Thursday, October 6, 2022

இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு!

இராஜராஜ சோழன் இந்துவா? சைவர்கள் இந்துக்களா? தமிழர்கள் இந்துக்களா? முருகன் இந்துக் கடவுளா? என்பன போன்ற கேள்விகளும், அதன் மீதான விவாதங்களும் இன்று சூடு பிடித்துள்ளன. 

சிவன், கிருஷ்ணன், இராமன், பெருமாள், விநாயகர் உள்ளிட்ட கடவுளர்களை வணங்குவதனாலும், ஆயுத பூஜை, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்றப் பண்டிகைகளைக் கொண்டாடுவதனாலும் ஒருவன் தன்னை இந்து என கருதிக் கொள்கிறான். 

மேற்கண்ட கடவுளர்கள் மற்றும் பண்டிகைகளுக்குப் பின்னால் உள்ள வரலாற்றுச் செய்திகளை பொது வெளியில் ஒருவர் முன்வைக்கும் போது, அது இந்து மதத்திற்கு எதிரானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்து மதம் குறித்த வரலாற்றுச் செய்திகளை அறியாத, இந்து மதக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாத, ஒரு அப்பாவி அல்லது ஒரு சாதாரண இந்துக் குடிமகனுக்கு, இந்து மதம் குறித்த விமர்சனங்கள் எரிச்சலைத் தருகிறது. இந்து மதம் குறித்த விமர்சனங்களை, தன் மீதான தாக்குதலாகக் கருதிக் கொண்டு அவர் ஆவேசப்படுகிறார். இந்த ஆவேசத்தால், அவர் தன்னையும் அறியாமல், தன்னையே இழிவுபடுத்தும் பார்ப்பன சனாதான வாதிகளுக்கு வாலாக மட்டுமல்ல, தூணாகவும் மாறிவிடுகிறார்.

எனவே, இந்து மதம் குறித்த வரலாற்றுச் செய்திகளை, ஒரு ஆசிரியர், ஏதுமறியாத மாணவனுக்கு எடுத்துச் சொல்வதைப் போல பொறுமையாகவும், அதே நேரத்தில் நிதானமாகவும் புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். ஆதாரம் ஏதுமின்றி, 'எடுத்தேன் கவிழ்த்தேன்' என்கிற  பாணியில், வெறும் சொற்பிரயோகங்களால் மட்டும், இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட, மிகச் சாதாரண இந்துக்களுக்கு, பார்ப்பன சனாதனம் குறித்துப் புரிய வைக்க முடியாது.

அதற்கு இந்து மத வரலாற்றைக் கவனம் கொடுத்து தனியாகப் பயில வேண்டும். 

"நமக்குத் தெரிந்த கிறிஸ்தவ மதம், சீக்கிய மதம், இஸ்லாம் மதம், புத்த மதம், ஜைன மதம் ஆகிய இதர மதங்களைப் போன்ற ஒன்றல்ல இந்து மதம். ஏனென்றால்,

  • இந்து மதத்தில் எல்லோருக்கும் பொதுவான கடவுள் இல்லை. 
  • ஏனைய மதங்களைப் போல் இந்துக்களுக்கு பொதுவான ஒரு குருவோ, நிறுவனரோ, உயர் அதிகாரிகயோ கிடையாது. 
  • எனவே, பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மத நூலும் கிடையாது.
  •  பிற மதத்தினரைப் போல் ஒரே சமுதாயமாக ஒருங்கிணைந்து நிற்க அவர்களுக்கு ஒரு அமைப்பு கிடையாது.
  •  இந்துக்களின் மத்தியில் மத நம்பிக்கையைப் பாதுகாக்கவோ பயிற்றுவிக்கவோ பொதுவான ஒரு அமைப்பு கிடையாது.
  •  இந்துக்களனைவருக்கும் பொதுவான வழிபாட்டுத் தலங்களோ, வழிபாட்டு முறைகளோ கிடையாது.
  •  அவர்களின் மத்தியில், மதத்தைத் தலைமுறை தலைமுறைகளாகப் பயிற்றுவித்து வளர்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட குருமார்கள் (போதகர்கள்) கிடையாது.
  •  அவர்களுக்குப் பொதுவான சமுதாய அமைப்பு முறைகள் கிடையாது.
  • இந்து மதத்திற்கு உண்மையில் ஒரு பெயரை கிடையாது என்பதுதான் வரலாற்று உண்மை. முஸ்லிம்களும், கிரேக்கர்களும் இந்தியாவுக்கு வந்த போது மக்களனைவரையும் இந்துக்கள் என்று அழைத்து, அவர்களுடைய மதம் எதுவாயினும் இந்து மதம் என்றனர். இந்தப் பெயர், அதற்கு முந்திய எந்த மத நூல்களிலும் கிடையாது.

பிறகு எப்படி இந்து மதத்தை பற்றி பயில முடியும்? அது எத்தககையது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

  • அதற்கு ஒரே வழி தான் இருக்கிறது. புராதன காலத்தில் இருந்து அதாவது ஏறத்தாழ 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கும் இந்த நாட்டு மக்களின் 'மதம்-பண்பாடு'களின் இன்று வரையிலான வரலாற்றை ஆராய்ந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
  •  அதற்காகத்தான் " History of Hindu imperialism" என்ற நூல் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்போல வேறு நூல் இருப்பதாகத் தெரியவில்லை."
என்று 1968 இல் கேரளாவைச் சேர்ந்த தவத்திரு தர்ம தீர்த்த அடிகளார் அவர்கள், தான் எழுதிய "இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு" என்ற நூலுக்கான பின்னிணைப்பாக ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

"நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கருத்துகளே இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. நான் எழுதி வரும் நூலில் குறிப்பிட்டிருக்கும் பல கருத்துக்களை இந்த நூலிலும் காண்கிறேன். இந்த நூலை நான் மிகவும் விரும்பி வரவேற்கிறேன்"

என இந்நூல் குறித்து டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் இந்து மதம் குறித்த ஏராளமான வரலாற்றுச் செய்திகளை தனது நூல்களில் தொகுத்துக் கொடுத்துள்ளார். பார்ப்பன சனாதனிகளை எதிர்கொள்வதற்கு மிக வலுவான ஆயுதங்களாக அம்பேத்கருடைய எழுத்துக்கள் பயன்படுகிறது என்பதை பலரும் அறிவர்.

எனவே, இந்து மதம் குறித்து அறிந்து கொள்ள தவத்திரு தர்மதீர்த்த அடிகளாரின் "இந்து மதக் கொடுங்கோன்மையின் வரலாறு" பெரிதும் பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

மேலும், அம்பேத்கரும், தர்மதீர்த்த அடிகளாரும் மனிதனுக்கு மதமே வேண்டாம் என்று சொல்பவர்கள் அல்ல. இவர்கள் மட்டுமல்ல, புத்தர்-சித்தர்கள் தொடங்கி  ஜோதிராவ் மகாத்மா  புலே, வள்ளலார், நாராயண குரு, அய்யா வைகுண்டர் என எண்ணற்ற பெரியோர்கள், இந்து மதத்தின் அடி நாதமாக விளங்கும் பார்ப்பன சனாதன சாதியக் கொடுங்கோன்மைக்கு எதிராக பேசியும், போராடியும் வந்துள்ளனர். அவர்களுடைய கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்வதன் மூலமாகத்தான், சனாதனத்தை வீழ்த்துவதற்கான போரில் வெகு மக்களை நம் பக்கம் ஈர்த்து நம்மால் வெல்ல முடியும்.

