Tuesday, March 8, 2011

ஊர்ப் பயணம்! ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

எனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அண்ணன் முறை வேண்டும். அவர் இறந்த போது நான் வெளியூரில் இருந்ததால் சாவுக்குச் செல்ல முடியவில்லை. அதனால் காரியத்தில் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்பதால் ஊருக்குச் சென்றேன்.


உழவனின் மரணம் பேரிழப்பல்லவா?

அவரது வீடு மலையடிவாரம் காட்டோரத்தில் இருந்தது. ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முட்செடிகளே காணப்பட்ட கரட்டு மேட்டில் இன்று வேர்க்கடலையும் கரும்பும் செழித்திருந்ததைக் கண்டு நான் வியந்து போனேன்.

ஒரு பக்கம் பொன் விளையும் பூமியெல்லாம், நகரவாசிகளால் நாசமாக்கப்படும் போது, ஏதும் அறியா எனது அண்ணன் போன்ற விவசாயிகள் எதற்கும் உதவா மண்ணை, பொன் விளையும் பூமியாக மாற்றி விட்டல்லவா இறக்கிறார்கள். உறவினர் என்பதைவிட ஒரு உழைப்பாளியை இந்த உலகம் இழந்த விட்டது என்பதல்லவா எனக்கு..... ஏன் நமக்கு பேரிழப்பு.

தலை நிறைய பூச்சூடி, பட்டுப் புடவை கட்டி, மணப் பெண் போல ஜோடிக்கப்பட்ட எனது அண்ணி மாட்டுக் கொட்டகையில் தனியாக உட்கார்ந்திருந்தார். அண்ணன் இறந்த பிறகு பதினைந்து நாட்களாக மாட்டுக் கொட்டகையில்தான் வாசம். காரியம் முடியும் வரை வீட்டிற்குள் செல்லக் கூடாதாம். வீடு என்ன மாடி வீடா? கதவு வைத்த கொட்டகை அவ்வளவுதான். இவைதான் இன்று இந்தியாவில் எண்ணற்ற ஏழை விவசாயிகளின் பங்களாக்கள்.

துக்கம் விசாரிக்க வருபவர்கள் எல்லோருடனும் வாஞ்சையாய் கையைப் பிடித்தும், கட்டியழுதும் தனது சோகத்தை தணித்துக் கொண்டிருந்தார் அண்ணி. என்னாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை. ஊருக்குச் செல்லும் போதெல்லாம் “எப்பிட்ரா இருக்க?” என்று கேட்ட அவரது குரல் மட்டும் என் நினைவுகளில் இன்றும் நிழலாடுகிறது. ஆனால் அவர் எப்பொழுதும் பீடியும் கையுமாகத்தான் இருப்பார்.  இப்படித்தான் நூறு வயது வாழ வேண்டியவர்கள் அறுபது வயதிலேயே ஆயுளை முடித்துக் கொள்கின்றனர்.

புண்ணியாதானம்!

ஐயர் வந்தார். வீட்டில் செய்யும் புண்ணியாதானம் என்ற சடங்கை முடித்தார். வடக்கே காட்டுப் பக்கம் ஒரு சிறுவனோடு சென்றார்.

”எங்கே இந்தப் பக்கம் போறார்?” எனக் கேட்டேன்.

 ”தண்ணி அடிக்கப் போறார்” என்றார் அருகிலிருந்த உறவினர்.

கல்லாணமோ கருமாதியோ தண்ணியடிப்பதுதானே இன்றைக்கு 'பேஷன்' என்பதால் நான் தப்புக் கணக்குப் போட்டு விட்டேன்.

"என்ன தண்ணி அடிக்கவா”? என ஆச்சரியமாய் நான் கேட்க, புண்ணியாதானம் முடித்து பங்காளி வீடுகளின் கூரைகளில் புனித நீரைத் தெளித்து வரவேண்டுமாம். அது ஐதீகம். எதற்கு என்றெல்லாம் எவரும் கேட்பதில்லை. ஐயர் சொன்னால் ஏன் என்று கேட்கக்கூடாது. இப்படித்தானே பல சப்பிரதாயங்களைப் புகுத்தி மக்களை மடமையில் வைத்துள்ளார்கள். அதுதானே பார்ப்பனர்களுக்கு மூலதனம். இல்லை என்றால் அவாளெல்லாம் அமெரிக்கா செல்லும் போது இவாளைப் போன்ற சிலர் இன்னும் மலைக் கிராமத்தைக்கூட விடவில்லையே ஏன்?

