Monday, 10 August 2020

பட்டா பெயர் மாற்றம்! சர்வேயர்கள் காட்டில் பண மழை!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவின் ஹுகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவி இந்த அகிலத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மார்ச் மாதத்திலேயே முதல் கரோனாத் தொற்று கண்டறியப்பட்ட போதும் அதைக் கட்டுப்படுத்த அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மணியடிப்பது, விளக்கு பிடிப்பது, அப்பளம்-கோமியம்- மந்திரம் உள்ளிட்ட கோமாளித்தனமான கூத்துக்களை அரங்கேற்றினார்கள். இதனால் 30 ஆம் இடத்தில் இருந்த இந்தியா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியதுதான் மிச்சம்.  ஆனால் தொற்று தொடங்கியபோது முதலிடத்தில் இருந்த சீனா முப்பதாவது இடத்திற்கு சென்றுவிட்டது. 

ஆறாவது மாதமாக பொது முடக்கும் தொடர்வதால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஏழை எளிய மக்கள் பட்டினிச்சாவுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே கடும் வேதனையில் இருக்கும் மக்கள் மூச்சுக்கூட விடாமல் திணறிக் கொண்டிருக்கும் பொழுது மின் கட்டணத்தை உயர்த்தினார்கள். "வேளாண் விலை பொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம்" மற்றும் " பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம்" கொண்டு வந்து சிறு-குறு விவசாயிகளை ஒட்டச் சுரண்டவும், பதுக்கல்காரர்கள் கொள்ளையடிக்கவும் வழி செய்துள்ளார்கள். "சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020" என்ற திட்டத்தின் மூலம் காடு, மலைகளை பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க முன் வந்துள்ளார்கள்.

சாத்தான் குளம் நம் கண் முன்னே நிற்கும் போதே காவல்துறையினரையே நீதிபதிகளாக்கும் வகையில் குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வரவிருகிறார்கள். "தேசியக் கல்விக் கொள்கை" என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையை முளையிலேயேக் கிள்ளி எறிய எத்தனிக்கிறார்கள்.

நாடும், மக்களும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை; தங்களின் பணப் பைகள் நிறைந்தால் போதும் என்ற வெறியோடு அரசு அதிகாரிகள் அலைகின்றனர். "இ- பாஸ்"  முறையில் தலைவிரித்தாடும் லஞ்ச ஊழல் முறைகேடுகளை உயர் நீதிமன்றமே எள்ளி நகையாடுகிறது. 

சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒரு வீட்டு மனை வாங்கினால், அதற்குப் பட்டா மாற்றம் பெற முடியவில்லை. குடும்பச் சொத்தைப் பாகப்பிரிவினை செய்தாலும்  உரியவர்களுக்கு  முறையாகப் பட்டா கிடைப்பதில்லை. சர்வேயர்களுக்குப் பணம் லஞ்சமாகக் கை மாறினல் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் நடக்கிறது. குறிப்பாக இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் காட்டில் பணம் அடை மழையாகப் பொழிகிறது. பணம் தரவில்லை என்றால் பட்டா பெறுவதற்கு நில அளவை கோரி விண்ணப்பித்தால் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கிறார்கள்.

சர்வேயர்களை நாம் நேரடியாக சந்திக்கவே முடியாது. எங்கும் புரோக்கர்களே  நிறைந்திருக்கிறார்கள். அதிலும் இதில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப்  பறக்கிறது. 

சர்வேயரைச் சந்திக்கச் சென்றால் நகராட்சி சர்வேயர் அலுவலகம் எப்பொழுதும் பூட்டியேக் கிடக்கிறது.

