Sunday, May 19, 2024

உயிர் என்றால் என்ன?

உயிர் என்பது ஒரு இயக்கம். உடல் என்கிற இயந்திரத்தில் உட்கிரகித்தலும் கழிவுகள் வெளியேற்றமும் என்கிற செயல்முறைக்குப் (process) பெயர்தான் உயிர். உட்கிரகத்தில் மற்றும் கழிவுகள் வெளியேற்றம் இவற்றில் எது ஒன்று முடிவுக்கு வந்தாலும் உடலில் இயங்கிக் கொண்டிருக்கிற செயல் முறையும் முடிவுக்கு வந்துவிடுகிறது அதாவது உயிர் முடிவுக்கு வருகிறது. இதைத்தான் உடலில் இருந்து உயிர் பிரிந்து விடுகிறது என்று சொல்லுகிறோம். இதைத் தாண்டி உயிருக்கு வேறு பொருள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


இயந்திரங்கள் பழுதடைந்து இனி செயல்படவே முடியாது என்ற நிலை வரும் பொழுது அது படுத்துவிட்டது என்று சொல்லுகிறோம். எரிபொருளை உள்வாங்க முடியவில்லை என்றாலோ அல்லது எரிபொருளை உள்வாங்கினாலும் அதைப் பயன்படுத்தியும் இயங்க முடியவில்லை என்றாலோ அல்லது எரிபொருளை உள்வாங்கி அதைப் பயன்படுத்தி இயங்கிய பிறகு கழிவுகளை வெளியேற்ற இயலவில்லை என்றாலோ அந்த இயந்திரத்தின் இயக்கம் எவ்வாறு முடிவுக்கு வருகிறதோ அது போலத்தான் மனித உடல் இயக்கமும். 

ஒரு இயந்திரம் செயல்படாமல் முடிவுக்கு வந்து விட்டால் அதை காயலான் கடையில் போடுகிறோம். அதன் பிறகு அது உருக்கி மறுவார்ப்பு செய்யப்பட்டு வேறு பொருளாக மாற்றப்படுகிறது.

ஆனால் இயக்கம் நின்று போன மனித உடலை அவ்வாறு காயலான் கடையில் போட முடியாது. ஒன்று செல்கள் அழுகி மண்ணோடு மண்ணாகும் அல்லது எரிக்கப்பட்டால் அது எரிந்து சாம்பலாகும், அதிலிருந்து வாயுக்கள் (gas molecules) வெளியேறும். இதைத்தான் ஆவி என்கிறார்கள் போலும்?

எலும்புகள், பற்கள், மண்டை ஓடுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தலாம் அல்லது அப்படியே பயன்படுத்தலாம். ஆனால் உடலின் மற்ற பகுதிகள் அழுகக் கூடியவை. அவற்றை மண்ணில் புதைத்தாலும் அல்லது எரித்தாலும் அவற்றில் உள்ள தனிமங்களின் சேர்க்கைகளினால் இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு ஒன்று தனிமங்களாக மண்ணில் மறையும் அல்லது வாயுக்களாக காற்றில் கரையும்.

திடப்பொருளோ, திரவப் பொருளோ வாயுக்களோ, உயிர் உள்ளவையோ, உயிரற்றவையோ எல்லாமே தனிமங்களின் சேர்க்கைதானே. தனித்த தனிமங்களாகவோ அல்லது மூலக்கூறுகளாகவோ அல்லது உயிர் செல்களாகவோதானே இந்த உலகில் பொருட்கள் இருக்கின்றன. இதைத் தாண்டி வேற என்ன இருக்கு?

ஹோமியோபதி கோட்பாடுகளைக் கற்ற பிறகு உயிர் பற்றிய எனது புரிதல் இது.

உயிர் பிரிந்த பிறகு ஆன்மா அல்லது ஆத்மா (soul) பற்றி பேசுகிறோம். அப்படி ஒன்று இருக்க முடியுமா? இது குறித்து பிறகு பேசுவோம்.

ஊரான்

Friday, May 17, 2024

தீவட்டிப்பட்டிகளுக்குத் தீர்வே கிடையாதா?

நண்பர்களே! அன்பர்களே!

நாடெங்கிலும், குறிப்பாக தமிழ்நாட்டுக்கோவில்களில் வழிபாட்டு உரிமை கேட்டு சேரி மக்கள் குரல் கொடுக்கும் போது, அதற்கு எதிராக ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். சேரி மக்கள் உள்ளிட்ட அனைவருமே இந்துக்கள் என்றாலும் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏன் மறுக்கிறார்கள்?
தீவட்டிப்பட்டி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளிலும் (TNHB), அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கட்டமைத்துள்ள நகரியப் (township) பகுதிகளிலும்,  நகரங்களில் ஓங்கி உயர்ந்த வளாக குடியிருப்புகளிலும் (apartments) ஊரிலிருந்தும் சேரியிலிருந்தும் வந்தவர்கள்தானே குடியிருக்கிறார்கள். அங்கு இது போன்ற வழிபாட்டுப் பிரச்சனைகள் பெரும்பாலும் வருவதில்லையே ஏன்?

கிராமப் பகுதிகளில், மனுதர்மம் வகுத்தளித்தபடி ஊரும் சேரியும் தனித்தனியாக அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஊரிலும் கூட பார்ப்பன அக்ரகாரம் தனியாகவும், பிற சாதியினர் தனித்தனி தெருவிலும் வசித்து வருகின்றனர்.

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாக படிநிலையில் தாங்கள் இருப்பதாகக் கருதும் வெள்ளாளர்கள் மேல வீதியிலும், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதற்குக் கீழான தெருக்களிலும்,  மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதற்கும் கீழே உள்ள தெருக்களிலும் வாழ்கின்றனர். பெரும்பாலும் இத்தகைய சாதியினர் அதாவது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் - சேரியை ஒட்டியே வாழ்வதால் இந்தச் சாதியினருக்கும் சேரி மக்களுக்கும்தான் அதிகமாக மோதல்கள் நடக்கின்றன.

சேரிகளில் கூட படிநிலை சாதி அமைப்புக்கு ஏற்ப, மேலே தேவேந்திரகுல வேளாளர் தெரு, அடுத்து பறையர் தெரு, கீழே சக்கிலியர் தெரு என்றுதானே அமைந்துள்ளன. 

பெரு நகரங்களில்கூட இத்தகைய ஊர் சேரி அமைப்பு முறை இன்னும் சில நகரங்களில் இருக்கத்தான் செய்கின்றன.

புதிதாகக் கட்டமைக்கப்பட்ட குடியிருப்பு வளாகங்களில் வராத வழிபாட்டு உரிமைக்கான பிரச்சனைகள் கிராமப்புறங்களில் வருவதற்குக் காரணம் மேற்கண்ட கிராமப்புற கட்டமைப்புதான்.

எனவே, பார்ப்பனிய மனுதர்மம் வகுத்தளித்த  ஊர்-சேரி கட்டமைப்பை முற்றிலுமாக சிதைத்து விட்டு (demolish), புதிய குடியிருப்பு வளாகங்களை உருவாக்கி, அதில் குலுக்கல் முறையில் அனைவருக்கும் வீடு வழங்குவது ஒன்றுதான் இந்தப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வாக இருக்க முடியும். 

கலைஞரின் சமத்துவபுரம் இதற்கான ஒரு முன்னோடித் திட்டம் என்றால் அது மிகை அல்ல. இனி ஊரும்-சேரியும் சிதைக்கப்பட்டு  தமிழ்நாடே புதிய சமத்துவபுரங்களாக மாறும்போது மட்டும்தான் வழிபாட்டு உரிமைக்கான மோதல்களும் முடிவை நோக்கி நகரும்.

ஊரான்

Sunday, May 12, 2024

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவே கிடையாதா?

இராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்ட ஒரு தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம், தமிழ்நாட்டில் வேங்கை வயல் சம்பவம்  என சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் குறித்து whatsapp நண்பர்கள் குழு ஒன்றில் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அந்த விவாதத்தில் நான் பதிவு செய்த கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

***
நண்பா,

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாதிய முரண்களும் மோதல்களும் குறையப் போவதில்லை. இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கம்யூனிஸ்டுகள் வந்தால் ஓரளவுக்கு குறையக் கூடும். அவ்வளவுதானே ஒழிய முற்றிலுமாக சாதிய மோதல்கள் நின்று விடாது.


காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பிணக்குகளும் இந்து மதத்தோடு, சொல்லப்போனால் மனுதர்ம சாஸ்திரத்தோடு பிணைக்கப்பட்டவை. மனுதர்ம சாஸ்திரத்தை ஆகப்பெரும்பான்மையோர் படிக்கவில்லை என்றாலும் அதைத்தான் ஒவ்வொரு சாதியினரும் கடைபிடித்து வருகின்றனர். இது மன்னராட்சி காலத்தில் மிக வலுவாக ஊன்றபட்ட ஒன்று.

தமிழ்நாட்டின் வள்ளலார் முதல் கேரளாவின் தர்மதீர்த்த அடிகளார் வரை எத்தனையோ மத சீர்திருத்த வாதிகள் இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. காரணம் இந்து மதத்தில் குறிப்பாக மத அதிகாரத்தில் உள்ள பார்ப்பனியம்தான். இங்கு நான் தனிப்பட்ட பார்ப்பனர்களைச் சொல்லவில்லை.

பார்ப்பனியம் என்பது ஒரு சித்தாந்தம். மக்களை, ஏற்றத்தாழ்வுடைய வருணங்களாகவும் படிநிலைச் சாதிகளாகவும் பகுத்து அவர்களுக்கான கடமைகளையும் வகுத்து அதை நிலை நிறுத்தி வைத்திருப்பபது மனுதர்ம சாஸ்திரம்.

மனுதர்ம சாஸ்திர நூலைப் படித்தால் இது நன்றாக விளங்கும். "சனாதன தர்மம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! என்கிற தொடரில் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன்.

டாக்டர் அம்பேத்கரைப் போல மனுதர்ம சாஸ்திரத்தை மிக விரிவாக ஆய்வு செய்தவர் எவரும் இல்லை. இவருக்கு முன்பாகவே மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவும் அதைப் பற்றி அலசி இருக்கிறார்.  எனவே, மத அதிகாரத்திலிருந்து பார்ப்பனர்களையும், இந்து மதத்திலிருந்து பார்ப்பனிய சித்தாந்தத்தையும் அகற்றாமல், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் பார்ப்பனிய பண்பாட்டு நடைமுறைகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப் படுத்தாமல் சாதியை முரண்களும் மோதல்களும் நிற்கப் போவதில்லை. 

இந்து மதத்திலேயே பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் பங்காரு அடிகளார், பிரேமானந்தா, அமிர்தானந்தமயி, நித்தியானந்தா உள்ளிட்ட நவீன கால ஆன்மீகவாதிகள். தனிப்பட்ட முறையில் இவர்களது நடைமுறையில் சில முறைகேடுகள் இருந்த போதிலும் உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்தியவர்கள். 

பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடிய ஆன்மீகவாதிகளில் வள்ளலாரே முன்னிலை வைக்கிறார். ஐயா வைகுந்தர் வழிபாடும் அத்தகையதே.  இன்றைய குன்றக்குடி அடிகளாரும், சுகிசிவம் போன்ற ஆன்மீக வாதிகளும் இதில் அடங்குவர்.

ஆன்மீகத்தில் நம்பிக்கையும் நாட்டமும் உள்ளவர்கள் மேற்கண்ட ஆன்மீகவாதிகளை பின்பற்றலாமே ஒழிய பார்ப்பன குருமார்களை அல்ல.

இந்து மதத்தில், மனுதர்ம சாஸ்திர நடைமுறைகளில் மாற்றமே நடைபெறவில்லையா என்று கேட்டால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு வித்திடுகிறது. அவரவர் அவரவர் சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதவாதிகளும் மனுதர்ம சாஸ்திரமும் வலியுறுத்தினாலும், சாதி மறுப்பு காதல்  திருமணங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நவீன கால உற்பத்தி முறையும் அது ஏற்படுத்தி உள்ள உற்பத்தி உறவுகளும்தான் என்றால் அது மிகையல்ல. சாதி மறுப்பு திருமணங்களுக்கு தாமாக முன்வரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே புதிய உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளை நோக்கி இந்தச் சமூகம் நகரும் போது, இது போன்ற மதமாச்சரியங்களும் அது தொடர்பான ஏற்றத்தாழ்வுகளும், மதத்தின் மீதான நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல மறைந்து போகும்.

ஊரான்

Saturday, May 11, 2024

நான் கடவுளைக் கண்டேன்! --- இறுதிப் பகுதி

ஆபத்துக் காலங்களில் உதவி செய்வோரை 'ஆபத்தாண்டவன் மாதிரி வந்து காப்பாத்தனாம்பா' என்றுதான் சொல்கிறோம். அத்தகையோரை ஆண்டவனின் மாதிரியாகப் பார்க்கிறோம். அப்படியானால் ஆபத்துக் காலங்களில் உதவுவதற்கு ஒரிஜினல் ஆண்டவன் இருக்க வேண்டும் அல்லவா?

தெரு நாய் மோதி நான் கீழே விழுந்து அடிபட்டேனே, அதற்கு எதிரில்தான் ஸ்ரீ செல்வ விநாயகன் வீற்றிருக்கிறான். இன்னும் சொல்லப் போனால் விநாயகனுக்கு எதிர் வீடுதான் என்னுடையது. அன்றாடம்  அவனுக்கு ஐயர் செய்யும் சேவையை நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல, எனது செயல்களையும் அவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் எனக்கு நேர்ந்த விபத்தை  அவன் தடுக்கவும் இல்லை; அடிபட்ட பிறகு எழுந்து ஓடி வரவும் இல்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் ஆண்டவனின் மற்றொரு அவதாரமான பைரவன்தான் என் மீது மோதியவன்? 

நடைபயிற்சியின் போது தடுக்கி விழுந்து கருங்கல்லில் மோதி மண்டை உடைந்ததையும், எதிரில் இருந்த ஐயப்பனும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருந்தான். மற்ற மூன்று இடங்களிலும் விபத்து நடந்த போது அங்கிருந்த தெய்வங்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தன.

நான் கடவுள் மறுப்பாளன் என்பதனால்கூட இந்தக் கடவுளர்கள் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஒரு சிலர் எண்ணக்கூடும். ஆனால் அன்றாடம் நடைபெறும் எண்ணற்ற விபத்துகளில் பாதிக்கப்படுவோர், பலியாவோர்  ஆண்டவனை அனுதினமும் ஆராதிக்கும் அப்பாவிகள்தானே? வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டுத்தானே செல்கின்றனர்.  விபத்துகளைத் தடுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், விபத்து நடந்த பிறகு ஓடோடி வந்து உலகின் எந்த மூலையிலாவது எந்த ஆண்டவனாவது பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கரம் நீட்டி இருக்கிறானா?

ஆனால் விபத்து நடக்கின்ற இடங்களில் எல்லாம் ஓடோடி வந்து உதவிக்தரம் நீட்டுபவர்கள் சக மனிதர்களே. விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதல் உதவி செய்கிறார்கள். ஆம்புலன்சையோ ஆட்டோவையோ வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். மருத்துவமனைக்கு வருவோரை அரவணைத்து உடனடியாக செவிலியர்களும், மருத்துவர்களும் உரிய சிகிச்சை அளித்து உயிரைக் காக்கின்றனர்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களும் ஒப்பிட்டளவில் சிறியவைதான் என்றாலும்கூட, சக மனிதர்கள் உரியநேரத்தில் எனக்கு உதவிக்கரம் நீட்டவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்? 

ஐந்து முறையும் நான் அடிபட்ட போது எனக்கு மயக்கம் வரவில்லை, வாந்தி வரவில்லை, மூக்கில் இரத்தம் வரவில்லை; அதனால் அதிகம் அச்சப்பட வேண்டியதில்லை என்றாலும் இதில் ஏதாவது ஒன்று நடந்தாலும் அது ஆபத்துக்குரியதாகத்தான் பார்க்கப்படும். இதைத்தான் மருத்துவர்களும் முதலில் கேட்கிறார்கள். 