ஆங்காங்கே நிலத்ததையொட்டியே உறவினர்களின் வீடுகளும் இருந்ததால் ஒவ்வொரு வீடாகச் சென்று தண்ணீர் அடித்துவிட்டு ஏரி ஓரம் உள்ள குளக்கரைக்கு வந்து சேர்ந்தார் ஐயர். சம்பந்தம் கட்டும் சடங்கை முடிக்க வந்தவர்கள் ஏற்கனவே அங்கே கூடியிருந்தனர்.

ஊர்ப்பக்கம் வரும் ஒற்றைப் பேருந்தை நம்பி, தொலை தூர ஊர்களிலிருந்து ஒரு சிலர் வந்திருந்தனர். சுற்று வட்டார கிராமங்களிலிருந்து இரு சக்கர வாகனங்களிலும், மிதி வண்டிகளிலும் பலர் வந்திருந்தனர். பெரும்பாலானோரின் கைகளில் ஜவுளிக்கடைகளின் பைகள் தொங்கின.

சம்பந்தம் கட்டுதல்!

இறந்து போனவரின் உறவினர்களுக்கு, அவரவர்களின் சம்மந்தி முறை உறவினர்களும், திருமணமாகிச் சென்ற அக்கா-தங்கைகள் தங்களது அண்ணன்-தம்பிகளுக்கும் சம்மந்தம் கட்டுவது காரியத்தில் காலம் காலமாய் கடைபிடிக்கப்படும் ஒரு சம்பிரதாயம். வேட்டி மற்றும் துண்டு என இருந்த சம்மந்தம், பிறகு 'பேண்ட்' சட்டையாய் மாறியது. சில சமயங்களில் சிறுவர்களுக்கான 'ரெடிமேடு'களாய்க்கூட மாறுவதுண்டு. ஆனால் இன்று பணத்தையே சம்மந்தமாய் மொய் போல சிலர் கொடுத்து விடுகிறார்கள். துணியோ பணமோ எல்லாமே கல்யாண மொய் போல பின்னால் செய்ய வெண்டிய கடன்தானே. அதனால் இன்று ஆயிரங்களில்கூட சம்மந்தம் போடுகிறார்கள்.

நான் இது போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் எதையும் கடைபிடிப்பதில்லை . சம்பிரதாயங்களை கடைபிடிப்பதில்லை என்றாலும் வெறுத்து ஒதுங்கிக் கொள்வதில்லை. நல்லது கெட்டதுகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்வேன். பெரும்பாலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அர்த்தமற்றவைகளாக இருந்தாலும் அவற்றை கடைபிடிப்பதால் அவர்கள் கெட்டவர்கள் இல்லையே. அறியாமையால்தானே இவைகளை மக்கள் கடைபிடிக்கிறார்ள். அறியாமையிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சிதான் இங்கு தேவையேயொழிய ஒதுங்கிக் கொண்டு அவர்களை வைவதல்ல.

ஐயர் வந்தார். அள்ளிச் சென்றார்!

பூஜைகள் முடிந்தன. சம்மந்தம் கட்டும் சடங்கு தொடங்கியது. ஒவ்வொருவரும் ஊரையும் பேரையும் சொல்ல, அதையே ஐயர் திருப்பிச் சொல்லி, துணியையும் பணத்தையும் வாழ்த்திக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் சம்மந்தம் கட்டும் போதும் தட்டில் விழுந்த ஐந்தும் பத்தும் ஐயர் மடிக்குச் சென்றன. ஆண்டவனின் ஆசிபெற்றல்லவா கொடுக்கிறார். சும்மாவா கொடுக்க முடியும்? 

சுமார் 250 பேர் சம்பந்தம் கட்டியிருப்பார்கள். மொத்தமாக ஐயர் மடியில் சுமார் இரண்டாயிரம் சேர்ந்திருக்கும். சடங்குகள் செய்ய அழைத்து வந்தவர் கொடுக்கும் கட்டணம் தனி. அது ஒரு ஆயிரம் என்றாலும் மூன்று மணி நேரத்தில் ஐயருக்கு வரும்படி மூவாயிரம் ரூபாய். 'ஐ.டிஐ' முடித்து ஆலையில் வேலை செய்பவன் மாதத்தில் மூவாயிரம் தேத்துவதற்கு மூன்று 'ஷிப்டும்' உழைத்தாலும் முடிவதில்லையே.

அப்படி என்னதான் படித்துள்ளார் எங்க ஊர் ஐயர். ஐந்தாங் 'கிலாஸ்'கூட தாண்டவில்லை. ஐயராய் இருந்தால் என்ன? யாராக இருந்தாலும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் படித்தால் எப்படித் தாண்ட முடியும்?

