Tuesday, 5 May 2026

இவ்வுலகு பகைவர் சூழ் உலகா?

திருட்டு, கொலை, கொள்ளை, வன்புணர்வு, ஊழல், முறைகேடு, ஏமாற்று, நயவஞ்சகம், மக்கள் ஒற்றுமையைக் குலைத்தல்…

இப்படித் தீமைகளின் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். தினமும் செய்தித்தாளைத் திறந்தாலும், சமூக ஊடகத்தை உருட்டினாலும் நம் கண்ணுக்குள் விழுவது இந்த அழுகலான செய்திகள்தான்.

இப்படியொரு சூழலில், “இந்த உலகம் முழுக்க நமக்கு எதிரிகளால்தான் நிரம்பியிருக்கிறதா?” என்ற கேள்வி எழுவது இயல்புதான். உண்மையிலேயே நாம் பகைவர்கள் சூழ்ந்த உலகில்தான் வாழ்கிறோமா?


1. மனிதர்களை வெறுப்பதா? அல்லது அமைப்பை (system) வெறுப்பதா?

இத்தனைத் தீமைகளையும் செய்பவர்கள் இயற்கையிலேயே பிறவிப் பேய்களா? இல்லை. பெரும்பாலானோர் இந்தச் சமூகம் உருவாக்கிய நச்சு விதைகளின் விளைவுகளா?

“நீ முன்னேற வேண்டுமென்றால் அடுத்தவனை வீழ்த்து. நேர்மையாக இருந்தால் பட்டினி கிடப்பாய்” என்ற நச்சுச் சூழலில் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள்.

அதிகாரமும், பணமும், குறுக்கு வழிகளும் மட்டுமே போற்றப்படும் இந்த அழுகிய அமைப்புதான் மனிதர்களை மிருகங்களாக மாற்றுகிறது. 

ஒரு மனிதனை வெறுப்பதை விட, அவனைத் தீயவனாக்கிய இந்தச் சிந்தனை முறையையும், அமைப்பையும் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.

2. ஒற்றுமையைக் குலைக்கும் அரசியல் வியாபாரம்

மக்களைப் பிளவுபடுத்துவது எந்தத் தற்செயலும் அல்ல — அது ஒரு கணக்கிட்ட அரசியல் தந்திரம். மதம், சாதி, இனம், மொழி, கருத்தியல் என பல பாகங்களாக நம்மைப் பிரித்து வைத்துவிட்டால், ஊழல்களையும் கொள்ளைகளையும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். 

நாம் ஒருவரையொருவர் எதிரிகளாகப் பார்க்கும்போது, உண்மையான எதிரிகள் அதிகார பீடத்தில் சுகமாக அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். (குறள் எண்: 1073) 

கயவரும் தேவரைப்போல் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

3. பகைவர்கள் அதிகமென்றால்… நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள்

நேர்மையாக வாழ முயற்சிப்பவரைச் சுற்றி ஏன் இத்தனை எதிரிகள் முளைக்கிறார்கள்? ஏனென்றால், நேர்மை என்பது அநீதியின் குறுக்கு வழிகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். 

இருண்ட அறையில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டால், இருள் அதைத் தன் எதிரியாகவே பார்க்கும். அதைப் போலத்தான் — அறத்தோடு நடக்கும் ஒருவரை, அநீதியில் பிழைக்கும் அமைப்பும், அதைச் சார்ந்தவர்களும் எதிரியாகப் பார்க்கிறார்கள். 

பகைவர்கள் அதிகம் என்றால் புரிந்துகொள்ளுங்கள் — நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள் என்று.

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்புரியும் ஏதிலான் துப்பு. (குறள் எண்: 862) 

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாக இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?

4. நம்மிடமுள்ள கவசம்
  • எதிரி தனி மனிதன் அல்ல, அநீதியான சிந்தனை முறையும் அமைப்பும்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.  
  • உலகம் மாறவில்லை என்பதற்காக நாம் மாறக்கூடாது. நேர்மையும் அறமும்தான் நமக்கான உறுதியான கவசம்.  
  • பிரிவினையை உருவாக்கும் சக்திகளுக்கு இடம் கொடுக்காமல், நல்ல மனிதர்களைத் தேடி இணையுங்கள். ஒற்றுமையே நமது வலிமை.
முடிவுரை

இவ்வுலகு பகைவர்களால் நிரம்பிய உலகல்ல.  அறத்தை இழந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலகம்.