தெய்வங்களை சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்கள் என்கிறார்கள். பெருந்தெய்வங்கள் நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு யாருக்கோ படி ஆளந்து கொண்டிருக்கின்றன. ஆனால் சிறு தெய்வங்கள் என்று அழைக்கப்படுவோர் வீதி ஓரங்களில் கேட்பாரற்ற கிடக்கின்றனர். இவர்களை நம் மூதாதையர்கள் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். முந்தைய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகரம் நீட்டி இன்றும் நினைவு கூறப்பட்டு வணங்கப்படுபவர்கள். அன்றைய சகமனிதர்களே அவர்கள்.

எனக்கு நடந்த ஐந்து சம்பவங்களில் மட்டுமல்ல, எனது உறவினர்கள், நண்பர்கள் என‌ப்பலரும் பாதிக்கப்பட்ட போது இத்தகைய சிறு தெய்வங்களை நான் நேரடியாகக் கண்டுள்ளேன். 

ஆபத்துக் காலங்களில் வேடிக்கை பார்க்காமல் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டுவோம். மனிதநேயம் காப்போம். கடவுள் வேறு யாருமல்ல, நாமே கடவுள்!

நன்றி!

முற்றும்

நான் கடவுளைக் கண்டேன்! ---3

மாலை நேர மயக்கம் 1

நவம்பர் 14, 2021 அன்று இராணிப்பேட்டை காரையில் ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வழக்கமான எனது சுசுகி மேக்ஸ் 100 இல் வாலாஜா நோக்கி வந்து கொண்டிருந்தேன். மாலை நேரம் சற்றே இருட்டிவிட்டது. சுசுகியின் முகப்பு விளக்குகூட அவ்வளவாக பளிச்சென்று இருக்காது. 2000 மாடல் ஆச்சே? 'எப்ப மாத்த போற?' என்று அடிக்கடி பிள்ளைகள் கேட்பதுண்டு.


சாலையின் இடது ஓரமாக ஆட்டோ நகரில் வந்து கொண்டிருந்த பொழுது நேர் எதிரில் ஒரு உருவம் வருவது மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தது. சுதாரிப்பதற்குள் அவர் மீது வண்டி மோதியது. நான் மோதினேனா அல்லது அவராக வந்து விழுந்தாரா என்பதெல்லாம் தெரியாது. பாதசாரிக்கு என்ன ஆனது என்றும் எனக்குத் தெரியவில்லை. 

உடனே கூட்டம் கூடிவிட்டது. ஒருவர் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டார். இது போன்ற சம்பவங்களில், அதாவது பாதசாரிகள் மீது வாகனங்கள் மோதி விட்டால், அடி பலமாக இல்லை என்றாலும் வாகனக்காரரிடமிருந்து முடிந்தவரை கறப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறோம். 
அவரைத் தெரிந்த ஒரு சிலர் இராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்றனர். நானோ, 'இல்லை இல்லை வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் போவோம்' என்றேன். நான் வண்டியில் இருந்து விழுந்து அடிபட்டு கிடக்கிறேன். நிலைமையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. எனவே நண்பர் வாலாஜா அசேன் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள, அவர் உடனே வி.சி.மோட்டூரிலிருந்து ஒரு நண்பரை அனுப்பி வைத்தார்.

விபத்து நடந்த இடத்திற்கு எதிரில் உள்ள கடைக்காரர் எனது வீட்டுக்கு எதிர் வீட்டு நண்பரின் மருமகன். அவரும் வந்து விடுகிறார். எனக்கு ஆதரவாக முக்கியமான நபர்கள் வந்துவிட அங்கு பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த நபர்கள் ஒதுங்கிக் கொள்ள ஒரு ஆட்டோவைப் பிடித்து இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே எனக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தார்கள். அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க அழைத்த போது அவர் காணாமல் போய்விட்டார். காரணம் பிறகுதான் தெரிய வந்தது, அவர் போதையில் இருந்தார் என்று. விபத்து நடந்த இடத்திற்கு எனது மகனும் உடனே வந்து விட்டதால் எனது வண்டியும் வந்து சேர்ந்தது. 

மாலை நேர மயக்கம் 2

2018 இல் பணி ஓய்வு பெற்ற பிறகு பழைய வீட்டை இடுத்துவிட்டு புதிய வீடு கட்டிக் கொண்டிருந்த போது  பிப்ரவரி 12, 2019 அன்று வீடு கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட பிறகு, மாலையில் பெல் குடியிருப்பை நோக்கி வந்து கொண்டிருந்தேன். அவ்வளவாக இருட்டிவிடவில்லை. சிப்காட் பேருந்து நிறுத்தத்தைத் தாண்டி அதே சுசுகி மேக்ஸ் 100 இல் வந்து கொண்டிருந்த பொழுது இடது பக்கமிருந்து ஒரு இரு இருசக்கர வாகனம் இருவரை சுமந்து கொண்டு சற்றே தாழ்வான பகுதியிலிருந்து மேலேறி சர்ரென பிரதான சாலையில் நுழைய, அதன் மீது எதிர்பாராத விதமாக எனது வண்டி மோதி நான் கீழே விழுகிறேன். இந்த முறையும் மண்டைதான் தரையில் மோதுகிறது. எப்பொழுதும் தலைக்கவசம் அணியும் நான் அன்று மட்டும் தலைக்கவசம் அணியவில்லை. அணிந்திருந்தால் மண்டை தப்பி இருக்கும் . 

நெற்றியின் மேல் பகுதியிலிருந்து இரத்தம் வழிகிறது. வண்டி ஒரு பக்கம் பழுதாகி விழுந்து கிடக்கிறது. அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர் உள்ளிட்ட பலர் கூடிவிட்டனர், நான் யார் என்று விசாரித்துத் தெரிந்து கொண்டு ஒரு ஆட்டோவில் என்னை உடனடியாக பெல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே முதல் உதவி அளிக்கப்பட்டு மண்டை காயத்திற்கு எட்டு தையல் போடப்பட்டது.

எனது வண்டியை பத்திரமாக எடுத்து வைத்திருந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மறுநாள் வண்டியை என்னிடம் ஒப்படைத்தார். எதற்கும் மண்டையை ஒரு ஸ்கேன் செய்து பார்த்து விடலாம் என்று மேல் சிகிச்சைக்காக விஷாரம் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொண்டேன். உள்காயம் ஏதுமில்லை என்று உறுதி செய்து கொண்டேன்.

வலதுகை மூட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 25 வயது  சுசுகியையும், 20 வயது ஸ்கூட்டியையும் வேறு ஒருவருக்கு கைமாற்றிய பிறகு கடந்த ஐந்து மாதங்களாக எங்கு சென்றாலும் நடராஜாவும், ஆட்டோக்களும் பேருந்துகளும்தான். போகிறப் போக்கை பார்த்தால் இதுவே பழகிவிடும் போலத்தான் தெரிகிறது. எனினும் உற்ற நண்பர்களை இழுந்து விட்டது போன்ற ஒரு வெறுமை என்னுள் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு வகைமாதிரிக்காக எனது சொந்த அனுபவத்திலிருந்து ஐந்து சம்பவங்களை நான் மேலே விவரித்திருக்கிறேன். இந்த சம்பவங்கள் உணர்த்தும் படிப்பினை என்ன? அடுத்து பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

நான் கடவுளைக் கண்டேன் ...2

பைரவா! இது உனக்கே நல்லா இருக்கா?

கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும், மெத்தை வீடுகளிலும் அன்றும் மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களாலும், வேளாண்மை மற்றும் பிற தொழில்களில் கூடுதல் வருவாய் காரணமாகவும் இன்று கூரை வீடுகளும் ஓட்டு வீடுகளும் மெல்ல மெல்ல மறைந்து கான்கிரீட் வீடுகள் முளைத்து வருகின்றன. 


வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அன்றெல்லாம் ஓரிடத்தில் படுத்துறங்குவது இயல்பாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ ஒவ்வொவரும் தனியாக இருக்கவே விரும்புகின்றனர். நடுத்தரவர்க்க வாழ்க்கை முறையில் தவிர்க்க முடியாத ஒரு பண்பாட்டுக் கூறாக இது மாறி உள்ளது.

