Showing posts with label கிரானைட். Show all posts
Showing posts with label கிரானைட். Show all posts

Friday, 1 August 2014

சேர்ந்தே இருப்பது மாமுலும் கொள்ளையும்!

“வழிப்பறி கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீசார்!” – இது வேலூர் மாவட்டச் செய்தி.

“காவல் நிலையத்திலேயே நகை திருடிய காவலர் கைது!” – இது கோவை மாவட்டச் செய்தி.

இவை முரண்பட்ட செய்திகளானாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

வழிப்பறி கொள்ளையனின் செல்பேசிப் பயன்பாட்டை வைத்து  விரட்டிப் பிடித்திருப்பதைப் பார்த்தால் இவனது தொழிலே வழிப்பறி தொழிலாகத்தான் இருக்க வேண்டும். வழிப்பறியையே தொழிலாகக் கொண்டவன் முறையாக மாமுல் செலுத்தியிருந்தால் இவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

மாமுல் முறையாக கிடைத்து வந்தால் காவல் நிலையத்திலேயே காவலரே திருடும் நிலையும் ஏற்பட்டிருக்காது?

எங்கெல்லாம் முறையான மாமுல் செலுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தாதுமணல் கொள்ளையும், கிரானைட் கொள்ளையும், ஆற்று மணல் கொள்ளையும், செம்மரக்கடத்தலும் கனஜோராய் நடந்தேறி வருகின்றன. 
ஒரு தொழில் சட்டத்திற்கு விரோதமானதா இல்லையா என்பதை மாமுலே தீர்மானிக்கிறது. எங்கெல்லாம் எதிர்பார்த்த மாமுல் செலுத்தப்படவில்லையோ அல்லது மாமுலே கொடுக்காமல் கொள்ளையும்,  திருட்டும் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கனஜோராய் சட்டம் தனது கடமையைச் செய்கிறது. 

மாமுல் எதிர்பார்க்கும் அனைவரையும் சமாளித்துவிட்டால் கொள்ளையர்களும் திருடர்களும் தங்கள் தொழிலை தொடர்வதற்கு தடையேதும் ஏற்படுவதில்லை. இதில் மாமுல் எதிர்பார்க்கும் யாராவது ஒருவரை கவனிக்காமல் விட்டுவிட்டால்கூட அது வில்லங்கமே. 

வில்லங்கம் ஏற்படும் போது மட்டுமே ஒரு சில கொள்ளைகளும் திருட்டும் அம்பலத்துக்கு வருகின்றன. வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பவன் பிழைக்கத் தெரிந்தவன். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்பவன் ஏமாளி. 

ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர சமூகத்தின் எதார்த்தம் இதுவே!