Showing posts with label இந்து முன்னணி. Show all posts
Showing posts with label இந்து முன்னணி. Show all posts

Thursday, 10 November 2011

பாலும் பசுவதையும்!

”தமிழகத்தில் பசு வதையைத் தடுப்பதற்கான அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் இந்து வழக்குரைஞர்கள் முன்னணியில் இடம் பெற்றுள்ள வழக்குரைஞர்கள் மேற்கொள்ள வேண்டும்”

”வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க வழக்குரைஞர்கள் சரியான சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்”

புதன் கிழமை (09.11.2011) அன்று வேலூரில் ”இந்து வழக்குரைஞர் முன்னணியை” தொடங்கி வைத்து இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

ஏதோ ஒரு கட்சிக்காரன் வந்தான். ஒரு சங்கத்தைத் தொடங்கினான், என்று இதை மிகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

குஐராத்தில் பசுவதை தடைச்சட்டம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. பசுவைக் கொன்றால் சிறைவாசம் உறுதி. ஏற்கனவே இருந்த ஓராண்டு சிறை தண்டனையால் பசுக்கொலையை தடுக்க முடியவில்லையாம். அதனால் சிறை தண்டனையை ஏழு ஆண்டுகளாக்கிவிட்டார்கள். கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்த போதே மசோதா தயாராகிவிட்டது. இதை செயல்படுத்தக் கோரி போராட்டம் எல்லாம் நடத்தி இருக்கிறார்கள் இந்து மதவெறியாளர்கள்.

எது வதை?

இந்து முன்னணி, பாரதிய ஐனதா, ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மத அமைப்புகள் மட்டும் பசு வதையைத் தடுக்க முணைப்பு காட்டுவதேன்? பசு இந்துக்களின் தெய்வமாகக் கருதப்படுவதாலா? அல்லது உயிர் வதைக் கூடாது என்பதாலா? பசுவைக் கொல்லக் கூடாது என்பவர்கள் ஏன் எருது வதையை எதிர்ப்பதில்லை?

கொல்வது மட்டும்தான் வதையா? கொடுமைப்படுத்துவது, இம்சிப்பதெல்லாம் வதையில் சேராதா? “ஏண்டா போட்டு வதைக்கிற?” என்றுதானே நம்மை மற்றொருவர் இம்சிக்கும் போது கேட்கிறோம். எனவே வதை என்பதை இம்சித்தல் அல்லது கொடுமைப்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாமே!

உயர் சாதிக்காரன் கீழ்சாதிக்காரர்களை வதைக்கிறான். பணக்காரன் ஏழைகளை வதைக்கிறான். முதலாளி தொழிலாளியை வதைக்கிறான். மாமியார் மருமகளை வதைக்கிறாள். காவல் துறை மக்களை வதைக்கிறது. ஜெயா அரசு மக்கள் நலப் பணியாளர்களை வதைக்கிறது. ஆப்கானை வதைத்து ஈராக்கை வதைத்து-லிபியாவை-வதைத்து தற்போது ஈரானை வதைக்கத் திட்டம் போட்டு வருகிறது அமெரிக்கா.

ஆளுமையையும், அதிகாரத்தையும், சுரண்டலையும் அடிப்படையாகக் கொண்டே இப்படிப்பட்ட மனித வதைகள் அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இப்படி அன்றாடம் அரங்கேறி வரும் மனித வதைகளைக் கண்டு கொள்ளாதவர்கள் பசுவதையை மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள்? பசுக்களை இந்துக்கள் புனிதமாகக் கருதுவதால் கொல்லக் கூடாது என்கிறார்களா? இஸ்லாமியர்கள் பசுக்களைக் கொன்று தின்கிறார்கள் என்பதற்காக எதிர்க்கிறார்களா? உயிர்களைக் கொள்வது பாவம்-உயிர் வதை பாவம் என்பதற்காக பசு வதையை எதிர்க்கிறார்களா?

