Sunday, February 15, 2026

எழுதப்படாத பக்கங்கள்: கொட்டாக்காரங்க! (3)

அத்திமூரான் கொட்டாய் 

எங்க ஊரு, அன்றைய வடாற்காடு மாவட்டம், போளூர் வட்டம், மட்டவெட்டு பஞ்சாயத்துல இருக்குற அத்திமூரான் கொட்டாய். எங்க ஊர்க்காரங்க எல்லாருமே ஒரே ரத்தச் சொந்தங்க; ஒரே மூதாதையரோட வாரிசுக. சிலநூறு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து சின்னதா கொட்டாய் போட்டுத் தங்குனதால 'கொட்டாய்'னு பேரு வந்ததாம். ஆனா, அது என்ன 'அத்திமூர்'? அந்தப் பேரு எப்படி வந்துச்சுன்னு எங்க பெரியப்பா நாராயணசாமி சொல்லக் கேட்டிருக்கேன்.  

ஜவ்வாது மலை அடிவாரத்துல போளூருக்குப் பக்கத்துல 'அத்திமூர்'னு ஒரு கிராமம் இருக்கு. அங்க ஒரு காலத்துல ஒரு மன்னன் மலை மேலே கோட்டை கட்டி ஆட்சி செஞ்சிருக்கான். இன்றும் அந்த கோட்டையின் சுவடுகளை அங்கே காண முடியும்.  

அத்திமூர் மலைக்கோட்டை மதிற்சுவர் 

வெள்ளைக்காரங்க அந்தக் கோட்டையைக் கைபற்ற வந்தப்போ, கோட்டையின் மெய்க்காப்பாளனாக இருந்த ஒரு வீரன் அவங்களை எதிர்த்து சண்டை போட்டு சிலரை வெட்டிச் சாய்ச்சிருக்கான். மறுநாள் பெரிய படையோட வெள்ளைக்காரங்க வர்றதைக் கண்டு, இனி இங்க இருந்தா உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு, தன் பொண்டாட்டியோட தப்பிச்சு அடர்ந்த காட்டுக்குள்ள புகுந்திருக்கான். பருவத மலையைக் கடந்து, மட்டவெட்டு பெருமாள் மலை உச்சியில தலைமறைவா சில காலம் வாழ்ந்திருக்கான். 

அங்க வாரிசுகள் பெருகின பிறகு, மலையிறங்கி வந்து கீழ்பாலூர்ல கொஞ்ச காலம் இருந்துட்டு, அப்புறம் விவசாய நிலம் தேடி இந்த இடத்துக்கே வந்து தங்கிட்டானாம். அத்திமூர்ல இருந்து வந்து தங்குன இடமாதலால் இது 'அத்திமூரான் கொட்டாய்' ஆயிடுச்சு. நானும் அத்திமூரான் கொட்டாய்க்காரன் ஆனேன்!

தொடக்கப் பள்ளி: சோறும் கல்வியும் 

மட்டவெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில அஞ்சாம் வகுப்பு வரை படிச்ச காலத்துல பள்ளிக்கூட மத்தியானச் சாப்பாட்டை மறக்கவே முடியாது. அந்தப் பால் பவுடர் ருசி இப்பவும் நாவிலேயே இருக்குது.  

பள்ளிக்கூடத்துக்கு மேற்கால 'ஒடையாமுட்டு' (அகமுடையர்) நிலம். அங்கிருந்து கசியுற தண்ணியில பள்ளிக்கூட நிலத்துலயும் நாங்க விவசாயம் செய்வோம்; நெல்லு நட்டு அறுவடை செய்வோம், காய்கறி கூடப் போடுவோம். இது எல்லாமே மத்தியானச் சாப்பாட்டுல எங்களுக்கே வந்து சேரும். தூரத்துலேருந்து வர்ற இந்த 'கொட்டாகாரப்' பசங்களுக்கு ஒரு கரண்டி சோறு கூடுதலா கெடைக்கும்.  

புரட்டாசி மாசம், மாலை நேரத்துல மழை வர்றது வழக்கம். மழை மேகங்கள் மலை உச்சியைத் தொட்டு கீழிறங்குறதைப் பாத்தாலே, தூரத்துல இருந்து வர்ற கொட்டாக்காரப் பசங்களை மட்டும் மழை வர்றதுக்கு முன்னாடியே பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைப்பாரு தலைமை ஆசிரியர்.  

