Monday, 27 July 2026

கீழடி-இந்திய வரலாற்றின் தொடக்கப் புள்ளி?

இன்றைய நவீன யுகத்திலும் உலகின் சில பகுதிகளில் கற்கால மனிதர்களைப் போல வாழும் மனிதக் குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

ஆனால், இன்றைக்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பே (கி.மு. 6-ஆம் நூற்றாண்டு) மேம்பட்ட, எழுத்தறிவு பெற்ற, நீர் மேலாண்மையுடன் கூடிய நகர நாகரிக வாழ்க்கையைத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை 'கீழடி' தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கின்றன.


இந்த வரலாற்று உண்மையைத்தான் கீழடி அகழ்வாய்வு உலகின் முன் மீண்டும் நிறுவியுள்ளது.

ஆனால், இத்தகைய மகத்தான தொல்லியல் சான்றுகளை மறைத்துவிட்டு, வெறும் கற்பனைப் புராணங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு "இந்திய நாகரிகம் என்பது வேத நாகரிகமே" என்ற அப்பட்டமான பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் ஒரு பொதுக்கருத்தாக (Common Sense) ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க பரிவாரச் சக்திகள் கட்டமைத்து வருகின்றன.

புராணப் புனைவா? தொல்லியல் சான்றா?

வேத நாகரிகம் என்று சொல்லப்படுவதற்கு வரலாற்று ரீதியான அல்லது தொல்லியல் ரீதியான எந்தவிதமான அறிவியல் சான்றுகளும் கிடையாது. அவை முழுக்க முழுக்கக் கற்பனைகளும் புனைவுகளும் நிறைந்த புராணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.

பொதுவாக, மனிதகுல நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றுப் படுகைகளில்தான் தோன்றி வளர்ந்தன என்பது உலக வரலாற்றின் மறுக்க முடியாத உண்மை. ஆனால், வேத நாகரிகத்தை ஒரு நதி நாகரிகமாக நிறுவுவதற்கு எந்தத் தொல்லியல் ஆதாரமும் இல்லாததால், 'சரஸ்வதி' என்ற ஒரு கற்பனை நதியை உருவாக்கிக் கொண்டு, அதன் கரையில்தான் வேத நாகரிகம் தோன்றியது என்ற புனைவை இன்றளவும் கட்டமைக்க முயல்கிறார்கள்.

மாறாக, தமிழர் நாகரிகம் என்பது வெறும் இலக்கியக் கூற்று மட்டுமல்ல. அது பழந்தமிழ் சங்க இலக்கியங்களாலும், பல்லாயிரக்கணக்கான கல்வெட்டுகளாலும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று.

தற்போது வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி அகழ்வாய்வு, "தமிழி" (தமிழ் பிராமி) எழுத்து பொறித்த மண்பாண்டங்கள், செங்கல் கட்டுமானங்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள், நெசவுத் தொழில் சான்றுகள் மூலம் தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், அதன் உயர் நகர பண்பாட்டையும் அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளது.

எனவே, இந்திய வரலாற்றைத் தொடங்குவதற்கு சரஸ்வதி என்ற கற்பனை நதி அல்ல, கீழடி நாகரிகமே இந்திய வரலாற்றின் உண்மையான தொடக்கப்புள்ளி! இந்திய வரலாறு இனி தென்னகத்திலிருந்துதான் எழுதப்பட வேண்டும்!

வரலாறு என்பது நம்பிக்கைகளால் எழுதப்படுவதில்லை; ஆதாரங்களால் எழுதப்படுகிறது. புராணங்கள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு நினைவுகளாக இருக்கலாம். ஆனால் அவற்றைத் தொல்லியல் ஆதாரங்களுக்கு மாற்றாக நிறுத்த முடியாது. கீழடி போன்ற அகழாய்வுகள், இந்திய வரலாற்றை புராணங்களின் வழியாக அல்ல, மண்ணுக்குள் புதைந்திருக்கும் சான்றுகளின் வழியாக வாசிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.

மனிதநேயச் சமத்துவமா? வர்ணாசிரமச் சுரண்டலா?

ஒருவேளை, சனாதனவாதிகள் கூறுவது போல வேத நாகரிகம் என்பதை உண்மை என்று தர்க்கத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அது மனிதகுலத்திற்கு அளித்த கொடை என்ன?
  • வேத நாகரிகம் என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை நால்வர்ணங்களாகப் பிரித்தது.
  • சாதி, தீண்டாமை, பாலின அடிமைத்தனம் மற்றும் மூடநம்பிக்கைகளைச் சமூகத்தில் சட்டப்பூர்வமாக்கியது.
  • உழைக்கும் மக்களை 'சூத்திரர்கள்' என்றும் 'பஞ்சமர்கள்' என்றும் தாழ்த்தி, சடங்கு ஆதிக்கத்தையும் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்தியது.
ஆனால், அதே காலகட்டத்தில் தென்னகத்தில் உருவான தமிழர் நாகரிகமோ, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற உன்னதமான சமத்துவக் கோட்பாட்டை உலகிற்குப் பறைசாற்றியது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற மனிதநேயத்தைச் சமூகத்தின் அடித்தளமாகக் கொண்டிருந்தது. கீழடியில் தெய்வச் சிலைகளோ, வழிபாட்டுத் தலங்களோ கண்டெடுக்கப்படவில்லை என்பது, தமிழர் நாகரிகம் மதச்சார்பற்ற, மனித மையச் சமூகமாகத் திகழ்ந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றாகும்.

மோடி அரசின் சதியும் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றமும்!

தமிழர் நாகரிகத்தின் இந்த வரலாற்று உண்மைகளும், சனாதனப் பொய்யுரைகளின் உடைவுகளும் இந்துத்துவ வாதிகளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால்தான், கீழடியின் உண்மைகளை உலகறியச் செய்யாமல் மூட முயல்கிறது பாஜகவின் மோடி அரசு.

கீழடியில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சியைச் சிறப்பாக நடத்தி, தமிழர் நாகரிகத்தின் தொன்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களின் விரிவான அறிக்கையை வெளியிடாமல் ஒன்றிய மோடி அரசு முடக்கியது. அதில் தங்களின் சனாதன விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்யுமாறு நெருக்கடி கொடுத்தது. அதற்குத் நேர்மையான அதிகாரியான அமர்நாத் ராமகிருஷ்ணன் இணங்க மறுத்ததால், அவர் உடனடியாக அஸ்ஸாம் மாநிலத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டார்.

வரலாற்றைத் திரித்து, தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு ஏற்ப மாற்றி எழுதத் துடிக்கும் பார்ப்பனியச் சக்திகளின் அப்பட்டமான பாசிச நடவடிக்கை இது!

கீழடியை உயர்த்திப் பிடிப்போம்; வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்! 

இன்று 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல்' என்ற பாசிச முழக்கத்தின் வழியே, இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வகைத் தன்மையை அழித்து, பார்ப்பனிய சனாதன மேலாதிக்கத்தை மக்கள் மீது திணிக்க ஆர்.எஸ்.எஸ் - பாஜக கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது.

இந்தச் சனாதனப் பாசிசத்தை அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் வீழ்த்துவதற்கு 'கீழடி' என்ற வரலாற்று ஆயுதத்தை நாம் கையில் எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்!
அதனை உணர்ந்துதான், மக்கள் கலை இலக்கியக் கழகம் (ம.க.இ.க) இந்த வரலாற்றுப் பூர்வமான பண்பாட்டுப் போரை முன்னெடுத்துள்ளது.

"கீழடியை உயர்த்திப் பிடிப்போம்! வேத நாகரிகத்தைத் துரத்தியடிப்போம்!
இந்திய வரலாற்றைத் தென்னகத்திலிருந்து திருத்தி எழுதுவோம்!"

என்ற வீரியமிக்க முழக்கத்தின் அடிப்படையில், வரும் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி தஞ்சை மண்ணில் மாபெரும் "தமிழ் மக்கள் இசை விழா" நடைபெறவுள்ளது.

சனாதன இருளை விரட்டி, தமிழ் பண்பாட்டுத் தன்மானத்தையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்தும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் இசை விழாவில் முற்போக்குச் சிந்தனையாளர்களும், ஜனநாயகச் சக்திகளும், உழைக்கும் மக்களும் பெருந்திரளாகப் பங்கேற்போம்! தமிழர் வரலாற்றை உலக அரங்கில் கம்பீரமாக உயர்த்திப் பிடிப்போம்!

தமிழ்மணி 

Friday, 24 July 2026

சந்தை வர்த்தகமும் சாதிய மேலாதிக்கமும்: நீட் தேர்வை ஏன் ஒழிக்க வேண்டும்?

இந்தியத் துணைக்கண்டத்தில் மருத்துவக் கல்வியின் வாசல்களை உழைக்கும் வர்க்கக் குழந்தைகளுக்காகவும், கிராமப்புறப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காகவும் சாத்தியமாக்கியது மாநில அரசுகளின் மேல்நிலைப்பள்ளி (12-ஆம் வகுப்பு) மதிப்பெண் அடிப்படையிலான சேர்க்கை முறையே ஆகும்.

ஆனால், "தகுதி, திறமை" என்ற போலிப் 'புனிதங்களை' முன்வைத்து ஒன்றிய பாஜக அரசால் திணிக்கப்படும் நீட் (NEET - National Eligibility cum Entrance Test) நுழைவுத் தேர்வு, இன்று லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவுகளைப் பலிவாங்கும் ஒரு கொடூரமான வர்த்தகக் கருவியாகவும், ஆளும் வர்க்கத்தின் அதிகார மையமாகவும் உருவெடுத்துள்ளது.

தலைநகர் டெல்லி முதல் தமிழ்நாடு வரை இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் நடத்தும் தொடர் போராட்டங்கள் வெறும் தேர்வுக்கான எதிர்ப்பு மட்டுமல்ல; அது கல்வி உரிமையைப் பறிக்கும் ஒன்றிய அமைப்பிற்கு எதிரான தத்துவார்த்தப் போர்க்குரல்.

1. 'தகுதி' எனும் போலி முகமூடியும் வினாத்தாள் கசிவு வியாபாரமும்

நீட் தேர்வு கொண்டுவரப்பட்ட போது, அது "மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும்", "முறைகேடுகளையும் லஞ்சத்தையும் ஒழிக்கும்" என்று ஆளும் வர்க்கத்தால் கதையாடல்கள் கட்டமைக்கப்பட்டன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்திய தேர்வுகளில் அம்பலமாகியுள்ள மோசடிகள், இந்தத் தகுதி முகமூடியை அடியோடு கிழித்தெறிந்துள்ளன.

பீகார், குஜராத், ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களில் ரூ.30 லட்சம் முதல் 50 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்ட வினாத்தாள்கள், வணிக ரீதியிலான கும்பல்களின் கைகளில் விளையாடியது அம்பலமானது. வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளுடன், சில தேர்வு மையங்களில் அசாதாரண அளவில் அதிக மதிப்பெண்கள் பதிவானதும், ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்த பலர் உச்ச மதிப்பெண்கள் பெற்றதும் நாடு முழுவதும் கடும் சந்தேகங்களை எழுப்பின. இவை அனைத்தும் நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை மேலும் வலுப்படுத்தின.

"பணம் இருந்தால் வினாத்தாளை விலைக்கு வாங்கி மருத்துவர் ஆகலாம்; உழைப்பும் அறிவும் மட்டும் இருந்தால் நீட் தேர்வின் வாசலில் வீழ்ந்து மடிய வேண்டும்" என்ற அநீதியைத் தவிர நீட் சாதித்தது என்ன?

2. பயிற்சி மையங்களின் சுரண்டல் சந்தை

பள்ளிக் கல்வியை முற்றிலுமாகச் செல்லாக்காசாக்கி, "பயிற்சி மைய வணிகத்தை" (Coaching Industry) ஊக்குவிப்பதே நீட்டின் முதன்மை நோக்கமாகும்.

ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கக் கூடிய நகர்ப்புற, மேல்தட்டு பொருளாதாரப் பின்புலம் கொண்டவர்களுக்கே நீட் கதவுகளைத் திறந்துவிடுகிறது. நாள் முழுவதும் கழனிகளிலும் ஆலைகளிலும் உழைக்கும் ஏழை எளிய விவசாயிகளின், தொழிலாளர்களின் பிள்ளைகளால் லட்சக்கணக்கில் பணம் கொட்டிப் பயிற்சி மையங்களில் படிக்க முடியுமா? இரண்டு, மூன்று ஆண்டுகள் 'ரிப்பீட்டர்ஸ்' ஆக தங்கிப் படிக்கும் வசதி படைத்தவர்களே 70% இடங்களைக் கைப்பற்றுகிறார்கள் என்று ஏ.கே. ராஜன் குழு அறிக்கையின்படி தெள்ளத் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது.

இது கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து பறித்து, முழுக்க முழுக்கக் காசாக்கும் கார்ப்பரேட் சந்தை அன்றி வேறென்ன?

3. 'தகுதி'யா? சமூக வாய்ப்பா?

நீட் என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல. "தகுதி" (Merit) என்ற பெயரில் சமூக ஏற்றத்தாழ்வுகளை மூடி மறைக்கும் அரசியல் கருவியாகவும் அது செயல்படுகிறது. பல தலைமுறைகளாக தனியார் பள்ளிகள், உயர்தரப் பயிற்சி மையங்கள், நகர்ப்புறக் கல்விச் சூழல் ஆகியவற்றை அணுகிய சமூகங்களுக்கு நீட் கூடுதல் முன்னுரிமையை வழங்குகிறது. அதே நேரத்தில், அரசுப் பள்ளிகள், கிராமப்புறங்கள், உழைக்கும் வர்க்கம், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது சமூக-பொருளாதாரச் சூழலை மீறிப் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

எனவே, நீட் என்பது சந்தை வர்த்தகத்தின் கருவி மட்டுமல்ல; சமூக நீதியையும் இடஒதுக்கீட்டின் நோக்கத்தையும் பலவீனப்படுத்தும் சாதிய-வர்க்க மேலாதிக்கத்தின் கருவியாகவும் செயல்படுகிறது.

4. மாநில சுயாட்சியின் மீதான தாக்குதலும் கூட்டாட்சியும்

கல்வி தற்போது அரசமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இருந்தாலும், மொழி, சமூக அமைப்பு, பிராந்தியத் தேவைகள் ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்புடைய துறையாகும். எனவே, மாநிலங்களின் கல்விக் கொள்கை வகுக்கும் உரிமையை ஒன்றிய அரசு பறிப்பது கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான தாக்குதலாகும்.

தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க வேண்டுமெனில், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் உள்ளூர் மாணவர்களே மருத்துவப் படிப்பிற்குள் வர வேண்டும். ஆனால், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் நீட் தேர்வு, மாநில வாரியங்களில் படிக்கும் லட்சக்கணக்கான கிராமப்புற மாணவர்களைத் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறது. மாநிலங்களின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உரிமை மாநில அரசுகளுக்கே இல்லை என்பது கூட்டாட்சியின் மீதான கொடூரமான தாக்குதலாகும்.

5. சமூக நீதிக்கான கல்லறையும் மாணவர் தற்கொலைகளும்

அனிதா தொடங்கி இன்று வரை நீட் பலிகொண்ட எளிய மாணவர்களின் உயிர்கள் வெறும் எண்கள் அல்ல; அவை இந்தச் சந்தை-சாதிய கட்டமைப்பின் நிகழ்த்திய படுகொலைகள்.

12 ஆண்டுகள் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற பிறகும், ஒரே ஒரு மூன்று மணி நேர நுழைவுத் தேர்வுதான் ஒருவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது மனிதநேயமற்ற, அறிவியலற்ற அணுகுமுறையாகும். பிறப்பின் அடிப்படையிலும், வர்க்க அடிப்படையிலும் உழைக்கும் மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை, சமூக நீதியின் மூலம் இடஒதுக்கீடு வழியே நாம் மீட்டெடுத்தோம். அந்த சமூக நீதியை அடியோடு அறுத்தெறிவதே நீட்டின் மறைமுக நோக்கமாகும்.

