Wednesday, 6 May 2026

‘பாஜகவைத் தடுக்கிறோம்’ எனும் போர்வையில் விஜயை ஆதரிப்பதால் காற்றில் பறக்கும் அரசியல் அறம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டமன்றத்தை (Hung Assembly) உருவாக்கியிருக்கின்றன. இது வெறும் எண்ணிக்கை விவகாரம் அல்ல; மக்களின் தீர்ப்பின் வெளிப்பாடு. ஆனால், இந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டிய அரசியல் கட்சிகள், அதிகாரப் பங்கீட்டுக்காகத் துடிக்கும் வேகத்தைப் பார்க்கும்போது, “வாக்காளரின் ஆணை” (Voter’s Mandate) எங்கே போனது என்ற கேள்வி எழுகிறது.


“பாஜகவைத் தடுக்கிறோம்” – என்கிற போலி நியாயம்

இன்று ஒரு கூட்டணியிலிருந்து பிரிந்து, மக்கள் புறக்கணித்த தரப்போடு கைகோர்ப்பவர்களின் ஒரே ‘காக்கை வாதம்’ இதுதான்: “பாஜகவை உள்ளே நுழைய விடக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவு.”

இது எவ்வளவு பெரிய அரசியல் மோசடி என்பதை உணர வேண்டும். மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்தது, அந்தக் கட்சி எந்தக் கொள்கையின் அடிப்படையில், எந்தக் கூட்டணியில் நின்றது என்பதற்காகத்தான். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, தேர்தலுக்குப் பின் “பாஜகவைத் தடுக்கிறோம்” என்கிற போர்வையில் அணி மாறுவது, மக்களின் தீர்ப்புக்கு இழைக்கப்படும் நேரடித் துரோகம்.

‘பாஜகவைத் தடுப்பது’ கொள்கை சார்ந்த நிலைப்பாடாக இருந்தால், அதைத் தேர்தலுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் அதிகாரத்துக்காக அணி மாறுவது, மக்களின் நம்பிக்கையை விற்று அதிகாரத்தை வாங்கும் வியாபாரம் மட்டுமே. இத்தகைய வியாபாரத்தை முதன்முறையாகத் தமிழ்நாடு காண்கிறது.

நாளை என்ன உத்தரவாதம்?

“இன்று கூட்டணி தர்மத்தை மீறி அணி மாறுபவர்கள், நாளை பாஜக அவர்களை மிரட்டியோ, விலை பேசியோ தங்கள் பக்கம் இழுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?”
அரசியல் வரலாறு இந்த எச்சரிக்கையை உண்மையாக்குகிறது. அதிகாரத்துக்காக இன்று கொள்கையைத் தியாகம் செய்பவன், நாளை தன் தன்மானத்தையும் தியாகம் செய்யத் தயங்க மாட்டான்.

1. அச்சத்தின் நிழல்
கொள்கை ரீதியான தெளிவான நிலைப்பாடு இல்லாதவர்கள், அதிகாரத்துக்காக வளைந்து கொடுப்பவர்கள், எந்த நேரத்திலும் மத்திய அரசின் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அதிகாரக் கரங்களுக்கு முன் மண்டியிடுவார்கள். இந்தியாவின் பல மாநிலங்கள் இதற்கு சாட்சி.

2. விலைபேசப்படும் அரசியல்
தேர்தலுக்குப் பிந்தைய அணிமாற்றம் பெரும்பாலும் ‘பொருளாதாரப் பரிமாற்றங்கள்’ அல்லது ‘பாதுகாப்பு உத்தரவாதங்கள்’ சார்ந்ததாகவே இருந்து வந்திருக்கிறது. கொள்கையை அடகு வைப்பவர்கள், தங்களை மிரட்டுபவர்களுக்கும் எளிதில் அடிபணிவது காலத்தின் நியதி.

மக்களின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

தமிழக மக்கள் பலமுறை தெளிவான ஆணையை வழங்கியிருக்கிறார்கள். ஒரு கூட்டணியைத் தேர்ந்தெடுத்தால், அந்தக் கூட்டணிதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். தொங்கு சட்டமன்றச் சூழலைப் பயன்படுத்தி, தனிப்பட்ட அதிகாரப் பசிக்காக அணி மாறுவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ‘விலைப்பொருளாக’ மாற்றுவதற்குச் சமம்.

