Friday, 29 November 2024

வேங்கடமா? திருவேங்கடமா? யாரை தரிசிக்கச் போகிறாய்?

பறை - இன்றும்கூட பறையர்களைக் குறிக்கும் ஒரு குறியீடாகவேப் பார்க்கப்படுகிறது. சாவு, திருவிழா, மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும்கூட பறை அடிக்கப்படும் பொழுது அடிப்பவர்களைப் பறையர்களாகத்தான் பார்க்கிறது பொதுச் சமூகம். 

ஒரு காலத்தில் ஆண்டைகள் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டு அடித்த போதும், தற்போது கட்டணம் நிர்ணயித்து அடிக்கும் போதும், அடிப்பவர்கள் மீது பறையர் பார்வை மட்டும்தான் விழுகிறது.

திராவிட இயக்க மற்றும் பொதுவுடமை இயக்க மேடைகளில் அடிக்கும் போதும் இதே பார்வைதான். ஆயிரம் அடவுகளைப் போட்டு அகிலத்தையே அதிர வைத்தாலும் பார்வை ஒன்றுதான்.


தென்மாவட்டங்களில், பட்டியல் சாதியைச் சேர்ந்த பள்ளர்கள்கூட பறையைத் தொடுவதில்லை என்று கேள்விப்பட்டேன். அங்கும் பறை என்றாலே அது பறையர்களுக்கானதாகத்தான் தொடர்கிறது.
 
பறையர்கள் தவிர்த்து, பிற சாதியினர் பறை அடித்தால் பறை மீதான பார்வை மாறிவிடுகிறதா? பொதுவுடமை இயக்கங்களில் வேண்டுமானால் பறையர் அல்லாத ஒருசிலர் பறை அடிக்கக்கூடும். அப்போதும்கூட, அடிப்பவர் மீதான பார்வையும் அதேதான்.
 
திரைப்படப் பாடல்களில் பறையும் ஒரு இசைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டாலும் பார்வை மட்டும் மாறிவிட்டதா என்ன?

தியாகய்யர் ஆராதனையிலும், மார்கழியில் மாம்பலக் கச்சேரிகளிலும், பூணூல் தெரிய பார்ப்பனர்களால் பறை அடிக்கப்பட்டால், ஒருவேளை பறை மீதான பார்வை மாறக்கூடும். இந்தியா வேண்டுமானால் வல்லரசாக மாறுமே ஒழிய, பறை ஒருபோதும் பார்ப்பனர் உள்ளிட்ட பிற சாதிக்காரர்களின் கரங்களில் தவழப்போவதில்லை.
 
உற்பத்தி முறையும், உற்பத்தி உறவுகளும் மாறும் பொழுது அல்லது வளர்ச்சியடையும் பொழுது பண்பாடும், இசையும், இசை வடிவங்களும், இசைக்கருவிகளும், பாப், ஜாஸ், சல்சா, ராக் ரோல் எனவும், கிதார், கிளாரினெட், டிரம்ஸ் எனவும் மாறிக்கொண்டுதானே இருக்கின்றன? 

இசையின் ஓசைகளை கணினிகளே கக்கும் போது, பறைஓசை மட்டும் கீபோர்டுகளில் கிளிக் ஆகாதா என்ன? பிறகு இங்கு மட்டும் ஏன் இழிவைச் சுமத்தும் பறையை ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் சுமக்க வேண்டும்?
 
இன்றும்கூட பறை ஒருசிலருக்கு வாழ்வாதாரமாகக்கூட இருக்கலாம். வாழ வழியா இல்லையா பூமியில்? பறைக்குப் பாடை கட்டி வாழ்வாதாரத்திற்கு வேறு ஆதாரத்தைதா தேடலாமே?
 
பறையை, பண்டைய இலக்கியங்களே கொண்டாடும் பொழுது, அதைக் கைவிடுவது தமிழர் மரபைக் கைவிடுவதாகாதா என சிலர் காமுறலாம். பறை, அது வரலாற்றுப் பக்கங்களில் மட்டுமே இருக்கட்டும்; சாதியின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியை இழிவுக்குள்ளாக்கிக் கொண்டே இருக்கும் பறை, குத்திக் கிழிக்கப்பட்டு கொளுத்தப்பட வேண்டியது

கட்சிகள், இயக்கங்களின் வரவேற்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் மற்றும் திருவிழாக்கள், எழவு எதுவாயினும் அங்கு பறை மறைய வேண்டும். 
 
இதைத்தான் அழகிய பெரியவனின் வல்லிசை நாயகன் திருவேங்கடம் உணர்த்துகிறான். நீ வேங்கடத்திற்குப் போகிறாயோ இல்லையோ, இந்தத் திருவேங்கடத்தை ஒருமுறை தரி(வா)சித்துப் பார்! “வல்லிசையின் வலிமை தெரியும்!

ஊரான்

Thursday, 28 November 2024

வடார்க்காடு வழக்குமொழி இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான ஒரு கலகக் குரல்!

