Saturday, 25 April 2026

மூத்திரத்தில் தொடங்கும் கொள்ளை... கோட்டை வரை நீளும் அவலம்!

நேற்றுதான் ஜனநாயகக் கடமையை ஆற்றி முடித்தோம். விரலில் வைத்த மை கூட இன்னும் காய்ந்திருக்கவில்லை; அதற்குள் அதிகார மட்டத்தின் ஆசீர்வாதத்தோடு நடக்கும் ரௌடித்தனம் நம்மைத் திகைக்க வைக்கிறது.


24.04.2026 அன்று இரவு 8.00 மணிவாக்கில் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் சித்தூர் பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு அருகே உள்ள கழிவறைக்குச் சென்றேன். அங்கு கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்த ஒரு முரட்டுத் தாடிக்காரன், சிறுநீர் கழிக்கப் பத்து ரூபாய் கேட்டான்.

"அரசு நிர்ணயித்த கட்டண அறிவிப்பு எங்கே?" என்று நான் கேட்டதற்கு,
"அதெல்லாம் கிடையாது... பத்து ரூபாய் கொடுத்துவிட்டு உள்ளே போ, இல்லையேல் தள்ளிப் போ" என்றான் அலட்சியமாக.

அரசு நிர்ணயித்த தொகை என்றால் கொடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், பகற்கொள்ளை அடிப்பதைக் காணும்போதுதான் குருதி கொதிக்கிறது. பேச்சு முற்றி, 'நீ, வா, போ' என தகராறில் முடிந்தது. அங்கே அவனுக்கு ஆதரவாக இருவர் நின்றனர். ஆனால், அநியாயத்தைக் கேள்வி கேட்ட எனக்கு ஆதரவாக ஒருவருமில்லை.

சிறுநீரிலும் காசு பார்க்கும் இந்தக் கயமைத்தனம், எந்த 'மாடல்' ஆட்சியானாலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இரவு நேரம் என்பதால் நான் திரும்பி வந்துவிட்டேன்; இதுவே பகலாக இருந்திருந்தால் நிச்சயம் கூட்டத்தைக் கூட்டி கேள்வி கேட்டிருப்பேன்.

இங்கே சிறுநீரில் தொடங்கும் இந்தச் சில்லரைக் கொள்ளைதான், சென்னை கோட்டை வரை பெருங்கொள்ளையாக நீள்கிறது. 

உரிய அதிகாரிகளின் காதுகளுக்கு இது எட்டினாலும், அவர்களது வாய்கள் எலும்புத் துண்டுகளைக் கவ்விக்கொண்டிருப்பதால், அவை ஒருபோதும் பேசப்போவதில்லை...

பொன்.சேகர்
வழக்குரைஞர்
24.04.2026
***
மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புகார் மனு ஒன்றை வேலூர் மாநகராட்சி ஆணையர், வேலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு 25.04.2026 அன்று அனுப்பி உள்ளேன்.

மேலும் கழிவறைக் கட்டணம் மற்றும் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளேன்.

உரிய நடவடிக்கை இல்லை எனில் விரைவில் களப்போராட்டம் தொடரும்.
***
வேலூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அனுப்பிய புகார் மனு:

Sub: Complaint regarding overcharging and lack of transparency in public toilet fee – Vellore New Bus Stand

Respected Sir/Madam,

I wish to bring to your attention an issue of possible overcharging and lack of transparency in the public toilet facility at Vellore New Bus Stand (near Chittoor bus bay).

On 24.04.2026 at around 8:00 PM, I was asked to pay Rs.10 for urination. However:
  • No official fee structure display was available
  • No receipt was issued
  • The person collecting money refused to provide any official clarification
This raises concerns regarding:
  • Unauthorized or excess fee collection
  • Absence of transparency in a public facility
  • Possible violation of civic norms
I kindly request:

1. Immediate inspection of the said facility

2. Display of official fee structure clearly for public awareness

3. Disclosure of contractor details and agreement terms

4. Necessary action against any irregularities

This is a basic public service, and such issues affect common people daily. I request your prompt intervention.

Photos  are attached for reference.

Thanking you,
Yours sincerely,

P.Sekar, BE, ML, M.Phil.,
Advocate, 

***
RTI மனு:

To

The Public Information Officer (PIO),
Vellore City Municipal Corporation,
Vellore.