நேர்மையாக இருப்பவர்களுக்கு எப்போதும் எதிரிகள் அதிகமாகத் தெரிவார்கள். ஆனால் அந்த எதிர்ப்பே அவர்கள் சரியான பாதையில் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம். தனிமை அவர்களுக்கு பரிசாகக் கிடைக்கலாம். ஆனால் அந்தத் தனிமைதான் வரலாற்றை மாற்றும் வலிமை கொண்டது.

பகைவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள்.  மாறாக, உங்களைப் போன்ற நல்ல சிந்தனையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

இவ்வுலகு பகைவர் சூழ் உலகா?

இல்லை. இது நல்லவர்கள் இன்னும் போதுமான அளவு குரல் எழுப்பாத உலகம். நல்லவர்கள் உரக்கப் பேசத் தொடங்கினால், பகைவர்களும் அநீதியும் தானாகவே நடுங்கும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற.
(குறள் எண்: 34)

ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.

ஊரான்

நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளராக இருந்த களப்பணியாளர் தோழர் சீனிவாசன் மறைந்த நாள் (05.05.2012) இன்று. அவரது மறைவின் போது நான் எழுதிய இதய அஞ்சலி. 
***
சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு முகநூலில் எழுதிய பதிவை இன்று வாசித்தபோதும் எனது கண்கள் கலங்கின. 

தோழர் சீனிவாசன்

தோழர்கள் மருதையன், காளியப்பன், கதிரவன், சீனிவாசன், தமிழ்மணி ஆகிய ஐந்து பேர் கொண்ட அன்றைய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு செயல்பட்ட காலமே மகஇக-வின் பொற்காலம். 

தோழர் சீனிவாசனோடு பழகிய காலங்கள் என்றும் பசுமையாய் நினைவில்.
தோழர் சீனிவாசன் மறைவின் போது நான் எழுதிய நினைவஞ்சலி.

"எனது 54 ஆண்டு வாழ்நாளில் நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தோழரை சந்திக்கச் சென்றேன். அன்று அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நான் ஒரு அரை மணிநேரம் பேசாமல் இருந்தேன். பேசும் ஆற்றல் அன்று எனக்கில்லை. கண்ணீரால் கைக்குட்டை நனைந்ததே தவிர என் கண்களை திறக்க முடியவில்லை. ”தமிழ்மணியா இது?” என அவர் கேட்ட பிறகும் எனக்கு பேச நா எழவில்லை. அவரது முகத்தைப் பார்க்க முயலும் முன்மே என் கண்கள் குளமாகிவிடும். பிறகு எப்படி அவரை நான் பார்ப்பது?

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரைப் பார்த்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துயரத்தை மறைத்து ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.

அவர் மரணமடைந்த செய்தி கேட்டு வழியத் தொடங்கிய கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதால் ஏற்கனவே குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் மருதையன் குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னும் வற்றவில்லை. கண்ணீர் வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது.

ஒரு முப்பது ஆண்டு காலம் உற்ற தோழனாய், நண்பனாய், உறவாய் என என்னுள் அமைப்பு வேலைகளில், எமது உடல் நலனில், எமது குடும்ப உறவில் இரண்டறக் கலந்தவர் தோழர் சீனிவாசன். பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது ”ஏன்னு சொல்ச்சுனா” என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் எப்படி என் நினைவிலிருந்து அகலாதோ அது போல என் கண்களிலிருந்து எவ்வளவுதான் கண்ணீர் வழிந்தாலும் அது ஒரு போதும் வற்றாது.

ஆனாலும் வெறும் கண்ணீர் மட்டும் அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை நிறைவேற்ற உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அவரைப் போல வீருகொண்டு எழுவதே அவருக்கு நான் செலுத்து நினைவஞ்சலியாக இருக்க முடியும்.

தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்!"

தமிழ்மணி

Monday, 4 May 2026

தேர்தல் முடிவுகள்: ஓராயிரம் அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு, அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை மட்டும் தேடுவதா?

தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஆளுங்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் அதிர்ச்சியிலும், தோல்வியின் கசப்பிலும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் வெற்றிக் கொண்டாட்டங்கள், மறுபக்கம் புலம்பல்கள். ஆனால், இந்தத் தேர்தல் முடிவுகள் ஒரு முடிவா? அல்லது ஒரு தொடக்கமா?

"புதிய ஆட்சி சிறப்பாகச் செயல்படுமா?" என்ற கேள்வியைவிட, "ஆட்சியாளர்கள் தடம் மாறும்போது நாம் தட்டிக் கேட்கப் போகிறோமா?" என்பதே இன்றைய தேவையாய் இருக்கிறது. 

ஒரு விரல் புரட்சியோடு ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதி ஓய்வெடுத்துக் கொண்டால், மிஞ்சுவது வெறும் புலம்பல் மட்டும்தான். நீங்கள் ஓய்வெடுத்ததன் விளைவுதான் இன்றைய முடிவுகள் என்பதை நாம் உணர வேண்டும்.

1. தற்குறிகள் எனும் போலி வாதம்:

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உட்பட புதிய தலைவர்கள் மற்றும் கட்சிகளை நோக்கி, "அவர்களுக்கு அரசியல் தெரியாது, அவர்கள் எல்லாம் தற்குறிகள்" என்ற வசைபாடுவது வேடிக்கையாக இருக்கிறது.
கடந்த காலங்களை சற்றுப் புரட்டிப் பாருங்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனப் பல காலக்கட்டங்களில் ஆட்சியில் இருந்தவர்களை, நாம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் படித்துவிட்டு வந்த அறிஞர்களாகவா பார்த்தோம்? 

ஒரு சோத்துப் பருக்கை

இத்தனை ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்தவர்களில் எத்தனை பேர் நிபுணர்கள்? பெரும்பாலான அரசியல்வாதிகள் கற்றுக்கொண்டது ஒன்றே ஒன்றுதான்—'அவர்களின் சோத்துக்கு எப்படி வழி செய்வது' என்பது மட்டுமே. நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் வழியை அல்ல. 

எனவே, அரசியலில் அனுபவம் என்பதைவிட, 'அறம்' (Ethics) தான் முக்கியம். அந்த அறம் இல்லாத எவரும் தற்குறிதான்; அது பழைய கட்சியானாலும் சரி, புதிய கட்சியானாலும் சரி.

2. இரட்டையாட்சி முறை (Double Government):

இந்தியாவில் நடப்பது இரட்டையாட்சி முறை. அதாவது, நிலையான ஒரு அதிகார வர்க்கம் (கிராம நிர்வாக அலுவலர் முதல் தலைமைச் செயலக செயலாளர்கள் வரை) ஒருபுறம்; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்) மறுபுறம்.

உண்மையான அதிகாரம் நிர்வாகிகளிடம் இருக்கும்போது, அரசியல் தெரியாதவர்கள் கூட ஆட்சியை ஓட்ட முடியும். இதுதான் எதார்த்தம். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமலேயே கூட கவர்னர் ஆட்சி அல்லது ஜனாதிபதி ஆட்சி மூலம் இந்த நாடு இயங்குகிறது என்றால், அரசியல் அனுபவம் ஒரு கட்டாயத் தேவை அல்ல. அவர்கள் நிர்வாகிகளோடு சேர்ந்து 'கூட்டுக்கொள்ளை' அடிக்கக் கற்றுக்கொண்டாலே போதும், காலம் தள்ளிக் கொண்டு போய்விடும்.

