Showing posts with label உதயநிதி. Show all posts
Showing posts with label உதயநிதி. Show all posts

Wednesday, 20 September 2023

சனாதன தருமம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! தொடர்-11

'சனாதன தருமம் சமத்துவத்தை போதிக்கிறது, அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை' என்று சப்பை கட்டு கட்டுகின்றனர் அதன் ஆதரவாளர்கள். இது உண்மையா?

சமத்துவமின்மையே சனாதன தருமத்தின் வேர்

சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம். கலியுகத்தில் பிராமணர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரண்டு வருணங்கள் மட்டுமே இந்து மதத்தில் உண்டு. சத்திரிய, வைசிய வருணங்கள் கிடையாது. இவை தவிர அவர்ணர்கள் என்று சொல்லக்கூடிய தீண்டத்தகாத பிரிவினரும் இன்றைய இந்து மதத்தில் அடங்குவர். 

சனாதன தருமப்படி இந்து மதத்தில், தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று பிராமணர்கள் கருதிக் கொள்கின்றனர். அடிமட்ட வேலை செய்தாலும், அன்றாடம் கஞ்சிக்கே அல்லாடினாலும் ஒரு பார்ப்பனனின் மனநிலை இதுதான்.

அதேபோல, சூத்திர சாதிகளில் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பிள்ளைமார்களும், அதற்கு அடுத்து செட்டியார், நாயுடு, ரெட்டி,  முதலியார், வெள்ளாள கவுண்டர், முக்குலத்தோர், வன்னியர், முத்தரையர், வண்ணார், நாவிதர், நாடார் என ஏணிப்படிகள் போல அமைக்கப்பட்டுள்ள சாதிகளில் ஒவ்வொருவரும் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைவிட தாங்களே உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொள்கின்றனர். தீண்டத்தகாத சாதிகளில் பள்ளர்கள் உயர்ந்தவர்களாகவும் அடுத்து பறையர்களும், அதற்கு அடுத்து சக்கிலியர்களும் என படிநிலையாக உயர்வு தாழ்வு பேணப்படுகிறது.

இத்தகைய உயர்வு தாழ்வு பார்ப்பது என்பது இவர்களிடம் தானாக வந்துவிடவில்லை. மாறாக பார்ப்பனர்களிடமிருந்தே இவர்கள் இதை கற்றுக் கொண்டனர். சமத்துவமின்மையே சனாதனத்தின் ஆணிவேர்.

உயர்ந்த இடத்தில் பார்ப்பனர்கள்

எந்தப் பிராணியும் பசுவை விட உயர்ந்தது கிடையாது, புழு பூச்சிகளை விட பசு உயர்ந்தது, பசுவை விட மனிதன் உயர்ந்தவன், மனிதர்களில் அந்தணர்கள் உயர்ந்தவர்கள், அந்தணரை விட பண்டிதர் உயர்ந்தவர், பண்டிதரைவிட ஞானிகள் உயர்ந்தவர்கள். (மனு 1: 96, 97).

அக்ரகாரத்தில் குடியிருக்கும் ஒரு சாதாரண பிராமணன் மற்ற இந்துக்களைவிட உயர்ந்தவனாவான். சாதாரண பிராமணனைவிட, வேதம் ஓதும் அர்ச்சகன் பண்டிதராக உயர்ந்து நிற்கிறான். இவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் சங்கராச்சாரியார், ஜீயர் போன்ற ஞானிகள் எல்லோரையும் விட உயர்ந்து நிற்கிறார்கள்.

சலுகை பெற்ற பார்ப்பனர்கள்

பார்ப்பனர்கள் மேலான தெய்வம் அல்லவா?; அதனால் இவர்கள் கெட்டவர்கள் ஆனாலும், பூஜிக்கத் தக்கவர்கள். (மனு 9: 316).

