Wednesday, 13 May 2026

உலகமயமாகும் தீண்டாமை: அம்பேத்கரின் கணிப்பும் அமெரிக்காவின் எதார்த்தமும்

“Hindus migrating to other regions on earth carry the caste system with them. Caste thereby becomes a world problem” என்று அண்ணல் B. R. Ambedkar அவர்கள் 1916ஆம் ஆண்டு எழுதிய Castes in India: Their Mechanism, Genesis and Development என்ற ஆய்வில் எச்சரித்தார்.

“இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குக் குடிபெயரும்போது, சாதி முறையையும் உடன் எடுத்துச் செல்கின்றனர்; இதனால் சாதி என்பது உலகப் பிரச்சினையாக மாறுகிறது” என்ற இந்தக் கருத்து, இன்று புதிய அரசியல் மற்றும் மனித உரிமைச் சூழலில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது.

Hardev Sahay, a representative of the Dalit organization Begumpura Cultural Society of New York, speaks at the rally in support of the caste discrimination bill, in Jackson Heights, Queens, in New York, on April 13, 2026. Credit: Yashica Dutt

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, அமெரிக்காவின் New York மாநில சட்டமன்றத்தில் சாதிப் பாகுபாட்டைத் தடை செய்யும் சட்ட முன்வடிவுகள் விவாதிக்கப்படுவது, அம்பேத்கரின் அந்த எச்சரிக்கை எவ்வளவு துல்லியமானது என்பதை வெளிப்படுத்துகிறது.

வேலைவாய்ப்பு, பணியிடம், வீட்டு வசதி குடியிருப்பு போன்ற இடங்களில் “caste discrimination” என்பதை தனித்துவமான மனித உரிமை மீறலாக அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. (PolicyEngage)

நியூயார்க் சட்ட முன்வடிவு: சாதி ஒரு உலக மனித உரிமை விவகாரம்

2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட New York Assembly Bill A6920 மற்றும் New York Senate Bill S6531 ஆகிய சட்ட முன்வடிவுகள், “சாதி” என்பதைக் குறிப்பாக மனித உரிமைச் சட்டப் பாதுகாப்புக்குள் கொண்டு வர முயல்கின்றன. இந்த மசோதாக்கள், வேலைவாய்ப்பு, வீட்டு வசதி மற்றும் பொது சேவைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. (PolicyEngage)

சட்டத்தின் ஆதரவாளர்கள், தற்போதைய அமெரிக்க எதிர்ப்பாகுபாடு சட்டங்களில் ancestry அல்லது ethnicity போன்ற பிரிவுகள் இருந்தாலும், “caste” என்பதைத் தெளிவாகச் சேர்ப்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பையும் புகார் அளிக்கும் தெளிவான அடிப்படையையும் வழங்கும் எனக் கூறுகின்றனர். (MyRepTracker)

இந்த விவாதம் தற்செயலாக உருவானதல்ல. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்குள் சாதி அடையாளங்கள் தொடர்ந்தும் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக, Cisco Systems நிறுவனத்தில் தலித் ஊழியர் ஒருவரால் தொடரப்பட்ட வழக்கு, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. அந்த வழக்கில், இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த மேல்சாதி நிர்வாகிகள் பணியிடத்தில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. (MyRepTracker)

மேலும், Equality Labs வெளியிட்ட ஆய்வு, அமெரிக்காவில் வாழும் தலித் சமூகத்தினரிடையே வேலை, கல்வி மற்றும் மதச் சூழல்களில் பாகுபாடு நிலவுவதாகக் கூறியது. இந்த ஆய்வுகள் மற்றும் வழக்குகள், சாதி என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல; புலம்பெயர் சமூகங்களின் வழியாக உலகளாவிய சமூகச் சிக்கலாக மாறிவிட்டது என்ற விவாதத்தை வலுப்படுத்தின. (MyRepTracker)