6. 12 ஆண்டு பள்ளிக் கல்வியா? 3 மணி நேர மோசடியா?

ஒரு மாணவனின் கல்வி அறிவையும், சிந்திக்கும் திறனையும், பாடப் புரிதலையும் தீர்மானிப்பது ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அவன் தொடர்ச்சியாகப் பெற்ற அறிவுதான். அந்த மதிப்பெண்களே அவன் உயர்கல்வி பெறுவதற்கான தகுதியைத் தீர்மானிக்கக் கூடிய உண்மையான, அறிவியல் பூர்வமான அளவுகோல்.

மாறாக, "நுழைவுத் தேர்வு" என்ற ஒன்றை இடையில் புகுத்தினால், அடிப்படைப் பாடப் புரிதல் இல்லாதவர்கள் கூடக் குறுக்கு வழியில் தேர்வு பெற்று உயர்கல்வி வாய்ப்பைப் பெற முடியும். இன்று அம்பலமாகியுள்ள வினாத்தாள் கசிவு மோசடிகள் உணர்த்துவது என்ன? லட்சக்கணக்கில் பணம் கொடுத்துக் கேள்வித்தாள்களை முன்கூட்டியே வாங்கி, அந்தக் குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டும் விடைகளை மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுவது சாத்தியமாகிறது. எங்கெல்லாம் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றனவோ, அங்கெல்லாம் வினாத்தாள் விற்பனை மோசடிகளும், பயிற்சி மைய மாஃபியாக்களுமே கோலோச்சுகின்றன.

எனவே, உண்மையிலேயே திறமையான, உழைக்கும் வர்க்கச் சமூகத்தின் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உயர் மருத்துவக் கல்வி வாய்ப்பை வழங்குவது பிளஸ் 2 மதிப்பெண்கள் மட்டுமே அன்றி, மோசடிகளின் பிறப்பிடமான நுழைவுத் தேர்வுகள் அல்ல.

7. மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும் கல்வி உரிமை

மாநிலங்களின் மொழி, பண்பாடு, மற்றும் உள்ளூர்ச் சமூக யதார்த்தங்களுக்கு ஏற்பக் கல்வித் திட்டத்தை வடிவமைக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உண்டு. உழைக்கும் மக்களின் பிள்ளைகளுக்குச் சமமான உயர்கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில், கல்வி மீண்டும் முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்தின் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும்.

முடிவுரை

நீட் தேர்வில் சில சீர்திருத்தங்களைச் செய்வதால் பிரச்சனை தீர்ந்துவிடாது. தேசியத் தேர்வு முகமையை (NTA) கலைப்பதோ, கமிட்டிகளை அமைப்பதோ இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காது. பிரச்சனை நீட் தேர்வின் செயல்பாட்டில் இல்லை; அதன் கட்டமைப்பிலேயே உள்ளது.

எனவே: மருத்துவ மாணவர் சேர்க்கையை மீண்டும் மாநில அரசுகளின் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படைக்கே மாற்ற வேண்டும்; கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; மாநிலங்களின் நீட் விலக்கு மசோதாக்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கல்வியை சந்தைப் பொருளாகவும், "தகுதி" என்ற பெயரில் சமூக நீதியை மறுக்கும் கருவியாகவும் மாற்றும் நீட் முறை ஒழிக்கப்பட வேண்டும். டெல்லியிலும் தமிழகத்திலும் மாணவர்கள் நடத்தும் போராட்டம், ஒரு தேர்வுக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; கல்வி உரிமை, சமூக நீதி, கூட்டாட்சி ஆகியவற்றைக் காக்கும் ஜனநாயகப் போராட்டமாகும்.

தமிழ்மணி

Wednesday, 22 July 2026

நீட் போராட்டம்: டெல்லி 'சுல்தானும்', நடிகனின் 'நாடகமும்'!