காந்தியும் ஆட்டுப் பாலும்

“பால் சாப்பிடுவதை விட்டதற்கு மிக முக்கியமான நோக்கம் ஆன்மீகமானதேயாகும்” என்று காந்தி கடைபிடித்த ஆன்மீகம் கருதி பசு வதை கூடாது என்கிறார்களா?

“எருமைகளின் (அவைகளும் பசுக்கள்தானே) மடிகளிலிருந்து கடைசி சொட்டுவரையிலும் பாலைக் கறந்து விடுவதற்குக் கல்கத்தாவில் மாட்டுக்காரர்கள் அனுசரித்த கொடிய முறைகள் என் மனக் கண்முன் காட்சியளித்தன; மாமிசம் எவ்விதம் மனிதனின் உணவல்லவோ, அதேபோல மிருகங்களின் பாலும் மனிதனின் உணவாக இருப்பதற்கில்லை.” என்று காந்தி சொன்னாரே அத்தகைய கொடுமை கூடாது என்பதால் பசுவதை கூடாது என்கிறார்களா?

“நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது” என்று மருத்துவர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கடைசி வரை பசுவின் பாலைத் தொடவில்லை காந்தி. “சத்தியாகிரகப் பேராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்து வந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடு இருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கிவிட்டது” என்று காந்தி உயிருக்காக சத்தியத்தைக் கைவிட துணிகிறார்.

“நான் விரதம் எடுத்துக் கொண்ட போது பசுவின் பாலும், எருமைப் பாலுமே என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல, இவைகளெல்லாம்அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றைவிடப் பலமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது”  என காந்தி பின்னாளில் சத்தியத்தைக் கைவிட்டார்.

காந்தியின் பல்டி

“அதனால்தான் நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, … பசுப்பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது.  பசுப்பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம்” என்று காந்தி பின்னாளில் பால் பண்ணைகளுக்காக குரல் கொடுக்கிறார். உயிரே போனாலும் பரவாயில்லை என்று பசுவின் பாலைத் தொடாதவர் பிறகு யாருக்காக பால்பண்ணைகளை அமைக்கக் கோருகிறார்?

காந்தியின் இந்த தலைகீழ் மாற்றம் ஏன் நடந்தது? யாருக்காக நடந்தது? இங்கேதான் பார்ப்பனர்களின் சூழ்ச்சி அடங்கியுள்ளது. வேத காலத்தில் பார்ப்பனர்கள் மாமிசம் உட்கொண்டார்கள், அதுவும் பசு மாமிசம்தான் அவர்களின் பிரியமான உணவு என்பதற்கான ஆதாரங்கள் வேதங்களிலும் மனுஸ்மிருதியிலும் காணக்கிடந்தாலும் இன்று மட்டும் அவர்கள் பசுவை ஏன் தெய்வமாகக் கருதுகிறார்கள்? உயிர்க் கொலையை எதிர்த்த பௌத்தம் செல்வாக்கு பெற்றதால் தாங்களும் செல்வாக்கு பெற வேண்டி மாமிசத்தைக் கைவிட்டு சைவத்துக்கு மாறியவர்கள் பார்ப்பனர்கள். மாமிசத்தைக் கைவிட்ட பிறகு உணவுக்கு என்ன செய்வது? விவசாயம் தெரியாது, மந்திரம் ஓதி பிழைப்பதைத்தவிர வேறு வேலைகள் எவுதும் தெரியாது. எப்படி பிழைப்பது?  எதைத்தின்பது? என்கிற இக்கட்டான நிலையில்தான் அவர்கள் பாலைத் தேர்வு செய்திருக்க வேண்டும். பிற்காலத்தில் பால் இல்லாமல் அவர்கள் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏழ்மையும் மாட்டுக்கறியும்