எங்க தலைமையாசிரியர் விட்டல் வாத்தியாருக்கு மேல்பாலூர்ல வீடு. அவருக்கு மதியச் சோறு எடுத்துட்டு வர ரெண்டு பசங்களை அனுப்பி வைப்பாரு. அஞ்சாம் வகுப்புப் படிக்கிற பிஞ்சுக் கால்கள், போய் வர நாலு கிலோமீட்டர் நடக்கணும். நானும் சில நாள் போயிருக்கேன். 

அப்படிப் போயிட்டு வர்ற பசங்களுக்கு அவரு தன்னோட சாப்பாட்டுல கொஞ்சம் கொடுப்பாரு. கூழும், களியும், கருக்கா நெல்லுச் சோறும் சாப்பிட்டு வளர்ந்த எங்களுக்கு, அந்தச் சன்னமான வெள்ளைச் சோறும் சாம்பாரும் அமிழ்தமா இருக்கும். "நம்ம வீட்ல இப்படி இல்லையே"ங்கிற ஏக்கம்கூட வரும்.

நடுநிலைப்பள்ளி நினைவுகள் 

அப்பவெல்லாம் ஸ்கூல்ல பாஸ் ஆகலனா படிப்பு வரலன்னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதயே நிறுத்திப்புடுவாங்க. அப்புறம் ஆடு மாடு கோழி கழனி கொல்லைன்னு இருக்க வேண்டியதுதான். ஆனா நான் இங்க அஞ்சாவதுல ரெண்டு வருஷம் படிச்சது ஒசரமா வளர்றதுக்குத்தானே! வருஷந்தான் ஓடுச்சே ஒழிய நான் ஒசரமா வளர்ந்த பாடில்லை. இதுக்கு அப்புறமும் ஆறாம் வகுப்புக்கு அனுப்பலன்னா படிப்ப நிறுத்தனாலும் நிறுத்திப்புடுவாங்கன்னு, வேற வழி இல்லாம என்னை பாலூருக்கு அனுப்பி வெச்சாரு விட்டல் வாத்தியாரு.  

நடுப்பாலூர் நடுநிலைப்பள்ளியில எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். தலைமையாசிரியர் துரைக்கண்ணு வாத்தியார் சொல்லிக் கொடுத்த இங்கிலீஷ் கிராமர், இன்னமும் பசுமையா ஞாபகம் இருக்கு. பாடத்தோடு 'தச்சுத் தொழிலும்' (Carpentry) சொல்லிக் கொடுத்தாங்க. இங்கேயும் மதியம் சாப்பாடு போட்டாங்க.  

பள்ளிக்கூடத்தில மதிய சாப்பாடு போடலன்னா நானெல்லாம் உயர்நிலை பள்ளியை நோக்கி போயிருக்குவே முடியாது. 

பீடி கணக்கு 

மத்தியான நேரங்கள்ல கீழ்ப்பாலூர் தேரடி மைதானத்துல இருக்குற காய்கடக்காரர் கடைக்குப் போவேன். அஞ்சு பைசாவுக்குப் பட்டாணி, பொட்டுக்கடலை வாங்கிச் சாப்பிட்டுட்டு, அப்பாவோட கணக்கு நோட்டுல எழுதச் சொல்லுவேன். அந்தக் கடையில தக்காளிப் பழத்துல ஓட்டை போட்டு, உப்பைச் சொருகிச் சாப்பிடுற சுவையே தனி. 

என்னோட சின்ன தாத்தா பேத்தி சீதா அக்காவ அவருக்கு கல்யாணம் முடிச்சதால ‘காய் கடைக்காரரு’ எனக்கு மாமா முறை. ‘என்ன ஓய்’னு அவரு என்னை கூப்பிடும் போது அதுல ஒரு அலாதி அன்பு இருக்கும்.  

அந்தக் கணக்கு நோட்டுல, மளிகை காய்கறி கணக்குடன் பீடி பண்டல் கணக்கும் இருக்கும். எங்க அப்பா சதா பீடியும் கையுமாதான் இருப்பார். அதனால பீடியை பண்டிலா வாங்கி வந்து வச்சிப்பாரு. 

எங்க அப்பாவோட தலைமுறையில அவருக்கு ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். மத்தவங்க பீடி கேக்குறப்போ கொடுக்கிற பீடி கணக்கை ஒரு நோட்டுல எழுதி வைப்பாரு. 

கொஞ்ச நாள் கழிச்சு பீடி பாக்கிய வசூல் பண்ணுவாரு. வந்த வரைக்கும் லாபம், வராததெல்லாம் காந்திக் கணக்குதான். நான் அவருக்கு கணக்கு பார்க்கிறதுக்கு உதவி செய்வேன். இப்படித்தான் எங்கப்பா பொன்முடி, ‘கடைக்காரர்’ என பெயரெடுத்தார். அதனால நானும் 'கடைக்காரன்' பையன் ஆனேன்.