ஊரான்

Wednesday, October 5, 2022

சம்பூகன் வதம்! முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பார்ப்பனியம்!

சமீபத்தில், முகநூலில் ஒரு காணொளியைப் கண்டேன். "சூத்திரனாய்ப் பிறந்த சம்பூகன் தவம் செய்யலாமா என ஆத்திரம் கொண்ட இராமன் சம்பூகனை வதம் செய்தான் என்று சொல்லுவது ஒரு வடிகட்டியப் பொய். திராவிடர் கழகத்தினால் இட்டுக்கட்டப்பட்ட கற்பனைக் கதை" என்று வாய் கூசாமல் அளந்து கொண்டிருந்தார் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர். 

அதற்குப் பதிலடி கொடுத்த திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், "வால்மீகி இராமாயணத்தில் சம்பூகன் வதம் இருப்பதை இராமகிருஷ்ணா மடம் வெளியிட்டுள்ள நூலில் இருந்து நிரூபிக்கத் தயார், வெளிப்படையான விவாதத்திற்கு நீங்கள் தயாரா?" என்று கேட்டபோது சீனிவாசனின் முகம் கருத்துப் போனதுதான் மிச்சம். இதில் வேடிக்கை என்னவென்றால் சீனிவாசன் ஒரு பேராசிரியராம். பார்ப்பனியம் தலைக்கு ஏறிப் போனால் பேராசிரியர் என்று பீற்றிக்கொள்பவனுக்கும் புத்தி மட்டுப் போகும் என்பதற்கு இந்த சீனிவாசனே ஒரு நிகழ்கால சாட்சி. 

சமீப காலமாக, சில பார்ப்பன அடிவருடிகள் தங்களது கருத்துக்கு வலு சேர்ப்பதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஏதோ அம்பேத்கரை கரைத்துக் குடித்து, கரை சேர்ந்தவர்கள் போல பிதற்றிக் கொண்டு திரிகின்றனர். பார்ப்பனித்தையும், இந்து மதக் கொடுங்கோன்மையும் எத்தனை முறை அம்பேத்கர் அவர்கள் கழுவி கழுவி ஊற்றினாலும் அவர்களுக்கு உரைப்பதே இல்லை. 

சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்களே எழுதியதை வாசகர்கள் பார்வைக்கு முன் வைக்கிறேன். இராமாயணம் மூலநூலில் இருந்தே சம்பூகன் வதம் குறித்து அம்பேத்கர் அவர்கள் எழுதி உள்ள்ளார் என்றாலும் கூட, அதற்கும் திராவிடர் கழகம், பெரியாரே காரணம் என்று கூட, நா கூசாமல் முடிச்சுப் போடுவர். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே உலவுவதுதானே ‌‌ பார்ப்பனியம். நல்ல வேலை, மகாத்மா ஜோதிராவ் புலே,  நாராயண குரு, வள்ளலார் அம்பேத்கர், பெரியார் போன்ற எண்ணற்ற நம் முன்னோர்கள் பார்ப்பனியம் குறித்த சில உண்மைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். இல்லையென்றால் நாமும் பார்ப்பனியம் சொல்வதைத்தான் வேதவாக்காகக் கருதிக் கொண்டிருப்போம்.

இதோ அம்பேத்கர் மொழியில் சம்பூகன் வதம்!

"...நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறார். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்து விடுவதாய் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படி செய்கையில், வரலாறு காணாத கடும் கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுவே சூத்திரன் சம்பூகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

இராமனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாட்டு மக்கள் யாரும் அகால மரணம் அடையவில்லை என்கிறார் வால்மீகி. இருந்த போதிலும் பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணம் அடைய நேர்ந்தது. மகனைப் பறிகொடுத்த தந்தை, தன் பிள்ளையின் பிணத்தை தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மனையை நோக்கிப் போனான். அரண்மனையின் வாசலில் பிணத்தை கிடத்தி விட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு இராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவம்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். குற்றத்தை அறிந்து தண்டிக்காவிட்டால் மன்னன் இராமனே குற்றவாளி என்றான். மனம் போனபடி பழித்தான்; சபித்தான் குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்து, செத்துப்போன தன் மகனை பிழைக்கச் செய்யாவிட்டால், அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் (தர்ணா) நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என அச்சுறுத்தினான்.

அதைக் கேட்டு நாரதன் உட்பட அறிவார்ந்த எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். அந்த அறிஞர்களின் ஆலோசனைகளை கூட்டத்தில், நாட்டு மக்களுள்-அதாவது இராம இராஜ்ஜியத்தில், யாரோ சூத்திரன் ஒருவன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும், அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். 

தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று இராமன் திடமாய் நம்பினான். உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றித் துருவி அக்குற்றவாளியைப் பிடித்து வரப் புறப்பட்டான். இறுதியில், நாட்டின் தெற்கே அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன், தான் சம்பூகன் என்னும் சூத்திரனா, மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் இராமன். அதே நொடியில் எங்கோ தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணம் அடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம். 

கடவுள்களெல்லாம் மன்னன் இராமனின் மீது, மலர் தூவி மகிழ்ந்தார்களாம். தவம் செய்து மோட்சத்தை அடைய தமக்கே உள்ள உரிமையை அதற்கு அருகதையற்ற சூத்திரன் ஒருவன் மேற்கொண்டதைத் தடுத்து, தண்டித்து சம்பூகனை கொலை செய்த மன்னன் இராமனின் செய்கைக்காக அவர்கள் மகிழ்ந்தார்கள். கடவுள்கள், தேவர்கள் எல்லாம் இராமன் முன் தோன்றி அவன் செய்த இந்நற் காரியத்திற்காக அவனைப் பாராட்டினார்கள். 

அயோத்தி அரண்மனை வாசலில் பிணமாய்க் கிடந்த பிராமணச் சிறுவனை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று கடவுள்களிடம் இராமன் வேண்டினான். "அந்த பிராமணச் சிறுவன் எப்போதோ உயிர் பெற்று எழுந்து விட்டான்" என்று அவர்கள் இராமனுக்குச் சொல்லிவிட்டு மறைந்து போயினர். அதற்குப் பின் இராமன் அருகிலிருந்த அகத்திய முனிவனின் ஆசிரமத்திற்குப் போனான். சம்பூகனைக் கொன்ற நற்செயலைப் பாராட்டி தெய்வ மகிமையுள்ள காப்பு ஒன்றை அகத்தியன் இராமனுக்குப் பரிசாய் அளித்தான். பிறகு இராமன் அயோத்திய அடைந்தான். இத்தகையவனே இராமன்."

