விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தையடுத்த, சேஷசமுத்திரம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 2012ம் ஆண்டு இப்பிரச்சனை எழுந்த போது அரசு நிர்வாகம் இதை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.
இந்த ஆண்டு 17.08.2015 அன்று மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடத்துவதற்கு தாங்கள் வசிக்கும் பகுதியில் தேர் ஒன்றை தாயார் செய்து வைத்திருந்தனர் தாழ்த்தப்பட்டவர்கள். மாரியம்மனுக்கு தாழ்த்தப்பட்டவர்கள்
தேர்த்திருவிழா நடத்துவதா என வெறி கொண்ட ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்டவர்களின் பகுதிக்குள் நுழைந்து அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததோடு தாழ்த்தப்பட்டவர்களின் குடிசைகளையும் எரித்து சாம்பலாக்கியுள்ளனர்.
இது ஏதோ ஒரு சிலர் செய்ததல்ல. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒரு பெருங்கூட்டமே இதைச் செய்துள்ளது.
இந்தியா பல்வேறு மத - இன - சாதி மக்களைக் கொண்ட நாடாம். வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்ற நாடாம். அய்யங்கார் முதல் அப்துல் கலாம் வரை எல்லோரும் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
இவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மைதான்.
தாழ்த்தப்பட்டவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிப்பதில் உயர்சாதி இந்துக்கள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள். இந்தியாவின் தென்கோடி முதல் வடமுனை வரையிலும், வங்கம் முதல் மும்பை வரையிலும் இந்த ஒற்றுமை ஒன்றுதான் நிலவுகிறது.
வர்ணாசிரிம - நால்வர்ண - மனுதர்ம - பார்ப்பன இந்து மத நம்பிக்கைகள், நடைமுறைகள் தொடரும் வரை இந்த ஒற்றுமை நீடிக்கவே செய்யும்.
இந்த ஒற்றுமையை சிதைப்பதற்கான வழிவகைகளை மேற்கொண்டாலொழிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடிவேதுமில்லை.
எரிக்கப்பட்ட குடிசைகள்
பீதியில் பெண்கள்
அச்சத்தில் மக்கள்
கதறி அழும் பெண்கள்



