முன்னுரை: அடுப்பங்கரையை அணைக்கும் போர்கள்
முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் பற்றி நாம் பாடப்புத்தகங்களில் படித்திருக்கிறோம். சமகாலத்தில் நடக்கும் உக்ரைன் – ரஷ்யா போரை நாம் ஊடகங்கள் வழியாக ஒரு செய்தியாகக் கடந்து விடுகிறோம். ஆனால், எப்போது அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ ஒரு ஏவுகணையை ஏவும்போது நமக்குள் ஒரு கோபம் எழுகிறதோ, அப்போதுதான் ஒரு உண்மை புரிகிறது – அந்த ஏவுகணை எங்கோ தொலைவில் விழுவதில்லை; நம் வீட்டுச் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும், தக்காளி விலையிலும் வந்து விழுகிறது.
ஆம், வெளியூர்ப் போர் நம் வீட்டு அடுப்பங்கரையை அணைக்கத் தொடங்கும்போதுதான் உலக அரசியலின் தாக்கம் நமக்குத் தெளிவாக உணரப்படுகிறது.
அருகாமை யுத்தங்களும் அமைதி ஒப்பந்தங்களும்
பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரர், நிலத்துக்காரர் என அருகாமையில் உள்ளவர்களோடு நடக்கும் சிறு யுத்தங்கள் ஒரு வகை. இவை பெரும்பாலும் இடமாற்றம் செய்துவிடும்போதோ, அல்லது “இனி உன்னோடு பேச்சே கிடையாது” என்று உறவைத் துண்டித்துவிடும்போதோ ஒரு தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை அடைந்து விடுகின்றன. வெளிப்படையான போர் அப்போது முடிந்தாலும், அதன் சின்னஞ்சிறு காயங்கள் மனதிற்குள் புதைந்து கிடக்கும்.
பங்காளிகள், அண்ணன்-தம்பிகள், தந்தை-மகன் போன்ற இரத்த உறவுகளுக்குள் எழும் போர்களின் அடிப்படை காரணம் பெரும்பாலும் ‘சொத்து’ தான். அந்தச் சொத்து பிரிக்கப்பட்டாலோ அல்லது சட்டரீதியாக தீர்க்கப்பட்டாலோ, அந்தப் போர்களும் ஒரு முடிவை அடைந்து விடுகின்றன.
முடிவே இல்லாத ‘உள்நாட்டுப் போர்’
ஆனால், உலகிலேயே நீண்டகாலமாகத் தொடரும், ஒருபோதும் முழுமையாக முடிவுக்கு வராத, எந்த ஐக்கிய நாடுகள் சபையாலும் தீர்த்து வைக்க முடியாத ஒரு போர் உண்டென்றால், அது கணவன்–மனைவிக்கிடையிலான போர்தான்!
இந்தப் போர் எப்போது தொடங்கும், எதற்காக வெடிக்கும் என்று எவராலும் கணிக்க முடியாது.
“பொரியலில் காரம் அதிகம்!”
“ரசத்தில் உப்பு ஏன் கம்மி?”
“சாம்பார் ஏன் இவ்வளவு நெடி?”
போன்ற அற்பமான காரணங்களே சில நேரங்களில் ஒரு பெரிய அணு ஆயுதப் போரின் தொடக்கமாக மாறிவிடலாம். இது வெளிப்படையாக சத்தம் இல்லாத போராக இருந்தாலும், வாழ்க்கை முழுவதும் நீடிக்கக்கூடிய ஒரு ‘கரில்லா யுத்தம்’ போன்றது.
செயற்கை நுண்ணறிவை வெல்லும் ‘மனைவி நுண்ணறிவு’ (WI vs AI)
இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) உலகம் நாம் கேட்கும் தகவல்களை கண நேரத்தில் தேடி வழங்குகிறது. ஆனால், கணவன்–மனைவி போரின் தரவுகளைப் பார்த்தால், குறிப்பாக மனைவிமார்கள் கையாளும் நினைவகத்தைப் பார்த்தால், AI கூட சில சமயம் தோற்றுப்போகும் போல தோன்றும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, திருமணத்தின் தொடக்க நாட்களில் கணவன் செய்த ஒரு சிறிய தவறோ அல்லது மாமியார் சொன்ன ஒரு வார்த்தையோ, தற்போதைய “ரசத்தில் உப்பு இல்லாத” பிரச்சினைக்கான ஆதாரமாக திடீரென நினைவகத்திலிருந்து மீட்டெடுக்கப்படுகிறது.
