Wednesday, 22 July 2026

நீட் போராட்டம்: டெல்லி 'சுல்தானும்', நடிகனின் 'நாடகமும்'!


நீட் (NEET) தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் வெடித்த மாணவர்களின் கொந்தளிப்பு, இன்று அரியணையிலிருக்கும் 'டெல்லி சுல்தானுக்கு' எதிரான மாபெரும் அரசியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. வழக்கம் போல, ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களைக் கண்டாலே நடுக்கமுறும் மோடி அரசு, டெல்லி காவல்துறையைக் கொண்டு கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

டெல்லியில் ஏவப்படும் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்துத் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால், இங்குதான் கூத்தின் அடுத்த கட்டம் தொடங்குகிறது!

ஒரே மாதிரியான லத்திகள்... வெவ்வேறான நாடகங்கள்!

டெல்லியில் போராடும் மாணவர்களை ஒடுக்குவதில் ஒன்றிய பாசிச அரசின் காவல் துறையும், தமிழ்நாட்டில் 'நடிகர்' தலைமையிலான அரசின் காவல் துறையும் ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன. அங்கும் இங்கும் காவல்துறையினர் மாணவர்கள் மீது லத்திகளைச் சுழற்றும் வீரியம் ஒரே மாதிரிதான் இருக்கிறது!

சென்னையிலும் மதுரையிலும் போராடிய மாணவர் அமைப்பினர் மீது கொடூரமான தாக்குதலையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுக்கொண்டே... நடிகர் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஆதவ், டெல்லி ஒடுக்குமுறையைக் கண்டித்து அறிக்கை விடுகிறார்! இதை என்னவென்று சொல்வது?

சென்னையிலும் மதுரையிலும் மாணவர்கள் மீது அடக்கு முறையை ஏவிய காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது 'ரோஜாப் பூக்களை' தூவுவது போலவும், டெல்லியில் மட்டும்தான் கொடூரத் தாக்குதல் நடப்பது போலவும் காட்சிப்படுத்துவது அமைச்சர் ஆதவ்வின் அப்பட்டமான நடிப்புதானே?


அழுவதா... சிரிப்பதா?

இதில் கொடுமை என்னவென்றால், "இந்த அடக்குமுறையெல்லாம் 'நடிகர்' முதல்வருக்குத் தெரியாது போலிருக்கிறது; அவர் உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒரு இடதுசாரித் தலைவர் நடிகருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இதைப் படிக்கும் போது நமக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை! ஆட்சியதிகாரத்தின் உச்சியில் இருக்கும் முதல்வருக்குத் தெரியாமல்தான் காவல்துறை மாணவர்களை நசுக்குகிறதா?

களத்தில் நிற்பது யார்? தேர்தலுக்கு மட்டும் வருவது யார்?

ஆட்சியாளர்களின் நாடகங்கள் ஒருபுறமிருக்க, இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு தெளிவான உண்மையைப் பட்டவர்த்தனமாக உணர்த்தியுள்ளது.
இன்று களத்தில் நின்று அடிவாங்குவதும், கைது செய்யப்படுவதும் SFI, AISF, AISA, RSYF போன்ற இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள்தான்! சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அரசியலுக்காக நடிகரின் அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மாணவர் தளத்தில் இந்த இடதுசாரி அமைப்புகள் நீட்டுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடிகரின் காவல்துறை அடக்குமுறைகளை எதிர்கொள்வது வரவேற்கத்தக்கது.

ஆனால், தங்களை 'மாபெரும் இயக்கங்கள்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் ஒரு இளைஞனையோ அல்லது மாணவனையோ இந்த நீட் போராட்டக் களத்தில் பார்க்க முடிந்ததா? 'தேர்தல் கால அறுவடைகள்' மட்டுமே போதும், சமூகப் போராட்டங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா? ஆட்சியில் இருந்தவரை நீட்டை எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் களம் காணாமல் வேடிக்கை பார்க்குமானால் அரசியல் அரங்கிலும் அவர்கள் காணாமல் போக நேரிடும்.

தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஏன் குறிப்பிடவில்லை என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது! அது முதல்ல ஒரு கட்சியா? அங்கே போய் இளைஞர்கள், மாணவர்களிடம் நீட் தொடர்பாகக் கோரிக்கைகளைப் பற்றிக் கேட்டால் "அப்படியென்றால் என்ன?" என்று திருதிருவென விழிப்பார்கள். அவர்கள் அங்கே 'ஜனநாயகனை' ரசித்துக்கொண்டே கடலை போடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்!


தாய் எட்டடி பாய்ந்தால்... குட்டி பதினாறு அடி!

இன்று வீதியில் நடக்கும் போராட்டம் என்பது வெறும் நீட் தேர்வுக்கு எதிரானது மட்டுமல்ல; கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மக்களை வாட்டி வதைக்கும் மோடி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

அடக்குமுறைகளை ஏவுவதில் டெல்லியும், தமிழ்நாட்டில் நடிகரின் அரசும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கின்றன. இந்தியக் குடிமக்கள் ஆயுதங்களின்றி அமைதியான முறையில் கூடுவதற்கும் போராடுவதற்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுப்பதில் டெல்லிக்குச் சளைத்தது அல்ல நடிகரின் கோட்டை!

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" என்ற பழமொழி பொய்யல்ல. டெல்லி பெற்ற பிள்ளையான இந்த 'நடிகர்' ஆட்சியும் அடக்குமுறையைப் பாய்ச்சுகிறது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராகவும், அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் மாற்றுப் பண்பாட்டுச் சக்திகளான உழைக்கும் வர்க்க இளைஞர்களும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுமே என்றும் உண்மையான வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்பதை இப்போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது!

ஊரான்

Monday, 20 July 2026

உமியாகும் உழைப்பாளிகள்!


உமியாகும் உழைப்பாளிகள்!

ஆலைகள் எல்லாம் பாய்லர்கள்தான்,

நெருப்புக்குப் பதிலாக
ஊழியர்களின் உழைப்பை எரிக்கும்
பாய்லர்கள்!

நெல் மணிகளை உள்ளே கொட்டி,
அரிசியைப் பிரித்தெடுப்பதுபோல்,
உழைப்பாளிகளின் வியர்வையை உறிஞ்சி
லாபங்களை அள்ளிக் குவிக்கின்றன
ஆலைகள்!

கைகளின் வலிமை,
கால்களின் உறுதி,
எதிர்கால நம்பிக்கை,
வாழ்க்கைக் கனவு —
எல்லாவற்றையும் அரைத்து
மூட்டைகளில் நிரப்பிக் கொள்கின்றன.

பிறகு...

பயன் தீர்ந்த உமிபோல
ஊழியர்களை வெளியே
ஊதித் தள்ளுகின்றன.

ஆனால்...

உமி தோல்வியின் அடையாளமல்ல;
அது மண்ணின் எதிர்காலம்.

காற்றில் பறந்தாலும்,
மழையில் நனைந்தாலும்,
இறுதியில் உரமாகி
பூமிக்கு உயிரூட்டுகிறது.

அதைப் போலவே,

சுரண்டப்பட்ட உழைப்பாளிகளின்
கண்ணீரும் கோபமும்
ஒருநாள் உரமாகி,
புதிய உலகின் விதைகளை
முளைக்க வைக்கும்.

உழைப்பை ஆலைகள்
உறிஞ்சிக்கொள்ளலாம்;

ஆனால்,

வரலாற்றை விளைவிப்பது
உமியென ஒதுக்கப்பட்ட
உழைப்பாளிகள்தான்!

வரலாற்றின் விளைச்சலை
அறுவடை செய்வதும்
அவர்கள்தான்!

— தமிழ்மணி

Tuesday, 14 July 2026

பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டே முற்போக்கும் புரட்சியும் பேச முடியுமா?

