Friday, 11 October 2013

சச்சினின் ஓய்வும் - விளையாட்டும்!

சச்சினின் ஓய்வு குறித்தும், அவரது சாதனைகள் குறித்தும் எழுப்பப்படும் பிம்பங்கள் அருவெறுப்பின் உச்சகட்டம் என்றால் அது மிகையல்ல. திரைப்பட 'சாதனையளர்களின்' சாதனைகளுக்கும், சச்சின் போன்ற விளையாட்டு வீரர்களின் 'சாதனைகளுக்கும்' பாரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சாராம்சத்தில் இரண்டுமே இரசனை அம்சத்தைத்தாண்டி வேறு பயன் எதையும் மக்களிடையே ஏற்படுத்திவிடவில்லை. 

விளையாட்டு குறித்த ஒரு மீள்பதிவு!

Tuesday, 20 August 2013

மூத்திரக்காடு!

அது ஓங்கி வளர்ந்த பெருங்காடு. அந்தக் காட்டிற்குள் நுழையும் போது நம்மை அறியாமலேயே நமது கண்கள் விரிந்து விடும். வகை வகையான மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் என பரந்து விரிந்த காட்டைக் காண நாலா பக்கமும் நம் கண்கள் சுழலும். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும். ஆனால் இந்தக் காட்டை பார்க்கவே நமது கண்கள் கூசும். பாதி மூடிக் கொண்டு ஓரக்கண்ணால், ஒற்றைப் பார்வையுடன்தான் இந்தக் காட்டில் நுழைய முடியும். அக்கம் பக்கம் எட்டிப் பார்ப்பது அபாயகரமானது.
அந்தக் காட்டில் சிறகடிக்கும் பறவைகளும், வண்ண வண்ணப் பூச்சிகளும் எழுப்பும் ரீங்கார ஓசைகள் நம் காது மடல்களை இதமாய் வருடிச் செல்லும். பூத்துக் குலுங்கும் மலர்களின் வாசத்தை உள்ளிழுக்க நாசித் துவாரம் போதாது என்பதால் நம்மை அறியாமலேயே வாய் பிளந்து நிற்போம். உடன் வந்தவர் குரல் கொடுக்கும் வரை எத்தனை நேரம் வாய் பிளந்து நின்றோம் என்பதே தெரியாது. ஆனால் இந்தக் காட்டில் நுழையும் போதே கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் கூட்டணி அமைத்துக் கொண்டு மூக்குத் துளையை அடைக்க முற்படும் போதே பற்கள் இறுகி தொண்டைக் குழியும் ஒட்டிக் கொள்ளும். இந்தக் காட்டின் வாசம் மூக்கைத் துளைத்து குடலைப் புரட்டி வாந்தி எடுப்பதற்குள் காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். இல்லை எனில் எந்த உறவுகளைப் பார்க்கச் சென்றோமோ அந்த உறவுகள் நம்மைப் பார்க்க மருத்துவ மனை நோக்கி வர நேரிடும்.
அந்தக் காட்டில் முட்களும், கற்களும் நமது கால்களை பதம் பார்த்து விடலாம் என்பதால்தான் காலணி தேவைப்படுகிறது. இல்லை எனில் வெறுங்காலால் நடப்பதே சுகமானது. அதுவும் ஈர மண்ணில் நடக்கும் போது பாலில் ஊறிய பிஸ்கட்டின் மென்மையை உணர முடியும். ஆனால் இந்தக் காட்டில் காலணி இல்லாமல் நடக்க முயற்சிப்பது தற்கொலை முயற்சியே. காலணி இருந்தால் கூட சில நேரங்களில் ஆளையே கவிழ்த்து விடும். திருடர்கள் ஜாக்கிரதை என்பதைப் போல காலணிகள் ஜாக்கிரதை என எழுதி வைப்பது நலம் பயக்கலாம்.
அந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் மண்ணைத் தட்டி விட்டு பயணத்தைத் தொடரலாம். ஆனால் இந்தக் காட்டில் வழுக்கி விழுந்தால் பயணம் அதோ கதிதான்.