Subject: Request for information under RTI Act – Public Toilet Management at Vellore New Bus Stand

Sir/Madam,

I request the following information under the Right to Information Act, 2005 regarding the public toilet facility located at Vellore New Bus Stand (near Chittoor bus bay):

1. What is the government fixed official fee for usage of public toilets (urination / defecation)?

2. Whether separate charges are prescribed for urination and defecation? If yes, provide details.

3. Copy of the contract/agreement awarded for maintenance of the said toilet facility.

4. Name and details of the current contractor.

5. Duration of the contract and terms & conditions regarding fee collection.

6. Whether it is mandatory to display the fee structure publicly? If yes, provide relevant rule/order copy.

7. Details of inspections carried out in the last 1 year.

8. Action taken against complaints of overcharging, if any.

I request that the above information be provided within the stipulated time.

Applicant Details:

Name: P.Sekar, BE, ML, M.Phil., 
Advocate 

Date: 25.04.2026

Thursday, 23 April 2026

வாடும் பயிரும்... வருந்தும் நெஞ்சும்!

இருப்பதை வதைக்கும் கோடை… இல்லாததை உயிர்ப்பிக்கும் மழை.

சித்திரையில் ஏர் உழுத நாட்கள் நினைவாகிப் போயின. மாடுகள் காணாமல் போனது மட்டும் அல்ல… மண் வாசனையே இப்போது நினைவாகி விட்டது.

கொல்லையில் சனி மூலையில் கற்பூரம் ஏற்றி, கதிரவனை வணங்கி ஏர் உழுத காட்சிகளும், வெல்லம் கலந்த ஊறவைத்த அரிசியை அசைபோட்ட அந்தப் பண்பாட்டு விழுமியங்களும் இன்று வெறும் நினைவுகளாகவே மாறிப்போயின.

கோடை மழை எட்டிப் பார்க்காததால் புரட்டிப் போட்ட மண்புழுதியின் வாசம்கூட நமக்கு மறந்துபோனது.

கடந்த ஆண்டு மழை பொய்த்தது. இந்த ஆண்டோ ஒரு துளி கூட விழவில்லை. 

குளங்கள் வற்றின. ஏரிகளில் படிந்த பாசிகள் வெடித்துக் கிடக்கின்றன;  கிணறுகள் தரைதட்டின.

வெக்கையைத் தணிக்க உதவிக்கரம் நீட்டும் புங்கையும் வேம்பும் மட்டுமே இன்னும் பசுமை படர்ந்து குளிர்ச்சி தருகின்றன. 

ஆனால்… பயிர் பச்சைகளின் நிலை?


பொதுவாக நான் கிராமத்திற்குச் சென்று வந்தால் ஒருவித குதூகலம் என்னிடம் வெளிப்படும். ஆனால், இம்முறை சென்றபோது கண்ட காட்சிகள் நெஞ்சைப் பிழிந்தன:

இரண்டு மாதங்களுக்கு முன் உயிரோடு இருந்த பப்பாளிச் செடிகள் இன்று கருகி மண்ணோடு கலந்துவிட்டன. காய்த்துக் குலுங்கிய பப்பாளிகள் கூட வெம்பிப் போய் உயிரற்ற உடல்களாக மாறிவிட்டன.

கொளுத்தும் வெயிலில் 'நீரிழப்பால்' (Dehydration) துவண்டு விழும் மனிதர்களைப் போல, வாழைகள் துவண்டு உடைந்தன.

வாழ்ந்து முடித்த முதியவர்களின் இழப்பைக்கூட எளிதாகக் கடந்துவிடலாம். ஆனால், குடும்பத்தைக் காக்க வேண்டிய
வளரும் பருவக் காளை ஒன்று சாய்ந்த துக்கம் போல, குருத்து வதங்கி விழும் தென்னைகளைப் பார்க்கும்போது, அது ஒரு மரணம் போலத் தோன்றுகிறது.

ஆசையாய் வளர்த்த திராட்சைக் கொடியையும் இப்போது காணவில்லை.

இத்தனை அவலங்களுக்கு இடையிலும், ஆழ வேர் பிடித்து, மண்ணின் ஈரத்தை உறிஞ்சி உயிர்ப்புடன் இருந்த ஒரு மாஞ்செடியில்... தொங்கிய மாங்காய்களைக் கண்டபோது நெஞ்சில் லேசாய் ஈரம் பாய்ந்தது.

விபத்தில் சிக்கிய இளைஞனைக் காப்பது போல், குற்றுயிராய் துடித்துக் கொண்டிருந்த செடிகளைக் காக்க, 
காசு கொடுத்து டேங்கர் லாரியில் நீர் வாங்கி உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் இது எத்தனை நாளைக்கு?