எங்களது வீட்டிலும், மாடியில் ஒரு அறை தேவைப்பட்டதால் அதற்கான வேலைகள் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. வேலைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருந்தன. டிசம்பருக்குள் வேலையை முடித்து விட வேண்டும் என்பதால் 26 ஆம் தேதி காலை சுமார் 10 மணி அளவில் கடைக்குச் சென்று கட்டட வேலைக்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு வழக்கமாக நான் பயணிக்கும் ஸ்கூட்டியில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். 

சாலையின் வலது பக்கம்
விளையாட்டு மைதானம். சில இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். நான் வசிக்கும் வீட்டு வசதி வாரிய வளாகக் குடியிருப்பில் தெரு நாய்களுக்குப் பஞ்சமில்லை. தெரு நாய்கள்தான் அந்தந்தத் தெருவுக்கான பாதுகாவலர்களும் கூட. வீட்டை நெருங்கும் தருவாயில் விளையாட்டு மைதானத்தில் இருந்த ஒரு நாய் திடீரென குறுக்கே வர, அதன் மீது ஸ்கூட்டி மோதி நான் கீழே விழுகிறேன். 

நான் விழுந்ததைப் பார்த்து அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களும் ஓடி வந்தனர். நான் எழ முயற்சிக்கிறேன், முடியவில்லை. அதன் பிறகு என்னைக் கைத் தாங்கலாகப் பிடித்து பக்கத்தில் இருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார வைத்தனர். வலது கையை தூக்க முடியவில்லை, திருப்ப முடியவில்லை. கை, கால்கள் உள்ளிட்ட சில இடங்களில் சிராய்ப்புக் காயங்கள்.

உடனே குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு அம்மா எலுமிச்சை ஜூஸ் போட்டு கொண்டு வந்து தருகிறார். ஒரு இளைஞர் பக்கத்தில் உள்ள கடையில் இருந்து மாசா மாம்பழச்
சாரு வாங்கித் தருகிறார். ஒரு முதியவர் மூக்குத்திப்பூண்டு (இதை தலைவெட்டிப் பூண்டு என்றும் சொல்வதுண்டு) இலையைக் கசக்கி அதன் சாற்றை சிராய்ப்புக் காங்களின் மேல் விடுகிறார். பெரும்பாலும் எல்லோரும் தெரிந்தவர்கள்தான் என்றாலும் இவர்களின் இந்த உதவி என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. அடிபட்ட வலி கூட மறந்து போனது.

அதே தெருவில் மிக அருகில்தான் எனது வீடு. இதைக் கேள்விப்பட்டு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த மேஸ்திரியும் எனது மகனும் ஓடி வந்தனர். ஒரு ஆட்டோவைப் பிடித்து உடனடியாக பெல் மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் என்னை பரிசோதித்து பார்த்த பிறகு, செவிலியர்கள் காயத்திற்கு மருந்து போட்டனர். 

Radial head replacement surgery

எக்ஸ்ரே  எடுத்துப் பார்த்ததில் வலது கை முட்டியில் எலும்பு உடைபட்டிருப்பதாகச் சொல்லி இராணிப்பேட்டையில் உள்ள எஸ்எம்எச் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அங்கே வலது கை முட்டியை ஸ்கேன் செய்து பார்த்ததில் ரேடியல் ஹெட்டில் (fracture on radial head) இரண்டு இடத்தில் உடைந்திருந்தது; எனவே, அதை அறுவை சிகிச்சை மூலம் மாற்ற வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைக்க, மூட்டு எலும்பின் (radial head) தலையை வெட்டி எடுத்து விட்டு செயற்கைத் தலையைப் பொருத்தி அறுவை சிகிச்சை செய்தனர். நான்கு நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினேன். 

இது நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்கு மேல் உருண்டோடி விட்டன. எனது கையைப் பார்த்தால் அடிபட்ட கை போல தெரியாது. இயல்பாகத்தான் தெரியும். ஆனால் பழைய மாதிரி அதனுடைய வலு இல்லை என்பதை மட்டும் உணர முடிகிறது.

மேலும் இரு சம்பவங்கள்... அடுத்து....

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, May 10, 2024

நான் கடவுளைக் கண்டேன்! ---1

நடைபயிற்சி

அலுவலக வேலைக்குச் செல்லும் போது இருந்த அன்றாட வாழ்க்கை ஒழுங்கு முறை, பணி ஓய்வுக்குப் பிறகு ஒரு சில காரணங்களால் சிதைகிறது. அதில் ஒன்று அவ்வப்பொழுது விடுபட்டுப் போகும் காலை நேர நடை பயிற்சி. 

நடை பயிற்சி விடுபட்டு போய் மூன்று மாத காலத்திற்கு மேலானதனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி காலை 6 மணி அளவில் வழக்கமான பாதையில் நடை பயிற்சியை மீண்டும் மேற்கொண்டேன். மகளிர் கல்லூரி பின் பக்கமாக உள்ள சாலையைக் கடந்து பிரதான சாலையில் நுழையும்போது சற்று எச்சரிக்கையாகத்தான் நடந்து வர வேண்டும். காரணம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை பகுதிகளுக்கு தொழிலாளர்களை அள்ளிச் செல்லும் கம்பெனிப் பேருந்துகள் எதிர் திசையில் சர் சர் என விரைந்து வந்து கொண்டிருக்கும். 

தார் சாலையில் நடந்து வர முடியாது என்பதால் மண் தரையில்தான் ஓரமாக நடந்து வர வேண்டும். இது போன்ற சாலைகளில் தரையை மட்டுமே பார்த்து நடந்தாலோ அல்லது சாலையை மட்டுமே பார்த்து நடந்தாலோ, பெராக்குப் பார்த்துக் கொண்டு நடந்தாலோ அசம்பாவிதம் நடப்பதைத் தவிர்க்க முடியாது. 

கருங்கல்

வீட்டு வசதி வாரிய வளாக குடியிருப்புப் பேருந்து நிறுத்தும் அருகே வந்த பொழுது, எனது கவனக் குறைவால், ஏதோ தடுக்கி விட, தடால் என குப்புற விழுகிறேன். மூக்கிலிருந்து மேல்நெற்றிவரை பலத்த அடி.  


வேலைக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த இளைஞர் ஒருவர் ஓடி வந்து என்னைத் தூக்கி பேருந்து நிறுத்த நிழற்கூரையின் கீழ் அமர வைக்கிறார். 

முன் மண்டையில் இருந்து இரத்தம்
பொளபொளவென கொட்டுகிறது. அணிந்திருந்த டி சட்டையைக் கழற்றி அடிபட்ட இடத்தில் அழுத்திப் பிடித்து இரத்தப்பெருக்கை நிறுத்த முயல்கிறேன். அதற்குள் டி சட்டை முழுவதும் நனைந்து விடுகிறது. 

அன்று பார்த்து கைபேசியை வேறு கொண்டு வரவில்லை. உடனே என்னுடைய கைபேசி எண்ணைச் சொல்ல, அந்த இளைஞர் 'கால்' செய்கிறார். 'ரிங்' போய்க்கொண்டிருக்கும் போதே அவருடைய 'கம்பெனி பஸ்' வந்து விடுகிறது. 'சார் எனக்கு பஸ் வந்து வந்துவிட்டது' என்கிறார். என்னால் சமாளித்துக் கொள்ள முடியும் என்பதால் அவரை அனுப்பி வைத்தேன். பிறகு டி சட்டைத் துணியால் அடிபட்ட இடத்தை அழுத்தியவாறு வேற்றுடம்புடன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீடு வந்து சேர்ந்தேன். என்ன இவன் இப்படிச் செல்கிறானே என்று கூட வழியில் பார்த்த சிலர் நினைத்திருக்கக் கூடும். 

அதன் பிறகு ஒரு வாடகைக் காரைப் பிடித்து பெல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மண்டையில் எந்த பாதிப்பும் இல்லை என்று சொன்ன பிறகு தெம்போடு வீடு திரும்பினேன். ஆனால் மூக்கிலிருந்து மேல்நெற்றி வரை கருங்கல்லில் மோதி அடிபட்டதனால் திருப்பதி வெங்கடாஜலபதிக்குப் போடப்பட்ட நாமத்தைப் போல நெற்றி பட்டையாக நெடுக்குவாக்கில் வீங்கி இருந்தது. ஓய்வுக்குப் பிறகு ஒரு வாரத்தில் எல்லாம் சரியானது.

