Tuesday, 14 April 2026

அண்ணல் அம்பேத்கர்: மாலைகளுக்குப் பின்னால் மறைக்கப்படும் புரட்சி!

அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 வந்துவிட்டால் போதும், அண்ணல் அம்பேத்கரின் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவிக்க அரசியல் கட்சிகளுக்கு இடையே பெரும் போட்டியே நடக்கிறது.

தங்களை அம்பேத்கரின் வாரிசுகளாகக் காட்டிக்கொள்ளும் இந்தப் புகைப்படப் 'போஸ்'களுக்குப் பின்னால், அவர் எதற்காகப் போராடினாரோ அந்த அடிப்படை நோக்கங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன. 

அம்பேத்கர் என்பவர் வெறும் ‘சேரிகளுக்கான தலைவர்’ அல்ல; அவர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த சமத்துவத்திற்கான விடிவெள்ளி.

அம்பேத்கர்

சனாதனம் எனும் நச்சுச் சுழல்

அம்பேத்கர் எதிர்த்தது மனிதர்களை வருணங்களாகவும், சாதிகளாகவும் பிளவுபடுத்தி, பெருமான்மை உழைக்கும் மக்களை சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும், ஊர் என்றும் சேரி என்றும் பிரித்து வைத்திருக்கும் இந்து மதச் சனாதனத்தைத்தான். 

சனாதனம் என்பது வெறும் சாதியப் பாகுபாடு மட்டுமல்ல.
அது பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் சமூக அமைப்பும் ஆகும். மாதவிடாய் முதல் பிறப்பு வரை அனைத்திலும் ‘தீட்டு’ கற்பித்து அதன் பெயரால் சடங்குகளை உருவாக்கி, பார்ப்பனர்களுக்கு வருவாய் ஈட்டித் தரும் ஒரு சுரண்டல் அமைப்பாகும்.

அம்பேத்கருக்கு இழைக்கப்படும் துரோகம்

அம்பேத்கர் வழங்கிய சட்ட உரிமையால் படித்து, பட்டம் பெற்று, உயர்பதவியில் இருக்கும் பல பட்டியல் சாதியினர் இன்று செய்கின்ற செயல் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காலத்தில் தங்கள் வீட்டு வாசலை மிதிக்காத பார்ப்பனர்களை, இன்று கௌரவம் என்ற பெயரில் தங்கள் வீட்டுத் திருமணங்களுக்கும் சடங்குகளுக்கும் அழைத்து சனாதனத்திற்குத் தூபம் போடுகிறார்கள். பார்ப்பனரை அழைப்பது என்பது உங்கள் வீட்டிற்குள் சனாதனத்தை அழைப்பதாகும். இது அம்பேத்கரின் போராட்டத்திற்கும் கொள்கைக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

மார்ச்சின் கொள்கை வழியில்,  பெரியார்- அம்பேத்கர் சிந்தனைகளை உள்வாங்கி சனாதன ஒழிப்பு
சடங்குகளற்ற, பார்ப்பனரற்ற வாழ்வியலை முன்னெடுக்கும் மார்க்சிய-லெனினிய போராளிகளிடமாவது இவர்கள் பாடம் கற்க வேண்டும். அப்பு-பாலன் காலத்தில் நாயக்கன் கொட்டாயில் நடந்த போராட்டங்களை நினைத்துப் பாருங்கள்.

சனாதனக் கசடுகளைத் தம் சொந்த வாழ்விலிருந்து துடைத்தெறிவதே அம்பேத்கருக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும். சனாதன எதிர்ப்பு என்பது அம்பேத்கரின் உயிர் மூச்சு. இதை உணராமல் சடங்குகளில் மூழ்கிக்கிடப்பது அடிமைத்தனத்தை மீண்டும் தழுவுவதே ஆகும்.

பிழைப்புவாதமும் அரசியல் சாதியவாதமும்

இன்று பட்டியல் சாதியினரிடையே பிழைப்புவாதிகள் அதிகரித்து வருகின்றனர். சனாதனத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் சக்திகளோடும், பாஜக போன்ற அமைப்புகளோடும் கைகோர்த்துக்கொண்டு அம்பேத்கரின் பெயரை உச்சரிப்பது வேடிக்கையானது. ‘சொந்த சாதிக்காரன்’ என்ற ஒரே காரணத்திற்காக, சனாதனக் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் ஒருவரை ஆதரிப்பது கடைந்தெடுத்த சாதியவாதமாகும். இது அம்பேத்கரின் உயரிய நோக்கத்தைச் சிதைக்கும் செயலாகும்.