அதனால்தான் கருவறையில் சல்லாபம் செய்த காஞ்சி தேவநாதனும், அனுராதா ரமணனை சல்லாபத்திற்கு அழைத்த காஞ்சி நடுவாளும்,  சொர்ணாக்காவோடு பாண்டி விளையாடிய இளையவாளும் பூஜிக்கப்படுகிறார்கள்.

பார்ப்பனர்கள் பிறருக்குக் கெடுதல் செய்தாலும், அவர்களுக்கு நாம் திருப்பிக் கெடுதல் செய்யக்கூடாது (மனு 4: 162). அவர்கள் செய்யும் குற்றத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் (மனு 7-32).

சூத்திரர்களுக்கு எதிராக வஞ்சத்தைக் கொட்டும் எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும், பத்ரி சேஷாத்ரியையும், இன்ன பிற பார்ப்பனர்களையும் எதுவும் செய்ய முடிவதில்லையே? எதனால் என்று புரிகிறதா?

அதிகாரத்தில் பார்ப்பனர்கள்

மன்னராட்சிக் காலமானாலும், ஜனநாயகக் குடியரசுக் காலமானாலும் பார்ப்பனர்கள் தங்களுடைய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவே முயல்கின்றனர். 

பிராமணன் சொல்படிதான் ஆட்சியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். (மனு 7: 37), அவ்வாறு ஆட்சி நடத்துகிற போது தனக்கு நியாயம் என்று தெரிந்தாலும், அதை பிராமணனிடம் வணங்கிக் கேட்க வேண்டும். (மனு 7: 39). அவ்வாறு வணங்காததால் வேணன் யவணன் போன்ற மன்னர்கள் அழிந்து போனார்கள் (மனு 7: 40, 41);  வணங்கியதால் பிருகு, விசுவாமித்திரன், எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் வாழ்ந்தார்கள். (மனு 7: 42).

பார்ப்பனர்களை வணங்காததால்தான் அன்று கருணாநிதியை குடைந்தெடுத்தார்கள். இன்று ஆளுநர் ஆர்.என் ரவி சொல்வதைத் கேட்காததால் ஸ்டாலினைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சரவையில் வேதம் தெரிந்த மந்திரிகள், அதாவது நிதின் கட்கரி, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இராணி, பியூஸ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத் போல குறைந்த பட்சம் ஏழு-எட்டு பார்ப்பனர்களை வைத்துக் கொள்ள வேண்டும். (மனு 7: 54). ஆட்சித் தலைவன் இவர்களிடம் அன்றாடம் ஆலோசனை கேட்க வேண்டும் (மனு 7: 59). மோடி இதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் பேருக்கு ஒரு பார்ப்பன எம்எல்ஏ கூட கிடையாது. இதில் மந்திரி சபைக்கு எங்கே போவது? தமிழ்நாடு இப்படி இருப்பதனால்தான் ஸ்டாலின் மீது பார்ப்பனர்கள் கடும் கோபத்தைக் கொட்டுகின்றனர்.

சமஸ்கிருதம் தெரிந்த பார்ப்பனர்களை அயல்நாட்டுத் தூதர்களாக வைத்துக் கொண்டால் அது ஆட்சியாளருக்கு பெருமை சேர்க்கும் என்கிறது சனாதனம் (மனு 7: 63, 64). 

இன்று இந்தியாவின் அயல்நாட்டுத் தூதர்கள் கிட்டத்தட்ட அனைவருமே பார்ப்பனர்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்தத் தூதர்கள் மோடிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்தானே?

IIM, IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக் கழகங்களிலும், ஆட்சி அதிகாரத்தின் கேந்திரமானத் துறைகளிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நாத்திகர்கள் பற்றி

சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பனர்கள் வாழக்கூடாது. (மனு 4: 61). சனாதன தருமப்படி பார்த்தால் பார்ப்பனர்கள்தான் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ஆனால், அவர்கள் ஆட்சியில் உள்ள உதயநிதியை வெளியேறச் சொல்லுகிறார்கள்.

