Wednesday, 12 June 2019

வாசிப்பில் முனைப்பு காட்டும் இளைஞர்கள்!


இராணிப்பேட்டை, பெல் வாளகத்தில் செயல்படும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தின் 19-வது சந்திப்பு கடந்த 30.05.2019 அன்று நடை பெற்றது. 

தோழர் துரை.பாலகிருட்டிணன் நெறியாளுகை செய்தார். 

தோழர் செ.விநோதினி வரவேற்புரை நிகழ்த்தினார். இதுதான் அவருக்கு முதல் மேடை என்றாலும் வரும் காலம் இளைஞர்கள் கையில்தான் என்பதை குறிப்பால் உணர்த்தினார்.

தே.இலட்சுமணன் எழுதிய “பகுத்தறிவாளர் புத்தர்” என்கிற நூல் குறித்து தோழர் மு.தங்கவேல் உரையாற்றினார். சமத்துவத்தை போதித்த பௌத்தத்தை பார்ப்பனர்கள் எவ்வாறு வீழ்த்தினர் என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மிக அழுத்தமாக தனது உரையில் வெளிப்படுத்தினார்.

கே.பாலகோபால் எழுதிய “கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்” என்கிற நூல் குறித்து தோழர் நா.பாலாஜி மிகச் சிறப்பாக உரையாற்றினார். காஷ்மீரின் வரலாறு, காஷ்மீர் குறித்த இந்திய பாகிஸ்தான் இரு அரசுகளின் நிலைப்பாடு, இதில் காஷ்மீர் மக்களின் விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை முதன் முறையாக இருந்தாலும் மிகத் தெளிவாக இவர் முன்வைத்ததைப் பார்க்கும் போது இவர் இந்நூலை மிக ஆழமாக ஊன்றிப் படித்துள்ளார் என்பதைக் காண முடிந்தது.

வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் வே.இந்திரன் நன்றி கூறினார்.

இத்தகைய வாசிப்புகள் சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், சமூகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவும் உதவும் என்பதை அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் உணர்த்தி வருகிறது.

வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு எனது பாராட்டுகள்.

ஊரான்


 

துரை.பாலகிருட்டிணன்
 

 செ.விநோதினி

 
மு.தங்கவேல்

நா.பாலாஜி
 

 பார்வையாளர்கள்

 வே.இந்திரன்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைத்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!




 

Tuesday, 14 May 2019

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை முடக்க முனைந்து மூக்குடைபட்ட ஆதிக்கக் கும்பல்!

அம்பேத்கர்-பெரியார் பெயரில் இராணிப்பேட்டை பெல் வளாகத்தில் ஒரு படிப்பு வட்டம். பல்வேறு துறைகளில் தங்களது படிப்பை முடித்துவிட்டு நல்லதொரு வேலையில் சேர்ந்து பணியாற்றுவோர் - பணியாற்றி ஓய்வு பெற்றோர் மற்றும் அவர்தம் குடும்பத்தார். இவர்கள்தான் இந்த படிப்பு வட்டத்தின் அங்கத்தினர்கள். எட்டு மணி நேரம் அலுவலகத்தில்-ஆலையில் பணிபுரிகிறார்கள். எட்டு மணி நேரம் உறங்குகிறார்கள். மீதி எட்டு மணி நேரத்தில் என்ன செய்வது? இந்த எட்டு மணி நேரத்தில் வாசிப்பின் மூலம் நாட்டு நடப்பை-சமூக அவலங்களை அலசுகிறார்கள். 

இவர்களின் இந்த அலசல் சாதி-மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி வயிறு வளர்க்கும் ஆதிக்கக் கூட்டத்தினரின் அடி வயிற்றைக் கலக்குகிறது. அன்று நம் பாட்டன்களை படிக்கவிடாமல் தற்குறியாக்கியது போல இன்று நமது அறிவுத் தேடலை முடக்கப் பார்க்கின்றனர். இது அவர்களால் முடியாது என்ற போதிலும் அதிகாரத்தைக் கொண்டு அச்சுறுத்த முனைகிறார்கள். இந்த அச்சுறுத்தல்களை எல்லாம் தங்கள் பீச்சைக் கையால் புறந்தள்ளிவிட்டு வாசிப்பை வளர்த்தெடுக்கும் பயணத்தைத் தொடர்கின்றனர் இந்தப் படிப்பு வட்டத்தினர். 

அன்று நமது பாட்டன்கள் படித்தால் நாக்கை அறுக்கச் சொன்னார்கள்; படிப்பைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச் சொன்னார்கள். இப்படி எல்லாம்கூட நடந்திருக்குமா என நீங்கள் கேள்வி எழுப்பலாம். தற்குறிகளாய் இருந்த நமது முப்பாட்டன்களே இதற்கு சாட்சிகளாய் காட்சியளிக்கிறார்களே!

அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. இந்த ஓராண்டில் ஏராளமான வாசிப்புகள்; கருத்துரைகள்;  கலந்துரையாடல்கள் என நீள்கிறது இவர்களின் தேடல். இருபதைத் தொட்டவர்கள் முதல் அறுபதைக் கடந்தவர்கள் வரை; ஆண்கள்-பெண்கள்  என அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது இந்த வட்டம். படித்ததைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள ஒரு போட்டியே நிலவுகிறது. ஆம்! அனைவரும் இங்கு நெறியாளர்கள்; கருத்தாளர்கள்தான்.

இத்தகைய சிறப்புமிக்கதொரு வாசகர் வட்டத்தை பொது வெளியில் அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவை முடக்குவதற்காக அதிகாரத்திலிருக்கும் ஆதிக்கக் கூட்டத்தினர் சென்னையிலிருந்தும் வேலூரிலிருந்தும் முயன்று மூக்குடைபட்டுப் போனார்கள்.  அறிமுக விழா 16.02.2019 அன்று இராணிப்பேட்டையில் அமர்க்கலமாய் நடந்தது. இராணிப்பேட்டையைத் தாண்டி தமிழக அளவில் தடம் பதித்தது அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம். இந்த விழா வாசகர் வட்டத்தின் 15-வது சந்திப்பு.
அறிமுக விழா-முழுக் காணொளி: இணைப்பு: அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட அறிமுக விழா. https://www.youtube.com/watch?v=39354ZH6xlU&t=126s

அறிமுக விழாவைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்ற வாசகர் வட்ட நிகழ்வுகள்.

14.03.2019 அன்று தோழர் அரங்க பெருமாள் தலைமையில் நடைபெற்ற 16-வது சந்திப்பில் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் “நமக்கான குடும்பம்” நூல் குறித்து தோழர் சிறீதர் அவர்களும், ரோசலிண்ட் மைல்ஸ் அவர்களின் ”பெண் என்ன செய்தாள்?” நூல் குறித்து தோழர் இளங்கீரன் அவர்களும் உரையாற்றினார்கள். தோழர் கிருபா வரவேற்புரையாற்றினார். தோழர் கோவிந்தசாமி நன்றி உரையாற்றினார்.






23.04.2019 அன்று தோழர் இந்திரன் தலைமையில் உலக புத்தக நாள் மற்றும் வாசகர் வட்டத்தின் 2-ம் ஆண்டு துவக்க விழாவாக நடைபெற்ற 17-வது சந்திப்பில் தோழர் பொன்.சேகர் அவர்கள் வட்டத்தின் நோக்கம் குறித்தும்,  எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உலக புத்தக நாள் குறித்தும் உரையாற்றினர். இந்நிகழ்வில் தோழர் கிருபா வரவேற்புரை ஆற்ற, தோழர் கோவிந்தசாமி நன்றி கூறினார். திரளானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.















 அம்பேத்கர் பிறந்த நாள் விழா!

இராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம்  சார்பில் 05.04.2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 129-வது பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிறுவனத்தின் முக்கிய வாயிலில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அம்பேத்கர் குறித்து துண்டறிக்கை கொடுக்கப்பட்டது. பரவலாக சுவரோட்டிகள் ஒட்டப்பட்டன.















03.05.2019 அன்று தோழர் கலைவாணன்  தலைமையில் நடைபெற்ற 18-வது சந்திப்பில் தோழர் பூர்ணிமா வரவேற்புரை நிகழ்த்த, “மே நாளும் கார்ல்மார்க்சும்” என்கிற தலைப்பில் தோழர் சிலம்பரசன், “தொழிலாளர்களின் தோழர் அம்பேத்கர்” என்ற தலைப்பில் தோழர் இரவி ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் அரங்க.மேகநாதன் நன்றி கூறினார்.






வாசகர் வட்ட சந்திப்புகள் வெறும் சம்பிரதாயத்துக்காக நடத்தப்படவில்லை. வாசகர் வட்ட சந்திப்பு குறித்து வட்டத்தின் அமைப்புச் செயலாளர் நீலகண்டன் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் வாசிப்பின் மூலம் இக்கால கட்டத்தில் இளைஞர்களுக்கு ஒரு முற்போக்கு சிந்தனையில் தொடர்ந்து தொலை நோக்குப் பார்வையுடன் இக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திவருகிறது என்கிறார். வட்டத்தின் வெற்றி இதுதான். தொடரட்டும் உங்களது பணி. வாழ்த்துகளுடன்

ஊரான்


தொடர்புடைய பதிவுகள்


Friday, 18 January 2019

சபரிமலை-புனிதம் தீண்டாமையின் மையப் புள்ளி!

பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லத் தடையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில் பல பெண்கள் சபரிமலைக்குச் செல்ல முயன்றபோதெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-பாரதிய ஜனதா-பார்ப்பன சங் பரிவாரக் கும்பல் மிகப் பெரிய அளவில் கேரளத்தில் கலவரத்தைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வருகின்றன. கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இருபெண்கள் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வழிபட்டுவிட்டு திரும்பி உள்ளனர். பெண்கள் பதினெட்டாம்படியேறி அய்யப்பனை வழிபட்டதால் கோவில் தீட்டுபட்டுவிட்டதாகக்கூறி கோவில் நடையை சாத்தி தீட்டுக்கழிப்பு பூஜை செய்துள்ளது தந்திரிக் கும்பல்.

தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. அது எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 17 மிகத் தெளிவாக சொன்ன போதிலும் தீண்டாமையை சாதியோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதி பிற வடிவங்களில் கடைபிடிக்கப்படும் தீண்டாமையை கண்டு கொள்ளாமல் இருப்பது அம்பேத்கரையே அவமதிக்கும் செயலாகும். அரசியல் சட்ட வரைவுக்குழுவில் இருந்தவர்கள் பல்வேறு திருத்தங்களை முன்வைத்த போதும் அவற்றை எல்லாம் நிராகரித்துவிட்டு தற்போதைய நிலையில் அதாவது தீண்டாமை எந்த வடிவத்தில் கடைபிடிக்கப்பட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என்கிற முக்கியமான அம்சத்தை ஒரு தொலை நோக்குப் பார்வையோடு சட்டப்பிரிவு 17 அம்பேத்கர் அவர்கள் உருவாக்கினார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இந்து மல்கோத்ராவைத் தவிர மற்ற நான்கு பேரும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லத் தடை விதிக்கும் கேரளா இந்துக் கோவில் வழிபாடு (நுழைவை அங்கீகரித்தல்) விதி  3(b)” ஆனது இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 14 (சமத்துவம்), 15 (பாலினப் பாகுபாடு,)  21 (தனிமனித சுதந்திரம்), 25 (ஒரு மதத்தைத் தழுவுவதறக்கும் வழிபடுவதற்குமான உரிமை) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு எதிரானது; இந்திய அரசியல் சட்டப் பிரிவு 26 ன் படி அய்யப்பன்கள் தனி வகையறா கிடையாது மற்றும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்லத் தடை விதிப்பது அவசிய மதச் செயல்பாடு கிடையாது என சட்டத்தின் பார்வையில் நின்று தீர்ப்பு வழங்கினாலும் நீதிபதி சந்திரசூட் மட்டும் தீண்டாமை என்கிற முக்கிய அம்சத்தையும் கணக்கில் கொண்டு தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்து மல்கோத்ரா மட்டும் பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்களை மனுமதிக்காதது சரியே என தீர்ப்பு வழங்கி உள்ளார்.

தீட்டில் இரு வகைகள் உண்டு. ஒன்று சாதியத் தீட்டு. அதாவது பறையனைத் தொட்டுவிட்டால் அது சாதியத் தீட்டு. மற்றொன்று வாழ்வியல் தீட்டு. அதாவது மாதவிடாய்ப் பெண், பிணம் உள்ளிட்டவை இதில் அடங்கும். மாதவிடாயை தீட்டு என்கிறது இந்து மதம் (மனு 3-239, 4-208, 5-66, 5-85) மாதவிடாய்ப் பெண்ணையும் பறையனையும் தெரியாமல் தொட்டுவிட்டால் தீட்டுக் கழிக்க தலை முழுக வேண்டும் என்கிறது இந்து மதம். (மனு 5-85).

தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக் கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது. அதனால்தான் இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என தீட்டுக் கழிப்பு பூஜை செய்கிறார்கள். பத்து வயதிலிருந்து ஐம்பது வயது வரை உள்ளப் பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத் தடுப்பதும், மீறி சென்றால் அதற்காக தீட்டுக் கழிப்பு பூஜை நடத்துவதும் இந்திய அரசியல் சட்டப் பிரிவு 17 க்கு எதிரான தண்டனைக்குரிய குற்றமாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை நிலைநாட்டிய பெண்கள் தாக்குதலுக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளனர். இந்திய அரசியல் சட்டப் பிரிவு 17 க்கு விரோதமாக தீண்டாமையை கடைபிடிக்கும் பார்ப்பன தந்திரி கும்பல் தெனாவாட்டாக சுற்றித் திரிகிறது.

சபரிமலைத் தீர்ப்பு குறித்த விரிவானதொரு கலந்துரையாடல் நிகழ்வு “அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம்” சார்பில் 11.01.2019 அன்று மாலை இராணிப்பேட்டையில் நடைபெற்றது. தோழர் மு.இரவி இந்நிகழ்வை தலைமை ஏற்று வழி நடத்தினார். தோழர் அ.கிருபா விக்னேஷ் வரவேற்புரை நிகழ்த்த தோழர் வே.இந்திரன் அறிமுக உரையாற்றினார். தோழர் பொன்.சேகர் சபரிமலைத் தீர்ப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார். இறுதியில் தோழர் சு.பாலசுப்பிரமணியன் நன்றி உரையாற்றினார்.

அ.கிருபா விக்னேஷ்

மு.இரவி
 பார்வையாளர்கள்

வே.இந்திரன்

பொன்.சேகர்

பார்வையாளர்கள்
தொடர்புடைய பதிவுகள்: