை. எட்டினாலும், “எல்லார் வீட்டிலயும் நடக்குறதுதானே?” என்று அலட்சியமாகக் கடந்து சென்றான்.

மரகதம் மெல்ல மெல்ல முட்டுக்கட்டை போடத் தொடங்கினாள்.  
“எல்லாத்தையும் வாரி வாரிக் கொடுத்தா நமக்கு பிள்ளை குட்டி இல்லையா? நமக்குன்னு ஒண்ணும் வேணாமா?”  

அவளது கேள்வியின் பின்னால், அவள் அனுபவித்த அவமானங்களின் நெருப்பு மாணிக்கத்துக்குப் புரியவில்லை. ஒருவேளை அவன் அவளோடு உட்கார்ந்து பேசி, தன் குடும்பத்துக்கு உதவிகளை அளவோடு செய்திருந்தால் இந்த நெருப்பு பூக்காமல் இருந்திருக்குமோ என்பது காலம் கடந்த பிறகுதான் அவனுக்கு உரைத்தது.

நினைவாற்றலின் கூர்மை

காலம் உருண்டது. பிள்ளைகள் வளர்ந்தனர். மாணிக்கம் ஓய்வு பெற்றார். ஆனால் மரகதத்தின் நினைவாற்றல் அவருக்கு சாபமாக மாறியது.

முப்பது வருடங்களுக்கு முன் நாத்தனார் சொன்ன ஒரு வார்த்தையை இன்று நடந்ததுபோலத் துல்லியமாக எடுத்து வைத்தாள்.  
“அன்னைக்கு உங்க அக்கா என்னை அப்படிப் பார்த்துச் சொன்னாங்களே... அப்போ நீங்க எங்கே இருந்தீங்க?”  

இப்படி ஒவ்வொரு நாளும் ஈட்டிகள் அவன் நெஞ்சைத் துளைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

ஓயாத உள்ள வெக்கை

முதுமையில் மாணிக்கத்தின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அவரது தும்மல் கூட அருவருப்பை ஏற்படுத்தியது. “எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல் இப்ப எப்படி உக்காந்திருக்கார் பார்...!” என்ற நையாண்டி அவரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியது.

தொடக்க காலத்தில் உதவிகளைப் பெற்ற உறவுகள் எல்லாம் இன்று ஒதுங்கிக் கொண்டதால் மாணிக்கத்திற்கு உறவாடுவதற்கு உறவுகள் இல்லை. ஓய்வு கால ஊதியம் சில நேரங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் போது அதுவே மரகதத்திற்கு ஒரு ஆயுதமாக மாறிவிடுகிறது.

ஒரு அதிகாலையில் மின்விசிறியின் ஓயாத சத்தத்துக்கு நடுவில் அமர்ந்திருந்த மாணிக்கத்துக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

ஈருடல் ஓருயிர் என்பது வெறும் கவிதை மட்டுமே.  எதார்த்தத்தில் அவர்கள் இரு துருவங்களாகவே வாழ்ந்து முடித்திருந்தனர்.

வெளியே சாலைகள் சிதிலமடைந்து கிடக்கலாம்.  ஆனால் தன் மனதுக்குள் சிதைந்து கிடக்கும் விழுமியங்களை யார் சீரமைப்பார் என்ற ஏக்கத்துடன் அவர் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஊரான்

வேம்புப் பூத்த வேனில் காலமும்... திசை மாறும் தேன் துளிகளும்!

வேப்ப மரமும், புங்கை மரமும் துளிர்விட்டு, இலை செழித்து, நிழல் பரப்பிப் பூத்துக் குலுங்கும் ஒரு கோடையின் வசந்த காலம். மரத்தின் தண்மையான நிழலில் மனிதர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, அதன் கிளைகளிலோ சுட்டித்தனமான சிறுவர்களைப் போல 'அணில்கள்' தாவிக் குதித்துக் கொண்டிருந்தன. 


கோடையின் வெப்பம் சுட்டெரித்த போதும், எங்கோ மறைந்திருந்த மலர்களில் இருந்து நற்சுவையை உறிஞ்சித் தேனீக்கள் கொண்டு வந்து கிளைகளில் சேமிக்கத் தொடங்கின.