ஜனநாயக சக்திகளிடம்
ஐக்கியம்

பட்டியல் சாதி மக்கள் தனித்து நின்று சனாதனத்தை ஒழித்துவிட முடியாது. அவர்கள் பிற சாதி மக்களோடும், ஜனநாயக மற்றும் புரட்சிகர சக்திகளோடும் ஐக்கியமாக வேண்டும். சாதி கடந்த ஒரு பெரும் போராகச் சனாதன எதிர்ப்பு மாற வேண்டும்.

முடிவுரை

அம்பேத்கருக்கு மாலை அணிவிப்பதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதும் ‘போஸ்’ அரசியலைக் கைவிடுவோம். நம் வீட்டுச் சடங்குகளில் இருந்து பார்ப்பனியத்தை விரட்டுவோம். அதிகாரப் பிழைப்புக்காகச் சனாதனத்திடம் மண்டியிடும் துரோகிகளை அடையாளம் கண்டு ஒதுக்குவோம். சனாதனக் கசடுகளைத் துடைத்தெறிந்து, சமத்துவப் பாதையில் நடப்பதே அம்பேத்கருக்கு நாம் செய்யும் உண்மையான பிறந்தநாள் காணிக்கை!

ஊரான்



Monday, 13 April 2026

அடுப்பங்கரை என்ன கர்ப்பக்கிருகமா? -2 : ஒரு செய்தி சொல்லும் பெண்களின் வாழ்வியல் உண்மை

இன்று காலை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டை புரட்டிக் கொண்டிருந்தபோது மனைவியை சமையலறைக்குள் அனுமதிக்காத கணவன் குறித்த ஒரு சிறிய செய்தி என் கவனத்தை ஈர்த்தது.

பிறந்த வீட்டில் வானம்பாடியாய் உயரே உயரே பறந்தவர்கள் புகுந்த வீட்டில் நெருப்புக் கோழியாய் முடக்கப்படுகிறார்கள்.

புதுவாழ்வு தொடங்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியைவிட, போகிற இடம் எப்படி இருக்குமோ என்கிற அச்சம் அவளைக் கவ்விக்கொள்கிறது. 


அண்ணனிடமே ‘வாடா போடா’ என்று அன்போடு பழகியவள், புதிய வீட்டில் எப்படிப் பழகுவது என்று குழம்பிப் போகிறாள்.

அவள் முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் பரவாயில்லை.
காலங்காலமாக போதிக்கப்பட்ட ‘பெண்மை’ என்ற கருத்து, புகுந்த வீட்டில் மாமனார் மாமியாரிடம் மண்டியிட வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறது.

நேற்று வரை அண்ணன் அப்பா முதல் தாத்தா பாட்டி வரை அனைவருக்கும் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்து பழக்கப்பட்டவர், அவள் மெத்தப்படித்திருந்தாலும் மேன்மையான‌ பதவியில் இருந்தாலும் புகுந்த வீட்டில் மாமனார் மாமியார் இருக்கும் போது நாற்காலி சோபாவில் அமர அச்சப்பட்டு தரையில்தான் அமர வேண்டும். இல்லையென்றால் ‘பாத்தியா மரியாதைய’ என முனுமுனுப்புகள் தொடங்கி விடும். பெற்ற மகளும் வந்த மகளும் பெண்தானே; ஆனால் இங்கே வந்தவளுக்கு மட்டும் தனி நீதி.

இப்படித்தான் மராட்டியத்தில் ஒருவன் கட்டின மனைவியை சமையல் அறைக்குள் செல்லக்கூடாது என தடை விதிக்கிறான். அவள் சமைக்கக் கூடாது என்பதற்காக சமையலறையையே பூட்டி வைத்திருக்கிறான். கடைக்குச் சென்று உணவு வாங்கி வரச் சொல்கிறான். வெளியே சென்று வந்தால் வீட்டுக் கதவு சாத்தி இருக்கும். இவள் வீட்டிற்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக ‘காலிங் பெல்லையே’ அகற்றி உள்ளார்கள்.