முடிவுரை

ஒரு உண்மையான ஜனநாயகத்தில், அணி மாற விரும்புபவர்கள் மக்கள் முன் சென்று தங்களது புதிய நிலைப்பாட்டை விளக்கி, மீண்டும் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களிடம் மீண்டும் வாக்கு கேட்பதே நேர்மையான வழி.
அதைச் செய்யாமல், அறைக்குள் அமர்ந்து அரசியல் சதுரங்கம் ஆடுவது மக்களாட்சியை அவமதிப்பதாகும். 

இன்று அதிகாரத்துக்காகக் கொள்கையை அடகு வைப்பவர்கள், நாளை பாஜகவின் அழுத்தத்துக்கு முன் தாங்கள் எதை எதிர்க்கிறோம் என்று சொன்னார்களோ அதற்கே துணை போகும் நிலைக்குத் தள்ளப்படலாம். இந்த எச்சரிக்கையை வாக்காளர்கள் உணர வேண்டும்.

கொள்கையை அடகு வைப்பவன், ஒருநாள் தன் தன்மானத்தையும் அடகு வைப்பான்.

ஊரான்

Tuesday, 5 May 2026

இவ்வுலகு கொடியோர் சூழ் உலகா?

லஞ்சம், ஊழல், முறைகேடு, ஏமாற்று, பித்தலாட்டம், கொலை, கொள்ளை, வன்புணர்வு, திட்டமிட்ட சமூகப் பிளவு — இவை வெறும் செய்திகள் அல்ல. இவை ஒரு சமூகத்தின் ஆழமான கொடுமைகளின் அபாய அறிகுறிகள்.

இவை தற்செயலானவை அல்ல. அறத்தைவிட 'அதிகாரமும்', நேர்மையைவிட ‘வெற்றி’யும், மனிதநேயத்தைவிட 'சுயநலமும்' முன்னிலை பெறும் போது, இந்த உலகம் மெல்லக் கொடியோரின் பிடியில் சிக்குகிறது என்பதன் அடையாளம்.


1. கொடுமை – ஒரு மௌன ஒப்பந்தம்

இன்று ஊழல் ஒரு குற்றமல்ல; அது ஒரு ‘நடைமுறை’. லஞ்சம் ஒரு அவமானமல்ல; அது ஒரு ‘குறுக்கு வழி’. இதைச் செய்பவர்கள் சிலர் மட்டுமே. ஆனால் அதைச் சகித்துக் கொள்பவர்கள் நாம் அனைவருமே!

கொடுமை செய்பவன் ஒருவன். ஆனால் அதை அனுமதிக்கும் மௌனம் ஆயிரம் பேருடையது. கொடுமையை எதிர்க்காமல் சகித்துக் கொள்வது, தீயவர்களுடன் நாம் செய்துகொள்ளும் மௌன ஒப்பந்தம். இந்த மௌனம் கலையும் இடத்திலிருந்துதான் உண்மையான அறம் தொடங்குகிறது.

2. கயமை எனும் போலி நியாயங்கள்

மதம், சாதி, மொழி, இனம் என மக்களைப் பிரித்து, வன்முறையைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் சமூகத்தின் மிகப் பெரிய எதிரிகள். வன்முறையைவிட ஆபத்தானது, அதை அவர்கள் நியாயப்படுத்தும் விதம்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். (குறள் எண்: 1073) 

தான் செய்யும் கொடுமையை ‘அவசியம்’, ‘தர்மம்’, ‘பாதுகாப்பு’ என்று முத்திரை குத்தும் இந்தத் தன்னிச்சை மனநிலையே கயமை. இந்தப் போலி நியாயங்களை அம்பலப்படுத்துவதே அறத்தின் முதல் பணி.

3. வன்முறை – அதிகாரத்தின் கோரமுகம்

கொலை, கொள்ளை, வன்புணர்வு போன்றவை கட்டுப்பாடற்ற ‘அதிகாரத்தின்’ விளைவுகள். சட்டம் பலவீனமடையும் இடங்களில் அதிகாரம் கொடுமையாக உருமாறுகிறது. 

இங்கு உண்மையான அறம் என்பது, கொடுஞ்செயல் புரிபவனைத் தடுத்து நிறுத்துவதும், பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக உரக்கக் குரல் கொடுப்பதும்தான்.

4. அறம் – ஒரு போராட்ட வாழ்க்கை

அறம் என்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமல்ல; ஒதுங்கி வாழ்வதோ, துறவு வாழ்க்கையோ அல்ல. 

அறம் என்பது அநீதியைக் காணும்போது கொதித்தெழும் ஆவேசமான எதிர்க்குரல். சுயநலத்துக்காக சமூகத்தை வஞ்சிக்கும் ஒருவனை எதிர்த்து, அந்த வஞ்சகத்தை வேரறுக்கப் போராடும் வாழ்க்கையே உண்மையான அறவாழ்க்கை. 