பக்கம்: 462, 463, 464. பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 8.

ஊரான்

Sunday, October 2, 2022

ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

"இந்தியக் கிராமம் ஒரே ஒரு சமூக அலகாக இல்லை. அது பல சாதிகளைக் கொண்டது.

1.கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1).தீண்டத்தக்கவர்கள் (2).தீண்டத்தகாதவர்கள்.

2. தீண்டத்தக்கவர்கள் பெரிய சமுதாயமாகவும், தீண்டத்தகாதவர்கள் ஒரு சிறிய சமுதாயமாகவும் உள்ளனர்.

3. தீண்டத்தக்கவர்கள் கிராமத்தின் உள்ளேயும், தீண்டத்தகாதவர்கள் கிராமத்திற்கு வெளியேயும் தனித்தனிப் பகுதிகளில் வசிக்கின்றனர்.

4. பொருளாதார ரீதியில் தீண்டத்தக்கவர்கள் பலமான, சக்தி வாய்ந்த சமுதாயமாக உள்ளனர். தீண்டத்தகாதோர் ஏழைகளாக, சார்ந்து வாழ்கின்ற சமுதாயமாக உள்ளனர்.

5. சமூக ரீதியில், தீண்டத்தக்கவர்கள், ஆளும் இனம் என்ற இடத்தில் உள்ளனர். தீண்டத்தகாதவர்கள் பரம்பரையான, பிணை வேலைக்காரர்களைக் கொண்ட, ஆளப்படும் இனம் என்ற இடத்தில் உள்ளனர்.

இந்தியக் கிராமங்களில் தீண்டத்தக்கவர்களும், தீண்டத்தகாதோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இணைந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், அதற்கு சில விதிகளை வைத்திருக்கின்றனர். இவற்றை தீண்டத்தகாதவர்கள் பின்பற்றி நடக்க வேண்டும்.  எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்தால் குற்றம், எதைச் செய்யத் தவறினால் குற்றம் என்பவை குறித்து அவை கூறுகின்றன.

அவற்றில்,

தீண்டத்தகாதவர்கள், இந்துக்கள் வசிக்கும் இடத்திற்கு அப்பால் தனியான பகுதிகளில் வசிக்க வேண்டும். இவ்வாறு பிரித்து வைக்கும் விதியை மீறுவது குற்றமாகும். (மனு: 10-51)

தீண்டத்தகாதோர் வசிக்கும் பகுதிகள் தெற்கு திசையில் இருக்க வேண்டும். ஏனென்றால், தெற்குதான் நான்கு திசைகளில் மிகவும் அமங்கலமானது. இந்த விதியை மீறி நடப்பது குற்றமாக கருதப்படும்.

தீண்டத்தகாதவர்கள் தீட்டு ஏற்படுத்தும் தூரம் அல்லது நிழல் தீட்டு பற்றிய விதியை பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறுவது குற்றமாகும்."

-அமபேத்கர் நூல் தொகுப்பு-9.

இந்தியா முழுக்க இதுதான் விதி. ஐயம் இருப்போர் ஆய்வு செய்க!

தீண்டாமையின் தொடக்கப் புள்ளியே ஊரும் சேரியும் தனித்தனியாக இருப்பதுதான். இதற்கு விதி வகுத்தது சனாதன தர்மம். அந்த சனாதனத்தைப் போற்றிப் பாதுகாப்பது என்பது தீண்டாமைக்கு துணை போவதாகும். இதுதான் இந்து தர்மம். இதைத்தான் பார்ப்பனியம் பேசி வருகிறது; பாஜக ஏற்றிப் போற்றுகிறது, அதற்காகத்தான் மோடி ஓடோடி உழைக்கிறார். வானதி வால் பிடிக்கிறார். தமிழிசை தாளம் போடுகிறார். கிருஷ்ணசாமி ஜால்ரா அடிக்கிறார். 

-ஊரான்

Tuesday, June 28, 2022

ஓ! தோழனே! உனது மரணத்தை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது!

1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் 20 ஆண்டு காலம் புரட்சிகர அரசியல் பயணத்தில் அவரோடு மிக நெருக்கமாக பயணித்திருக்கிறேன். நான் மிகத் தீவிரச் செயல்பாட்டாளராக வாழ்ந்த காலம் அது. அதன் பிறகு எனது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சில ஆண்டுகாலம் அவரோடு நெருங்கிப் பழக-பயணிக்க முடியவில்லை என்றாலும் இயக்க வேலைகளினூடே அவரை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறக்கும். பிரியமானவர்களின் ஸ்பரிசம் அது.

நகமும் சதையும் போல எனது குடும்பத்தோடு உறவாடியவர். எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது, அவர்களுக்கு ஒரு மூத்த நண்பனாக விளங்கியவர். நானும் எனது துணைவியாரும் இல்லாத போது அவரே எனது பிள்ளைகளைப் பராமரிப்பார்.  அதனால்தானோ என்னவோ ஒரு இருபது ஆண்டு காலம் அவரை எனது பிள்ளைகள் பார்க்கவில்லை என்றாலும், பிள்ளைகளின் நினைவில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘எயிலு’ என எனது இளைய மகனை அவர் வாஞ்சையோடு அழைக்கும் அந்தக் குரல் என் காதுகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

அரசியல் மற்றும் களப்பணிகளின் போது ஏற்படும் தவறுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில் மேலும் என்னை வளர்த்துக் கொள்வதற்கு உற்சாகப் படுத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க எனது இல்லம் தேடி அவர் வந்த போது நான் “ஊரான்” வலைப்பூவில் எழுதுவது குறித்து அறிந்து கொண்டு, மேலும் மேலும் எழுதுமாறு உற்சாகப் படுத்தியவர். முன்னணியாளர்களின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் ”மனுதர்ம சாஸ்திரம்” குறித்து உரையாற்ற ஒரு கருத்தாளராக நான் செல்வதற்கு இந்தச் சந்திப்புதான் வழி வகுத்தது. 

மிகக் கடுமையான உணவு கட்டுப்பாடுகளுடன் அப்பொழுது அவர் இருந்ததை நான் பார்த்த போது என் நெஞ்சம் ஏனோ சஞ்சலப்பட்டது. நோய்வாய்ப்பட்டுள்ள காலத்திலும், வயது முதிர்ந்த காலத்திலும் ஒருவர் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வது எத்துணை கொடூரமானது என்பது அவரைப் போல அனுபவித்தவர்களுக்குதான் புரியும். 

நக்சல்பாரி பொதுவுடமைப் புரட்சி அரசியலை மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பெயரில் தமிழகத்தில் பரப்புரை செய்ததில், அரசியல் தலைமைக் குழுவின் செயலாளராக இருந்து வழிகாட்டிய அவரது பங்களிப்பு அளப்பரியது. இவரைப்போன்ற முகம் தெரியாதவர்கள்தான் மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியலுக்கு முகவரி கொடுத்தவர்கள்.