              

                    ஜெ.அசேன் உரை

தண்டோராப் போராட்டம்

லஞ்சம் வாங்கும் வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், 'பிரண்ட்ஸ் ஆப் போலீசை' ஒழித்தது போல, புரோக்கர்களாக செயல்படும் 'பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை' ஒழிக்கக் கோரியும், பட்டா கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக நில அளவை செய்து பட்டா வழங்கக் கோரியும் 10.08.2020, திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் வாலாசாப்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக வாலாஜாவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள "நீதிக்கான குரல்"  என்ற  அமைப்பின் பெயரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் "தண்டோராப் போராட்டம்" மிக எழுச்சியோடு நடைபெற்றது.

திரு K.K.ரவி, திரு P.மதன், திரு.D.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வழக்குரைஞர் பொன்.சேகர் அவர்கள் போராட்டத்தின் நோக்கம் குறித்து தொடக்க உரையாற்றினார். சர்வேயர்களின் ஊழல் முறைகேடுகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக திரு.ஜானகிராமன் அவர்கள் நன்றி கூறினார்.

                  பொன்.சேகர் உரை

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த தண்டோரா ஒலி அரசு அதிகாரிகளின் செவிகளை எட்டியிருக்கும். 

போராட்டம் முடிந்த பிறகு பட்டா வழங்குவதில் உள்ள முறைகேடுகளைக் களையக் கோரி மாவட்ட ஆட்சியர், இராணிப்பேட்டை கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வாலாஜா வட்டாட்சியர், வாலாஜா நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது. 

வாலாஜாவில் தொடங்கிய இந்த  நீதிக்கான குரல் இராணிப்பேட்டை மாவட்டம் முழுதும் ஓங்கி ஒலிக்கட்டும். 

செய்தித் தொகுப்பு

பொன்.சேகர்

வாலாஜா வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் மனு


புகார் மனு

நீதிக்கான குரல்

வாலாசாப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டம்

தேதி: 10.08.2020

வாலாஜாபேட்டை

பெறுநர்


உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் 


அன்புடையீர் வணக்கம்,


பொருள்: வாலாஜா நகராட்சி மற்றும் தாலுகா அலுவலக சர்வேயர்களின் நடவடிக்கைகள் குறித்து 


தமிழகத்தின் முதல் நகராட்சியும் பழம்பெரும் நகரமுமான வாலாஜா நகராட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களை அலையவிடும் வகையிலும் நகராட்சி மற்றும் தாலுகா சர்வேயர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன


உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த போதும், நில அளவை செய்து பட்டா வழங்காமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றது. சர்வேயர் அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடப்பதால் சர்வேயர்களை பொதுமக்கள் அணுக முடியாத சூழலே எப்பொழுதும் நிலவுகிறது. இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே அவர்களை சந்திக்க முடியும் என்ற நிலைதான் உள்ளது விதிகள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு பணம் லஞ்சமாகக் கை மாறினால் மட்டுமே வேலைகள் நடைபெறுகின்றன. இல்லை என்றால் கோரிக்கைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. 

உதாரணத்திற்கு,

1. வாலாஜா நகராட்சி, அம்பேத்கர் நகர், வார்டு 2, பிளாக் 30, டவுன் சர்வே நம்பர் 2109 ல் உள்ள இடத்தை சர்வே செய்வதற்கு பாண்டியன் என்பவர் 25.02.2019  அன்றுநகராட்சி அலுவலகத்தில் ரூபாய் 270 பணம் செலுத்தி உள்ளார். (இரசீது எண் 36/ WL2/18-19/0011115). அதன்பிறகு வாலாஜா நகராட்சியில் 21.05.2020 அன்று  ரூபாய் 120 பணம் செலுத்தி உள்ளார். ( இரசீது எண் 036/WL2/1/20-21/0000060). ஒன்றறை ஆண்டுக்கு மேலாகியும் இதுவரை வீட்டுமனையை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

2. வாலாஜா தாலுக்கா, அம்மன ந்தாங்கல் பஞ்சாயத்து சர்வே எண் 58/2 ல் அடங்கல் மனை எண் 1 ஐ சர்வே செய்ய சுந்தர் என்பவர் மனு செய்து 23.01.2020 அன்று ரூபாய் 80 பணம் செலுத்தி உள்ளார். ஆறு மாத காலம் ஆகியும் இதுவரை சர்வே செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