மௌனம் அறமல்ல. அது அநீதிக்கு நாம் அளிக்கும் மறைமுக ஆதரவு.

5. கொடியவரை வீழ்த்தும் ஆயுதம்

உலகம் கொடியோரால் நிரம்பிவிட்டதா? இல்லை. கொடியோர் கையில் அதிகாரம் இருக்கிறது. கொடியவர்கள் தங்களுக்குள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். ஆனால் அறத்தை நேசிப்பவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள்; மௌனமாக இருக்கிறார்கள்.

மௌனம் களை
  • லஞ்சம் வாங்குபவனை கேள்விகளால் துளைத்தெடுப்பது — அறம்.  
  • பிரிவினையைத் தூண்டுபவனை மேடையிலிருந்து இறக்குவது — அறம்.  
  • கொடுமை நடக்கும் போது பார்த்துக் கொண்டு நிற்காமல் தலையிடுவது — அறம்.

முடிவுரை

இவ்வுலகு கொடியோர் சூழ்ந்த உலகல்ல. கொடுமையை எதிர்க்கத் தெரியாமல், அறத்தை வெறும் தத்துவமாக வைத்திருக்கும் நல்லவர்கள் சூழ்ந்த உலகம்.

அறவாழ்க்கை என்பது அநீதியைக் காணும் போது நீங்கள் எழுப்பும் முதல் குரலில் தொடங்குகிறது. கொடுமை செய்பவர்கள் உங்கள் அச்சத்தை அல்ல; உங்கள் மௌனத்தையே தங்களது பலமாக நம்பியிருக்கிறார்கள்.

அறம் என்பது அமைதியான வாழ்க்கை அல்ல. தேவையான இடத்தில் நடத்த வேண்டிய துணிச்சலான போராட்டம்.

அறக் குரல்கள் ஒன்றிணையும் போது, கொடியவர்களின் அதிகாரம் சரிவது உறுதி.

ஊரான்

நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளராக இருந்த களப்பணியாளர் தோழர் சீனிவாசன் மறைந்த நாள் (05.05.2012) இன்று. அவரது மறைவின் போது நான் எழுதிய இதய அஞ்சலி. 
***
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எழுதிய பதிவை இன்று வாசித்தபோதும் எனது கண்கள் கலங்கின. 

தோழர் சீனிவாசன்

தோழர்கள் மருதையன், காளியப்பன், கதிரவன், சீனிவாசன், தமிழ்மணி ஆகிய ஐந்து பேர் கொண்ட அன்றைய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு செயல்பட்ட காலமே மகஇக-வின் பொற்காலம். 

தோழர் சீனிவாசனோடு பழகிய காலங்கள் என்றும் பசுமையாய் நினைவில்.
தோழர் சீனிவாசன் மறைவின் போது நான் எழுதிய நினைவஞ்சலி.

"எனது 54 ஆண்டு வாழ்நாளில் நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தோழரை சந்திக்கச் சென்றேன். அன்று அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நான் ஒரு அரை மணிநேரம் பேசாமல் இருந்தேன். பேசும் ஆற்றல் அன்று எனக்கில்லை. கண்ணீரால் கைக்குட்டை நனைந்ததே தவிர என் கண்களை திறக்க முடியவில்லை. ”தமிழ்மணியா இது?” என அவர் கேட்ட பிறகும் எனக்கு பேச நா எழவில்லை. அவரது முகத்தைப் பார்க்க முயலும் முன்மே என் கண்கள் குளமாகிவிடும். பிறகு எப்படி அவரை நான் பார்ப்பது?

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரைப் பார்த்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துயரத்தை மறைத்து ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.

அவர் மரணமடைந்த செய்தி கேட்டு வழியத் தொடங்கிய கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதால் ஏற்கனவே குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் மருதையன் குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னும் வற்றவில்லை. கண்ணீர் வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது.

ஒரு முப்பது ஆண்டு காலம் உற்ற தோழனாய், நண்பனாய், உறவாய் என என்னுள் அமைப்பு வேலைகளில், எமது உடல் நலனில், எமது குடும்ப உறவில் இரண்டறக் கலந்தவர் தோழர் சீனிவாசன். பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது ”ஏன்னு சொல்ச்சுனா” என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் எப்படி என் நினைவிலிருந்து அகலாதோ அது போல என் கண்களிலிருந்து எவ்வளவுதான் கண்ணீர் வழிந்தாலும் அது ஒரு போதும் வற்றாது.

