Wednesday, June 28, 2023

நெஞ்சைப் பிளக்கிறதே!

ஜூன் மாதத்திலும்...
கடல் போல் காட்சியளிக்கும் ஏரி,
புது மண்ணின் அரவணைப்பில்
புதுப் பொலிவு பெற்ற ஏரிக்கரை,
தென்மேற்கிலிருந்து வீசும் மெல்லிய பூங்காற்று, 
கண்ணைக் குளிர வைக்கும் எழில்மிகு மலைத் தொடர், 
கடலின் பேரலையில் தள்ளாடிக் தவழும் பெருங் கப்பலைப் போல...
காற்றலையால் எழும் ஏரி நீரின் மெல்லலையில் 
தள்ளாடிக் தவழும் நீர்ப்பறவைகள்,
இதழ் விரித்து மலர்ந்திருக்கும் அல்லி மலர்கள்,
பெருமீன்கள் நீரின் ஆழத்தில் ஓய்வெடுக்க, 
சிறு குஞ்சுகளோ மேலெழுந்து நீந்திக் களிக்க,
காலை நேர வேளையிலே...இவை மனதை வருடினாலும்
கரையின் இருமருங்கிலும் சரிந்து 
குவிந்து கிடக்கும் 
சாராய பாட்டிகள்...
நெஞ்சைப் பிளக்கிறதே!

தமிழ்மணி

குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், மட்டவெட்டு, அத்திமூரான் கொட்டாய் ஏரிக்கரை.















Thursday, June 8, 2023

பிறவிக் குணம்: அறிவியலா?

கை, கால்கள், கண், காது, மூக்கு, குரல் வளம் உள்ளிட்ட உறுப்புகள் தொடர்பான உடல் கட்டமைப்பு (body constitution) மட்டுமே பிறப்பால், பரம்பரையால் ஓரளவுக்குத் தீர்மானிக்கப்படுபவை.  இவை கூட உணவு முறை மற்றும் உடல் உழைப்பு, வாழுகின்ற தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மாற்றத்திற்குரியவை.

ஆனால், மனம் குணம் நடத்தை சார்ந்த பண்புகளை ஒரு மனிதன் வாழுகின்ற குழுச் சூழல், அவன் பெறக்கூடிய கருத்தியல் ரீதியிலான உள்ளீடுகளே தீர்மானிக்கின்றன. 

ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் பிறந்த கையோடு எடுத்துச் சென்று அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அக்குழந்தை  அறியாமலேயே வேறு ஒரு சாதிக் குடும்பத்தில் வளர்த்து வந்தால் அந்தக் குழந்தை எத்தகையப் பண்புகளை, நடத்தையை, குணத்தைப் பெற்றிருக்கும்?

தான் வாழ்கின்ற சூழலுக்கு ஏற்பதான் ஒவ்வொரு மனிதனும் தனக்கான பண்புகளை, நடத்தையே, குணத்தைப் பெறுகின்றான். இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து ஒரு தொடர் கட்டுரையையே நான் எழுதி இருக்கிறேன்.

எனவே, பிறப்பால் ஒருவரின் குணத்தை, பண்பை நடத்தையை, தீர்மானிப்பது அறிவியலுக்குப் புறம்பானது. 

ஊரான்


தொடர்புடைய பதிவுகள்