Monday, April 7, 2025

கம்யூனிஸ்டுகள் மனுதர்மத்தைப் புரிந்து கொள்ளவில்லையா?

குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரண்டாவது நாளில் புண்ணிய திதியில் நல்ல முகூர்த்தத்தில் நல்ல நட்சத்திரத்தில் பெயர் சூட்ட வேண்டும் (மனு: 2-30) 

உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் இன்றும்கூட இதன்படித்தானே பெயர் சூட்டுகிறார்கள்?

பிராமணனுக்கு மங்களத்தையும், சத்ரியனுக்கு பலத்தையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகின்ற பெயரைச் சூட்ட வேண்டும் (மனு: 2-31)

பிராமணனுக்கு சர்மா என்பதையும், சத்ரியனுக்கு வர்மா என்பதையும், வைசியனுக்குப் பதி என்பதையும், சூத்திரனுக்கு தாசன் என்பதையும் தொடர் பெயராக இட வேண்டும் (மனு: 2-32)


தோழர் மீனாட்சி முகர்ஜி, CPI (M) 
மத்தியக் குழு உறுப்பினர் 

சங்கர் தயாள் சர்மா, இது ஒரு பார்ப்பனரின் பெயர். சர்மா என்பது பார்ப்பனர்களில் ஒரு பிரிவு. இதுபோல முகர்ஜி, பானர்ஜி, சட்டர்ஜி, துபே, பாண்டே என பார்ப்பனர்களில் ஆயிரக்கணக்கான பிரிவுகள் உண்டு. 

ராம் கோபால் வர்மா. இது ஒரு சத்திரியனின் பெயர்.

குமுத் பல்லவ் பதி. இது ஒரு வைசியனின் பெயர். 

சித்தரஞ்சன் தாஸ் இது ஒரு சூத்திரனின் பெயர். 

இப்படித்தான் வட இந்தியாவில் மனுதர்மத்தின் வழிகாட்டுதல்படி இன்று வரை தங்களது பெயரை வைத்துக் கொள்கிறார்கள். 

விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த திராவிடர்கள் மனுதர்மத்தை ஏற்க மறுத்ததால் (மனு: 10-43, 44) அன்றிலிருந்து பெயர் வைத்துக் கொள்வதில் மனுவின் வழிகாட்டுதலை கடைபிடிக்கவில்லை. எனவே பார்ப்பனர்களைத் தவிர பிற அனைவருமே சூத்திரர்களாகத் தரம் இறக்கப்பட்டிருந்தனர்.  அதனால்தான் நமது பண்டைய பக்தி இலக்கியங்கள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில்கூட மனுவின் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டதில்லை. 

வட இந்தியாவில் நான்கு வருணங்களும் உண்டு. ஆனால் தென்னிந்தியாவில் பிராமணன், சூத்திரன் என இரு வருணங்கள் மட்டுமே உண்டு.

இன்று தமிழ்நாட்டில் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பதில் மனுவின் வழிகாட்டுதல்படி இல்லை என்றாலும் தஷ், புஷ் என வடமொழி கலந்த பெயர்களாகத்தான் வைக்கிறார்கள் என்பது தனிக்கதை. 

அண்மையில் மதுரையில் நடந்து முடிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டத் தலைமைக் குழு உறுப்பினர்களின் பெயர்களில் சர்மா, பட்டாச்சார்யா, சவுத்ரி, தேஷ்பாண்டே, முகர்ஜிகளைக் காண முடிகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வாசுகி, பாலபாரதி, சண்முகங்களைத்தான் காண முடிகிறது. 

கம்யூனிஸ்டுகளாய் இருந்தாலும், பெயர் வைப்பதில் வடக்கே இன்னும் அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மனுவின் பிடியிலிருந்து மீளவில்லை என்பதையும், தெற்கில் உள்ளவர்கள் மனுவிலிருந்து என்றோ துண்டித்துக் கொண்டவர்கள் என்பதையும் உணர முடிகிறது.

மனுதர்மம் சமத்துவத்தையும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் மறுப்பது. ஆனால் மூன்றையும் உயர்த்திப் பிடிப்பது பொதுவுடமை. எனவே, கம்யூனிஸ்டுகள் தங்களது பெயர்களுக்குப் பின்னால் மனுவின் வரையறையின்படி சாதிப்பட்டத்தைச் சுமப்பது மார்க்சுக்கு இழிவைத் தேடித் தருவதாகும்.

தமிழ்நாட்டு கம்யூனிஸ்டுகள்தான் இதை வடஇந்தியக் கம்யூனிஸ்டுகளுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஊரான்