அத்திமூரான் கொட்டாய்
எங்க ஊரு, அன்றைய வடாற்காடு மாவட்டம், போளூர் வட்டம், மட்டவெட்டு பஞ்சாயத்துல இருக்குற அத்திமூரான் கொட்டாய். எங்க ஊர்க்காரங்க எல்லாருமே ஒரே ரத்தச் சொந்தங்க; ஒரே மூதாதையரோட வாரிசுக. சிலநூறு வருசத்துக்கு முன்னாடி இங்க வந்து சின்னதா கொட்டாய் போட்டுத் தங்குனதால 'கொட்டாய்'னு பேரு வந்ததாம். ஆனா, அது என்ன 'அத்திமூர்'? அந்தப் பேரு எப்படி வந்துச்சுன்னு எங்க பெரியப்பா நாராயணசாமி சொல்லக் கேட்டிருக்கேன்.
ஜவ்வாது மலை அடிவாரத்துல போளூருக்குப் பக்கத்துல 'அத்திமூர்'னு ஒரு கிராமம் இருக்கு. அங்க ஒரு காலத்துல ஒரு மன்னன் மலை மேலே கோட்டை கட்டி ஆட்சி செஞ்சிருக்கான். இன்றும் அந்த கோட்டையின் சுவடுகளை அங்கே காண முடியும்.
வெள்ளைக்காரங்க அந்தக் கோட்டையைக் கைபற்ற வந்தப்போ, கோட்டையின் மெய்க்காப்பாளனாக இருந்த ஒரு வீரன் அவங்களை எதிர்த்து சண்டை போட்டு சிலரை வெட்டிச் சாய்ச்சிருக்கான். மறுநாள் பெரிய படையோட வெள்ளைக்காரங்க வர்றதைக் கண்டு, இனி இங்க இருந்தா உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சு, தன் பொண்டாட்டியோட தப்பிச்சு அடர்ந்த காட்டுக்குள்ள புகுந்திருக்கான். பருவத மலையைக் கடந்து, மட்டவெட்டு பெருமாள் மலை உச்சியில தலைமறைவா சில காலம் வாழ்ந்திருக்கான்.
அங்க வாரிசுகள் பெருகின பிறகு, மலையிறங்கி வந்து கீழ்பாலூர்ல கொஞ்ச காலம் இருந்துட்டு, அப்புறம் விவசாய நிலம் தேடி இந்த இடத்துக்கே வந்து தங்கிட்டானாம். அத்திமூர்ல இருந்து வந்து தங்குன இடமாதலால் இது 'அத்திமூரான் கொட்டாய்' ஆயிடுச்சு. நானும் அத்திமூரான் கொட்டாய்க்காரன் ஆனேன்!
தொடக்கப் பள்ளி: சோறும் கல்வியும்
மட்டவெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில அஞ்சாம் வகுப்பு வரை படிச்ச காலத்துல பள்ளிக்கூட மத்தியானச் சாப்பாட்டை மறக்கவே முடியாது. அந்தப் பால் பவுடர் ருசி இப்பவும் நாவிலேயே இருக்குது.
பள்ளிக்கூடத்துக்கு மேற்கால 'ஒடையாமுட்டு' (அகமுடையர்) நிலம். அங்கிருந்து கசியுற தண்ணியில பள்ளிக்கூட நிலத்துலயும் நாங்க விவசாயம் செய்வோம்; நெல்லு நட்டு அறுவடை செய்வோம், காய்கறி கூடப் போடுவோம். இது எல்லாமே மத்தியானச் சாப்பாட்டுல எங்களுக்கே வந்து சேரும். தூரத்துலேருந்து வர்ற இந்த 'கொட்டாகாரப்' பசங்களுக்கு ஒரு கரண்டி சோறு கூடுதலா கெடைக்கும்.
