Thursday, 19 January 2012

உறவுகளை அறுத்தெறியும் அரசு!

பண்டிகைகள் தேவைதானா?

எதற்காகப் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்கிற கேள்வி பல ஆண்டுகளாகவே என்னுள் எழுந்த வண்ணம் உள்ளது. 

"பண்டிகைகள் நம் பாரம்பரியம் அல்லவா, விட்டுவிட முடியுமா?"

"உறவுகள் அப்போதுதானே ஒன்றுபட முடியும்!"

"நம்மை வாழவைக்கும் விலங்குகளுக்கும், இயற்கைக்கும், கடவுளுக்கும் நன்றிக்கடனை செலுத்தவேண்டாமா?"

"பண்டிகை இல்லை என்றால் பிறகு எப்படித்தான் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது?”

"உறவுகளையும் நட்பையும் பண்டிகைகள்தானே புதுப்பிக்கின்றன!"

இப்படி பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கான 'நியாயங்கள்' மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றன.

விழாக்கள் நுகர்வுக்கானவைகளா?

ஆனால் வியாபாரிகளுக்கு பண்டிகைகள் கொண்டாடுவதற்கான காரணங்கள் இரண்டாம் பட்சமானவை. கல்லாப் பெட்டி நிறைகிறதா என்பதே அவர்களின் கவலை.சமீப காலமாக முதலாளிகளும் வணிகர்களும் கல்லா நிறைவதற்கான புதுப் புது யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய யுக்திகள் மேற்சொன்ன நியாயங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டன. அனுபவிப்பதற்காகத்தான் பண்டிகைகள் என்கிற நுகர்வு பண்பாட்டை திணித்து வருகின்றனர். "நாங்க எஞ்சாய் பண்ண வந்திருக்கோம்" என விழாக்களின் போது மக்கள் அளிக்கும் பேட்டிகள் இதை உறுதி செய்கின்றன. 

நியாயங்கள் பல சொல்லப்பட்டாலும் ஒரு சில காரணங்களுக்காக சில பண்டிகைகைளை நாமே கொண்டாடுவதில்லை. எமது மிக முக்கியமான மூதாதையர் ஒருவர் பொங்கல் அன்று இறந்து விட்டாராம். ஆகையினால் பெரும் பொங்கல் என்று சொல்லக்கூடிய மிக முக்கியமான பொங்கல் விழாவையே எனக்குத் தெரிந்து கடந்த ஐம்பது ஆண்டுகளாக எமது உறவினர்கள் யாரும் கொண்டாடுவதில்லை.

ஒரு சில பண்டிகைகளை-விழாக்களை சிலர் கொண்டாடுவதில்லை என்றாலும் திருமண விழா மட்டும் அவரவர் சக்திக்கேற்ப கண்டிப்பாக நடத்தப் படுவதுண்டு. பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கிற திருமணங்களாக இருந்தாலும் சரி அல்லது பெற்றோர்கள் எதிர்த்த போதும் அதையும் மீறி காதல் மணம் புரிந்தோருக்கு அதை முறைப்படுத்துவதற்கு அதன் பிறகு நடக்கும் திருமண வரவேற்பு விழாவாக இருந்தாலும் சரி இவ்விழாக்கள்தான் உறவுகளை ஒன்றிணைக்கவும் நட்பை பலப்படுத்தவும் உதவுகின்றன.

முன்பெல்லாம் கைநிறைய ஊதியத்துடன் கூடிய அரசு வேலை கிடைத்தால்தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்குச் செல்வார்கள். இப்படி 'பிழைக்கச் செல்வோர்' ஒரு சிலர்தான்.  அந்த ஒருசிலர்கூட திருமண விழா உள்ளிட்ட எந்த விழாவாக இருந்தாலும் தொலை தூரத்தில் இருந்தாலும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்வார்கள். அதற்காக ஆகும் செலவை அவர்கள் ஒரு பெரிய சுமையாகக் கருதவில்லை. அவர்களும்கூட பணி ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கே வந்து நிரந்தரமாய் தங்கிவிடுவார்கள். மற்றபடி ஆகப் பெரும்பாலானோர் சொந்த பங்தங்களோடும் நண்பர்களோடும் வாழுகின்ற சூழல் அன்று நிலவியது.   