3. மாற்றத்தின் பெயரில் நடக்கும் ஏமாற்றம்:

வெற்றி பெற்ற புதிய கட்சியினர் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஏற்கனவே திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் கொள்ளையடித்தவர்கள் தான் இன்று புதிய கட்சிகளில் வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரே இரவில் உத்தமர்களாக மாறிவிடப் போகிறார்களா என்ன? பழைய அழுக்கு மூட்டைகளைச் சுமந்துகொண்டு, புதிய போர்வை போர்த்தியதால் மட்டும் துர்நாற்றம் இல்லாமலா போய்விடும் .

4. சுயபரிசீலனை: எதிரியைத் தேடும் முன்...

பாஜக-சனாதன-பாசிச எதிர்ப்பு என்பது மட்டுமே அரசியல் ஆகிவிட முடியாது. அதையும் தாண்டி மக்கள் பேச வேண்டியது நிறைய இருக்கிறது. அதைத் தவறவிட்டதால்தான், மாற்றத்தை விரும்புவோர் மடைமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மற்றவர்களை முட்டாள்கள் என்று சொல்வதற்கு முன்பு, நாம் ஆதரிப்பவர்கள் அனைவருமே அறிவாளிகளா என்பதையும் உரசிப் பார்க்க வேண்டும். ஒருவரை எதற்காக ஆதரிக்கிறோம் என்ற உளவியலைப் புரிந்து கொள்ளாமல், கண்ணை மூடிக்கொண்டு வசைபாடுவது யதார்த்தத்தை மாற்றாது. தோல்வி அடைந்தவர்கள் மற்றவர்களைக் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு, தாங்கள் எங்கே தவறிழைத்தோம் என்பதைச் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.

5. முடிவுரை: நரகலில் நல்லரிசியைத் தேடும் காலம்

இந்த அரசியல் களத்தில் நாம் இன்னும் ‘நரகலில் நல்லரிசியைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்பதுதான் கசப்பான உண்மை.
ஆட்சியாளர்களை உத்தமர்களாக்குவதும், ஊழல்வாதிகளாக மாற்றுவதும் மக்கள்தான். ஒரு விரல் புரட்சியோடு நம் கடமை முடிந்துவிட்டதாக நினைத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளும் அதே புலம்பல்கள்தான் மிஞ்சும்.

தேர்தல் முடிந்துவிட்டது. ஆனால் கண்காணிப்பு தொடங்கியிருக்கிறது. அரசியல்வாதிகளின் முகத்தைப் பார்ப்பதை விட்டுவிட்டு, அவர்களின் செயல்களையும், ஒப்பந்தங்களையும், முடிவுகளையும் கூர்மையாகக் கவனிக்கும் மக்களாக நாம் மாறினால் மட்டுமே உண்மையான மாற்றம் சாத்தியம்.

மாற்றத்தை நோக்கி நாம் செல்கிறோமா? அல்லது மீண்டும் அதே நரகலில் நல்லரிசியைத் தேடிக் கொண்டிருக்கப் போகிறோமா?
இந்தக் கேள்விக்கான பதில் நம்மிடம்தான் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறியும் போதுதான் உண்மையான அரசியல் மாற்றம் நிகழும். அதுவரை...

ஊரான்

Sunday, 3 May 2026

திமுக மீதான வெறுப்பு அரசியலின் பின்னணி என்ன?

நாளை தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கின்றன. கடந்த சில வாரங்களாகத் தமிழக அரசியல் களம் மிகத் தீவிரமான விவாதங்களைச் சந்தித்தது. இந்த விவாதங்களில், கொள்கைகளை விடவும், ஆளுமைகளை விடவும் "திமுக எதிர்ப்பு" அல்லது "திமுக வெறுப்பு" என்பதே பிரதானமான கருப்பொருளாக முன்னிறுத்தப்பட்டது. சமூக வலைதளங்கள் முதல் டீக்கடை விவாதங்கள் வரை இந்த வெறுப்புப் பிரச்சாரம் திட்டமிட்டுச் செலுத்தப்பட்டது. இந்த வெறுப்பின் பின்னால் உள்ள அரசியல் என்ன? எதார்த்தம் என்ன? என்பதை நாம் அலசிப் பார்க்க வேண்டிய தருணம் இது.