இதற்கும் சனாதன தருமத்தில் வழி வைத்திருக்கிறார்கள். வேதத்தை நம்பாதவனை மதிக்காதே என்கிறது சனாதனம். (மனு 4: 30). அதனால்தான் பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, உதயநிதியை அவர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். 

கடவுளை நம்பாதவனை மட்டுமன்றி வேதத்தை நம்பாதவனும், நிந்திப்பவனும் நாத்திகன்தான். (மனு 2: 11). சனாதன தருமபப்படி, சத்தியவேல் முருகனாரும், பிரஜாபதி அடிகளாரும் நாத்திகர்கள்தான்.

*****

அடுத்து நீதித்துறையில் சனாதன தருமம் குறித்துப் பார்ப்போம்.

தொடரும்

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்

Sunday, 10 September 2023

சனாதன தருமத்தின் மூலம் எது?

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாவை ஒழிப்பதைப் போல, சனாதன தருமத்தை எதிர்ப்பதல்ல; மாறாக அதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியது, இன்று, சனாதன தருமம் குறித்து பெரும் விவாதத்தைத் தூண்டி உள்ளது. சனாதன தருமம் என்றால் என்ன என்பது பற்றி ஆளாளுக்கு ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றனர். 

உண்மையில் சனாதனம் என்றால் என்ன என்பது குறித்து மகஇக, வேலூர் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக தரவுகளைத் தேடிய போது அதற்கான விடை கிடைத்தது. 

இன்று, இந்து மதம் என்று சொல்லப்படுகிற வைதீக-ஆரிய-பிராமண மதத்தின் மற்றொரு பெயர்தான் சனாதனம். அதனால்தான் இந்து மதம், சனாதன மதம் என்றும் அழைக்கப்படுகிறது. தருமம் என்றால் ஈகை அல்ல; மாறாக என்றென்றைக்கும் ஒரு இந்து தன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்/கடமைகள் என்று பொருள். 

இந்து மதத்தைப் பின்பற்றுகிற ஒரு தனிமனிதன், அவனது குடும்பம், அவன் சார்ந்த சமூகம், வாழுகின்ற நாடு உள்ளிட்டவை அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களையும், விதிமுறைகளையும் பற்றியதுதான் சனாதன தருமம். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கீழ்கண்ட இந்து மத நூல்களில் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர மற்ற இந்து மத நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை சனாதன தருமத்தில் சேராது.

1.ரிக்-யசூர்-சாம-அதர்வன‌ எனும் நான்கு வேதங்கள். (சுருதிகள்).

2.மனுதரும சாஸ்திரம் உள்ளிட்ட 18 தரும சாஸ்திரங்கள் (ஸ்மிருதிகள்), மொத்தம் 128 ஸ்மிருதிகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

3.பாகவத புராணம் உள்ளிட்ட 18 புராணங்கள். இவை தவிர, உப புராணங்கள் சில இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

4.மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள்.

5.பகவத் கீதை.

மேலுள்ளவற்றில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் அனைத்தையும், ஒரு சட்ட நூல் போல தொகுத்துத் தருவதுதான் மனுதரும சாஸ்திரம். எனவே, மனுதரும சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால், அதில் சொல்லப்பட்டுள்ள தருமங்களின் இன்றைய நடைமுறையையும் தெரிந்து கொண்டாலே சனாதனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு முழுமையான விடை கிடைத்து விடும். விடையைத் தெரிந்து கொண்டால், சனாதன தருமத்தை ஒழிப்பதா அல்லது காப்பதா என்பதை ஒருவரால் முடிவு செய்ய முடியும்.

12 தலைப்புகளைக் கொண்ட மனுதரும சாஸ்திரத்தை முழுமையாகப் படிக்க வேண்டும். அவசியம் கருதி உடனடியாகப் படிக்க வேண்டிய சில முக்கியப் பிரிவுகளை கீழே கொடுத்துள்ளேன்.