உறவுகளைத் துறத்தும் உலக மயம்

ஆனால் இன்றோ நிலமை தலைகீழாக மாறிவிட்டது. உலக மயம் நடைமுறைக்கு வந்த பிறகு விவசாயமும் கிராமப்புற சிறுதொழில்களும் நலிவடைந்தன. வேளாண்மைக்குத் தேவையான நீர் ஆதாரம் குறைந்து போனதாலும், விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காமையாலும் பலர் வேளாண்மையைக் கைவிட்டனர். வேறு வழி இன்றி பிழைப்புக்காக பலர் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். சொல்லிக் கொள்ளும் படியான வருவாய் இல்லை என்றாலும் எப்படியோ வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையோடு நகரங்களிலேயே நிரந்தமாகத் தங்கத் தொடங்கி விட்டனர்.

வயித்துக்கும் வசிப்பிடத்திற்குமே எட்டாத போது நல்லது கெட்டதுகளுக்கு கிராமங்களை எட்டிப் பார்ப்பதும் குறைந்து போனது. உறவுகளும் நட்பும் குறைந்து போனாலும் இதுவரை உறவு அறுந்து போகாமல்தான் இருந்து வருகிறது. கடன ஒடன வாங்கியாவது உறவையும் நட்பையும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர் வண்டிப் பயணம்!

இந்தச் சூழலில் தை பிறந்தது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். ஆனால் இந்தத் தையில் பலருக்கு வழியே அடைபட்டுவிட்டது. ஒரு சிலருக்கு வழி இருந்தாலும் பாதை கல்லும் முள்ளுமாக மாறி விட்டது. 

சுமார் 530 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ஒரு பெரிய தொழிற்சாலையில் பயிற்சி எடுக்க வந்த பயிற்சி மாணவன் (apprentice) இந்தப் பொங்கலுக்கு தனது சொந்த ஊருக்குச் சென்றுவந்தான். தொழிற்சாலை உணவகத்தில் (canteen) வழங்கப்படும் பூரியைக்கூட ஏற்றுக் கொள்ள முடியாத பலகீனமான உடல்வாகு உள்ளவன். 

வசதி குறைவான குடும்பம் என்பதால்தான் பொறியியல் பட்டயப் படிப்பு (diploma) படித்துவிட்டு மாதம் மூவாயிரம் ஊக்கத் தொகை கிடைத்தாலும் பரவாயில்லை என்று தொலைதூரமாக இருந்தாலும் பயிற்சி பின்னாளில் பயனளிக்கும் என நம்பி வந்துள்ளான். ஊரைவிட்டு வந்து மூன்று மாதம் ஆகிவிட்டது. பொங்கலுக்கு கண்டிப்பாக போக வேண்டும் என முடிவெடுத்து பயணமானான். நேரடிப் பேருந்து வசதி இருந்தாலும் தொடர் வண்டியில் செல்ல முடிவெடுத்து உட்கார இடம் கிடைக்க வில்லை என்றாலும் இடிபடாமல் நிற்க முடிந்ததே என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நான்கு மணி பயணத்திற்குப் பிறகு ஈரோடு சென்றடைந்தான்.

விருது நகர் செல்லும் தொடர் வண்டியிலாவது உட்கார இடம் கிடைக்குமா என்கிற கவலை,தொலைந்து போன தூக்கத்தின் வேதனையை மறக்கடித்துவிட்டது. தொடர் வண்டியும் வந்தது. ஏறவே முடியாத அளவுக்கு கூட்டம் ஏற்கனவே நிரம்பி வழிந்ததால் உட்கார்ந்து செல்லலாம் என்கிற கனவும் தகர்ந்து போனது. அலைமோதிய கூட்டத்தைக் கண்டு ரயில்வே நிருவாகம் சரக்குப் பெட்டியைத் திறந்துவிட மொத்தக் கூட்டமும் திபு திபு வென அப்பெட்டிக்குள் நுழைந்தது. இவனோ பலகீனமானவன். எப்படியோ தட்டுத்தடுமாறி பெட்டியில் ஏறிவிட்டான். மூட்டைகளுக்குப் பதிலாக மனிதர்கள் அடைக்கப்பட்ட பெட்டியை இழுத்துக் கொண்டு வண்டியும் நகர்ந்தது. மூண்று மணி நேரம் மூச்சுவிட முடியவில்லை என்றாலும் எப்படியோ தம் கட்டிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்தான். 

மதுரையிலாவது இடம் கிடைக்குமா என ஏங்கியவனுக்கு அடுத்த பேரிடி காத்துக் கொண்டிருந்தது. சரக்குகளை ஏற்ற வேண்டும் என சரக்குப் பெட்டியிலிருந்த அனைவரையும் கீழே இறக்கிவிட்டார்கள். இங்கே சரக்குக்கு இருந்த மதிப்புகூட மனிதர்களுக்கு தரப்படவில்லை. மற்ற பெட்டிகளிலும் கூட்டம் அலைமோதியது. என்ன செய்ய? ஊர்ப் போய்ச் சேர வேண்டுமே! பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்ற புத்துணர்வு இவனை உந்தித்தள்ள, எப்படியோ முண்டியடித்து படியில் தொத்திக் கொண்டான். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படியின் பிடியிலிருந்து சொந்த ஊரான விருதுநகரில் விடுபட்டான்.