3. வாலாஜா தாலுக்கா, வன்னிவேடு ஊராட்சிக்கு உட்பட்ட தேவதானம் ரோடு, ரஜிவ் காந்தி நகர், சர்வே எண் 12/7 ல் (one scheme patta) அரசு ஆவணங்களில் மாற்றங்கள் கோரி 30.11.2015 முதல் பல முறை மனு செய்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் சம்பந்தப்பட்ட 107 பேரில் அரசு ஆவணங்களில் மாற்றங்கள் எதையும் செய்யாமலேயே ஒரு சிலருக்கு மட்டும் போலி பட்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவை சில உதாரணங்கள்தான். விதிமுறைப்படி சர்வேயர்கள் செயல்பட்டு பட்டாவை முறைப்படுத்தாததால் பல குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று அல்லல் பட்டு வரும் அவலம் தொடர்கிறது.

எனவே, இது போன்ற கோரிக்கைகள், புகார்கள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுத்து நீதி தர்மத்தை நிலைநாட்டக் கோரி தங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

இப்படிக்கு 


(வாலாஜா  ஜெ.அசேன்)

நீதிக்கான குரல்

வாலாசாப்பேட்டை

முழக்கங்கள்

சர்வேயர்களின் ஊழலைக் கண்டித்து

வாலாஜாவில்

தண்டோராப் போராட்டம்

முழக்கங்கள்


பட்டா மாற்றம் செய்வதற்கு 

பகல் கொள்ளை அடிக்கிறான் 

நில அளவைத் துறையிலே

லஞ்சப் பணம் குவியுது


தமிழக அரசே தமிழக அரசே 

மாவட்ட நிர்வாகமே 

பிரண்ட்ஸ் ஆப் போலீஸை ஒழித்தது போல 

பிரண்ட்ஸ் ஆப் சர்வேயர்களை ஒழித்திடு

இடைத்தரகர்களை ஒழித்திடு


பூட்டிக்கிடக்குது பூட்டிக்கிடக்குது

எப்போதுமே பூட்டிக்கிடக்குது 

சர்வேயர் ஆபீஸ் பூட்டிக்கிடக்குது

திறந்து வை திறந்து வை 

சர்வீஸ் ஆபீஸைத் திறந்து வை 

பொதுமக்கள் அணுகுவதற்கேற்ப

சர்வையர் ஆபீஸைத் திறந்து வை


தடுத்திடு தடுத்திடு

ரிட்டையர் ஆன அதிகாரிகள் 

பட்டா வழங்கும் வேளைகளில் 

தலையிடுவதைத் தடுத்திடு


புறம்போக்கு நிலம் என்ன

உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா

கையூட்டு கிடைத்து விட்டால் 

பட்டா செய்து கொடுப்பதற்கு?


தாலுக்கா அலுவலகமா

புரோக்கர்களின் கூடாரமா

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

வெளிப்படைத் தன்மைக்காக 

உடனடியாக நடவடிக்கை எடு


பறிபோகுது பறிபோகுது 

புறம்போக்கு நிலமெல்லாம் 

பறிபோகுது பறிபோகுது

அரசு நிலத்தை விற்பதற்கு 

சர்வேயர் என்ன வாலாஜா நவாப்பா?


நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

புறம்போக்கு நிலத்தையெல்லாம் 

சூறையாடும் சர்வேயர்கள் மீது 

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு 

மாவட்ட நிர்வாகமே 

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு


சுல்தானே சொத்துக்கழும்போது 

சுல்தான் குதிரை குலாப்ஜாமுனுக்கழுததாம் 

கரோனாவிலே நாம் தவிக்கும்போது 

சர்வேயர்கள் நம்மைச் சுரண்டுவது நியாயமா?