தலைப்பு I: உலகத் தோற்றம், உயிர்கள், தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் தோற்றுவாய்

31: நான்கு வருணங்களின் தோற்றம்
87,88, 89,90: நான்கு வருணங்களின் தொழில்
92, 93, 95, 96, 97, 100: வருணங்களில் உயர்வு தாழ்வு.

தலைப்பு II: வருண தருமம்

11- நாஸ்திகன்
21, 22: ஆரியர்களின் நாடு
27: சீமந்தம் எனும் தீட்டுக் கழிப்பு
30, 31, 32, 33:  பெயர் சூட்டல்
36, 39, 44, 66: பூணூல்
135, 137, 155, 156: மரியாதை

தலைப்பு III: திருமணம், திதி

4, 6, 8, 10, 11, 12, 13, 15, 16, 16, 21: திருமணம்
46: மாதவிடாய், தீட்டு
110: தாழ்ந்த சாதி

தலைப்பு IV: குடும்ப வாழ்க்கை

30: வேதத்தை நம்பாதவர்கள்
57: மாதவிடாய், தீட்டு
61: சூத்திரன் ஆளும் நாடு
79: மர நிழல் தீட்டு
162, 165: பிராமணச் சலுகை
215-219: உணவுத் தீண்டாமை

தலைப்பு V: உணவு

5, 6, 10, 14, 19, 27, 36, 48, 51: உணவுப் பழக்கம்
62, 85, 86,93: பிறப்பு இறப்பு தீட்டு
124: கிரகப்பிரவேசம், கும்பாபிசேகம் தீட்டு
147-169: மகளிர் தருமம்

தலைப்பு VI: சந்நியாசம்

தலைப்பு VII: அரசின் செயல்பாடு

32, 37-43, 54, 59, 63, 64: அரசாங்கத்தில் பிராமணர்களின் பங்கு

தலைப்பு VIII: நீதி பரிபாலனை

1, 3, 8, 11, 20-22, 24, 88 112, 123, 124: நீதித் துறையில் பிராமணர்களின் பங்கு
267-283, 352, 353: சொற்கொடுமை- தண்டனையில் பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்
379-381, 410:  தகாத உறவு, பிராமணர்களுக்குச் சலுகை, பாரபட்சம்.
413, 415: தொழிலாளர்கள்

தலைப்பு IX: ஆண்-பெண் தருமம்

2-3, 13, 14, 17, 19, 27-30, 46, 58, 59,69, 78, 81, 88, 94: பெண்ணடிமை
225: வேத நிந்தனை
229, 319, 320: அபராதம், பிராமணர்களுக்குச் சலுகை

தலைப்பு X: சாதிகள் உற்பத்தி, தொழில்

1-73: வருணக் கலப்பால் உருவான கீழ் சாதிகள், தொழில், வசிப்பிடம், உணவு, உடை
83, 84: பிராமணர்கள் ஏன் வேளாண்மை செய்வதில்லை.

தலைப்பு XI: பரிகாரம்
தலைப்பு XII: பாவ புண்ணியம்.

****

மனுதரும சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள குழந்தைத் திருமணம் உள்ளிட்ட சில வாழ்வியல் நடைமுறைகள், புதிய சட்டத் திருத்தங்களால் கைவிடப்பட்டுள்ளன. ஆனால் சாதி, தீண்டாமை, பார்ப்பன மேலாண்மை உள்ளிட்ட பெரும்பாலானவை வழி வழியாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய சம்பவங்கள் நாள்தோறும் நடைபெறுவதால் அவற்றை மனுதரும சாஸ்திரத்தோடு ஒப்பிட்டுப் பொருத்திப் பார்த்தால்தான், அது சனாதனமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஊரான்

தொடர்புடைய பதிவுகள்: 

திராவிட என்ற சொல் மீது பார்ப்பனர்களுக்கு ஏன் கடுங் கோபம்?

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?..... தொடர்-3

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா? தொடர்-2

சனாதனிகளின் நாக்கு தடித்து விட்டதா?.....தொடர்-1