இந்த அனுபவத்தை அவன் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது பொங்கலைக் கொண்டாடச் சென்றானா இல்லை வேதனையை சுமக்கச் சென்றானா என்பதை அவனது முகமே எனக்கு உணர்த்திவிட்டது.

முன்பதிவு செய்துவிட்டு பேசாமல் பேருந்தில் சென்றிருந்தால் இத்தகைய வேதனைகள் வந்திருக்காதே என நான் கேட்ட போது, "சார் பஸ்சில் சென்றால் போக வர ரூ.800. அதுவே ரயிலில் சென்று வர ரூ.320 தான். ஆனால் ரயிலில் இவ்வளவு கூட்டம் இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை" என்றான். 480 ரூபாய்தான் இவனது பயணத்தை கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான பயணமாக மாற்றி விட்டது. இவனைப் போலதானே மற்றவர்களும் இதை ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

சொகுசுப் பேருந்துப் பயணம்!

மலரத் துடிக்கும் மொட்டுகள் கூட பஞ்சாங்கப் பரதேசிகளால் மார்கழியில் உறைந்து, பிறகு தையில்தானே மலர்கின்றன. தை பிறந்து விட்டதால் பல மொட்டுகள் ஒரே நேரத்தில் மலர்வதால் மணவிழாக்களோ எக்கச் சக்கம். இதனால் பேருந்துகளிலும் தொடர் வண்டிகளிலும் கூட்ட நெரிசல் குறையவில்லை. அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக முன்பெல்லாம் தொடர்வண்டிப் பயணத்தை தேர்வு செய்வார்கள். சமீப காலமாக தொடர் வண்டிகளில் கூட்டம் நிரம்பி வழிவதால்,தொடர் வண்டிப் பயணம் அலுப்பாய்தான் இருக்கிறது. அலுப்பாய் இருந்தாலும் இன்று பலர் தொடர் வண்டியில்தான் பயணிக்கிறார்கள்.

நண்பரின் மகனுக்குத் திருமணம். எனக்கும் மணவிழா அழைப்பு வந்தது. குடும்பத்தோடு வர வேண்டும் என கண்டிப்பாய் கூறிவட்டார். திருமணமோ திருச்சியில். ஏழு மணி நேரம் பயணிக்க வேண்டும். உடல் நலம் குன்றி இருந்தாலும் திருமணத்தை புறக்கணிக்க முடியாது. தொடர் வண்டி வசதி இருந்தால் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியில் சற்று கூடுதல் கட்டணமாக இருந்தாலும்-பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான்-சென்று வரலாம். அதற்கும் வழி இல்லை. எனவே சொகுசுப் பேருந்தில் சென்று வர தீர்மானித்து முன்பதிவு செய்துவிட்டேன். 

முதல் நாள் செல்லும் போது இரவுப் பயணம். அடுத்த நாள் திரும்பி வரும் போதும் இரவுப் பயணம்தான். 500 ரூபாய் கட்டணத்தில் சொகுசுப் பேருந்தில்தான் பயணம். இருக்கையில் முப்பது டிகிரியில் சாய்ந்து கொண்டால் சொகுசாய் தூங்கலாம் என கண்களை மூடினால் கொக்கிகள் - window lock- இல்லாத சன்னல்களின் கண்ணாடிகள் பேருந்து ஓடும் வேகத்தின் அதிர்வுகளால் விலகி உஸ் என்ற பனிக்காற்று உள்ளே நுழைந்து "உறங்காதே" என எனக்கு பயணம் முடியும் வரை வேலை கொடுத்து வந்தது. மற்றவர்களும் இதையேதான் செய்து வந்தனர். 

உறக்கம் தொலைந்ததால் ஒட்டிக் கொண்ட அலுப்பு, மணவிழாவில் பழைய நண்பர்களைக் கண்டபோது எங்கோ ஓடி ஒளிந்து விட்டது. நண்பர்களைப் பிரியும் போது ஓடி ஒளிந்த அலுப்பு மீண்டும் நம்மை ஒட்டிக் கொள்ளும். இது தவிர்க்க முடியாதது. 