“வானம் கருக்காதா?” என்ற ஏக்கத்தில்
செடிகளும்…
நெஞ்சும்…
ஒன்றாகத் துடிக்கின்றன.

ஊரான்




Wednesday, 22 April 2026

ஒற்றை விரல் புரட்சியும்... ஓயாத நமது ஜனநாயகக் கடமையும்!

தேர்தலில் வாக்களித்து விட்டு, விரலில் படிந்த மை காயும் முன்பே, "எனது ஜனநாயகக் கடமை முடிந்தது" என்று சமூக ஊடகங்களில் பலரும் பதிவிடுவதைக் காண்கிறோம். ஒரு சாதனையைச் செய்து முடித்த திருப்தி அவர்களிடம் தெரிகிறது. ஆனால், உண்மையில் ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு பொத்தானை அழுத்துவதோடு முடிந்துவிடும் ஒரு சடங்கா?


ஜனநாயகம் என்பது என்ன?


சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - இந்த மூன்றையும் ஒரு சமூகத்தின் இரத்த நாளங்களில் ஓடச் செய்வதுதான் ஜனநாயகம். இவை மூன்றையும் அன்றாடம் காப்பதுதான் ஒரு உண்மையான குடிமகனின் கடமையே தவிர, வாக்களிப்பது மட்டுமே அல்ல.

  • சுதந்திரம்: நமது அன்றாட வாழ்வில் எண்ணற்றோரின் சுதந்திரம் பறிக்கப்படுவதை நாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

  • சமத்துவம்: சாதி, மத, பொருளாதாரப் பாகுபாடுகளால் சமத்துவம் இங்கே ஒவ்வொரு நாளும் மறுக்கப்படுகிறது.

  • சகோதரத்துவம்: சக மனிதனைத் தோழமையுடன் பார்க்கும் சகோதரத்துவம் இன்று கானல் நீராகி வருகிறது.

அன்றாடக் கடமை


ஜனநாயகக் கடமை என்பது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருக்கிறது.

  1. களமாடுதல்: அநீதி இழைக்கப்படும் இடங்களில் நேரில் நின்று போராடுவது.

  2. குரல் கொடுத்தல்: நேரடியாக நிற்க முடியாவிட்டாலும், அநீதிக்கு எதிராகக் குரலை உயர்த்துவது.

  3. துணை நிற்றல்: எதையும் செய்ய முடியாவிட்டாலும், போராடுபவர்களுக்குத் தார்மீக ரீதியாகத் துணை நிற்பது.

இந்தக் கடமையை நாம் ஒவ்வொரு நாளும் ஆற்ற வேண்டியுள்ளது.

இது சொர்க்க பூமி அல்ல!

ஒரே ஒரு நாள் வாக்களித்துவிட்டால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் சொர்க்க பூமி அல்ல. இது முரண்பாடுகளும் சிக்கல்களும் நிறைந்த ஒரு சமூகத் தளம். ஒற்றை விரலில் மை வைப்பதால் மட்டும் ஜனநாயகம் மலர்ந்துவிடாது.

ஜனநாயகம் என்பது அரசாங்கம் போடும் பிச்சை அல்ல; அது மக்களாகிய நாம் போராடிப் பெற வேண்டிய உரிமை.

முடிவுரை

வாக்குச்சாவடியில் அழுத்தும் ஒற்றை விரல் ஒரு அடையாளம்தான். ஆனால், அதிகாரத்தின் அநீதிகளுக்கு எதிராக ஒரு சேர நமது கைகள் உயரும் போது மட்டும்தான் ஜனநாயகம் உண்மையிலேயே காக்கப்படும். மை அழிந்த பிறகும் உங்கள் மனசாட்சி விழித்திருக்கட்டும். அதுதான் உண்மையான ஜனநாயகக் கடமை!

ஊரான்

சாதி ஒழிப்பா, புரட்சியா? – எது முதலில்?

இந்தியச் சமூகத்தைப் பற்றிய அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் நீண்டகாலமாக ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது: 

“முதலில் சாதி ஒழிப்பா? அல்லது வர்க்கப் புரட்சியா?”