அந்தக் காட்டில் புலி, சிங்கம், கரடி, யானை, குரங்கு, முயல், பன்றி, மான், பாம்பு என வித விதமான மிருகங்கள் - விலங்குகள் உண்டு. அவற்றில் சில ஆபத்தானவை என்றாலும் ஆயுதம் கொண்டு நம்மை தற்காத்துக் கொள்ளலாம். இந்தக் காட்டிலும் மிருகங்கள் உண்டு. மஞ்சளாய், வெள்ளையாய் நெளியும் கொழுத்த புழுக்களை பார்த்த மாத்திரத்திலேயே நம் நெற்றிப் பொட்டு தானே சுறுங்கும். நம் உதட்டின் ஈரத்தை ஈர்ப்பதற்கு படை எடுக்க அணி வகுத்து நிற்கும் பருத்த ஈக்களும், தடித்த கொசுக்களும் நம்மை அச்சுறுத்தும். இந்தக் காட்டு மிருகங்கள் வடிவத்தில் சிறிதென்றாலும் சற்று நேரத்தில் நம்மை கிலி கொள்ள வைத்து விடும்.
அந்தக் காட்டில் மிருகங்கள் பெய்யும் மூத்திரத்தால் காடு செழிக்கும். மரங்கள் வான் முட்ட ஓங்கி உயர்ந்து வளரும். ஆனால் இந்தக் காட்டில் மனித(மிருகங்கள்)ர்கள் பெய்யும் மூத்திரத்தால் தாவரங்கள் பட்டுப் போகும். நெடிதுயர்ந்த இலுப்ப மரத்தின் வேர் நூறு அடி ஆழத்தில் ஒளிந்திருந்தாலும் தேடிப் பிடித்து கருவறுக்கும் ஆற்றல் மனித மூத்திரத்திற்கு உண்டு. வீட்டின் கேட்டையும், நாட்டின் எல்லையையும் காக்கும் இரும்புக் கம்பிகளே இத்துப் போகும் போது காங்கிரீட் காடுகள் மட்டும் தப்புமா என்ன? 
அந்தக் காட்டில் வானம் பொழிந்தால் எட்டுத் திக்கும் மண் வாசம் வீசும். இந்தக் காட்டில் மண்ணைத் தொடும் முன் ஒரு வாடையும், மண்ணைத் தொட்டபின் மற்றொரு வாடையும், நனைந்த மண் காய்ந்த பிறகு புதியதொரு வாடையும், குட்டையில் தேங்கி புழுக்கள் நெளியும் போது மற்றொரு வாடையும் என மூத்திரத்திற்குத்தான் எத்தனை எத்தனை வாடைகள். பேஷினோடு இணைக்கப்பட்ட குழாய் இல்லாததால் பாதி மூத்திரம் நம் முழங்காலை நனைத்திருப்பது அப்போது தெரியாது. பேண்ட் காய்ந்த பிறகு வரும் வாடையைத் தேடும் போதுதான் நம் முழங்கால் நனைந்தது நினைவுக்கு வரும். நினைவாற்றல் அற்றவர்களையும் ஆற்றல் உள்ளவர்களாக மாற்றும் வல்லமை இந்த வாடைக்கு உண்டு.
அந்தக் காடுகளுக்குள் நுழையக் கட்டணம் ஏதுமில்லை. பயணச் செலவு மட்டும்தான். ஆனால் இந்தக் காடுகளே கட்டணக் காடுகள்தானே! இந்தக் காடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் ஆடை நனைந்து விடுமோ என்கிற அச்சத்தில் பேருந்திலிருந்து இறங்கி அவசர அவசரமாக அருகில் உள்ள சுவற்றின் ஓரமாய் ஒதுங்கினால் “மிருகங்கள் மட்டுமே இங்கே….- என்கிற வரவேற்பு அர்ச்சனையால் வெளியேர முனைந்த மூத்திரம் கூட வற்றி விடுகிறது. ஆத்திரத்தை அடக்கலாம். ஆனால் மூத்திரத்தை அடக்க முடியுமோ! என்ன செய்ய? இதுதானே இந்தியா!
ஏழை – நடுத்தரவாசிகளே இந்தக் காடுகளில் அடிக்கடி சிக்குபவர்கள். மேட்டுக் குடி மகிழுந்துக்காரர்கள் இந்தக் காட்டில் கால் வைப்பது அரிது என்பதால் இதன் அருமை பெருமைகள் அவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது; புரியாது.