இந்தத் தரவுகளைச் சரியான நேரத்தில் “Retrieve” செய்து கொண்டு வந்து அடுக்குவதில் மனித மூளை சில நேரங்களில் சூப்பர் கம்ப்யூட்டரையே மிஞ்சிவிடுகிறது. செயற்கை நுண்ணறிவால் மனித நினைவகத்தை முழுமையாக வெல்ல முடியாது என்பதற்கு இந்த ‘குடும்பத் தரவுத் தொகுப்பு’ (Data Retrieval) ஒன்றே ஒரு சுவாரஸ்யமான சாட்சி.
யுத்தத்தின் ஆணிவேர்: அங்கீகாரமா? சொத்துடைமையா?
விளையாட்டாகத் தோன்றினாலும், இந்த இல்லத்துப் போரின் ஆணிவேர் மிகவும் சீரியஸானது.
ஒரு பெண் மருமகளாக ஒரு வீட்டிற்குள் வரும்போது, அவள் ஒரு மனித உயிர் என்ற அங்கீகாரத்தைப் பெறுகிறாளா என்பது விட, “அவள் எவ்வளவு சொத்து கொண்டு வந்தாள்?” என்ற அளவுகோலே பல இடங்களில் முக்கியமாகிறது.
சொத்து கொண்டு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி – தொடக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் அவளை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், குடும்பத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டால் பின்னாளில் இந்தப் போர்கள் இவ்வளவு தீவிரமாக மாறாமல் இருக்கலாம். ஆனால் பல இடங்களில் தொடக்கமே வார்த்தை யுத்தங்களாக மாறிவிடுகிறது.
தன்னை வெறும் சொத்தின் அளவுகோலில் மதிப்பிடும் இந்த அமைப்பை எதிர்கொள்ளும் போது, தனது கணவன் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொத்து பலன்களையும் வசதிகளையும் வழங்குவதைப் பார்த்தால் அந்தப் பெண்ணின் மனதில் ஒரு ஆதங்கம் உருவாகிறது.
“நமக்குச் சேர வேண்டியதை எல்லாம் பிறருக்கே வழங்கிவிட்டானே!” என்ற அந்தக் கசப்பான உணர்வே, பின்னாளில் கணவனோடு எழும் முரண்பாடுகளுக்குப் பெரும் ‘கிரியா ஊக்கி’யாக (Catalyst) மாறுகிறது. தன்னிடம் நடந்த அநீதிக்கான நியாயத்தை அவள் கணவனிடம் தேடும்போதுதான் அந்தச் சிறு முரண்பாடுகள் பெரிய போராக வெடிக்கின்றன.
இந்தப் போரில் கணவன் மட்டும் குற்றவாளி அல்ல; பல சமயங்களில் குடும்ப அமைப்பே இந்த முரண்பாடுகளுக்கான அடிப்படை காரணமாக மாறுகிறது.
முடிவுரை: சொத்தா? மனிதாபிமானமா?
வணிகப் பிரச்சினைகளுக்காகத் தொடங்கும் உலகப் போர்கள் கூட ஒரு கட்டத்தில் சமரசத்தில் முடிந்து விடுகின்றன. ஆனால், குடும்பப் போர்கள் முடிவுக்கு வர வேண்டுமென்றால் மனநிலையில் மாற்றம் தேவை.
சொத்தை நேசிப்பதற்குப் பதிலாக உழைப்பையும் மனிதத்தையும் முதன்மையாக மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும்.
பெண்ணைச் சொத்தாகப் பார்ப்பதையும், சொத்துக்காகப் பெண்ணைப் பயன்படுத்துவதையும் நிறுத்தாமல் விட்டால் – ‘சொத்துடைமை’ என்ற அதிகாரக் கட்டமைப்பை மாற்றாமல் விட்டால் – இல்லத்துக்குள் நடக்கும் இந்தப் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது கடினமே.
ஊரான்

.png)