உதவித் தொகையை கோட்டை விட்ட காலம் 

அன்னைக்குச் செய்தி சொல்ல போன் வசதி எல்லாம் கிடையாது, தந்தியும் அரிது. கடுதாசி (கடிதம்) கூட கீழ்ப்பாலூர் போஸ்ட் ஆபீஸ்ல இருந்து நேரடியா வராது. ஊர் பக்கம் வர்றவங்க கையில கொடுத்து விடுவாங்க. கடுதாசிய வாங்கி வர்றவரு அதைக் கொண்டு வந்து கொடுத்தா உண்டு, இல்ல, ‘அப்புறமா கொடுக்கலாம்னு’ வீட்டு 'எறவானத்துல' (கூரை ஓரம்) செருகிட்டாங்கன்னா அது அங்கயே மக்கிப் போகும். 

எங்க கண்ணன் அண்ணனுக்கு வேலை விசயமாக வந்த ஒரு கடுதாசிகூட இப்படித்தான் எறவானத்துலயே உறைஞ்சு போனதா அப்பவெல்லாம் பேசிக்குவாங்க. கடுதாசுக்கே இந்த நிலைமைன்னா, வாயால சொல்லி அனுப்புற சேதி மட்டும் வந்து சேருமா என்ன? 

எட்டாம் வகுப்பு முடிச்சுட்டு கோடை லீவுல ஊரு, மலை, காடுன்னு சுத்தியாச்சு. ஒன்பதாம் வகுப்புச் சேர டி.சி (TC) வாங்கப் போனப்போ, துரைக்கண்ணு வாத்தியார் என்னைத் திட்டித் தீர்த்துட்டாரு. காரணம், எட்டாம் வகுப்புல நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்திருந்தேனாம். ஒன்றிய அளவுல நடக்குற ஸ்காலர்ஷிப் எக்ஸாம் (உதவித்தொகைத் தேர்வு) எழுதியிருந்தா, மேற்கொண்டு படிக்க எனக்குப் பணம் கிடைச்சிருக்குமாம். 

ஊருக்கு வர்ற யார் மூலமோ ஸ்காலர்ஷிப் பரீட்சை பத்தி வாத்தியார் சொன்ன செய்தி எங்களுக்கு வந்து சேரல. தகவல் பரிமாற்றம் சரியா இல்லன்னா சறுக்கல்தானே மிஞ்சும்!

தொடரும்

பொன்.சேகர்

Friday, February 13, 2026

எழுதப்படாத பக்கங்கள்: ஒத்தையடிப் பாதையிலே ...!(2)

மலையடிவாரத்தின் மந்திரம்

மலையடிவாரத்துக் காத்து லேசா மேல பட்டுச்சுன்னாலே போதும், பழைய நெனப்பெல்லாம் தானா வந்து ஒட்டிக்கும். ஒரு காலத்துல எங்க ஊரு தனி உலகமாவே இருந்து வந்தது.

போளூர்லருந்து செங்கம் போற ரோட்டுல, வலதுபக்கமா நீண்டு நெடிந்து நிக்குற அந்த ஜவ்வாது மலைத்தொடர்... கடலாடி பருவதமலைக்கு அடுத்து வர்ற மலைத்தொடரோட அடிவாரத்துல, எங்க ஊருக்கு வடக்கே பெருமாள் மலையும், எங்க மலையும் அரண் கணக்கா நிக்கும். இந்த ரெண்டு மலையையும் ஒரு தொங்கு பாலம் மாதிரி இணைக்கிற இடத்துக்குப் பேரு 'மடலு'. அது எப்பவும் பச்சைப் பட்டுப் போத்துன மாதிரி ரம்மியமா இருக்கும்.

மட்டவெட்டு மலையும் ஏரியும் 

புரட்டாசியின் மாலை நேரப் பொழுதுகளில் மேகக்கூட்டமெல்லாம் அந்த மடலுக்குள்ள இறங்கி வந்து ‘மழை வருது, மழை வருது’ என ஜெகபேரிகை கொட்டும். மடல்ல லேசா தூறல் எறங்றப்போ, அந்த மேகமும் மலையும் ஒண்ணுக்கொண்ணு அணைச்சுக்குற அழகப் பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. கலக்கா (வேர்க்கடலை) பறிக்கிறவங்களும் நெல்லு அடிக்கிறவங்களும் உஷாரா இல்லேன்னா, பட்டுன்னு வர்ற பொரட்டாசி மழையில எல்லாம் நனைஞ்சு வீணாப் போவும்.