இப்படி மனைவியைத் துன்புறுத்தியதோடு, போதிய காரணம் ஏதுமின்றி விவாகரத்துக் கோரி இருக்கிறான்.  கீழமை நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தபின், இவன் உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறான். இவன் தனது மனைவியை நடத்திய விதம் உடல் ரீதியான வன்முறை மட்டுமல்ல, மனரீதியான வன்முறையும்கூட எனக்கூறி, அவனது மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று மகளிரைப் போற்றும் வகையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடிவிட்டுச் சென்றுவிட்டார். 

“மகளிராய்ப் பிறந்ததற்கு என்ன பாவம் செய்தோமோ” என்று பாடும் அளவுக்குத்தான் மகளிர் நிலைமை உள்ளதோ என்பதைத்தான் இந்த வழக்கு உணர்த்துகிறது. 

கோவில்களின் கர்ப்பகிருகத்திற்குள் கூட சமத்துவம் பேசப்படும் காலத்தில், இல்லத்தரியை அடுப்பங்கரைக்குள் செல்லக்கூடாது என்று தடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! 

முற்றும்

ஊரான்
13.04.2026

தொடர்புடைய பதிவு 

அடுப்பங்கரை என்ன கர்ப்பக்கிருகமா?

இன்று கைபேசிகளில் எப்படி கார்ட்டூன் படங்கள் சிறுவர்களை ஈர்க்கின்றனவோ, அது போல ஒரு காலத்தில் தினத்தந்தியின் சிந்துபாத் கதை. தலைமுறைகளைக் கடந்தும் லைலாவுக்காக சிந்துபாத்தின் சாகசங்கள் இன்றும் முடிவே இல்லாமல் தொடர்கின்றன. 

கைபேசியின் கார்ட்டூன் படங்களுக்கு, கண்ணும் காதும் இருந்தால் மட்டும் போதும். ஆனால் சிந்துபாத்துக்கு நாலு எழுத்து கூட்டிப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


பள்ளிப் பருவ காலங்களில் மேல்பாலூர் சங்கரன் டீக்கடையில் தினத்தந்தி இரண்டாம் பக்கத்தைப் புரட்டாமல் இல்லம் திரும்பினால்,  லைலாவுக்கு என்ன ஆனதோ என்ற ஏக்கத்தில் அன்றைய இரவுத் தூக்கம் சற்று எட்டியே நிற்கும்.

காலையில் மொடமொடப்போடு வரும் தினத்தந்தி பகல் முழுக்க முரட்டுக் கைகளால் புரட்டப்பட்டு ஒவ்வொரு எழுத்தும் அலசப்படுவதால், மாலையில் அது சலசலத்து நைந்து போயிருக்கும். மறுநாள் அவை போண்டாக்களின் அம்மணத்தை மறைக்கும் ஆடைகளாய் மாறியிருக்கும். 

ஊருக்கு ஒரு டீக்கடை இருந்தால் போதும்,  உள்ளூர் கிசுகிசு முதல் உலக நடப்பு வரை அத்தனையையும் அசைபோட வைக்கும். 

இல்லங்களில் ‘தினமணி’யும் இளைஞர்களின் கைகளில் ‘த இந்து’ (THE HINDU) ஆங்கில நாளேடு தஞ்சமடைவதும், பெட்டிக்கடைகளில் வார மாத நாளேடுகள் சரஞ்சரமாய் தொங்குவதும், பேருந்துப் பயணங்களின் போது அவைகளைப் புரட்டுவதும் கடந்த கால நினைவலைகள். 

அறிவு ஜீவியாய் அடையாளப்படுத்திக் கொள்ள நாளேடுகளின் நடுப்பக்கக் கட்டுரைகளும், கல்லூரிக் காலங்களில் என்னதான் பாடங்களை ஆங்கில வழியில் படித்தாலும், நாட்டு நடப்புகளை ‘த இந்து’ நாளேட்டில் வாசிக்கும் போது சில சொற்களுக்கு பொருள் புரியவில்லை என்றாலும் ஆங்கிலத்தை அனாயசமாக எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்ற தருணங்களும் தன்னம்பிக்கையின் தடயங்களே.

ஆனால் இன்று டீக்கடைகளில் பெஞ்சுகள் இல்லை, வீடுகளில் நாளேடுகள் இல்லை, இளைஞர்களின் கைகளில் ‘த இந்து’வும் இல்லை. இருப்பது ஒன்றே ஒன்றுதான் கைபேசி. 