“முதலில் புரட்சிதான்” என்று வாதிடுபவர்கள் பெரிய அளவில் புரட்சியை நோக்கி முன்னேறவில்லை; அதேபோல் “முதலில் சாதி ஒழிப்புதான்” என்று வலியுறுத்துபவர்கள் கூட அதற்கான தெளிவான செயல்முறைத் திட்டத்தை முன்வைக்கவில்லை. 


இந்தச் சூழலில், சமூக ஆய்வாளர் Anand Teltumbde முன்வைக்கும் வாதங்களையும், இந்திய சமூகத்தின் நடைமுறை அனுபவங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

1. அக்கம் பக்கமாக நிகழ வேண்டிய மாற்றம்

“எது முதலில்?” என்ற கேள்விதான் சில நேரங்களில் தவறான வழிநடத்தலுக்கு இட்டுச் செல்கிறது. உண்மையில், சாதி ஒழிப்பும் வர்க்கப் போராட்டமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அக்கம் பக்கமாக முன்னேற வேண்டிய சமூக மாற்றங்களாகவே அவை பார்க்கப்பட வேண்டும்.

Karl Marx கூறுவது போல, மதம் என்பது வெறும் தனிப்பட்ட நம்பிக்கை அல்ல; அது சமூக துன்பங்களின் வெளிப்பாடாகும். அடிப்படை சமூக-பொருளாதார நிலைமைகள் மாறும்போது மதமும் அதனோடு தொடர்புடைய பிற்போக்குச் சடங்குகளும் பலவீனமடையும்.
இந்தியச் சூழலில் சாதி அமைப்பு, குறிப்பாக இந்துமதத்தின் வரலாற்றுப் பண்பாட்டு அமைப்போடு ஆழமாக இணைந்துள்ளது. அதனால் இந்து மத அடிப்படையிலான சமூக கட்டமைப்பு சவாலுக்குள்ளாகாமல் சாதி ஒழிப்பு முழுமையாக சாத்தியமில்லை என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

2. அரசியல் சட்டமும் தேர்தல் முறையும்: சாதியின் மறைமுகத் தொடர்ச்சி

ஆனந்த் தெல்தும்டே தனது ஆய்வுகளில் இரண்டு முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் முரண்பாடு
இந்திய அரசியலமைப்புச் சட்டம் “சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்” என்ற வரையறையின் அடிப்படையில் பல நலத்திட்டங்களை வழங்குகிறது. சமூக நீதி நோக்கில் அமைக்கப்பட்ட இந்த ஏற்பாடுகள், நடைமுறையில் சாதியச் சிக்கலை இது பலவீனப்படுத்தியுள்ளதா அல்லது மறைமுகமாக பலப்படுத்தியுள்ளதா என்பதையும் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. 

சாதி என்பது இந்திய சமூகக் கட்டமைப்போடும், மதப் பண்பாட்டோடும் ஆழமாக இணைந்த ஒரு அமைப்பு. எனினும் இன்றைய சமூக சூழலில், “சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்” என்பதற்கு மாற்றாக சாதிவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு போன்ற நடைமுறைகள், ஓரளவுக்கு சாதி அடிப்படையிலான அதிகாரச் சமநிலையை மாற்ற உதவக்கூடும். 

எனவே, தற்போதுள்ள வரையறைகளை மேலும் தெளிவான சமூக நீதிக் கோணத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. 

அதற்கு ஏற்ப சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமும் இங்கே உணரப்படுகிறது.

தேர்தல் முறையில் சாதியின் தாக்கம்

இந்தியாவில் நிலவும் First-Past-The-Post தேர்தல் முறையில், பல இடங்களில் சாதிதான், தேர்தல் வெற்றிக்கான அடித்தளமாக அல்லது “எரிபொருளாக” செயல்படுகிறது. 

ஒரு தொகுதியில் எந்தச் சாதியினர் அதிகமாக உள்ளார்களோ, அவர்களே பெரும்பாலும் அரசியல் ஆதிக்கத்தைப் பெறும் வாய்ப்பு அதிகமாகிறது. பலமுனைப் போட்டிகளில் 20 சதவீத வாக்குகள் பெற்றால்கூட வெற்றி பெறும் சூழல் உருவாகுவதால், தற்போதைய தேர்தல் முறை சாதி அடிப்படையிலான அரசியலை மேலும் உறுதிப்படுத்துகிறது.

இதற்கு மாற்றாக தெல்தும்டே முன்வைக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) முறை, சமூக பிரதிநிதித்துவத்தை வேறுவிதமாக அமைக்கக்கூடிய ஒரு மாற்று வாய்ப்பாக கருதப்படுகிறது. 