அடிபட்டுக் கிடந்தவரைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்து விட்டோமே என்று அந்த இளைஞருக்கு மனம் பதபதைத்திருக்கும் போல. அதன் பிறகு அவர் என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். முன் பின் முகம் தெரியாதவர்களுக்கு இருக்கும் அக்கறைகூட சில நேரங்களில் முரண்பட்டுபோன சில உறவுகளுக்கு இருப்பதில்லை. இதைவிட பெரிய விபத்துக்கள் நடக்கும் தருணத்தில், அதுகுறித்து அறிந்த பிறகும்கூட 'அவனுக்கு என்ன கல்லு மாதிரிதானே இருக்கான்,  செத்தா போயிட்டான்?' என்போரும் இருக்கத்தானே செய்கின்றனர்.

வேகத்தடை

இந்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் ஒரு நாள் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் மாலை நேர நடை பயிற்சியை முடித்துக் கொண்டு தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இரவு ஏழு மணி வாக்கில் தெருவில் போதிய வெளிச்சம் இல்லாததால் அங்கிருந்த வேகத்தடையில் தடுக்கி தடாலென குப்புற விழுகிறேன். முகம் தரையில் மோதி அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியின் ஒரு பக்கம் உடைந்து நொறுங்குகிறது. அப்பொழுது எதேச்சையாக அவ்வழியே வந்த இரண்டு இளைஞர்கள் என்னைத் தூக்கி நிறுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். பெரிய அளவில் காயம் இல்லை என்றாலும் கவனக் குறைவினால் ஏப்ரல் 20 இல் நடந்ததைப் போன்றதொரு விபத்துதான் இது.

பொதுவாகவே நாம் நடக்கும்போது கால்களை நன்றாகத் தூக்கிதான் அடியெடுத்து வைக்க வேண்டும். அவ்வாறு முடியவில்லை, தரையோடு கால் தவழுகிறது என்றால் தடுக்கி விழ வாய்ப்புகள் அதிகம். வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகிய இரண்டும் இரத்தத்தில் குறைந்து போனால் உடல் சோர்வும், கால்களில் அசதியும் ஏற்படும் என்று மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. மேற்கண்ட இரண்டும் மிகவும் குறைந்து இருந்ததை பின்னாளில் நான் கண்டபோது, நான் தடுக்கி விழுந்ததற்கான காரணம் இதுவாகக்கூட இருக்கலாமோ என்று எண்ணத்தான் தோன்றுகிறது. 

அடுத்து பைரவன் குறுக்கே வந்த கதையைப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்


நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்! இறுதிப் பகுதி.

நான் பள்ளிப் படிப்பு படிக்கிற காலத்தில் (1975 பழைய SSLC) தேர்ச்சி பெறுவது என்பதே பெரிய சாதனை. அதிலும் 400 க்கு மேல் (தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், வரலாறு புவியியல், ஒரு விருப்பப் பாடம் என ஆறு பாடங்கள், மொத்தம் 600 மதிப்பெண்கள்) எடுப்பது இமாலய சாதனை. எனது விருப்பப் பாடம்: அல்ஜிப்ரா & ஜியாமெண்ட்ரி.

தேர்வு முடிவுகள் வெளியாகின. எனது நண்பன் சண்முகம் 420 மதிப்பெண்கள் முதலிடம், இரண்டாம் இடம் நான் 398. நான் பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள மூன்று பெரிய கிராமங்களில் ஆண் பெண் என பலர் படித்தும் நான் ஒருவன் மட்டுமே தேர்ச்சி பெற்றவன். 

கணிதத்தில் முதல் கேள்வியில் இருந்து கடைசி கேள்வி வரை எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் எழுதி விட்டேன். சரியான பதிலை மட்டும் கணக்கில் கொண்டால் 100 மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரிசைக்கிரமப்படிதான் கணக்கில் கொள்வார்கள் என பின்னர் தெரிய வந்தது. அதனால் இடையில் சில கேள்விகளுக்கான தவறான பதிலால் எனது 100 மதிப்பெண்கள் என்கிற கனவு சிதைந்து போனது. நிறைவேறியிருந்தால் எனக்கு மட்டுமல்ல அது பள்ளிக்கும் பெருமை சேர்த்திருக்கும். அடுத்த ஆண்டே பாலிடெக்னிக் முதலாம் ஆண்டில் இரண்டு கணிதப் பாடங்களிலும் எனது கனவு நிறேவேறியது.

இதில் வேடிக்கை என்னவென்றால் முதல் இரு இடங்களைப் பெற்ற நாங்கள் இருவருமே அன்றே கடவுள் மறுப்பாளர்கள். கடவுளிடம் வேண்டுவதைவிட கல்வியில் கவனம் செலுத்தி ஊன்றிப் படித்தால் வெற்றி நிச்சயம் என்பதை பள்ளிப் பருவத்திலேயே அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். கல்லூரி வரையிலும் இதுவே தொடர்ந்தது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் நாங்கள் இருவருமே சில நேரங்களில் காஞ்சி குன்னு மோடு முருகன் கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் பாறைகளின் மீது அமர்ந்துதான் பாடம் படிப்போம்.

நான் பெற்ற மதிப்பெண்கள்

தமிழ்.                                            63
ஆங்கிலம்.                                  38
கணிதம்.                                      87
அறிவியல்.                                  77
வரலாறு, புவியியல்                 77
அல்ஜிப்ரா,ஜியோமெண்ட்ரி 56

மொத்தம்.                            : 398 / 600

எமது பள்ளியின் அன்றைய‌ தேர்ச்சி சதவீதம் (தோராயமாக 30% இருக்கும்) மிகச் சொற்பமே. ஆனால், இன்று அனைத்துப் பள்ளிகளுமே 100 ஐ எட்டிப்பிடிக்க போட்டி போடுகின்றன. இந்தப் போட்டியை வரவேற்கக்கூடிய அதே வேளையில், பள்ளிப் படிப்பை முடித்து வெளியில் வரக்கூடிய மாணவர்களின் மொழிப் புலமை மற்றும் கணித அறிவு கவலை அளிக்கக்கூடியதாகத்தான் இருக்கிறது. ஆசிரியர் பணியில் இருக்கக்கூடிய அனைவரும், ஆசிரியர் பணியை மட்டுமே செய்தால் தமிழ்நாடு உலகத்திற்கே வழிகாட்டும்.

முற்றும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 

நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்! ---1

நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்---2

நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்---2

காலையில் வயல் வேலை, அதைத் தொடர்ந்து பத்து கிலோமீட்டர் மிதிவண்டிப் பயணம், தாமதமாக வந்ததால் தண்டனையாக பள்ளி மைதானத்தில் ஐந்து ரவுண்டு ஓட்டம் இவற்றை முடித்துவிட்டு வகுப்பில் வந்து உட்கார்ந்தால், அதுவும் ஆங்கிலப் பாடவகுப்பில் உட்கார்ந்தால் எப்படி இருக்கும்? களைப்பில் உடல் இளைப்பாறுதலைத் தேடுமா இல்லை பாடத்தைக் கவனிக்கத் தோன்றுமா? அதனால்தானோ என்னவோ மற்ற பாடங்களில் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெறக்கூடிய நான் ஆங்கிலத்தில் மட்டும் திணறிக் கொண்டிருந்தேன்.

எனது குடும்பத்தில் உயர்நிலைப்பள்ளியை எட்டிய முதல் தலைமுறை நான்தான். அப்பா அந்தக் காலத்து திண்ணைக் கல்வி மூலம் தமிழில் படிக்கவும் ஓரளவுக்கு எழுதவும் தெரிந்திருந்தார் என்றாலும் நான் அன்றாடம் படிக்கிறேனா இல்லையா என்பதை எல்லாம் சோதிக்கின்ற அளவுக்கு பெற்றோர்களுக்குத் தெரியாது. 

நான் எனது வகுப்பில் இரண்டாவது குள்ளன் என்பதனால் உயர வரிசைப்படி எனக்கு முதல் பெஞ்சில் இரண்டாவது இடம். அதனால் பிற மாணவர்களோடு சீண்டலில் ஈடுபடவோ கவனத்தை சிதறடிக்கவோ வாய்ப்பு கிடையாது. நேரடியாக பாடத்தைக் கவனிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதனால்தானோ என்னவோ நான் ஒப்பீட்டளவில் மற்ற மாணவர்களைவிட படிப்பில் சற்று முன்னிலையில் இருந்தேன்.