இவண்

நீதிக்கான குரல் 

வாலாசாப்பேட்டை 

இராணிப்பேட்டை மாவட்டம்

10.08.2020

ஊடகங்களில்

இந்து தமிழ் 11.08.2020


  PRD தங்கம் online TV

தொடர்புடைய பதிவுகள்




Wednesday, 13 May 2020

வர்ணங்கள் குறித்து வாட்ஸ்அப் வதந்தி!

“பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைசியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களைத் தூற்றுகிறார்களாம்.”  

வேதம் படித்த பார்ப்பனனின் முகம் பொலிவானதாம். சத்திரியனின் தோள் பிரம்ம தேவனின் தோள் போல வலிமையானதாம். வலிமையான துடை கொண்டு அமர்ந்து வாணிபம் செய்பவனாம் வைசியன். வயலில் பாடுபடும் சூத்திரனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டுமாம். இதுதான் ரிக் வேதத்தின் புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஸ்லோகத்திற்கான உண்மையான பொருளாம். இப்படி புதுக் கோணார் உரை எழுதி வாட்ஸ்அப்பில் உலவவிடுகிறார்கள் பார்ப்பனர்கள்.

மேலும் பிறப்பால் வர்ணங்கள் இல்லை என மனு தர்மம் சொல்வதாக வேறு அவிழ்த்து விடுகிறார்கள். ஆனால் அது எந்த சுலோகத்தில் வருகிறது என்பதைச் சுட்டவில்லை.

வேதங்கள் உள்ளிட்ட அனைத்துப் பார்ப்பன இந்து மத நூல்களின் சாரம்தான் மனுதர்மம். இது வர்ண பேதங்களைப் பற்றிப் பேசுகிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் சட்ட நூல். மனுதர்மம் இல்லையேல் வர்ணங்கள் இல்லை. வர்ணங்கள் இல்லையேல் சாதிகள் இல்லை. சாதிகள் இல்லையேல் இந்து மதமே இல்லை.

வர்ணங்கள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதற்கான ஆதாரங்கள் மனுதர்மத்தில் கொட்டிக் கிடக்கின்றன. காட்டாக சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் துடை கால் இவைகளினின்றும் பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் இவர்களைக் கிரமமாக வுண்டு பண்ணினார். (மனு 1-31)
But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet. (Manu 1-31)

அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத்தைக் காப்பாற்றுதற்காக தன் முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று முண்டான பிராமண சத்திரிய வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.
But in order to protect this universe He, the most resplendent one, assigned separate (duties and) occupations to those who sprang from his mouth, arms, thighs, and feet. (Manu 1-87)

வர்ணம் பிறப்பின் அடிப்படையில்தான் திர்மானிக்கப்படுகிறது. பார்ப்பன இந்து மதத்தின் வர்ண சாதி அமைப்பு குறித்து பல்வேறு அறிஞர்கள் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் அம்பேத்கர். குறிப்பாக அவரது ஆய்வு நூல் தொகுப்பு (தமிழில்) 6 முதல் 10 வரை வர்ண சாதி அமைப்பு பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. மனு மட்டுமல்லாமல் யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் பார்ப்பன இந்து மத சட்ட நூல்களும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணம் குறித்துப் பேசுகின்றன. “நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்”(4-13) என்கிறான் கிருஷ்ணன் கீதையிலே. நான்கு வர்ணங்களும் குணங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. அவை பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என சங்கிகளின் தலைமைப் பீடமான நாக்பூர் கீதா பிரஸ் வெளியிட்டுள்ள பகவத் கீதை தெளிவு படுத்துகிறது.
ஆனால் தற்பொழுது வெளியிடப்படும் பார்ப்பன இந்து மத நுல்களில் மேற்கண்டவை எல்லாம் திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டோதான் வெளியிடப்படுகின்றன. அத்தகையதோர் முயற்சிதான் கீழ்கண்ட வாட்ஸ்அப் பதிவும்.