வாட்ஸப்பின் குறுஞ்செய்திகளிலும், அரை நிமிட ரீல்ஸ் வீடியோக்களிலும், AI யின் வேகத்தில் பயணிக்க விரும்புவதால்  ‘ஆஃப் பாயில்களாக’ நாம் ஆகிவிட்டோமோ என அஞ்ச வேண்டியுள்ளது. 

இதற்குமேலும் இதை நீட்டித்தால் நம் விரல்கள் அனிச்சையாக மேலே நகர்ந்துவிடும் என்பதால் மீதியை நாளை பார்ப்போம். 

தொடரும்

ஊரான்

Sunday, 12 April 2026

பழைய அறநெறிகள் ஏன் தோற்றுப் போகின்றன?

சமூக வலைதளங்களிலும் நண்பர்கள் குழுக்களிலும் அறநெறி இலக்கியங்கள், குறிப்பாகத் திருக்குறள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.

ஒரு சாரார் இலக்கியங்களின் தொன்மையையும் பெருமையையும் பேச, மற்றொரு சாரார் அந்த அறநெறிகள் ஏன் ஈராயிரம் ஆண்டுகளாகியும் மனித மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்கிற யதார்த்தமான கேள்வியை முன்வைக்கின்றனர். இந்த முரண்பாடுகளைச் சமூகக் கட்டமைப்பின் பின்னணியில் நின்று அலசுவது அவசியமாகிறது.


