Friday, 21 August 2026

தமிழனின் வேர்களைத் தேடி… அகழாய்வு மையங்களை நோக்கிய பயணம் – பகுதி 3 (நிறைவுப் பகுதி)

 மதுரையை நோக்கிய நள்ளிரவுப் பயணம்

பொருநை அருங்காட்சியகம், நெல்லை

கீழடியை நோக்கிப் பயணம் என்றவுடன், எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி-கல்லூரிப் பருவத்து உற்சாகம் விழித்துக்கொண்டது. 12.08.2026 அதிகாலை 5:30 மணிக்குக் காட்பாடியில் தொடர்வண்டியைப் பிடிக்க வேண்டும். அதிகாலையில் கிளம்பினால் தாமதமாகி விடுமோ என்ற பதற்றத்தில், நள்ளிரவு 2 மணிக்கே வாலாஜாவிலிருந்து புறப்பட்டு 3 மணிக்கெல்லாம் காட்பாடி தொடர்வண்டி நிலையத்தை அடைந்துவிட்டேன். புத்தகங்களை நேசிக்கும் வாசிப்புப் பழக்கம் எனக்குள் இருந்ததால், அந்த அதிகாலைக் காத்திருப்பு ஒரு சுமையாகத் தெரியவில்லை.

பிற்பகல் 2 மணிக்கு மதுரை மண்ணில் காலடி வைத்தபோது வெயில் தகித்துக் கொண்டிருந்தது. வெயிலிலும் ஓயாத உழைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது மதுரை மாநகரம். அங்கிருந்து ஒரு நகரப் பேருந்தின் குலுங்கலில் பயணித்து மாட்டுத்தாவணியை அடைந்தேன். கொளுத்தும் வெயிலுக்கு இதமாக மதுரையின் அடையாளமான ஜிகர்தண்டாவைத் தொண்டையில் இறக்கிவிட்டு, உடன் வந்த நண்பரின் இருசக்கர வாகனத்தில் கீழடியை நோக்கிப் பயணமானோம்.

கீழடி: புதைந்து கிடந்த பூர்வகுடி நாகரிகம்

மதுரையில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில், சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் வலதுபுறம் அடர்ந்த தென்னந்தோப்புகள் காட்சிளிக்கின்றன. அந்த அமைதியான தென்னந்தோப்புகளுக்குள் தான் தமிழர்களின் மாபெரும் நாகரிகம் — ஏன், இந்திய வரலாற்றின் திசையையே மாற்றிய வரலாறு புதைந்து கிடக்கிறது.

கீழடி அகழாய்வு மையத்தைச் சுற்றிப் பார்த்தபோது வியப்பில் உறைந்து போனேன். உரைகிணறு, சுடுமண் கலசங்கள் இருந்த அகழாய்வுக் குழியையும், மற்றொரு இடத்தில் அமைந்திருந்த பிரம்மாண்டமான தொழில் கூடத்தின் அமைப்பையும் பார்த்தபோது சிலிர்த்துப் போனது.

என்றோ புதைந்து போன கட்டட இடிபாடுகள் இன்று நம் கண்முன்னே நிமிர்ந்து நிற்கின்றன! என்றோ (முதுமக்கள்) தாழிக்குள் குமுங்கிப்போன நமது முன்னோர்கள் இன்று எழுந்து வந்து பேசுகிறார்கள்!

வடிகால் வசதியுடன் கூடிய நீண்ட செங்கல் சுவர்கள், நீர் தொட்டிகள் எனத் தமிழனின் நகரத் திட்டமிடலை நேரில் கண்டு திகைத்து நின்றேன். இந்த வரலாற்றுச் சொத்தைப் பாதுகாப்பதற்காக, முந்தைய திமுக அரசின் முன்னெடுப்பில் பெரிய தொழிற்சாலைகளில் அமைக்கப்படுவதைப் போன்ற பிரம்மாண்டமான கூரைகளை அமைத்து, மிக நேர்த்தியாகப் பராமரித்து வருகிறார்கள்.

அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தைப் பார்த்தோம். வெறும் பானை ஓடுகளையும், செங்கற்களையும் நேரில் பார்த்தாலும் சாமானியர்களுக்குப் புரியாத பல தகவல்களை, சங்க இலக்கியப் பாடல்களோடு ஒப்பிட்டு மிகச் சிறப்பாக விளக்கப் படங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளனர். அங்குள்ள ஒவ்வொரு பொருளின் விளக்கத்தையும் முழுமையாக வாசித்து வெளியே வர ஒரு நாள் போதாது. நாங்கள் சென்றதோ பிற்பகல் 3 மணி என்பதால், மாலை ஆறு மணிவாக்கில் அங்கிருந்து அடுத்த அகழாய்வு மையத்தை நோக்கிப் புறப்பட்டோம்.

பட்டணமருதூர்: நெய்தல் நிலத்து உழைப்பும் ஆய்வாளர்களும்

அடுத்துப் பார்க்க வேண்டிய இடங்கள் மதுரைக்குத் தெற்கேயும் தென் கிழக்கேயும் இருந்ததால், அன்றிரவு தூத்துக்குடிக்குப் பயணமானோம். மறுநாள் காலை தூத்துக்குடிக்கு வடக்கே 15 கி.மீ தொலைவில் உள்ள பட்டணமருதூர் நோக்கி பயணித்தோம்.

சாலையின் இருமருங்கிலும் பரந்து விரிந்த உப்பளங்கள். நெல் வயல்களைப் போலப் பாத்திகளில் உப்புநீரைத் தேக்கி, அது ஆவியாகி உப்பாக மாறுவதைக் கண்டோம். நெல் வயல்களிலேயே புரண்டு வளர்ந்த எனக்கு இந்த உப்பள வயல்ககளைப் பார்த்த‌போது வியப்பாக இருந்தது. அந்த உப்புநீரைக் கொப்பளித்துப் பார்த்தபோது அடர்ந்த உவர்ப்புச் சுவை நாவில் தெரிந்தது. மக்சிம் கார்க்கியின் சிறுகதையில் வருவது போல உப்பளத் தொழிலாளர்கள் கால்களில் செருப்புக் கூட இன்றி, கொப்புளங்களோடு உப்பளங்களில் இறங்கி உப்பைச் சேர்க்கும் காட்சியைப் பார்த்தபோது உப்பளத் தொழிலாளர்களின் வேதனையான வாழ்க்கையே நினைவில் நிழலாடியது. அவர்கள் சிந்தும் வியர்வை தான் நம் உணவுக்குச் சுவையாகிறது என்பதை உணர்ந்தேன்.

கடலை ஒட்டி, தாங்க முடியாத வெயிலில் கருகியிருந்த வேலிக்கருவ காடுகளுக்கு நடுவே, பட்டணமருதூரில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. முந்தைய தி.மு.க  அரசின் முன்னெடுப்பில், மார்ச் 17, 2026-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், தோண்டப்பட்ட குழிகளில் பானை ஓடுகளும், மட்கலண்களும், எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகளும் கிடைத்தவண்ணம் உள்ளன. இங்குள்ள உரைகிணறும், கீழடியில் பார்த்த உரைகிணறும் வடிவத்திலும் அமைப்பிலும் ஒரே மாதிரியாக இருப்பதால், இதுவும் கீழடியின் சமகாலத்துத் துறைமுக நகரமாகவே இருக்கும் என நம்ப முடிகிறது.

சுட்டெரிக்கும் பொட்டல் வெயிலில் இரண்டு ஓலைக் குடிசைகள், ஒரு தார்ப்பாய் நிழல், ஒரு சிறிய மேசை — இதுதான் அங்கிருந்த ஆய்வாளர்களின் அலுவலகம்! தொல்லியல் படித்த ஒரு பெண் உட்பட நான்கு இளம் ஆய்வாளர்கள் அங்கே கடமை உணர்வோடு பணியாற்றிக் கொண்டிருந்தனர். அங்கே பணியாற்றும் உழைக்கும் பெண்கள், பூக்களை வருடுவதைப் போல மண்ணை மென்மையாக வருடிச் சலித்து, வரலாற்று ஆதாரங்களைச் சேகரிக்கிறார்கள். மறைந்துபோன நம் வரலாற்றை மீட்டெடுக்கும் உண்மையான காவலர்கள் இவர்கள்தான்!

“இது 200 மீட்டர் தொலைவில் கடல் கொண்ட ஒரு பழமையான துறைமுக நகரம். இந்த 200 ஏக்கர் நிலத்தையும் முழுமையாக ஆய்வு செய்தால், இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து திருத்தி எழுதுவதற்கான கூடுதல் தரவுகள் கிடைக்கும்” என்று அந்த இளம் ஆய்வாளர்கள் நம்பிக்கையோடு கூறினர்.

சிவகளை & ஆதிச்சநல்லூர்: இரும்புக் காலமும் ஈமக்காடுகளும்

துறைமுகம் என்றால் படகுகள் இல்லாமல் இருக்குமா? அதனால் தருவைக்குளம் என்ற ஊரில் இருந்த படகு கட்டும் தளத்திற்குச் சென்றோம். நவீனத் தொழில்நுட்பத்தில் மரங்கள், பிளைவுட்,  ‘கிளாஸ் ஃபைபர்’ மற்றும் ரெசின்களைக் கொண்டு இன்று படகுகளை உருவாக்குவதைப் பார்த்தபோது, எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத ஆதிகாலத்தில் நம் தமிழன் எப்படி மாபெரும் படகுகளைக் கட்டியிருப்பான் என்று எண்ணி வியந்தேன்.