ஆனாலும் வெறும் கண்ணீர் மட்டும் அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை நிறைவேற்ற உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அவரைப் போல வீருகொண்டு எழுவதே அவருக்கு நான் செலுத்து நினைவஞ்சலியாக இருக்க முடியும்.

தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்!"

தமிழ்மணி

Monday, 4 May 2026

தேர்தல் முடிவுகள்: ஓராயிரம் அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு, அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை மட்டும் தேடுவதா?

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் அதிர்ச்சியிலும், தோல்வியின் கசப்பிலும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் வெற்றிக் கொண்டாட்டங்கள், மறுபக்கம் புலம்பல்கள். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு முடிவா? அல்லது ஒரு தொடக்கமா?

"புதிய ஆட்சி சிறப்பாகச் செயல்படுமா?" என்ற கேள்வியைவிட, "ஆட்சியாளர்கள் தடம் மாறும்போது நாம் தட்டிக் கேட்கப் போகிறோமா?" என்பதே இன்றைய தேவையாய் இருக்கிறது. 

ஒரு விரல் புரட்சியோடு ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி ஓய்வெடுத்துக் கொண்டால், மிஞ்சுவது வெறும் புலம்பல் மட்டும்தான். நீங்கள் ஓய்வெடுத்ததன் விளைவுதான் இன்றைய முடிவுகள் என்பதை நாம் உணர வேண்டும்.

1. தற்குறிகள் எனும் போலி வாதம்:

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உட்பட புதிய தலைவர்கள் மற்றும் கட்சிகளை நோக்கி, "அவர்களுக்கு அரசியல் தெரியாது, அவர்கள் எல்லாம் தற்குறிகள்" என்ற வசைபாடுவது வேடிக்கையாக இருக்கிறது.
கடந்த காலங்களை சற்றுப் புரட்டிப் பாருங்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனப் பல காலக்கட்டங்களில் ஆட்சியில் இருந்தவர்களை, நாம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்துவிட்டு வந்த அறிஞர்களாகவா பார்த்தோம்? 

ஒரு சோத்துப் பருக்கை

இத்தனை ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்களில் எத்தனை பேர் நிபுணர்கள்? பெரும்பாலான அரசியல்வாதிகள் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்—'அவர்களின் சோத்துக்கு எப்படி வழி செய்வது' என்பது மட்டுமே. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் வழியை அல்ல. 

எனவே, அரசியலில் அனுபவம் என்பதைவிட, 'அறம்' (Ethics) தான் முக்கியம். அந்த அறம் இல்லாத எவரும் தற்குறிதான்; அது பழைய கட்சியானாலும் சரி, புதிய கட்சியானாலும் சரி.

2. இரட்டையாட்சி முறை (Double Government):

இந்தியாவில் நடப்பது இரட்டையாட்சி முறை. அதாவது, நிலையான ஒரு அதிகார வர்க்கம் (கிராம நிர்வாக அலுவலர் முதல் தலைமைச் செயலக செயலாளர்கள் வரை) ஒருபுறம்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மறுபுறம்.

உண்மையான அதிகாரம் நிர்வாகிகளிடம் இருக்கும்போது, அரசியல் தெரியாதவர்கள் கூட ஆட்சியை ஓட்ட முடியும். இதுதான் எதார்த்தம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே கூட கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி மூலம் இந்த நாடு இயங்குகிறது என்றால், அரசியல் அனுபவம் ஒரு கட்டாயத் தேவை அல்ல. அவர்கள் நிர்வாகிகளோடு சேர்ந்து 'கூட்டுக்கொள்ளை' அடிக்கக் கற்றுக்கொண்டாலே போதும், காலம் தள்ளிக் கொண்டு போய்விடும்.

3. மாற்றத்தின் பெயரில் நடக்கும் ஏமாற்றம்:

வெற்றி பெற்ற புதிய கட்சியினர் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஏற்கனவே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் கொள்ளையடித்தவர்கள் தான் இன்று புதிய கட்சிகளில் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரே இரவில் உத்தமர்களாக மாறிவிடப் போகிறார்களா என்ன? பழைய அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு, புதிய போர்வை போர்த்தியதால் மட்டும் துர்நாற்றம் இல்லாமலா போய்விடும் .

4. சுயபரிசீலனை: எதிரியைத் தேடும் முன்...