மட்டவெட்டும் மலைபடுகடாமும்

எங்க கண்ணன் அண்ணன் அடிக்கடி சொல்லுவாரு, "மன்னன் நன்னனைப் பாடும் சங்க இலக்கிய நூலான மலைபடுகடாம் பாட்டுல வர்ற அந்தச் செங்கண் மாநகர் நம்ம மட்டவெட்டா கூட இருக்கலாம்”ன்னு. அவரு சொல்றதுலயும் ஒரு நியாயம் இல்லாம இல்ல. ஏன்னா, மலைஅடிவாரத்தில் மட்டவெட்டு மாரியம்மன் கோவிலைச் சுத்தி அங்கங்க பழங்காலத்துச் சுவடுகளும் புதைபொருள்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கும். நெலத்துல ஏர்ஓட்டும் பொழுது பழங்கால கெணறுகளும் பழைய கட்டட இடிபாடுகளும் தட்டுப்பட்டதோட, ஒருத்தரு நெலத்துல பொதையல்கூட கெடச்சதா பேசிக்கிறதப் பாத்தா அதுல உண்மை இருக்கும் போலத்தானே நம்ப வேண்டியிருக்கு. ஆனா அரசாங்கத்தோட காதுக்கு இது எட்டியதான்னு தெரியல.

பீய் ஓடையும் பீய்க் கொல்லையும்

இயற்கை எங்க ஊருக்குக் கொடுத்த கொடை ரொம்ப அதிகம். மேற்கே வண்ணான் ஓடை, ஊருக்குக் கிழக்குப் பக்கமா இன்னொரு ஓடை. அதுக்குத்தான் 'பீய் ஓடை'ன்னு பேரு. அப்போதெல்லாம் வீட்ல கழிவறை வசதியெல்லாம் கிடையாது. ஆம்பளைங்க, பொம்பளைங்க எல்லாரும் அந்த ஓடை ஓரத்தையோ இல்ல கொல்லைப் (புஞ்சை நிலம்) பக்கத்தையோதான் ஒதுங்கறதுக்கு வச்சிருந்தாங்க.

ஓட ஓரம் இருந்தவங்க ஓடைப் பக்கம் ஒதுங்குவாங்க. மத்தவங்க அவங்க அவங்க கொல்லையில ஒதுங்குவாங்க. எங்களுக்கும் இதுக்கான ‘பீய்க் கொல்லை’ ஒன்னு இருந்தது. மணற்பாங்கான பூமிங்கரதால கழித்த பிறகு காலாலேயே மண்ணைத் தள்ளி மூடிடுவோம்.

இதுல வேடிக்கை என்னண்ணா, அதுல கலக்கா, மொச்சை, தர்பூசணி எல்லாம் மாணவாரில வெளையும். தர்பூசணிய மத்தவங்க திருடாம இருக்க குழி தோண்டி அத பொதைச்சு வெப்போம். பொதச்சது தெரியாம ஒரு நாள் அது குபுக்குனு மொளச்சிகூட வந்திருக்கு. பீய் ஓடை, பீய்க் கொல்லை, பேரு கேக்க ஒரு மாதிரியா இருந்தாலும், அதுதான் அந்தக்காலத்து எதார்த்தம்.

தற்பெருமை

வடமேற்கிலிருந்து புரண்டு வரும் கோரையாற்று வெள்ள நீரும், மடலுல இருந்து ஓடி வரும் ஓடைத் தண்ணியும் ஒண்ணா சேந்தா ஊரு ஏரி கோடி போவும் (ஏரி நிரம்பி வழியும் திறந்தநிலை மதகுப் பகுதி). ஏரிக்கு மூனு கோடி உண்டு. ரெண்டு கோடிய கட்டிட்டா ஏரி நிரம்பி தத்தளிக்கும். ஏரிக்குக் கீழே பச்சைப் பசேல்னு கழனிக் காடுகள் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் விரிஞ்சு கிடக்கும்.

ஒவ்வொரு வீட்டுக்கும் கழனிக்காடும், கொல்லமோடும் என கொஞ்சம் நஞ்சை-புஞ்சை நெலம் இருக்கும். கழனிக் காட்டு நெல்லும், கொல்லமோட்டுப் பயிரும் வீட்டுத் தேவைக்கு வெளஞ்சிருக்கும்.

என்னதான் வெளஞ்சாலும் குடும்பம் பெருசா இருந்தா சேமிப்பெல்லாம் நிக்காது. நடுவுல ஒரு வருஷம் மழை பொய்த்துப் போனாலும் வீட்டுக் களஞ்சியம்தான் காலியாகுமே ஒழிய யாரும் சோத்துக்குக் கையேந்தும் நெலம வந்ததில்ல. எங்க உழவுக் குடி சனங்களுக்கு இதுல ஒரு தற்பெருமை உண்டு.