இவரது தந்தை பத்து ஏக்கர் நிலத்தோடு விவசாயம் பார்த்த அதிசய ஐயர். அவர் வயலில் இறங்கி உழைக்கவில்லை என்றாலும் ஒரு பணக்கார விவசாயியாய் வாழ்க்கை நடத்தியவர். என்னை ”கரிபால்டி” என்பார்கள் எனது பள்ளி நண்பர்கள். அவர் என்னைவிட கருப்பு. வாரிசும் அப்படியே. ஆரிய திராவிட இனக்கலப்புக்கு ஒரு எடுப்பான உதாரணம். இதை இழிவாக நான் சொல்லவில்லை. திராவிடர்களிலும் செக்கச் சிவப்புகளும் ஏராளமாய் இருக்கத்தானே செய்கிறார்கள். இது எதார்த்தம்.

பையனுக்கு படிப்பு இல்லை. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு சாலையே கிடையாது. போக்கு வரத்துக்கு நடராஜாதான். பையனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்? ஆனாலும் துணிந்து வந்தார் ஒருவர் நிபந்தனையோடு. பையன் புரோகிதம் செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. திருமணத்தோடு சில மந்திரங்களை மனப்பாடம் செய்ய அடித்தது யோகம். வேறு ஒரு ஊரில் இருந்து மிதி வண்டியில் வந்து புரோகிதம் பார்த்த ஐயரும் மூப்பாகி முடியாமல் போனதால் சுத்துப் பட்டு பத்து கிராமங்களுக்கும் சேர்த்து இன்று இவர் ஒருவரே “ஆஸ்தான“ புரோகிதர்.

முக்கி முக்கிப் படித்து வக்கீலாகி வாழ்க்கையில் “செட்டில்“ ஆவதற்குள் வழுக்கை விழுந்த எனது மற்றொரு அண்ணன் மகனுக்கு அடுத்த மாதம் திருமணம். "என்னடா தொழில் பரவாயில்லையா?" என்றபோது பெரு மூச்சு விட்டான் “டி.வி.எஸ்.ஃபிப்டியில்“ புறப்படத் தயாராய் இருந்த ஐயரைப் பார்த்து.

அவ்வை பிராட்டி இன்று இருந்திருந்தால் "அரிது அரிது பார்ப்பனராய்ப் பிறத்தல் அரிது" எனப் பாடியிருப்பாரோ!

ஊர் வந்து சேர்ந்தேன். பயணம் முடிந்தது.

6 comments:

  1. Good one. We should try to come out of these mooda-nambikkaikal. Thanks for sharing.

    ReplyDelete
  2. வைவதால் என்னபயன், இதுவும் நல்ல ஒரு வழிதான்.

    ReplyDelete
  3. நன்றி Anonymous அவர்களே!
    முயன்றால் முடியும். அப்படித்தானே நாமும் மாறினோம்.

    ReplyDelete
  4. நன்றி உருத்திரா அவர்களே!
    நான் இங்கே சொல்லியுள்ள கருத்துக்களை அங்கு வந்திருந்த சிலரிடம் தோழமையோடு பகிர்ந்துள்ளேன். அவர்கள் மறுக்கவில்லை. ஆனால் மீற முடியாமல் பண்பாடு என்ற கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.

    ReplyDelete
  5. தோழரே,
    விவரித்த விதம் அருமை. இத்தகைய மூட நிகழ்வுகள், நாம் என்னதான் முற்போக்குவாதிகளாயிருந்தாலும், நம்மைச் சுற்றி ஒட்டடை மாதிரி படிந்துகொண்டுதானிருக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லையென்றாலும், தலைக்கனம் பிடித்தவன் என்கிறார்கள். ஆனால் ஒன்று... எப்பொழுதாவது ஒருமுறையாவது ஊருக்கும் போய்வர இவையெல்லாம் ஒரு சாக்கு.

    இன்னுமொன்று...
    நான் ஒரு முறை உங்களை இப்படி விளிக்கட்டுமா?
    "என்னருமை கரிபால்டி தோழரே..."
    -புதிய பாமரன்...

    ReplyDelete
  6. எனது பள்ளி நண்பர்கள் என்னை கரிபால்டி என பல முறை விளித்த போதே வருத்தப்படாத நான் நீங்கள் ஒரு முறை என்னை "என்னருமை கரிபால்டி தோழரே..." என விளிப்பதற்கு வருத்தமா படப்போகிறேன்.

    கருத்திட்டமைக்கு நன்றி தோழர் புதிய பாமரன் அவர்களே.

    ReplyDelete