Tuesday, 27 December 2011

சனிப் பெயர்ச்சி! ஊரானின் கணிப்பு பலித்தது!

21.12.2011 அன்று சனிபகவான் துலா ராசி வீட்டிற்கு குடி போயிருக்கிறார். அவர் பால் காய்ச்சிய சம்பவம் ஜோதிட நம்பிக்கைக்காரர்களுக்கு மிக முக்கியமான நாள். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றியும், பாதகமானவற்றிற்கான பரிகாரங்கள் பற்றியும் பிரபல ஜோதிடர்கள் சொல்லும் சனிப்பெயர்ச்சி பலன்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில், சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!, சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி! என்ற தலைப்புகளில் ஒரு தொடர் கட்டுரையை இரண்டு நாட்கள் வெளியிட்டிருந்தோம். நமது பார்வையில் சனிப் பெயர்ச்சி பலன்களை கணித்திருந்தோம்.


கட்டுரையின் இறுதியில்


"இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்"

என முடித்திருந்தோம்.

”ஊரான் அவர்கள் கணித்த ராசி பலன்கள் அருமையிலும் அருமை. இந்தக்கணிப்பு படிதான் நடக்கும். நடந்து கொண்டும் இருக்கும். வாழ்த்துக்கள்” என வலிபோக்கன் அவர்களும் வழி மொழிந்திருந்தார்.

ஒரு வாரம் கூட ஆகவில்லை. நமது கணிப்பு பலித்துவிட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரள மாநிலத்தில் பதற்றம் நிலவுவதால் "தமிழக கோயில்களிலேயே ஐயப்ப பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்' (http://www.dinamani.com/edition/Story.aspx?) என அகில உலக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப  மிஷன் நிறுவனர் ராஜமங்கலம் கூறியுள்ளார்


"சபரிமலை செல்ல முடியாத நிலை தமிழக கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி!"  (http://wap.dinakaran.com/District_detail_2011.asp?Nid=25288

"சபரி மலை செல்ல முடியாத நிலை உள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் என்று திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்"

"கேரளாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்யலாம். அதனை கடவுள் ஐய்யப்பனும் ஏற்றுக்கொள்வார்என மேலும் விளக்கமளித்துள்ளார்.

'மகான்'களும், 'பராமாச்சாரி'யர்களும் சொல்வதற்கு முன்பே நாம்தான் முதன் முதலில் சரியாக கணித்திருக்கிறோம். எனவே எல்லா ராசிக்காரர்களும் எமது கணிப்பை நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை! இனி எமது மற்ற கணிப்புகளும் பலிக்கும் என்பதால் அந்ததந்த ராசிக்கார்கள் தங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்ய தாயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, 21 December 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி!

சனிபகவான் இன்று பால் காய்ச்சிவிட்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.  மன்னார்குடி சசிப் பெயர்ச்சியும், இன்றைய சனி பெயர்ச்சியும்  அடுத்தடுத்து நடந்தேறியுள்ளதால் தமிழகத்தில் வரும் நாட்களில் ராசிபலன்களில் பெறும் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பலன்களை நேற்று பார்த்தோம். மற்ற பிற ராசிக்காரர்களுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் இன்று பார்ப்போம்.

சிம்மம் 

அரசியல் மேடைகளில் சிங்கமென கர்ஜிக்கும் சீமா ராசிக்காரர்களே! அம்மாவின் அறிவிப்புகளையே ஆணைகளாக பாவித்து இதுவரை கர்ஜித்ததைப் போல இனியும் தொடர்ந்து கர்ஜிக்கலாம். ஆனால் மேஷ ராசிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உங்கள் கர்ஜனையை சற்றே அமுக்கி வாசிக்க வேண்டும். 'ஈழம் - கீழம்' என்று எல்லை மீறினால் கம்பி எண்ண வேண்டி வரும். அப்படி ஒரு நிலை ஏற்படுமேயானால் பரிகாரமாக 'தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன்னடி சரணம்!!' என தினமும் போயஸை நோக்கி உரக்க உச்சாடனம் செய்து வந்தால் சிறைக் கம்பிகள் விலகும்.   

