Showing posts with label ஆந்திரா. Show all posts
Showing posts with label ஆந்திரா. Show all posts

Monday, 6 October 2025

மரண பீதியில் திருவண்ணாமலை கிரிவலம்!

2021 ஆம் ஆண்டுவரை கார்த்திகை தீபத்தன்று மட்டும்தான் திருவண்ணாமலையில் கூட்டத்தைப் பார்க்க முடியும். மற்றபடி அது ஒரு அமைதியான நகரம். 

ஆனால், இன்று ஆந்திராவிலிருந்தும் தெலுங்கானாவிலிருந்தும் வரும் பக்தர்களால், வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், பௌர்ணமி நாட்களிலும் தொடர்வண்டி நிலையம், அண்ணாமலையார் கோவில் மற்றும் கிரிவலப்பாதைகளில்  கூட்டம் நிரம்பி வழிகிறது. 


கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றதாக சொல்லப்படுகிறது. 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையை சுற்றிவர சுமார் 11 மணி நேரம் ஆகிறதாம்.

அண்ணாமலையார் கோவில் அருகில் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு 40 அடி அகலம் இருந்த கிரிவலப் பாதை 20 அடி அகலமாக குறைக்கப்பட்டதால், எந்த நேரத்திலும் கூட்ட நெரிசலில் (stampede) பக்தர்கள் சிக்கிக் கொள்வதற்கான ஆபத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த திருவண்ணாமலையை இணைக்கும் ஒன்பது முக்கியச் சாலைகளில் 25க்கும் மேற்பட்ட தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. 

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்களில், பௌர்ணமி நாட்களில் 40 சதவீதம் தமிழர்கள், 60 சதவீதம் தெலுங்கர்கள், இதுவே வார இறுதி நாட்களில் 95 சதவீதம் தெலுங்கர்கள் என சொல்லப்படுகிறது. 

அண்ணாமலையை அருணாச்சலேஸ்வரராக்கி, இந்த அருணாச்சலேஸ்வரர் தெலுங்கு மக்களின் குலதெய்வம் எனவும், தெலுங்கு மக்கள் கண்டிப்பாக இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும் எனவும்,  சகாந்தி கோட்டீஸ்வர ராவ் என்கிற தெலுங்கு ஆன்மீகச் சொற்பொழிவாளர் தொடர்ந்து youtube சேனல்களில் செய்து வரும் பரப்புரையால்தான், தெலுங்கர்கள் திருவண்ணாமலையை நோக்கி அதிக அளவில் படையெடுப்பதாகக் கூறப்படுகிறது. 

“அருணாச்சலேஸ்வரர் எங்க சாமி” என்று தெலுங்கர்கள் வெளிப்படையாகப் பேசுவதையும் பார்க்க முடிகிறது. திருவண்ணாமலை ஊர் பெயரையே “அருணாச்சலம்” என தமிழ்நாடு அரசுப் பேருந்துகளிலேயே பெயர் மாற்றம் செய்கிற அளவுக்குச் சென்று, அது சர்ச்சையானதும் நாம் அறிந்ததே. 

திரைப்படக் கவர்ச்சிக்கு ஆட்பட்டு நடிகனைக் காண கூடும் கூட்டத்திற்கும், பக்திக்கு ஆட்பட்டு பரவசத்தோடு கோவில்களில் கூடும் கூட்டத்திற்கும் பெரிய வேறுபாடு எதுவும் கிடையாது. இரண்டிற்கும் பொதுவானது தரிசனம். தரிசனத்திற்காக முண்டியடிக்கும் பொழுது, கூட்டநெரிசலால் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தவிர்க்க முடியாது. 

ஆண்டில் ஒரு நாள் என்றால் வெளியூர் பக்தர்களால் ஏற்படும் இன்னல்களை திருவண்ணாமலை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், இதுவே ஆண்டு முழுக்க என்றால்  யாரால்தான் சகித்துக் கொள்ள முடியும்?

காவல் துறையைச் சேர்ந்த இரண்டு கயவர்கள், ஆந்திராவிலிருந்து காய்கறி ஏற்றி வந்த இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததால், திருவண்ணாமலை ஏற்கனவே அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. 

தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், இன்றில்லை என்றாலும் ஒரு நாள், திருவண்ணாமலை பிணக்காடாக மாறுவதை அந்த சிவனே நினைத்தாலும்  தடுக்க முடியாது! 

"மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும்; வறுமையையும் உண்டாக்குகின்றன" என்று சொன்ன அறிஞன் மரேக் கோன் கூற்றோடு, "அவை மரணங்களையும் உண்டாக்கும்" என்பதையும் சேர்க்க வேண்டி வரலாம். எச்சரிக்கை!

ஊரான்

செய்தி ஆதாரம்: The Indian express, 06.10.2025

தொடர்புடைய பதிவுகள்