ஒருங்கிணைந்த வடார்க்காடு மாவட்டத்தின் ஆம்பூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, பகுதிகளை உள்ளடக்கிய கிராமங்களில், பட்டியல் சாதிப்பிரிவு மக்களான பறையர் சாதி மக்கள் சந்திக்கும் தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும், இழிவுகளையும், அவலங்களையும், அவற்றிற்கு எதிரானப் போராட்டங்களையும் பேசுகிறது அழகிய பெரியவன் அவர்களின் "வல்லிசை" நாவல்.

ஓரளவு படிப்பறிவும், முற்போக்கு எண்ணமும் போராட்டக் குணமும் கொண்ட, தோல் கம்பெனியில் வேலை பார்க்கும் இராவணேசன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்டர்மீடியேட் படிப்பு முடித்து ஊர் திரும்பும் அவரது மகன் திருவேங்கடம் தந்தையைப் போல பறையர் சாதி மக்களின் விடுதலைக்காகப் போராடுவது, தந்தையின் போராட்டங்களால் தனது வாழ்வே சிதைந்து போனதாகக் கருதும் திருவேங்கடத்தின் கடைசி மகன் சமநீதியரசு என, இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்கும் கதைக்களம், எம்.ஜி.ஆர் அரசியலுக்குள் நுழைந்த காலகட்டம் வரை மூன்று தலைமுறைகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்றுப் புதினமாகப் புனையப்பட்டிருக்கிறது இந்நாவல்.



இந்தியக் கிராமங்கள் ஊர் என்றும், சேரி என்றும் இரண்டு அலகுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது என்பார் அம்பேத்கர். இதுதான் தீண்டாமை உள்ளிட்ட சாதிய ஒடுக்கு முறையின் தொடக்கப் புள்ளி என்பதை இந்தியக் கிராமங்களில் பயணித்தாலே புரிந்து கொள்ள முடியும்.

கூழோ குடிநீரோ அவற்றை இரு கைகளில் ஏந்திக் குடிப்பது, தேநீர்க் கடைகளில் தனிக் குவளை, உணவகங்களில் பிறசாதியினரோடு அமர்ந்து உண்ணத் தடை, சாதியைச் சொல்லித் திட்டுவது போன்ற வெளிப்படையான சில நடவடிக்கைகள்தான் தீண்டத்தகாதவர்களுக்கு நேரடியாகப் புரியும். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி ஆதிக்கச் சாதியினரின் மனதில் குடிகொண்டிருக்கும் தீண்டாமை எண்ணங்கள் பற்றி தீண்டத்தகாதவர்களால் அறிந்து கொள்ள முடியாது.

நாவலின் இறுதியில் அடடா, பழசை எல்லாம் (ஆதிக்கச் சாதியினருக்கு எதிரானப் போராட்டங்கள் வழக்குகள் பழிவாங்கல்கள்) நான் எப்பவோ மறந்துட்டேன் திருவேங்கடம். மனுசன்னா மன்னிக்கத் தெரியணும்..” என திருவேங்கடத்திடம் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தீர்த்தமலை பேசுவது போல, “இப்ப எல்லாம் யாரு சார் சாதி பாக்குறா, எல்லாம் மாறிப்போச்சுஎன வேறு மொழியில் பலரும் பேசுவதைப் இன்றும் கேட்க முடியும்.

தீண்டாமையின் வடிவங்கள் வேண்டுமானால் மாறி இருக்கலாமே ஒழிய, தீண்டாமை எண்ணங்கள் இன்னமும் ஆதிக்கச் சாதியினரின் ஆழ்மனதில் நிலை கொண்டுள்ளது, அவை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

எந்த ஒரு படைப்பாளியும், தான் செய்கின்ற தொழில், சந்திக்கின்ற பிரச்சனைகள், பழகுகின்ற மனிதர்கள், வாழுகின்ற புறச்சூழல் பற்றிதான் எழுத முடியும். அதைத்தான் அழகிய பெரியவனும் செய்திருக்கிறார்

வன்னியர், முதலியார், பிள்ளை, வெள்ளாளர், தேவர், நாடார், பார்ப்பனர் உள்ளிட்ட சாதி மக்களோடு பழகுகின்ற ஒருவர் அவரது படைப்பில் அந்தச் சாதி மக்களைத்தான் பிரதிபலிக்க முடியும். அவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரராகவும் இருக்கலாம். அதற்காக அவரது படைப்பை வன்னியர் இலக்கியம், முதலியார் இலக்கியம், பார்ப்பனர் இலக்கியம் என்றோ …. அழைக்காத போது, பறையர் சாதி மக்களைப் பற்றியப் படைப்பை அல்லது பறையர் சாதியைச் சார்ந்த ஒருவரின் படைப்பை தலித் இலக்கியம் என்று அழைப்பது இலக்கியத்திலும் தீண்டாமையைக் கடைபிடித்து ஒதுக்குவதற்கு ஒப்பாகும்.