உண்மையில், அந்தத் தேன் மற்றவர்களுக்கானது அல்ல; அந்தக் கூட்டில் வளரும் தன் வாரிசுகளுக்கானது. வாரிசுகள் சிறகு முளைத்துப் பறக்கும் வரை சேமிக்கப்படும் அந்தத் தேனை, அவை வெளியேறும் முன் உறிஞ்சிவிட்டு வெறும் கூட்டையே விட்டுச் செல்லும். ஆனால், மனிதர்களோ அதற்கு முன்பாகவே பல உயிர்களை அழித்து, அந்தத் தேனைத் திருடிக்கொள்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கட்டத் தொடங்கிய ஒரு 'அரசியல் தேன்கூடு', ஏப்ரல் இறுதியில் முழுமையடைந்து, மே மாதத் தொடக்கத்தில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அந்தத் தேனைச் சுவைக்க இப்போது ஆளாளுக்குப் போட்டி! தொடக்கத்தில் இருந்தே அணில்கள் அந்த மரத்தைச் சுற்றி வட்டமடித்ததால், பெரும்பகுதியை அவை பங்கிட்டுக் கொண்டன. இருந்தபோதும் அணில்களின் வயிறு இன்னும் நிறையவில்லை.

அதே வேளையில், தலைக்கு மேலே தேன்கூடு தொங்குவதைப் பார்த்துவிட்டு, அதன் சுவைக்காகக் கீழே நாவில் எச்சில் ஊறச் சிலர் காத்துக் கிடந்தனர். "வெறுமனே காத்திருப்பதில் பயனில்லை" என்று உணர்ந்தவர்கள், ஒரு வாரம் கழித்து மேலிருந்து சொட்டுச் சொட்டாக வடியும் தேனைத் தங்கள் ‘கை’களாலேயே ஏந்திச் சுவைக்கத் தொடங்கினர். இன்னும் சிலரோ, பொறுமையிழந்து அந்தத் தேன்கூட்டை ‘அரிவாளால்’ கொத்தத் துணிந்தனர்; சிதறி விழும் தேனைத் தங்கள் ‘பானை’களில் பிடிப்பதற்கு வேறு சிலர் தயாராக நின்றனர்.

எப்படியோ... அந்தத் தேன்கூட்டை அணில்களோடு சேர்ந்து, சிலர் ‘கை’யில் ஏந்தியும், சிலர் அரிவாள் நுனியால் சுவைத்தும், சிலர் பானை நிறையப் பிடித்தும் தங்களுக்குரிய பங்கை உறுதி செய்து கொண்டனர். 

மரத்தின் அடியில் சிதறிக்கிடக்கும் தேன் துளிகளுக்காகக் காத்திருந்த காலம் போய், இப்போது மொத்தக் கூட்டின் மீதே பலரது பார்வையும் படிந்துவிட்டது. அந்தத் தேன் எத்தனை நாவுகளுக்கு இனிப்பைத் தரப்போகிறது என்பதும், தேனின் சுவை யாருக்குச் சொந்தம் என்பதும், அணில்களின் அணிவகுப்பிற்குத் தலைமை தாங்கும் அந்த அணில் தலைவருக்கே  (Squirrel leader) வெளிச்சம்!

இந்தத் தேன்கூடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கட்டப்படுவதால், தேனுக்காகக் காத்திருந்து ஒரு சொட்டுத் தேனும் நாவில் படாதவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டும். அப்பொழுது அணில்களோடு புதிதாகக் குரங்குகள் கூடப் போட்டிக்கு வரலாம். ஆனாலும் தேனுக்காக நாக்கு அதுவரை தொங்கிக்கொண்டுதான் இருக்கும்.

தேனைச் சுவைக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?

ஊரான்

Thursday, 7 May 2026

‘ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு’: ஆசையா? அல்லது அரசியல் அறியாமையா?

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றத்தை (Hung Assembly) உருவாக்கியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ஒரு விசித்திரமான விவாதம் முன்னெடுக்கப்படுகிறது. “தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் பங்கேற்றால் அதிகாரம் கிடைக்கும்”, “முதலமைச்சர் பதவி கிடைத்தால் முழு அதிகாரமும் கைக்கு வரும்” என்ற பிம்பங்கள் தீவிரமாகக் கட்டமைக்கப்படுகின்றன.


அதிகாரத்தை வெறும் பதவியாக மட்டும் பார்க்கும் இந்த அரசியல் மாயையை உடைக்க வேண்டிய நேரம் இது.

தமிழக அரசியலில் “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கம் சமீபகாலமாக அதிகம் ஒலிக்கிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அதிகாரக் கட்டமைப்பை உற்று நோக்கினால், இந்த முழக்கம் பலவீனமான தர்க்கத்தின் அடிப்படையில் எழுப்பப்படுவது புரியும்.

1. அரசாங்கம் வேறு — அரசு வேறு

இந்திய நிர்வாக முறை இன்றும் ஆங்கிலேயரின் இரட்டை ஆட்சி (Diarchy) முறையின் எச்சமாகவே செயல்படுகிறது.