3. பண்பாட்டுப் புரட்சி: மாற்றத்தின் சமூக அடித்தளம்

சாதி என்பது வெறும் சட்ட அல்லது அரசியல் பிரச்சனை மட்டும் அல்ல; அது ஒரு பண்பாட்டு மற்றும் சமூக பழக்கவழக்கங்களின் அமைப்பு.
அதனால் சமூக மாற்றம் பண்பாட்டு தளத்திலும் நிகழ வேண்டியது அவசியமாகிறது. இந்த மாற்றம் வெறும் கருத்தரங்குகளிலோ புத்தகங்களிலோ மட்டுமே நிகழாது; அது சமூகப் போராட்டங்களின் அனுபவங்களின் மூலம்தான் உருவாகும்.

ஒரு மனிதன் பொதுவுடைமைச் சமூகப் போராட்டங்களில் ஈடுபடும்போது, அவர் இயல்பாகவே பல மதச் சடங்குகளிலிருந்தும், சாதிய- சமூகப் பிரிவினைகளிலிருந்தும் வெளியே வர ஆரம்பிக்கிறார். அந்தப் போராட்டக் களமே அவருக்குப் புதிய பண்பாட்டை உருவாக்குகிறது.

அங்குதான் சாதி அடையாளங்கள் மெதுவாக கரைந்து, வர்க்க அடையாளம் முன்னிலைப்படத் தொடங்குகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் போன்ற சமூக மாற்றங்களும் அத்தகைய சூழல்களில் இயல்பான வாழ்வியல் மாற்றங்களாக தோன்றுகின்றன.

4. பொருளாதார மாற்றமும் சமூக மாற்றமும்

சாதி அமைப்பு ஒரு பண்பாட்டு அமைப்பு மட்டுமல்ல; அது பொருளாதார உறவுகளோடும் இணைந்துள்ளது. நிலம், தொழில், உழைப்பு மற்றும் வளங்களின் கட்டுப்பாடு ஆகியவை பல இடங்களில் சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளன.
சமூகத்தின் பொருளாதார அடிக்கட்டுமானத்தை மாற்றும் அரசியல் சக்தியாக பொதுவுடைமை இயக்கங்கள் தங்களை முன்வைக்கின்றன. உடைமை உறவுகள் (Property relations) மாற்றப்படும் இடத்தில்தான் சாதி அதிகார உறவுகளும் சவாலுக்குள்ளாகும்.

அதனால் சாதி ஒழிப்பையும் வர்க்கப் போராட்டத்தையும் முற்றிலும் பிரித்துப் பார்க்காமல், இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புடைய சமூக மாற்றங்களாக அணுக வேண்டிய தேவை இருக்கிறது.

முடிவுரை

இன்று பலவீனமாக இருக்கும் பொதுவுடைமை இயக்கங்கள் கூட இந்தியச் சமூகத்தின் சாதி அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு தங்களை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

பண்பாட்டுப் புரட்சியும் பொருளாதாரப் புரட்சியும் இணையும் புள்ளியில்தான் சாதியற்ற சமூகம் உருவாகும். அந்த இணைப்பை உருவாக்கும் அரசியல் மற்றும் சமூக முயற்சிகள்தான் எதிர்கால மாற்றத்தின் மையமாக அமையும்.

வர்க்கப் புரட்சியைப் பேசாத வேறு எந்தச் செயல்பாடும் சாதி ஒழிப்பை சாத்தியப்படுத்தாது. 

***
குறிப்பு: இக்கட்டுரையின் சமூக ஆய்வுக்கான அடிப்படை சாரம் Anand Teltumbde அவர்களின் “A Society Built as Caste Cannot Be Reformed Into Equality” என்ற கட்டுரையிலிருந்து பெறப்பட்டது. இருப்பினும் இக்கட்டுரையில் முன்வைக்கப்படும் தீர்வுக் கண்ணோட்டம் பொதுவுடைமை இயக்கங்களின் பண்பாட்டு மற்றும் வர்க்கப் போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் அமைந்ததாகும்.

ஊரான்

Tuesday, 21 April 2026

லெஃப்ட்ல ப்ரிட்ஜ்… ரைட்ல சிலிண்டர்… நேரா போனா ஆட்சி! தமிழக தேர்தலின் ‘அன்லிமிடெட் இலவச ஆஃபர்

ஆண்ட கட்சியும் ஆளும் கட்சியும் 'இலவசப்' போட்டியில் மல்லுக்கட்டுவது தமிழக அரசியலில் காலங்காலமாக நடக்கும் ஒரு குஸ்தித் திருவிழா.