அங்கிருந்து சிவகளைக்குச் சென்றோம். அது மேடான பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான ஈமக்காடு. எண்ணற்ற முதுமக்கள் தாழிகள்! 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய இரும்புச் சான்றுகள்  கிடைத்த இடம் இதுதான். (கிருஷ்ணகிரி மாவட்டம்மயிலாடும்பாறையில் கிடைத்த இரும்பு சான்றுகளும் இதே காலத்வை) ஈமக்காடே இவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தால், இவர்கள் வாழ்ந்த ஊரை அகழாய்வு செய்தால் இன்னும் என்னென்ன கிடைக்கும்? இந்த ஈமக்காடு இடத்தை அகழாய்வு செய்யச் சிவகளை வரலாற்று ஆசிரியர் தோழர் மாணிக்கம் போன்றோர் எடுத்த பெருமுயற்சியை நினைத்துப் பார்த்தபோது சிரம் தாழ்ந்து வணங்கத் தோன்றியது.

அடுத்து, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூருக்குச் சென்றோம். இது இரண்டு மேடான நிலப்பரப்புகளில் அமைந்த ஈமக்காடு. 1876 வாக்கில் ஜெர்மன் இனவியல் அறிஞர் ஃபெடரிக் ஜாகோர் (Dr. Friedrich Jagor) என்பவரால் முதன்முதலில் இங்கு அகழாய்வு செய்யப்பட்டு, பொருட்கள் ஜெர்மனியின் பெர்லின் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் 1902-இல் ஆங்கிலேய தொல்லியலாளர் அலெக்சாண்டர் ரியா (Alexander Rea) இங்கு ஆய்வு செய்தார். நூறாண்டுகளுக்குப் பிறகு இப்போது மத்திய தொல்லியல் துறையால் கண்ணாடி மூடிகளுடன் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

பொருநை அருங்காட்சியகம்: 2,500 ஆண்டு வரலாற்றின் வெளிச்சம்

கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர், பட்டணமருதூர் ஆகியவற்றின் தரவுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள நெல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகத்திற்கு’ வந்தடைந்தோம்.

நெல்லை – கன்னியாகுமரி புறவழிச்சாலையில் இரு குன்றுகளுக்கு நடுவே, இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் நிலப்பரப்பமைப்போடு (Landscape) இந்த அருங்காட்சியகம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரமாகிவிட்டதால், அங்குள்ள 7D காட்சிப் கூடத்திற்கு முதன்முதலாகச் சென்றோம்.

அந்த 7D திரையிடல் நம்மை அப்படியே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழ் நிலத்திற்கு படகில் அழைத்துச் செல்கிறது! ஐவகை நிலங்கள், கொட்டும் அருவிகள், காடுகள், வனவிலங்குகள், கடல் ஆழத்தில் முத்து குளிக்கும் காட்சிகள் என அனைத்தும் நம் கண்முன்னே இயல்பாக நடப்பது போல் தத்ரூபமாக இருந்தது. ஆற்று நீரில் பயணித்து அருவியின் அருகே செல்லும்போது, நிஜமாகவே நம் முகத்தில் நீர் தெரித்தபோது உண்மையாகவே அறிவியன் அருகில் இருப்பது போன்று உணர முடிந்தது.

அப்போது என்னை அறியாமலேயே என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தது. உடன் வந்த தோழருக்கும் இதே உணர்வுதான். ஹைதராபாத், பெங்களூரு அருங்காட்சியகங்களை விட இது பல மடங்கு சிறந்தது பொருநை அருங்காட்சியகம். ஏனெனில், மற்ற அருங்காட்சியகங்கள் எழுதப்பட்ட வரலாற்றைப் பேசுகின்றன; பொருநை அருங்காட்சியகமோ இதுவரை எழுதப்படாத 2,500 ஆண்டுப் பழமையான தமிழனின் உண்மையான வரலாற்றைப் பேசுகிறது!

பயணம் உணர்த்திய அரசியலும் வரலாற்று முழக்கமும்!

வரும் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள “தமிழ் மக்கள் இசை விழா” தொடர்பானத் தரவுகளைத் தேடியபோதுதான் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அந்த இசை விழாவின் முதன்மை முழக்கமான “கீழடியை உயர்த்திப் பிடி!” என்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மை எனக்கு இப்போது முழுமையாகப் புரிந்தது.வேத நாகரிகத்தைத் துரத்தியடி!: ஆயிரம் ஆண்டுகள் பிந்தைய, இல்லாத ஒரு ‘சரஸ்வதி நாகரிகத்தை’ சிந்துவெளி நாகரிகத்தோடு முடிச்சுப்போட்டு, அதுவே இந்தியாவின் ஆதி நாகரிகம், வேத நாகரிகம் எனப் பொய்யான வரலாற்றுப் புனைவை உருவாக்கும் சனாதன சக்திகளுக்கு, கீழடியும் பொருநை நாகரிகமும் துரத்தி அடித்துள்ளன.

இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து திருத்தி எழுதும் போர் முழக்கம்!: இந்திய வரலாறு இனி கங்கைச் சமவெளியில் இருந்தல்ல, பாலாறும், தென்பெண்ணையும், காவிரியும், வைகையும், பொருநையும் (தாமிரபரணி) பாயும் தமிழ் நிலத்திலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்பதற்கான கதிரியக்கக் கார்பன் அறிவியல் சான்றுகள் (Carbon Dating) கைவசம் உள்ளன.

இந்த முழக்கங்கள் வெறுமனே இனப் பெருமிதம் பேசுபவை அல்ல! ஒரு காலத்தில் சாதியற்ற, வர்ணங்களற்ற, சமத்துவச் சமூகமாக வாழ்ந்த மக்களைத் வர்ண தர்மங்களின் பெயரால் பிளவுபடுத்திய சனாதனக் கோட்பாடுகளை வீழ்த்துவதற்கு நமக்குக் கிடைத்துள்ள வரலாற்றுச் சம்மட்டிகளே கீழடியும் சிவகளையும் ஆதிச்சநல்லூரும்!

நன்றியும் வேண்டுகோளும்!

தமிழனின் வேர்களைத் தொட்டு உணர்ந்த இந்த உணர்வுப்பூர்வமான பயணம் எனக்குள் ஆழமான வரலாற்றுப் படிப்பினையைக் கொடுத்துள்ளது.

இந்த பிரம்மாண்டமான அருங்காட்சியகங்களையும் அகழாய்வுகளையும் சாத்தியப்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், முன்னெடுத்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் களத்தில் நின்று உழைக்கும் தொல்லியல் துறை அதிகாரிகள், இளம் ஆய்வாளர்கள், களப்பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் தமிழ்ச் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

அன்பார்ந்த தோழர்களே!

நீங்கள் கோயில்களுக்கோ சுற்றுலா தலங்களுக்கோ செல்லுங்கள், அது உங்கள் விருப்பம். ஆனால், வாழ்நாளில் ஒருமுறையாவது பொருநை அருங்காட்சியகத்திற்கும் கீழடிக்கும் சென்று வாருங்கள். இல்லையேல் இந்த மண்ணில் நாம் வாழ்வதற்குக் காரணமான பண்பாட்டு முகவரியை நாம் அறியாமலேயே போய்விடுவோம்.

இசை விழா வேலை மற்றும் நேரக் காரணங்களால் எனது பயணக் கட்டுரையை இத்துடன் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். இந்த அனுபவங்களின் விரிவான அரசியலை வரும் ஆகஸ்ட் 22 தஞ்சை “தமிழ் மக்கள் இசை விழாவில்” உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அனைவரும் தஞ்சை நோக்கி வாருங்கள்! வர இயலாத தோழர்கள் நிதி உதவி அளித்து இந்த வரலாற்றுப் பண்பாட்டுப் போரில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழனின் வேர்களைத் கண்டுவிட்டோம்இனி வேருக்கு நீர் பாய்ச்சுவோம்! தமிழ் பண்பாட்டைக் காப்போம்!

  • தமிழ்மணி
(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

தமிழனின் வேர்களைத் தேடி…! (பகுதி – 2) பயணக் கட்டுரை

ஆதிமனிதனிலிருந்து நாகரிக மனிதன் வரை: உழைப்பும் வரலாற்று இடப்பெயர்வுகளும்

பொருநை அருங்காட்சியகம், நெல்லை

மெய்நிகர் உலகப் பயணம் தொடர்கிறது…

மனித சமூகத்தின் வரலாற்றை வெறும் அரசர்கள், போர்கள், பேரரசுகள் என்ற கோணத்தில் பார்த்தால் அதன் உண்மையான வரலாற்று மாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியாது.

  • மனிதன் என்ன உற்பத்தி செய்தான்?
  • அதை எப்படித் தயாரித்தான்?
  • அந்த உற்பத்தியில் கிடைத்ததை எவ்வாறு பகிர்ந்து கொண்டான்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளில்தான் மனித சமூகத்தின் உண்மையான வரலாறு ஒளிந்திருக்கிறது.

ஆதிமனிதனும் நவீன மனிதனும்: வரலாற்றின் இரு வேறு அலைகள்

மத்தியப் பிரதேசத்தின் பீம்பேட்கா குகைகளில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் கொற்றலை ஆற்றுப் படுகையிலுள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்த பழங்கற்காலக் கருவிகள் மூலம் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதைத் தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

அதேவேளையில், சிந்துவெளி மற்றும் கீழடி போன்ற நகர நாகரிகங்களைக் கட்டியமைத்த நவீன மனிதர்கள், சுமார் 60,000 முதல் 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று மரபியல் மற்றும் மானுடவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

அப்படியானால், 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களும், 60,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தவர்களும் ஒன்றுதானா? இல்லை என்கிறது அறிவியல்!

  1. முதல் அலை (ஹோமோ எரெக்டஸ்): சுமார் 18 முதல் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய ‘ஹோமோ எரெக்டஸ்’ (Homo Erectus) என்ற ஆதிமனித இனம், உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அத்திரம்பாக்கம் மற்றும் பீம்பேட்காவில் வாழ்ந்தவர்கள் இந்த ஹோமோ எரெக்டஸ் மனிதர்களே. கடுமையான இயற்கைச் சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களால் இவர்கள் காலப்போக்கில் அழிந்துபோயினர்.
  2. இரண்டாம் அலை (ஹோமோ சேப்பியன்ஸ்): அடுத்து, சுமார் 60,000 – 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (Homo Sapiens) எனப்படும் நவீன மனிதர்கள். இன்று உலகம் முழுவதும் வாழும் அனைத்து மனிதர்களின் நேரடி மூதாதையர்களும் இவர்களே.