புரட்சி என்ற நீண்ட நெடிய பயணத்தில், சகடுகள் நிறைந்த இச்சமூகத்தில் பயணிக்கும் போது, சில சறுக்குல்களும் பின்னடைவுகளும் தவிர்க்க முடியாதவை.  கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் வாழ்க்கையில் சறுக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டதன் விளைவாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கக்கூடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. முதுமை காலத்தில் முடிவுக்கு வராத மன உளைச்சல் உயிருக்கே உலை வைக்கும் என்பது எல்லோருக்கும் பொருந்தும்தானே? 

என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ‘இஎல்' எனும் என் இனிய தோழனே! சென்று வா! இறுதிக்காலம் மட்டுமே வரலாறு அல்ல. நீ கடந்து வந்த நீண்ட நெடிய பாதையின் சாதகங்கள்-சாதனைகள் நினைவு கூறப்படும் பொழுது சமூக மாற்றம் அடுத்த கட்டத்திற்கு தாவிச் செல்லும்! 

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!










Wednesday, May 25, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-6

  X

காதல்

மனு: 8-266: உயர்குலத்துப் (பிராமண-சத்திரிய-வைசிய) பெண்ணை  ஒரு சூத்திரன் காதலித்தால் சாகும் வரையில் அவனுக்குக் கசையடி கொடுக்க வேண்டும்.

(பட்டியல் இனச் சாதியைச் சார்ந்த இளைஞன் ஒருவன், தனக்கு மேலே உள்ள சாதிப் பெண்ணைக் காதலித்தால், அவனைக் கொலை செய்யவும் இன்று ஆதிக்கச் சாதியினர் துணிகிறார்கள் என்றால் அதற்கு மனு வகுத்த நீதான் அடிப்படை-ஊரான்).

மனு: 8-373: திருமணமான ஒரு பார்ப்பனப் பெண்ணுடன் ஒரு சூத்திரன் சோரம் போனால், அவன் தனது சொத்துக்களை இழப்பதுடன் அவனது ஆண் குறியும் வெட்டப்பட வேண்டும். 

மனு: 8-385: திருமணமான ஒரு பறையர் சாதிப் பெண்ணுடன் ஒரு பிராமணன் சோரம் போனால் அவனுக்கு ஆயிரம் பணம் அபராதம் விதிக்க வேண்டும்.

(இப்படி காதல் செய்வதிலும், சோரம் போவதிலும் வருணத்திற்கு ஏற்ப தண்டனை முறையில் மிகப்பெரிய பாகுபாடுகளை வைத்திருக்கிறான் மனு-ஊரான்)

XI

பல வகைக் குற்றங்கள்

மனு: 8-379: ஒரு பிராமணன் மரண தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்த போதிலும், அவனைக் கொல்லக் கூடாது‌. அவனுக்கு மொட்டை அடிப்பதே மரண தண்டனைக்கு ஒப்பானதாகும். ஆனால் மற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.

மனு:8-380: ஒரு பிராமணன் எத்தகையப் பாவத்தை செய்தபோதிலும் அவனை கொல்லக் கூடாது.  ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.

மனு:8-381: பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லையாதலால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் கூட நினைக்கக்கூடாது.

(இப்பொழுது புரிகிறதா, எச்.ராஜாவையோ, எஸ்.வி.சேகரையோ, சின்ன சங்கரனையோ, தேவநாதனையோ ஏன் தண்டிக்க முடியவில்லை என்று?- ஊரான்)

இந்து சட்ட முறைகளுக்கும், இந்து அல்லாத சட்ட முறைகளுக்குள்ளேயும் எத்துனை வேறுபாடு! குற்றவியல் சட்டத்தில் சமமின்மை எவ்வாறு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது! நீதி முறைப்படி அமைந்த குற்றவியல் சட்டத்தில், இரு கூறுகளை நாம் காணலாம்.

குற்றத்தின் இலக்கணத்தை வகுப்பது ஒரு பிரிவு; அதை மீறுவோருக்கு அறிவுக்குப் பொருத்தமான தண்டனை விதிப்பது மற்றொரு பிரிவு. எல்லாக் குற்றவாளிகளுக்கும் ஒரேவிதமான தண்டனையே.

ஆனால், மனுவில் நாம் காண்பது யாது? அறிவுக்குப் பொருத்தமற்ற தண்டனை முறை. குற்றத்துடன் சம்பந்தப்பட்ட உறுப்பைத் துண்டித்தல்‌, வயிறு, நாக்கு, மூக்கு, கண்கள், காதுகள், பிறப்பு உறுப்புகள் போன்றவற்றிற்க்குத் தனித்தன்மை உண்டு என்பது போலவும், உடலோடு உடன் வாழ்வன போலவும், கருதி தண்டனை அளித்தல்.

மனுவின் குற்றவியல் சட்டத்தின் இரண்டாம் கூறுபாடு குற்றத்தின் கடுமையை மீறிய, மனிதத்தன்மையற்ற தண்டனை விதித்தல். 

மனுவில் குற்றவியல் சட்டத்தில் மிக வெளிப்படையான கூறுபாடு, ஒரே விதமான குற்றத்திற்குப் பல சமமற்ற தண்டனைகளை விதித்தல் அப்பட்டமாகத் தெரிகிறது. 

குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமன்றி, நீதி கேட்டு மன்றத்திற்கு வருபவருக்குள்,  சிலருடைய கண்ணியம் காக்கவும், சிலரைத் தாழ்த்தி வைக்கவும் திட்டமிட்ட இச்சமமின்மைச் செயல் மனுவின் திட்டத்தின் அடிப்படையானதும் சமூகச்சமமின்மையை நிலைநாட்டுவதேயாகும்.

சமூக சமமின்மையை மனு எவ்வாறு நிலைநாட்டியுள்ளார் என்பதைக் காட்டுவதற்குரிய சான்றுகளை இதுவரை எடுத்துக் காட்டியுள்ளேன். அடுத்து மத சமத்துவமின்மையை நிலைநிறுத்துவதற்கு மனு விதித்திருக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு:தொகுதி - 6, பக்கங்கள் 43-46.

தொடரும்,.

தொகுப்பு: ஊரான்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Friday, May 13, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-5

 IX

சாட்சிகள் விசாரணை

சாட்சிகளை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மனு: 8-88: பிராமணனிடத்தில் "கூறுக' என்றும், சத்ரியனிடத்தில் 'உண்மையைக் கூறுக' என்றும், வைசியனிடத்தில் அவனுடைய 'பசுக்கள், பொன், தானிங்கள் மேல் ஆணையிட்டுக் கூறுக' என்றும், சூக்கிரனாய் இருப்பின் 'தலை மீது ஆணையிட்டு, பொய் கூறினால் வரும் கேடுகளைக் கூறி, அச்சுறுத்திக் கூறுக' என்றும் பிரமாணம் செய்க.

பொய்ச் சாட்சி

பொய்சாட்சி அளிப்பதை ஒரு குற்றமாக கருதி விதிக்கும் தண்டனை வருமாறு.

மனு: 8-123: சத்திரியன் முதலான மூவகை கீழ் வருணத்தார் பொய்ச் சாட்சி கூறினால் அரசன் முதலில் அபராதம் விதித்து விட்டு, பிறகு அவர்களை நாடு கடத்த வேண்டும். ஆனால் பிராமணராயின் நாடுகடத்தல் மட்டுமே செய்ய வேண்டும்.