ஆண்களுக்கு கூச்சமில்லை. எங்கு வேண்டுமானாலும் மூத்திரம் போவார்கள். நின்றபடியே போவதால் மூத்திரத் தொற்று (urinary infection) தாக்குதல் நடத்த கால தாமதமாகலாம். ஆனால் பெண்களின் பாடோ பெரும் பாடு. இவர்கள் உட்கார்ந்தே போவதால் மூத்திரத் தொற்றின் அதிரடித் தாக்குதல் உடனே தொடங்கும்.  
அந்தக் காடுகள் முதுமலை, ஜவ்வாது மலை, கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, கவுத்தி மலை, நீலகிரி - ஏலகிரி மலை என தமிழகத்தில் தொடங்கி ஏழுமலை, தண்டகாரண்யா, நியாம்கிரி, விந்திய - சாத்பூரா என படர்ந்து விரிந்து இமயமலையாய் உயர்ந்து நிற்கின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பேருந்து நிறுத்தங்கள் - நிலையங்கள் என கன்யாகுமரி முதல் காசுமீரம் வரை நீண்ட நெடிய அடர்ந்த பெருங்காடுகள் இந்தக் காடுகள். தொடர் வண்டி நிலையங்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என இந்தக் காடுகள் பல்கிப் பெருகவேச் செய்கின்றன.
அந்தக் காடுகளிலிருந்து மனிதர்களை விரட்டுகிறார்கள் மன்மோகனின் ஏஜெண்டுகள். கோடிகளைச் சுருட்ட அவர்களுக்குத் தேவை கனிம வளங்கள். ஆனால் இந்தக் காடுகளுக்கோ மனிதர்களை அழைக்கிறார்கள் ஆளும் கட்சியின் ஏஜெண்டுகள். நமது கோவணத்திலிருந்தே இவர்கள் இலட்சங்களைப் பார்ப்பவர்களாயிற்றே!.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தக் காடுகளில் சிறந்ததைத் தேர்வு செய்ய நடுவர்களையும் தாண்டி சிறப்பு வல்லுனர்களை நாடினாலும் போட்டி மிகக் கடுமையானது என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்வதே சாலச் சிறந்தது. இன்றைய நிலவரப்படி எட்டுத் திக்கும் நாற்றமடித்து பயணிகளை திக்கு முக்காடச் செய்யும் வேலூர் பேருந்து நிலையக் காடுதான் தமிழகத்தின் முன்னணி மூத்திரக் காடாகத் திகழ்வதாக பயணிகள் கருதுகிறார்கள். சுவாசச் காற்றை நுரையீரலுக்குள் அடைத்து வைக்கும் மூச்சுப் பயிற்சி கலையை கற்க வேண்டுமா? ஒரு முறை வேலூர் மூத்திரக்காட்டிற்கு விஜயம் செய்யுங்கள். ஈஷா யோகிகளைத் தேடி நீங்கள் வெள்ளியங்கிரி போக வேண்டிய அவசியமிருக்காது.
நிலத்தடி நீரைக் கொண்டுதான் அவ்வப் பொழுதாவது இந்தக் காடுகளைக் கழுவுகிறார்கள். அந்த நீருக்கும் இனி ‘ரேட்டு’ வைக்கப் போகிறது தேசிய நீர்க் கொள்கை. எலவசனூர் கோட்டையிலேயே இப்போது ஆறு ரூபாய் எனில் இனி கட்டணம் இரட்டிப்பானால் எவனுக்கய்யா மூத்திரம் வெளியே வரும்? தேசிய நீர்க் கொள்கையால் இனி நமது வீடுகளிலும் இந்தக் காடுகள் முளைக்கப் போகின்றன. குடிக்கவே தண்ணீர் இல்லாத போது மூத்திரத்தையா அலச முடியும்?
இந்தக் காட்டில் பெய்யும் மழையில் 95% தண்ணீர் போக மீதி யூரியா, குளோரைடு, சோடியம், பொட்டாசியம் என கனிமங்கள் உண்டு. இக்கனிமங்களை பிரித்தெடுத்தால் தோல் தொழிற்சாலைகள் (tanning), நெசவாலைகள் (textiles), வெடி மருந்து (gun powder) ஆலைகளுக்குத் தேவையான நீரை இந்தக் காடுகளிலிருந்தும் பெற முடியும் என அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். மாணாக்கர்களுக்கு மூத்திர மேலாண்மை (Urine Management) குறித்து வகுப்பெடுக்க கலாம்கள் வருவார்களா? 