இலக்கியம் பொதுவானதாகத்தான் இருக்க முடியும். அப்படித்தான் நான் வல்லிசையைப் பார்க்கிறேன். வல்லிசை ஆதிக்கச் சாதி மக்களையும், ஆதிக்கத்திற்கு உள்ளாகிற மக்களையும் பற்றிப் பேசுவதால் இது எல்லோருக்குமான இலக்கியம்தான்.

இந்நாவல் பேசுகின்ற படிப்பு, கல்வி, உள்ளூர் படிப்பகங்கள், பல்வேறு இதழ்கள், நூல்கள் இவை எல்லோருக்கும் பயன்தரக் கூடியவைதானே? படிக்க வேண்டும் என்பதைத்தானே வலியுறுத்துகிறது வல்லிசை. ஒருவன் படித்து அறிவாளியானால் அது அவனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தச் சமூகத்திற்கும்தானே பயன்படப் போகிறது.

சமூகத்தை மாற்ற விரும்பும் ஒவ்வொருவரும் மார்க்ஸ், மாவோ, அம்பேத்கர், பெரியார், புலே, ராகுல்ஜி என பலரையும், சங்க இலக்கியம் உள்ளிட்ட இலக்கியங்கள் மற்றும் பல்வேறு இதழ்களையும் நூல்களையும் படிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறார் அழகிய பெரியவன்.

தொழிலாளர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் போராடும் சங்கத் தலைவர்களும்இந்து மதவெறிப் பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும், பொதுவுடைமைச் சமூகம் படைக்கவும் போராடும் கம்யூனிஸ்டுகளும்போராட்டக் களத்தில் சந்திக்கும் அடக்குமுறைகளையும் வழக்குகளையும் கையாள்வதற்கு வல்லிசையின் இரண்டாம் தலைமுறை கதை மாந்தன் திருவேங்கடத்திடம் கற்றுக் கொள்ள ஏராளம் உண்டு.

கிராமங்களையும் வயல்களையும் வனங்களையும் சென்னையின் வீதிகளையும் விவரிக்கும் போது அவைகளோடு வாழ்ந்திருக்கிறார்; இயற்கையை நம்மீது அள்ளித் தெளிக்கிறார்  நாவலாசிரியர். மனித மனங்களை ஊடுருவி அவர்களது உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் நம் நெஞ்சங்களில் பாய்ச்சுகிறார்.

மரங்களடர்ந்த மாம்பலம் கோடம்பாக்கம் சாலையில் உள்ள மரங்களைப் பற்றி,
வெள்ளைக்காரன் கொண்டு வந்த அம்மரங்கள் கரும்பச்சையில் முட்டை வடிவ இலைகளுடனும் சடைபோலத் தொங்கும் காம்புகளில் காய்களுடனும் அவனை ஈர்த்தன. வாதமடக்கியும் மயில் கொன்றையும் சிரித்தன; 
பல இடங்களில் பெருங்கொன்றையைப் பார்க்க முடிந்தது. ஊர்ப்பக்கங்களில் இருக்கும் பொன்னாவரைக்கும் இதற்கும் குழப்பம் வந்தது; கொன்றையின் மஞ்சள் பூக்கள் பொன் கம்மல்களாய் மின்னின. காலைச் சூரியன் இளமஞ்சள் ஒளி மரங்களுள் ஊடுருவி கோட்டுச் சித்திரங்களை சாலையில் வரைந்தது
என வர்ணிக்கிறார்.

பூமியின் ஆழத்திலிருந்து கற்களுக்கும், மண் துகள்களுக்கும் நடுவிலே மறைந்திருக்கும் பொன் துகள்களை எடுப்பதற்காக மலை மலையாய் மண்ணை அகழ்ந்து கொட்டுவது போல்தானே போராட்டங்களும் போய்விட்டன? சமத்துவம் என்கிற ஒரு துண்டுப் பொன்னை மனிதனின் பல்வேறு இழிமை குணங்களிலிருந்து அகழ்ந்தெடுக்க எவ்வளவு கசடுகளை வெளியேற்ற வேண்டியிருக்கிறது? ஒரு மனிதன் தன்னுடன் வாழும் இன்னொரு மனிதனை சக ஜீவியாக ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்?” என்று திருவேங்கடத்தின் கசந்து போன மனநிலையைக் படம்பிடித்துக் காட்டுகிறார்.

ஆதிக்கச் சாதியினரைத் தாக்கியதாகப் புனையப்பட்ட பொய் வழக்கிலிருந்து தப்பிக்கத் தலைமறைவு வாழ்க்கை, பிணை பெறுவதற்காக கோலாருக்கும் சென்னைக்கும் அலைந்த அலைச்சல், இறுதியில் வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுதலையடைந்து, நீதிமன்றத்தின் தரையை தன் இரு கைகளாலும் திருவேங்கடம் தொட்ட போது, அவர் கண்களிலிருந்து பொலபொலவென நீர்கொட்டியதைப் படிக்கும் போது, நமது நெஞ்சத்தையும் தொட்டு வாசகனின் கண்களையும் கசிய வைக்கிறார் அழகிய பெரியவன். ஒரு படைப்பாளி இலக்கிய உலகில் தடம் பதிக்கும் இடம் இதுதான்.