மற்றொரு பக்கம் அடிமைகளாக நடத்தப்பட்ட மக்கள் வறுமை காரணமாக உணவுக்காக மாடுகளைக் கொன்று அதன் கறியை உட்கொண்டு உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். பசுக்களெல்லாம் கொல்லப்பட்டுவிட்டால் பார்ப்பனர்களுக்கு பால் பற்றாக்குறை ஏற்படுமே? அதனாலேயே பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். இந்த உண்மையைச் சொன்னால் எடுபடாது என்பதால் பசு புனிதமானது என்கிற கருத்தை பரப்பியிருக்க வேண்டும். அன்று பார்ப்பனர்கள் மட்டுமே இந்துக்களாக அறியப்பட்டார்கள். பின்னாளில் மற்றவர்களும் இந்துக்களாக ஏற்கப்பட்டதால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தெய்வமாக இருந்த பசு பொதுவில் இந்துக்களின் தெய்வமாகக் விரிவாக்கப்பட்டிருக்கவேண்டும். இதில்தான் காந்தியும் வீழ்ந்திருக்க வேண்டும்.

இது ஏதோ அனுமானம் அல்ல. பழைய வரலாற்றின் எச்சங்களை இன்றும் காண முடியும். இன்று பால் இல்லாமல் பிறர் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் பார்ப்பனர்களால் உயிர் வாழ முடியாது. எனவே பார்ப்பனர்களின் தேவையிலிருந்து எழுந்ததுதான் பசுப்பாதுகாப்பு. மாட்டுக்கறி ஏழை எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் உணவாக இன்றும் நீடிப்பது வரலாற்றின் எச்சம்தானே!

இராம.கோபாலனின் உள்நோக்கம்

பசுவதையை உண்மையியே எதிர்ப்பவர்கள் என்றால் ஒரு கல்லூரி நிர்வாகத்தால் (http://hooraan.blogspot.com/2010/12/blog-post_24.html) பசுக்கள் கொல்லப்பட்டபோது இவர்கள் எங்கே போனார்கள்? எதிர்த்து ஏன் கேள்வி கேட்கவில்லை? பணக்காரன் பசுவைக் கொன்றால் பரவாயில்லை. ஆனால் ‘பறையன்’ பசுவைக் கொள்வதை மட்டும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘பறையனாவது’ மடி வற்றிய பசுவைத்தான் கொள்கிறான். ஆனால் இங்கே பணக்காரன் பால்சுரக்கும் பசுக்கைளையல்லவா கொன்றிருக்கிறான்.

தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் கெடுவதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால் இதைவிட மிக மோசமாக இராணிப்பேட்டையில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு பண்மடங்கானது. இராணிப்பேட்டை சிப்காட்டில் அமைந்துள்ள திருமலை கெமிக்கல்ஸ் (இது ஒரு பார்ப்பனருக்குச் சொந்தம்), அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுற்றுவட்டாரத்திலுள்ள புளியந்தாங்கல், புளியங்கண்ணு, அவரக்கரை, இராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள ஏரி குளங்களை பாழாக்கியதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கி விவசாயத்திற்கும், குடிப்பதற்றும் பயன்படாத நிலைக்கு ஆளாக்கிவிட்டன. இத்தகைய நீரைக் குடிக்கும் பசுக்கள் உள்ளிட்ட கால் நடைகளும் இனம் புரியா நோய்களுக்கு ஆளாகி இறந்து போகின்றன. இங்கேயும் பசுக்கள் கொல்ப்படுகின்றன. இவை எல்லாம் இராம கோபாலனுக்குத் தெரியாதா என்ன?. இத்தகைய ஆலைகளால்தான் சுற்றுச்சூழல் மாசடைந்த நகரங்களில் உலகிலேயே இராணிப்பேட்டை இரண்டாம் இடத்தில் உள்ளது.