அரசாங்கம் (Government): தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் — முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியவர்கள். கொள்கை வகுக்கும் அதிகாரம் இவர்களிடம் உண்டு.

அரசு (The State): ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிரந்தர அதிகாரிகளைக் கொண்ட நிர்வாக இயந்திரம். கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் உண்மையான நிர்வாக அதிகாரம் இவர்களிடமே பெரும்பாலும் உள்ளது.

மந்திரி சபை, வரவு செலவு, காவல்துறை நிர்வாகம், பணி இட மாற்றங்கள், வேலை வாய்ப்புகள், சட்டம் இயற்றுதல் மற்றும் அரசு இயந்திரத்தைக் கண்காணித்தல் என கொள்கை ரீதியான அதிகாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அதாவது மந்திரி சபைக்கு இருந்தாலும், நிர்வாக அதிகாரத்தின் தொடர்ச்சியும் கட்டுப்பாடுகளும் நிரந்தர அதிகார அமைப்புகளிடமே அதிகமாகக் குவிந்துள்ளன.

அரசாங்கம் மாறலாம். ஆனால் அரசின் நிர்வாக இயந்திரம் தொடர்ந்து நிலைத்திருக்கும்.

அரசியல்வாதிகள் நிர்வாகத்தின் மீது அரசியல் அழுத்தம் செலுத்த முடியும்; ஆனால் நிர்வாக அதிகாரத்தின் சட்டபூர்வமான கட்டமைப்பை முழுமையாக தங்களிடம் கொண்டு வர முடியாது.

2. ஆட்சியில் பங்கு: ஏற்கனவே இருப்பதை மீண்டும் கேட்பதா?

“ஆட்சியில் பங்கு” என்பது அமைச்சரவையில் இடம் கேட்பதுதான். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், பட்டியல் சாதி பிரதிநிதிகளும் ஏற்கனவே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளனர். பல கட்சிகளில் பட்டியல் சாதியினர் அமைச்சர்களாகவும் இருந்து வருகின்றனர்.

அமைச்சர் பதவி கிடைத்துவிட்டால் மட்டும் அதிகாரம் வந்துவிடாது. அமைச்சர்களும் கொள்கை முடிவுகளை எடுக்க மட்டுமே முடியும். அதை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளையே சார்ந்திருக்க வேண்டும்.

3. அதிகாரத்தில் பங்கு: உண்மையான பாதை

“அதிகாரத்தில் பங்கு” என்ற கோரிக்கை ஒருபோதும் மக்கள் பிரதிநிதிகளுக்கு முழுமையாகக் கிடைக்காதது. ஏனெனில், நிர்வாக அதிகாரம் சட்டப்படி அதிகாரிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையில் அதிகாரத்தைப் பெற வேண்டுமென்றால், பெருமளவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளில் இடம்பெற வேண்டும். ஒரு அரசியல்வாதி அதிகாரிகளை அழுத்தம் கொடுக்கலாம் அல்லது இடமாற்றம் செய்யலாம். ஆனால் அவர்களின் சட்டபூர்வ அதிகாரத்தை முழுமையாகத் தன்னிடம் எடுத்துக்கொள்ள முடியாது.

4. இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தாதது ஏன்?

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே கணிசமான அதிகாரங்கள் உள்ளன:
  • தவறான திட்டங்களை முடக்கும் உரிமை
  • புதிய திட்டங்களை முன்மொழியும் வாய்ப்பு
  • மக்களின் பிரச்சினைகளை சட்டரீதியாக எழுப்பி தீர்வு காணும் பொறுப்பு
இந்த அதிகாரங்களை எந்த அளவுக்கு பயன்படுத்தினோம் என்பதைப் பரிசீலிக்காமல் “கூடுதல் அதிகாரம்” கேட்பது உணர்ச்சி முழக்கமாக மட்டுமே முடியும்.

5. யாருக்காக இந்தப் பங்கு?

இந்தக் கோரிக்கை இறுதியில் யாருக்காக?
  • விசிக பிரதிநிதிகளுக்கு அமைச்சர் பதவியா?
  • அல்லது அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியல் சாதி மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கா?
ஏற்கனவே அரசாங்கத்தில் பங்கு பெற்ற பல பிரதிநிதிகள் தங்கள் மக்களுக்காக என்ன உருப்படியான மாற்றத்தைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை மக்கள் இப்போது கேட்கத் தொடங்கியுள்ளனர்.