இன்றைய நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் ஒரு விசித்திரமான போக்கு நிலவுகிறது. சமூக மாற்றத்தைப் பற்றி பேசுவது அதிகரித்திருக்கிறது; ஆனால் சமூக மாற்றத்திற்காக ஆபத்துகளை ஏற்கத் தயாரானவர்கள் குறைந்து கொண்டே செல்கிறார்கள்.


எது உண்மையான சமூகச் செயல்பாடு?

ஏழைகளுக்கு அன்னதானம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய விவாதங்கள், அடிப்படை வசதிகளுக்கான குரல், மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு, மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவுப் பிரச்சாரம் — இவை அனைத்தும் சமூகச் செயல்பாடுகள்தான். ஆனால் இவற்றுக்கும், உண்மையான அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது.

‘நோகாத’ சமூக சேவை

சமூக அநீதிகளுக்கு பின்னால் உள்ள அதிகார அமைப்புகளைச் சுட்டிக்காட்டி, மக்களைத் திரட்டி போராடுவது எளிதல்ல. அதிகாரத்தை  எதிர்க்கும் போது, வழக்குகள், கைது, வாழ்வாதார அச்சுறுத்தல் ஆகியவை உருவாகும். எனவே பலர் “நோகாமல்” சமூக சேவை செய்யவே விரும்புகிறார்கள். பிரச்சினையைப் பற்றி பேசுவது பாதுகாப்பானது; ஆனால் அதற்குக் காரணமான அமைப்புகளை எதிர்ப்பது சவாலானது.

இன்று நாம் பார்க்கும் முரண்பாடுகள்:
- குடிப்பழக்கத்தில் இருப்பவன் போதை ஒழிப்பு பற்றி முழங்குகிறான்.
  • ஊழலில் ஈடுபடுபவன் ஊழல் ஒழிப்பு பற்றி உரையாற்றுகிறான்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் முற்போக்கு பேசுபவர்கள் பெருகுகிறார்கள்.
சமூகச் செயல்பாடு vs சமூக மாற்றம்

உண்மையான களப்பணியாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அரசியல், சமூக அநீதிகளுக்கு எதிராக தங்கள் வாழ்வையே பணயம் வைத்துப் போராடுபவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பை மறுக்க முடியாது. ஆனால் அம்பேத்கர், பெரியார் போன்றோரின் பெயர்களைச் சொல்வது எளிது; அவர்கள் எதிர்கொண்ட விலையைச் செலுத்தத் தயாராக இருப்பது வேறு.

சொல்வதும் செய்வதும் ஒன்றாக

ஒரு சமூகச் செயல்பாட்டாளரின் நம்பகத்தன்மை அவரது பேச்சில் மட்டுமல்ல; அவரது வாழ்க்கை முறையிலும் வெளிப்பட வேண்டும். மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசுபவன் தன் வீட்டில் அதை ஒழிக்க வேண்டும். ஊழலை எதிர்ப்பவன் தன் நடத்தையில் நேர்மையைக் காட்ட வேண்டும். எளிமையைப் போதிப்பவன் அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். மொத்தத்தில் சமூகச் செயல்பாட்டாளர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.

நாம் சிந்திக்க வேண்டியது

புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு, தனிநபர் வெற்றி, நுகர்வு, சமூக ஊடகப் புகழ் ஆகியவை பொதுநல உணர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. சமூக மாற்றம் என்பது சமூக ஊடகங்களில் பதியப்படும் சில பதிவுகள், புகைப்படங்கள், முழக்கங்களில் அல்ல; அது நேரம், உழைப்பு, தியாகம் மற்றும் சவால்களை ஏற்கும் துணிவு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுவது.

பாதுகாப்பாக வாழ நினைப்பது தவறல்ல. ஆனால் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு புரட்சியைப் பற்றி பேசி, தன்னைப் பெரிய முற்போக்காளராகக் காட்டிக் கொள்வது நேர்மையான அணுகுமுறையல்ல.

