Showing posts with label திருட்டு. Show all posts
Showing posts with label திருட்டு. Show all posts

Friday, 1 August 2014

சேர்ந்தே இருப்பது மாமுலும் கொள்ளையும்!

“வழிப்பறி கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீசார்!” – இது வேலூர் மாவட்டச் செய்தி.

“காவல் நிலையத்திலேயே நகை திருடிய காவலர் கைது!” – இது கோவை மாவட்டச் செய்தி.

இவை முரண்பட்ட செய்திகளானாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.

வழிப்பறி கொள்ளையனின் செல்பேசிப் பயன்பாட்டை வைத்து  விரட்டிப் பிடித்திருப்பதைப் பார்த்தால் இவனது தொழிலே வழிப்பறி தொழிலாகத்தான் இருக்க வேண்டும். வழிப்பறியையே தொழிலாகக் கொண்டவன் முறையாக மாமுல் செலுத்தியிருந்தால் இவனுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

மாமுல் முறையாக கிடைத்து வந்தால் காவல் நிலையத்திலேயே காவலரே திருடும் நிலையும் ஏற்பட்டிருக்காது?

எங்கெல்லாம் முறையான மாமுல் செலுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் தாதுமணல் கொள்ளையும், கிரானைட் கொள்ளையும், ஆற்று மணல் கொள்ளையும், செம்மரக்கடத்தலும் கனஜோராய் நடந்தேறி வருகின்றன. 
ஒரு தொழில் சட்டத்திற்கு விரோதமானதா இல்லையா என்பதை மாமுலே தீர்மானிக்கிறது. எங்கெல்லாம் எதிர்பார்த்த மாமுல் செலுத்தப்படவில்லையோ அல்லது மாமுலே கொடுக்காமல் கொள்ளையும்,  திருட்டும் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் கனஜோராய் சட்டம் தனது கடமையைச் செய்கிறது. 

மாமுல் எதிர்பார்க்கும் அனைவரையும் சமாளித்துவிட்டால் கொள்ளையர்களும் திருடர்களும் தங்கள் தொழிலை தொடர்வதற்கு தடையேதும் ஏற்படுவதில்லை. இதில் மாமுல் எதிர்பார்க்கும் யாராவது ஒருவரை கவனிக்காமல் விட்டுவிட்டால்கூட அது வில்லங்கமே. 

வில்லங்கம் ஏற்படும் போது மட்டுமே ஒரு சில கொள்ளைகளும் திருட்டும் அம்பலத்துக்கு வருகின்றன. வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பவன் பிழைக்கத் தெரிந்தவன். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்பவன் ஏமாளி. 

ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர சமூகத்தின் எதார்த்தம் இதுவே!

Friday, 7 February 2014

இதுவா பொது அமைதி?

·         அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது
·        மூன்று செம்மரங்கள் வெட்டிச் சாய்ப்பு
·         பைக் திருட்டு: இளைஞர் கைது
·         மணல் கடத்தல்: இளைஞர் கைது
·         மின் கம்பி திருட்டு
·         பேனர் கிழிப்பால் மோதல்: நான்கு பேர் காயம்
·         மூதாட்டி மர்மச் சாவு
·         மதுக்கடையில் தகராறு: ஒருவர் காயம்
·         சாராயம் விற்பனை: இளம் பெண் கைது
இது 2014 ஜனவரி மூன்றில் தினமணி ஏட்டின்  கிரைம் செய்திகள்.

·         தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமறிக்கப்படுகிறது.

இது 2014 ஜனவரி நான்கில் தினமணி ஏட்டில் வெளியான தமிழக அரசின் அறிவிப்புச் செய்தி.

·         நில அபகரிப்பு வழக்கு: தந்தை, இரு மகன்கள் கைது

·         தாய், மகள் திடீர் மாயம்

·         ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

·         பொறியாளர் மீது தாக்குதல்: இருவர் கைது

·         ரயிலில் பெண்ணிடம் நகை பறிப்பு

·         மணல் லாரி மோதி தொழிலாளி சாவு

·         விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு

·         பெண் காவலர் கழுத்து நெறித்துக் கொலை

இது 2014 ஜனவரி ஏழில் தினமணி ஏட்டின்  கிரைம் செய்திகள். 

தற்போது குற்றச் செய்திகளுக்காக ஒரு தனி பகுதியையே தினமணி ஒதுக்கி இருக்கிறது. இவை தமிழகத்தில் எட்டு நகரங்களிலிலிருந்து வெளியாகும் தினமணியில் ஒரு நகரிலிருந்து மட்டுமே வெளியான செய்திகள் மட்டுமே. இச்செய்திகள்கூட காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வரட்பட்ட அங்கிருந்து கசிந்த ஒரு சிறு துளிகள் மட்டுமே.

பிற ஏழு நகரங்களிலிருந்து வெளியாகும் தினமணியின் கிரைம் செய்திகளையும், தினத்தந்தி, தினகரன், தினமலர், மாலைமலர், மாலைமுரசு, இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு உள்ளிட்ட ஏனைய செய்தி ஏடுகளில் வரும் கிரைம் செய்திகளையும், தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களில் வெளியாகும் கிரைம் செய்திகளையும் தொகுத்துப் பாருங்கள் தமிழகத்தின் அவலம் புரியும்.
 
மூன்றுக்கும் ஏழுக்கும் நடுவில் மட்டுமே இந்த நிலை என்றால் 365 நாட்களுக்கும்?
 
அதுவும் காவல் துறையின் கவனத்திற்கு வராத குற்றங்களையும் சேர்த்து கணக்கிட்டால் நாளேடுகளில் பக்கங்களும் போதாது. நாளேடுகளும் போதாது. 
 
இந்த லட்சணத்தில் தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமறிக்கப்படுகிறதாம்.