ஒத்தையடிப் பாதையும் ஒசரமும்

ஆனா, ஊருக்குள்ள வர்றதுக்குச் சரியான வண்டிப் பாதை வசதி கிடையாது. மட்டவெட்டு ஊரிலிருந்து கொல்லமோடு, வயக்காட்டு வரப்பு, ஏரிக்கரை வழியா அந்த ஒத்தையடிப் பாதைதான் கதி. அந்தப் பாதையிலதான் கடைகண்ணிக்கும் நல்லது கெட்டதுக்கும், படிப்புக்கும் நாங்க ஓடணும்.

ரெண்டு கிலோமீட்டர் நடந்து போயித்தான் மட்டவெட்டு தொடக்கப் பள்ளியில 'அ-னா', 'ஆ-வன்னா' கத்துக்கணும். அஞ்சாம் கிளாஸைத் தாண்டினா நடுப்பாலூர் நடுநிலைப் பள்ளிக்கு நாலு கிலோமீட்டர் நடக்கணும். எட்டாம் கிளாஸைத் தாண்டினா காஞ்சி உயர்நிலைப்பள்ளிக்கு எட்டு கிலோமீட்டர் சைக்கிள உருட்டணும்.

இந்த ஓட்டப்பந்தயத்துக்கு எங்களைத் தயார் பண்றதுல எங்க ஊரு வாத்தியாருங்க ரொம்ப உஷார். 1960-களின் பாதியில நான் அஞ்சாம் கிளாஸ் முடிச்சப்போ, மறுபடியும் அதே கிளாஸ்ல உட்கார வச்சாங்க. படிப்பு வரலன்னு இல்ல, என் ஒசரம்தான் பிரச்சனை! நான் உண்மையிலேயே ரொம்பக் குட்டையாதான் இருந்தேன்.

பெரிய பள்ளிக்கூடத்துக்கு அத்தனை தூரம் போறதுக்கு என் குட்டிப் பாதம் எட்டாதுன்னு நெனச்சாரோ என்னவோ, எங்க விட்டல் வாத்தியாரு என் மேல இருந்த பாசத்துல, "தம்பி... நீ இன்னும் கொஞ்சம் வளரணும்டா, அதுவரைக்கும் இங்கேயே இன்னொரு வருஷம் உட்காரு"ன்னுட்டாரு.

உசரம் கம்மியா இருக்குறது படிப்புக்கே தடையா வரும்னு அந்த வயசுல நான் நெனச்சுக்கூட பாக்கல. அப்படி ஒரு வருஷம் அதே அஞ்சாம் கிளாஸ் பெஞ்சுல தேமேன்னு உட்கார வேண்டி நேர்ந்தது.

எங்களை 'கொட்டாக்காரங்க'ன்னு ஊர்க்காரங்க சில பேரு ஏளனமா பேசுவாங்க. ஆனா, அந்தப் பேச்சையெல்லாம் ஒடைச்சு எறிஞ்சவர் எங்க கண்ணன் அண்ணன். எழுபதுகளுக்கு முன்னாடியே பட்டப் படிப்பைத் தொட்டு, எங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியா நின்னாரு. அவரோட படிப்புதான் எனக்குள்ள ஒரு பெரிய நம்பிக்கையை வெதச்சதா? அந்த வயசுல அதெல்லாம் எனக்குத் தெரியாது. "உசரம் முக்கியமில்லடா... நாம தொடுற உயரம்தான் முக்கியம்"னு ஒரு வைராக்கியம் இருந்ததான்னும் தெரியாது.

“படித்தால் மட்டும் போதுமா?”
'சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா…  
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்  
அதுதாண்டா வளர்ச்சி’ என்று அன்றைக்கு சும்மாவா பாடினார் பட்டுக் கோட்டையார்!

ஆளு வளரலேன்னாலும் நான் ஆறாம் கிளாசு போறதுக்குத் தயாரானேன்.

குறிப்பு:
மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) நூலில் நவிர மலையை ஆண்ட நன்னனின் தலைநகரான செங்கண்மாநகர் பற்றிக் குறிப்பிடும் வரிகள், "செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை" (அடி 10) என்பதாகும்.

இது இன்றைய செங்கம் என்று சொல்லப்பட்டாலும், மட்டவெட்டு மாரியம்மன் கோயில் அருகில் புதையுண்டுபோன நகரமும் செங்கண்மா நகரமாக இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்தான் இதை ஆராய்ந்தறிய வேண்டும்.