புரட்சியைப் பற்றி பேசுவது எளிது; ஆனால் அதற்காக தனிப்பட்ட இழப்புகளையும் ஆபத்துகளையும் ஏற்கத் தயாராக இருப்பதுதான் உண்மையான முற்போக்கின் அளவுகோல். சமூக மாற்றத்தைப் பற்றி பேசுபவர்கள் அதிகரித்துள்ளனர்; ஆனால் அதற்காக விலை கொடுக்கத் தயாரானவர்கள் எத்தனை பேர்?

— ஊரான்

Saturday, 11 July 2026

திருத்தல்வாதத்திலிருந்து திரை அரசியல்வரை: பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய் ஆதரவும்

தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளும் வெவ்வேறு காரணங்களுக்காக ஆதரவும் வரவேற்பும் அளித்து வருகின்றன. ஆனால், தங்களை மார்க்சிய அரசியலின் வாரிசுகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள், விஜய்யின் அரசியல் முயற்சிகளைக் குறித்து ஒருவித மென்மைப் போக்கைக் கையாளுவதுடன், அவரை ஆதரிக்கவும் முற்படுவது ஏன் என்ற கேள்வி இன்றைக்கு மிக முக்கியத்துவப் புள்ளியாக எழுகிறது.

இது வெறும் தற்காலிகத் தேர்தல் கூட்டணி அரசியலின் விளைவா? அல்லது இதற்குப் பின்னால் ஒரு நீண்டகாலக் கருத்தியல் வரலாற்று பலவீனம் ஏதேனும் ஒளிந்துள்ளதா?

சண்முகம் (CPM), வீரபாண்டியன் (CPI)

திருத்தல்வாதம் பற்றிய மார்க்சிய விவாதம்

20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கருத்தியல் பிளவு, சோவியத் ஒன்றியத்தில் நிகிதா குருச்சேவ் (Nikita Khrushchev) முன்னெடுத்த கொள்கை மாற்றங்களைச் சுற்றியே உருவானது.

மாவோ (Mao Zedong) மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, குருச்சேவ் முன்வைத்த "அனைத்து மக்களின் அரசு", "அனைத்து மக்களின் கட்சி" போன்ற கோட்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தத்துவார்த்த அடிப்படையைக் கைவிட்டு, சோசலிச அரசை வர்க்கமற்ற அரசாகச் சித்தரிப்பது மார்க்சியத்தின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல் என்று மாவோ கருதினார்.

சீனாவின் பார்வையில் இது வெறும் ஏட்டளவிலான கோட்பாட்டு விவாதமல்ல; மாறாக, சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவத்தின் மறுபிரவேசத்திற்கான பாதையைத் திறந்துவிட்ட பேராபத்தான "திருத்தல்வாதம்" (Revisionism) ஆகும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு

இந்தியாவில் இருந்த பாரம்பரிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கியப் பிரிவுகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) ஆகியவை பொதுவாக சோவியத் அணியோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன.

மாவோ முன்வைத்த கூர்மையான தத்துவ விமர்சனங்களை ஏற்க மறுத்த இக்கட்சிகள், சோவியத் ஒன்றியம் இன்னும் சோசலிசப் பாதையில்தான் பயணிக்கிறது என்ற தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்தன. அதே நேரத்தில், மாவோவின் புரட்சிகரக் கொள்கைகளின் தூண்டுதலால் இந்தியாவில் உருவான நக்சல்பாரி இயக்கங்களை 'இடதுசாரி அதிதீவிரவாதம்' எனக்கூறி அவை கடுமையாக எதிர்த்தன.

பின்னர் வரலாறு என்ன சொன்னது?

1991-ல் சோவியத் ஒன்றியம் முற்றிலும் சிதறித் தவிடுபொடியானது. அரசுச் சொத்துக்கள் அனைத்தும் தாராளமயமாக்கப்பட்டு, தனியார்மயமாக்கப்பட்டன. முதலாளித்துவம் எவ்வித ஒளிவுமறைவுமின்றி அங்கே மீண்டும் அரியணை ஏறியது.