வேட்டையிலிருந்து வேளாண்மைக்கு: உற்பத்தியின் தோற்றம்

ஆதிகால ஹோமோ சேப்பியன்ஸ் மனிதன் தொடக்கத்தில் இயற்கையிடமிருந்து உணவைச் சேகரித்து உண்டானே தவிர, அதை உருவாக்கவில்லை. ஆனால், ஒரு விதையைக் கவனித்து அதை மண்ணில் விதைத்து வேளாண்மை செய்யத் தொடங்கியபோது, மனிதன் இயற்கையை மாற்றித் தனக்குத் தேவையானதை உற்பத்தி செய்யத் தொடங்கினான்.

பயிர்களைப் பராமரிக்க ஒரே இடத்தில் தொடர்ந்து வாழ வேண்டிய தேவை ஏற்பட்டதால், நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்து நிலையான குடியிருப்பு வாழ்க்கை உருவானது. இதுவே மனித வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!

உபரி’ மற்றும் வாணிபத்தின் வளர்ச்சி

வேளாண்மை வளர்ச்சி தங்களுக்குத் தேவையான அளவை விட அதிகமான தானிய உற்பத்தியை உருவாக்கியது. இந்த அதிகப்படியான உற்பத்தியே ‘உபரி’ (Surplus) எனப்படுகிறது.

  • ஒருவரிடம் தானியம் இருந்தது.
  • மற்றொருவரிடம் மட்பாண்டம் இருந்தது.
  • இன்னொருவரிடம் கருவிகளும், வேறு ஒருவரிடம் துணியும் இருந்தன.

தேவைக்கேற்ப பொருட்களைப் பரிமாறிக்கொள்ளும் நடைமுறை வளர்ந்தது.

உற்பத்தி உபரியை உருவாக்கியது; உபரி பரிமாற்றத்தை உருவாக்கியது; பரிமாற்றம் வாணிபத்திற்கான அடித்தளத்தை அமைத்தது.

கருவி — மனிதனின் மூன்றாவது கை!

மண்ணை உழ, மரத்தை வெட்ட, தானியத்தை அறுக்க மனித உடலின் வலிமை மட்டும் போதவில்லை. தேவைக்கேற்ப மனிதன் கருவிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் தொடங்கினான்.

கருவி என்பது மனிதனின் கைகளுக்கு வலு சேர்த்தது! கருவிகள் வளர்ந்தபோது உற்பத்தியும் தேவைகளும் விரிவடைந்தன; புதிய தொழில்களும் உருவெடுத்தன.

வேலைப் பிரிவினையும் சமூகச் சார்பும்

ஒரு சமூகத்தில் அனைவரும் விவசாயம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை வந்தபோது, உழுதல், பானை வனைதல், நெசவு செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் என வேலைகள் பிரிந்தன. இதையே நாம் ‘வேலைப் பிரிவினை’ (Division of Labour) என்கிறோம்.

வேலைப் பிரிவினை வளர்ந்தபோது, மனிதர்கள் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் சமூக அமைப்பாக மாறினர்.

கூட்டு உழைப்பு உருவாக்கிய மொழியும் பண்பாடும்

விவசாயம், உற்பத்தி மற்றும் வாணிபத்தில் மனிதர்கள் இணைந்து செயல்பட்டபோது சைகைகள் மட்டுமே போதவில்லை. கூட்டு உழைப்புக்குத் துல்லியமான தகவல் பரிமாற்றம் தேவைப்பட்டது. இதனால் ஒலிகளும் சொற்களும் வளர்ந்து மொழியானது.

  • மொழி: பல தலைமுறைகளின் உழைப்பையும் அறிவையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சமூகக் கருவியாகவும், சமூகத்தின் நினைவகமாகவும் மாறியது.
  • பண்பாடு: தலைமுறை தலைமுறையாகச் சேமிக்கப்பட்ட தொழில்நுட்பம், கலைகள், வாழும் முறைகளின் கூட்டுச் சேமிப்பாகக் கட்டமைக்கப்பட்டது.
உற்பத்தியும் நகரமைப்பின் தோற்றமும்

உபரி உற்பத்தி, வேலைப் பிரிவினை, வாணிப வளர்ச்சி ஆகியவை குடியிருப்புகளை நகரங்களாக மாற்றின.

நீர் மேலாண்மை, கழிவுநீர் வாய்க்கால்கள், தெருக்கள், சுட்ட செங்கல் கட்டிடங்கள் ஆகியவை வெறும் கல்லும் மண்ணும் அல்ல; அவை ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஒருங்கிணைந்த கூட்டு உழைப்பின் மாபெரும் வெளிப்பாடு.

சிவகளையா? சிந்துவெளியா? எது முந்தையது?

கீழடி மற்றும் சிந்துவெளியை வெறும் பழங்காலக் கட்டிடத் தொகுப்பாகப் பார்க்க முடியாது. பானை ஓடுகள், நெசவுக் கருவிகள், சுட்ட செங்கற்கள் மற்றும் தமிழி எழுத்துகள் போன்றவை அங்கே வாழ்ந்த உழைக்கும் மக்களின் உற்பத்தி அறிவு, தொழில் நுட்பம், வேலைப் பிரிவினை மற்றும் எழுத்தறிவிற்கான வரலாற்றுச் சான்றுகளாகும்.

சிந்துவெளியும் கீழடியும் நிலவியல் ரீதியாக வேறு வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும், இவ்விரண்டு இடங்களிலும் வாழ்ந்த மக்கள் பேசிய மொழி ஒன்றே என அண்மைய ஆய்வுகள் (ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்போலா போன்ற அறிஞர்களின் ஆய்வுகள்) சுட்டிக்காட்டுகின்றன.

சிந்துவெளி நாகரிகம் கீழடியை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தையது என்பதால், அங்கிருந்து மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து கீழடிக்கு வந்திருக்க வேண்டும்; அல்லது, பொருநை (தாமிரபரணி) நதிப்படுகையில் வாழ்ந்த சிவகலை மக்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 3000 வாக்கில்) சிந்துவெளியை நோக்கி இடம்பெயர்ந்திருக்கக் கூடும். சிவகளையில் கிடைத்த பழமையான இரும்புப் பயன்பாட்டுச் சான்றுகளைக் கொண்டு பார்க்கும்போது, தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய இடம்பெயர்வை நாம் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது.

(குறிப்பு: சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் இதுவரை ஈமக்காடுகளில் மட்டுமே அகழ்வாய்வுகள் நடந்துள்ளன. கீழடியைப் போல இத்தடங்களில் மக்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளை அகழ்வாய்வு செய்தால் இதற்கான கூடுதல் சான்றுகள் கிடைக்கக்கூடும்.)

ஸ்டெப்பி மேய்ச்சல் சமூகமும் ‘ஆரியவர்த்தமும்’

இதே காலகட்டத்தில், மத்திய ஆசியாவின் ‘ஸ்டெப்பி’ (Steppe) புல்வெளிப் பிரதேசங்களில் வாழ்ந்த மேய்ச்சல் சமூகத்தினர் கி.மு. 2000–1500 வாக்கில் இடம்பெயரத் தொடங்கினர்.

வேளாண்மை குறித்தோ, குடியிருப்பு வீடுகள் மற்றும் நகர வாழ்க்கை குறித்தோ எந்த அனுபவமும் இல்லாமல், கால்நடைகளுடன் நாடோடிகளாக வந்தவர்கள் (ஆரியர்கள்), யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறினர். ஏற்கனவே அங்கிருந்த சிந்துவெளியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்த அவர்கள், மெல்ல மெல்ல அம்மக்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அப்பகுதிக்கு ‘ஆரியவர்த்தம்’ என்று பெயர் சூட்டிக்கொண்டனர்.

இங்கிருந்தே அவர்கள் தங்களின் சாதியக் கட்டமைப்பையும், நால்வர்ணக் கோட்பாடுகளையும் உருவாக்கி ஆதிக்கத்தை திணிக்க முயன்றனர். ஆனால், விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த திராவிடப் பழங்குடிகளும் தமிழர்களும் இந்த ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், தற்சார்புடனும் சுயமரியாதையுடனும் வாழும் மதச்சார்பற்ற அறநெறி வாழ்க்கையைச் சங்க இலக்கியங்களாக வடித்தனர்.

சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் தருவாயில்தான் ஆரியர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர்எனவே, அவர்கள் கூறும் இந்திய வேத நாகரிகத்திற்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் இடைவெளி ஆயிரம் ஆண்டுகள்.

கண்டங்கள் பிரிவும் மனித இடப்பெயர்வும்: அறிவியலின் பார்வை

இங்கே ஒரு முக்கியமான நிலவியல் மற்றும் மானுடவியல் கேள்வியையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்:

“ஒரு காலத்தில் கண்டங்கள் பிரியாமல் (பாஞ்சியா / குமரிக்கண்டக் கோட்பாடு) ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இணைந்திருந்த காலத்தில் உருவான பூர்வகுடிகளா தமிழர்கள்?”

அறிவியல் இதற்கான பதிலை மிகத் தெளிவாகக் கூறுகிறது. புவியியல் அடிப்படையில் கண்டங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ‘பாஞ்சியா’ (Pangaea) என்ற ஒரே நிலப்பரப்பாக இருந்ததும், பின்னர் அது பிளவுபட்டு ஆப்பிரிக்கா, ஆசியா, அண்டார்டிகா எனக் கண்டங்கள் பிரிந்ததும் சுமார் 15 முதல் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகளாகும்.