மணவிழாவுக்கு அழைத்திருந்த நண்பரைக் கண்டபோது,  "என்ன நீங்க மட்டும் வந்திருக்கீங்க. வீட்ல வரலையா, பிள்ளைங்க வரலயா?" என அவர் வினவும் போது அவரைப் பொருத்தவரையில் நட்பில் ஒரு கீரல் விழுந்து விட்டது என்றுதான் பொருள். என்னைப் பொருத்தவரையில், என் ஒருவனுக்கே பேருந்துக் கட்டணம் 500 ரூபாய் -முன்பு இதுவே 200 ரூபாய்தான்-நான்கு பேர் கொண்ட குடும்பம் என்றால் ரூ.2000. என்றுதான் என் மனம் கணக்குப் போடும். என் மனம் போடும் இந்தக் கணக்கு எதார்த்தமானது உங்களுக்கும்தான்.

ஏதோ சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நம்மால் ஒரு திருமணவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனால் காரணத்தைச் சொல்லி சமாளித்துவிடலாம்.

நட்போ உறவோ இங்கு கணக்கு என்னவோ ஒன்றுதான். அடிக்கடி இப்படி திருமணங்களுக்குச் செல்ல நேர்ந்தால் "இனி முடியுமா?" என்றுதான் எண்ணத் தோன்றும். திருமணங்களுக்குச் செல்வது மெல்ல மெல்ல குறைந்து பிறகு நின்றே போய்விடும். அன்றே உறவும் நட்பும் அறுந்து போகும்.

Monday, 9 January 2012

அண்டை வீட்டுக்காரரின் பொறாமை!

பழனியப்பனுக்கு வயது 54. சென்னை-கொரட்டூரில் உள்ள தனியார் காகித உற்பத்தி ஆலையில் பணிபுரிபவர். அம்பத்தூருக்கு அருகில் உள்ள கருக்கு கிராமத்தில் தனது மனைவி நாகவள்ளியுடன வசித்து வருகிறார். நாகவள்ளிக்கு வயது 50. முப்பது வயதிலேயே விவாகரத்து வாங்கிக் கொண்ட மகள் ராஜேஸ்வரியும் இவர்களோடுதான் தங்கியுள்ளார்.

சென்னைவாசி என்றாலும் பழனியப்பனுக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. சென்னையின் விலைவாசியோ, போக்குவரத்து நெரிசலோ, ஜெயாவின் பேருந்து கட்டண உயர்வோ இவரது வெறுப்புக்குக் காரணமில்லை. நிரந்தரமான வருவாய் இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இல்லை. நிம்மதியைத் தேடி இவர் அடிக்கடி கோவில் கோவிலாக வெளியூருக்கு யாத்திர சென்றுவிடுவார்.

பக்தி முத்தியதாலோ அல்லது ஆன்மீக நாட்டத்தாலோ இவர் யாத்திரை செல்வதில்லை. பக்கத்து வீட்டுக்கார்களுடன்  தனது மனைவி அடிக்கடி சண்டை போடுவதை சகிக்க முடியாமல்தான் பழனியப்பன் யாத்திரை சென்றுவிடுகிறார். 

கடந்த வாரம் யாத்திரை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தாரோ இல்லையோ தனது சண்டைக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என வலியுத்துகிறார் நாகவள்ளி. அதற்கு பழனியப்பன் மறுக்கிறார். அது மட்டுமல்ல, அண்டை வீட்டுக்காரர் தனது மனைவி மீது புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது பழனியப்பனும் உடன் சென்றதாகத் தகவல். அதனால் ஆத்திரம் அடைந்த நாகவள்ளி கணவனைத் திட்டித் தீர்க்கிறார். 

பழனியப்பனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை; ஆத்திரமடைகிறார். வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவியின் மண்டையைப் பிளக்கிறார். பலத்த அடிபட்ட நாகவள்ளி சற்று நேரத்தில் மாண்டு போகிறார். பிறகு தனது மகள் ராஜேஸ்வரியையும் பழனியப்பன் கொலை செய்கிறார். 

இது கதையல்ல. கடந்த வியாழன் அன்று சென்னையில் நடந்த உண்மைச் சம்பவம்.

இங்கே கொலை செய்கிற அளவுக்குச் செல்வது அசாதாரணமானதுதான். ஆனால் அக்கம் பக்கத்து வீட்டாருடன் சண்டை என்பது இச்சமூகத்தில் மிகச் சாதாரணமானது.

இத்தகைய சண்டை-சச்சரவுகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது பொறாமை. 

"Neighbour's envyOwner's Pride" இது ஒனிடா (ONIDA) நிறுவனத்தின் பிரபலமான விளம்பரம். அதாவது ஒனிடா நிறுவனத்தின்  தொலைக்காட்சி உள்ளிட்ட எந்தப் பொருளை ஒருவர் வைத்திருந்தாலும் அது "அண்டை வீட்டுக்காரரின் பொறாமை; (பொருளின்) சொந்தக்காரரின் பெருமை" என பறை சாற்றிக் கொள்ளலாம் என்பது அதன் பொருள்.