தொடரும்…

பொன்.சேகர்

தொடர்புடைய பதிவுகள்

Thursday, February 12, 2026

எழுதப்படாத பக்கங்கள்: ஓர் அறிமுகம் (1)

வாசிப்பும் வாழ்வியலும்: ஒரு தேடல்

அறிவியல், அரசியல், ஆன்மீகம், சிறுகதை, நாவல், இலக்கியம் எனப் பல தளங்களில் நான் வாசித்ததையும், அவை என்னுள் ஏற்படுத்திய உணர்வுகளையும், எனது வாழ்க்கை அனுபவங்களையும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக
வலை உலகில் எழுதி வருகிறேன்.

நாம் வாசிக்கும் நூல்கள் வெறும் கதைகளாகவோ கருத்துகளாகவோ மட்டுமல்ல. அவை அந்தந்த காலகட்டத்தின் அரசியல் சூழல், ஆன்மீகப் பார்வை, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றைப் பிரதிபலிப்பதோடு, மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நற்செயல்கள், தீஞ்செயல்கள், நீதிபோதனைகள் போன்ற பல்வேறு அம்சங்களையும் நினைவூட்டுகின்றன.

நூல்களை வெறும் வாசிப்பாகக் கடந்து செல்லாமல், சற்று நின்று நிதானித்துப் பார்த்தால், உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப உருவாகும் சமூக மாற்றங்களையும், அரசியல் சூழலால் ஏற்படும் உற்பத்தி உறவுகளின் மாற்றங்களையும் அவற்றின் ஊடாகக் காண முடிகிறது. இவை அனைத்தும் கடந்த காலப் படைப்புகளில் மட்டுமல்ல, நிகழ்கால படைப்புகளிலும் தெளிவாக வெளிப்படுகின்றன. ஆனால் அவற்றில் ஏதோ சிலவோ, அல்லது பலவோ, நமது அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே மாறியிருப்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை.


வேர்களும் தொடக்கக் கல்வியும்

சுமார் அறுபத்து ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சாலை வசதிகளோ மின்விளக்குகளோ இல்லாத ஒரு மலையோரக் குக்கிராமத்தில், ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் எண்மரில் ஒருவனாகப் பிறந்து வளர்ந்தவன் நான், ஒத்தையடிப் பாதையில் சில கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே தொடக்கக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் முடித்தேன். அதன் பிறகு மிதிவண்டிப் பயணத்துடன் உயர்நிலைக் கல்வியைத் தொடர்ந்து, மெட்ராஸ் பட்டணத்தில் பொறியியல் பட்டயப் படிப்பைச் சிறப்பாக முடித்தேன்.

தொழில்முறைப் பயணமும் அரசியல் வாழ்வும்

திருச்சி BHEL நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே, மார்க்சிய–லெனினிய அரசியலில் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பன்முகப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தேன்.
இதனூடே  BHEL நிறுவனத்தில் நடைபெற்ற போனஸ் போராட்டத்தையொட்டி என் வேலை பறிபோனது.

அந்தக் காலகட்டத்தில் உடல்நலக் குறைவால் கோமா நிலைக்குச் சென்று மீண்டெழுந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றி, பிறகு இராணிப்பேட்டை BHEL நிறுவனத்தில் புதிதாகப் பணியில் சேர்ந்தேன். அந்தச் சூழலிலும் அரசியல் பணிகளைத் தொடர்ந்ததோடு, ஹோமியோபதி மருத்துவ முறையையும் கற்றறிந்தேன்.

எழுத்துப் பயணமும் தொடரும் தேடலும்

பணியிலிருந்து ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், இன்றும் வலை உலகில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கைப் பயணம் பன்முக அனுபவங்களைக் கொண்டதனால், அவற்றை அவ்வப்போது எழுத்தாக்கி பகிர்ந்து வருகிறேன்.

எதிர்த்து நில்’ வலைப்பூவில் “இழி குணம்தலைப்பில், தமிழ்மணி என்ற பெயரில் என் அனுபவங்களைத் தொடராக எழுதினேன். பின்னர் அவற்றைத் தொகுத்து அமேசானில் மென் நூலாகவும் வெளியிட்டேன். நான் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்தில் “குற்ற இயல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி?” என்ற நூல் மட்டும் அச்சு வடிவில் வெளியானது.

இழி குணம்என்ற தலைப்பில் என் அனுபவங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்ற உணர்வு இன்னும் என்னுள் உள்ளது. அதனால் அவற்றை மேலும் விரிவாக எழுதலாம் என எண்ணுகிறேன். நான் எழுதப் போவது கட்டுரையா, கதையா, நாவலா என்று வகைப்படுத்தத் தெரியாது. இதுவரை எதையும் நான் திட்டமிட்டு எழுதியதுமில்லை.

தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்கள் இனியும் துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கையுடன்,
எழுதப்படாத பக்கங்களை
விரைவில் எழுதத் தொடங்குகிறேன்.

பொன்.சேகர்

Wednesday, February 11, 2026

காலத்தின் சுவடுகள்: என் பயணத் தோழர்களும்... பிரிய மனமில்லா பிரிவுகளும்!

காலச் சக்கரம் உருண்டோடினாலும், சில நினைவுகள் மட்டும் நெஞ்சில் துருப்பிடிக்காமல் அப்படியே இருக்கின்றன.

பச்சை வண்ண சுசிகி மேக்ஸ் 100... 
சுமார் 25 ஆண்டுகாலம்! 
வெறும் இயந்திரமாக அல்ல, 
என் இன்ப துன்பங்களைச் சுமந்த ஒரு ஜீவனாகவே 
என்னோடு வாழ்ந்தாய். 
என் கால்கள் தளர்ந்த போதெல்லாம் நீ என் வலிமையான கால்களானாய். பிறர் செய்த தவறுகளால் சிறு விபத்துகள் நேர்ந்த போதும், 
ஒரு தாய் தன் சேயைக் காப்பது போல, அந்த அடிகளை 
உன் இரும்புச் சட்டத்திற்குள் உள்வாங்கிக் கொண்டு 
என்னைக் காத்தாய். 
என் உடல் கீறப்படாமல் இருக்க, உன் காயங்களை நீயே சுமந்தாய்.


ஸ்கூட்டி பெப் – 
குடும்பத்தில் ஓர் அங்கம்... 
உன்னோடு கூடவே, எம் குடும்பத்தின் ஒரு அங்கமாகப் பயணித்தது அந்த 'ஸ்கூட்டி பெப்'. பழையதானாலும் பாசம் குறையாத வாகனம் அது. ஆனால், ஒரு நாள் 
தெரு நாய் குறுக்கிட்ட அந்த நொடி... எதிர்பாராத விபத்து. என் முழங்கையில் நேர்ந்த எலும்பு முறிவு, என் உடல் நலனை மட்டுமன்றி, என் மன உறுதியையும் உலுக்கியது.


பிரிய நேர்ந்த கனத்த தருணம்... 
"இனி பழைய வாகனங்கள் வேண்டாம்" என்ற குடும்பத்தினரின் அக்கறையான குரல், 
என் உள்ளுக்குள் ஒரு கட்டளையாக ஒலித்தது. அந்த ஒரு விபத்து, 
உன்னையும் (மேக்ஸ் 100), 
அந்த ஸ்கூட்டியையும் ஒரே நேரத்தில் பிரிய வைத்தது.
இன்று நீ (மேக்ஸ் 100) வேறொருவரின் கைகளில் புதுப்பொலிவுடன் ஜொலிப்பதைக் காணும் போது, என் பழைய காதலுக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்ததாக உள்ளம் மகிழ்கிறது. ஆனால், அந்த ஸ்கூட்டி பெப் என்னவானது? எங்கே இருக்கிறது? என்று தெரியவில்லை. அதுவும் எங்காவது ஒரு மூலையில் 
நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதே என் அவா.


இன்று... 
வாகனங்கள் இன்றி 
இரண்டு ஆண்டுகளாய் 
என் பயணங்கள் தொடர்கின்றன. ஆனால், சாலையைக் கடக்கும் போதெல்லாம் உன் எஞ்சின் சத்தம் 
என் காதுகளில் ரீங்காரமிடுகிறது. 
நீ வெறும் இரும்புத் துண்டல்ல... என் பொற்கால நினைவுகளின் நிழற்பயணி.

காதலின் கவன் – 
ஓடினேன் ஓடினேன்… 
மீண்டும் ஒருமுறை நீ என் கால்களாவாயா? அல்லது இந்த நினைவுகளின் கதகதப்பே என் மீதி வாழ்வுக்குப் போதுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஊரான்

குறிப்பு: கவன்-"காலம் கடந்து போனாலும், தீராத காதலால் உந்தப்பட்டு மீண்டும் அந்தப் பழைய நினைவுகளுக்கே திரும்புதல்"

பளபளக்கும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எல்லாம் தரம் தானா? - நீங்கள் ஏமாறாமல் இருக்க சில உண்மைகள்!

"தக தக" என மின்னுவதைப் பார்த்து, தரம் என நம்பி நாம் வாங்கும் தட்டு, கரண்டி, தண்ணீர் குழாய்கள் (Taps) போன்றவை சில நாட்களிலேயே துருப்பிடித்து 'பல்ளிளிப்பதை' பார்த்திருப்போம். "ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எப்படி துருப்பிடிக்கும்?" என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு.