கன்னி

செவ்வாய் தோஷ கன்னிகளும், வரதட்சணைக் கொடுக்க வழியின்றி முப்பதுகளிலும் மூன்று முடிச்சுக்காக ஏங்கும் கன்னிகளும் இனி கவலைப்பட வேண்டியதில்லை.திருமண ஏக்கத்தில் இனியும் கவலைப்படக்கூடாது என்பதால் இனி வரும் காலங்களில் அரசே மாப்பிள்ளைகள் இலவசமாக வழங்கவிருக்கிறது. இதுவரை கன்னிகளாக இருந்த நீங்கள் இனி தம்பதி சமேதராய் உலவலாம்.அப்படியும் ஒருசிலருக்கு மாப்பிள்ளைகள் கிடைக்கவில்லை என்றால் தட்சணையோடு புரோகிதரை நாடினால் பரிகாரம் கிடைக்கும்.

துலாம்

மேலே போவோமா இல்லை கீழு விழுவோமா என குழப்பத்தில் இருக்கும் சில்லரை வணிக துலாம் ராசிக்காரர்களே! சில்லரை வணிகத்தில் லாபமா-நட்டமா என குழம்பிப் போயிருந்த உங்களுக்கு இனி அந்நிய முதலீடு வரவிருப்பதால் 'சேல்ஸ்மேன்' வேலை நிச்சயம். சரக்கு 'குடோனில்' படுத்துறங்கவும் பட்டைச் சோறும் உத்தரவாதம் என்பதால் உங்கள் எதிர்காலம் ஓகோவென்றிருக்கும். பட்டைச் சோறு கிடைக்கவில்லை என்றாலும் இருபது கிலோ அரிசி இலவசமாய் கிடைப்பதால் நீங்கள் வருத்தப்பட வேண்யிருக்காது.

விருச்சிகம்

காவல் பணியாற்றும் விருச்சிக ராசிக்காரர்களே! இனி உங்களுக்கு பொற்காலம்தான். உயர் ரக மதுவிற்பனையும் தொடங்கப்பட்டு வருவதால் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகமாகும். குடித்தவன் வீதிக்கு வந்துதானே ஆகவேண்டும். அப்படி வரும்போது அவன் கண்டிப்பாக அவனை அறியாமலேயே 'ஓவர் ஸ்பீடில்' வருவான். இந்த வாய்ப்பு உங்களின் வருவாயை அதிகரிக்க உதவும். பிள்ளையின் படிப்பையும் பெண்ணின் திருமணத்தையும் முடிக்க இது போதுமானதாகவே இருக்கும். அப்படியும் போதவில்லை என்றால் பரிகாரமாக நீங்கள் கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி மனு செய்யலாம். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் மேலும் விருத்தியடைவார்கள்

தனுசு

ஆலைகளில் உழலும் தனுசு ராசிக்காரர்களே! உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி உள்ள ஆலை மூடல் - ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிள்ளைகளை படிக்க வைக்கவும் பெண்களை கட்டிக் கொடுக்கவும் காசில்லை என்ற வருத்தம் இனி தேவையில்லை. மிதுன ராசிக்காரர்களான உங்கள் பிள்ளைகள் ஆடு மேய்த்தே முன்னேறுவார்கள் என்பதால் உங்களுக்கு படிப்புச் செலவு மிச்சம். கன்னி ராசிக்காரர்களான உங்கள் பெண்பிள்ளைகளுக்கு அரசே இலவசமாக பாப்பிள்ளைகள் கொடுத்துவிடுவதால் இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த வரன் தேடும் அவஸ்தை இனி அறவே இருக்காது.