சனாதனக் கட்டமைப்பும் புலம்பெயர் சாதியமும்

அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டை நடைமுறைப்படுத்துவது அமெரிக்க சமூகமே அல்ல; இந்திய துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்த சமூகங்களுக்குள் உருவாகியுள்ள அதிகார உறவுகள்தான். இந்தச் சூழலில், இந்து தேசியவாத மற்றும் சனாதன அரசியலை முன்னிறுத்தும் சில அமைப்புகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக Rashtriya Swayamsevak Sangh மற்றும் Vishwa Hindu Parishad போன்ற அமைப்புகள், பாரம்பரிய இந்து சமூக ஒழுங்கை வெளிநாடுகளிலும் கலாச்சார அடையாளமாகப் பாதுகாக்க முயல்கின்றன என்ற விமர்சனங்கள் அமெரிக்க சமூக ஆய்வாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. (prismreports.org)

இதற்கெதிராக, சில இந்திய-அமெரிக்க அமைப்புகள் “சாதிப் பாகுபாட்டிற்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே உள்ளன; caste என்பதை தனியாகச் சேர்ப்பது இந்துக்களை குறிவைக்கும் அரசியல் நடவடிக்கையாக மாறக்கூடும்” என்றும் வாதிடுகின்றன. (Reddit)

ஆனால், சட்ட ஆதரவாளர்கள் முன்வைக்கும் எதிர்வாதம் முக்கியமானது: சாதி அடையாளம் காரணமாக ஒடுக்குமுறையை அனுபவிப்பவர்கள் தங்களது அனுபவத்தைச் சட்டரீதியாக பெயரிட்டு கூற முடியாத நிலைதான் பிரச்சினை என்பதே அவர்கள் வலியுறுத்தும் மையப்புள்ளி.

எனவே “caste” என்ற சொல்லைத் தெளிவாகச் சட்டத்தில் சேர்ப்பது, பிரச்சினையை மறைப்பதல்ல; அதனை அங்கீகரிப்பதாகும். (NEPYORK)

‘தலித்’ என்ற சொல்லும் ‘தீண்டாமை’ என்ற அனுபவமும்

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பொதுவாக “தலித்” என்று அழைக்கும் அரசியல் மரபு உருவாகியிருந்தாலும், அந்தச் சொல்லுக்குள் உள்ள சமூக முரண்பாடுகளைப் புறக்கணிக்க முடியாது.

தமிழகத்தில்:
  • அருந்ததியர்களுக்கு எதிரான ஆதிதிராவிட ஆதிக்க மனப்பான்மை,
  • ஆதிதிராவிடர்களைத் தாழ்வாகக் காணும் சில தேவேந்திர குல வேளாளர் அணுகுமுறைகள்,
  • ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்குள் நிலவும் உள்அதிகார அரசியல்
போன்ற நிகழ்வுகள்,

“ஒடுக்கப்பட்டோர்” என்ற ஒரே அடையாளத்துக்குள் கூட சமத்துவமின்மை நீடிப்பதைக் காட்டுகின்றன.

இதனால்தான் அம்பேத்கர் தனது எழுத்துக்களில் “Dalit” என்ற சொல்லைவிட “Untouchables” என்ற சொல்லைப் பெரும்பாலும் பயன்படுத்தினார். அவருக்கு முக்கியமானது, தனித்தனி சாதிப் பெயர்களல்ல; மனிதனைத் தீண்டத்தகாதவன் எனக் குறிக்கும் சமூக அமைப்பின் கொடூரம்தான்.

முடிவுரை

நியூயார்க் மாநிலத்தில் சாதிப் பாகுபாட்டை எதிர்க்கும் சட்ட முன்வடிவுகள் விவாதிக்கப்படுவது, சாதி என்பது இந்திய எல்லைக்குள் மட்டும் அடங்கிய பிரச்சினையல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பேத்கர் கூறிய “சாதி உலகப் பிரச்சினையாக மாறும்” என்ற எச்சரிக்கை இன்று அரசியல் எதார்த்தமாக மாறியுள்ளது.

சாதி என்பது வெறும் தனிநபர் மனப்பான்மை அல்ல; அது மதம், மரபு, சமூக அதிகாரம் மற்றும் பண்பாட்டு மேலாதிக்கம் ஆகியவற்றோடு பின்னிப் பிணைந்த கட்டமைப்பு. 