இன்றும்கூட ஊரும் சேரியும் தனித்தனியாகத்தான் உள்ளன. ஊரென்றால் அது ஆதிக்கச் சாதியினரை குறிப்பதாகும். சேரி என்றால் அது தீண்டத்தகாதவர்கள் இருப்பதைக் குறிப்பதாகும். ஆனால் நாவலின் ஒரு சில இடங்களில் மட்டுமே தீண்டத்தகாதவர்கள் வசிக்கும் பகுதியை சேரி என்று குறிப்பிடுகிறார். மற்ற இடங்களில் ஊர் என்று குறிப்பிடும் பொழுது அது வாசகனின் மனதில் சற்றே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

முழவு, துடி, தண்ணுமை என்ற மூன்று அத்தியாயங்களாக நாவல் பகுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுமே இசைக்கருவிகளோடு தொடர்புடையது. தீண்டாமைக்கு எதிரான போராட்ட வடிவத்தில் பறை இசையைத் தடை செய்வது நாவலின் மையப் பேசு பொருளாக இருப்பதால் 'வல்லிசை' என்ற பெயர் பொருத்தமானதுதான் என்றாலும் எளிய மக்களுக்கு முழவு, துடி, தண்ணுமை மூன்றையும் விளங்கிக் கொள்வது சிரமம். எங்கேயாவது குறிப்பு கொடுத்திருக்கலாம். 

ஒட்டுமொத்த சமூகத்தில் மட்டுமல்ல பட்டியல் சாதி மக்களிடையேயும் படித்தவர்களும் படிப்பாளிகளும் அறிவாளிகளும் பெருகி உள்ள காலகட்டத்தில், 2016 இல் வெளியான இந்நாவல் வெறும் 500 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது வாசகர்களிடம் உள்ள வாசிப்பின் அவலத்தை வெளிக்காட்டுகிறதுஇலக்கிய உலகம் சந்திக்கும் சோகம் இது.

வடார்க்காடு வட்டார வழக்கு மொழியில், ஓங்கி ஒலிக்கும் வல்லிசை கரிசல் காட்டையும் அதிரவைக்கட்டும். வடார்க்காடு வழக்குமொழி இலக்கியத் தீண்டாமைக்கு எதிரான ஒரு கலகக் குரல் வல்லிசை!

ஊரான்

Tuesday, 26 November 2024

பூத் பங்களா!

நண்பரின் தாயார் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பவரை சென்று பார்க்கவில்லையே என்ற குற்ற உணர்வு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இன்று எப்படியாவது சென்று பார்த்துவிடுவது என்ற எண்ணத்தோடு காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டேன். போகும் வழியில் வழக்கமான மாத்திரையை வாங்கிக் கொள்ளலாம் என நான் பணியாற்றிய பொதுத்துறை நிறுவன மருத்துவமனையை நோக்கிப் பயணமானேன்.

நகரப் பேருந்தில் ஏழு ருபாய் கொடுத்து  அடுத்தப் பேருந்தைப் பிடிக்க முத்துக்கடையில் இறங்கியபோது, நான் ஏற வேண்டிய இடத்தில், பேருந்து நிலையத்திற்குள்ளேயே சிலர் கூடாரம் அமைத்திருந்தனர். கிட்டே சென்று பார்த்தால் அது நாம் தமிழர் தம்பிகளின் “இலவச பொது மருத்துவ முகாம்” கூடாரம் என்பதை அறிந்த போது, ஒருபக்கம் சீமானின் கூடாரமே காலியாகும் போது, இவர்கள் எதற்கு இங்கே கூடாரம் அமைத்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்று எண்ணியபோது என்னுள் எழுந்த நகைப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேருந்துக்காகக் காத்திருந்தேன். 


பேருந்து நிற்க வேண்டிய இடத்தில் கூடாரம் இருந்ததால், பேருந்து உள்ளே வருமா, சாலையிலேயே ஜகா வாங்கி விடுமா என்ற குழப்பம் மனதில் ஓட, பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கூடாரம் போட காவல் துறை எப்படி அனுமதி கொடுத்தது என்ற ஐயங்கள் என்னுள் எழ, நிலையத்திற்கு வெளியே வந்து சாலையில் வரும் பேருந்துகளின் பெயர்ப் பலகைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

லேசானத் தூறல் வேறு. கையில் குடையையும் கொண்டு வரவில்லை. முன்பு 'டானா' புயல் தமிழகத்தை ஒதுக்கிவிட்டு, எட்டியே சென்று விட்டதால் கடந்த ஒரு மாத காலமாக அடைமழை காலத்திலும் பிசிறுதான் தமிழ்நாட்டில் எஞ்சியிருந்தது.  ஊட்டியை உறைபனி சூழ சென்னைகூட மூடுபனியால் மூழ்கிப் போனது. அடைமழை காலத்தில் இது என்னடா காலக்கொடுமை என்று எண்ணுவதற்குள் கார்த்திகையும் வந்து விட்டது. 