மனு:8-112: ---பிராமணரைக் காப்பாற்றுவதற்காக பொய்ச் சாட்சி சொல்வது பெரும் பாவமன்று! 

முக்கிய குற்றங்களுக்கான தண்டனை

அவதூறு

மனு: 8-267: பிராமணனை அவதூறு செய்யும் சத்திரியனுக்கு 100 பணமும், வைசியனுக்கு 150 அல்லது 200 பணமும், சூத்திரன் தவறிழைத்தால் கசையடியும் விதித்தல் வேண்டும்.

திட்டுதல்

மனு:8-270: சூத்திரன், இருபிறப்பாளரை-அதாவது பிராமணன்-சத்திரியன்-வைசியன்-ஆகியோரைக் கடுஞ்சொற்களால் திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.

மனு:8-271: பெயர் மற்றும் ஜாதியைச் சொல்லி ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் திட்டினால்,  பத்து விரல் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை சூத்திரன் வாயில் நுழைத்தல் வேண்டும்.

மனு: 8-272: கர்வத்தால் 'நீ இதைச் செய்யவண்டும் என்று ஒரு பிராமணனை, ஒரு சூத்திரன் கட்டளையிட்டால், சூத்திரனின் வாயிலும் காதிலும் காச்சிய எண்ணையை ஊற்ற வேண்டும்.

மனு:8-276: ஒரு பிராமணனும் ஒரு சத்திரியனும்  ஒருவருக்கொருவர் சண்டையிட்டு திட்டிக் கொண்டால், பிராமணனுக்கு 250 பணமும் சத்திரியனுக்கு 500 பணமும் தண்டம் விதிக்க வேண்டும்.

தாக்குதல்/அடித்தல்

மனு: 8-279: ஒரு சூத்திரன் ஒரு பிராமணனை தாக்கினாலோ அல்லது புண்படுத்தினாலோ, எந்தெந்த அவயங்களைத் தாக்கினானோ, அதற்கேற்ப சூத்திரனின் அந்தந்த அவயங்களைத் துண்டித்து விட வேண்டும்.

மனு: 8-281: ஒரு பிராமணனுடன் ஒரு சூத்திரன் சரிசமமாக உட்கார்ந்தால், அந்த ஆணவச் செயலுக்காக, சூத்திரன் இடுப்பில் சூடு போடுதல் வேண்டும் அல்லது நாடு கடத்தப்படுதல் வேண்டும் அல்லது அவனது ஆசனத்தில் அதாவது குண்டியில் ஒரு வெட்டுப் புண் ஏற்படுத்திட வேண்டும்.

(குறிப்பு: சங்கராச்சாரியைப் பார்க்கச் செல்லும் சூத்திரப் பெரும்புள்ளிகள் ஏன் தரையில் உட்காருகிறார்கள் என்பதற்கான காரணம் புரிகிறதா?-ஊரான்)

மனு: 8-282: ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் காரித்துப்பினால், சூத்திரனின் இரண்டு உதடுகளையும் வெட்டிவிட வேண்டும்‌. ஒரு பிராமணன் மீது ஒரு சூத்திரன் சிறுநீர் கழித்தால் அவனது ஆண்குறியை வெட்டி விட வேண்டும். ஒரு சூத்திரன் ஒரு பிராமணன் மீது குசு விட்டால் அவனது ஆசனத்தை வெட்டிவிட வேண்டும்.

8-283: ஒரு பிராமணனின் முடியை ஒரு சூத்திரன் பிடித்து இழுத்தாலோ, காலை வாரினாலோ, தாடியை, கழுத்தை, விதையைப் பிடித்து இழுத்தாலோ சூத்திரனின் கையை வெட்டி விட வேண்டும்.

(குறிப்பு: இவை எல்லாம் மிகையாக ஒரு சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இன்றைய காலகட்டத்திலும் பார்ப்பனர்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும், பிற சாதியினர் குறிப்பாக கீழ்சாதி மக்கள் செய்கிற குற்றங்களுக்கான தண்டனையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மேற்கண்ட கூற்று எந்தளவுக்கு உண்மை என்பது புரியும்.-ஊரான்)

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4



அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

Tuesday, May 10, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-4

VII

அடிமைத்தனம்

அடிமைத்தனத்தை மனு அங்கீகரித்தார். ஆனால், அதனை சூத்திரர்களுக்கு மட்டுமே என்று வரையறுத்துள்ளார். மூன்று உயர் சாதி அமைப்பினராலும் சூத்திரர்கள் மட்டுமே அடிமைப்படுத்தப்பட முடியும். ஆனால் உயர் சாதியினர் சூத்திரர்களுக்கு அடிமைகளாக முடியாது.

மனுவும் அவரது வழி வந்தவர்களும், அடிமைத்தனத்தை அதிகரித்தபோது வருண அமைப்பில், தலைகீழ் வரிசையில் அது அங்கீகரிக்கப்பட மாட்டாது என்று விதித்தனர். 

அதன் பொருள், ஒரு பிராமணன் மற்றொரு பிராமணனுக்கு அடிமையாகலாம்; ஆனால், அவன் சத்திரிய, வைசிய, சூத்திர அல்லது ஆதி சூத்திரன் ஆகிய இதர வருணத்தைச் சார்ந்தவனுக்கு அடிமையாக மாட்டான்.

மாறாக ஒரு பிராமணன், நான்கு வருணங்களில், எந்த வகுப்பினைச் சேர்ந்தவரையும் தனது அடிமையாக்கிக் கொள்ளமுடியும்.

ஒரு சத்திரியர், வேறொரு சத்திரியரையோ, வைசியரையோ, சூத்திர மற்றும் ஆதி சூத்திரரையோ தனது அடிமையாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணனை அவ்வாறு அடிமையாகக் கொள்ள முடியாது.

ஒரு வைசியர், ஒரு பிராமணனையும், சத்திரியனையும் தவிர, வேறொரு வைசியரையோ, சூத்திரரையோ, ஆதி சூத்திரரையோ தனது அடிமையாக்கிக் கொள்ளலாம்.

ஒரு சூத்திரன், வேறொரு சூத்திரரையும், ஆதி சூத்திரர் மற்றொரு ஆதி சூத்திரரையும் அடிமைகளாகக் கொள்ளலாம்‌. ஆனால், ஒரு பிராமணரையோ, சத்திரியரையோ, வைசியரையோ,  சூத்திரரையோ-ஆதி சூத்திரர் அடிமையாக்க முடியாது.

VIII

கலப்பு மணங்கள்

பல்வேறு வகைப்பட்ட வருணத்தாருக்கு இடையே நடைபெறும் கலப்பு மணங்கள் பற்றி மனு விதித்துள்ள விதிகள் பின்வருவன.

மனு:3-12: இருபிறப்பாளர்களுக்கு (பிராமண-சத்திரிய-வைசிய வருணத்தார்) திருமணம் செய்யும்போது தன் வருணத்திலேயே திருமணம் செய்வது உயர்ந்தது. இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் மேற்சொல்லப் போகிறபடி செய்து கொள்ள வேண்டியது.