சோவியத் ஒன்றியத்தில் திருத்தல்வாதம் இறுதியில் முதலாளித்துவ மீட்புக்கு வழிவகுக்கும்" என்ற மாவோவின் எச்சரிக்கை சரிதானா? அல்லது சோவியத் பாதையை ஆதரித்த இந்தியப் பாரம்பரிய இடதுசாரிகளின் மதிப்பீடு தவறானதா?

சீனாவும் டெங் பாதையும்

மாவோவின் மறைவுக்குப் பிறகு, டெங் சியாவோபிங் (Deng Xiaoping) தலைமையில் சீனா "சீனப் பண்புகளுடனான சோசலிசம்" என்ற பெயரில் பொருளாதாரச் சீர்திருத்தப் பாதையில் நகரத் தொடங்கியது. சந்தைப் பொருளாதார அம்சங்கள் விரிவடைந்தன; தனியார் மூலதனம் வளர அனுமதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டன.

சீனாவில் இன்னமும் சோசலிசம் நீடிக்கிறதா அல்லது அங்கும் முதலாளித்துவம் வேறு வடிவத்தில் தடம் பதித்துவிட்டதா என்ற விவாதம் இன்றும் உலக இடதுசாரிகளிடையே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு. ஒருகாலத்தில் குருச்சேவ் காலத்துச் சோவியத் ஒன்றியத்தைச் சோசலிசத்தின் கோட்டையாகச் சித்தரித்த அதே பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள், டெங் காலத்துச் சீர்திருத்தவாதச் சீனாவையும் சோசலிசத்தின் உன்னத மாதிரியாகப் புகழத் தொடங்கின.

இதனை விமர்சிப்பவர்கள், "பாரம்பரிய இடதுசாரிகளின் கொள்கை மாறவில்லை; மாறாக, அவர்கள் தங்களின் இருப்புக்காகச் சார்ந்து நிற்கும் சர்வதேச அதிகார மையங்கள் மட்டுமே மாறின" என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

தேர்தல் அரசியலும் சமரசப் பாதையும்

இங்கேதான் தற்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலை நாம் தத்துவார்த்தப் பின்புலத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

ஒருகாலத்தில் புரட்சிகர வர்க்க அரசியலை முன்னிறுத்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள், நாடாளுமன்றத் தேர்தல் அரசியலின் கட்டமைப்பிற்குள் தங்களை முழுமையாகப் பிணைத்துக் கொண்ட பிறகு, தீவிரமான சமூக மாற்றத்தை விடத் தங்களின் 'அரசியல் இருப்பை' (Political Survival) மட்டுமே முதன்மையாகக் கருதத் தொடங்கின. இந்த நாடாளுமன்ற வாதக் கவர்ச்சி (Parliamentary Cretinism), கொள்கை சார்ந்த அரசியலுக்குப் பதிலாக, தற்காலிகத் தேர்தல் கூட்டணிகளைச் சார்ந்த நடைமுறை அரசியலை (Pragmatic Politics) அவர்கள் மேல் திணித்தது.

இதன் இயல்பான விளைவாகவே, வர்க்கக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட, மக்கள் செல்வாக்குள்ள எந்தவொரு வெகுஜனச் சக்தியுடனும் தங்களின் தத்துவார்த்த அடையாளங்களைச் சமரசம் செய்து கொண்டு இணங்கிப் போகும் பலவீனமான மனநிலை உருவானது.

விஜய் ஆதரவு: ஒரு கருத்தியல் திருத்தல்வாதத் தொடர்ச்சியா?

நடிகர் விஜய் முன்வைக்கும் அரசியல் திட்டங்கள் மார்க்சிய அரசியலின் அடிப்படைக் கோட்பாடுகளான வர்க்கப் போராட்டம், உற்பத்தி உறவுகளின் மாற்றம், முதலாளித்துவ ஒழிப்பு அல்லது தொழிலாளர் வர்க்க அரசியல் போன்றவற்றுடன் எள்முனையளவும் தொடர்புடையவை அல்ல.