ஆசிரியர்கள் திறமையானவர்கள்தான். என்றாலும் அவர்களில் ஒரு சிலர் முழு பாடத்தையும் நடத்துவதில்லை.  ஆனால் நடத்துகின்ற பாடங்களை பசுமரத்தானியில் பதிவது போல நடத்துவார்கள். ஆனாலும் இறுதித் தேர்வில் 10 - 15 பேர் தேர்ச்சி பெறுவதே குதிரைக்கொம்பாக இருந்தது. அதனால் எப்படியாவது தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அனைத்துப் பாடங்களிலும் ஓரளவுக்கு தேர்ச்சி பெறக் கூடும் என்று கருதிய சுமார் 30 மாணவர்களை மூன்று மாத காலத்திற்கு பள்ளியிலேயே தங்க வைத்து விட்டார்கள். அதில் நானும் ஒருவன். 

மூன்று வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது? மூன்றடுக்கு அலுமினியம் கேரியர் ஒன்றில் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடிய புளிச்சக்கீரை சோறு, புளி சோறு  மூன்று வேலைக்கும் கட்டுபடியாகும்படி வீட்டிலிருந்து வரும். எனது தங்கைகள் இருவர் மாறி மாறி அந்தக் கேரியரை ஒரு கிலோமீட்டர் தூரம் எடுத்து வந்து எனது ஜூனியரான பக்கத்து கிராமத்து மாணவன் இராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்புவார்கள். அவ்வாறே மாலையில் காலி கேரியரும் வீடு சென்றடையும்.

தொலைவில் இருந்து சைக்கிளில் வரும் மாணவர்களின் டிரவுசரின் பின்பக்கம் பெரும்பாலும் வட்டமாக ஓட்டை விழுந்து விடும். ஆண்டுக்கு இரண்டு செட் சீருடை, அதை வைத்தே சமாளித்தாக வேண்டும். டிரவுசரில் ஓட்டைகள் இருந்தாலும் அது இல்லாமையின் அடையாளம் என்று கடந்து செல்வார்களே ஒழிய யாரும் ஏளனம் செய்யமாட்டார்கள். இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆண்டு விழாவின்போது வகுப்புத் தோழன் தங்கவேல் எனக்கு ஒரு நாள் மாற்றாகக் கொடுத்த டிரவுசர் மட்டும் என் நினைவில் அடிக்கடி வந்து போவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

எப்படியோ பழைய எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நெருங்கிவிட்டன. மிதிவண்டியிலேயே சென்று தேர்வு எழுதக்கூடிய தூரத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கும் மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தும் 25 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள செங்கத்தில்தான் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்து விட்டார்கள்.

இவ்வளவு தூரம் அன்றாடம் சென்று வரமுடியாது. செங்கத்தில் உறவினர்கள் யாரும் கிடையாது. அதனால் செங்கத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள எனது சித்தி வீட்டிலிருந்து தேர்வு எழுதச் செல்வது என முடிவு செய்து மிதிவண்டியோடு அங்கு சென்று விட்டேன். 

தமிழ் முதல் தாள் தேர்வு எழுதிவிட்டு எனது சித்தி வீட்டுக்குத் திரும்பிய போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் மேலும் அங்கு நான் தங்க முடியாத சூழ்நிலையில், அதே ஊரில் எனது சித்தி மகளின் வீட்டிலிருந்து அன்றாடும் செங்கம் சென்று தேர்வுகளை எழுதி முடித்தேன். 

எனது வீட்டில் மின்சாரம் இல்லாததால் முதல் வகுப்பு முதல் பள்ளி இறுதித் தேர்வு வரை சிமினி விளக்கும் லாந்தர் விளக்குகளும்தான் இரவில் படிக்க வெளிச்சம் கொடுத்தன. பள்ளி இறுதித் தேர்வு எழுதும் பொழுது நான் தங்கி இருந்த வீட்டிலும் மின் விளக்குகள் கிடையாது. பள்ளிக்கூடத்தில் மூன்று மாதம் தங்கி இருந்த போதுதான் மின்விளக்கு ஒளியில் படித்திருக்கிறேன்.

தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி....

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள் 


நினைவில் நிழலாடும் பள்ளிப் பருவம்! ---1

மேல்நிலைப்பள்ளி மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து பேசப்படும் இத்தருணத்தில், ஏனோ, எனது பள்ளிப்பருவ நாட்கள் என் நினைவில் வந்து போவதைத் தவிர்க்க முடியவில்லை.

கிராமத்தை விட்டு வயல்வெளியிலேயே நாங்கள் குடியிருந்ததால், முதலாம் வகுப்புக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். சாலை வசதி கிடையாது. வயல் வரப்புதான் பாதை. மட்டவெட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் எப்படியோ ஐந்தை முடித்தாயிற்று. ஆனால், ஆறாம் வகுப்புக்கு மூன்று கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்பதால் பாசக்கார எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் நாங்கள் உயரமாக வளர வேண்டும் என்பதற்காகவே ஐந்தாம் வகுப்பிலேயே மேலும் ஓர் ஆண்டுக்கு  நிறுத்திக் கொண்டார்.

நடுப்பாலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆறு முதல் எட்டு வரை வெற்றிகரமாக முடித்தாயிற்று. இதுவரை நடைபயணம்தான். முழு ஆண்டுத் தேர்வு எழுதிவிட்டு இடையில் பள்ளியை எட்டிக் கூட பார்க்காததால் முதல் மாணவன் என்ற தகுதி இருந்தும் அன்றைய உதவித்தொகை பெறுவதற்கான மாவட்ட அளவிலான தேர்வு எழுவதற்கான வாய்ப்பையும் நழுவ விட்டேன்.

ஒன்பதாவது படிக்க உயர்நிலைப்பள்ளி செல்ல வேண்டும்.
காஞ்சி, கடலாடி, புதுப்பாளையம் என மூன்று திசைகளில், கிட்டத்தட்ட சம தொலைவில் மூன்று உயர்நிலைப் பள்ளிகள் இருக்க, நான் காஞ்சியை நோக்கிப் படையெடுத்தேன்.

செய்யாற்றங்கரையையொட்டி ஊருக்கு உள்ளே இருந்த பள்ளிக்கூடம் இட வசதி போதாததால் ஆற்றின் அக்கரையைத் தாண்டி புதிய வளாகத்தில் தொடங்கப்பட்டிருந்தது. வகுப்பறையில் சுற்றுச்சுவர் கூட முழுமையாக எழுப்பப்படாத நிலையில் தென்னங்கீற்று கூரையின் கீழ்தான் பள்ளி இயங்கியது. 1972 இல் நாங்கள் வைத்த புங்கன் கன்றுகள் பெருமரங்களாய் எழும்பி நின்று இன்று நிழல் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

விதவிதமாய் உடை உடுத்தி, ஒய்யாரமாய் நடை நடந்து வித்தை காட்டும் ஒருவன் தனக்கு சொந்தமாக ஒரு மிதிவண்டி கூட இல்லை என்று புலம்பும் காலம் இது. ஆனால், அன்றே நான் மிதிவண்டிக்குச் சொந்தக்காரன் ஆனேன். வேறு வழி? கடன் பட்டாவது வாங்கித்தானே ஆக வேண்டும். பத்து கிலோமீட்டர் நடக்க வேண்டுமே? முடியுமா? 