ஆனால், மனித இனம் (ஹோமோ சேப்பியன்ஸ்) தோன்றியதே சுமார் 3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான். எனவே, கண்டங்கள் பிரிந்தபோது மனிதர்களும் பிரிந்து பரவினார்கள் என்பது அறிவியலுக்கு முரணான கருத்து.

உண்மையில், கண்டங்கள் பிரிந்து பல கோடி ஆண்டுகள் கழித்து, நிலப்பரப்புகள் இன்றைய நிலையை அடைந்த பிறகே, சுமார் 60,000 – 70,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கடற்கரை ஓரங்கள் மற்றும் நிலவழியாக ஆசியாவிற்கும், இந்தியத் துணைக்கண்டத்திற்கும் நடந்து இடம்பெயர்ந்தார்கள் (Out of Africa Migration). இவ்வாறு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியத் துணைக்கண்டத்தைச் வந்தடைந்த மனிதர்களே இந்த நிலப்பரப்பில் உழைத்து நாகரிகங்களை உருவாக்கிய பூர்வகுடிகள் ஆவர்.

என்னுள் எழுந்த பெருவினாவும் தெளிவும்

இந்த மெய்நிகர் வரலாற்றுப் பயணத்தின் முடிவில் எனக்குள் ஒரு பெருவினா எழுந்தது:

“ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள்தான் தமிழர்கள் என்றால், நாமும் வெளியிலிருந்து வந்தவர்கள்தானே? அப்படியிருக்க, வெளியிலிருந்து வந்த ஆரியர்களை மட்டும் ‘வந்தேறிகள்’ என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?”

65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி உலகெங்கும் பரவிய ஆதி மனிதனின் வழியில் வந்து, இந்த நிலத்தின் முதன்மை உற்பத்தியாளர்களாகவும் (Producers), உழைப்பால் நாகரிகத்தை உருவாக்கியவர்களாகவும் மாறியவர்களே தமிழர்கள்!

ஆனால், உற்பத்தியிலும் நாகரிக உருவாக்கத்திலும் பங்கெடுக்காமல், பிறப்பால் உயர்வு தாழ்வைக் கற்பித்து, சாதியக் கட்டமைப்பைத் திணித்து ஆதிக்கம் செலுத்த வந்தவர்களுக்கும்—இந்த மண்ணோடு கலந்து உழைத்து நாகரிகம் அமைத்த பூர்வகுடிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிவியல் தெளிவாக விளக்குகிறது.

இந்த மெய்நிகர் உலகப் பயணத்தில் பல கேள்விகளுக்கான விடைகள் எனக்குக் கிடைத்ததால், எனது மெய்நிகர் உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு, உண்மையான சான்றுகளைத் தேடி எனது மெய்யுலகப் பயணத்தைத் தொடங்கினேன்…

மெய்யுலகில் நான் கண்டது என்ன?

(காத்திருங்கள்… தொடரும்)

(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

  • தமிழ்மணி

Thursday, 20 August 2026

தமிழனின் வேர்களைத் தேடி…! (பகுதி – 1) பயணக் கட்டுரை

"வரும் வழியில் ஈட்டிகளையும் கற்கருவிகளையும் கொண்டு அவர்கள்  வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் கிடைத்தக் கனிகளையும் உண்டு பசியாற்றிய அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டனர்"

தமிழ்மணி

மெய்நிகர் உலகில் (Virtual World) எனது பயணம்

வரும் ஆகஸ்ட் 22 அன்று தஞ்சாவூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், நடைபெறவுள்ள தமிழ் மக்கள் இசை விழா’ வின்
“கீழடி நாகரிகத்தை உயர்த்திப் பிடி!
வேத நாகரித்தை துரத்தியடி!
இந்தியாவின் வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து திருத்தி எழுதும் போர்முழக்கம்!”என்கிற முழக்கம் சரிதானா?

காவிரியில் நீர் இன்றி கடைமடைகள் காயும் பொழுது காவிரிக் கரையிலேயே இப்படி ஒரு விழா தேவையா?

‘வேத நாகரீகத்தைத் துரத்தியடி’ என்பது சரிதானா? இந்திய வரலாற்றை தென்னிந்தியாவிலிருந்து தொடங்குவதா அல்லது தென்னகத்திலிருந்து தொடங்குவதா அல்லது தமிழ்நாட்டிலிருந்து தொடங்குவதா, தமிழர்களாகிய நாம் யார்? நாம் இங்கேயே தோன்றி வளர்ந்தவர்களா அல்லது வெளியில் தோன்றி இங்கு வந்தவர்களா போன்ற  அய்யங்களும் குழப்பங்களும் என்னுள் எழுந்தன.

குழப்பங்கள் தொடர்ந்து நீடித்தால் அதுவே இறுதியில் நோய்க்கு வழிவகுக்கும் என்பார் கிரேக்க நாட்டு ஹோமியோபதியர் வித்தல்காஸ். (Confusion is disease, Clarity is health- George Vithal Kaus). யார்தான் நோயாளியாக இருக்க விரும்புவர்?

அதனால் கீழடி, வேத நாகரிகம் மற்றும் மனிதகுல வரலாறு குறித்த விவரங்களைத் தேடி மெய்நிகர் உலகில் (Virtual World) ஓடலானேன். ஓடுவது உடல் நலனுக்கு உகந்தது என்பது போல இந்த ஓட்டமும் நல்ல பலனைத்தான் தந்தது. இந்த ஓட்டம், கால இயந்திரத்தில் என்னை   திபெத்துக்கும், மெசபடோமியாவுக்கும், சிந்துவெளிக்கும் அழைத்துச் சென்றது.

ஒரு முறை நான் நைல் நதி தீரத்தில் சென்ற போது, எதிரே சிலரை சந்திக்க நேர்ந்தது.

“யார் நீங்கள்? எங்கே செல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் வினவினேன்.
“நாங்கள்தான் ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens). ஆப்பிரிக்காதான் நாங்கள் தோன்றி வளர்ந்து வாழ்ந்த இடம். அங்கே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், உயிர் பிழைக்கப் புதிய வாழ்விடங்களைத் தேடி வடக்கு நோக்கிச் செல்கிறோம்” என்றனர்.

அவர்களைக் கடந்து தெற்குதிசையில் மேலும் பயணப்பட்டால் நமக்கும் அதே நிலைமைதானோ என்ற அச்சம் என்னை ஆட்கொள்ள, நானும் திரும்பி அவர்கள் பின்னாலேயே  நடக்கலானேன்.

வரும் வழியில் ஈட்டிகளையும் கற்கருவிகளையும் கொண்டு அவர்கள்  வேட்டையாடி விலங்குகளின் மாமிசத்தையும் கிடைத்தக் கனிகளையும் உண்டு பசியாற்றிய அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டனர்.

மேலும் வடக்கு நோக்கி வந்த போது நைல் நதியின் வளமான கடைமடைப் பகுதிகளில் இருந்த  வளங்களைக் கண்டு ‘வாழ்வதற்கு இது ஏற்ற இடம்தான்’ என்று எண்ணி அவர்களில் சிலர் அங்கேயே (எகிப்து – கி.மு. 3100 – கி.மு. 30) தங்கிவிட, வேறு சிலர் அங்கு தங்காமல் ஏமன், சவுதி அரேபியா வழியாக ஈராக்கின் யூப்ரடீஸ் – டைக்ரிஸ் (Euphrates and Tigris) நதிப் பள்ளத்தாக்குகளை அதாவது மெசபடோமியாவை அடைந்தார்கள். இந்த இரு நதிகளின் செழுமையைக் பார்த்து அங்கேயே நிலைபெற்று, வேளாண்மை செய்யத் தொடங்கினர் சிலர். (கி.மு. 3500 – கி.மு. 2000)

அவர்களுடன் வந்த மற்றொரு பகுதியினர் மெசபடோமியாவில் தங்காமல் வடக்கு திசையில் நகர்ந்து மத்திய ஆசியாவின் ஸ்டெப்பி புல்வெளிப் பகுதியை அடைந்து அங்கு கால்நடைகளை வளர்த்து வாழ்க்கையை ஓட்டி வந்தனர். புல்வெளிகள் போதாத போது மேற்கு நகர்ந்து கால்நடைகளுக்காக காடுகளை அழித்து புதிய புல்வெளிகளை உருவாக்கினர். கடைசிவரை அவர்களுக்கு வேளாண்மை பற்றி எதுவும்  தெரியாது. கிட்டத்தட்ட அவர்களின் வாழ்க்கை மாடுகளோடு வாழ்ந்த நாடோடி வாழ்க்கைதான்.

ஆப்ரிக்காவில் இருந்து வெளியேறிய மற்றொரு சாரார் ஈரான், ஆப்கானிஸ்தான் வழியாக சிந்து நதியின் கடைமடைப் பகுதியை அடைந்து, சிந்துவெளி (ஹரப்பா – மொகஞ்சதாரோ) பகுதிகளில் வாழ்ந்து உலகின் முன்னோடி நகர நாகரிகத்தைக் கட்டியெழுப்பினர்.  திட்டமிடப்பட்ட தெருக்கள், சுட்ட செங்கற்கள், மூடிய கழிவுநீர் வடிகால்கள் என உலகின் அறிவியல் பூர்வமான நகர வாழ்க்கைக்கு முதன்முதலாக  அடித்தளம் அமைத்தவர்கள் அவர்கள்தான். (கி.மு. 2600 – கி.மு. 1900).

அதில் மற்றொரு சாரார் சிந்துவெளியிலும் தங்காமல் கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் பயணித்து தூர கிழக்கு வாழத் தொடங்கினர்.

கடைசியாக எஞ்சி இருந்த சிலர் சிந்துவெளியிலும் தங்காமல், கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையிலும் செல்லாமல் இந்தியாவின் தெற்கு திசை நோக்கி நகரத் தொடங்கினர். நானும் தெற்கு நோக்கி அவர்களோடுதான் பயணித்தேன். அப்படி வரும் வழியில்  ஆங்காங்கே தென்பட்ட  நதிக்கரைகளில் சிலர் தங்கிவிட  இறுதியாக சிலர், இந்தியாவின் தென்கோடியில் பாய்ந்தோடிய வைகை மற்றும் பொருநை (தாமிரபரணி) நதிகளைக் கண்டு குதூகலமடைந்து அங்கேயே நிலைபெற்று வாழத் தொடங்கினர்.