இந்தப் பொறாமை அண்டை வீட்டாரோடு நிற்பதில்லை.

Neighbour என்ற ஆங்கிலச் சொல்லிற்கு -
அயலவர்; 
அருகிலுள்ளவர்; 
அக்கம் பக்கத்திலுள்ளவர்;
அண்டை வீட்டார்; 
அடுத்திருப்பவர்; 
அடுத்த தெருவினர்;
பக்க ஊரினர்; 
அண்டை நாட்டினர்
என சென்னை பல்கலைக்கழக "ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்" பொருள் கூறுகிறது.
இதில் அண்டை மாநிலத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இதே Neighbour க்கு அதே சொற்களஞ்சியத்தில்
நட்புணர்ச்சியுடையவர்:
பாசமுடையவர்: 
பாசத்துக்குரியவர்
என்றும் பொருள் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் Neighbour யாராக இருந்தாலும் நட்போடும் பாசத்தோடும் இருக்க வேண்டும் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்க முடியும்.

பாசத்தோடும் நட்போடும் பழக வேண்டியவர்களை ஒனிடா வந்து பொறாமை கொள்ள வைத்துவிட்டதோ!  ஆனால் ஒனிடா பொருள் இல்லாத போதும் பொறாமை குடி கொண்டுள்ளதே,  அண்டை வீட்டாருடன் சண்டை சச்சரவுகள் நீடிக்கின்றனவே! என்ன காரணம்?


-----தொடரும்

Sunday, 1 January 2012

ராசி பலன்களும் வார்த்தை ஜாலங்களும்!

சனிப்பெயர்ச்சியையொட்டி ராசி பலன் குறித்து தொடர்ந்து மூன்று பதிவுகளை எழுதிவிட்டேன். இனியும் ராசி பலனைப் பற்றி எழுதவேண்டுமா என சலிப்புற்ற போது இந்தப் புத்தாண்டு வந்து என்னை மீண்டும் ராசி பலனைப் பற்றி எழுத வைத்தவிட்டது. 

இன்று (01.01.2012) விஜய் தொலைக்காட்சியில் "12 ராசிக்காரர்களுக்கு 2012 எப்படி இருக்கும்?" என்பது பற்றி கோபிநாத்தின் "நீயா? நானா?" நிகழ்ச்சியில் காரசாரமான விவாதம் வேறு நடந்தது. வேறு வழியில்லை, எழுதித்தான் ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. 

மக்கள் சந்திக்கும் இன்றைய பிரச்சனைகளின் சாரத்தை வார்த்தைகளாவும், வரிகளாகவும் வடித்து ராசிகளுக்கிடையில் இடம் மாற்றிப் போட்டு இதுதான் உங்களின் ராசிபலன் என்று எழுதுகிறார்கள். உண்மையில் இவர்கள் வடிக்கும் வார்த்தைகளும்,வரிகளும் மக்கள் அனைவரும் அன்றாடம் சந்திக்கும் சம்பவங்களும் பிரச்சனைகளும்தான். எதைப் போட்டாலும் அது நமக்குப் பொருந்தும். 

இவ்வாறு இவர்கள் போடும் ராசி பலனில் உள்ள முரண்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே ராசி பலன் ஒரு மோசடி என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
புத்தாண்டான இன்று 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலன் பற்றி தினமணி நாளேட்டிலும் ஒரு நாட்காட்டியிலும் வெளியாகியுள்ள ராசி பலன்களை மட்டும் இங்கே ஒப்பிட்டுள்ளேன். நீங்களே பரிசீலனை செய்து பாருங்கள். ராசி பலன் ஒரு மோசடி என்பது தெளிவாகப் புரியும்.

01.01.2012 அன்றைய ராசி பலன்.

ராசி
தினமணி
நாட்காட்டி
மேஷம்
ஆர்வம்
பொறுமை
ரிஷபம்
தோல்வி
ஆக்கம்
மிதுனம்
வரவு
மேன்மை
கடகம்
கவலை
சந்தோஷம்
சிம்மம்
வெற்றி
சுகம்
கன்னி
முயற்சி
நம்பிக்கை
துலாம்
போட்டி
ஜெயம்
விருச்சிகம்
நட்பு
லாபம்
தனுசு
நன்மை
அமைதி
மகரம்
சுகம்
இன்பம்
கும்பம்
கவனம்
ஆதாயம்
மீனம்
மேன்மை
பாசம்

மேற்கண்ட ராசி பலன்களில் உள்ள முரண்பாடுகளை விளக்க வேண்டியதில்லை.கடக ராசிக்காரனுக்கு தினமணியில் கவலையும் நாட்காட்டியில் சந்தோஷமும் பலனாக சொல்லப்பட்டிருக்கிறது. இது அபத்தம் இல்லையா? ராசிபலன் என்பது 'அறிவியல்பூர்வமானது', 'துல்லியமானது'  என வாதாடும் ஜோசியக்காரர்களின் சட்டையைப் பிடித்துக் கேளுங்கள் - ஏன் இத்தகைய முரண்பாடுகள் என்று?