தூறலைப் பார்த்தபோதுதான் வடகிழக்கு வங்கக்கடலில் தாழ்வுப் பகுதி நினைவுக்கு வர, கூகுளில் 'அக்குவெதரைத்' தட்டினேன். “வரும்.. ஆனா வராது” போலத் தோன்றினாலும், ஒரு வேளை தாழ்வுப் பகுதி புயலாக மாறினால் அதற்குப் ஃபெங்கல் (Fengal) எனப் பெயரும் சூட்டிவிட்டார்கள் வானவியலாளர்கள். காதலர்களின் கடைக்கண் பார்வையிலேயே பிறக்கப் போகும் குழந்தைக்குப் பெயர் சூட்டலா என  எண்ணியவாறு பயணத்தைத் தொடர்ந்தேன். 

குடியிருப்பு வளாக பேருந்து நிறுத்தத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் நலச் சங்கத் தலைவரை சந்தித்து, ‘மிகவும் விலை குறைந்த வழக்கமான (regular medicine) மருந்து மாத்திரைகளைப் பெறுவதற்குக்கூட இரண்டாவது முறை வரச் சொல்கிறார்களே? எழுபதைத் தொடுபவர்களுக்கு இது தொந்தரவில்லையா”?  என முதியோர்களின் ஆதங்கத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டு மருத்துவமனையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

மூப்பு அடைய அடைய குருதி ஓட்டக் குறைவால்  நடைகூட தடுமாறும் என்பதால் செருப்புக்குப் பதிலாய் 'கேன்வாஸ் ஷூ' அணிவதால்  சற்றே மிடுக்காய் நடக்கலாம் என்பதால் நானும் அவ்வாறே நடப்பது வழக்கம்.

குடியிருப்புக்குள் நுழைந்து வலப்பக்கம் சாலையில் நடந்தபோது இடப்பக்கம் எனது பிள்ளைகள் பயின்றத் தமிழ்வழி பள்ளிக்கூடம். “ஏன் நெற்றியில் திருநீறு இல்லாமல் வந்தாய்”, என எனது இளைய மகனை வகுப்புக்கு வெளியில் நிறுத்த , “ஏன்?” என்று நேரில் சென்று நான் பள்ளித்தாளாளரை வினவ, “திருநீறு வைப்பது ஒழுக்கத்திற்காக” என அவர் எனக்கு வகுப்பெடுக்க, “ஒழுக்கம் திருநீரால் வருவதில்லை, அது வளர்ப்பால் வருவது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் படிப்பைப் பாருங்கள்” என நான் அவருக்கு வகுப்பெடுக்க, “இனி திருநீறு குறித்து எனது பிள்ளையிடம் கேட்கக்கூடாது” என நான் வலியுறுத்த, அதை அவரும் ஏற்க, அந்த நினைவுகள் என்னுள் வந்துபோக பள்ளியைக் கடந்து நடக்கலானேன்.

சாலையின் இருபுறங்களிலும் திருமண மண்டப வளாகத்திலும் மொத்தத்தில் குடியிருப்பு வளாகத்திலும் பருத்து ஓங்கி வளர்ந்திருக்கும் மரங்கள் நம்மை அமேசானுக்குள் அழைத்துச் சென்றுவிடும். 2018 இல் பணி ஓய்வு பெற்ற பொழுது நான் ஊன்றிய புங்கையும் இன்று அமேசானில் அடர்த்தி காட்டுகிறது. 

மூப்படைந்தவர்கள் மெல்ல மெல்ல மெலிந்து தேய்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் வைத்த மரங்களோ மேலும் மேலும் வளர்ந்து செழுமை சேர்க்கின்றன. அதுபோல நாங்கள் உழைத்து வளர்த்த ஆலையிலும், அதிக அளவில் இளைஞர்களை சேர்த்தால், நாங்கள் நட்ட மரங்களைப் போல ஆலையும் செழித்தோங்குமே என்ற ஏக்கம் மட்டும் எப்பொழுதும் எல்லோரிடமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆளும் ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் பொதுத்துறைகளின் வளர்ச்சி குன்றி, ஊழியர்களும் குறைந்து போனதால் குடியிருப்புகள் எல்லாம் செல்களின் மாளிகைகளாய் மாறி வருகின்றன. மருத்துவமனை செல்லும் சாலையின் இடப்புறம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இரு 'டி' வகை உயர்தரக் குடியிருப்புகள், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட்டதால் அவை பொலிவோடு காட்சி அளிக்கின்றன. வலப்புறம் உள்ள வீடுகள் படர்ந்து தவழும் மரக்கிளைகளின் பாரம் தாங்காமல் பெருமூச்சு விட்டவாறு பூத் பங்களாக்களாக மாறி வருகின்றன. 