மனு:3-13: சூத்திரனுக்குத் தன் சாதியிலும், வைசியனுக்குத் தன் சாதியிலும்-சூத்திர சாதியிலும், சத்திரியனுக்குத் தன் சாதியிலும்-வைசிய சூத்திர சாதியிலும், பிராமணனுக்குத் தன் சாதியிலும் மற்ற மூன்று சாதியிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

மனு கலப்பு மணத்தை எதிர்ப்பவர்‌. ஒவ்வொருவரும் தமக்குள்ளேயே மணம் புரிதல் வேண்டும். குறித்த வருணத்திற்கு வெளியே நடக்கும் திருமணத்தை மனு பொதுவாக அங்கீகரித்தாலும், பிராமணன் எந்த ஒரு பெண்ணையும் மணக்கலாம். சத்திரியன் தன்வருணம், தன் கீழ் வருணமான வைசிய-சூத்திர வருணங்களிலும் பெண் கொள்ளலாம். ஆனால், மேல் வருணமாகிய பிராமணப் பெண்களை மணக்கக்கூடாது.

வைசியன் தன் வகுப்பிலும், சூத்திர சாதியிலும் பெண் கொள்ளலாம். ஆனால் சத்ரிய-பிராமணப் பெண்களை மணத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏன் இந்த பாரபட்சம்? அவரது வழிகாட்டு நெறியாக அமைந்துள்ள சமத்துவமின்மையை அப்படியே கட்டிக் காக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தின் விளைவுதான் இது.

-பக்கம் 38, 39, 40: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-6

ஊரான்


தொடரும்

தொடர்புடைய பதிவுகள்


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1




Thursday, May 5, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!-3

VI

"சமத்துவத்தை இந்துமதம் அங்கீகரிக்கிறதா?

இந்தக் கேள்வி, உடனடியாக ஒருவரது சிந்தனையில் சாதி அமைப்பு முறையைக் கொண்டு வருகிறது. பல்வேறு சாதிகளும், ஒரே தரத்தில் கிடைமட்ட வரிசையில், அருகருகே அமர்த்தப்படவில்லை என்பது சாதி அமைப்பின் ஒரு முனைப்பான அம்சமாகும். பல்வேறு சாதிகளும், ஒன்றன் மீது ஒன்றாக, செங்குத்தான வரிசையில் அமர்த்தப்பட்டுள்ளதொரு அமைப்பு அது‌. சாதிகளைத் தோற்றுவித்ததில் மனுவுக்கு பொறுப்பு இல்லாதிருக்கலாம். வருணத்தின் புனிதத்துவத்தை மனு போதித்தார்;  நான் எடுத்துக் கூறியுள்ளபடி வருணமே, சாதி அமைப்பின் தாய். அந்தவகையில் சாதி அமைப்பின் மூலவராக இல்லையெனினும், அதன் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங்கினார் என்று குறை கூறலாம். எது எப்படியாயினும், சாதி அமைப்பைப் பொறுத்து மனுவில் குற்றம், அவர் தரப்படுத்தி,  படிமப்படுத்தும் கோட்பாட்டினை உயர்த்திப் பிடித்ததில் பொறுப்பு வகித்தார் என்பதில் ஐயமில்லை.

மனுவின் திட்டப்படி, பிராமணன் முதல் தளத்தில் வைக்கப்பட்டான்‌. அதற்கு அடுத்து சத்திரியர்; சத்திரியருக்குக் கீழே வைசியர்கள்; அவர்களுக்குக் கீழ் சூத்திரர்கள்; சூத்திரர்களுக்கும் கீழே ஆதி சூத்திரர்கள் (தீண்டாதார்). இந்தத் தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்துரைப்பதாகும்; எனவே, இந்து மதம் சமத்துவத்தை அங்கீகரிக்கவில்லை என்று மெய்யாகவே கூறலாம். அந்தஸ்தில் சமத்துவமற்ற இந்த நிலையானது, ஏதோ மன்னரின் அரசவை கூடத்தின் விழா கூட்டத்திற்காக வரிசைப்படுத்திய முன்னுரிமைப் பட்டியல் ஆணை அல்ல அது. மக்களினத்தவரிடையே கடைபிடிக்க வேண்டிய - எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா நோக்கங்களிலும் அமலாக்கப் படவேண்டிய, ஒரு நிரந்தர, சமுதாய உறவாகும். வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும், மனு இந்த வேறுபாட்டினை எவ்வாறு புகுத்தியுள்ளார் என்பதை விவரித்துக்கூறின், அது பெரிதும் நீண்டு விடும்; அவர், சமத்துவமின்மையை வாழ்வின் ஜீவசக்தியாக்கினார். ஆனால், அடிமைத்தனம், திருமணம், சட்டவிதிகள் போன்ற சில உதாரணங்களை எடுத்துக் கொண்டு அதை விளக்க முற்படுகிறேன்."

-பக்கம்-38, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி - 6.

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2


அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1


Wednesday, May 4, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 2

 II

"இந்துக்களின் மத, ஆசார, சமுதாய வாழ்வினை ஆளும் விதிகளை எடுத்துரைக்கும் ஒரு தெய்வீக நெறிமுறைதான் மனுஸ்மிருதி. அதனை இந்துக்களின் விவிலியம் என்று கருதலாம். இந்து மதத் தத்துவமே அதில் அடங்கியுள்ளது" 

- பக்கம் 12, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி-6

III

"ஒரு இந்துவின், வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது‌. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாறு கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி, எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையில் உள்ள முடியை  எவ்வாறு கத்தரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும், ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்த ஒரு செயலும், இந்துவின் வாழ்வில் கிடையாது. விருப்பு வெறுப்பற்ற ஒரு சகஜ விஷயமாக, படித்த இந்துக்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பது விந்தையே" 

- பக்கம் 34, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், நூல் தொகுப்பு, தொகுதி 6

IV

"எல்லா மதங்களும் நல்லவை மற்றும் உண்மையானவை என்று கருதுவது தவறான நம்பிக்கையாகும். ... மதங்களிடையே பாகுபாடு காண்பது தேவையற்றது என்ற கருத்தும் மிகவும் தவறானதாகும்..... மதம் என்பது ஓர் அமைப்பு அல்லது ஓர் ஆதிக்க விளைவு; சமுதாயத்திற்கு அது உதவலாம் அல்லது தீங்கு பயக்கலாம்....இந்து மதம் எந்த லட்சியத்திற்கு உதவுகிறது, எத்தகைய சமூக லட்சியத்தை முன்வைக்கிறது என்கிற பரிசீலனைக்குச் செல்லாமல் மதங்கள் பலவாயினும் அவை அனைத்துமே சிறந்தவைதான் என்று இந்துக்கள் கூறுவதன் மூலம் இந்து மதத்தை பரிசோதனைக்கு உட்படுத்துவதை தவிர்க்க முயலுகின்றனர் இந்துக்கள்.