அவரது முழக்கங்கள் பெரும்பாலும் ஊழல் எதிர்ப்பு, நல்லாட்சி, நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள் மற்றும் தேசியவாதம் கலந்த ஒரு பொதுவான மக்கள் நலவாதத் (Populist Welfarism) தளத்தை மட்டுமே மையமாகக் கொண்டவை. இவை கூட உண்மையில் கொள்கை சார்ந்த தத்துவார்த்த நிலைப்பாடா அல்லது வெறும் வாக்கு வங்கி அரசியலுக்கான கவர்ச்சி முழக்கங்களா என்ற ஐயம் நடுநிலையாளர்களிடையே எழுப்பப்பட்டு வருகிறது.

இருப்பினும், பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அவரைப் பற்றிய தங்களின் அணுகுமுறையில் ஒரு வெளிப்படையான மென்மைப் போக்கைக் கையாளுவதைக் காண முடிகிறது. 'பாசிச எதிர்ப்பு' அல்லது 'முதன்மை எதிரியை வீழ்த்துவது' என்ற உத்திசார் தந்திரோபாயங்களை (Tactical Line) இக்கட்சிகள் இதற்கு முகாந்திரமாகச் சொல்லக்கூடும்.

ஆனால், இத்தகைய சமரசப் போக்கை விமர்சிப்பவர்கள், இது தற்காலிகமான ஒரு தேர்தல் தந்திரம் மட்டுமல்ல என்கிறார்கள். சர்வதேச அளவில் அன்று குருச்சேவிலிருந்து இன்று டெங் வரை வர்க்கக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்த 'திருத்தல்வாதச் சக்திகளோடு' தத்துவார்த்த ரீதியாகச் சமரசம் செய்து பழகிய அரசியல் மரபின் தர்க்கரீதியான தொடர்ச்சிதான், இன்று உள்ளூர் அளவில் விஜய் போன்ற வெகுஜன ஈர்ப்புள்ள மாற்றுச் சக்திகளோடும் அவர்கள் செய்துகொள்ளும் இந்த நடைமுறைச் சமரசம் என்பதே அவர்களின் வாதம்.

முடிவுரை

ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உண்மையான தத்துவார்த்த அளவுகோல் என்பது அது யாரை ஆதரிக்கிறது என்பதில் மட்டுமல்ல; எத்தகைய கருத்தியல் பின்னணியில், ஏன் ஆதரிக்கிறது என்பதிலும்தான் அடங்கியிருக்கிறது.

ஒருகாலத்தில் சோவியத் திருத்தல்வாதத்தையும், பின்னர் சந்தைப் பொருளாதாரச் சீனாவையும் சோசலிசம் என்று நியாயப்படுத்திய அதே அரசியல் மரபு, இன்றைக்குத் தேர்தல் அரசியலின் புதிய நட்சத்திரங்களையும் தங்களின் இருப்புக்காக ஆதரிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இது வெறும் தேர்தல் தந்திர அரசியலா? நீண்டகாலத் திருத்தல்வாதத்தின் கருத்தியல் தொடர்ச்சியா? அல்லது புதிய அரசியல் யதார்த்தங்களுக்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளும் நடைமுறை அணுகுமுறையா?

இந்தக் கேள்விகளுக்கான துல்லியமான பதிலை வரலாறும், இக்கட்சிகளின் எதிர்கால அரசியல் நடைமுறைகளும் தான் இறுதியில் தீர்மானிக்கும்.

வர்க்க அரசியலைக் கைவிட்டு, செல்வாக்குள்ள சக்திகளின் நிழலில் தங்களின் அரசியல் இருப்பைத் தேடும் போக்கு, சர்வதேச அரங்கில் திருத்தல்வாதமாக வெளிப்பட்டது போலவே, உள்ளூர் அரங்கில் தேர்தல் சமரசவாதமாக வெளிப்படுகிறது. விஜய் ஆதரவை அந்த நீண்ட அரசியல் மரபின் ஒரு தொடர்ச்சியாகப் பார்க்கலாமா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியாது.