மகரம்

வேளாண்மையில் ஈடுபடும் தனுசு ராசிக்காரர்களே! முல்லைப் பெரியாரை இடித்தாலும், பாலாற்றை முடக்கினாலும், மேட்டுர் வற்றினாலும் நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதில்லை. ஆற்று நீரை நம்பி இதுவரை வேதனைகளை அனுபவித்து வந்த நீங்கள் இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். தமிழகமே மேய்ச்சல் நிலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஆடு - மாடுகளை வளர்த்து பயன் பெறுவீர்கள். கறிக்காக மாடுகள் கேரளா செல்வதும் தடுக்கப்படும் என்பதால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு பால் உற்பத்தி அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்கள் கெட்டித் தயிரையும் வெண்ணையையும் எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கு மோர் நிச்சயம். மோர் அதிகமாக புளித்துப் போனால் பரிகாரமாக தேத்தாங் கொட்டையையை அதில் போட்டுவைத்தால் தெளிந்த மோர் கிடைக்க வழி ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி தாய்மார்களே! தமிழகத்தில் தற்போது உயிரோடு இருக்கும் யாரும் மரணத்தைத் தழுவதற்கும், புதிதாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால்  நீங்கள் பத்துமாதம் சுமந்து குழந்தை பெறும் வேதனையிலிருந்து இனி விடுபடுவீர்கள். 

மீனம்

மீன ராசிக்காரர்களே! மீன்களைத் தேடி கடலுக்குச் செல்லும் நீங்கள் இதுவரை சிங்களக் காடைகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி அடிபட்டு துவண்டு போனீர்கள். ஆனால் இனி இத்தகைய தாக்குதல்களுக்கு நீங்கள் ஆட்பட வேண்டி வராது. சிங்கி உள்ளிட்ட உயர்ரக மீன்கள் உட்பட அனைத்து மீன்களும் இனி கரையை நோக்கி வருவதற்கு வழி ஏற்படும். கரையில் அமர்ந்து கொண்டு தூண்டில் போட்டே இனி மீன்பிடித்துக் கொள்ளலாம். 

மீன்களின் துர்நாற்றம் அக்கிரகாரத்தின் மூக்குகளை துளைப்பதால் மீன்களை தமிழகத்தின் உள்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதனால் மொத்த மீன்களையும் நீங்களே சாப்பிடுவதற்கான வழி ஏற்பட்டுள்ளதால் உங்கள் தேக பலம் அதிகரிக்கும். கடற்கரைக்கே வந்து சிங்களவன் அடித்தாலும் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் தேக பலத்தால் வேகமாக ஓடிவந்து தமிழகத்தின் உள்பகுதிக்குள் தஞ்சம் புகலாம்.

இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்.

Tuesday, 20 December 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!

தினக்கூலியோ, மாதச்சம்பளமோ நீங்கள் எப்படி சம்பாதிப்பவராக இருந்தாலும் சொந்த வீட்டுக்காரராய் இருந்தால் வீடு மாற்ற வேண்டிய பிரச்சனை இல்லை. பிள்ளைகள் வளர்ந்து பங்கு கேட்கும்வரை ஒரே வீட்டிலேயே - வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு மாற்றலாகாதவரை - காலத்தை ஓட்டிவிடலாம். ஆனால் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருப்பவராய் இருந்தால் தற்போது குடியிருக்கும் வாடகை வீடு எத்தனை நாட்களுக்கு என்று தெரியாது.

 வாடகை வீடு

கணவன்-மனைவி, பிள்ளைகள் என்றால் ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு; இதற்குமேல் இருந்தால் வாடகை வீடு கிடைப்பதே அரிது. எப்போதாவது ஊரிலிருந்து உறவினர்கள் வந்துவிட்டால் 'பாத்ரூம் - கக்கூஸ்' பக்கம் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசரம் என்றாலும் அடக்கித்தான் ஆகவேண்டும். தெரியாத்தனமாக ஒரே ஒரு முறை ஆய் போய்விட்டால் "சொந்தக்காரங்க வந்து செப்டிக் டேங்கே நிறைந்து விட்டதாக" 'ஹவுஸ் ஹோனர்' கூப்பாடு போடுவார். பிறகு 'செப்டிக் டேங்க்கை' சுத்தம் செய்யும் செலவும் உங்கள் தலையில்தான் விழும். அதனால் சொந்தக்காரர்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. அப்படியே வந்துவிட்டால் 'பஸ் ஸ்டாண்டிலேயே' பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு - வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வழி அனுப்பி வைக்க வேண்டும். அங்கே அவசரத்து ஒதுங்க ஒரு இரண்டு ரூபாய் கொடுத்தால் போதும். 