வைகை நதிக்கரையில் குறிப்பாக கீழடியில் அவர்கள் அமைத்த தங்குமிடங்கள் சிந்துவெளியைப் போல நகர நாகரிகமாக இருந்தது வியப்பை ஏற்படுத்தியது.

இப்படி பல்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் தொடக்கத்தில் வேட்டையாடிதான் தங்களது வயிற்றுப் பசியை தீர்த்துக் கொண்டனர். ஆற்றுப்படுகைகளில் வாழ்ந்தவர்கள் அங்கு இயற்கையாக விளைந்து கிடந்த தானியங்கள் உண்பதற்கு ஏற்றவை என்பதைக் கண்டறிந்து பிறகு அதையே பயிரிட்டு அறுவடை செய்தனர். அவர்கள் உண்டது போக மீதி உபரியானது. அந்த உபரியை மற்றவர்களிடம் கொடுத்து தேவையான வேறு சில பொருட்களை வாங்கிய போது வாணிபம் தொடங்கியது.

வேளாண்மை செய்தவர்கள் ஆங்காங்கே குடியிருப்புகளை அமைத்து வாழ, வணிகத்தில் ஈடுபட்டவர்களும் மற்ற பிறரும் ஓரிடத்தில் குவிந்து வாழத் தொடங்கிய பொழுதுதான் நகர கட்டமைப்புகள் உருவாகின. அதைத் தொடர்ந்து இரும்பு கண்டெடுக்கப்பட்ட பிறகு புதிய கருவிகளின் உருவாக்கம் பல்வேறு தொழில்கள் வளர வழிவகுத்தன.

வெறும் கற்கருவிகளை மட்டுமே கொண்டு பீம்பேட்டா (1) போன்ற பாறை குகைகளுக்குள் வாழ்ந்த ஆதிகால மனிதன் பின்நாளில் வேளாண்மைக்கும் இன்னபிற தொழில்களை செய்வதற்கும் நகரங்களை உருவாக்கி வாழ்வதற்கும் வழிவகுத்தது எது?

தொடரும்…

(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

  • தமிழ்மணி

குறிப்பு: 1.பீம்பேட்டா: மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலுக்கு தென்கிக்கே சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. சுமார் 100000 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பாறைக் குகைகளில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்ததாக தொல்லியல் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அலுவல் நிமித்தமாக நான் போபால் சென்றிருந்தபோது பீம்பேட்டாவைப் பார்த்தபோது எழாத உணர்வுகள் இன்று டோனி ஜோசப்பின் ஏடுகளைப் புரட்டியபோது ஏற்பட்டது.

Friday, 14 August 2026

கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல் | பகுதி 2

கீழடியை உயர்த்திப் பிடிப்பது வடஇந்தியாவை மறுப்பதற்காக அல்ல; வேத மரபை அழிப்பதற்காக அல்ல; புதிய இனப்பெருமையை உருவாக்குவதற்காக அல்ல.
தொடர்ச்சி: கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்


(மக்கள் அதிகாரம் தளத்தில் வெளியான கட்டுரை)

பகுதி – 6: கீழடி: எழுத்தறிவு, உழைப்பு, நகர வாழ்க்கை

கீழடியை மிகைப்படுத்தியும் பார்க்கக் கூடாது; குறைத்து மதிப்பிட்டும் பார்க்கக் கூடாது.
கீழடி உலகின் முதல் நகரம் அல்ல. இந்தியாவின் முதல் நாகரிகமும் அல்ல. ஆனால் அது ஒரு சாதாரண குடியிருப்பும் அல்ல.

பானை ஓடுகளில் காணப்படும் தமிழி எழுத்துப் பொறிப்புகள் முக்கியமானவை. எழுத்து என்பது இலக்கியத்திற்கான கருவி மட்டுமல்ல; பொருட்களை அடையாளப்படுத்தவும், தகவல்களைப் பதிவு செய்யவும், பரிமாற்றம் மற்றும் உரிமை போன்ற சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளோடும் தொடர்புடையதாக இருக்கலாம்.

சுடுமண் பொருட்கள், மணிகள், நெசவுத் தொழிலுக்கான தடயங்கள், கட்டிடத் தொழில்நுட்பம், நீர் மேலாண்மை ஆகியவை அங்கு வாழ்ந்த மக்கள் இயற்கையை வெறுமனே ஏற்றுக்கொண்டு வாழவில்லை; தங்கள் தேவைகளுக்கேற்ப இயற்கையை மாற்றியமைத்தனர் என்பதைச் சுட்டுகின்றன.

கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் பெரிய கோயில் கட்டமைப்புகள் அல்லது தெளிவான மத நிறுவனங்களின் அடையாளங்கள் கிடைக்கவில்லை. எனவே கீழடி மதச்சார்பற்றது என்று முடிவு செய்ய முடியும்.

தொல்லியல் காட்டாததை, காட்டியதாகச் சொல்லக்கூடாது; அதேபோல் கிடைக்காததை கிடைத்தது என்றும் சொல்லக் கூடாது. இதுவே அறிவியல் வரலாற்றின் அடிப்படை ஒழுக்கம்.
கீழடியின் உறுதியான முக்கியத்துவம் இதுதான்:

• எழுத்தறிவுக்கான சான்றுகள்;

• தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சான்றுகள்;

• கைவினை மற்றும் உற்பத்திக்கான சான்றுகள்;

• நகரமயமாக்கலுக்கான சான்றுகள்;

• சங்ககாலத் தமிழகத்தின் சமூக-பொருளாதார வரலாற்றை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் சான்றுகள்.

பகுதி – 7: ரொமிலா தாப்பர்: வரலாற்றை எவ்வாறு வாசிப்பது?

கீழடி பற்றிய விவாதங்களில் ரொமிலா தாப்பரின் பெயர் குறிப்பிடப்படுவது இயல்பானது. ஆனால் அவரது அணுகுமுறையை ஒரு அரசியல் முழக்கமாகச் சுருக்காமல், வரலாற்றியல் முறையின் ஒரு முக்கியமான எச்சரிக்கையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தொல்லியல் ஒரு ஆதாரம்; இலக்கியம் இன்னொரு ஆதாரம்; மொழியியல் மற்றொரு ஆதாரம்; மரபியல் இன்னொரு ஆதாரம்.
ஒவ்வொரு ஆதாரத்திற்கும் அதன் சொந்த எல்லைகள் உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு, முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் கணக்கில் எடுத்துத்தான் வரலாறு எழுத வேண்டும் என்ற அணுகுமுறை தாப்பரின் வரலாற்றியல் பணியில் முக்கியமானது.

இதன் பொருள் மிகவும் எளிமையானது: ஒரு புதிய தொல்லியல் கண்டுபிடிப்பு பழைய வரலாற்றுக் கருத்தை மாற்றத் தூண்டினால், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில், புதிய கண்டுபிடிப்பின் அடிப்படையில் நிரூபிக்கப்படாத முடிவுகளையும் வரலாற்று உண்மைகளாக அறிவிக்கக் கூடாது.

இதுவே கீழடியைப் பற்றிய அறிவியல் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.

பகுதி – 8: சிந்துவெளியிலிருந்து கீழடி வரை: தொடர்ச்சியா? தொடர்பா?

சிந்துவெளி நாகரிகத்திற்கும் தென்னிந்தியாவின் பண்டைய பண்பாடுகளுக்கும் இடையே தொடர்புகள் இருந்திருக்கலாம் என்ற ஆய்வுக் கருத்துகள் உள்ளன. திராவிட மொழிக் குடும்பத்திற்கும் சிந்துவெளி மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆனால், “சிந்துவெளி மக்கள் நேரடியாகக் கீழடிக்கு வந்து குடியேறினர்” என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு தற்போதைய தொல்லியல் சான்றுகள் இல்லை.
இதனைத் தெளிவாகச் சொல்வது பலவீனம் அல்ல; அதுதான் அறிவியலின் வலிமை. ஆய்வுக்குரிய கேள்வியை ஆய்வுக்குரிய கேள்வியாகவே வைத்திருப்பதே அறிவியல் நேர்மை.

ஆனால் ஒரு உண்மை மாறாது: சிந்துவெளி இருந்தது. அதற்குப் பின்னர் இந்தியத் துணைக்கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிராந்திய நாகரிக வளர்ச்சிகள் நிகழ்ந்தன. தென்னகத்திலும் தனித்துவமான நகரமயமாக்கல் வளர்ச்சி நிகழ்ந்தது. கீழடி அதற்கான முக்கியமான சான்று.

எனவே, இந்திய நாகரிகத்தை ஒரு வேத மையத்தின் வழியே மட்டும் விளக்க முடியாது.

பகுதி – 9: தமிழ் மற்றும் இந்திய அறிஞர்களின் பொருள்முதல்வாதப் பார்வை

இந்திய நாகரிகத்தின் தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்து ஆய்வு செய்த முதன்மை அறிஞர்களின் பார்வைகள் கீழடியைப் புரிந்துகொள்ளும் கோட்பாட்டுத் தளத்தை அமைத்துத் தருகின்றன.

அ) பொருள்முதல்வாத தத்துவ மற்றும் வரலாற்று அறிஞர்கள்

• டி.டி. கோசாம்பி: இந்திய வரலாற்றை அரசர்கள் மற்றும் போர்களின் பட்டியலாக அல்லாமல், உற்பத்தி, தொழில்நுட்பம், நிலப்பயன்பாடு, வணிகம், சமூக உறவுகள் ஆகியவற்றின் மாற்றமாகப் புரிந்துகொள்ளும் பொருள்முதல்வாதப் பார்வையை வலுப்படுத்தியவர்.