நீட் (NEET) தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் வெடித்த மாணவர்களின் கொந்தளிப்பு, இன்று அரியணையிலிருக்கும் 'டெல்லி சுல்தானுக்கு' எதிரான மாபெரும் அரசியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. வழக்கம் போல, ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களைக் கண்டாலே நடுக்கமுறும் மோடி அரசு, டெல்லி காவல்துறையைக் கொண்டு கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

டெல்லியில் ஏவப்படும் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்துத் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால், இங்குதான் கூத்தின் அடுத்த கட்டம் தொடங்குகிறது!

ஒரே மாதிரியான லத்திகள்... வெவ்வேறான நாடகங்கள்!

டெல்லியில் போராடும் மாணவர்களை ஒடுக்குவதில் ஒன்றிய பாசிச அரசின் காவல் துறையும், தமிழ்நாட்டில் 'நடிகர்' தலைமையிலான அரசின் காவல் துறையும் ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன. அங்கும் இங்கும் காவல்துறையினர் மாணவர்கள் மீது லத்திகளைச் சுழற்றும் வீரியம் ஒரே மாதிரிதான் இருக்கிறது!

சென்னையிலும் மதுரையிலும் போராடிய மாணவர் அமைப்பினர் மீது கொடூரமான தாக்குதலையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுக்கொண்டே... நடிகர் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஆதவ், டெல்லி ஒடுக்குமுறையைக் கண்டித்து அறிக்கை விடுகிறார்! இதை என்னவென்று சொல்வது?

சென்னையிலும் மதுரையிலும் மாணவர்கள் மீது அடக்கு முறையை ஏவிய காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது 'ரோஜாப் பூக்களை' தூவுவது போலவும், டெல்லியில் மட்டும்தான் கொடூரத் தாக்குதல் நடப்பது போலவும் காட்சிப்படுத்துவது அமைச்சர் ஆதவ்வின் அப்பட்டமான நடிப்புதானே?


அழுவதா... சிரிப்பதா?

இதில் கொடுமை என்னவென்றால், "இந்த அடக்குமுறையெல்லாம் 'நடிகர்' முதல்வருக்குத் தெரியாது போலிருக்கிறது; அவர் உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒரு இடதுசாரித் தலைவர் நடிகருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இதைப் படிக்கும் போது நமக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை! ஆட்சியதிகாரத்தின் உச்சியில் இருக்கும் முதல்வருக்குத் தெரியாமல்தான் காவல்துறை மாணவர்களை நசுக்குகிறதா?

களத்தில் நிற்பது யார்? தேர்தலுக்கு மட்டும் வருவது யார்?

ஆட்சியாளர்களின் நாடகங்கள் ஒருபுறமிருக்க, இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு தெளிவான உண்மையைப் பட்டவர்த்தனமாக உணர்த்தியுள்ளது.
இன்று களத்தில் நின்று அடிவாங்குவதும், கைது செய்யப்படுவதும் SFI, AISF, AISA, RSYF போன்ற இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள்தான்! சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அரசியலுக்காக நடிகரின் அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மாணவர் தளத்தில் இந்த இடதுசாரி அமைப்புகள் நீட்டுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடிகரின் காவல்துறை அடக்குமுறைகளை எதிர்கொள்வது வரவேற்கத்தக்கது.

ஆனால், தங்களை 'மாபெரும் இயக்கங்கள்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் ஒரு இளைஞனையோ அல்லது மாணவனையோ இந்த நீட் போராட்டக் களத்தில் பார்க்க முடிந்ததா? 'தேர்தல் கால அறுவடைகள்' மட்டுமே போதும், சமூகப் போராட்டங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா? ஆட்சியில் இருந்தவரை நீட்டை எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் களம் காணாமல் வேடிக்கை பார்க்குமானால் அரசியல் அரங்கிலும் அவர்கள் காணாமல் போக நேரிடும்.

தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஏன் குறிப்பிடவில்லை என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது! அது முதல்ல ஒரு கட்சியா? அங்கே போய் இளைஞர்கள், மாணவர்களிடம் நீட் தொடர்பாகக் கோரிக்கைகளைப் பற்றிக் கேட்டால் "அப்படியென்றால் என்ன?" என்று திருதிருவென விழிப்பார்கள். அவர்கள் அங்கே 'ஜனநாயகனை' ரசித்துக்கொண்டே கடலை போடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்!