உண்மை என்னவென்றால், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அதன் அணு அமைப்பைப் பொறுத்து இரண்டு முக்கிய வகைகள் உண்டு. இதில் ஒன்று துருவை எதிர்க்கும், மற்றொன்று எளிதில் துருப்பிடிக்கும்.


முக்கிய வகைப்பாடுகள்:

1. ஆஸ்டெனிட்டிக் (Austenitic - 200 & 300 Series): 

இதில் குரோமியத்துடன் நிக்கல் (Nickel) கலந்திருக்கும். இது துருவை மிகச்சிறப்பாக எதிர்க்கும் திறன் கொண்டது.

Grade 304: இது மிகச்சிறந்த தரம். வாழ்நாள் முழுவதும் உழைக்கும். இதில் காந்தம் ஒட்டாது.

Grade 202: இதில் நிக்கல் குறைவாக இருப்பதால், ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் (குழாய்கள், சிங்க்) பயன்படுத்தினால் விரைவில் துருப்பிடிக்கும். இதிலும் காந்தம் ஒட்டாது என்பதால் பலரும் இதை '304' என நம்பி ஏமாந்துவிடுகிறார்கள்.

2. ஃபெரிடிக் (Ferritic - 400 Series):

இதில் நிக்கல் இருக்காது, வெறும் குரோமியம் மட்டுமே இருக்கும். இது இரும்பை ஒத்த குணமுடையது.
Grade 430: இதில் காந்தம் நன்றாக ஒட்டும். பார்ப்பதற்கு பளபளப்பாக இருந்தாலும், தண்ணீர் அல்லது ஈரப்பதம் பட்டால் மிக எளிதில் துருப்பிடித்துவிடும். விலையும் மிகவும் குறைவு.

எந்த வகை ஸ்டீல் சிறந்தது? - ஒரு பார்வை

அம்சம்ஆஸ்டெனிட்டிக் (304)ஆஸ்டெனிட்டிக் (202)ஃபெரிடிக் (430)
காந்தம் ஒட்டுமா?ஒட்டாதுஒட்டாதுநன்றாக ஒட்டும்
துரு எதிர்ப்புமிக அதிகம்மிதமானதுகுறைவு
விலைஅதிகம்நடுத்தரம்குறைவு
சிறந்தது எது?சமையலறை & குழாய்கள்பாத்திரங்கள் & கைப்பிடிகள்அலங்காரப் பொருட்கள்

வாங்கும் போது ஏமாறாமல் இருப்பது எப்படி?

காந்த சோதனை (Magnet Test): ஒரு சிறிய காந்தத்தை எடுத்துச் செல்லுங்கள். காந்தம் பலமாக ஒட்டினால் அது ஃபெரிடிக் (400 series) வகை. இது வீட்டு உபயோகத்திற்கு (குறிப்பாக தண்ணீர் படும் இடங்களுக்கு) ஏற்றதல்ல.

காந்தம் ஒட்டவில்லை என்றால் அது நல்லதா? இல்லை! ஏனெனில் ஆஸ்டெனிட்டிக் வகையிலேயே தரம் குறைந்த 202 கிரேடிலும் காந்தம் ஒட்டாது.

கெமிக்கல் டெஸ்ட் (SS Test Solution): பெரிய அளவில் பொருட்கள் வாங்கும் போது, கடைகளில் கிடைக்கும் 'SS Test Solution' திரவத்தைப் பயன்படுத்தலாம். 202 கிரேடு ஸ்டீலில் இதை வைத்தால் சிவப்பாக மாறும், உயர்தர 304-ல் நிறம் மாறாது.

ISI முத்திரை: தரமான பொருட்களில் SS 304 அல்லது SS 202 போன்ற தரக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருக்கும். அதை கவனித்து வாங்குங்கள்.

"மின்னுவதெல்லாம் பொன்னல்ல" என்பதைப் போல, "பளபளப்பதெல்லாம் தரமான ஸ்டீல் அல்ல". விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக தரம் குறைந்த ஸ்டீலை வாங்கி, பின்னாளில் துருப்பிடித்து, அதைக் கண்டு வருந்தி, துரு நீக்க 'பிளீச்சிங் போடவா, ஆசிட் போடவா, எதைப் போட்டால் துரு நீங்கும்' என படாத பாடுபட வேண்டாமே!

வருந்துவதை விட, வாங்கும்போதே சரியான கிரேடு எது என அறிந்து வாங்குவது புத்திசாலித்தனம்.

ஊரான்