தொடர்புடைய பதிவுகள்:

Thursday, 18 July 2013

பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது?

தருமபுரி மாவட்டம்பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியரான  திரு.சுரேஷ் (வயது:30) என்பவர் தாழ்த்தப்பட்டவரான s.சுதா (வயது:23) என்பரை காதல் திருமணம் செய்து கொண்டது பற்றி மனு இன்னும் மடியவில்லை! என்கிற தலைப்பில் ஜீலை 4, 2013 அன்று பதிவு ஒன்றை வெளியிட்டேன். 


இவர்களின் திருமணம் ஏப்ரல் 21, 2010 ல்  பெற்றோர்கள் சம்மதத்துடன்தான் நடந்துள்ளது. அதன் பிறகு குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இக்குடும்பத்திற்குள் புகுந்து குடி கெடுக்கும் வேலையை தொடங்கியுள்ளனர் பசுமை வேடம் போடும் குச்சிகொளுத்தி வன்னிய சாதி வெறியினர். 


படம்: THE HINDU

சுரேஷ் -சுதா இருவரும் மைனர்கள் அல்ல. இருவரும் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது நாடகக் காதலும் அல்ல. மைனர்களின் திருமணமும் அல்ல. "நாடகக் காதல் மற்றும் மைனர்களின் திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்; மற்றபடி நாங்கள் காதலுக்கு எதிரிகள் அல்ல!" என பம்மும் குச்சி கொளுத்திகள் சுரேஷ் - சுதா இருவரின் காதலை ஏற்க மறுப்பதேன்? அவர்களின் குடிமைக் கெடுக்க எக்காளமிடுவது ஏன்?

காரணம் ஒன்றுதான். பறையர் சாதியிலிருந்து எவரும் மருமகளாகவோ - மருமகனாகவோ வந்துவிடக்கூடாது என்கிற தீண்டாமை சாதி வெறியைத் தவிர வேறு நோக்கம் எதுவும் குச்சி கொளுத்திகளுக்கு இல்லை என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒரு முறை தெளிவாக நிரூபித்துள்ளது. 

இது குறித்து பசுமை பக்கத்திற்கு இரண்டு முறை பின்னூட்டச் செய்தி அனுப்பியும் அதை வெளியிடாமல் நீக்கியதன் மூலம் பசுமைவாதியின் வலைப்பூ இருள் பிளாக் ஆனதில் வியப்பேதும் இல்லை. பட்டுப் போன 'மரத்தில்' இனி பசுமைக்கு இடமேது? 

Thursday, 4 July 2013

மனு இன்னும் மடியவில்லை!

தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே உள்ள வேப்பமரத்தூர் கிராமம். கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தற்போது ஓசூரில் வசித்து வரும் இக்கிராமத்தைச் சேர்ந்த G.சுரேஷ் (வயது:30) தனது மனைவி s.சுதாவுடன் (வயது:23) ஊருக்கு வருகிறார். திருவிழாவிற்காக ஏற்கனவே இவரிடமிருந்து வசூல் செய்திருந்த ரூ.1500 ஐ விழா நடத்துவோர் திருப்பிக் கொடுத்து விடுகின்றனர்.

திருவிழாவில் கலந்து கொள்ள ஆசை ஆசையாய் வந்திருந்தவருக்கோ இது அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து இவர் மீள்வதற்குள் இவரையும் இவரது குடும்பத்தையும் ஊரை விட்டு நீக்கி வைப்பதாகவும், இவர்கள் கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களிலிருந்து தண்ணீர் எடுக்கவும்,
 ஊர்க்காரர்கள் இந்தக் குடும்பத்தோடு எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும்  தடை விதித்து கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்ப்பெழுதுகிறது சாதிவெறிக் கும்பல்.

கந்துவட்டிக்காரன், திருட்டுத் தொழில் செய்பவன், சாராயம் காயச்சுபவன், பாலியல் பலாத்காரம் செய்பவன், லஞ்ச ஊழல் பேர்வழிகள் உள்ளிட்ட சமூக விரோதிகள் கொடுக்கும் காசு இவர்களுக்கு கசப்பதில்லை. ஆனால் G.சுரேஷ்  கொடுத்த காசு மட்டும் ஏன் கசக்கிறது?