முடிவுரை

அரசியல் புரிதல் என்பது உணர்ச்சிவசப்பட்ட முழக்கங்களில் இல்லை; அதிகாரத்தின் உண்மையான கட்டமைப்பைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது.

சட்டமன்ற உறுப்பினராகவோ அமைச்சராகவோ ஆவது ‘அரசாங்கத்தில்’ இடம் பெறுவதே தவிர, உண்மையான ‘அதிகாரத்தை’ப் பெறுவதல்ல. இருக்கும் அதிகாரத்தையே சரியாகப் பயன்படுத்த இயலாதவர்கள், அதிக அதிகாரம் கேட்பது ஒரு பரிதாபகரமான அரசியல் நகைச்சுவை.

ஒடுக்கப்பட்ட மக்கள் உண்மையில் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் முழு பங்கு பெற வேண்டுமென்றால், தற்போதுள்ள இரட்டை ஆட்சி முறையை ஒழித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு சட்டம் இயற்றும் மற்றும் நடைமுறைப்படுத்தும் ஒற்றை ஆட்சி முறையை அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஜனநாயகக் கட்டுப்பாட்டுக்குள் நிர்வாக அமைப்புகளை கொண்டுவரும் மாற்றங்கள் தேவை.

ஊரான்

‘காம்ரேடுகளின்’ காமெடி!

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்று கவுண்டமணி பாணியில் சிரிப்பதா? இல்லை, "என்னா ஒரு புத்திசாலித்தனம்!" என்று வடிவேலு பாணியில் வியப்பதா என்று தெரியவில்லை.


அன்று ‘தற்குறி’... இன்று ‘காம்ரேட்’!

நேற்று மாலை வரை "அவருக்கு என்ன தெரியும்? வெறும் சினிமாக்காரர், தற்குறி" என்று டீக்கடை பெஞ்சில் விஜய்யைத் தீயாய் விமர்சித்த அதே 'தோழர்கள்' தான், இன்று இரவு 8 மணி நியூஸில் அவரை "புரட்சிப் போராளி, எங்களின் இனிய காம்ரேட் விஜய்" என்று உச்சி முகர்கிறார்கள். அடேங்கப்பா... 24 மணி நேரத்துக்குள்ள இப்படி ஒரு ஞானோதயம்! கொள்கைங்கிறது என்ன, காலையில் போட்டுக் கொள்ளும் உள்ளாடையா? நினைத்த நேரத்துக்கு மாத்துவதற்கு?

பாம்பும் - நுனிவாலும் - ராகுலும்!

இந்தியா முழுவதையும் பாஜக எனும் பாம்பு கிட்டத்தட்ட விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. இப்போது தமிழ்நாட்டின் நுனிவால் மட்டும் வெளியே தெரிகிறது. அதை மட்டும் பிடித்து இழுத்துக் காப்பாற்றிவிடலாம் என்று ராகுல் காந்தி நினைக்கிறார் போல! ராகுல் அவர்களே, பாம்பின் வயிற்றைக் கிழித்தால்தான் உள்ளே இருப்பவன் உயிர் பிழைப்பான். அதை விட்டுவிட்டு, பாம்போடு ‘டீல்’ பேசிக் கொண்டு வாலோடு விளையாடினால் எப்படி?

ஒரே இரவில் சுக்குநூறான ‘ஜென்’ ராகுல்!

"நான் அன்பைப் பகிர வந்தவன்", "அறம் சார்ந்த அரசியலே என் வழி" என்று பாரத் ஜோடோ யாத்திரையில் பஞ்ச் பேசிப் பில்டப் கொடுத்த ராகுலின் பிம்பம், ஒரே இரவில் சல்லி சல்லியாய் நொறுங்கிப் போய்விட்டது. 22 வருஷக் கூட்டணியை (திமுக) ஒரே போனில் கட் பண்ணிட்டு, ‘பவர் ஷேரிங்’ எனும் அல்வாவுக்காகப் புது இடத்துக்குத் தாவிய காங்கிரஸின் வேகத்தைப் பார்த்தால், ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரர்களே தோற்றுவிடுவார்கள்!

நீதி

"கொள்கையை அடகு வைப்பவன், ஒருநாள் தன் தன்மானத்தையும் அடகு வைப்பான்" - இது நேற்று சொன்னது.
இன்று: "அதிகாரத்துக்காகத் தன்மானத்தை அடகு வைத்தவன், நாளை அதைப் பணத்துக்காக ‘செகண்ட் ஹேண்ட்’ விற்பனைக்கும் கொண்டு வருவான்!"

ஊரான்