எனவே, சாதியை எதிர்ப்பது என்பது வெறும் ஒழுக்கப் பிரச்சினையல்ல; மனித சமத்துவத்தை மறுக்கும் அந்த அமைப்பை விமர்சன ரீதியாக அடையாளம் காண்பதுமாகும்.

அமெரிக்காவில் உருவாகும் இந்த சட்ட விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனை இன்னும் உலக அரசியலில் உயிரோடு இருப்பதை மீண்டும் நினைவூட்டுகின்றன.

ஊரான்

மேலதிக விவரங்களுக்கு: 

Tuesday, 12 May 2026

கோவணம் ஆகிறதா சிவப்பும் நீலமும்?

ஒரு காலத்தில் உடைகள் என்பவை வெறும் கௌரவம் மட்டுமல்ல, அவை மிகவும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய சொத்துகளாகவும் இருந்தன. பள்ளிச் சிறுவர்களுக்கு டவுசர்கள், விவசாயிகளுக்கு பட்டாபட்டி - வேட்டிகள் இவைதான் அன்றைய நடைமுறை. ஆனால், அதே பள்ளிச் சிறுவர்கள் கூட வயலில் தாய் தந்தையருக்கு உதவி செய்யச் செல்லும்போது, டவுசரை கழற்றி வைத்துவிட்டு கோவணத்தோடுதான் உதவுவார்கள்.


உழைக்கும் விவசாயிகளுக்குக் கோவணம் என்பது அன்றாடத் தேவை. காசு கொடுத்து வாங்கும் வேட்டிகள் இரும்புப் பெட்டிக்குள் பத்திரமாகப் பூட்டி வைக்கப்படும்; அது வெளியில் எங்காவது செல்லும்போது மட்டுமே பயன்படும். பட்டாபட்டி வயல் வேலை இல்லாத நேரங்களில் அணியக் கூடியது. பயன்படுத்தாத போது இது கூட கொடியில் பத்திரமாக தூங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உழைப்பின் சின்னமான கோவணம் மட்டும் எரவானத்தில் சொருகப்பட்டு ஏளனமாகப் பார்க்கப்படும்.

காலப்போக்கில் வேட்டி இத்துப் போகும்போது, அது கரித்துணியாகவோ அல்லது கோவணமாகவோ உருமாறும். ஆனால், அந்த உருமாற்றத்திற்கும் ஒரு காலாவதி தேதி உண்டு. கரித்துணி சில நாட்களும், கோவணம் சில வாரங்களும் மட்டுமே தாக்குப் பிடிக்கும். ஒரு கட்டத்தில் அது எதற்கும் பயன்படாது என்ற நிலை வரும்போது, அதன் நிறம் சிவப்பாக இருந்தாலும் சரி, நீலமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நிறமாயினும் அது குப்பைத் தொட்டிக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.

உழைப்பின் வியர்வையைத் தாங்கிய துணிகள் அவை எந்த நிறமாயினும் கூட அவற்றிற்கு ஒரு மரியாதை இருந்த காலம் போய், இன்று சந்தையைப் பொருத்தே நிறங்களும் தங்கள் மதிப்பைப் பெறுகின்றன.

எனக்குப் பிடித்ததும் சிவப்பும் நீலமும்தான். அதற்காக கோவணம் ஆன பிறகு உச்சிமுகர முடியுமா? 

ஊரான் 

தொடர்புடைய பதிவுகள் 

Monday, 11 May 2026

வலி... வலியது!

உலகில் ஆகச்சிறந்த மொழி ‘வலி’தான்.
அந்த வலியைத் தன் உடம்பில் படாமலேயே, பிறர் படும்போது தன் இதயத்தில் உணர்வதுதான் உண்மையான மனிதநேயம்.


ஒருவன் அழுகையைத் தன் கண்ணீராக்கி, ஒருவன் ரத்தத்தைத் தன் நெஞ்சில் துடிப்பாக்கும்போதுதான் சமூகம் உயிர்த்தெழுகிறது. 