தாய் எட்டடி பாய்ந்தால்... குட்டி பதினாறு அடி!

இன்று வீதியில் நடக்கும் போராட்டம் என்பது வெறும் நீட் தேர்வுக்கு எதிரானது மட்டுமல்ல; கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மக்களை வாட்டி வதைக்கும் மோடி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

அடக்குமுறைகளை ஏவுவதில் டெல்லியும், தமிழ்நாட்டில் நடிகரின் அரசும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கின்றன. இந்தியக் குடிமக்கள் ஆயுதங்களின்றி அமைதியான முறையில் கூடுவதற்கும் போராடுவதற்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுப்பதில் டெல்லிக்குச் சளைத்தது அல்ல நடிகரின் கோட்டை!

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" என்ற பழமொழி பொய்யல்ல. டெல்லி பெற்ற பிள்ளையான இந்த 'நடிகர்' ஆட்சியும் அடக்குமுறையைப் பாய்ச்சுகிறது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராகவும், அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் மாற்றுப் பண்பாட்டுச் சக்திகளான உழைக்கும் வர்க்க இளைஞர்களும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுமே என்றும் உண்மையான வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்பதை இப்போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது!

ஊரான்

Monday, 20 July 2026

உமியாகும் உழைப்பாளிகள்!


உமியாகும் உழைப்பாளிகள்!

ஆலைகள் எல்லாம் பாய்லர்கள்தான்,

நெருப்புக்குப் பதிலாக
ஊழியர்களின் உழைப்பை எரிக்கும்
பாய்லர்கள்!

நெல் மணிகளை உள்ளே கொட்டி,
அரிசியைப் பிரித்தெடுப்பதுபோல்,
உழைப்பாளிகளின் வியர்வையை உறிஞ்சி
லாபங்களை அள்ளிக் குவிக்கின்றன
ஆலைகள்!

கைகளின் வலிமை,
கால்களின் உறுதி,
எதிர்கால நம்பிக்கை,
வாழ்க்கைக் கனவு —
எல்லாவற்றையும் அரைத்து
மூட்டைகளில் நிரப்பிக் கொள்கின்றன.

பிறகு...

பயன் தீர்ந்த உமிபோல
ஊழியர்களை வெளியே
ஊதித் தள்ளுகின்றன.

ஆனால்...

உமி தோல்வியின் அடையாளமல்ல;
அது மண்ணின் எதிர்காலம்.

காற்றில் பறந்தாலும்,
மழையில் நனைந்தாலும்,
இறுதியில் உரமாகி
பூமிக்கு உயிரூட்டுகிறது.

அதைப் போலவே,

சுரண்டப்பட்ட உழைப்பாளிகளின்
கண்ணீரும் கோபமும்
ஒருநாள் உரமாகி,
புதிய உலகின் விதைகளை
முளைக்க வைக்கும்.

உழைப்பை ஆலைகள்
உறிஞ்சிக்கொள்ளலாம்;

ஆனால்,

வரலாற்றை விளைவிப்பது
உமியென ஒதுக்கப்பட்ட
உழைப்பாளிகள்தான்!

வரலாற்றின் விளைச்சலை
அறுவடை செய்வதும்
அவர்கள்தான்!

— தமிழ்மணி

Tuesday, 14 July 2026

பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டே முற்போக்கும் புரட்சியும் பேச முடியுமா?

இன்றைய நுகர்வுப் பண்பாட்டுச் சூழலில் ஒரு விசித்திரமான போக்கு நிலவுகிறது. சமூக மாற்றத்தைப் பற்றி பேசுவது அதிகரித்திருக்கிறது; ஆனால் சமூக மாற்றத்திற்காக ஆபத்துகளை ஏற்கத் தயாரானவர்கள் குறைந்து கொண்டே செல்கிறார்கள்.


எது உண்மையான சமூகச் செயல்பாடு?

ஏழைகளுக்கு அன்னதானம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய விவாதங்கள், அடிப்படை வசதிகளுக்கான குரல், மணல் கொள்ளைக்கு எதிர்ப்பு, மூடநம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவுப் பிரச்சாரம் — இவை அனைத்தும் சமூகச் செயல்பாடுகள்தான். ஆனால் இவற்றுக்கும், உண்மையான அநீதிக்கு எதிரான போராட்டத்திற்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது.