பொய்த்துப் போன 'பொற்கால' பிம்பங்கள்


எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எனப் பலரது ஆட்சி காலங்களை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோல, காமராஜர், பக்தவச்சலம், ராஜாஜி என முந்தைய தலைமுறைகளின் ஆட்சியையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. "இவர்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடியதா?" என்றால், விடை 'இல்லை' என்பதுதான். 

காமராஜர் காலத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியைப் போற்றும் பலரும், அது உலக அளவில் நிலவிய சோசலிச சார்பு பொருளாதாரக் கட்டமைப்பு மற்றும் சோவியத் யூனியனின் உதவியால் கிடைத்த பெரும் மாற்றங்கள் என்பதை மறக்கிறார்கள். அது காமராஜர் எனும் தனிமனிதரால் மட்டும் சாத்தியமானதல்ல; அந்த உலகச் சூழலில் எந்த அரசு இருந்திருந்தாலும் அத்தகைய தொழில்துறை மாற்றங்கள் நடந்திருக்கும். மற்ற மாநிலங்களிலும் அத்தகைய ஆலைகள் தோன்றியதே இதற்குச் சான்று.

ஆக, கடந்த கால ஆட்சிகள் எல்லாம் சொர்க்கம் என்றும், கலைஞர் கருணாநிதி ஆட்சி மற்றும் இன்றைய திமுக ஆட்சி மட்டும் மோசம் என்றும் பேசுவது வரலாற்று அறியாமை. மற்ற மாநிலங்களில் ஆட்சி செய்த/செய்யும் காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி அல்லது இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சிகளிலும் 'தேனாறு' ஓடிவிடவில்லை. எதார்த்தத்தை மறுக்கும் இந்த ஒற்றைப் பரிமாண விமர்சனங்கள் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டவை.

ஊழல்: அது சொத்துடைமை சமூகக் கட்டமைப்பின் நோய்

இன்றைய முதலாளித்துவக் கட்டமைப்பில், ஊழல் இல்லாமல் எந்த ஆட்சியும் நடைபெறுவதில்லை என்பது கசப்பான உண்மை. ஊழலில் கூடுதல், குறைவு வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் "ஊழலற்ற ஆட்சி" என்று இந்தியாவில் இதுவரை யாரும் வழங்கவில்லை. திமுகவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், மற்ற கட்சிகள் புனிதமானவை என்றும், திமுக மட்டும் ஊழலின் ஊற்றுக் கண் என்றும் கட்டமைக்கப்படும் பிம்பம், வெறும் அரசியல் தந்திரமே தவிர, எதார்த்தமல்ல. 


அதேபோல எல்லாக் கட்சிகளிலும் வாரிசு அரசியல் நிலவிய போதிலும், திமுக மீது மட்டும் 'வாரிசு அரசியல்' எனும் வெறுப்பு அரசியல் கட்டமைக்கப்படுகிறது.

வெறுப்பின் அடிப்படை: சனாதன எதிர்ப்பு

திமுக மீது ஏன் இவ்வளவு வெறுப்பு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது? மற்றவர்களை விட ஏன் இவர்களை மட்டும் தீவிரமாக எதிர்க்கிறார்கள்? இதற்கு ஒரே ஒரு காரணம் மட்டும்தான்: சனாதன எதிர்ப்பு. திமுக சனாதனக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்பதும், சமூக நீதியை முன்வைத்துச் செயல்படுவதும்தான் இந்த வெறுப்பு அரசியலின் உண்மையான ஊற்றுக்கண்.


ஒருவேளை திமுக தனது இந்த அடையாளத்தைக் கைவிட்டு, சனாதனத்திற்குத் துணைபோனால், அடுத்த நொடியே இந்த வெறுப்பு அரசியல் மாயமாகிவிடும். இது வெறும் ஆட்சி நிர்வாகம் சார்ந்த விமர்சனம் அல்ல; இது கருத்தியல் ரீதியான மோதல். சமூக நீதியை விரும்பாத சக்திகளின் கையில் இந்த வெறுப்பு அரசியல் ஒரு கருவியாக இருக்கிறது.