ஊரான்

Friday, 10 July 2026

கரூர் "கொத்து பரோட்டா!"

இது ஏற்கனவே ஓங்கி வளர்ந்த ஒரு பெருங்காடு. இன்னும் விடிந்திருக்கவில்லை; காரிருள் மரங்களின் கிளைகளுக்கு இடையே ஊடுருவி உரைந்து கிடந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் ஆதி விடியல் காலம் அது. மனிதன் இன்னும் தனக்கான மொழியைக் கண்டறிந்திருக்கவில்லை. எண்ணங்களை வெளிப்படுத்தச் சொற்கள் இல்லை; உதடுகளின் அசைவுகளுக்கு அர்த்தங்கள் இல்லை; வெறும் சைகைகளும், தொண்டைக்குள் எழும் விசித்திர ஒலிகளும் மட்டுமே அவனது உலகமாக இருந்தன.


காரிருள் விலகிய காலைப் பொழுதில் ஒரு நாள், கூட்டத்தின் தலைவன் ஒருவன் அடர்ந்த புதரின் திசையைக் காட்டி ஏதோ ஒரு சைகை செய்தான். “அங்கே சுவையான கனிகள் நிறைந்த மரங்கள் இருக்கின்றன; பசியும் ஆசையும் தீரும்” என்பது அவனது சைகையின் பொருள்.

ஆனால், ருசி வெறியோடு இருந்த ஒரு ஆதிமனிதன் அந்தச் சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டான். கனிகள் கிடைப்பது மட்டுமல்ல, பழக்குவியலிலேயே புரண்டு விளையாடலாம் என்ற பேராசையோடு அந்த இடத்தை நோக்கி ஓடினான்.

அடுத்த சில நொடிகளில் காடே அதிரும் படியாக ஒரு மரண ஓலம் கேட்டது!

அங்கே கனிகள் எதுவும் இல்லை. மாறாக, பசி வெறி கொண்ட காட்டு விலங்குகள் அவன் மீது பாய்ந்து கடித்துக் குதறின. உடல் சிதைந்து, தசைகள் கிழிந்து தொங்க, ரத்தம் சொட்டச் சொட்ட அவன் புதரிலிருந்து வெளியே தள்ளாடி வந்தான்.

தனக்கு நேர்ந்த கொடூரத்தையும் ஏமாற்றத்தையும் சக மனிதர்களுக்குச் சொல்ல அவனிடம் மொழி இல்லை. கைகள் நடுங்கியதால் சைகை காட்டவும் முடியவில்லை. தன் சொந்தத் தவறான புரிதலால், சொல்லவும் முடியாமல் மெல்ல மெல்லத் துடித்து மடியும் அந்த அவல நிலைதான் காட்டுமிராண்டி காலத்தின் ஆகப்பெரும் சாபம்.

காலம் மாறியது… காட்சிகள் மாறினவா?

காலச் சக்கரம் சுழன்றது. மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான்; நாகரிகம் அடைந்தான்; உலகிற்கே பண்பாட்டைக் கற்றுக்கொடுத்த உயர்ந்த தமிழினமாக மாறினான்.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சூழலைப் பார்க்கும்போது, நாம் மீண்டும் அந்த ஆதி கானகத்தின் காட்டுமிராண்டி காலத்திற்கே பின்னோக்கித் தள்ளப்பட்டிருக்கிறோமோ என்ற அச்சம் எழுகிறது.

அன்று ஆதிமனிதன் சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டான். இன்று மக்கள் ஒரு நடிகரின் திரைப் பிம்பத்தையும், கவர்ச்சியான மேடைப் பேச்சையும், ஆசை வார்த்தைகளையும் உண்மை என்று நம்பித் தவறாகப் புரிந்துகொண்டார்கள்.

திரையில் காட்டிய பாவனைகளையும், மேடையில் வெளிப்படுத்திய கவர்ச்சியையும் கண்டு, தங்களுக்கு ஒரு புதிய விடியல் பிறக்கப் போகிறது என்று நம்பி அவரை ஆட்சிப் பீடத்தில் அமர வைத்தார்கள்.