மேற்கண்ட இரு கோரிக்கைகளிலும் மக்கள் நலன் என்பதைவிட இஸ்லாமியர்களின் மீதான காழ்ப்புணர்ச்சியிலிருந்து வைக்கப்பட்டதும் அதையொட்டி மத மோதலுக்கு வித்திடுவதும்தான் இராம.கோபாலனின் நோக்கமாக இருக்கமுடியும். வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தோல் ஆலைகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவை என்பதும், தாழ்த்தப்பட்டவர்கள் மாட்டுக்கறி உண்கிறார்கள் என்பதைவிட பசுக்கள்/மாடுகள் இஸ்லாமியர்களுக்காகவே வெட்டப்படுகின்றன என்பதும்தானே இவர்களது வாதம்.

தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்த நிறுத்த கோரிக்கை வைக்கும் இராம் கோபாலன், திருமலை கெமிக்கல்ஸ், அல்ட்ரா மைரைன், கமார் கெமிக்கல்ஸ், மல்லாடி போன்ற ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை தடுத்து நிறுத்தவும் கோரிக்கை வைத்திருந்தால் அதில் நேர்மை இருந்திருக்கும். இந்து முன்னணியிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

Thursday, 3 February 2011

திருப்பூர்: சாயப்பட்டறைகளின் இரட்டைப் படுகொலை!


திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகளின் சுற்றுச்சூழல் கேட்டால் மெல்ல மெல்லக் கொலையாகும் மக்கள் ஒரு பக்கம் . அதே சாயப்பட்டறைகளை நம்பி இதுவரை வாழக்கையை ஓட்டி வந்த மக்கள் இனி உயிர் வாழ்வதற்கான உரிமையை இழக்கும் அபாயம் மற்றொரு பக்கம்.  ஒரு வகையில் திருப்பூர் சாயப்பட்டறைகளால் நிகழ்ந்திருக்கும் இரட்டைப் படுகொலை இது.

739 சாயப்பட்டறைகளை இழுத்து மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதி மன்றம். நேரடி வேலைவாய்ப்பில் உள்ள 35 000 பேரும் மறைமுக வேலைவாய்ப்பில் உள்ள இரண்டரை இலட்சம் பேரும் இந்தத் தீர்ப்பால்  வேலையிழப்பார்கள். மிகை நேரப்பணியுடன் சேர்த்து ஒரு நாளைக்கு ரூ.500 வரை சம்பாதித்து 'காஸ்ட்லியான' நகரத்தில் 'சுமாரான' வாழ்க்கையை நடத்தியவர்களின் கதி இனி கேள்விக்குறிதான். பனியன் தொழிலாளர்கள் சங்கத்தின் (AITUC) பொதுச் செயலாளர் தோழர்.கே.பாலாமணி அவர்கள் தனது கவலையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

739 சாயப்பட்டறைகளை மூடினால் ரூ.1500 முதல் ரூ.2000 கோடி வரை இனி வருவாய் இழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ரூ. 11 000 கோடிக்கு வணிகம் நடக்கும் திருப்பூர் பின்னலாடைத் தொழிலே நிலைகுலைந்து போகும். இது முதலாளிகளின் கவலை. 

தீர்ப்பு தாமதமாக வந்தாலும், நொய்யல் ஆற்றில் கழிவுகளைக் கலக்கும் சாயப்பட்டறைகளை மூடுவதற்கு தமிழ் நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் விரைந்து செயல்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்பதாகவும், வாழ்க்கையை இழந்தாலும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் திருப்பூர், கருர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும் நொய்யல் ஆற்றுப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபையின் தலைவர் ஏ.பி.கந்தசாமி கருத்துக் கூறியுள்ளார்.