பாஜக-சனாதன-பாசிச எதிர்ப்பு என்பது மட்டுமே அரசியல் ஆகிவிட முடியாது. அதையும் தாண்டி மக்கள் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. அதைத் தவறவிட்டதால்தான், மாற்றத்தை விரும்புவோர் மடைமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மற்றவர்களை முட்டாள்கள் என்று சொல்வதற்கு முன்பு, நாம் ஆதரிப்பவர்கள் அனைவருமே அறிவாளிகளா என்பதையும் உரசிப் பார்க்க வேண்டும். ஒருவரை எதற்காக ஆதரிக்கிறோம் என்ற உளவியலைப் புரிந்து கொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு வசைபாடுவது யதார்த்தத்தை மாற்றாது. தோல்வி அடைந்தவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, தாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதைச் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.

5. முடிவுரை: நரகலில் நல்லரிசியைத் தேடும் காலம்

இந்த அரசியல் களத்தில் நாம் இன்னும் ‘நரகலில் நல்லரிசியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்பதுதான் கசப்பான உண்மை.
ஆட்சியாளர்களை உத்தமர்களாக்குவதும், ஊழல்வாதிகளாக மாற்றுவதும் மக்கள்தான். ஒரு விரல் புரட்சியோடு நம் கடமை முடிந்துவிட்டதாக நினைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளும் அதே புலம்பல்கள்தான் மிஞ்சும்.

தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் கண்காணிப்பு தொடங்கியிருக்கிறது. அரசியல்வாதிகளின் முகத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு, அவர்களின் செயல்களையும், ஒப்பந்தங்களையும், முடிவுகளையும் கூர்மையாகக் கவனிக்கும் மக்களாக நாம் மாறினால் மட்டுமே உண்மையான மாற்றம் சாத்தியம்.

மாற்றத்தை நோக்கி நாம் செல்கிறோமா? அல்லது மீண்டும் அதே நரகலில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருக்கப் போகிறோமா?
இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறியும் போதுதான் உண்மையான அரசியல் மாற்றம் நிகழும். அதுவரை...

ஊரான்

Sunday, 3 May 2026

திமுக மீதான வெறுப்பு அரசியலின் பின்னணி என்ன?

நாளை தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கின்றன. கடந்த சில வாரங்களாகத் தமிழக அரசியல் களம் மிகத் தீவிரமான விவாதங்களைச் சந்தித்தது. இந்த விவாதங்களில், கொள்கைகளை விடவும், ஆளுமைகளை விடவும் "திமுக எதிர்ப்பு" அல்லது "திமுக வெறுப்பு" என்பதே பிரதானமான கருப்பொருளாக முன்னிறுத்தப்பட்டது. சமூக வலைதளங்கள் முதல் டீக்கடை விவாதங்கள் வரை இந்த வெறுப்புப் பிரச்சாரம் திட்டமிட்டுச் செலுத்தப்பட்டது. இந்த வெறுப்பின் பின்னால் உள்ள அரசியல் என்ன? எதார்த்தம் என்ன? என்பதை நாம் அலசிப் பார்க்க வேண்டிய தருணம் இது.


பொய்த்துப் போன 'பொற்கால' பிம்பங்கள்


எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எனப் பலரது ஆட்சி காலங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல, காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி என முந்தைய தலைமுறைகளின் ஆட்சியையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. "இவர்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடியதா?" என்றால், விடை 'இல்லை' என்பதுதான். 

காமராஜர் காலத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியைப் போற்றும் பலரும், அது உலக அளவில் நிலவிய சோசலிச சார்பு பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் சோவியத் யூனியனின் உதவியால் கிடைத்த பெரும் மாற்றங்கள் என்பதை மறக்கிறார்கள். அது காமராஜர் எனும் தனிமனிதரால் மட்டும் சாத்தியமானதல்ல; அந்த உலகச் சூழலில் எந்த அரசு இருந்திருந்தாலும் அத்தகைய தொழில்துறை மாற்றங்கள் நடந்திருக்கும். மற்ற மாநிலங்களிலும் அத்தகைய ஆலைகள் தோன்றியதே இதற்குச் சான்று.