காலை 8 மணி வரை வயலில் வேலை செய்துவிட்டு கிணற்றில் மூழ்கி எழுந்துப, ஈரத்தோடு வீட்டுக்கு ஓடோடி வந்து, பள்ளிச் சீருடைக்கு மாறி, அம்மா செய்து வைத்த உணவு பழையதோ புதியதோ வயிற்றுக்கு கொஞ்சம் போட்டுக் கொண்டு, பித்தளை தூக்குவாளியில் மதிய உணவிற்காக கொஞ்சம் அடைத்துக்கொண்டு, மிதிவண்டியின் கிராஸ்பாரில் அதை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு, பள்ளி பாடப் பத்தகம் நோட்டுகளை ஒரு கைப்பையில் திணித்து, அந்தப் பையை மிதிவண்டியின் ஹேண்ட்பாரிலே மாட்டிக் கொண்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ஏறிக்கரை வயல் வரப்பு என ஏறி இறங்கி, அதன் பிறகு சாலை வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து மூச்சிரைக்க பள்ளிக்குச் சென்றடைந்தால், அப்பொழுது காலை பிரேயர் நடந்து கொண்டிருக்கும். மிதிவண்டி பழுதானால் பாலூர் பாபுஜான் கடையில் விட்டுவிட்டு பழுது பார்க்கப்படும் வரை மொத்த தூரமும் நடைபயணம்தான்.

தொடக்கப் பள்ளியிலும் நடுநிலைப் பள்ளியிலும் படித்தபோது மதிய உணவு கிடைத்தது. ஆனால்  ஏனோ உயர்நிலைப் பள்ளியில் கிடைக்கவில்லை. கடைசி வரை கட்டுச் சோறுதான். ஜோல்னா பைகளோ, ஏர்பேக்குகளோ அன்று கிடையாது என்பதால் கைப்பைகள்தான் எங்கள் சொத்துகளைக் காத்தக் பெட்டகங்கள்.

தாமதமாக வந்தவர்கள் பிரேயர் முடியும் வரை காத்திருந்த பிறகு பள்ளி மைதானத்தில் ஐந்து ரவுண்டு ஓட விடுவார்கள். தாமதத்திற்கான தண்டனை அது. அனேகமாக இந்தத் தண்டனையை அன்றாடம் அனுபவித்தவன் நான். 

தொடரும்

ஊரான்

Sunday, April 28, 2024

மரம் வளர்த்தால் வெயில் குறையுமா?

இந்த ஆண்டு வெயிலின் உக்கிரம் என்னவோ சற்று அதிகம்தான். தற்காப்பு நடவடிக்கைகளாக ஆலோசனைகள் குவிக்கின்றன. வெளியிலே போகக்கூடாது என்கிறார்கள். போகாமல் எப்படி பிழைக்க முடியும்?

அதைக் குடி, இதைக் குடி என்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்கள் எங்கே போவார்கள். வெளியில் தண்ணீர் கூட இப்பொழுது இலவசமாகக் கிடைப்பதில்லையே?

மரங்கள் வெட்டப்பட்டதால்தான் வெயில் அதிகம் என்று பொத்தாம் பொதுவாக சொல்லப்படுகிறது.


அடுப்பெரிக்க எரிவாயு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, காட்டோரக் குடில்களில்கூட விறகுகளைத் தொடுவதில்லை; வேலிக்கருவையைக்கூட சீந்துவதில்லை.

மாட்டு வண்டிகளும், ஏர் கலப்பைகளும், கூரை வீடுகளும் அற்றுப்போனதால் அதற்காகவும் மரங்கள் சாய்க்கப்படுவதில்லை.

கதவுகள் ஜன்னல்களில்கூட உலோகங்களும்,  நெகிழிகளும் இடம் பிடித்துக் கொண்டதால் மரங்களின் பயன்பாடுகளும் குறைந்துவிட்டன.

சொல்லப் போனால் கடந்த 20-30 ஆண்டுகளில் ஆற்றோரங்களிலும், வயல் மேடுகளிலும், ஏரி ஓரங்களிலும், காடுகளிலும்,  மலைகளிலும் மரங்கள் என்னவோ அதிகமாகத்தான் வளர்ந்துள்ளன. 

அப்படி இருக்க, மரங்கள் பற்றாக்குறைதான் வெப்பத்திற்குக் காரணம் என்பது ஒரு யூகமாகத்தான் சொல்லப்படுகிறதோ என ஐயம் எழுகிறது.

கிழக்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்த மாவட்டங்களில்கூட வெயில் வெளுத்து வாங்குகிறதே? எனவே, அறிவியல் ஆய்வுக் உட்படுத்தி, கடும் வெப்பத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தால் மட்டுமே நிரந்தரத் தீர்வு காண முடியும்.

வரும் மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் முடிந்தவரை நம்மை நாம் தற்காத்துக் கொள்ள மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு செவிபடுப்போம். அதே வேளையில் இப்புவியைக் காப்பதற்கான வழிகளையும் தேடுவோம். 

 ஊரான்

Thursday, April 18, 2024

65 வயதில் நான் ஏன் முதன்முறையாக வாக்களித்தேன்?

பதின்ம வயதில் இயல்பாகவே நான் கடவுள் மறுப்பாளனாக வளர்ந்தவன். சென்னையில் தொழில் நுட்ப பட்டயப் படிப்பை முடித்து, திருச்சி பெல் நிறுவனத்தில் 20 வயதில் பணிக்கு சேர்ந்த தொடக்க காலத்தில், பொதுவுடமை கோட்பாடு என்னை ஈர்த்தது‌. அது முதல் மார்க்சிய லெனினிய பொதுவுடமை இயக்கத்தோடு என்னை இணைத்துக் கொண்டேன். 

இந்திய ஜனநாயகம் போலியானது, இரட்டைத் தன்மையுடையது. ஒரு பக்கம் நிரந்தரமான அதிகாரிகள் மறுபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இதில் உண்மையான அதிகாரம் அதிகாரிகளிடம் மட்டுமே குவிந்து கிடக்கிறது. மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டம் இயறறும் அதிகாரம் மட்டுமே உண்டு, மாறாக அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் கிடையாது, என்பதோடு மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்தால் அவர்களைத் திருப்பி அழைக்கின்ற உரிமையும் தேர்ந்தெடுத்த மக்களுக்குக் கிடையாது.


எனவே, இது போலி ஜனநாயகம், இந்த ஜனநாயகத்தில் பங்கேற்பதன் மூலம் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது, மாறாக மக்கள் புரட்சியின் மூலம், தேர்ந்தெடுக்கவும் திருப்பி அழைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சட்டம் இயற்றவும் அதை நடைமுறைப்படுத்தவும் அதிகாரம் உள்ள ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டும் என மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தொடர்ந்து தேர்தலை புறக்கணித்து வந்தன. அதனால் நானும் நேற்று வரை தேர்தல்களில் வாக்களித்ததில்லை.

தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில்தான் நான் வாக்களிக்கவில்லையே ஒழிய, திருச்சி பெல் ஆலையில் பணியாற்றிய போது 1990 இல் நடைபெற்ற உணவக நிர்வாகக் குழு தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். இதன் மூலம் நாலரை கோடி ரூபாய் திருச்சி பெல் உணவக ஊழலையும் எம்மால் வெளிக் கொணர முடிந்தது. தவிர, பெல் ஆலையில் நடைபெற்ற சேமநல நிதிக் குழு, மற்றும் உணவக நிர்வாகக் குழு உள்ளிட்ட தேர்தல்களிலும், தொழிற்சங்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களிலும் வாக்களித்திருக்கிறேன்.

இராணிப்பேட்டை பெல் ஆலையில் பணியாற்றிய போது 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நுண் பார்வையாளராக (micro observer) வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் தேர்தல் ஆணையத்தின் கீழ் பணியாற்றியிருக்கிறேன்.

காலங்கள் உருண்டோடின.  இந்திய அரசியல் வானில் மதவாத சக்திகள் காலூன்றத் தொடங்கி, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவும் நோக்குடன் ஒரு பாசிச வடிவிலான காட்டாட்சியை மோடி தலைமையில் அரங்கேற்றி வருகின்றனர். 

மதவாதச் சக்திகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுமேயானால், இந்திய போலி ஜனநாயகக் கட்டமைப்பில் இருக்கிற அரைகுறை ஜனநாயகமும்கூட முற்றிலுமாக பறிக்கப்பட்டு மனுதர்ம வடிவிலான ஒரு காட்டாட்சிதான் இனி நடைபெறும். 

அரசியல் அரங்கில் மாற்றுக் கருத்துக்களோடு குறைந்தபட்சம் செயல்பட வேண்டும் என்றாலும் கூட அதற்கு ஆட்சி அதிகாரத்தை மதவாத சக்திகள் கைப்பற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா கூட்டணி தவிர வேறு மாற்று தற்போதைக்கு இல்லை என்பதனால், இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது என பெரும்பாலான மார்க்சிய லெனினிய இயக்கங்கள் முடிவு செய்து இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரங்களை மேற்கொண்டனர். 