இந்து மதத் தத்துவப் பிரச்சினையை மூடி மறைக்க எவ்வளவுதான் ஒரு இந்து முயன்றாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது."

- பக்கங்கள் 35, 36, 37-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6

V

"இந்து மதத் தத்துவத்தை நிர்ணயிக்க நியாயச் சோதனை, பயனீட்டுச் சோதனை (test of justice and test of utility) என்ற இரண்டு சோதனைகளையும் பிரயோகிக்க நான் எண்ணியுள்ளேன். முதலில் நான் நியாயப் பரிசோதனையை நடத்துகிறேன். அவ்வாறு செய்வதற்கு முன்பு நியாயம் அல்லது நீதி என்ற கொள்கைக்கு நான் எவ்வாறு பொருள் கொள்கிறேன் என்பதை விளக்க விரும்புகிறேன்.

நியாயம் என்பது எப்போதுமே சமத்துவம், வீதாச்சாரம், "சமன் செய்தல்" என்ற கருத்துக்களைத் தூண்டுகிறது. நடுநிலை, நேர்மை என்பது சமத்துவத்தைக் குறிக்கிறது. விதிகளும், கட்டுப்பாட்டு முறைமைகளும், நேர்மையையும், மதிப்பின் சமத்துவத்தைப் பொறுத்தது‌. எல்லா மனிதர்களும் ஒரே சாராம்சத்தைக் கொண்டவர்களே; அந்தப் பொதுவான சாராம்சம், அவர்களுக்கு ஒரே சீரான அடிப்படை உரிமைகளையும், சமமான சுதந்திரத்தையும் பெற்றுத் தருகிறது.

சுருங்கக் கூறின், நீதி என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மற்றொரு பெயரே. இந்து மதத்தை மதிப்பிடுவதில், நான் இந்தப் பொருளில்தான் நீதியை உரைகல்லாக பயன்படுத்துகிறேன்.

இவற்றில் எந்தக் கூற்றினை இந்துமதம் அங்கீகரிக்கிறது? இந்தக் கேள்வியை ஒன்றன்பின் ஒன்றாக ஆராய்வோம்!"

- பக்கம் 37, பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6

ஊரான்

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்








Tuesday, May 3, 2022

அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்! - 1

I

எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதற்காகப் பார்ப்பன இந்துத்துவாக் கும்பல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டவர்களைத் தமிழக பாஜக தலைமைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களை தன் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

அதேபோல பட்டியலின மக்கட்பிரிவினரில் பிரபலமாக உள்ளவர்களை இழுக்க பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது பாரதிய ஜனதா கட்சி. அந்த வரிசையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, திரைத்துறை பிரபலங்களான இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட ஒரு சிலரை ஏற்கனவே ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பல் தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டது. 

பிரபலமான தலித்துக்களை மட்டும் தங்கள் பக்கம் இழுத்தால் மட்டும் போதாது, பெருவாரியான தலித் மக்களையும் தங்கள் பக்கம் இழுக்கவேண்டும் என்பதற்காக அம்பேத்கரை ஒரு இந்துத்துவா ஆதரவாளராகக் காட்டுவதற்குப் பார்ப்பன பாஜக கும்பல் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்காகத்தான் பார்ப்பன சனாதன இந்து மதத்தின் நேரடிப் பிரதிநிதியான மோடியை, இந்து மதத்தையும் அதன் தத்துவத்தையும் தனது இறுதி மூச்சு வரை மிகக் கடுமையாகச் சாடியும், எழுதியும், போராடியும் வந்த அம்பேத்கரோடு ஒப்பிட்டு பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளையராஜாவைக் கொண்டே முகவுரை எழுத வைத்தனர். இது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கங்கை அமரன் இந்துத்துவாவிற்கு ஆதரவாக் காட்டுக் கூச்சல் போடும் அளவிற்கு அது தற்போது வேகம் எடுத்துள்ளது. 

ஒரு வேளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவர் திருமா ஒருவர் இல்லையென்றால், ஒட்டுமொத்த பட்டியலின மக்களும் கிருஷ்ணசாமி, இளையராஜா, கங்கை அமரன் போன்ற பட்டியலின பிரபலங்களை அடியொற்றி இந்துத்துவாக் கும்பலுக்கு பலியாகி இருக்கக்கூடுமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. சனாதன தர்மத்தையும், அம்பேத்கரையும் பெரியாரையும், திராவிடக் கருத்தியலையும் திருமா மிகத்தெளிவாக உள்வாங்கி இருப்பதால்தான் அவர் இந்துத்துவாக் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்கிறார். அவரது தொண்டர்களும் அவருடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து பார்ப்பன இந்துத்துவாக் கும்பலுக்கு எதிராகக் களமாடி வருகின்றனர்.

இன்றைய அரசியல் சூழலில் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்கினால் மட்டுமே பார்ப்பனக் கும்பலை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியும்‌. அம்பேத்கரை கொண்டாடுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிறுவ முடியும். அம்பேத்கரின் எழுத்துக்களில் உள்ள ஒரு சில விவர முரண்களை எடுத்துக் கொண்டு அவரை இந்துத்துவா ஆதரவாளராகக் காட்ட முயற்சிப்பது மடமைத்தனம் மட்டுமல்ல, கயமைத்தனமும் ஆகும். 

பாரதிய ஜனதா கட்சியும், பார்ப்பன ஆர்எஸ்எஸ் இந்துத்துவாக் கும்பலும் நிலைநாட்ட விரும்பும் சனாதன தர்மம் எத்தகையது என்பதை, சனாதன தர்மத்தின் மூல நூலான மனுதர்ம சாஸ்திரத்தை, உலகில் வேறெவரையும் விட அம்பேத்கர் மட்டுமே மிக ஆழமாக அலசி, ஆராய்ந்து, இந்துமதம்  என்பது இந்து மக்களிடையே சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவத்தை மறுக்கும் ஒரு மக்கள் விரோத மதம் என்பதை மிகவும் ஆணித்தரமாக, 'இந்து என்பது ஒரு மதமே அல்ல' என நிறுவியுள்ளார். 

எந்த அம்பேத்கரை தூக்கிப் பிடித்துக்கொண்டு பார்ப்பன ஆர்எஸ்எஸ் கும்பல் வருகிறதோ அதே அம்பேத்கரின் எழுத்தீட்டிகளைக் கொண்டே பார்ப்பனக் கும்பலின் குடலை உருவி இந்தியாவெங்கும் தொங்க விடுவோம். இனியும் தாமதிப்பது ஆபத்து. இந்துத்துவாவிற்கு எதிராகக் களமாட விரும்புவோரே! அம்பேத்கரைப் படியுங்கள்! பரப்புங்கள்!

இதன் ஒரு பகுதியாக "இந்து மதத் தத்துவம்" என்ற கட்டுரையில் (பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி-6, இயல் 1, இந்து மதத் தத்துவம், பக்கம்  1 முதல் 127 வரை) அம்பேத்கர் தொகுத்து வழங்கியுள்ளவற்றில் சில முக்கியப் பகுதிகளை மட்டும் அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முழுமையாகப் படிக்க விரும்புவோர், அம்பேத்கரின் முழு கட்டுரையையும் படியுங்கள். படிக்கும்போது மனுதரும சாஸ்திரத்தையும் சேர்த்துப் படியுங்கள்.