வாய்ச்சொல் வீரமும்… ஆணவத்தின் உச்சமும்…

ஆனால் அரியணையில் அமர்ந்த பிறகுதான் மக்களுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

எது கிடைக்கும் என்று நம்பி ஓடினார்களோ, அது கிடைக்கவில்லை.

கனிகளைக் காண்பித்தவர்கள் கனிகளைக் கொடுக்கவில்லை.

விடியலை வாக்குறுதி அளித்தவர்கள், விடியலைக் கொண்டு வரவில்லை.

மக்களுக்குத் தேவையான வாழ்வாதார மாற்றங்களோ, எதிர்பார்த்த முன்னேற்றங்களோ அங்கே இல்லை. அதற்குப் பதிலாக மேடைகளில் சப்தமிடும் “கொத்து புரோட்டா” போன்ற வெற்று வசனங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

இன்று “கொத்து புரோட்டா” என்பது ஒரு உணவின் பெயர் மட்டுமல்ல; அரசியலில் உள்ளடக்கம் இல்லாத ஆரவாரத்திற்கும், திட்டம் இல்லாத திமிருக்கும், செயல் இல்லாத வசன வீரத்திற்கும் ஒரு குறியீடாக மாறிவிட்டது.

மக்களுக்கான ‘விடியல்’ பற்றிப் பேசியவர்கள், அந்த ‘விடியலையே’ வீதியில் வெட்டி எறிந்துவிட்டார்கள். 

கானகத்தின் புதிய தலைவன், தன் அரியணைப் போதையில், தனக்கு முன்னிருந்த தலைவர்களின் வீழ்ச்சியைக் கேலி பேசி, வார்த்தைகளைச் சிதைத்து, மேடைகளில் “கொத்து புரோட்டா” என ஆணவத்தை வெளிப்படுத்துகிறான்.

கனியின் ருசி பார்க்கக் காத்திருக்கும் மக்களுக்குக் கனிகளைத் தராமல், தன் அதிகாரத் திமிரையும் வெற்று வசனங்களையும் மட்டுமே வாரி வீசும் இந்தப் போக்கு, ஆணவத்தின் உச்சமன்றி வேறென்ன?

வரலாறு புகட்டும் பாடம்

இயற்கை எப்போதும் மனிதனுக்குப் பாடம் கற்பிக்கிறது.

அன்று ரத்தம் சொட்டச் சொட்டத் தவித்த ஆதிமனிதனுக்குத் தன் ஏமாற்றத்தைச் சொல்ல மொழி தெரியவில்லை.

இன்றோ, உலகமே வியக்கும் மொழி இருந்தும், தங்களின் அவல நிலையை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியாமல், “நாம்தானே இந்தத் திரைப் பிம்பத்தை நம்பி ஓடினோம்?” என்ற குற்ற உணர்ச்சியிலும் ஏமாற்றத்திலும் பலர் மௌனமாய் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் என்பது திரைக்கதை அல்ல; அது மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்.

வெற்று வார்த்தைகளையும், மேடைத் திமிரையும், வசன வீரத்தையும் நிஜமென்று நம்பி ஏமாறும் வரை, அன்று சைகையைத் தவறாகப் புரிந்துகொண்டு காட்டு விலங்குகளிடம் சிக்கிய ஆதிமனிதனின் நிலையும், இன்று வாக்குறுதிகளின் பின்னால் ஓடி ஏமாற்றத்தில் நிற்கும் மக்களின் நிலையும் வேறுபட்டதல்ல.

காலம் மாறியிருக்கலாம்.
மொழி வளர்ந்திருக்கலாம்.
ஆனால், உண்மையைப் புரிந்துகொள்ளும் அறிவு விழித்தெழாத வரை, காட்டின் வடிவம் மாறுமே தவிர, காட்டுமிராண்டித்தனம் மாறாது.

— ஊரான்