மாசடைந்த கழிவு நீரால் 70 000 ஏக்கர் விவசாய நிலம் பாழடைந்ததோடு 1.75 இலட்சம் தென்னை மரங்களும் அழிந்துவிட்டன. மாசடைந்த ஆற்று நீரைக் குடித்ததால் புற்று நோயால் 600 பெண்கள் மாண்டு போயுள்ளனர். ஏராளமான கால் நடைகளும் இறந்துள்ளன. திருமணமான பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போய்விட்டது. குழந்தை பாக்கியம் இருக்காது என அஞ்சுவதால் நொய்யல் ஆற்றங்கரையின் 83 பகுதிகளில் வாழும் இளைஞர்களுக்கு பெண் கொடுக்க அஞ்சுகிறார்கள் பெண்ணைப் பெற்ற பெற்றோர்கள். 


உயர்நீதி மன்ற உத்தரவையடுத்து இன்று மாலை நிலவரப்படி ஐநூறுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து நாளை முழு அடைப்பு நடத்தப்போவதாக இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக விவசாயிகள் விழி பிதுங்கி நின்ற போது வேடிக்கை பார்த்தவர்கள் இன்று முதலாளிகளுக்காக களத்தில் இறங்கியிருப்பதால் இந்து முன்னணியின் புரவலர்கள் யார் என்பதும் சேர்த்தே அம்பலமாகியுள்ளது. 


கழிவு நீரை குழாய்கள் மூலம் நேரடியாக கடலில் கலப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாளை அனைத்து சங்க கூட்டுக் குழு முதல்வரை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்போதே அணிசேர்க்கை தொடங்கிவிட்டது. இனி திருப்பூரின் நிலை.....? 

இனி வாழ்வை இழக்கப் போகும் தொழிலாளர்களின் பக்கம் நிற்பதா? அல்லது ஏற்கனவே வாழ்க்கையை இழந்த விவசாயிகளின் பக்கம் நிற்பதா? அல்லது இந்து முன்னணியோடு சேர்ந்து முதலாளிகளின் பக்கம் நிற்பதா? தன்னலப் பார்வை மட்டுமே சமூகத்தில் புரையோடியிருப்தால் அவரவர் பக்கமே நியாம் இருப்பதாகத்தான் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவார்கள். இது ஒரு சிக்கலான பிரச்சனை என்பதால் சற்று விரிவாகப் பரிசீலிப்பதே தொலை நோக்கில் நல்ல தீர்வை வந்தடைய உதவும்.

---------------- 

சில ஆண்டுகளுக்கு முன்பு புதியகலாச்சாரம் இதழின் அட்டையில் ஒரு சிறுமியின் படம் வெளியாகியிருந்தது. திருப்பூர் சாயப்பட்டறைகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்த அந்த ஒரு படம் போதுமானது. சில செய்திகள் மூளையில் பதிவாகிவிட்டால் மூளை சிதைந்தாலும் பதிவு சிதையாது என்பது போல அந்தப்படம் இன்றும் என் கண் முன்னால் நிழலாடுகிறது. அந்தப்படம் அருவெறுப்பையும், அனுதாபத்ததையும், சீற்றத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தியது.

"திருப்பூர் சாயப்பட்டறைகள்:வண்ணமா-அவலமா?" http://www.vinavu.com/2010/08/30/tiruppur-coloring-industries  என்ற தலைப்பில் ஜோதிஜி அவர்கள் வினவு தளத்தில் எழுதிய கட்டுரை திருப்பூர் சாயப்பட்டறைகளினால் உருவாக்கப்படும் அபாயத்தை ஆதாரங்களோ அலசியது.

