ஆடை என்பது ஒரு மனிதனை நாகரிகமாக வெளிப்படுத்துவது மட்டுமல்ல; அது அந்தந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடலைப் பாதுகாப்பதற்கான ஒரு கருவியும் ஆகும்.
ஆனால் தமிழ்நாட்டின் சுட்டெரிக்கும் வெயில் காலங்களில்கூட கழுத்தில் ‘டை’ கட்டிக்கொண்டு, உடல் முழுவதையும் மூடும் ‘கோட்டு–சூட்டு’ அணிவதும், அளவுக்கு அதிகமான மேக்கப் போடுவதும் ஒரு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது.
இது உண்மையில் அறிவார்ந்த செயலா? அல்லது வெறும் போலி கௌரவத்தின் வெளிப்பாடா?
குளிர் தேசங்களின் கவசம்
ஐரோப்பா போன்ற நாடுகளில், கடும் குளிரிலும் பனிப்பொழிவிலும் உடலைப் பாதுகாப்பதே ‘கோட்டு–சூட்டு’ உடைகளின் அடிப்படை நோக்கம். கழுத்து வழியாகக் குளிர் காற்று உடலுக்குள் புகாமல் இருக்கவே ‘டை’ (Tie) பயன்படுத்தப்பட்டது.
அங்குள்ள காலநிலைக்கு அது ஒரு தேவையான பாதுகாப்பு. அதாவது, அந்த ஆடை அங்கே ஒரு ‘உயிர் காக்கும் கவசம்’.
நீதிமன்றங்களின் ‘நிழல்’ அடிமைத்தனம்
வழக்கறிஞர்கள் அணியும் கறுப்பு கோட், கழுத்தில் கட்டப்படும் வெள்ளை ‘நெக் பேண்ட்’ (Neck band) மற்றும் நீண்ட கவுன் போன்ற ஆடைகளும் இதே குளிர்காலச் சூழலில்தான் உருவானவை.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஆடை விதிகளை, 40°C வெயில் அடிக்கும் நம் நாட்டின் நீதிமன்றங்களிலும் இன்றும் தொடர்வது ஒரு வகையில் காலனிய மரபின் நிழலைத் தாங்கிக்கொண்டு வாழ்வதைப் போன்றதே.
கர்நாடகா, டெல்லி போன்ற சில இடங்களில் கோடை காலங்களில் கருப்பு கோட் அணிவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆடை என்பது ஒருவரின் அறிவையோ சட்டப் புலமையையோ தீர்மானிப்பதில்லை.
சிறு முதலாளிகளின் ‘பகட்டு’ மாற்றம்
இன்னொரு சமூகப் போக்கும் கவனிக்கத்தக்கது. நேற்று வரை எளிய ஆடையில் இருந்த ஒருவர் திடீரென பொருளாதார வசதி பெற்றவுடன் உடனே ‘கோட்டு–சூட்டு’ அணிந்து கொள்ளத் தொடங்குகிறார்.
ஆடை மாறினால் அந்தஸ்து உயர்ந்துவிடும் என்ற ஒரு மனப்பான்மை இதற்குப் பின்னால் செயல்படுகிறது. உண்மையில் இது ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.
பகட்டும் வெளிப்படையான பிம்பமும்
சமூகத்துக்குச் சேவை செய்ய வேண்டிய அரசியல்வாதிகள்கூட சில சமயங்களில் தங்களின் கொள்கைகளைவிட வெளிப்புற தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பது கவலைக்குரியது.
கண்ணாடியின் முன் அமர்ந்து கொண்டு மணிக்கணக்காகச் செய்யப்படும் அழகு அலங்காரங்களில் ஒளிந்திருக்கும் அந்தரங்க உளவியல், மேடைகளில் முழங்கும் அவர்களின் அரசியல் உரைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கின்றன.
வயதுக்கும் சூழலுக்கும் பொருந்தாத அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட மேக்கப்புகளும் வெளிப்புற அலங்காரங்களும் பல நேரங்களில் ஒரு செயற்கை பிம்பத்தை உருவாக்குகின்றன. பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கான இந்த வெளிப்புற முயற்சிகள் சமூகத்தில் ஒரு பகட்டுத் கலாச்சாரத்தை உருவாக்குகின்றன.
தலைமையும் – கருத்தாளுமையும்
உண்மையான ஆளுமை உடையில் இல்லை என்பதை நமது வரலாறே நமக்கு உணர்த்துகிறது.
தந்தை பெரியார், வே. ஆனைமுத்து போன்ற தலைவர்கள் ஒருபோதும் தங்களின் உடைக்கோ அலங்காரங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை. எளிய உடைகளிலேயே வாழ்ந்த அவர்கள், கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.
அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த ‘கருத்தாளுமை’.
அவர்களின் சிந்தனைகள் கூர்மையானவை; செயல்பாடுகள் நேர்மையானவை. அந்த அறிவார்ந்த வலிமையே அவர்களை சமூகத்தின் முன்னே கொண்டு வந்தது. கருத்தியல் வறட்சி உள்ளவர்களே தங்களை வெளிப்புற அலங்காரங்களால் மறைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆடை என்பது ஒருவரின் அறிவையோ பண்பையோ தீர்மானிப்பதில்லை. அது ஒரு மனிதனின் வெளிப்புற வடிவம் மட்டுமே.
முடிவுரை
அறிவார்ந்த சமூகம் என்பது சூழலுக்கு ஏற்றவாறு வாழ கற்றுக்கொள்வதே. குளிருக்கான ஆடைகளை வெயிலில் அணிவதும், செயற்கை அலங்காரங்களில் பெருமை காண்பதும் ஒரு பகட்டு கலாச்சாரத்தின் அறிகுறியே.
ஆடை என்பது உடலைப் பாதுகாப்பதற்கானது; போலி கௌரவத்தை வெளிப்படுத்துவதற்கானது அல்ல. உண்மையான மரியாதை மனிதனின் உடையிலோ அலங்காரங்களிலோ இல்லை — அவனுடைய சிந்தனையிலும் செயலில்தான் இருக்கிறது.
ஊரான்



.jpg)