1. அறநெறி நூல்கள்: அன்றைய கண்ணாடிகள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் உள்ளிட்ட சங்க இலக்கியங்கள் அன்றைய காலத்தின் நிலைக்கண்ணாடிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கிரேக்க, இலத்தீன் போன்ற செம்மொழிகளில் பல இலக்கியங்கள் இன்று வழக்கொழிந்து போன நிலையில், தமிழில் இன்றும் அவை புழக்கத்தில் இருப்பது தமிழ் மொழியின் தனிச்சிறப்பு.
அக்கால புலவர்கள் மக்கள் நீதிநெறி தவறாமல் வாழ வேண்டும் என்று விரும்பினர். அதன் விளைவாகவே 'அறம், பொருள், இன்பம்' எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் திருக்குறள் போன்ற நூல்கள் உருவாகின. "சாமி கண்ணைக் குத்தும்" என்று குழந்தைகளைப் பயமுறுத்துவது போல, சமூக ஒழுக்கத்தை நிலைநாட்ட வள்ளுவர் போன்ற அறிஞர்கள் சில இடங்களில் கடுமையான சொற்களை (மாக்கள், அவியினும் வாழினும் என்) கையாண்டிருக்கலாம் என்பது ஒரு பொதுவான அனுமானம்.
2. அறநெறி போதனை: சீரழிவின் அறிகுறியா?
எந்த ஒரு சமூகத்தில் அறநெறிகள் அதிகமாகப் போதிக்கப்படுகின்றனவோ, அந்தச் சமூகம் அத்துணை தூரம் சீரழிந்து போயுள்ளது என்பதே கசப்பான உண்மை. ஒரு நோயாளிக்குத்தான் மருந்து அதிகம் தேவைப்படும். 
அதுபோல, சமூகத்தில் கள்ளுண்ணாமை, கொல்லாமை, கூடா ஒழுக்கம் போன்றவை மீறப்பட்டதாலேயே அவை குறித்த போதனைகளும் அதிகரித்தன.
இவ்விலக்கியங்கள் மனித ஒழுக்கத்தை வலியுறுத்திய முக்கியமான நெறி நூல்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை பெரும்பாலும் "தனிமனிதன் திருந்தினால் சமூகம் மாறிவிடும்" என்ற புள்ளியிலேயே சுழல்கின்றன.
நோயின் மூலத்தைக் கண்டறிவதை விட (Diagnosis), நோயின் அறிகுறிக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் போக்கையே பழைய இலக்கியங்கள் கொண்டிருந்தன.
3. தனிமனித அறம் vs சமூகக் கட்டமைப்பு
திருக்குறள் எங்கும் ஒலிக்கிறது. மைதானங்கள் முதல் பேருந்துகள் வரை வள்ளுவன் காலடி படாத இடமே இல்லை. ஆனால், யதார்த்தம் என்ன?
கள்ளுண்ணாமை போதிக்கப்பட்ட மண்ணில்தான் மது விற்பனை உச்சத்தில் இருக்கிறது. கொல்லாமை பேசும் மண்ணில்தான் வன்முறைகள் பெருகுகின்றன.
ஏன் இந்த முரண்?
"எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்பது இயற்பியல் உண்மை. ஆனால், அறநெறிகள் எத்தனை முறை ஊர்ந்தாலும் மனித மனம் எனும் கல் ஏன் தேயவில்லை? இதற்குக் காரணம் சீரழிவுகளின் ஊற்றுக்கண் தனிமனித ஒழுக்கமின்மை அல்ல; மாறாக அது அந்தச் சமூகத்தின் அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பின் வெளிப்பாடாகும்.
வள்ளுவர் காலத்துச் சீரழிவுகளுக்கு நிலவுடைமைச் சமூகம் காரணமாக இருந்தது. இன்றைய சீரழிவுகளுக்குப் பின்னால் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளும், அரை-நிலவுடைமைச் சிந்தனைப் போக்குகளும் உள்ளன. இக்கட்டமைப்புகளை மாற்றாமல், வெறும் போதனைகளால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது.
4. மார்க்சியப் பார்வையும் இன்றைய தேவையும்
காரல் மார்க்சிற்கு முன்பு வரை, உலகில் எந்த மொழியிலும் சமூகக் கட்டமைப்பை மாற்றுவது குறித்து விரிவான உரையாடல்கள் நிகழவில்லை. பழைய இலக்கியங்கள் மொழியின் பெருமைக்காகவும், வரலாற்றுச் சான்றாகவும் போற்றப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அவை இன்றைய சிக்கல்களுக்கு நேரடியான நடைமுறைத் தீர்வுகளைத் தந்துவிட முடியாது.
இன்றைய தேவை:
அறநெறிகளைப் புனிதப் பிரதிகளாகப் போற்றுவதைவிட, அவற்றைப் மறுவாசிப்பு செய்வது.
தனிமனிதனைத் திருத்தும் முயற்சியை விட, சுரண்டல் மற்றும் சீரழிவுகளுக்கு அடிப்படையாக உள்ள சமூகக் கட்டமைப்பை மாற்றப் போராடுவது அவசியமாகிறது.
பழைய அறங்களுக்குப் பதிலாக, சமத்துவம் மற்றும் நீதியின் அடிப்படையிலான புதிய அறங்களை நோக்கி நகர வேண்டும்.
முடிவுரை
அறநெறிகள் சமூகத்தை அழகுபடுத்தலாம்; ஆனால் சமூகக் கட்டமைப்பு மாறும்போதுதான் மனித மனங்களின் மீதான அறநெறிகளின் தாக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
கட்டமைப்பு மாறினாலும் சீரழிவுகள் தொடராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, நற்சமூகத்தை அமைக்கத் தொடர்ச்சியான போராட்டங்களும், விழிப்புணர்வுமே ஒரே வழி. பழைய இலக்கியங்களை நினைவுகூருவோம்; ஆனால் புதிய சமூக மாற்றத்திற்கான போராட்டங்களை முன்னெடுப்போம்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்...(948) என இதற்கும் வள்ளுவன்தான் வழி கூறுகிறான்.
ஊரான்
தொடர்புடைய‌ பதிவு

Saturday, 11 April 2026

வள்ளுவனோடு முரண்படலாமா?

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? (குறள் 420)
அதாவது,

காதுகளால் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அறிவைவிட, உணவின் சுவைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள், உயிருடன் இருந்தாலும் இறந்ததிற்குச் சமமானவர்கள் என்பது வள்ளுவர் கருத்து.
இந்தக் குறளில் இவ்வளவு கடுமையாக ஏன் தெய்வப் புலவர் சாடுகிறார்?

என்று இதன் மீது ஒரு நண்பர் கேள்வி எழுப்புகிறார்.

இதன் மீது எனது புரிதல்,


திருக்குறள் போன்ற ஒரு இலக்கியத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், அதைச் சமூக-பொருளாதாரப் பின்னணியோடு (Socio-economic context) இணைத்துப் பார்க்கும்  அணுகுமுறை தேவை. இதை கீழ்கண்டவாறு அணுகலாம். 