வன்னியரான G.சுரேஷின் மனைவி தாழ்த்தப்பட்டவராம். அது இப்பொழுதுதான் தெரியவந்ததாம். பணத்தை திருப்பிக் கொடுத்ததற்கு இதுதான் காரணமாம். வன்னிய சாதி வெறியர்கள் மட்டுமல்ல ஊரில் உள்ள பிற உயர்சாதியினர் அனைவரும் சேர்ந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இந்தத் தம்பதியர் வயதுக்கு வந்தவர்கள்தானே? அதாவது சாதிவெறியர்களின் மொழியில் சொல்ல வேண்டுமானால் இவர்கள் 'மைனர்கள்' இல்லைதானே? "காதலுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல; 'செட்டப்' திருமணங்களைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்" என கூப்பாடு போடும் பா.ம.க வினரோ அல்லது அவர்களுக்கு பக்க மேளம் வாசிக்கும் இணைய எழுத்தாளர்களோ இது குறித்து ஏன் வாய் திறக்கவில்லை?

ஆணோ! பெண்ணோ! அது தாழ்த்தப்பட்ட நபராக இருந்தால் அவர்கள் பிற உயர்சாதியினரை காதலித்துத் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என்பதுதான் சாதி வெறியர்களின் சமூக நீதி. நாயக்கன் கொட்டாய் சம்பவமும், வேப்பமரத்தூர் சம்பவமும் இதைத்தான் உணர்த்துகிறது.

இதே சுரேஷ் ஒரு செட்டியார் பெண்ணையோ அல்லது ஒரு முதலியார் பெண்ணையோ திருமணம் செய்திருந்தால் திருவிழாவிற்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்திருக்க மாட்டார்கள். அப்பொழுது மட்டும்  சுரேஷின் காசு இனித்திருக்கும். இப்பொழுது மட்டும் கசப்பதற்குக் காரணம் ஒரு தீண்டத்தகாதவளை திருமணம் செய்து கொண்டதால் சுரேசும் அவனது காசும் தீட்டுப் பட்டுவிட்டது. இதுதான் சாதி வெறியர்களின் மன ஓட்டம்.

இது அப்பட்டமான வன் கொடுமை. இது குறித்து சுதா புகார் கொடுத்ததன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாதன்  மற்றும் கிராம பெருசு (நாட்டாமை) பெரியசாமி உள்ளிட்ட 22 பேர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின்  கீழ் வழக்குப் பதிவு  செய்து  அரூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர்  விசாரணை செய்து வருகிறார்.

தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்கள் நுழையவும் பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் சாதி வெறியர்கள் தடை விதித்து வருவதைத்தான் நாம் இதுவரை பார்த்து வருகிறோம். ஆனால் இன்று ஒரு வன்னியனையே கோவிலுக்குள் நுழையவும், பொது நீர் ஆதாரங்களை பயன்படுத்தவும் வன்னிய சாதி வெறியர்களே தடை விதித்துள்ளார்கள். ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை சுரேஷ் திருமணம் செய்து கொண்டதால் அவரும் தீண்டத்தகாதவராகி விட்டார். 

தத்ததமது சாதிகளுக்குள்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனு சாஸ்திரம் சட்டம் வகுத்துள்ளது. ஆனால் இதையும் மீறி அன்று  கலப்பு திருமணங்கள் நடைபெறவே செய்தன. இதை மனுவால் தடுக்க முடியவில்லை. அதனால் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் வாரிசுகளை தனி ஒரு சாதியாக்கினான் மனு. இத்தகைய புதிய சாதிகளை சாதியப் படிநிலையில் மேலும் கீழான சாதிகளாக்கினான்.

இங்கே G.சுரேஷ் - s.சுதா இருவருக்கும் இன்னும் வாரிசு உருவாகவில்லை.ஆனால் வாரிசு உருவாவதற்கு முன்னரே வன்னியனாகப் பிறந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காகவே அவனைத் தீண்டத்தகாதவனாக்கி மனுவையே விஞ்சி விட்டார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

மனு இன்னும் மடியவில்லை. அவன் வன்னியனாக, முதலியாராக, கவுண்டனாக, நாயுடுவாக, கள்ளனாக, தேவனாக, ரெட்டியாக, செட்டியாக, ஐயராக, ஐயங்காராக இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். அதனால்தான் இளவரசன்கள் மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

செய்தி ஆதாரம்: THE HINDU, June 24, 2013