ஆக, கடந்த கால ஆட்சிகள் எல்லாம் சொர்க்கம் என்றும், கலைஞர் கருணாநிதி ஆட்சி மற்றும் இன்றைய திமுக ஆட்சி மட்டும் மோசம் என்றும் பேசுவது வரலாற்று அறியாமை. மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்த/செய்யும் காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி அல்லது இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சிகளிலும் 'தேனாறு' ஓடிவிடவில்லை. எதார்த்தத்தை மறுக்கும் இந்த ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

ஊழல்: அது சொத்துடைமை சமூகக் கட்டமைப்பின் நோய்

இன்றைய முதலாளித்துவக் கட்டமைப்பில், ஊழல் இல்லாமல் எந்த ஆட்சியும் நடைபெறுவதில்லை என்பது கசப்பான உண்மை. ஊழலில் கூடுதல், குறைவு வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் "ஊழலற்ற ஆட்சி" என்று இந்தியாவில் இதுவரை யாரும் வழங்கவில்லை. திமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், மற்ற கட்சிகள் புனிதமானவை என்றும், திமுக மட்டும் ஊழலின் ஊற்றுக் கண் என்றும் கட்டமைக்கப்படும் பிம்பம், வெறும் அரசியல் தந்திரமே தவிர, எதார்த்தமல்ல. 


அதேபோல எல்லாக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் நிலவிய போதிலும், திமுக மீது மட்டும் 'வாரிசு அரசியல்' எனும் வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.

வெறுப்பின் அடிப்படை: சனாதன எதிர்ப்பு

திமுக மீது ஏன் இவ்வளவு வெறுப்பு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது? மற்றவர்களை விட ஏன் இவர்களை மட்டும் தீவிரமாக எதிர்க்கிறார்கள்? இதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான்: சனாதன எதிர்ப்பு. திமுக சனாதனக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதும், சமூக நீதியை முன்வைத்துச் செயல்படுவதும்தான் இந்த வெறுப்பு அரசியலின் உண்மையான ஊற்றுக்கண்.


ஒருவேளை திமுக தனது இந்த அடையாளத்தைக் கைவிட்டு, சனாதனத்திற்குத் துணைபோனால், அடுத்த நொடியே இந்த வெறுப்பு அரசியல் மாயமாகிவிடும். இது வெறும் ஆட்சி நிர்வாகம் சார்ந்த விமர்சனம் அல்ல; இது கருத்தியல் ரீதியான மோதல். சமூக நீதியை விரும்பாத சக்திகளின் கையில் இந்த வெறுப்பு அரசியல் ஒரு கருவியாக இருக்கிறது.

திமுகவின் மௌனமும் ஜனநாயகத்தின் சவாலும்

இந்த வெறுப்பு அரசியலை முறியடிப்பதில் திமுக போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதுதான் ஒரு நடுநிலையான பார்வையாளரின் குற்றச்சாட்டு. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த வேகத்தை விட, ஆளுங்கட்சியாக இருக்கும்போது தங்களுக்கு எதிரான திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை முறியடிக்கத் தேவையான அறிவுப்பூர்வமான மற்றும் ஜனநாயக ரீதியான பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை.

  • மாவட்ட அளவிலான பிழைப்புவாதிகள்: திமுக தலைமையே இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்க விரும்பினாலும், மாவட்ட அளவில் கட்சியில் செல்வாக்கு செலுத்தும் பிழைப்புவாதிகள் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை.

  • அவலங்கள்: சனாதன எதிர்ப்பு எனும் கொள்கையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்கள் திமுகவில் அமைச்சர்களாக இருப்பது மற்றுமொரு அவலம்.

மக்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் கடமை எந்தவொரு ஜனநாயக இயக்கத்திற்கும் உண்டு. ஆனால், வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பலியாகிறார்கள் என்றால், அங்கே அரசியல் கல்வி போதவில்லை என்றுதான் பொருள்.

முடிவாக...

நாளை தேர்தல் முடிவுகள் வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் வாக்களித்த கடமை இதோடு முடிந்துவிடப்போவதில்லை. "திமுக வெறுப்பு" அல்லது ஏதோ ஒரு கட்சியின் மீதான குருட்டுத்தனமான வெறுப்பு என்பது முன்னேற்றத்திற்கான பாதை அல்ல.

தர்க்கமற்ற வெறுப்பைத் தூண்டும் அரசியலை விட, மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள், சமூக நீதி, மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அரசியலை அணுகுவதே ஆரோக்கியமான சனநாயகம்.


வெறுப்பு அரசியலையும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சனாதன அரசியலையும் பிரித்துப் பார்க்கும் முதிர்ச்சியைத் தமிழ் சமூகம் பெற வேண்டும். வெறுப்பின் குரல்கள் ஓயட்டும்; விவாதங்களின் குரல்கள் ஒலிக்கட்டும்.

ஊரான்