Showing posts with label நிகரகுவா கியூபா. Show all posts
Showing posts with label நிகரகுவா கியூபா. Show all posts

Friday, 10 October 2025

நோபல் பரிசு: நாய்களுக்குப் போடும் எலும்புத் துண்டா?

வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் நடுவில் கரீபியன் தீவுகளை ஒட்டி, தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடுதான் வெனிசுலா.  சோசலிசத்தை ஏற்றுக் கொண்ட  'ஐக்கிய சோசலிஸ்ட் கட்சி'யைச் சார்ந்த ஹ்யூகோ சாவேஸ் தலைமையில் 1998 இல் இடதுசாரி அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்றைய  நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக் காலம் வரை  ஐக்கிய சோசலிஸ்ட் கட்சித் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதற்கு, தனது சிஐஏ உளவுத் துறை மூலம் அமெரிக்கா எண்ணற்ற சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 

ஹ்யூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்தில், பெரிய தனியார் நிறுவனங்கள் எல்லாம் அரசுடைமையாக்கப்பட்டன. மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், வெனிசுலா அரசாங்கம் பிடல் காஸ்ட்ரோவின் கியூபா நாட்டு இடதுசாரி அரசோடு நட்புறவு கொண்டிருந்தது.


வெனிசுலாவில் ஏற்பட்ட இத்தகைய மாற்றங்களால் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இடதுசாரிக் கருத்துக்கள் பற்றிப் படர்ந்தன. இடதுசாரியான டேனியல் ஓர்ட்டேகா தலைமையில், நிக்கராகுவா நாட்டில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இடதுசாரி அரசியல், தனது அடிவயிற்றையே கலக்குவதாக அமெரிக்கா அஞ்சி நடுங்கியது.

சோசலிசத்தைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளையும், வெனிசுலா நாட்டு  இடதுசாரி அரசாங்கத்தையும் அமெரிக்கா சும்மா விட்டுவிடுமா? 

வெனிசுலாவில் சர்வாதிகாரம் கோலோச்சுவதாகக் கூக்குரலிட்டது. வெனிசுலா நாட்டுக்கு எதிராக எண்ணற்ற பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தி வெனிசுலாவை சீர்குலைக்க முயற்சிக்கிறது.
காரணம் மிகவும் எளிமையானதுதான் அமெரிக்காவுக்கு இடதுசாரிகளைப் பிடிக்காது; சோசலிசம், கம்யூனிசம் பிடிக்காது. 
***
ஜனநாயகம் எப்பொழுதும் பொதுவானதாக இருக்க முடியாது.

ஜனநாயகம் யாருக்கானது என்பதுதான் முக்கியமானது. அமெரிக்கா உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகள் பேசும் ஜனநாயகம் முதலாளிகளுக்கானது. சோசலிசத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்லது நாடுகள் பேசும் ஜனநாயகம் உழைக்கும் மக்களுக்கானது. 

முதலாளிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது, இவர்களது ஆட்சிக்கு எதிராகப்  போராடும் மக்களைக் கட்டுப்படுத்துவார்கள். அதேபோல்,  இடதுசாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது இவர்களது ஆட்சிக்கு எதிராகப் போராடும் முதலாளிகளைக் கட்டுப்படுத்துவார்கள்.

சொத்துடமையும், சுரண்டலும் ஒழிக்கப்பட்டு கம்யூனிச சமூகம் உருவாகும்போதுதான், அனைவருக்குமான ஜனநாயகம் இருக்கும். அதுவரை ஜனநாயகம் சார்புத் தன்மை கொண்டதுதான்.

இத்தகையப் புரிதலில் இருந்துதான், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவைப் பார்க்க வேண்டும்.

சர்வாதிகாரத்துக்கு எதிரானப் போராட்டம் என்ற பெயரில் வெனிசுலாவின் ஐக்கிய சோஷலிசக் கட்சி ஆட்சிக்கு எதிராகப் போராடுவதற்கு ஏவிவிடப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ என்பவருக்குத்தான், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவரது போராட்டம் சர்வாதிகாரத்திற்கு எதிரானதோ அல்லது ஜனநாயகத்திற்கானதோ அல்ல. மாறாக, இது வெனிசுலா நாட்டு முதலாளிகளின் நலனுக்கானது, அமெரிக்காவின் நலனைப் பாதுகாப்பதற்கானது. ஒரே வரியில் சொல்லப்போனால், இவரது போராட்டம் இடதுசாரிகளுக்கு எதிரானது.

தனக்காகக் குறைக்கும் நாய்களுக்கு, முதலாளிகள் எலும்புத் துண்டு போடுவது இயல்புதானே!

ஊரான்