உணர்ச்சி வேகத்தில் மூன்றாவது குழந்தை வயிற்றில் உருவாகி விட்டால் என்னவாகும்? அப்படி ஒரு நிலை வந்தால் வாடகைக்கு வீடு கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் கிடைக்கும். வேறு இடத்திற்குச் சென்றுவிட்டால் முதல் இரண்டு பிள்ளைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? அதற்காக ஆட்டோ-வேன்களை நம்ப வேண்டும். இதற்கு கூடுதல் செலவு வேறு. வேலைக்குச் செல்பவராக இருந்தால் மேலும் ஒரு பேருந்தை பிடிக்க வேண்டி வரும்- அதற்காகவும் கூடுதல் செலவு. இப்படி ஒவ்வொரு செலவாகக் கூடி உங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துவிடும். புதிய சுமைகளை சுமப்பதைவிட பழைய சுமையை இறக்கிவிடுவது - கலைத்துவிடுவது - எவ்வளவோ மேலல்லவா!

சனிப் பெயற்சி

இப்படி வீடு மாற்றுவதில்தான் நமக்கு எத்தனை எத்தனை பிரச்சனைகள்? ஆனால் சனி பகவானுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். நாளை அவர் பால் காய்ச்சப் போகிறாராம். இதுவரை பக்கத்து விட்டில் குடியிருந்த துலா என்பவரை விரட்டிவிட்டு - பலம் இருந்தால் எதையும் செய்யலாமே - அங்கே குடியேறப் போகிறாராம். பக்கத்து வீட்டுக்காரன் காலி செய்வதற்கு முன்பே திடலடியாக உள்ளே நுழைந்து வெள்ளையெல்லாம் அடித்தாகிவிட்டதாம். பால் காய்ச்சுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.
தமிழகமே இந்த பால்காய்ச்சும் விழாவில் பங்கேற்கவிருக்கிறது. இதற்காக தமிழக மக்கள் அனைவருக்கும் செய்தித்தாள்கள்-வார-மாத இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக ஒரு மாதத்திறகு முன்பிருந்து தற்போதைய கடைசி நேரம் வரை தொடர்ந்து அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த கோலாகலமான பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்கு சனிப் பெயற்சி என ஆன்றோர்கள் பெயரிட்டுள்ளனர்.

நண்பர்களோ அல்லது உறவினர்களோ பால் சாய்ச்ச அழைக்கும் போது - அவர் குடி மாற்றிப் போவதால் உங்களது வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராது என்றாலும் - சம்பிரதாயத்துக்காக தலை காட்டுவது போல சனி பகவான் பால் காய்ச்சுவதை எண்ணி விடாதீர்கள்.

உறவும் - நட்பும் நிரந்தரமானதல்ல. எப்பொழுது வேண்டுமாலும் அதை நீங்கள் முறித்துக் கொள்ளலாம் ஆனால் நீங்கள் பிறக்கும் போதே உங்களது ராசி தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இந்த ராசிதான் உங்களது வாழ்க்கையின் சகலத்தையும் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராசியை விட்டு விலக முடியாது; அதனுடனான உறவை முறித்துக் கொள்ள முடியாது. இப்படி ராசி வலையில் சிக்கிக் கொண்டவர்கள் சனிப் பெயற்சியை அலட்சியப் படுத்திவிட முடியாது.

நாளை நடைபெறும் பால் காய்ச்சும் நிகழ்ச்சிக்குப் பிறகு 12 ராசிக்காரர்களுக்கும் கிடைக்கப் போகும் சில நற்பலன்களும் பரிகாரங்களும்: 

மேஷ ராசிக்கார்களே! அக்கிரகார வீட்டில் இருந்து கொண்டு மற்றவர்களின் ராசியை தீர்மானிக்கும் அதிகாரத்தை வைத்துள்ள உங்களுக்கு இனி அமோகமான எதிர்காலம்தான். இதுவரை உங்களை அண்டவிடாத மன்னார்குடி ஏழரை நாட்டுச் சனி இன்றோடு வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் உங்களின் அதிகாரம் எட்டுத்திக்கும் இனி கொடி கட்டிப் பறக்கும்.  ஆனால் அதிகாரத்தை சற்றே நிதானத்துடன் கையாள வேண்டும். அதிகாரப் போட்டியில் உங்களுக்குள் சில நேரங்களில் பிணக்குகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு பரிகாரமாக நீங்கள் துக்ளக்கால் புகுழ் பெற்ற 'சோ' சாமியை பூஜித்து வர உங்கள் பிணக்குகள் நீங்கும். மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு வாழ்க்கை பேஷாக இருக்கும்.