நிரந்தரப் பணியாளர்கள் இருந்த இடத்தில் இன்று  மருத்துவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த ஊழியர்கள். ஒப்பந்த முறை என்பது, அதுவும் மருத்துவ மனையில், அது நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு ஒப்பாகும் என்ற எண்ணம் மனதில் ஓட, எனக்கான மாத்திரைகளைச் பெற்றுக் கொண்டு திரும்பும் போது ஓங்கி வளர்ந்த அந்த மரங்கள் என்னை மீண்டும் அமேசானுக்குள் அழைத்துச் சென்றன.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது படபடவென மழைத் தூறல். நண்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நண்பர் இருப்பதோ தென் திசையில் நூறு கிலோ மீட்டருக்கு அப்பால். தாழ்வு மண்டலம், 'ஃபெங்கலாக' மாறுமா என்ற அச்சம் என்னைக் கவ்விக் கொள்ள, செல்ல முடியவில்லையே என்ற உறுத்தல் மட்டும் நெஞ்சைக் குடைய, பிரிதொரு நாளில் நண்பரைக் காணச் செல்வதே உசிதம் எனக் கருதி வீடு திரும்பினேன்.

ஊரான்

Saturday, 23 November 2024

ஊர்தோறும் சாராயபுரங்கள்-விரைவில்!

மரியாதைக்குரிய மதுப்பிரியர்கள்

பயணச் சீட்டு வாங்காமல் பேருந்தின் படிக்கட்டுகளில் பயணித்த ஒரு குடிகாரன்தான் சலசலப்புக்குக் காரணம். 'ஒன்று, பயணிச்சீட்டு வாங்கு, இல்லையேல் கீழே இறங்கு' என நடத்துனர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவன் இறங்கவும் இல்லை, பயணச்சீட்டு வாங்கவும் இல்லை. ஏற்கனவே தான் வாங்கி விட்டதாகவும், 'எங்கே காட்டு?: என்றபோது, 'இறங்கும் போது வாங்குகிறேன்' என்றும் அடாவடித்தனம்‌ செய்ய, வலுக்கட்டாயமாக நடத்துநர் 
அவனை கீழே இறக்கிவிட பேருந்து போளூரை நோக்கி விரைந்தது.

இரவு எட்டு மணிவாக்கில் வீடு வந்து சேர்ந்தேன். பத்து நாட்களாக குவிந்து கிடந்த இந்து தமிழ் திசை நாளேட்டின் சில பக்கங்களைப் புரட்டினேன்.

"திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பார்சனாப்பல்லி ஊராட்சியில், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வர வசதியாக பார்சனாப்பல்லி சென்னப்ப மலையோரம், ஆம்பூர்-அரங்கல் துருகம் மாநில நெடுஞ்சாலைப் பகுதியில் பயணிகள் நிழற்கூடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்தப் பயணிகள் நிழற்கூடம் தற்போது அசைவ உணவுக் கூடாரமாக மாறி உள்ளதால், அசைவ உணவு தேடி வரும் மதுப் பிரியர்களின் சரணாலயமாக அது மாறிவிட்டது.

பயணியர் நிழற் கூடம்

குடியர்கள் குடித்துப் போட்ட காலி பாட்டில்களாலும், தின்று துப்பிய எச்சில் கழிவுகளாலும், அந்தப் பேருந்து நிழற் கூடம் கழிசடைகளின் கூடாரமாக மாறி உள்ளதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள், அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், குடியர்களிடம் சிக்கி உள்ள நிழற்கூடத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோருவதாக" இந்து தமிழ் திசை நாளேடு 19.11.2024 அன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

நிழற்கூடத்தை மட்டுமா மீட்க வேண்டும்?

பட்டப் பகலில் சாலை ஓர புளிய மரத்தடி, காடு மேடுகளில் உள்ள மரத்தடிகள், மூத்திரச் சந்துகள், பேருந்து நிலைய கழிவறைகள், கேட்பாரற்றுக் கிடக்கும் குட்டுச்சுவர்கள்; ஆற்றங்கரை,  ஏரிக்கரை, கிணற்றடி, குளக்கரை, இருட்டிய பிறகு சாலையோர பேருந்து நிறுத்தங்கள், கட்டி முடிக்கப்படாத புதிய கட்டடங்கள்,
வீட்டுக் கொல்லைப்புறம், கட்டிலடி என பரந்த வெளி முதல் படுக்கை அறை வரை எங்கும் குடியர்களின் கண்ணாடி பாட்டில்கள் பார்த்தினீயம் போல பரவி விரவிக் கிடக்கின்றன. 

குடிகாரர்கள் எல்லாம், இப்போது மதுப்பிரியர்களாக அவதாரம் எடுத்துள்ளதால், கள்ளுண்ணாமை கண்ட வள்ளுவனுக்கே சவக்குழி தோண்டியாச்சு. மக்களின் உளவியலும் இன்று மாறிப்போச்சு.

எதிர்க் குரல்

வேலூர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் இருக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளை அகற்றக் கோரி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ), விடுதலை மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சாராயக் கடைக்குப் பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்து ஊர்வலமாகச் சென்றபோது, அவர்களை வழி மறித்து, அறுபது பேரைக் கைது செய்து, மாலை வரை மண்டபத்தில் அடைத்து வைத்து, ஏழு பேர் மீது வழக்குத் தொடுத்து சிறையில் அடைந்துள்ளது தமிழ்நாடு அரசு.

பூட்டுப் போடும் போராட்டம்

இ.பீ.கோ இன்று இல்லை. அது பா.நீ.வி யாக மாற்றப்பட்டு விட்டதால் 126(2), 142, 189(2), 223, 351(2)  (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுத்துள்ளது கடமை தவறா 'கண்ணியமிக்க' வேலூர் காவல்துறை.

எங்களை விட்டுவிடுங்கள்!

போயஸ் தோட்டத்தில் முளைத்ததை, கோபாலபுரம் உரமிட்டு வளர்ப்பதால் காணும் இடமெல்லாம் கண்ணாடிக் காடுகள். பூமித்தாயின் உடலெங்கும் கண்ணாடிக் கீறல்கள். மண்ணில் கால் வைக்க பாதங்கள் அஞ்சுகின்றன. பாட்டில் சிதிலங்களில் பட்டு தெரிக்கும் கதிரவனின் ஒளிக்கீற்றால் கண்கள் கூசுகின்றன. குடியர்களின் வசவுகளால் காதுகள் செவிடாகின்றன. சாராய நெடி நாசிகளைத்  துளைக்கின்றது. 

"குடிக்காதவன் ஒருமுறைதான் அரசுக்கு வரிகட்டுகிறான், ஆனால் குடிகாரனோ அரசுக்கு இரண்டு முறை வரிகட்டுவதால், அவனுக்குப் பேருந்துகளிலும் இரயில்களிலும் கட்டணமில்லாப் பயணம் வழங்க வேண்டும்" என்று ஒரு அலுவலக நண்பர் சில ஆண்டுகளுக்கு முன்பு வேடிக்கையாய்ச் சொன்னதன் பொருள் புரிகிறது. ஆம்! செல்லப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது உங்களது கடமையல்லவா?

எங்களுக்குச் சமத்துவபுரங்கள் இப்போதைக்கு வேண்டாம். ஊர் தோறும்  சுற்றுச் சுவருடன்கூடிய சாராயபுரங்களை உருவாக்குங்கள். கட்டணமில்லாப் பேருந்துகளில் குடியர்களை அங்கே அழைத்துச் செல்லுங்கள். வேண்டிய மட்டும் அவர்கள் அங்கே குடிக்கட்டும். அதற்கான காசை அவர்களிடமிருந்து கரந்து கொள்ளுங்கள்.
உங்களுக்குத் தேவை காசு, பணம், துட்டுதானே? 

எக்காரணம் கொண்டும் பாட்டில்களை வெளியே எடுத்துவர அனுமதிக்காதீர்கள். அவை வெளியே வந்தால் எங்கள் பாதங்களை குத்திக் குதரும். உள்ளேயே இருந்தால் உங்களுக்குக் கோடிகளைக் குவிக்கும். குடியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கட்டும். ஆனால், நான்கு மணி நேரம் கழித்த பிறகே அவர்களை அழைத்துச் சென்ற அதே பேருந்துகளில் திரும்ப அழைத்து வந்து, அவரவர் இல்லங்களில் சேர்த்து விடுங்கள். அதற்குள் போதை தெளிந்து விடும். நாங்களும் குடியர்களின் வெறியாட்டங்களிலிருந்து தப்பிப்போம். 

"காட்டோர கூட்ரோடு
பகலில் 
பயணிகளின் நிழற்குடை,
இரவில் 
குடிகாரர்களின் வாழ்விடம். 
பேருந்துக்காகக் காத்திருக்கும் 
பள்ளி மாணவர்களின்
கனவுகளை சிதைக்கும்
காலி பாட்டில்கள்!" 

என்று, சென்ற ஆண்டு ஜூலையில் எனது பாட்டி ஊருக்குச் சென்றிருந்த போது எழுதியிருந்தேன்.

ஆம்! எங்களைப் படிக்க விடுங்கள்! பயணிக்க விடுங்கள்! எங்களது கனவுகளைப் சிதைக்காதீர்கள்! மொத்தத்தில் எங்களை விட்டுவிடுங்கள்! வாழ விரும்புவோரையாவது வாழ விடுங்கள்! 

முற்றும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Friday, 22 November 2024

ஒற்றைக் கோழி!

பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுதே பட்டறிவால் பகுத்தறிவைப் பெற்ற நான் இன்று வரை மதம் சார்ந்த பண்டிகைகள் எதையும் கொண்டாடுவதில்லை. எத்தனையோ இடையூறுகளை எதிர்கொண்ட / எதிர்கொள்ளும் போதும் உதவிக்கு 'இறைவனை' என்றும் நான் நாடியதில்லை / நாடுவதில்லை. பண்டிகைகளால் தூண்டப்படும் கணநேர மகிழ்ச்சியை விட எந்நேரமும் மகிழ்ச்சியாய் இருப்பதையே நான் விரும்புகின்றேன். 