திமுகவின் மௌனமும் ஜனநாயகத்தின் சவாலும்

இந்த வெறுப்பு அரசியலை முறியடிப்பதில் திமுக போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதுதான் ஒரு நடுநிலையான பார்வையாளரின் குற்றச்சாட்டு. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த வேகத்தை விட, ஆளுங்கட்சியாக இருக்கும்போது தங்களுக்கு எதிரான திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை முறியடிக்கத் தேவையான அறிவுப்பூர்வமான மற்றும் ஜனநாயக ரீதியான பிரச்சாரங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை.

  • மாவட்ட அளவிலான பிழைப்புவாதிகள்: திமுக தலைமையே இத்தகைய பிரச்சாரங்களை முன்னெடுக்க விரும்பினாலும், மாவட்ட அளவில் கட்சியில் செல்வாக்கு செலுத்தும் பிழைப்புவாதிகள் இருக்கும் வரை இது சாத்தியம் இல்லை.

  • அவலங்கள்: சனாதன எதிர்ப்பு எனும் கொள்கையின் அரிச்சுவடிகூட தெரியாதவர்கள் திமுகவில் அமைச்சர்களாக இருப்பது மற்றுமொரு அவலம்.

மக்களை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் கடமை எந்தவொரு ஜனநாயக இயக்கத்திற்கும் உண்டு. ஆனால், வெறுப்பு அரசியலுக்கு மக்கள் பலியாகிறார்கள் என்றால், அங்கே அரசியல் கல்வி போதவில்லை என்றுதான் பொருள்.

முடிவாக...

நாளை தேர்தல் முடிவுகள் வரும். யார் ஆட்சிக்கு வந்தாலும், மக்கள் வாக்களித்த கடமை இதோடு முடிந்துவிடப்போவதில்லை. "திமுக வெறுப்பு" அல்லது ஏதோ ஒரு கட்சியின் மீதான குருட்டுத்தனமான வெறுப்பு என்பது முன்னேற்றத்திற்கான பாதை அல்ல.

தர்க்கமற்ற வெறுப்பைத் தூண்டும் அரசியலை விட, மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள், சமூக நீதி, மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் அரசியலை அணுகுவதே ஆரோக்கியமான சனநாயகம்.


வெறுப்பு அரசியலையும், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சனாதன அரசியலையும் பிரித்துப் பார்க்கும் முதிர்ச்சியைத் தமிழ் சமூகம் பெற வேண்டும். வெறுப்பின் குரல்கள் ஓயட்டும்; விவாதங்களின் குரல்கள் ஒலிக்கட்டும்.

ஊரான்

கட்சித் தாவல்: கொள்கைக்காகவா? பிழைப்புக்காகவா?

இன்றைய அரசியலில், கட்சித் தாவல் என்பது ஒரு வழக்கமான நிகழ்வாகிவிட்டது. கொள்கை வேறுபாடுகளுக்காகவா, அல்லது பதவி மற்றும் பொருளாதார வாய்ப்புகளைத் தேடியா இத்தகைய தாவல்கள் நடைபெறுகின்றன? இது இன்று எழும் மிக முக்கியமான கேள்வி.

சில சமயங்களில், பழைய கட்சியில் வாய்ப்புகள் குறையும்போது, புதிய அரசியல் சக்திகளின் எழுச்சி பலருக்குப் புதிய வாய்ப்பாகத் தோன்றுகிறது. இதனால், அரசியல் பயணம் என்பது ஒரு நிலையான கொள்கையை விட, மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப நகரும் ஒரு 'பிழைப்புவாத' நடைமுறையாக மாறிவிடுகிறது.
இந்த மடம் இல்லன்னா வேற சந்தமடம்

முற்போக்கு இயக்கங்களின் தனித்துவம்

தேர்தல் காலங்களில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களும் வாக்களிப்பதைத் தவிர, அன்றாட வாழ்க்கையில் கட்சிகளைப் பெரிதாக நம்புவதில்லை. ஆனால், முற்போக்கு இயக்கங்களை மக்கள் அப்படிப் பார்ப்பதில்லை.