ரிஷப (வாகன) ராசிக்கார்களே! பேருந்துகளிலேயே நீங்கள் பயனித்து வருவதால் ஒன்றரை மாதத்துக்கு முன்பு உங்களுக்கு பிடித்த கட்டண உயர்வு என்கிற சனி நீங்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் அதற்காக துவண்டு விடாதீர்கள். மாதம் ஒருமுறை நீங்கள் திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபட வேண்டும். பேருந்து கட்டணம் செலுத்த உங்களுக்கு வழி இல்லை என்றாலும் மாட்டு வண்டியிலாவது சென்றுவர வேண்டும். மாட்டு வண்டிக்கு எங்கே செல்வது என்று கவலைப்பட வேண்டாம். அம்மா கொடுக்கிற கரவல் மாடு ஈன்றும் கன்று காளைாய் வளரும்.  காளை மாட்டு வண்டியில் நீங்கள் படு ஜாலியாய் பாட்டுப் பாடி குஷியாய் வாழ்க்கை பயணத்தைத் தொடரலாம்.

மிதுன ராசிக்காரர்களே! சமச்சீர் கல்லி கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியில் திளைத்த உங்களுக்கு இனி சற்று கஷ்ட காலம்தான். 'தரமான கல்வி' கிடைத்துவிட்டது என ஒரு பக்கம் மகிழ்ச்சியடைந்தாலும் மேல்படிப்பு படிக்க துட்டு இல்லை என்பதால் நீங்கள் பள்ளிப் படிப்பை தாண்டிச் செல்வது கடினம் என்றாலும் ஆட்டுக் குட்டிகள் உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கவிருப்பதால் அவற்றை மேய்த்து நீங்கள் எதிர்காலத்தில் ஒளிமயமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.

கடக ராசிக்காரர்களே!நீங்கள் வாழும் ஊழல் வலை மிகவும் பாதுகாப்பானதுதான். ஆனாலும் சில மாதங்களாக அன்னா அசாரே போன்ற குள்ள நரிகள் தங்களின் வாலை நுழைத்து உங்களை பிடிக்க முயற்சி செய்வதைக் கண்டு அச்சப்பட வேண்டாம். அது ஒரு சல சலப்பு நாடகம்தான். ஒரு வேளை அதையும் மீறி வாலை நுழைத்தால் வாலை கடித்து துப்பிவிட்டு வேறு ஒரு பாதுகாப்பான வலையை ஏற்படுத்திக் கொள்வதற்கான திறமை உள்ளவர்கள் நீங்கள் என்பதால் உங்களின் எதிர்காலம் எப்போதும் போல வளமாகவே இருக்கும்.

மற்ற ராசிக்கார்கள் அவசரப்பட வேண்டாம். நாளை சந்திப்போம்.

Saturday, 17 December 2011

பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!

”அனைத்து ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகளுக்கு மாநில நிதி ஆணைய மானியமாக 3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை விடுவித்து 
அம்மா ஆணை பிறப்பித்துவிட்டார்.

”ரூ.3 ஆயிரத்து 53 கோடியே 45 லட்சத்து 56 ஆயிரத்தில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகச் செலவுகள், குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், அடிப்படை வசதிகளை பராமரித்தல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தமிழக குக்கிராமங்களின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இந்த நிதியில் இருந்து ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.3 லட்சம் விடுவிக்கப்படும். ஊராட்சி ஒன்றியங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.2,50,000 வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.30 லட்சம் நிதி விடுவிக்கப்படும். இது மட்டுமின்றி பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து ஊரக அமைப்புகளுக்கான மாநில நிதி ஆணைய மானியம் மக்கள் தொகைக்கு ஏற்ப விடுவிக்கப்படும்.