பெருமைக்காகச் சேர்க்கும் பணமும் பொருளும், ஆசைக்காக அணியும் ஆடைகளும் அணிகலன்களும், ருசிக்காக உண்ணும் உணவும் இன்ன பிறவும், பொழுது போக்கும் உல்லாசப் பயணங்களும் ஏற்படுத்தும் மகிழ்ச்சி, விடிந்தவுடன் மறைந்து போகும் மது போதையைப் போன்றது என்பதனால் இவற்றிலும் எனக்கு அதிக நாட்டம் இல்லை. 

பலன் எதுவாயினும் உழைப்பு எனும் அழகில் நாட்டம் கொண்டால் இன்பம் இயல்பாய் நம்மை ஒட்டிக் கொள்ளும். எதை எதையோ இரசிக்கத் தெரிந்த நமக்கு உழைப்பை மட்டும் இரசிக்கத் தெரியவில்லை.  ஒரு முறை உழைப்பை இரசித்துப்பார், மகிழ்ச்சி உன்னை ஆட்கொள்ளும். உழைப்பை நீ எட்டிக்காயாய்
நினைத்து விட்டால் மகிழ்ச்சி எப்பொழுதும் எட்டாக் கனிதான்.

நான்தான் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லையே ஒழிய கொண்டாடும் உறவுகளையும், நட்புகளையும் நான் வெட்டி விடுவதில்லை. பண்டிகைகளின் பலகாரங்களும், பாய் வீட்டு பிரியாணியையும்  ஒரு கை பார்க்காமல் விடுவதுமில்லை. 

இந்த ஆண்டு தீபாவளியும் எப்பொழுதும் போல வந்து போனது. மக்களும் விலை கொடுத்து வாங்கிய மகிழ்ச்சியில் மூழ்கிக் திளைத்து ஓரிரு நாளில் இயல்பு நிலைக்குத் திரும்ப, நானோ  சந்தனக் காட்டின் சமவெளிப் பகுதியில் ஓரிரு ஆண்டுகளாக ஏர் கலப்பைகளுக்காக ஏங்கிக் கிடந்த உறவினரின் நிலத்தை மண்வெட்டியும் கடப்பாரையுமாக பத்து நாட்கள் புரட்டி எடுத்தேன். மா, பலா வாழை என முக்கனியும் பிற கனியும் கனிவதற்காய் களம் அமைத்தேன். உழைப்பை நான் நேசிக்க, மண் என்னை அரவணைக்க மகிழ்ச்சி அங்கே தாண்டவமாடியது. 

இரண்டு மாதங்களுக்கு முன்பு சகலையால் வாங்கி வந்த ஒற்றைக் கோழிக் குஞ்சு இன்று விடலையாய் வளர்ச்சி கண்டு  கவர்ச்சி காட்டியது. பறவைகள் பகல் முழுக்கப் பறந்தாலும் மாலையில் வீட்டிற்கு வந்துதானே ஆகவேண்டும்.  இரவில் அவிழ்த்து விடப்படும் சிப்பிப்பாறைகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மாலை மங்கும் வேலையில் 'கிரில் கேட்டில்' சிறிது நேரம் அமர்ந்து பின் எதிரில் உள்ள வேப்பமரக்கிளையில் லாவகமாய் இடம் பிடித்து இரவைக் கழிக்கிறது இந்த ஒற்றைக் கோழி. கதிரவன் துயில் களையும் வேலையில் தானும், தானாகவே எழுந்து தோட்டத்தில் தஞ்சமடைந்து விடுகிறது இந்த விடலைக் குஞ்சு. 


விடலைப்பருவத்தின் ஏக்கம் போக்க மூன்று முடிச்சுப் போடுவதைத் போல இந்த விடலைக்கும் இப்போது முடிச்சுப் போட்டுவிட்டதால், என்றோ இரையாகப் போகிறோமே என்பதையும் அறியாமல் அவை தோட்டத்தில் ஜோடியாய் இரைதேடி இன்புற்றிருக்கின்றன. பகலில் சிப்பிப்பாறைகள் சிறைவைக்கப்படுவதால் தோட்டத்தில் இவை சுதந்திரமாய் சுற்றி வருகின்றன. 


பத்து நாள் கழித்து சந்தனக் காட்டின் கீழ் திசையில், சொந்த மண்ணைத் தொட்டுவிட்டு, தெளிந்து ஓடும் ஆற்று ஊற்றுகளையும், நிரம்பி வழியும் ஏரிகளையும், பசுமை படர்ந்த காடு மலைகளையும், செழித்து வளரும் பயிர் பச்சைகளையும், விளைந்து வலைந்த நேற்சோலைகளையும் பார்த்தவாறு, கூட்டை நோக்கிப் பறக்கும் பறவைகளைப் போல நானும் வீட்டை நோக்கிப் பயணமானேன். வன்மம் நிறைந்த சில உறவுகளால் சில சமயம் ஏற்படும் மனக்காயங்களுக்கு இந்த இயற்கைதான் நம் நெஞ்சுக் கூட்டை இதமாய்த் தடவி வருடிக் கொடுக்கிறது. 

விரைந்து ஓடும் தனியார் பேருந்தில் சற்றே சலசலப்பு. என்னவென்று எட்டிப் பார்த்தேன்.

தொடரும்

ஊரான்