• இர்ஃபான் ஹபீப்: உற்பத்தி, நிலம், தொழில்நுட்பம், உழைப்பு மற்றும் சமூக உறவுகளை வரலாற்றின் மையத்தில் வைக்கும் பொருள்முதல்வாத வரலாற்றுப் பார்வைக்கு இவரது ஆய்வுகள் முக்கியமானவை.

• தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா: இந்தியப் பொருள்முதல்வாத சிந்தனை வரலாற்றை ஆராய்ந்த இவர், பண்டைய இந்திய சமூகத்தை வெறும் ஆன்மீக வரலாறாக அல்லாமல், உழைப்பு, உற்பத்தி மற்றும் பொருளாதார வாழ்க்கையின் அடிப்படையில் புரிந்துகொள்ள முயன்றார் (Lokayata, Science and Society in Ancient India). இந்த அணுகுமுறையில் கீழடியின் சுடுமண் பொருட்கள், தொழில்சார் தடயங்கள், பானை உற்பத்தி, நீர் மேலாண்மை போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன.

• ஜார்ஜ் தாம்சன்: மனித சமூகத்தின் ஆரம்ப வளர்ச்சியில் உழைப்பு, மொழி, சமூக உறவுகள் ஆகியவற்றின் தொடர்பை வலியுறுத்திய மார்க்சிய மானுடவியலாளர் (Studies in Ancient Greek Society). மனிதன் இயற்கையை மாற்றியமைக்கும் உழைப்பின் வழியே தன்னையும் மாற்றிக்கொண்டான் என்ற பார்வை கீழடி கைவினைச் சமூகத்தைப் புரிந்துகொள்ளப் பயன்படுகிறது.
ஆ) தமிழ்ச் சமூக மற்றும் பண்பாட்டு மறுவாசிப்பாளர்கள்

• மயிலை சீனி. வேங்கடசாமி: தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் இலக்கிய மற்றும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த முன்னோடி. தமிழகத்தின் பண்டைய சமூக வளர்ச்சியை வைதிக மரபின் வழியே மட்டும் புரிந்துகொள்ள முடியாது என்பதை இவரது ஆய்வுகள் (பௌத்தமும் தமிழும், சங்ககாலத் தமிழக வரலாறு) சுட்டிக்காட்டுகின்றன. கீழடியின் தொல்லியல் சான்றுகள், வைதிகக் கலப்பிற்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தின் தொன்மையான எழுத்தறிவு, தொழில் மற்றும் நகர வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன.

• பொ. வேல்சாமி: தமிழ் வரலாற்றில் நிலவும் வைதிகப் புனைவுகளையும் வரலாற்றுக் கட்டுமானங்களையும் கேள்விக்குள்ளாக்கிய ஆய்வாளர் (பொய்மைக்கு அப்பால், வரலாறும் புனைவும்). வரலாறு என்பது அரசர்களின் சாதனைகளால் மட்டுமே உருவாகவில்லை; உழைத்த கைவினைஞர்கள், விவசாயிகள், பானை வனைபவர்கள், நெசவாளர்கள் போன்ற மக்களின் உழைப்பே வரலாற்றின் அடிப்படை என்பதை இவரது பார்வையோடு இணைத்துப் பார்க்கலாம். கீழடி பானை ஓடுகளில் காணப்படும் தனிநபர் பெயர்கள் மற்றும் எழுத்துப் பொறிப்புகள், எழுத்து உழைக்கும் மக்களின் சமூகப் பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகளாகும்.

இ) நவீன தொல்லியல், மரபியல் மற்றும் வரலாற்று வரைவியலாளர்கள்

• ரொமிலா தாப்பர்: பலவகையான ஆதாரங்களை ஒப்பிட்டு, வரலாற்றை ஒரே மரபின் தொடர்ச்சியாகச் சுருக்காமல், பல்வேறு சமூகங்கள், பிராந்தியங்கள், பொருளாதார அமைப்புகள் மற்றும் பண்பாடுகளின் தொடர்புகளாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துபவர்.

• டோனி ஜோசப்: மரபியல், தொல்லியல், மொழியியல் ஆகியவற்றை இணைத்து இந்திய மக்களின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள முயன்றவர். இவரது அணுகுமுறை, இந்திய நாகரிகம் ஒரே மக்களால், ஒரே காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற எளிமையான கருத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.

இந்த அறிஞர்களின் கருத்துகளை ஒன்றாகப் பார்த்தால் ஒரு பொதுவான பாடம் கிடைக்கிறது: வரலாற்றை மேலிருந்து மட்டும் எழுத முடியாது; அடித்தள மக்களின் உழைப்பு, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் சமூக வாழ்க்கையையும் வரலாற்றின் மையத்தில் நிறுத்த வேண்டும்.

பகுதி – 10: கீழடி ஏன் இன்று அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது?

ஒரு தொல்லியல் தளம் எப்போது அரசியலாகிறது?

அது கடந்தகாலத்தைப் பற்றி மட்டும் பேசாமல்,

• “இந்தியர் யார்?”

• “இந்தியப் பண்பாடு என்றால் என்ன?”

• “இந்திய வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது?”

என்ற கேள்விகளுக்குப் பதில் தேடத் தொடங்கும்போது,

இந்தியாவை ஒரு குறிப்பிட்ட மதத்தின், மொழியின் அல்லது இனத்தின் பண்டைய தாயகமாக மட்டும் சித்தரிக்கும் முயற்சிகளுக்கு எதிராகக் கீழடி ஒரு முக்கியமான வரலாற்றுச் சான்றாக நிற்கிறது.
ஆனால் கீழடியை முன்னிறுத்துவதும் அறிவியல் அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

ஒரு பொய்க்குப் பதிலாக இன்னொரு பொய்யை நிறுத்துவது வரலாற்றை மீட்பதல்ல. வேதப் புராணத்திற்கு மாற்றாகத் தமிழ் புராணம் உருவாக்குவதும் வரலாற்றை மீட்பதல்ல. இனக் பெருமைவாதமும் (Chauvinism) வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் ஒன்றல்ல.

ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றை மறுபரிசீலனை செய்வதே வரலாற்றை மீட்பதாகும்.
நிறைவுரை: கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்!
இப்போது தொடக்கக் கேள்விக்குத் திரும்பலாம்.

கீழடி ஏன் இந்திய வரலாற்றின் திறவுகோல்?

ஏனெனில் அது ஒரு பழைய நகரத்தின் எச்சங்களை மட்டும் நமக்குத் தரவில்லை. இந்திய வரலாற்றை நாம் எவ்வாறு எழுத வேண்டும் என்ற கேள்வியையே நம்முன் நிறுத்துகிறது.

வரலாறு என்பது அரசர்களின் பட்டியல் அல்ல; போர்களின் பட்டியல் அல்ல; புராணங்களின் தொகுப்பும் அல்ல.

மனிதன் இயற்கையோடு போராடி தனது வாழ்க்கையை உருவாக்கிய வரலாறே மனித வரலாறு.

அந்த உழைப்பிலிருந்து கருவிகள் உருவாகின; தொழில்நுட்பம் வளர்ந்தது; விவசாயம் வளர்ந்தது; உபரி உற்பத்தி உருவானது; தொழில்களின் பிரிவினை ஏற்பட்டது; வணிகம் வளர்ந்தது; நகரங்கள் உருவாயின; எழுத்து வளர்ந்தது; சமூக உறவுகள் மாறின. சொத்துரிமை, வர்க்கங்கள், அரசு போன்ற சமூக அமைப்புகளும் வரலாற்றின் குறிப்பிட்ட கட்டங்களில் உருவாயின.

இதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் நமக்குக் கற்றுத்தரும் அடிப்படைப் பாடம்.

கீழடியின் செங்கற்களைச் சுட்டவன் யார்? பானையை உருவாக்கியவன் யார்? நீரை வழிநடத்தியவன் யார்? விதையை விதைத்தவன் யார்? துணியை நெய்தவன் யார்? மணியை உருவாக்கியவன் யார்? எழுத்தைப் பொறித்தவன் யார்?
அவன்தான் நாகரிகத்தை உருவாக்கியவன்.

அதனால் இந்திய வரலாற்றின் உண்மையான கதாநாயகன் அரண்மனையில் அமர்ந்திருந்த மன்னன் அல்ல; அந்த அரண்மனையையும் நகரத்தையும் வயலையும் தொழிற்கூடத்தையும் உருவாக்கிய உழைக்கும் மனிதனே.
இங்கே ஒரு முடிவைத் தெளிவாகச் சொல்லலாம்: இந்திய நாகரிகத்தை வேத நாகரிகத்துடன் சமப்படுத்த முடியாது.

வேத மரபு இந்திய வரலாற்றின் ஒரு முக்கியமான வரலாற்றுப் பகுதி என சிலர் கருதலாம். ஆனால் இந்திய வரலாறு அதைவிடப் பரந்தது.

• சிந்துவெளிக்கு அதில் இடம் உண்டு.

• தென்னிந்தியாவின் பண்டைய சமூகங்களுக்கு இடம் உண்டு.

• கீழடிக்கு இடம் உண்டு.

• பௌத்தர்களுக்கும் சமணர்களுக்கும் இடம் உண்டு.

• பழங்குடி மக்களுக்கும் இடம் உண்டு.

• விவசாயிகளுக்கும் கைவினைஞர்களுக்கும் பெண்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடம் உண்டு.

அதுவே இந்திய வரலாற்றின் பன்முகத்தன்மை.

கீழடியை உயர்த்திப் பிடிப்பது வடஇந்தியாவை மறுப்பதற்காக அல்ல; வேத மரபை அழிப்பதற்காக அல்ல; புதிய இனப்பெருமையை உருவாக்குவதற்காக அல்ல. இந்திய வரலாற்றை அதன் முழுமையான பன்முகத்தன்மையோடு மீட்டெடுப்பதற்காக.