ஒரு இன்னல் ஏற்பட்டால் ஓடோடி வருபவர்கள் அவர்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படை அவர்கள் மக்களுக்காக இறுதிவரை நிற்பார்கள் என்பதில் மட்டுமல்ல; அங்கு இருப்பவர்கள் நேர்மையானவர்கள் என்ற உறுதியான நம்பிக்கையிலும் உள்ளது. அதனால்தான், முற்போக்கு இயக்கங்கள் சாதாரண அரசியல் அமைப்புகளை விட, ஒரு நெறிமுறைக்கான முன்மாதிரியாகப் பார்க்கப்படுகின்றன.


முற்போக்கு இயக்கங்களின் மெல்லிய சிக்கல்: 'திறமை' எனும் கவசம்

இந்த உயர்ந்த நம்பிக்கையே, சில நேரங்களில் சவாலாகவும் மாறுகிறது. குறிப்பாக, தனிநபர்களின் 'திறமை' அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக மாறிவிடுகிறது:

  • கவசமாக மாறும் கலை: கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், கலைஞர், களப்பணியாளர் என்ற அடையாளங்கள், சிலரின் செயல்களை விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசமாக மாறுகின்றன.

  • முகமூடி அபாயம்: தனிப்பட்ட வாழ்க்கைக்கும், வெளிப்படையான செயல்பாடுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகும்போது, அவை அவர்களின் புகழால் மறைக்கப்படுகின்றன. இது இயக்கத்தின் நம்பகத்தன்மையை மெல்ல மெல்ல சிதைக்கிறது.

  • திறமைக்குக் கிடைக்கும் அங்கீகாரம்: தவறுகள் செய்தாலும், அந்தத் திறமைக்காகவே அவர்களை ஒரு இயக்கம் தக்கவைத்துக்கொள்கிறது; அல்லது மற்றொரு இயக்கம் அவர்களை அரவணைத்துக்கொள்கிறது.

இத்தகைய போக்குகள் கவனிக்கப்படாமல் போனால், அந்த இயக்கம் காலம் காலமாக கட்டிக்காத்த 'நேர்மை' என்ற அடையாளம் சிதைவது உறுதி.

களை எடுத்தலே தீர்வு

ஒரு வயலில் களைகளை வளர விட்டால், அது பயிரைப் பாதிக்கும். அதுபோலவே, எந்த ஒரு முற்போக்கு இயக்கத்திலும் அடிப்படை மதிப்புகளுக்கு முரணான போக்குகள் ஆரம்பத்திலேயே கையாளப்பட வேண்டும்.
"வறுமையிலும் நேர்மையாக வாழும் எண்ணற்ற மக்கள் இருக்கும்போது, ஒரு முற்போக்காளன் மட்டும் ஏன் நேர்மையாகவும் அறத்தோடும் வாழ முடியாது?"
அவன் உண்மையான முற்போக்காளனா? அல்லது முற்போக்கை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியா? இந்தக் கேள்விகளை ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு தொண்டரும் தங்களுக்குள் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

முடிவு

பிழைப்புவாதமும், சிறிய தவறுகளும் ஆரம்பத்தில் அற்பமாகத் தோன்றலாம். ஆனால், அவை கவனிக்கப்படாமல் விட்டால், பின்னர் பெரிய சிதைவுகளுக்குக் காரணமாகிவிடும். மக்கள் முற்போக்கு இயக்கங்களில் வைத்திருக்கும் நம்பிக்கை சாதாரணமானதல்ல; அது நேர்மையை அடிப்படையாகக் கொண்ட நம்பிக்கை. அந்த நம்பிக்கையைக் காப்பது இயக்கத்தின் அடிப்படைப் பொறுப்பு.

நேர்மையை காக்கும் இயக்கங்களே காலத்தின் சோதனையில் நிலைத்து நிற்கும். திறமைக்கு மதிப்பு தருவதோடு, பொறுப்புணர்வை மறக்காத அரசியல் பண்பே ஒரு இயக்கத்தை வலுப்படுத்தும். நேர்மையற்ற திறமை ஒரு இயக்கத்தை உயர்த்தாது; அது அமைதியாக அதைச் சிதைக்கத் தொடங்கும்.


ஊரான்