தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் அதிர்ச்சியிலும், தோல்வியின் கசப்பிலும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் வெற்றிக் கொண்டாட்டங்கள், மறுபக்கம் புலம்பல்கள். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு முடிவா? அல்லது ஒரு தொடக்கமா?
"புதிய ஆட்சி சிறப்பாகச் செயல்படுமா?" என்ற கேள்வியைவிட, "ஆட்சியாளர்கள் தடம் மாறும்போது நாம் தட்டிக் கேட்கப் போகிறோமா?" என்பதே இன்றைய தேவையாய் இருக்கிறது.
ஒரு விரல் புரட்சியோடு ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி ஓய்வெடுத்துக் கொண்டால், மிஞ்சுவது வெறும் புலம்பல் மட்டும்தான். நீங்கள் ஓய்வெடுத்ததன் விளைவுதான் இன்றைய முடிவுகள் என்பதை நாம் உணர வேண்டும்.
1. தற்குறிகள் எனும் போலி வாதம்:
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உட்பட புதிய தலைவர்கள் மற்றும் கட்சிகளை நோக்கி, "அவர்களுக்கு அரசியல் தெரியாது, அவர்கள் எல்லாம் தற்குறிகள்" என்ற வசைபாடுவது வேடிக்கையாக இருக்கிறது.
கடந்த காலங்களை சற்றுப் புரட்டிப் பாருங்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனப் பல காலக்கட்டங்களில் ஆட்சியில் இருந்தவர்களை, நாம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்துவிட்டு வந்த அறிஞர்களாகவா பார்த்தோம்?
ஒரு சோத்துப் பருக்கை
இத்தனை ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்களில் எத்தனை பேர் நிபுணர்கள்? பெரும்பாலான அரசியல்வாதிகள் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்—'அவர்களின் சோத்துக்கு எப்படி வழி செய்வது' என்பது மட்டுமே. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் வழியை அல்ல.
எனவே, அரசியலில் அனுபவம் என்பதைவிட, 'அறம்' (Ethics) தான் முக்கியம். அந்த அறம் இல்லாத எவரும் தற்குறிதான்; அது பழைய கட்சியானாலும் சரி, புதிய கட்சியானாலும் சரி.
2. இரட்டையாட்சி முறை (Double Government):
இந்தியாவில் நடப்பது இரட்டையாட்சி முறை. அதாவது, நிலையான ஒரு அதிகார வர்க்கம் (கிராம நிர்வாக அலுவலர் முதல் தலைமைச் செயலக செயலாளர்கள் வரை) ஒருபுறம்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மறுபுறம்.
உண்மையான அதிகாரம் நிர்வாகிகளிடம் இருக்கும்போது, அரசியல் தெரியாதவர்கள் கூட ஆட்சியை ஓட்ட முடியும். இதுதான் எதார்த்தம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே கூட கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி மூலம் இந்த நாடு இயங்குகிறது என்றால், அரசியல் அனுபவம் ஒரு கட்டாயத் தேவை அல்ல. அவர்கள் நிர்வாகிகளோடு சேர்ந்து 'கூட்டுக்கொள்ளை' அடிக்கக் கற்றுக்கொண்டாலே போதும், காலம் தள்ளிக் கொண்டு போய்விடும்.
3. மாற்றத்தின் பெயரில் நடக்கும் ஏமாற்றம்:
வெற்றி பெற்ற புதிய கட்சியினர் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஏற்கனவே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் கொள்ளையடித்தவர்கள் தான் இன்று புதிய கட்சிகளில் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரே இரவில் உத்தமர்களாக மாறிவிடப் போகிறார்களா என்ன? பழைய அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு, புதிய போர்வை போர்த்தியதால் மட்டும் துர்நாற்றம் இல்லாமலா போய்விடும் .
4. சுயபரிசீலனை: எதிரியைத் தேடும் முன்...
பாஜக-சனாதன-பாசிச எதிர்ப்பு என்பது மட்டுமே அரசியல் ஆகிவிட முடியாது. அதையும் தாண்டி மக்கள் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. அதைத் தவறவிட்டதால்தான், மாற்றத்தை விரும்புவோர் மடைமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மற்றவர்களை முட்டாள்கள் என்று சொல்வதற்கு முன்பு, நாம் ஆதரிப்பவர்கள் அனைவருமே அறிவாளிகளா என்பதையும் உரசிப் பார்க்க வேண்டும். ஒருவரை எதற்காக ஆதரிக்கிறோம் என்ற உளவியலைப் புரிந்து கொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு வசைபாடுவது யதார்த்தத்தை மாற்றாது. தோல்வி அடைந்தவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, தாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதைச் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.
5. முடிவுரை: நரகலில் நல்லரிசியைத் தேடும் காலம்
இந்த அரசியல் களத்தில் நாம் இன்னும் ‘நரகலில் நல்லரிசியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்பதுதான் கசப்பான உண்மை.
ஆட்சியாளர்களை உத்தமர்களாக்குவதும், ஊழல்வாதிகளாக மாற்றுவதும் மக்கள்தான். ஒரு விரல் புரட்சியோடு நம் கடமை முடிந்துவிட்டதாக நினைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளும் அதே புலம்பல்கள்தான் மிஞ்சும்.
தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் கண்காணிப்பு தொடங்கியிருக்கிறது. அரசியல்வாதிகளின் முகத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு, அவர்களின் செயல்களையும், ஒப்பந்தங்களையும், முடிவுகளையும் கூர்மையாகக் கவனிக்கும் மக்களாக நாம் மாறினால் மட்டுமே உண்மையான மாற்றம் சாத்தியம்.
மாற்றத்தை நோக்கி நாம் செல்கிறோமா? அல்லது மீண்டும் அதே நரகலில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருக்கப் போகிறோமா?
இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறியும் போதுதான் உண்மையான அரசியல் மாற்றம் நிகழும். அதுவரை...
ஊரான்