"புதிதாக தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் (தாய்) உருவாக்கப்பட்டுள்ளதால் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குக்கிராமங்களை சென்றடைந்துவிடும். கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி செல்வது முழுவதுமாக தடுக்கப்பட்டுவிடும்.


என்ன? காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் கண்களில் தெரிகிறதோ! சற்று பொறுங்கள்!


உள்ளாட்சித் தேர்தல் முடிந்து சில மாதங்கள் உருண்டோடி விட்டன. வாக்குகளைப் பெற வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமல்ல தங்கள் வளத்தையும் சேர்த்தே வாரி இரைத்தார்கள். ஆளும் கட்சி-எதிர் கட்சி என்கிற பாகுபாடின்றி அனைத்து வேட்பாளர்களுமே தங்கள் வசதிக்கேற்ப வாக்காளர்களை கவனித்தார்கள். வழக்கம் போலவே "ஆளும் கட்சிக்காரன் வந்தால்தான் நம்ம ஊருக்கு ஏதாவது செய்வான்" என்கிற நம்பிக்கையில் மக்களும் ஆளும் கட்சியினருக்கே வாக்களித்தனர்.

மற்ற பிற இடங்களில் சாதி - மத பலம் மற்றும் ஆளும் கட்சியினரின் உள்குத்து காரணமாக சில உதிரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர் கட்சியினரும் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். 

வெற்றிக் களிப்பில் திளைக்கவா இவர்கள் முதல் போட்டார்கள்? போட்ட முதலை குறைந்த பட்சம் மும்மடங்காகவாவது எடுத்தால்தான் தங்களின் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். அரசு கஜானா காலி என அம்மா அடிக்கடி சொல்லி வந்ததால் என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டிருந்த பிள்ளைகளுக்கு பால் வார்த்திருக்கிறார் அம்மா. பால் மடி வற்றினாலும் பிள்ளைகள் பட்டினியால் வாடுவதை எந்தத் தாயால்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? 

தன் பிள்ளைகளுக்கு பால் வார்க்க ஊர்ப் பிள்ளைகளுக்கு பால் ஊத்தினார் - பால்விலை உயர்த்தப்பட்டது. பிள்ளைகளுக்கு தண்ணீர் கலந்த பால் கொடுத்தால் சளி பிடித்துக் கொள்ளுமாம். அதனால் சுண்டக் காய்ச்சிய பால்தான் வேண்டும் என பிள்ளைகள் அடம் பிடிப்பதால் அதற்காக ஆகும் கூடுதல் செலவை ஈடு கட்ட பேருந்திலும் கை வைத்ததால்தான் இப்போது கணிசமாக கல்லாக் கட்ட முடிகிறது. 

இப்போது தினம் தினம் கல்லா நிறைகிறது. பிறகென்ன? போட்ட முதலை பிள்ளைகள் எடுக்க வேண்டாமா? தன்னை அரியணையில் ஏற்றிவிட்ட பிள்ளைகள் குறைந்த பட்சம் போட்ட முதலையாவது எடுக்க வேண்டாமா? அதற்கான வழிதான் "தாய்" திட்டம்.

பிள்ளைகள் இனி சாக்கடையிலும் சந்தனம் எடுப்பார்கள். குடி நீரை பன்னீராக்கி கொப்பளிப்பார்கள். சாலை மேம்பாட்டில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். தெரு விளக்குகளில் குளிர் காய்வார்கள். மொத்தத்தில் அம்மாவின் ஊட்டச் சத்தால் இனி பிள்ளைகள் வேகமாக வளந்துவிடுவார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் தானே தாயை கவனிக்க முடியும்.
பிள்ளைகள் இப்போது பாடத் தொடங்கிவிட்டார்கள்.
பால் வார்த்த தாயே போற்றி! போற்றி!
*****
தொடர்புடைய பதிவுகள்:
எட்டப்பர்களை வீழ்த்தாமல் எதிரிகளை ஒழிக்க முடியாது!...
மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
கொள்ளையடிப்பதில் கெட்டிக்காரன் யார்? வடக்கத்தியானா..