1. உற்பத்தி முறையும் கால மாற்றமும்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவுடைமைச் சமுதாயத்தின் உற்பத்தி உறவுகள் வேறு, இன்றைய முதலாளித்துவ அல்லது நவீனத் தொழில்மயமான உற்பத்தி உறவுகள் வேறு. அன்றைய அறிவு என்பது பெரும்பாலும் 'கேள்வி' (Oral tradition) வழியாகவே பகிரப்பட்டது. 

அச்சு இயந்திரங்களோ, இணையமோ இல்லாத காலத்தில் 'கேட்டல்' என்பது மட்டுமே தகவல்களைப் பெறுவதற்கான ஒரே வழி. அதனால்தான் வள்ளுவர் 'கேள்வி'க்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். இன்று தகவல் பெருக்கம் (Information Overflow) உள்ள சூழலில், எதைக் கேட்க வேண்டும், எதை விட வேண்டும் என்கிற பகுத்தறிவுதான் முதன்மையானது.

2. "தெண்டத் தீனி" - வள்ளுவரின் சாடல்

"செவியின் சுவையுணரா வாயுணர்வின் ... மாக்கள்" என்று அவர் சொன்னது, அறிவுத் தேடலே இல்லாமல் வெறும் உடல் நுகர்வுக்காக மட்டுமே வாழ்பவர்களைத்தான். 

கேட்டுவிட்டுச் சும்மா இருப்பவர்களைக்கூட அவர் 'தெண்டத் தீனி' என்றுதான் மறைமுகமாகச் சொல்கிறார். 

மற்றொரு குறளில்:

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக." (391)

என்று 'கற்றபின் அதற்குத் தக நிற்றலை' (Action) வலியுறுத்துகிறார். வெறும் செவி நுகர்வு மட்டுமே பயன் தந்துவிடாது என்பதை வள்ளுவரும் அறிந்தே வைத்திருந்தார்.

3. மாற்றம் ஏன் நிகழவில்லை?

"ஈராயிரம் ஆண்டுகளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், யார் மாறினார்கள்?" என்கிற  கேள்வி முக்கியமானது மட்டுமல்ல அதுதான் யதார்த்தமானது. ஒரு கருத்தியல் (Ideology) என்பது தனிமனித ஒழுக்கமாக மட்டும் இருக்கும் வரை அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அது ஒரு சமூக இயக்கமாகவோ அல்லது உற்பத்தி முறையில் மாற்றத்தையோ கொண்டு வரும்போதுதான் பலன் தரும். 

திருக்குறள் தனிமனித அறத்தைச் சொல்கிறதே தவிர, கட்டமைப்புகளை (Structures) மாற்றுவது பற்றிப் பேசுவதில்லை என்கிற விமர்சனமும் உண்டு.

4. பழையதை வைத்துப் புதியதை உருவாக்குதல்

"பழையதை நினைவில் கொண்டு இன்றைய சூழலுக்கு ஏற்ப புதியதை உருவாக்குவது தான் அறிவுடைமை" - இதுதான் மிகச்சரியான புரிதல். 

இதையே வள்ளுவர்,

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" (355)

என்கிறார். 

அன்று அவர் சொன்ன அறம் என்பது அன்றைய சமூகக் கட்டுமானத்தைக் காக்கப் பயன்பட்டிருக்கலாம். ஆனால், இன்று அந்த அறத்தை இன்றைய வர்க்கப் போராட்டங்கள், பொருளாதாரச் சமநிலையின்மை மற்றும் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப மறுவாசிப்பு (Re-reading) செய்வது அவசியம்.

முடிவாக,

கேட்பது என்பது ஒரு தொடக்கமே தவிர அதுவே முடிவல்ல. 'கேட்டல் + சிந்தித்தல் + செயலாற்றல்' என்ற மூன்று நிலைகளும் சேரும்போதுதான் ஒரு கருத்து முழுமை பெறுகிறது. 

உற்பத்தி உறவுகள் மாறிவிட்ட நிலையில், பழைய அறநெறிகளை அப்படியே ஒரு "புனித நூலாகப்" பார்க்காமல், இன்றைய காலத்திற்குத் தேவையான 'புதிய அறங்களை' நோக்கி நகர்வதே சரியான பாதையாக இருக்கும். இந்தப் பார்வை இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமானது.

ஊரான்