மேற்கண்ட கருத்தோடு எனக்கு முழுமையான உடன்பாடு ஏற்பட்டதனால், நானும் இந்தத் தேர்தலில் பாசிச பாரதிய ஜனதா கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளை மையமாக வைத்து, இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்திருக்கிறேன். 

தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தலில் முதன்முறையாக நான் வாக்களித்ததை ஒரு அரிய சாதனையாகக் கருதவில்லை. மாறாக தேர்தலிலும் பாசிச பாஜக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும், அதே வேளையில் தொடர்ந்து வீதிகளிலும் பாசிச சக்திகளுக்கு எதிராக களமாடி அவர்களை முற்றிலுமாக துடைத்தெரிய வேண்டும் என்கிற நோக்கத்தோடு எனது களப்பணியும் தொடரும். 

தமிழ்மணி

Wednesday, April 17, 2024

சூரிய ஒளி: கல் அமைதி காக்கிறது. மனிதன் ஆர்ப்பரிக்கிறான்!

தன் மீது ஒளி விழுந்த போதும்,
இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று  அந்தக் கல்லும் அமைதி காக்கிறது. ஆனால், ஆறறிவு படைத்த மனிதனோ ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறான்.

அறிவியல் தொழில்நுட்பம் அறியாத மக்களை மகிழ்விப்பதற்கோ அல்லது ஏமாற்றுவதற்கோ அல்லது முட்டாள்கள் ஆக்குவதற்கோ அறிவியல் தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. 

இது போன்ற 'அதிசயங்களுக்குப்' பின்னே உள்ள அறிவியல் தொழில்நுட்பம் பற்றிய புரிதல் அல்லது தகவல் மிகச் சொற்பமானவர்களிடம் மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது. மாறாக, பெரும்பான்மையானோர் வாய்வழிச் செய்தியாகவே கேட்டு அதை நம்பும் நிலைதான் இன்னமும் நீடிக்கிறது. 


அறிவியல் தொழில்நுட்ப அறிவும் இயக்கவியல் பொருள் முதல்வாத (dilectics of materialism) அறிவும் பாமரனையும் எட்டும் வரை இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கும். 

மேலும் துன்பங்களும் துயரங்களும் வாழ்க்கையில் தொடரும் வரை அறிவியல் தெரிந்தவர்களும் இதற்குள் இழுத்துச் செல்லப்படுவார்கள் என்பதும் கள எதார்த்தம்.

அறிவியல் தொழில்நுட்ப அறிவு மேலோங்கி, துன்பங்களும் துயரங்கள் அற்ற ஒரு வாழ்க்கை முறை அமையும் சமூகத்தில் வேண்டுமானால் இது போன்ற ஏமாற்று வேலைகள் மறைந்து ஒழியும். எனவே அது போன்ற ஒரு சமூகத்தை நோக்கி பயணிப்பதுதான் இன்றைய காலத்தின் தேவை.

ஊரான்

செய்தி: இந்து தமிழ், ஏப்ரல் 18, 2024

Sunday, January 14, 2024

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்?

பார்ப்பனியம் கோலோச்சிய மன்னராட்சி காலங்களில், ஒடுக்கப்பட்ட மற்றும் சூத்திர சாதி மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது ஒரு வரலாற்று உண்மை. இந்தியாவெங்கும், ஏன் பார்ப்பனியம் கோலோச்சிய எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. 

நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் தற்குறிகளாக இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதனால்தான். இன்றைய 'சீனியர் சிட்டிசன்கள்' இதை நேரடியாகக் கண்டவர்கள்.

மராட்டியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வி கொடுக்க முயன்ற ஜோதிராவ்-சாவித்திரி பாய் புலேயின் போராட்டங்கள் இதைத்தான் உணர்த்துகிறது. தமிழ் நாட்டில் நீதிக் கட்சி, அதைத் தொடர்ந்து திராவிட இயக்கங்கள் கல்வியை பரவலாக்கியது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு அவர்களின் காலனி ஆதிக்கத் தேவைக்காக கல்வி அனைவருக்கும் பரவலாக்கப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 

இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு திராவிட இயக்கங்களைக் குறை கூற புறப்பட்ட சங்கிக் கூட்டம், 

"திராவிட இயக்கம்தான் தமிழர்களுக்குக் கல்வி கொடுத்ததா? அதற்கு முன்னர் தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கவில்லையா? சங்க இலக்கியங்களைப் படைக்கவில்லையா? பக்தி இலக்கியங்களைப் படைக்கவில்லையா?" என்று எதிர்வாதம் செய்கின்றனர். 

சில தமிழ் தேசிய அரைகுறைகளும், நாம் தமிழர் சீமானின் தம்பிகளும் இதை அப்படியே வாந்தி எடுக்கின்றனர். சீமானின் தந்தை யாக்கோபுவும், அவரது பாட்டனும் முப்பாட்டனும்,  ஏன் வள்ளுவனைப் போல, ஔவைப் பாட்டியைப் போல, கம்பனைப் போல  இலக்கியங்களைப் படைக்க முடியவில்லை? இலக்கியம் இருக்கட்டும், குறைந்த பட்சம் கைச்சாத்தாவது இடத் தெரிந்ததா? இதற்கெல்லாம் விடை தேடாமல் விடலைத்தனமாக பேசுவதால் யாருக்கு இலாபம்?

தமிழ் செழித்து விளங்கியதும், சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டதும் பார்ப்பனியம் கோலோச்சாத காலகட்டத்தில். ஒரு காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சமூகம், இடையில் தற்குறிகளாக மாறியதற்கு பார்ப்பனியம்தான் காரணம்; சனாதனம்தான் காரணம் என்பதை மூடி மறைப்பதற்காக, திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கின்ற வேலையை சங்கிக் கூட்டம் செய்கிறது. 

இவர்கள் திராவிட இயக்கத்தை வசை பாடுவது என்பது, மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவையும் வசை பாடுவதற்கு ஒப்பாகும்.

சனாதன-பார்ப்பனிய எதிர்ப்பின்  அடிப்படையாகவும் ஆதாரமாகவும் இன்றளவும் இருப்பது திராவிட கருத்தியல்தான். திராவிடக் கருத்தியலை ஒழித்துக் கட்டினால், பார்ப்பன எதிர்ப்பு மட்டுப் பட்டுவிடும் என்று பார்ப்பனர்கள் கருதுகின்றனர். 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்துக்கு எதிரான, சனாதனக் கோட்பாடு, அதாவது இந்து மதக் கோட்பாடு நடைமுறையில் இருக்கும் வரை, அதாவது சாதியும், தீண்டாமையும் நீடிக்கும் வரை திராவிடக் கருத்தியல் தேவைப்படுகிறது. 

சாதியும், தீண்டாமையும் சரியானது, அவசியமானது, தேவையானது என்பதுதான் சனாதனத்தின் மையக் கருத்து. இதை மேலும் உயிர்ப்பிக்கவும் நிலைநாட்டவும் பார்ப்பனர்கள் விரும்புகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் பாரதிய ஜனதா கட்சி. அதை பார்ப்பனிய ஜனதா கட்சி என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். 

மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி என்பது பார்ப்பனிய மீட்டுருவாக்கத்தின் பொற்காலம். இந்த 10 ஆண்டு காலத்தில் கோவில்கள் பெருகின. கோவில்கள் பெருகினால் பார்ப்பனர்களின் வயிறு மட்டும்தான் நிறையும்.

அரசு நடத்தும் ஆலைகளும், கல்விச்சாலைகளும் இழுத்து மூடப்பட்டு ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையும் வேலை வாய்ப்பும் பறிக்கப்பட்டு வருவதை கடந்த 10 ஆண்டுகளில் நிறைவே பார்த்து விட்டோம்.

இத்தகைய மக்கள் விரோத, பார்ப்பன பாசிச பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் பேசுவது பார்ப்பனியத்துக்கு பல்லக்குத் தூக்குவதற்கு ஒப்பாகும்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தப் பக்கம்? நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது.

ஊரான்