Tuesday, 13 December 2011

கொழந்த அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

எமது தெருவில் புதுத் தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பிறக்கும் போதே ஒன்றே முக்கால் கிலோகிராம் எடைதான் இருந்தது. பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. அவர்கள் குடியிருக்கும் வீடு சற்றே வசதியானதுதான். ஒரு நடுத்தர வர்க்கத்துக்குரிய வசதிகள் அனைத்தும் அவர்கள் வீட்டில் இருக்கின்றன. அனைத்தும் இருந்தும் என்ன செய்ய?

பச்சிளம் குழந்தை அழுத வண்ணம் உள்ளது. தாய்ப்பாலை குடிக்க மறுக்கிறது. ஆங்கில மருத்துவரைப் பார்க்கிறார்கள். குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு "ஒன்றும் பிரச்சனை இல்லை, படிப்படியாக சரியாகிவிடும்" என்று சொல்லி சில மாத்திரைகளை கொடுத்து அனுப்புகிறார் மருத்துவர்.

கொழந்தை அழறதா! வீட்டை மாத்தச் சொல்லு!

ஒரு வாரம் பார்க்கிறார்கள். குழந்தையின் அழுகை நின்றபாடில்லை. இவர்களுக்கும் அழுகை அழுகையாய் வருகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரவர்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைச் சொல்கிறார்கள். கடைசியில் குழந்தையின் பாட்டி சொன்னபடி ஜோசியரை நாடுகிறார்கள்.

”தற்போது தங்கியிருக்கும் வீட்டு அமைப்பு சரியில்லை, அதனால்தான் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது,  குழந்தை அழுகையை நிறுத்த ஒரே வழி குழந்தையும் தாயும் வேறு வீட்டில் தங்க வேண்டும்” என்கிறார் ஜோசியர்.

மருத்துவராவது குழந்தையைப் பார்த்துவிட்டு மருந்து சொன்னார். ஆனால் ஜோசியரோ குழந்தையையும் பார்க்கவில்லை; வீட்டையும் பார்க்கவில்லை. ஜாதகத்தைப் பார்த்தே தீர்வு சொல்லிவிட்டார். அதையும் நம்பினார்கள். தற்போது நான்கு வீடு தள்ளி இருக்கும் தங்களது நெருங்கிய உறவினர் வீட்டில் தாயும் சேயும் தங்கியுள்ளார்கள். ஆனால் குழந்தை அழுவதை மட்டும் நிறுத்தவில்லை. 

இப்போது புது பிரச்சனை ஒன்று கிளம்பியுள்ளது. "ஏற்கனவே மூனு பொண்ணுங்கள வச்சுகிட்டு, ஒவ்வொருத்தரும் படிக்கிறதுக்கு எடம் பத்தாம கஷ்டப்படறோம். இப்ப இவங்கவேற,  இது எத்தினி நாளிக்கோ" என புலம்ப ஆரம்பித்துவிட்டார் வீட்டோட அம்மா.  

இப்போது இந்த அம்மா தங்களது கஷ்டத்துக்கு ஜோசியரைப் போய்ப் பார்த்தா "இந்த வீடு சரியில்ல. வேற வீட்ல தங்கிக்கங்க" என்று சொல்வாரோ!

அழுகைக்கான காரணத்தை குழந்தையால் சொல்ல முடியாது என்றாலும் அது தற்காலிகமானது. ஆனால் மனிதனின் அழுகை?

அழாத மனிதன் ஒருவனை இவ்வுலகில் காண்பதறிது. வாய்விட்டு ஒருவர் பேசினால் அழுகைக்கான காரணங்களைக் கண்டறிந்து ஆறுதல் சொல்லலாம் அல்லது நோயினால் / காயம் பட்டதனால் வந்த அழுகை என்றால் மருத்துவம் பார்க்கலாம். அழுகை நம் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.