வரலாற்றை மதம் தீர்மானிக்கக் கூடாது. அரசியல் வரலாற்றுக்கு ஆணையிடக் கூடாது. இனப்பெருமை வரலாற்றைத் திரிக்கக் கூடாது. எந்தக் கொள்கைக்கும் ஏற்றவாறு தொல்லியல் சான்றுகளையும் வளைத்துப் பயன்படுத்தக் கூடாது.
வரலாற்றை ஆதாரங்களே எழுத வேண்டும்.

அந்த ஆதாரங்களைத் தேடும் போது, மண்ணுக்குள் புதைந்திருக்கும் ஒரு பானை ஓடும் ஒரு செங்கல்லும் ஒரு கிணறும் ஒரு எழுத்துப் பொறிப்பும் நமக்கு ஒரு புதிய வரலாற்றுக் கதவைத் திறக்கலாம்.

அந்தக் கதவைத் திறக்கும் திறவுகோல்களில் ஒன்றுதான் கீழடி.

கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்!

தமிழ்மணி

நூல் பட்டியல்

1. Friedrich Engels — The Origin of the Family, Private Property and the State

2. George Thomson — Studies in Ancient Greek Society: The Prehistoric Aegean

3. D. D. Kosambi — An Introduction to the Study of Indian History

4. Irfan Habib — People’s History of India (Vol. 1 & 2)

5. Tony Joseph — Early Indians: The Story of Our Ancestors and Where We Came From

6. Romila Thapar — Early India: From the Origins to AD 1300 (மற்றும் பண்டைய இந்திய வரலாறு குறித்த கட்டுரைகள்)

7. D. P. Chattopadhyaya — Lokayata: A Study in Ancient Indian Materialism

8. D. P. Chattopadhyaya — Science and Society in Ancient India

9. மயிலை சீனி. வேங்கடசாமி — பௌத்தமும் தமிழும்

10. மயிலை சீனி. வேங்கடசாமி — சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்

11. பொ. வேல்சாமி — பொய்மைக்கு அப்பால்

12. பொ. வேல்சாமி — வரலாறும் புனைவும்

13. கௌசிகன் — உலக மகா நாகரிகங்கள்

14. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை — கீழடி அகழாய்வு அறிக்கைகள் மற்றும் வெளியீடுகள்

***

Monday, 10 August 2026

கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்!


கீழடியே இந்திய வரலாற்றின் திறவுகோல்

கீழடியில் காணப்படும் கட்டிட எச்சங்கள், செங்கற்கள், நீர் மேலாண்மைத் தடயங்கள், மணிகள், பானை ஓடுகள், தொழில்சார் பொருட்கள், தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை இந்த நகர வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகின்றன. 

இந்திய வரலாற்றை நாம் எவ்வாறு அறிந்துகொள்கிறோம்?

அது உண்மையில் இந்தியத் துணைக்கண்டத்தின் முழுமையான வரலாறா? அல்லது குறிப்பிட்ட சில சமூகங்களின் வரலாறு மட்டுமே “இந்திய வரலாறு” என்ற பெயரில் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளதா?

இந்தக் கேள்வி வெறும் கடந்தகாலத்தைப் பற்றிய கேள்வி அல்ல. ஒரு சமூகத்தின் கடந்தகாலத்தை யார் எழுதுகிறார்கள் என்பதும், அந்த வரலாற்றில் யாருடைய குரல்கள் இடம்பெறுகின்றன என்பதும், இன்றைய சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு புரிதல்களோடு தொடர்புடையவை.

நீண்ட காலமாக இந்தியப் பண்டைய வரலாற்றை அரசர்கள், பேரரசுகள், போர்கள், சமஸ்கிருத இலக்கியங்கள், புராணங்கள் ஆகியவற்றின் வழியே புரிந்துகொள்ளும் போக்கு வலுவாக இருந்தது. ஆனால் நவீன தொல்லியல், மானுடவியல், மொழியியல், மரபியல் ஆகிய துறைகளின் வளர்ச்சி, அந்தப் பார்வையை விரிவுபடுத்தியுள்ளது.

மண்ணுக்குள் புதைந்திருக்கும் செங்கல், பானை ஓடு, கிணறு, மணிகள், கருவிகள், எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை இப்போது வரலாற்றின் ஆவணங்களாக மாறியுள்ளன.

இந்தப் புதிய வரலாற்றுப் பார்வையின் முக்கியமான சாளரங்களில் ஒன்றுதான் கீழடி.

கீழடியை உயர்த்திப் பேசுவது வடஇந்தியாவை மறுப்பதற்காக அல்ல; வேத மரபை அழிப்பதற்காகவும் அல்ல. அதற்குப் பதிலாக, இந்திய வரலாறு பல்வேறு மக்களாலும், மொழிகளாலும், உற்பத்தி முறைகளாலும், பண்பாடுகளாலும் உருவாக்கப்பட்ட பன்முக வரலாறு என்பதை மீண்டும் நினைவூட்டுவதற்காக.

இந்தக் கட்டுரை அந்தப் பார்வையில் கீழடியைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சி.

இது கீழடியைப் பற்றிய தொல்லியல் அறிக்கையல்ல. அதேபோல், ஒரு புதிய “தமிழ் புராணத்தை” உருவாக்கும் முயற்சியும் அல்ல.

ஆதாரங்களின் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்துகொள்ளவும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் கருவிகளைக் கொண்டு கீழடியை வாசிக்கவும் செய்யப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

பகுதி – 1: இந்திய வரலாற்றை ஏன் மறுவாசிப்பு செய்ய வேண்டும்?

வரலாறு என்பது ஏற்கெனவே எழுதப்பட்டு முடிந்த புத்தகம் அல்ல.

புதிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கும்போது பழைய கருத்துகள் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. புதிய மரபியல் ஆய்வுகள், வெளிவரும்போது மனிதர்கள் குறித்த புரிதல்கள் மாறுகின்றன. புதிய மொழியியல் ஆய்வுகள் மொழிகளின் பரவல் பற்றிய பழைய கருத்துகளைச் சோதிக்கின்றன.

எனவே வரலாறு என்பது கடந்தகாலத்தின் மீது வழங்கப்பட்ட நிரந்தரத் தீர்ப்பு அல்ல; கிடைக்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் கடந்தகாலத்தைத் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் அறிவியல் முயற்சி.

இங்கேதான் கீழடியின் முக்கியத்துவம் தொடங்குகிறது.

ஒரு காலத்தில் இந்திய வரலாறு பெரும்பாலும் மன்னர்களின் வரலாறாக எழுதப்பட்டது. எந்த மன்னன் எப்போது ஆட்சி செய்தான், யார் யாரை வென்றான், எந்தப் பேரரசு எவ்வளவு பரப்பளவை ஆண்டது என்பவை வரலாற்றின் மையமாக இருந்தன.

ஆனால் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வேறு கேள்விகளை எழுப்புகிறது:

  • மக்கள் என்ன உற்பத்தி செய்தார்கள்?
  • எவ்வாறு உற்பத்தி செய்தார்கள்?
  • எந்தக் கருவிகளைப் பயன்படுத்தினார்கள்?
  • இயற்கையை எவ்வாறு மாற்றியமைத்தார்கள்?
  • குடியிருப்புகளை எவ்வாறு உருவாக்கினார்கள்?
  • தொழில்நுட்பம் எவ்வாறு வளர்ந்தது?
  • சொத்துரிமை எவ்வாறு தோன்றியது?
  • சமூக உறவுகள் எவ்வாறு மாறின?

இந்தக் கேள்விகளின் வழியாகப் பார்க்கும்போது வரலாற்றின் மையத்தில் மன்னன் அல்ல, மனிதன் நிற்கிறான்.

ஒரு நகரத்தின் வரலாற்றை எழுதும்போது அதன் அரண்மனை எங்கே இருந்தது என்று மட்டும் கேட்பது போதாது. அந்த நகரத்தை யார் கட்டினார்கள்? செங்கற்களை யார் தயாரித்தார்கள்? பானைகளை யார் செய்தார்கள்? நெசவுத் தொழிலை யார் மேற்கொண்டார்கள்? தண்ணீரை எவ்வாறு நிர்வகித்தார்கள்? கருவிகளை யார் உருவாக்கினார்கள்?

ஒரு நாகரிகத்தின் உண்மையான அடித்தளம், அதை உருவாக்கிய உழைக்கும் மக்களின் கைகளில்தான் இருக்கிறது.

இந்தப் பார்வையில் கீழடி ஒரு முக்கியமான வரலாற்றுச் சாளரமாகிறது.

பகுதி – 2: மனிதன் வரலாற்றை உருவாக்கியது எப்படி?

மனித வரலாற்றை அரசர்களிடமிருந்தோ, போர்களிடமிருந்தோ, கோயில்களிடமிருந்தோ தொடங்க வேண்டியதில்லை.

மனிதன் தனது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை எவ்வாறு உற்பத்தி செய்தான் என்பதிலிருந்தே தொடங்க வேண்டும்.

மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக இருந்தான். உயிர்வாழ்வதற்காக இயற்கையோடு போராட வேண்டியிருந்தது. உணவைத் தேடுதல், வேட்டையாடுதல், கருவிகளை உருவாக்குதல், தீயைப் பயன்படுத்துதல், விவசாயம் செய்தல், குடியிருப்புகளை அமைத்தல் என ஒவ்வொரு முன்னேற்றமும் மனிதனின் உழைப்போடு தொடர்புடையது.

அந்த உழைப்பு தனிமனித உழைப்பாக மட்டும் இருக்கவில்லை. மனிதன் கூட்டாகச் செயல்பட்டான். கூட்டாக வேட்டையாடினான். கூட்டாக ஆபத்துகளை எதிர்கொண்டான். கூட்டாக உற்பத்தி செய்தான்.