ஊரான்

தொடரும்

Saturday, February 5, 2022

'நீட்'டும், வெங்காயம் வெள்ளப் பூண்டும்!

பொதுத் தேர்வு மதிப்பெண்கள் அல்லது நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள், இவற்றில் படித்த பாடம் பற்றிய ஒருவரின் அறிவாற்றலை தீர்மானிப்பது பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே.

இரண்டு தேர்வுகளிலும் குறைந்தது ஐந்துக்கும் குறையாத எண்ணிக்கையில் கேள்வித்தாள்கள் வெவ்வேறு குழுவினரால் தயாரிக்கப்படும். குழுக்களில் யார் யார் இருக்கிறார்கள் என்பதும், ஒரு குழுவுக்கும் மற்றொரு குழுவுக்கும் தொடர்பு ஏதும் இல்லாமல், தேர்வு அன்று கேள்வித்தாள்கள் விநியோகிக்கப்படும் வரை இரகசியம் காக்கப்பட வேண்டும்.

பொதுவாகவே அதிகார அமைப்புகளில் பார்ப்பனர்கள் ஊடுருவி இருப்பதால் மேற்கண்ட கேள்வித்தாள்களை சேகரித்து, வேண்டிய பார்ப்பன மாணவர்களுக்கு மட்டுமே இரகசியமாக சுற்றுக்கு விடுவது வழக்கம்.

பொதுத் தேர்வு வினாத்தாள்களை சேகரித்தாலும், கிட்டத்தட்ட மொத்தப் பாடங்களையும் மீண்டும் மீண்டும் படித்து தயாரிக்க வேண்டுமென்பதால் அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். நாமக்கல் போன்ற பகுதிகளில் உள்ள சில தனியார்  பள்ளிகளால் மட்டும் பொதுத்தேர்வு முறையில் அதிகமான மாணவர்களை மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் அதிக இடங்களைக் கைப்பற்ற  முடிந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் கோடிகளை செலவு செய்து கேள்வித்தாள்கள் அனைத்தையும் இரகசியமாகப் பெற்று மீண்டும் மீண்டும் அதே கேள்விகளைக் கொடுத்து மாணவர்களுக்குத் தொடர் மாதிரித் தேர்வுகளை நடத்தியதால்தான். 

ஆனால், நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள், கோடிட்ட இடத்தை நிரப்புதல் அல்லது சரியான விடையை ‘டிக்’ செய்து தேர்வு செய்தல் என்ற எளிமையான வடிவில் இருப்பதால் அதற்குத் தயாரிப்பது மிக மிக சுலபம். தில்லுமுல்லு செய்து தங்களது சாதி மாணவர்களை மட்டும் தேர்வுக்குத் தயார் படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு நுழைவுத் தேர்வு முறைதான் சுலபமானது என்பதனால் நுழைவுத்தேர்வு முறையை பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக ஆதரிக்கின்றனர். அதுவும் நீட் போன்ற தேர்வுகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் கேள்வித்தாள்களை முன்கூட்டியே பெற்று தங்களுக்கு வேண்டிய சாதி மாணவர்களுக்கு இரகசியமாக சுற்றுக்கு விடுவது பார்ப்பனர்களுக்குச் சுலபமானது. பணம் இருந்தால் மட்டும் கேள்வித்தாள்களை பெற்றுவிட முடியாது. மாறாக தங்களுக்கான ஆட்கள் அதிகார பீடத்தில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். சாத்தியம் என்பதால்தான் பார்ப்பனர்களால் சாதிக்க முடிகிறது. இது காலங்காலமாக நடந்து வரும் ஒரு மோசடி. மற்றபடி பார்ப்பனர்களைப் பொருத்தவரை வெங்காயம் வெள்ளப் பூண்டும் போல அறிவும் திறமையும் வாழ்வதற்குத் தேவையற்றவைதான். இது மிகவும் ‘பரம இரகசியம்' என்பதால் அந்தப் பரமனே வந்தால்கூட இதைக் கண்டுபிடிக்க முடியாது.

குறிப்பு: தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கு முயன்ற ஒரு சில பெற்றோர்களுக்கு இது புரிந்திருக்கும்.

ஊரான்


Thursday, January 27, 2022

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!

நெற்றிப் பொட்டு துடிக்கிறது, கண்கள் குளமாகி  விட்டன. நா வறண்டு விட்டது. இதயம் துடிக்கிறது. என்ன வென்று சொல்ல? எழுத வார்த்தைகள் கிடைக்க வில்லை.

சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தேன். அகோரப் பசி. வலது கையோ சோற்றுப் பருக்கைகளை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தது. இடது கையோ கைபேசியில் முகநூல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. வலது கையில் சோற்றுப் பருக்கைகள் சிதறின. இடது கை விரல்களோ அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல நடுங்கின.

“விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்து வந்த கரடுமுரடான பாதையில், நெடியதொரு காலம் உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கு, தனது சுக போகங்களைத் துறந்து, குடும்பத்தை மறந்து இன்முகத்துடன் ஒப்படைத்த ஒப்பற்றத் தோழனே ஓய்வெடு!” இதுதான் அந்தப் பதிவு.

எனது நாற்பதாண்டு கால புரட்சிகர அரசியல் வாழ்க்கையில் எண்ணற்றோருடன் பயணித்திருக்கிறேன். எல்லோருமே மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதில்லை. ஒரு சிலரே இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.

1980 களின் தொடக்க காலத்தில் புதியதொரு புரட்சிகர மாற்று அரசியலை என்னுள் ஆழமாக ஊன்றிய அரசியல் ஆசான் அவர். பிரியமான ‘ரகு’வாகத்தான் அவரை நான் அறிவேன். சுமார் பத்து ஆண்டுகாலம் அவருடன் நான் பயணித்திருப்பேன். அதன் பிறகு அரசியல் பணிக்காக அவர் வேறு பகுதிக்குச் சென்று விட்டாலும், அமைப்பின் மாநாடுகளில், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவரைக் காண எனது கண்கள் ஏங்கும்.’கண்டேன் சீதையை’ என்பதைப் போல அவரைக் கண்டு விட்டால் எனது நெஞ்சம் பூரித்து போகும்.

யார் சொன்னது புரட்சியாளர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்று? ரகுவோடு உறவாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் ரோசாவின் ராசாக்கள் என்பது.

மக்கள் கலை இலக்கியக் கழக முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் மறைந்த போது அழுதேன்! அழுதேன்! கண்கள் கனலாய் ஆன போதும் அழுதேன்.

என் ஆசான் ஆருயிர்த் தோழன் ரகுவின் மறைவால் இன்று மீண்டும் அழுகிறேன், நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டு!

துயரத்துடன்

தமிழ்மணி

குறிப்பு: எதிர்த்து நில் வலைப் பூவிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்