வார்த்தைகளை இடம் மாற்றிப் போட்டு அதையே அடுத்த நாளுக்கான பலனாக எழுதுகிறார்கள். சிலர் இதையே விரிவு படுத்தி வாக்கியங்களாக்கி வார ராசி பலன், மாத ராசி பலன், ஆண்டு ராசி பலன் என எழுதுகிறார்கள்.   

ராசி பலனை மக்கள் ரொம்பவேதான் நம்புகிறார்கள். ராசி பலனை நம்புவது நீடிக்கும் வரை மக்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான உண்மையான காரண காரியங்களைக் கண்டறிய முடியாது. காரண காரியங்கள் தெரியாத போது அதற்கான தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை. எனவே ராசிபலன் பார்ப்பதும் நிற்கப் போவதில்லை.

Tuesday, 27 December 2011

சனிப் பெயர்ச்சி! ஊரானின் கணிப்பு பலித்தது!

21.12.2011 அன்று சனிபகவான் துலா ராசி வீட்டிற்கு குடி போயிருக்கிறார். அவர் பால் காய்ச்சிய சம்பவம் ஜோதிட நம்பிக்கைக்காரர்களுக்கு மிக முக்கியமான நாள். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ராசிக்காரருக்கும் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றியும், பாதகமானவற்றிற்கான பரிகாரங்கள் பற்றியும் பிரபல ஜோதிடர்கள் சொல்லும் சனிப்பெயர்ச்சி பலன்கள் மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில், சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்!, சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி! என்ற தலைப்புகளில் ஒரு தொடர் கட்டுரையை இரண்டு நாட்கள் வெளியிட்டிருந்தோம். நமது பார்வையில் சனிப் பெயர்ச்சி பலன்களை கணித்திருந்தோம்.


கட்டுரையின் இறுதியில்


"இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்"

என முடித்திருந்தோம்.

”ஊரான் அவர்கள் கணித்த ராசி பலன்கள் அருமையிலும் அருமை. இந்தக்கணிப்பு படிதான் நடக்கும். நடந்து கொண்டும் இருக்கும். வாழ்த்துக்கள்” என வலிபோக்கன் அவர்களும் வழி மொழிந்திருந்தார்.

ஒரு வாரம் கூட ஆகவில்லை. நமது கணிப்பு பலித்துவிட்டது.

முல்லைப் பெரியாறு விவகாரம் காரணமாக கேரள மாநிலத்தில் பதற்றம் நிலவுவதால் "தமிழக கோயில்களிலேயே ஐயப்ப பக்தர்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்' (http://www.dinamani.com/edition/Story.aspx?) என அகில உலக ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப  மிஷன் நிறுவனர் ராஜமங்கலம் கூறியுள்ளார்


"சபரிமலை செல்ல முடியாத நிலை தமிழக கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி!"  (http://wap.dinakaran.com/District_detail_2011.asp?Nid=25288

"சபரி மலை செல்ல முடியாத நிலை உள்ளதால் தமிழகத்தில் உள்ள கோயில்களிலேயே பக்தர்கள் வழிபடலாம் என்று திருவாவடுதுறை ஆதீனம் 23 வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்"

"கேரளாவில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்யலாம். அதனை கடவுள் ஐய்யப்பனும் ஏற்றுக்கொள்வார்என மேலும் விளக்கமளித்துள்ளார்.

'மகான்'களும், 'பராமாச்சாரி'யர்களும் சொல்வதற்கு முன்பே நாம்தான் முதன் முதலில் சரியாக கணித்திருக்கிறோம். எனவே எல்லா ராசிக்காரர்களும் எமது கணிப்பை நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை! இனி எமது மற்ற கணிப்புகளும் பலிக்கும் என்பதால் அந்ததந்த ராசிக்கார்கள் தங்களுக்குரிய பரிகாரங்களைச் செய்ய தாயாராகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Wednesday, 21 December 2011

சனி பகவான் பால் காய்ச்சப் போகிறார்! ........நேற்றைய தொடர்ச்சி!