ஆனால், சமீபத்தில் களம் இறங்கிய தம்பியின் கட்சி, சீனியர்களுக்கே செக் வைக்கும் வகையில் இலவசங்களை அள்ளி வீசியிருப்பதைப் பார்த்தால், "வாழ்க வசந்தகாலம்" என்று பாடத் தோன்றுகிறது.


கட்சிகளின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், அது மேனிஃபெஸ்டோ மாதிரியே இல்லை; ஏதோ ஆடியில் வரும் 'மெகா டிஸ்கவுண்ட்' சேல்ஸ் நோட்டீஸ் போல இருக்கிறது!

பட்டியலைப் பாருங்களேன்
பெண்களுக்குப் பேருந்து இலவசம், சிலிண்டர் இலவசம், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், முதியோருக்குப் பென்ஷன், 
இலவச மின்சாரம், கல்யாணத்துக்குக் காசு, 
குழந்தை பிறந்தால் காசு... ஒரு கட்டத்தில் மூச்சு வாங்குகிறது. போதாக்குறைக்கு 'இலவச பிரிட்ஜ்' வேறு!

நிஜமாவே கேக்குறேன் தம்பிகளா... எதுக்கு இவ்வளவு பெரிய லிஸ்ட்டு? இந்த லிஸ்ட்டை மக்களே ஞாபகம் வெச்சுக்க முடியாது. அதுக்காகவே ஒரு கமிட்டி போட வேண்டியிருக்கும் போல!

மக்கள் சார்பில் ஒரு சின்ன வேண்டுகோள்:
அரசியல்வாதிகளே... ரொம்ப ரிஸ்க் எடுக்காதீங்கப்பா. நீங்க இவ்வளவு பெரிய பட்டியலைக் கொடுத்து நிறைவேத்த முடியாம திண்டாடுறதுக்கு பதிலா, ரொம்ப எளிமையான ஒரு 'பேக்கேஜ்' கொடுத்துடுங்க.

எங்களுக்கு மூணே மூணு விஷயம் போதும்:
  1. வயிற்றுக்குச் சோறு (மூணு வேளையும் அன்லிமிடெட்!)
  1. உடம்பை மறைக்கத் துணி (நிச்சயமா விஜய் படம் போட்டது வேணாம்!)
  1. நிம்மதியாத் தூங்க ஒரு இடம்.
இந்த மூணையும் மட்டும் நீங்க கச்சிதமா 'இலவசமா' பண்ணிக் கொடுத்துட்டீங்கன்னு வைங்க...

எங்களுக்கு எதுக்கு இலவச பஸ்? நாங்க எதுக்கு கேஸ் வாங்கப் போறோம்? 
எதுக்கு சிலிண்டர், பிரிட்ஜ், கூப்பன்லாம்?
இவ்வளவு ஏன்... நாங்க எதுக்கு விவசாயம் பண்ணப் போறோம்? எங்களுக்கு எதுக்கு கடன் தள்ளுபடி? 
நாங்க எதுக்குக் கஷ்டப்பட்டுப் படிச்சு வேலை இல்லாத பட்டதாரியா ஆகப்போறோம்? எங்களுக்கு எதுக்கு வேலை இல்லா ஊக்கத்தொகை?

சிம்பிளாச் சொல்லப்போனா:
நீங்க அந்த மூணு கோரிக்கைய மட்டும் இலவசமா செஞ்சுடுங்க...

நாங்க பாட்டுக்குச் சாப்பிட்டோமா…
அப்படியே அந்த இடத்துல படுத்துத் தூங்குனோம்னா போதும்.
“சிவனே!”ன்னு நிம்மதியா இருப்போம்.  

நீங்க ஆட்சியைப் பிடிச்சு அள்ளப்போறது என்னமோ குறையப்போறது இல்ல. அப்புறம் எதுக்கு இந்த மெகா சீரியல் மாதிரி நீண்டுகிட்டே போற இலவசப் பட்டியல்?

வாக்குறுதிகளை 'சிம்பிளா' முடிங்கப்பா... நாங்க 'கண்ணை மூடிக்கிட்டு' ஓட்டுப் போடுறோம் (ஏன்னா முழிச்சிருந்தா இந்த லிஸ்ட்டைப் பார்த்து கண்ணே வேர்க்குது!).

ஊரான்