புரட்டாசி மாசம், மாலை நேரத்துல மழை வர்றது வழக்கம். மழை மேகங்கள் மலை உச்சியைத் தொட்டு கீழிறங்குறதைப் பாத்தாலே, தூரத்துல இருந்து வர்ற கொட்டாக்காரப் பசங்களை மட்டும் மழை வர்றதுக்கு முன்னாடியே பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வைப்பாரு தலைமை ஆசிரியர்.
எங்க தலைமையாசிரியர் விட்டல் வாத்தியாருக்கு மேல்பாலூர்ல வீடு. அவருக்கு மதியச் சோறு எடுத்துட்டு வர ரெண்டு பசங்களை அனுப்பி வைப்பாரு. அஞ்சாம் வகுப்புப் படிக்கிற பிஞ்சுக் கால்கள், போய் வர நாலு கிலோமீட்டர் நடக்கணும். நானும் சில நாள் போயிருக்கேன்.
அப்படிப் போயிட்டு வர்ற பசங்களுக்கு அவரு தன்னோட சாப்பாட்டுல கொஞ்சம் கொடுப்பாரு. கூழும், களியும், கருக்கா நெல்லுச் சோறும் சாப்பிட்டு வளர்ந்த எங்களுக்கு, அந்தச் சன்னமான வெள்ளைச் சோறும் சாம்பாரும் அமிழ்தமா இருக்கும். "நம்ம வீட்ல இப்படி இல்லையே"ங்கிற ஏக்கம்கூட வரும்.
நடுநிலைப்பள்ளி நினைவுகள்
அப்பவெல்லாம் ஸ்கூல்ல பாஸ் ஆகலனா படிப்பு வரலன்னு பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதயே நிறுத்திப்புடுவாங்க. அப்புறம் ஆடு மாடு கோழி கழனி கொல்லைன்னு இருக்க வேண்டியதுதான். ஆனா நான் இங்க அஞ்சாவதுல ரெண்டு வருஷம் படிச்சது ஒசரமா வளர்றதுக்குத்தானே! வருஷந்தான் ஓடுச்சே ஒழிய நான் ஒசரமா வளர்ந்த பாடில்லை. இதுக்கு அப்புறமும் ஆறாம் வகுப்புக்கு அனுப்பலன்னா படிப்ப நிறுத்தனாலும் நிறுத்திப்புடுவாங்கன்னு, வேற வழி இல்லாம என்னை பாலூருக்கு அனுப்பி வெச்சாரு விட்டல் வாத்தியாரு.
நடுப்பாலூர் நடுநிலைப்பள்ளியில எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். தலைமையாசிரியர் துரைக்கண்ணு வாத்தியார் சொல்லிக் கொடுத்த இங்கிலீஷ் கிராமர், இன்னமும் பசுமையா ஞாபகம் இருக்கு. பாடத்தோடு 'தச்சுத் தொழிலும்' (Carpentry) சொல்லிக் கொடுத்தாங்க. இங்கேயும் மதியம் சாப்பாடு போட்டாங்க.
பள்ளிக்கூடத்தில மதிய சாப்பாடு போடலன்னா நானெல்லாம் உயர்நிலை பள்ளியை நோக்கி போயிருக்குவே முடியாது.
பீடி கணக்கு
மத்தியான நேரங்கள்ல கீழ்ப்பாலூர் தேரடி மைதானத்துல இருக்குற காய்கடக்காரர் கடைக்குப் போவேன். அஞ்சு பைசாவுக்குப் பட்டாணி, பொட்டுக்கடலை வாங்கிச் சாப்பிட்டுட்டு, அப்பாவோட கணக்கு நோட்டுல எழுதச் சொல்லுவேன். அந்தக் கடையில தக்காளிப் பழத்துல ஓட்டை போட்டு, உப்பைச் சொருகிச் சாப்பிடுற சுவையே தனி.