எனவே பார்ப்பன இந்து மதத்தின் மூல நூல்களைத் தேடிப் படித்தால் மட்டுமே உண்மையை வெளிக்கொணர முடியும்.

ஊரான்
*****
பார்ப்பனர்கள் உலவவிட்ட வாட்ஸ்அப் செய்தி கீழே.


#ஒரு_கதை_ரொம்ப நாளாக_ஒட்டப்பட்டு கொண்டிருக்கிறது

பிராமணன்  முகத்தில் இருந்து பிறந்தான்
சூத்திரன் காலில் இருந்து பிறந்தான் 

.....இப்படி சொல்வது இந்து மதம் (புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள்). 
பிராமணன் தலையில் பிறந்தான்
சத்திரியன் தோளில் பிறந்தான்
வைஷியன் தொடையில் பிறந்தான்
சூத்திரன் பாதத்தில் பிறந்தான்

-இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர்

உண்மை என்ன?

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:

‘‘பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” 
- (ரிக் வேதம் 10-90-12)

ஸ்லோகத்தின் பொருள்:
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபவன் பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும்.

இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும்

அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.

வைஷியனானவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.

சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும். மேலும் பல தொழிலில் சிறக்க அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை 
மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). 

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.

இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
ஜன்மனாபிறப்பால்;
ஜாயதேபிறந்த அனைவரும்
சூத்ரசூத்திரரே
கர்மணாதான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜஇருபிறப்பாளனாக
ஜாயதேபிறப்பாளன் ஆகிறான்.

Tuesday, 12 May 2020

அருளற்ற ஆட்சியாளர்கள்! தொடரும் துன்ப துயரங்கள்…..

நிலக்கரியை எரித்து மின்சாரம் தயாரிக்கப்படும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் வாயு நிலையில் உள்ள சாம்பல் துகல்களை ஈர்த்து வெளியேற்றுவதற்காக எலக்ட்ரோ ஸ்டாடிக் பிரசிபிடேட்டர் (ESP) என்ற அமைப்பு செயல்படுகிறது. உயர் மின் அழுத்தத்தில் சாம்பல் துகல்கள் எதிர்மறை அயனிகளாக மாற்றப்பட்டு நேர்மறை தகடுகளில் ஈர்க்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இத்தகைய நிகழ்வுக்குப் பெயர் கரோனா விளைவு. (Corona effect). சாம்பல் துகல்கள் அயனிகளாக மாற்றப்படும் போது சூரியனைப் போன்று தீப்பிழம்பாய் காட்சியளிக்கும். இதில் ஒரு மனிதன் மாட்டிக் கொண்டால் சாம்பலாகத்தான் வெளியே வரமுடியும். மிகவும் எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய ஒரு தொழில் நுட்பம் இந்தக் கரோனா விளைவு.

இதற்குச் சற்றும் சளைத்ததல்ல இன்று உலகையே அச்சுறுத்தும் கரோனா நோய்க் கிருமி. கரோனாவைக் காரணம் காட்டி ஆட்சியாளர்கள் அறிவித்த ஊரடங்கால் மக்கள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது கருணையற்ற இந்த ஆட்சியாளர்கள் கரோனாவைவிடக் கொடியோர் அல்லவோ!

துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு (557)

“மழையில்லாமை உலகத்திலுள்ள உயிர்கட்கு விளைக்கும் துன்பம் எத்தகையதோ; அத்தகையதே அரசின் அருளின்மை அவன் நாட்டு வாழும் குடிகட்கு விளைக்கும் துன்பமும் ஆகும்” என்கிறான் வள்ளுவன்.

துன்ப – துயரங்கள் காட்சிகளாய்…..































ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

கரோனா ஊழல் முறைகேடு! வாலாசாப்பேட்டையில் போராட்டம்!

கரோனா: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

கரோனாவும் இஸ்லாமியர்களும்: பீலாவுக்கு ஆப்பு வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்!