சாயக் கழிவு நீர் இல்லாமல் ஆடைகளை தயாரிப்புது ஒன்றுதான் இதற்கு சிறந்த வழி என்பதை தனது நண்பர் நடத்தும் தொழிலை ஆதாரமாக சுட்டிக்காட்டியுள்ளார் ஜோதிஜி. 
"என்னுடைய நண்பர் மற்றவர்களைப் போல  பெரிய முதலீடுகளை முடக்காமல் வௌ்ளையை மட்டும் விருப்பமான தொழிலாக தொடக்கம் முதல் செய்து கொண்டிருக்கிறார். எது நம்மால் முடியாது என்று தெரிகின்றதோ? அதில் நுழையாமல் இருந்தாலே நம்முடைய தொழில் வெற்றி உறுதி என்று என்னை உணர வைத்தவர். சாயக்கழிவு நீரை ஒப்பிடும் போது சலவைப்பட்டறையில் இருந்து வெளிவரும் நீரின் நச்சுத்தன்மை குறைவானதே.  ஊரில் துவைத்துக் கொடுப்பவர்கள் வெள்ளாவி என்று கேள்விப்பட்டு இருப்பீங்களே?  அதைப் போல சற்று கொஞ்சம் நவீனம்".
ஆனால் நடைமுறையில் வண்ண ஆடைகளுக்கே அதிக கிராக்கி என்பதையும் அதே கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
"திருப்பூர் ஆடை உற்பத்தியில் வௌ்ளை ஆடைகளை விட வண்ண ஆடைகளுக்குத் தான் அதிக கிராக்கி...” 

அதிக நிறங்களைப் பயன்படுத்தவதால்தான் கழிவு நீர் அதிக நச்சுத் தன்மையடைவதையும் கூறுகிறார்.

"நிறங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இங்குள்ளவர்களின் வாழ்வாதாரம் வகை தொகையில்லாமல் அழிந்து கொண்டிருக்கிறது. காரணம் விரும்பும் ஒவ்வொரு நிறத்திற்கும் பயன்படுத்தும் சாயத்தின் அடர்த்தி பொறுத்து வெளியாகும் கழிவு நீரில் நச்சுத்தன்மை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்".

கிராக்கி (demand) எதற்கு அதிகமோ அதை உற்பத்தி செய்வதுதானே புத்திசாலித்தனம். அதனால் ”ஜீரோ டிஸ்சார்ஜ்” முறையில் தொழில் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதற்கு அதிக செலவாகும். 

இதையும் ஜோதிஜி அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்.
"இதிலும் சிறப்பான பல நிறுவனங்களும் உண்டு. பிரச்சனை வராத காலத்திற்கு முன்பே இதை சமூகப் பிரச்சனையாக பார்த்து ஜீரோ டிஸ்சார்ஜ் என்று சாயத் தண்ணீரை சுத்திகரித்து வெளியே அனுப்பத் தொடங்க இன்று அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சுத்திகரிக்கப்பட்ட அந்த சாய நீரை இன்று தென்னைகளுக்கு பாய்ச்சும் அளவுக்கு கொண்டு வந்து உள்ளனர்".

ஜோதிஜி அவர்களின் கட்டுரைக்கு பின்னனூட்டமிட்ட பல நண்பர்கள் பல்வேறு ஆலோசனைகளை முன் வைத்துள்ளனர். நவீன முறையில் "ஜீரோ டிஸ்சார்ஜ்" மூலம் இதற்குத் தீர்வு காணலாம் என பலரும், வெள்ளை ஆடைகளை உடுத்தலாம் என ஒரு சிலரும் கூறியுள்ளனர். "ஜீரோ டிஸ்சார்ஜ்" என்றாலும் அதற்கான கூடுதல் செலவை சுமக்கப் போவது யார்? நிலம் பாழானது போதாது என இப்போது கடலையும் பாழாக்க புறப்பட்டுள்ளனர் சிலர். ஆனால் வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன் என்பது குறித்து யாரும் பரிசீலிக்கவில்லை.

வண்ண ஆடைகளுக்கு மட்டும் அதிக கிராக்கி ஏன்? இந்த கிராக்கி யாரால் ஏற்படுத்தப்பட்டது? இக் கேள்விகளுக்கு விடை தேடாமல் சாயப்பட்டறைகளை ஒழிக்கவும் முடியாது. சாயக் கழிவுகளின் பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும் முடியாது. இதை ஒரு தனி தலைப்பில் பிறகு பார்க்கலாம்.