இந்த உணர்வு இல்லையென்றால், இந்த உலகம் நெடுநாட்களுக்கு முன்பே அழுகிப் புழுத்து நாற்றமெடுத்துப் போயிருக்கும்.

கலை தரும் வலியின் அதிர்வுகள்

நாம் ஜவுளிக்கடை ஊழியர்கள் அல்ல. ஆனால் வசந்தபாலன் இயக்கிய அங்காடித்தெரு படத்தில், இருக்கை இல்லாமல் மணிக்கணக்கில் கால் கடுக்க நிற்கும் தொழிலாளர்களின் வலி நம் கால்களில் இறங்கவில்லையா?

நாம் சாலை விபத்தில் அடிபட்டவர்கள் அல்ல. ஆனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்காகப் போராடும் ஒரு மனிதனைப் பார்க்கும்போது நம் உடல் பதறி, நெஞ்சு துடிப்பதில்லையா?

அலெக்ஸ் ஹேலி எழுதிய வேர்கள் நாவலைப் படிக்கும்போது, நாம் ஆப்பிரிக்க அடிமைகளாக இல்லாவிட்டாலும், அவர்களின் முதுகில் விழும் ஒவ்வொரு சவுக்கடியும் நம் நெஞ்சைப் பிளப்பதில்லையா?

ஈழத்தில் கொத்துக்கொத்தாகச் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் உடல்களின் வலியும், இன்று காசாவில் பசியால் துடிக்கும் குழந்தைகளின் அலறலும் நம் இரத்தத்தில் ஓடுகிறதுதானே?

இதுதான் மனிதம்.

வர்க்கம் கடந்த தோழமை

மனித வரலாற்றில் பெரிய மாற்றங்கள் அனைத்தும், பிறர் வலியைத் தன் வலியாக உணர்ந்த மனிதர்களால்தான் நிகழ்ந்தன.

பாட்டாளி வர்க்கத்தின் வலியைத் தன் உயிரில் உணர்ந்ததால்தான், பணக்காரரான ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ்-ஆல் காரல் மார்க்ஸ் உடன் கைகோர்க்க முடிந்தது.

தீண்டத்தகாதவர்களின் வலியைத் தன் மனதில் ஏற்றதால்தான், பல உயர்சாதி இளைஞர்கள் சாதி-தீண்டாமையை எதிர்த்து வீதிக்கு வந்தனர்.

ஒரு காவல்துறை ஆய்வாளர், ஒரு சாதாரண கான்ஸ்டபிளை மணிக்கணக்கில் நிற்க வைத்து அவமானப்படுத்தும்போது, அந்த அதிகாரத் திமிருக்கு எதிராக நம் மனம் கொதிக்கிறது. இங்கே வலி வர்க்கத்தையோ, சாதியையோ, மதத்தையோ பார்த்து வருவதில்லை.

வலியை அரசியலாக்கும் இன்றைய போக்குகள்

ஆனால் இன்றைய அரசியல் மிகவும் வேதனையளிக்கிறது.
பிறர் வலியை உணர்வதற்குப் பதிலாக, அதை அடையாள அரசியலின் சந்தைக்குள் அடைத்து விற்பனை செய்யும் மனநிலை வலுப்பெற்று வருகிறது.

நேற்றுவரை “சனாதனத்தின் பிள்ளைதான் விஜய்” என்று முழங்கிய அதே 'முற்போக்கு' முகங்கள், இன்று பதவி மோகத்தில் “ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு” என்று கரம் கோர்க்கின்றன.

இதை விமர்சித்தால், “உனக்கு வேங்கைவயலின் வலி தெரியுமா?” என்று திசைதிருப்புகின்றனர்.

ஒரு மனிதன் அனுபவித்த வலியின் முழு ஆழத்தை, அதை அனுபவித்தவனே முழுமையாக உணர முடியும் என்பது உண்மைதான். ஆனால் அதனால் பிறர் அந்த வலியை உணரவே முடியாது என்று சொல்லிவிட்டால், மனிதநேயத்தின் அடிப்படையே சிதைந்து போகாதா?

எந்தச் சனாதன அமைப்புகள் தீண்டாமையையும் மனித இழிவையும் உருவாக்கினவோ, அந்தச் சக்திகளோடு சமரசம் செய்துகொண்டே, அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையே ‘பிற்போக்குவாதிகள்’ என முத்திரை குத்தினால் அவர்களுடைய மனமும் ஒருநாள் வலிக்காதா?

“பட்டியலினத்தைச் சேர்ந்தவனாக ஒருவன் இல்லையென்றால் தீண்டாமையின் வலியை உணர முடியாது” என்ற வாதம், வரலாறு முழுவதும் பிறர் வலியைத் தன் வலியாக ஏற்றுப் போராடிய எண்ணற்ற மனிதர்களின் தியாகத்தை அவமதிப்பதோடு, இன்றும் கூட அந்த உணர்வோடு களத்தில் நிற்பவர்களை அந்நியப்படுத்தும் அபாயத்தையும் உருவாக்குகிறது.

வலியைப் போக்கும் அரசியல் வேண்டும்

“அவனவன் வலியை அவனவன்தான் உணர முடியும்” என்றால், பிறகு அடுத்தவர்களின் வலியைப் போக்கப் போராடும் இயக்கங்களும், கட்சிகளும், தியாகங்களும் எதற்காக?

அடுத்தவனின் வலியைத் தன் சொந்த வலியாகக் கருதுபவன்தான் உண்மையான போராளி. ஆனால் பதவியும் அதிகாரமும், பிறர் வலியை உணரும் இதயத்தை மங்கச் செய்யும் போது, அரசியல் இயக்கங்கள் தங்கள் ஆன்மாவையே இழக்கத் தொடங்குகின்றன.

வலி என்பது சாதி, வர்க்க, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. அடுத்தவனின் வலியைத் தன் வலியாக உணரும் இதயம்தான் உண்மையான மனித இதயம்.

வலியை அரசியலாக்காமல் —
வலியைப் போக்கும் அரசியலே இந்த மண்ணுக்கு அவசியம்.

ஊரான்

Saturday, 9 May 2026

ஈட்டி முனையில் ஒரு இதயம்

வசந்த காலத்தின் வரவு

படிப்பு முடிந்து முதல் வேலைக்கான ஆணை வந்தபோது வீடு திருவிழாக் கோலம் பூண்டது. அப்பாவின் கண்களில் பெருமிதம், அம்மாவின் ஆனந்தக் கண்ணீர், அண்ணன் தம்பிகளின் ஆரவாரம் இவை எல்லாம் மாணிக்கத்துக்குள் புது ரத்தத்தைப் பாய்ச்சின.


“என் குடும்பம், என் சொந்தம்” என்ற உணர்வு அவனை ஆட்கொண்டது. முதல் சம்பளம் முதல் ஒவ்வொரு ஊக்கத்தொகையும் குடும்பத்துக்கே சென்றது. தங்கைகளின் திருமணம், தம்பியின் படிப்பு என அவன் எல்லோருக்கும் ஏணியானான்.

முட்டுக்கட்டையும் முதல் கசப்பும்

திருமணத்துக்குப் பின் மரகதம் வீட்டுக்கு வந்தாள். மாணிக்கம் அவளை உயிருக்கு உயிராக நேசித்தான். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவளை ஒரு பெண்ணாகப் பார்க்கவில்லை. “என்ன கொண்டு வந்தாள்?” என்ற தராசிலேயே அவளை எடை போட்டனர்.

மாமனார், மாமியார், நாத்தனார்களின் ஏச்சுகளும் அவமான வார்த்தைகளும் அவளது மனதில் ஈட்டியாகப் பாய்ந்தன. மாணிக்கத்தின் காதுகளுக்கு அவை எட்டவில்லை. எட்டினாலும், “எல்லார் வீட்டிலயும் நடக்குறதுதானே?” என்று அலட்சியமாகக் கடந்து சென்றான்.

மரகதம் மெல்ல மெல்ல முட்டுக்கட்டை போடத் தொடங்கினாள்.  
“எல்லாத்தையும் வாரி வாரிக் கொடுத்தா நமக்கு பிள்ளை குட்டி இல்லையா? நமக்குன்னு ஒண்ணும் வேணாமா?”  

அவளது கேள்வியின் பின்னால், அவள் அனுபவித்த அவமானங்களின் நெருப்பு மாணிக்கத்துக்குப் புரியவில்லை. ஒருவேளை அவன் அவளோடு உட்கார்ந்து பேசி, தன் குடும்பத்துக்கு உதவிகளை அளவோடு செய்திருந்தால் இந்த நெருப்பு பூக்காமல் இருந்திருக்குமோ என்பது காலம் கடந்த பிறகுதான் அவனுக்கு உரைத்தது.

நினைவாற்றலின் கூர்மை

காலம் உருண்டது. பிள்ளைகள் வளர்ந்தனர். மாணிக்கம் ஓய்வு பெற்றார். ஆனால் மரகதத்தின் நினைவாற்றல் அவருக்கு சாபமாக மாறியது.

முப்பது வருடங்களுக்கு முன் நாத்தனார் சொன்ன ஒரு வார்த்தையை இன்று நடந்ததுபோலத் துல்லியமாக எடுத்து வைத்தாள்.  
“அன்னைக்கு உங்க அக்கா என்னை அப்படிப் பார்த்துச் சொன்னாங்களே... அப்போ நீங்க எங்கே இருந்தீங்க?”  

இப்படி ஒவ்வொரு நாளும் ஈட்டிகள் அவன் நெஞ்சைத் துளைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

ஓயாத உள்ள வெக்கை

முதுமையில் மாணிக்கத்தின் ஒவ்வொரு அசைவும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது. அவரது தும்மல் கூட அருவருப்பை ஏற்படுத்தியது. “எல்லாருக்கும் அள்ளி அள்ளிக் கொடுத்த கொடை வள்ளல் இப்ப எப்படி உக்காந்திருக்கார் பார்...!” என்ற நையாண்டி அவரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியது.

தொடக்க காலத்தில் உதவிகளைப் பெற்ற உறவுகள் எல்லாம் இன்று ஒதுங்கிக் கொண்டதால் மாணிக்கத்திற்கு உறவாடுவதற்கு உறவுகள் இல்லை. ஓய்வு கால ஊதியம் சில நேரங்களில் பற்றாக்குறையை ஏற்படுத்தும் போது அதுவே மரகதத்திற்கு ஒரு ஆயுதமாக மாறிவிடுகிறது.

ஒரு அதிகாலையில் மின்விசிறியின் ஓயாத சத்தத்துக்கு நடுவில் அமர்ந்திருந்த மாணிக்கத்துக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

ஈருடல் ஓருயிர் என்பது வெறும் கவிதை மட்டுமே.  எதார்த்தத்தில் அவர்கள் இரு துருவங்களாகவே வாழ்ந்து முடித்திருந்தனர்.

வெளியே சாலைகள் சிதிலமடைந்து கிடக்கலாம்.  ஆனால் தன் மனதுக்குள் சிதைந்து கிடக்கும் விழுமியங்களை யார் சீரமைப்பார் என்ற ஏக்கத்துடன் அவர் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஊரான்

வேம்புப் பூத்த வேனில் காலமும்... திசை மாறும் தேன் துளிகளும்!

வேப்ப மரமும், புங்கை மரமும் துளிர்விட்டு, இலை செழித்து, நிழல் பரப்பிப் பூத்துக் குலுங்கும் ஒரு கோடையின் வசந்த காலம். மரத்தின் தண்மையான நிழலில் மனிதர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்க, அதன் கிளைகளிலோ சுட்டித்தனமான சிறுவர்களைப் போல 'அணில்கள்' தாவிக் குதித்துக் கொண்டிருந்தன. 