என்னோட சின்ன தாத்தா பேத்தி சீதா அக்காவ அவருக்கு கல்யாணம் முடிச்சதால ‘காய் கடைக்காரரு’ எனக்கு மாமா முறை. ‘என்ன ஓய்’னு அவரு என்னை கூப்பிடும் போது அதுல ஒரு அலாதி அன்பு இருக்கும்.
அந்தக் கணக்கு நோட்டுல, மளிகை காய்கறி கணக்குடன் பீடி பண்டல் கணக்கும் இருக்கும். எங்க அப்பா சதா பீடியும் கையுமாதான் இருப்பார். அதனால பீடியை பண்டிலா வாங்கி வந்து வச்சிப்பாரு.
எங்க அப்பாவோட தலைமுறையில அவருக்கு ஓரளவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். மத்தவங்க பீடி கேக்குறப்போ கொடுக்கிற பீடி கணக்கை ஒரு நோட்டுல எழுதி வைப்பாரு.
கொஞ்ச நாள் கழிச்சு பீடி பாக்கிய வசூல் பண்ணுவாரு. வந்த வரைக்கும் லாபம், வராததெல்லாம் காந்திக் கணக்குதான். நான் அவருக்கு கணக்கு பார்க்கிறதுக்கு உதவி செய்வேன். இப்படித்தான் எங்கப்பா பொன்முடி, ‘கடைக்காரர்’ என பெயரெடுத்தார். அதனால நானும் 'கடைக்காரன்' பையன் ஆனேன்.
உதவித் தொகையை கோட்டை விட்ட காலம்
அன்னைக்குச் செய்தி சொல்ல போன் வசதி எல்லாம் கிடையாது, தந்தியும் அரிது. கடுதாசி (கடிதம்) கூட கீழ்ப்பாலூர் போஸ்ட் ஆபீஸ்ல இருந்து நேரடியா வராது. ஊர் பக்கம் வர்றவங்க கையில கொடுத்து விடுவாங்க. கடுதாசிய வாங்கி வர்றவரு அதைக் கொண்டு வந்து கொடுத்தா உண்டு, இல்ல, ‘அப்புறமா கொடுக்கலாம்னு’ வீட்டு 'எறவானத்துல' (கூரை ஓரம்) செருகிட்டாங்கன்னா அது அங்கயே மக்கிப் போகும்.
எங்க கண்ணன் அண்ணனுக்கு வேலை விசயமாக வந்த ஒரு கடுதாசிகூட இப்படித்தான் எறவானத்துலயே உறைஞ்சு போனதா அப்பவெல்லாம் பேசிக்குவாங்க. கடுதாசுக்கே இந்த நிலைமைன்னா, வாயால சொல்லி அனுப்புற சேதி மட்டும் வந்து சேருமா என்ன?
எட்டாம் வகுப்பு முடிச்சுட்டு கோடை லீவுல ஊரு, மலை, காடுன்னு சுத்தியாச்சு. ஒன்பதாம் வகுப்புச் சேர டி.சி (TC) வாங்கப் போனப்போ, துரைக்கண்ணு வாத்தியார் என்னைத் திட்டித் தீர்த்துட்டாரு. காரணம், எட்டாம் வகுப்புல நான்தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்திருந்தேனாம். ஒன்றிய அளவுல நடக்குற ஸ்காலர்ஷிப் எக்ஸாம் (உதவித்தொகைத் தேர்வு) எழுதியிருந்தா, மேற்கொண்டு படிக்க எனக்குப் பணம் கிடைச்சிருக்குமாம்.
ஊருக்கு வர்ற யார் மூலமோ ஸ்காலர்ஷிப் பரீட்சை பத்தி வாத்தியார் சொன்ன செய்தி எங்களுக்கு வந்து சேரல. தகவல் பரிமாற்றம் சரியா இல்லன்னா சறுக்கல்தானே மிஞ்சும்!
தொடரும்
பொன்.சேகர்


.jpeg)
.jpg)

.jpg)
.jpg)