Showing posts with label நீட் டெல்லி ஆதவ் விஜய் NEET TVK RSYF SFI AISF AISA. Show all posts
Showing posts with label நீட் டெல்லி ஆதவ் விஜய் NEET TVK RSYF SFI AISF AISA. Show all posts

Wednesday, 22 July 2026

நீட் போராட்டம்: டெல்லி 'சுல்தானும்', நடிகனின் 'நாடகமும்'!


நீட் (NEET) தேர்வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் வெடித்த மாணவர்களின் கொந்தளிப்பு, இன்று அரியணையிலிருக்கும் 'டெல்லி சுல்தானுக்கு' எதிரான மாபெரும் அரசியல் போராட்டமாக உருவெடுத்துள்ளது. வழக்கம் போல, ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களைக் கண்டாலே நடுக்கமுறும் மோடி அரசு, டெல்லி காவல்துறையைக் கொண்டு கடுமையான அடக்குமுறையை ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

டெல்லியில் ஏவப்படும் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்துத் தமிழ்நாட்டிலும் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆனால், இங்குதான் கூத்தின் அடுத்த கட்டம் தொடங்குகிறது!

ஒரே மாதிரியான லத்திகள்... வெவ்வேறான நாடகங்கள்!

டெல்லியில் போராடும் மாணவர்களை ஒடுக்குவதில் ஒன்றிய பாசிச அரசின் காவல் துறையும், தமிழ்நாட்டில் 'நடிகர்' தலைமையிலான அரசின் காவல் துறையும் ஒரே நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன. அங்கும் இங்கும் காவல்துறையினர் மாணவர்கள் மீது லத்திகளைச் சுழற்றும் வீரியம் ஒரே மாதிரிதான் இருக்கிறது!

சென்னையிலும் மதுரையிலும் போராடிய மாணவர் அமைப்பினர் மீது கொடூரமான தாக்குதலையும் அடக்குமுறையையும் ஏவிவிட்டுக்கொண்டே... நடிகர் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஆதவ், டெல்லி ஒடுக்குமுறையைக் கண்டித்து அறிக்கை விடுகிறார்! இதை என்னவென்று சொல்வது?

சென்னையிலும் மதுரையிலும் மாணவர்கள் மீது அடக்கு முறையை ஏவிய காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது 'ரோஜாப் பூக்களை' தூவுவது போலவும், டெல்லியில் மட்டும்தான் கொடூரத் தாக்குதல் நடப்பது போலவும் காட்சிப்படுத்துவது அமைச்சர் ஆதவ்வின் அப்பட்டமான நடிப்புதானே?


அழுவதா... சிரிப்பதா?

இதில் கொடுமை என்னவென்றால், "இந்த அடக்குமுறையெல்லாம் 'நடிகர்' முதல்வருக்குத் தெரியாது போலிருக்கிறது; அவர் உடனே இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒரு இடதுசாரித் தலைவர் நடிகருக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இதைப் படிக்கும் போது நமக்கு அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை! ஆட்சியதிகாரத்தின் உச்சியில் இருக்கும் முதல்வருக்குத் தெரியாமல்தான் காவல்துறை மாணவர்களை நசுக்குகிறதா?

களத்தில் நிற்பது யார்? தேர்தலுக்கு மட்டும் வருவது யார்?

ஆட்சியாளர்களின் நாடகங்கள் ஒருபுறமிருக்க, இந்த நீட் எதிர்ப்புப் போராட்டம் ஒரு தெளிவான உண்மையைப் பட்டவர்த்தனமாக உணர்த்தியுள்ளது.
இன்று களத்தில் நின்று அடிவாங்குவதும், கைது செய்யப்படுவதும் SFI, AISF, AISA, RSYF போன்ற இடதுசாரி மாணவர் மற்றும் இளைஞர் இயக்கங்கள்தான்! சிபிஐ (CPI), சிபிஎம் (CPM) ஆகிய இரு கட்சிகளும் தேர்தல் அரசியலுக்காக நடிகரின் அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், மாணவர் தளத்தில் இந்த இடதுசாரி அமைப்புகள் நீட்டுக்கு எதிராக தமிழ்நாட்டில் நடிகரின் காவல்துறை அடக்குமுறைகளை எதிர்கொள்வது வரவேற்கத்தக்கது.

ஆனால், தங்களை 'மாபெரும் இயக்கங்கள்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அரசியல் கட்சிகளின் ஒரு இளைஞனையோ அல்லது மாணவனையோ இந்த நீட் போராட்டக் களத்தில் பார்க்க முடிந்ததா? 'தேர்தல் கால அறுவடைகள்' மட்டுமே போதும், சமூகப் போராட்டங்கள் தங்களுக்குத் தேவையில்லை என்று இவர்கள் நினைக்கிறார்களா? ஆட்சியில் இருந்தவரை நீட்டை எதிர்த்த திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் களம் காணாமல் வேடிக்கை பார்க்குமானால் அரசியல் அரங்கிலும் அவர்கள் காணாமல் போக நேரிடும்.

தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஏன் குறிப்பிடவில்லை என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது! அது முதல்ல ஒரு கட்சியா? அங்கே போய் இளைஞர்கள், மாணவர்களிடம் நீட் தொடர்பாகக் கோரிக்கைகளைப் பற்றிக் கேட்டால் "அப்படியென்றால் என்ன?" என்று திருதிருவென விழிப்பார்கள். அவர்கள் அங்கே 'ஜனநாயகனை' ரசித்துக்கொண்டே கடலை போடுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்!


தாய் எட்டடி பாய்ந்தால்... குட்டி பதினாறு அடி!

இன்று வீதியில் நடக்கும் போராட்டம் என்பது வெறும் நீட் தேர்வுக்கு எதிரானது மட்டுமல்ல; கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மக்களை வாட்டி வதைக்கும் மோடி பாசிசத்திற்கு எதிரான போராட்டமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

அடக்குமுறைகளை ஏவுவதில் டெல்லியும், தமிழ்நாட்டில் நடிகரின் அரசும் ஒரே நேர்கோட்டில்தான் நிற்கின்றன. இந்தியக் குடிமக்கள் ஆயுதங்களின்றி அமைதியான முறையில் கூடுவதற்கும் போராடுவதற்கும் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மறுப்பதில் டெல்லிக்குச் சளைத்தது அல்ல நடிகரின் கோட்டை!

"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்" என்ற பழமொழி பொய்யல்ல. டெல்லி பெற்ற பிள்ளையான இந்த 'நடிகர்' ஆட்சியும் அடக்குமுறையைப் பாய்ச்சுகிறது என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?

நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராகவும், அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும் மாற்றுப் பண்பாட்டுச் சக்திகளான உழைக்கும் வர்க்க இளைஞர்களும் இடதுசாரி மாணவர் அமைப்புகளுமே என்றும் உண்மையான வரலாற்றுச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள் என்பதை இப்போராட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது!

ஊரான்