‘நோகாத’ சமூக சேவை

சமூக அநீதிகளுக்கு பின்னால் உள்ள அதிகார அமைப்புகளைச் சுட்டிக்காட்டி, மக்களைத் திரட்டி போராடுவது எளிதல்ல. அதிகாரத்தை  எதிர்க்கும் போது, வழக்குகள், கைது, வாழ்வாதார அச்சுறுத்தல் ஆகியவை உருவாகும். எனவே பலர் “நோகாமல்” சமூக சேவை செய்யவே விரும்புகிறார்கள். பிரச்சினையைப் பற்றி பேசுவது பாதுகாப்பானது; ஆனால் அதற்குக் காரணமான அமைப்புகளை எதிர்ப்பது சவாலானது.

இன்று நாம் பார்க்கும் முரண்பாடுகள்:
- குடிப்பழக்கத்தில் இருப்பவன் போதை ஒழிப்பு பற்றி முழங்குகிறான்.
  • ஊழலில் ஈடுபடுபவன் ஊழல் ஒழிப்பு பற்றி உரையாற்றுகிறான்.
  • தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் முற்போக்கு பேசுபவர்கள் பெருகுகிறார்கள்.
சமூகச் செயல்பாடு vs சமூக மாற்றம்

உண்மையான களப்பணியாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அரசியல், சமூக அநீதிகளுக்கு எதிராக தங்கள் வாழ்வையே பணயம் வைத்துப் போராடுபவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பை மறுக்க முடியாது. ஆனால் அம்பேத்கர், பெரியார் போன்றோரின் பெயர்களைச் சொல்வது எளிது; அவர்கள் எதிர்கொண்ட விலையைச் செலுத்தத் தயாராக இருப்பது வேறு.

சொல்வதும் செய்வதும் ஒன்றாக

ஒரு சமூகச் செயல்பாட்டாளரின் நம்பகத்தன்மை அவரது பேச்சில் மட்டுமல்ல; அவரது வாழ்க்கை முறையிலும் வெளிப்பட வேண்டும். மூடநம்பிக்கைக்கு எதிராகப் பேசுபவன் தன் வீட்டில் அதை ஒழிக்க வேண்டும். ஊழலை எதிர்ப்பவன் தன் நடத்தையில் நேர்மையைக் காட்ட வேண்டும். எளிமையைப் போதிப்பவன் அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். மொத்தத்தில் சமூகச் செயல்பாட்டாளர்களின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருக்க வேண்டும்.

நாம் சிந்திக்க வேண்டியது

புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பிறகு, தனிநபர் வெற்றி, நுகர்வு, சமூக ஊடகப் புகழ் ஆகியவை பொதுநல உணர்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. சமூக மாற்றம் என்பது சமூக ஊடகங்களில் பதியப்படும் சில பதிவுகள், புகைப்படங்கள், முழக்கங்களில் அல்ல; அது நேரம், உழைப்பு, தியாகம் மற்றும் சவால்களை ஏற்கும் துணிவு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுவது.

பாதுகாப்பாக வாழ நினைப்பது தவறல்ல. ஆனால் பாதுகாப்பான தூரத்தில் நின்றுகொண்டு புரட்சியைப் பற்றி பேசி, தன்னைப் பெரிய முற்போக்காளராகக் காட்டிக் கொள்வது நேர்மையான அணுகுமுறையல்ல.

புரட்சியைப் பற்றி பேசுவது எளிது; ஆனால் அதற்காக தனிப்பட்ட இழப்புகளையும் ஆபத்துகளையும் ஏற்கத் தயாராக இருப்பதுதான் உண்மையான முற்போக்கின் அளவுகோல். சமூக மாற்றத்தைப் பற்றி பேசுபவர்கள் அதிகரித்துள்ளனர்; ஆனால் அதற்காக விலை கொடுக்கத் தயாரானவர்கள் எத்தனை பேர்?

— ஊரான்