அழுகையும் ஹோமியோபதியும்

அறிவுரை கூறும் போது,
தனிமையில் இருக்கும் போது,
கோபம் அடையும் போது,
கவலையில் இருக்கும் போது,
அன்பாய் பிறர் தன்னை அரவணைக்கும் போது,
தன்னோடு பிறர் முரண்படும் போது,
இருட்டைக் காணும் போது,
 நம்பிக்கை இழக்கும் போது,
ஏமாற்றம் அடையும் போது,
உணர்ச்சி வசப்படும் போது,
எதிர் காலத்தை நினைக்கும் போது,
பிறர் தொடர்ந்து தன்னைக் கவனிக்கும் போது,
படபடப்பின் போது,
கனவு காணும் போது,
தான் கேட்டது எதுவும் கிடைக்காத போது,
பிறர் மீது கருணை காட்டும் போது,
பிறர் தனக்கு நன்றி கூறும் போது,
விரத்தியடையும் போது,
தனது துன்ப துயரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் போது,
தனக்குள்ள நோய் பற்றி கூறும் போது

என இப்படி பல்வேறு காரணங்களுக்காக நாம் அழத்தான் செய்கிறோம். இவற்றை எல்லாம் துயரருக்கான (நோயாளிக்கான) குறிகளாக கணக்கில் கொண்டு ஹோமியோபதி மருந்து கொடுத்தால் சரியாகி விடும் என்பது ஹோமியோபதி மருத்துவக் கோட்பாடு.

பேசமுடியாத கைக்குழந்தைகள் சதா அழுத வண்ணம் இருப்பதை பார்க்கிறோம்.குழந்தை எதற்காக அழுகிறது? பசிக்காக அழுகிறதா,  பயத்தினால் அழுகிறதா,  வலியால் அழுகிறதா எனக் கண்டறிவது கடினம்.

காரணம் தெரியாததால்தான் குழந்தையின் அழுகையை நிறுத்த வேறு வீட்டிற்கு தற்காலிகமாக மாறுகிறார்கள்.'ஒரம் வுழுந்திடிச்சி' என உலக்கையை வைத்து பாட்டிமார்கள் 'ஒரம்' எடுக்கிறார்கள்.

ஆனால் குழந்தை அழும் தன்மைகளைக் கண்டறிந்து அதற்குரிய ஹோமியோபதி மருந்தைக் கொடுத்தால் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியும் என்கின்றனர் ஹோமியோபதி மருத்துவர்கள்.

மனிதன் ஏன் அழுகிறான்?

குழந்தை மட்டும் தொடர்ந்து அழவில்லை. மனிதன் இறக்கும் வரையிலும் அழுது கொண்டுதான் இருக்கிறான். இறந்த பிறகும் பிறரை அழ வைக்கிறான். ஒருவர் இறக்கும் போது அவர் மீதான பாசம் மட்டுமே நம் அழுகைக்குக் காரணமா? இறந்து போனவரை நம்பி வாழ்ந்தவர்கள் இனி என்ன செய்வார்கள் என்ற எதிர்கால அச்சம் நம் அழுகையை அதிகரிக்கிறதா? இப்படி ஒவ்வொரு அழுகைக்கும் உள்ளார்ந்த காரணம் இல்லாமலில்லை.

எல்லோர் மீதும் நமக்குப் பாசம் வருவதில்லை. நமக்கு வேண்டியவர், நம்மைப் போன்றவர் என்கிற பொருளியல், கருத்தியல், உறவு ரீதியானதொரு பிணைப்பு பாசத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. பாசம் கூட ஒருவித தன்நலத்தின் வெளிப்பாடுதான். இன்றைய சமூகம்  தன்நலத்தைப் வலியுத்துகிறது. தன்நலம் பாசத்திற்கு வித்திடுகிறது. தன்நலமும் பாசமும் பிரிக்க முடியாதவை. தன்நலத்தைப் பேணும் வரை பாசமும் தொடரும். பாசம் தொடரும் வரை அழுகையும் நீடிக்கும். அழுகை வெறும் உணர்வு சார்ந்த ஒன்றல்ல. அது சமூகம் சார்ந்த ஒன்று.

மருந்துகள் அப்போதைக்கான அழுகையை வேண்டுமானால் நிறுத்தலாம். ஆனால் அழுகைக்கான காரணங்கள் புற உலகில் நீடிக்கும் வரை அழுகைக்கு முடிவேது?