Sunday, December 30, 2018

பெரியாரைக் கொண்டாடு! இல்லையேல் திண்டாடுவாய்!


இரு பெரும் அபாயங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளது. ஒன்று காவி பயங்கரவாதம். மற்றொன்று கார்பரேட் பயங்கரவாதம். அப்பாவி அக்லக் படுகொலை, ரோகித் வெமுலா தற்கொலை, நாடெங்கிலும் தொடரும் ஆணவப் படுகொலைகள், பகுத்தறிவாளர்கள் கௌரி லங்கேஷ்-நரேந்திர தபோல்கர்-கோவிந்த் பன்சாரே-எம்.எம்.கல்புர்கி ஆகியோர் படுகொலைகள் என காவி பயங்கரவாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. குறிப்பாக காவிக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் இப்படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. ஜனநாயகம் மற்றும் சமத்துவத்துவத்திற்கு எதிரானது காவி பயங்கரவாதம்.

யூனியன் கார்பைடு என்கிற பன்னாட்டுக் கம்பெனி போபாலில் நடத்திய கோரப்படுகொலை ஆயிரக்கணக்கோரின் உயிர்களைக் காவு கொண்டதை நாம் மறந்து விட முடியுமா? பன்னாட்டு மற்றும் கார்பரேட் கம்பெனிகள் கொள்ளை அடிப்பதற்காகவே ஆட்சியாளர்களால் இந்தியாவின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. லாபம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இக்கம்பெனிகளால் ஏற்படும் சூற்றுச்சூழல் கேடுகளால் மக்கள் சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாகின்றனர். எதிர்த்துக் கேள்வி கேட்டால் குருவிகளைச் சுடுவதைப்போல அப்பாவி மக்கள் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய அப்பாவிகள் 14 பேரை கொன்றொழித்தனர். மொத்தத்தில் மக்களுக்கு எதிரானது கார்பரேட் பயங்கரவாதம்.

நாம் நிம்மதியாக வாழ வேண்டுமானால் காவிகளையும் கார்பரேட்டுகளையும் துரத்தியாக வேண்டும். அதற்கு நாம் ஓரணியில் சேருவது இன்றைய காலத்தின் கட்டாயம். ஓரணியில் சேர வேண்டுமானால் நம்மிடையே கருத்தொற்றுமை தேவை. கருத்துப் பரிமாற்றமே கருத்தொற்றுமைக்கு வழி வகுக்கும். கருத்துப் பரிமாற்றத்திற்குத் தேவை வாசிப்பும் விவாதமும். இதை குறிக்கோளாகக் கொண்டு இராணிப்பேட்டை 'பெல்' வளாகத்தில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் 13-வது சந்திப்பு 27.12.2018 அன்று தந்தை பெரியாரின் 45-வது நினைவு நாள் நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வாசகர் வட்டத்தின் தலைவர் தோழர் பெ.இந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். தோழர் பெ.ஜெயக்கொடி தலைமை ஏற்று மிகச் சிறப்பாக இந்நிகழ்வை ஒழுங்கு படுத்தினார். தோழர்.சுப.நீலகண்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தோழர் தி.க.சின்னதுரை அவர்கள் பெரியார் படத்திற்கு மரியாதை செலுத்தி உரையாற்றினார்.

தோழர் கு.விஜயகுமார் அவர்கள் பெரியார் குறித்து வீரவணக்க உரை நிகழ்த்தினார். சமூக ஏற்றத் தாழ்வுகள், பெண் விடுதலை, இட ஒதுக்கீடு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் மீதான பெரியாரின் பங்களிப்பை அவர் தனது உரையில் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரியாரை நிறுத்துவது மிகமிக ஆபத்தானது; அது காவிபயங்கரவாதிகளுக்கே வலுசேர்க்கும் என்பதை தக்க ஆதாரங்களோடு அவர் விளக்கினார். பெரியாரைக் கொண்டாடவில்லை என்றால் நாம் திண்டாடுவோம் என்பதை உணர்த்துவதாக அமைந்தது அவரது உரை.

“தமிழகத்தின் அழகிய முகம், அந்த முகம் யார்? அவர் பெரியார். தமிழகத்துக்கு முகவரி தந்த பெரியார்.” என்கிற மிகச் சிறப்பான பாடல் ஒன்றை தோழர் தங்கவேல் பாடினார். இப்பாடல் அனைவரின் வரவேற்பைப் பெற்றது.

இறுதியில் தோழர் ரெ.மேகநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு தோழர்.க.பாலசுப்பிரமணியன்.

‘பெல்’ அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் தொடர்ந்து முன்னெடுக்கும் இது போன்ற நிகழ்வுகள் மக்களின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும். தொடரட்டும் அவர்களது பணி.

வாழ்த்துகளுடன்
ஊரான்
இந்திரன்

ஜெயக்கொடி

நீலகண்டன்

சின்னதுரை

தங்கவேல்

விஜயகுமார்


மேகநாதன்
தொடர்புடைய பதிவுகள்

மராட்டியம் மறந்தாலும் மகாத்மா புலேவை மறக்காத தமிழகம்!



No comments:

Post a Comment