சனிபகவான் இன்று பால் காய்ச்சிவிட்டு புது வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டார்.  மன்னார்குடி சசிப் பெயர்ச்சியும், இன்றைய சனி பெயர்ச்சியும்  அடுத்தடுத்து நடந்தேறியுள்ளதால் தமிழகத்தில் வரும் நாட்களில் ராசிபலன்களில் பெறும் மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பலன்களை நேற்று பார்த்தோம். மற்ற பிற ராசிக்காரர்களுக்கான பலன்களையும் பரிகாரங்களையும் இன்று பார்ப்போம்.

சிம்மம் 

அரசியல் மேடைகளில் சிங்கமென கர்ஜிக்கும் சீமா ராசிக்காரர்களே! அம்மாவின் அறிவிப்புகளையே ஆணைகளாக பாவித்து இதுவரை கர்ஜித்ததைப் போல இனியும் தொடர்ந்து கர்ஜிக்கலாம். ஆனால் மேஷ ராசிக்காரர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் உங்கள் கர்ஜனையை சற்றே அமுக்கி வாசிக்க வேண்டும். 'ஈழம் - கீழம்' என்று எல்லை மீறினால் கம்பி எண்ண வேண்டி வரும். அப்படி ஒரு நிலை ஏற்படுமேயானால் பரிகாரமாக 'தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன்னடி சரணம்!!' என தினமும் போயஸை நோக்கி உரக்க உச்சாடனம் செய்து வந்தால் சிறைக் கம்பிகள் விலகும்.   

கன்னி

செவ்வாய் தோஷ கன்னிகளும், வரதட்சணைக் கொடுக்க வழியின்றி முப்பதுகளிலும் மூன்று முடிச்சுக்காக ஏங்கும் கன்னிகளும் இனி கவலைப்பட வேண்டியதில்லை.திருமண ஏக்கத்தில் இனியும் கவலைப்படக்கூடாது என்பதால் இனி வரும் காலங்களில் அரசே மாப்பிள்ளைகள் இலவசமாக வழங்கவிருக்கிறது. இதுவரை கன்னிகளாக இருந்த நீங்கள் இனி தம்பதி சமேதராய் உலவலாம்.அப்படியும் ஒருசிலருக்கு மாப்பிள்ளைகள் கிடைக்கவில்லை என்றால் தட்சணையோடு புரோகிதரை நாடினால் பரிகாரம் கிடைக்கும்.

துலாம்

மேலே போவோமா இல்லை கீழு விழுவோமா என குழப்பத்தில் இருக்கும் சில்லரை வணிக துலாம் ராசிக்காரர்களே! சில்லரை வணிகத்தில் லாபமா-நட்டமா என குழம்பிப் போயிருந்த உங்களுக்கு இனி அந்நிய முதலீடு வரவிருப்பதால் 'சேல்ஸ்மேன்' வேலை நிச்சயம். சரக்கு 'குடோனில்' படுத்துறங்கவும் பட்டைச் சோறும் உத்தரவாதம் என்பதால் உங்கள் எதிர்காலம் ஓகோவென்றிருக்கும். பட்டைச் சோறு கிடைக்கவில்லை என்றாலும் இருபது கிலோ அரிசி இலவசமாய் கிடைப்பதால் நீங்கள் வருத்தப்பட வேண்யிருக்காது.

விருச்சிகம்

காவல் பணியாற்றும் விருச்சிக ராசிக்காரர்களே! இனி உங்களுக்கு பொற்காலம்தான். உயர் ரக மதுவிற்பனையும் தொடங்கப்பட்டு வருவதால் குடிகாரர்கள் எண்ணிக்கை அதிகமாகும். குடித்தவன் வீதிக்கு வந்துதானே ஆகவேண்டும். அப்படி வரும்போது அவன் கண்டிப்பாக அவனை அறியாமலேயே 'ஓவர் ஸ்பீடில்' வருவான். இந்த வாய்ப்பு உங்களின் வருவாயை அதிகரிக்க உதவும். பிள்ளையின் படிப்பையும் பெண்ணின் திருமணத்தையும் முடிக்க இது போதுமானதாகவே இருக்கும். அப்படியும் போதவில்லை என்றால் பரிகாரமாக நீங்கள் கலால் பிரிவுக்கு மாற்றல் வேண்டி மனு செய்யலாம். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் மேலும் விருத்தியடைவார்கள்

தனுசு

ஆலைகளில் உழலும் தனுசு ராசிக்காரர்களே! உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்படுத்தி உள்ள ஆலை மூடல் - ஆட்குறைப்பு - ஊதிய வெட்டு பற்றி இனி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. பிள்ளைகளை படிக்க வைக்கவும் பெண்களை கட்டிக் கொடுக்கவும் காசில்லை என்ற வருத்தம் இனி தேவையில்லை. மிதுன ராசிக்காரர்களான உங்கள் பிள்ளைகள் ஆடு மேய்த்தே முன்னேறுவார்கள் என்பதால் உங்களுக்கு படிப்புச் செலவு மிச்சம். கன்னி ராசிக்காரர்களான உங்கள் பெண்பிள்ளைகளுக்கு அரசே இலவசமாக பாப்பிள்ளைகள் கொடுத்துவிடுவதால் இதுவரை நீங்கள் அனுபவித்துவந்த வரன் தேடும் அவஸ்தை இனி அறவே இருக்காது.

மகரம்

வேளாண்மையில் ஈடுபடும் தனுசு ராசிக்காரர்களே! முல்லைப் பெரியாரை இடித்தாலும், பாலாற்றை முடக்கினாலும், மேட்டுர் வற்றினாலும் நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதில்லை. ஆற்று நீரை நம்பி இதுவரை வேதனைகளை அனுபவித்து வந்த நீங்கள் இனி அதிலிருந்து விடுபடுவீர்கள். தமிழகமே மேய்ச்சல் நிலமாக மாறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஆடு - மாடுகளை வளர்த்து பயன் பெறுவீர்கள். கறிக்காக மாடுகள் கேரளா செல்வதும் தடுக்கப்படும் என்பதால் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு பால் உற்பத்தி அதிகரிக்கும். மேஷ ராசிக்காரர்கள் கெட்டித் தயிரையும் வெண்ணையையும் எடுத்துக் கொண்டாலும் உங்களுக்கு மோர் நிச்சயம். மோர் அதிகமாக புளித்துப் போனால் பரிகாரமாக தேத்தாங் கொட்டையையை அதில் போட்டுவைத்தால் தெளிந்த மோர் கிடைக்க வழி ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி தாய்மார்களே! தமிழகத்தில் தற்போது உயிரோடு இருக்கும் யாரும் மரணத்தைத் தழுவதற்கும், புதிதாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கும் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால்  நீங்கள் பத்துமாதம் சுமந்து குழந்தை பெறும் வேதனையிலிருந்து இனி விடுபடுவீர்கள். 

மீனம்

மீன ராசிக்காரர்களே! மீன்களைத் தேடி கடலுக்குச் செல்லும் நீங்கள் இதுவரை சிங்களக் காடைகளின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி அடிபட்டு துவண்டு போனீர்கள். ஆனால் இனி இத்தகைய தாக்குதல்களுக்கு நீங்கள் ஆட்பட வேண்டி வராது. சிங்கி உள்ளிட்ட உயர்ரக மீன்கள் உட்பட அனைத்து மீன்களும் இனி கரையை நோக்கி வருவதற்கு வழி ஏற்படும். கரையில் அமர்ந்து கொண்டு தூண்டில் போட்டே இனி மீன்பிடித்துக் கொள்ளலாம். 

மீன்களின் துர்நாற்றம் அக்கிரகாரத்தின் மூக்குகளை துளைப்பதால் மீன்களை தமிழகத்தின் உள்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதனால் மொத்த மீன்களையும் நீங்களே சாப்பிடுவதற்கான வழி ஏற்பட்டுள்ளதால் உங்கள் தேக பலம் அதிகரிக்கும். கடற்கரைக்கே வந்து சிங்களவன் அடித்தாலும் நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. உங்கள் தேக பலத்தால் வேகமாக ஓடிவந்து தமிழகத்தின் உள்பகுதிக்குள் தஞ்சம் புகலாம்.

இறுதியாக, எல்லா ராசிகளிலும் இருக்கும் ஐயப்ப பக்தகோடிகளுக்கு! முல்லைப் பெரியரால் ஐயப்பனுக்கு இனி மாலை போட முடியாதோ எனக் கவலைப்படத் தேவையில்லை. இங்குள்ள முருகனே அங்கு ஐயப்பனாய் எழுந்தருளியிருப்பதால் முருகனுக்கு மாலை போட்டு, அறுபடை வீடுகளில் ஏதாவதொரு வீட்டில் இருமுடியை இறக்கி வைத்தாலே போதும் என புராண சாஸ்திரம் வழிகாட்டுவதால் இனி சொந்த மண்ணிலேயே இருமுடி இறக்கிக் கொள்ளலாம். இருமுடி செலவையும் அரசே ஏற்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதால் ஐயப்ப பக்தகோடிகள் "சாமியேய்! சரணம் முருகப்பா!!" என இனி முழங்கலாம்.