கோடையின் வெப்பம் சுட்டெரித்த போதும், எங்கோ மறைந்திருந்த மலர்களில் இருந்து நற்சுவையை உறிஞ்சித் தேனீக்கள் கொண்டு வந்து கிளைகளில் சேமிக்கத் தொடங்கின.

உண்மையில், அந்தத் தேன் மற்றவர்களுக்கானது அல்ல; அந்தக் கூட்டில் வளரும் தன் வாரிசுகளுக்கானது. வாரிசுகள் சிறகு முளைத்துப் பறக்கும் வரை சேமிக்கப்படும் அந்தத் தேனை, அவை வெளியேறும் முன் உறிஞ்சிவிட்டு வெறும் கூட்டையே விட்டுச் செல்லும். ஆனால், மனிதர்களோ அதற்கு முன்பாகவே பல உயிர்களை அழித்து, அந்தத் தேனைத் திருடிக்கொள்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கட்டத் தொடங்கிய ஒரு 'அரசியல் தேன்கூடு', ஏப்ரல் இறுதியில் முழுமையடைந்து, மே மாதத் தொடக்கத்தில் வெளிப்படையாகத் தெரிய ஆரம்பித்தது. அந்தத் தேனைச் சுவைக்க இப்போது ஆளாளுக்குப் போட்டி! தொடக்கத்தில் இருந்தே அணில்கள் அந்த மரத்தைச் சுற்றி வட்டமடித்ததால், பெரும்பகுதியை அவை பங்கிட்டுக் கொண்டன. இருந்தபோதும் அணில்களின் வயிறு இன்னும் நிறையவில்லை.

அதே வேளையில், தலைக்கு மேலே தேன்கூடு தொங்குவதைப் பார்த்துவிட்டு, அதன் சுவைக்காகக் கீழே நாவில் எச்சில் ஊறச் சிலர் காத்துக் கிடந்தனர். "வெறுமனே காத்திருப்பதில் பயனில்லை" என்று உணர்ந்தவர்கள், ஒரு வாரம் கழித்து மேலிருந்து சொட்டுச் சொட்டாக வடியும் தேனைத் தங்கள் ‘கை’களாலேயே ஏந்திச் சுவைக்கத் தொடங்கினர். இன்னும் சிலரோ, பொறுமையிழந்து அந்தத் தேன்கூட்டை ‘அரிவாளால்’ கொத்தத் துணிந்தனர்; சிதறி விழும் தேனைத் தங்கள் ‘பானை’களில் பிடிப்பதற்கு வேறு சிலர் தயாராக நின்றனர்.

எப்படியோ... அந்தத் தேன்கூட்டை அணில்களோடு சேர்ந்து, சிலர் ‘கை’யில் ஏந்தியும், சிலர் அரிவாள் நுனியால் சுவைத்தும், சிலர் பானை நிறையப் பிடித்தும் தங்களுக்குரிய பங்கை உறுதி செய்து கொண்டனர். 

மரத்தின் அடியில் சிதறிக்கிடக்கும் தேன் துளிகளுக்காகக் காத்திருந்த காலம் போய், இப்போது மொத்தக் கூட்டின் மீதே பலரது பார்வையும் படிந்துவிட்டது. அந்தத் தேன் எத்தனை நாவுகளுக்கு இனிப்பைத் தரப்போகிறது என்பதும், தேனின் சுவை யாருக்குச் சொந்தம் என்பதும், அணில்களின் அணிவகுப்பிற்குத் தலைமை தாங்கும் அந்த அணில் தலைவருக்கே  (Squirrel leader) வெளிச்சம்!

இந்தத் தேன்கூடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கட்டப்படுவதால், தேனுக்காகக் காத்திருந்து ஒரு சொட்டுத் தேனும் நாவில் படாதவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் காத்திருக்க வேண்டும். அப்பொழுது அணில்களோடு புதிதாகக் குரங்குகள் கூடப் போட்டிக்கு வரலாம். ஆனாலும் தேனுக்காக நாக்கு அதுவரை தொங்கிக்கொண்டுதான் இருக்கும்.

தேனைச் சுவைக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?

ஊரான்