மார்க்சிய மானுடவியலாளர் ஜார்ஜ் தாம்சன், மனித சமூகத்தின் ஆரம்ப வளர்ச்சியில் உழைப்பு, மொழி, சமூக உறவுகள் ஆகியவற்றின் பரஸ்பரத் தொடர்பை வலியுறுத்துகிறார். மனிதன் இயற்கையை மாற்றியமைக்கும் உழைப்பின் வழியே தன்னையும் மாற்றிக்கொண்டான் என்ற பார்வை அவரது ஆய்வுகளில் முக்கியமானது.

இதன் பொருள் மிகவும் முக்கியமானது. முதலில் மனிதன் வாழ்க்கையை உருவாக்கினான்; பின்னர் அந்த வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான்.

அதனால் மனித வரலாற்றைக் கடவுள்களின் கதைகளிலிருந்து மட்டும் தொடங்கினால், மனிதனின் உண்மையான உற்பத்தி வாழ்க்கையை நாம் தவறவிடக்கூடும்.

கீழடியில் கிடைத்த பானை ஓடுகள், சுடுமண் பொருட்கள், மணிகள், கட்டிட எச்சங்கள், தொழில்சார் தடயங்கள் ஆகியவை ஒரு சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை நமக்குக் காட்டுகின்றன.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் காலக்கணிப்புகளின்படி, கீழடி தொடர்பான சில மாதிரிகள் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சுட்டுகின்றன; தமிழி எழுத்தின் காலக்கணிப்பும் இந்தக் காலப்பரப்பை நோக்கி நகர்கிறது.

இங்கே வரலாற்றின் கதாநாயகன் யார் என்பது தெளிவாகிறது: உழைத்த மனிதன்.

பகுதி – 3: குகையிலிருந்து நகரம் வரை: உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி

மனிதன் இயற்கையோடு போராடியபோது முதலில் கருவிகளை உருவாக்கினான்.

கல்லை கூர்மைப்படுத்தினான். நெருப்பைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான். வேட்டையிலிருந்து கால்நடை வளர்ப்புக்கும், பின்னர் விவசாயத்திற்கும் நகர்ந்தான்.

விவசாயம் மனித வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஒரே இடத்தில் குடியேற்றம் ஏற்பட்டது. உணவு உற்பத்தியில் உபரி தோன்றியது. உபரி உற்பத்தியோடு தொழில்களின் பிரிவினை வளர்ந்தது. கைவினைஞர்கள் தோன்றினர். பரிமாற்றம் வளர்ந்தது. குடியிருப்புகள் பெரிதாகின. இறுதியில் நகரங்கள் உருவாயின.

இதையே வரலாற்றுப் பொருள்முதல்வாதம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி என்ற அடிப்படையில் புரிந்துகொள்கிறது.

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் தனது குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் உற்பத்தி, குடும்ப அமைப்பு, சொத்துரிமை, சமூகப் பிரிவுகள் மற்றும் அரசின் உருவாக்கம் ஆகியவற்றை வரலாற்று வளர்ச்சியோடு இணைத்துப் பார்க்கிறார்.

நகரம் என்பது வெறும் கட்டிடங்களின் தொகுப்பு அல்ல. அதற்குப் பின்னால் உணவு உற்பத்தி வேண்டும்; நீர் மேலாண்மை வேண்டும்; கைவினைத் தொழில் வேண்டும்; சேமிப்பு வேண்டும்; பரிமாற்றம் வேண்டும்; தொழில்களின் பிரிவினை வேண்டும்; தகவல் பரிமாற்றம் வேண்டும்.

அதனால் நகரம் என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்த உற்பத்திச் சக்திகளின் சமூக வெளிப்பாடு.

கீழடியில் காணப்படும் கட்டிட எச்சங்கள், செங்கற்கள், நீர் மேலாண்மைத் தடயங்கள், மணிகள், பானை ஓடுகள், தொழில்சார் பொருட்கள், தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஆகியவை இந்த நகர வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை வெளிப்படுத்துகின்றன.

இதன் முக்கியமான வரலாற்றுப் பொருள்: இந்தியத் துணைக்கண்டத்தின் நகரமயமாக்கல் வரலாறு வடஇந்தியாவோடு மட்டும் முடிவதில்லை; தென்னகத்திற்கும் தனித்துவமான நகரமயமாக்கல் வரலாறு உள்ளது.

பகுதி – 4: சிந்துவெளி: மன்னர்களின் நாகரிகமா? உழைக்கும் மக்களின் நாகரிகமா?

சிந்துவெளி நாகரிகம் இந்தியப் பண்டைய வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயங்களில் ஒன்று.

ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலவீரா போன்ற நகரங்கள் திட்டமிடப்பட்ட வீதிகள், செங்கல் கட்டிடங்கள், நீர் மேலாண்மை, கைவினைத் தொழில், வணிகம் போன்றவற்றைக் கொண்டிருந்தன.

அவற்றின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று — பிரம்மாண்டமான அரச அரண்மனைகளோ அல்லது மன்னர்களின் பிம்பங்களோ தெளிவாகக் காணப்படாதிருப்பது.

அங்கு மன்னராட்சி அல்லது கொடுங்கோல் அரசின் சான்றுகள் கிடைக்கவில்லை என்றாலும், வீடுகளின் அளவு, தானியக் களஞ்சியங்கள் மற்றும் நகர்ப்புற அமைப்புகளின் மூலம் உழைப்புப் பிரிவினையும் சமூகப் படிநிலைகளும் (Social Stratification) நிலவியதை அறிய முடிகிறது. இருப்பினும் அந்தச் சமூகத்தை மன்னரை மையமாகக் கொண்டு விளக்க முடியாது.

இங்கே டி.டி. கோசாம்பியின் பங்களிப்பு முக்கியமானது. An Introduction to the Study of Indian History நூலில் சிந்துவெளி, ஆரியர்கள், கிராமப் பொருளாதாரம், வணிகம், சொத்துரிமை, சாதி ஆகியவற்றை சமூக-பொருளாதார மாற்றங்களோடு இணைத்து அவர் அணுகுகிறார்.

இதிலிருந்து ஒரு முக்கியமான வரலாற்றுப் பாடத்தைப் பெறலாம்: ஒரே நிலப்பரப்பில் பின்னர் வாழ்ந்த சமூகங்கள் அனைத்தும் ஒரே சமூக-பொருளாதார அமைப்பைக் கொண்டிருந்தன என்று கூற முடியாது.

சிந்துவெளி நகர நாகரிகம் வேத இலக்கியம் பிரதிபலிக்கும் சமூகத்துடன் ஒன்றல்ல. அவற்றின் காலவரிசையும் சமூக-பொருளாதாரப் பின்னணியும் வேறுபட்டவை.

எனவே, சிந்துவெளி நாகரிகம் = வேத நாகரிகம் என்ற சமன்பாட்டை வரலாறு ஏற்காது.

பகுதி – 5: வேதம், ஆரியர்கள், நகரம்: வரலாற்றை வேறுபடுத்திப் பார்ப்போம்

“இந்தியா என்றால் வேதம்” என்ற எளிமையான சமன்பாடு வரலாற்றின் பன்முகத்தன்மையை மறைத்துவிடுகிறது.

இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு காலங்களில் வேட்டையாடிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், கைவினைஞர்கள், வணிகர்கள், நகர மக்கள் எனப் பல்வேறு சமூகங்கள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் மொழிகளும் பண்பாடுகளும் வேறுபட்டிருந்தன.

எனவே இந்திய வரலாற்றை ஒரு குறிப்பிட்ட மத மரபின் வரலாறாகச் சுருக்குவது அறிவியல் ரீதியாகப் பொருந்தாது.

டோனி ஜோசப்பின் Early Indians நூல், மரபியல், தொல்லியல், மொழியியல் ஆகிய பல துறைகளின் ஆய்வுகளை ஒருங்கிணைத்து இந்திய மக்களின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ள முயல்கிறது.

அவரது ஆய்வுகள் சுட்டிக்காட்டும் முக்கியமான செய்தி: இந்திய மக்களின் உருவாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், ஒரே மக்களால் நிகழ்ந்தது அல்ல. பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட இடம்பெயர்வுகள், கலப்புகள் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இந்திய சமூக உருவாக்கத்தில் பங்கு பெற்றுள்ளன.

இங்கே “ஆரியர்” என்ற சொல்லையும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். அதை நவீன அர்த்தத்தில் ஒரு தூய்மையான “இனம்” என்று கருதுவது தவறானது. மொழி, பண்பாடு, மக்கள் இயக்கம், மரபியல் ஆகியவை ஒன்றுக்கொன்று ஒரே பொருளுடையவை அல்ல.

அதே நேரத்தில், “ஆரியர்கள் வந்தவுடன்தான் இந்திய நாகரிகம் தொடங்கியது” என்ற கருத்தும் வரலாற்றுச் சான்றுகளோடு பொருந்தாது. சிந்துவெளி நகரங்கள் அதற்கு முன்னரே இருந்தன. தென்னிந்தியாவிலும் தனித்துவமான சமூக-பொருளாதார வளர்ச்சிகள் நிகழ்ந்தன. கீழடி அவற்றில் ஒன்றுக்கான முக்கியமான தொல்லியல் சான்றாகிறது.

எனவே, வேத மரபு இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக சிலரால் கருதப்படலாம்; ஆனால் அது முழு இந்திய நாகரிகத்தின் பெயர் அல்ல.

(தொடரும்…)

  • தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

மக்கள் கலை இலக்கியக் கழகமும் தமிழ் மக்கள் இசை விழா...

வேத நாகரிகத்தைத் துரத்தும் கீழடி!

தமிழ் மக்கள் இசை விழா சிறக்க நிதி தாரீர்!

தொழில்நுட்பத்தில் இந்தியா ஏன் பின்தங்கியது? கீழடி உணர்த்தும் பாடம்!

'நல்ல பாம்பாக'த் திரியும் நச்சுப் பாம்பை தட்டித் த...

கீழடி-இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி?